என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 24 மே, 2011

மூ க் கு த் தி [ பகுதி 2 of 7 ]



முன்கதை முடிந்த இடம்:

கையில் குடையுடன், மஞ்சள் பையில் பணத்துடன், ஒரு நல்ல நாளில், நல்ல நேரத்தில்,  பஸ் பிடித்து, டவுனில் உள்ள ஒரு பிரபல நகைக்கடைக்குள், காலை பத்து மணிக்குப் பிரவேசித்தேன்.

-------------------------

வாசல் கண்ணாடிக்கதவை திறந்து விட்டார் ஒருவர், ராணுவ சிப்பாய் உடையில். கடையில் கூட்டமான கூட்டம்.டவுனில் சினிமாக்கொட்டகை, ரேஷன் கடை, அடுத்தது டாஸ்மாக் கடையில் தான் கூட்டமாக இருக்கும் என்று பார்த்துள்ளேன், கேள்விப்பட்டுள்ளேன்.  அதற்கு அடுத்தபடியாக பஸ் ஸ்டாண்டுகளிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலிலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

இப்போது ஜவுளிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும், பண்டிகைகாலம் ஏதும் இல்லாதபோதும் கூட, மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து, போட்டிபோட்டுக்கொண்டு, ஏதேதோ வாங்கிச்செல்கின்றனர்.

மக்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாகவும், நாட்டில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதாகவும், ஏதேதோ செய்திகள் படித்த ஞாபகம் எனக்குள் ஏற்பட்டது. 

தங்கம் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவதாகவும் சொல்லுகிறார்கள். மேலும் மேலும் உயரக்கூடும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இவ்வாறு கூடுகிறார்களோ என்னவோ?

எங்கிருந்து தான் எப்படித்தான், பணம் புரளுகிறதோ ! கிராமத்தானாகிய எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.வரட்சியால் தண்ணீர் இல்லாமலும், மழை வெள்ளத்தால் அதிகத்தண்ணீர் சூழ்ந்தும், பயிர்கள் வீணாகி, அல்லல்படும் எனக்கு, தங்கம் வாங்க இவர்கள் பணத்தைத் தண்ணீர் போல செலவு செய்வதைப்பார்க்க வேடிக்கையாகத்தான் இருந்தது.

அந்த குளிரூட்டப்பட்ட கடையில் முதலில் என்னை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தபோதும், ஒருவன் டிப்டாப் உடையில் என்னை நெருங்கி, “பெரியவரே, குடையை நீட்டிக்கொண்டு இப்படி குறுக்கே நிற்காதீர்கள், மற்றவர்கள் மேல் அது குத்திவிடும். உங்களுக்கு என்ன வேண்டும்” என்று வினவினான்.

”மூக்குத்தி ஒன்று பார்க்க வேண்டும்” என்றேன்.

“நேராகப்போய் அந்தக்கடைசியில் உள்ள லிஃப்டில் ஏறி நாலாவது மாடிக்குப்போங்க” என்றான்.

லிஃப்டில் ஏறுவதற்கே ஒரு நீண்ட க்யூ வரிசை காத்திருந்தது.  பேசாமல் படி ஏறிச்சென்றுவிடலாமா என்று நான் நினைத்தபோதே, “அய்யா, பெரியவரே! சீக்கரம் நகர்ந்து போங்க, லிஃப்ட் வந்து விட்டது” என்று சொல்லி என்னை அந்த லிஃப்ட் ரூமுக்குள் தள்ளிக்கொண்டு போய்விட்டனர், அங்கு கூடியிருந்த ஜனங்கள்.


தொடரும் 

  
{ இந்தக்கதையின் தொடர்ச்சி [பகுதி 3 / 7] நாளை மறுநாள் வியாழக்கிழமை 26.05.2011 அன்று வெளியிடப்படும். }

சனி, 21 மே, 2011

மூ க் கு த் தி [ பகுதி 1 of 7 ]


எங்கள் கிராமத்திலிருந்து கிளம்பிப்போனால் ஒரு மணி நேரத்தில் டவுனுக்குப்போக இப்போதெல்லாம் ஏகப்பட்ட டவுன் பஸ்ஸுகள் விடியவிடிய விடப்பட்டுள்ளன. எவ்வளவு பஸ்ஸுகள் ஓடினாலும் கும்பல் தான் தாங்க முடியாமல் உள்ளது. 

ஜனங்களுக்கு அப்படி என்னதான் வேலையோ, என்னதான் அவசரமோ, படிக்கட்டுகள் இரண்டிலும் பத்து பேர்களுக்குக்குறையாமல் தொங்கியபடி பயணிக்கின்றனர்.

நான் இன்று புறப்பட்டது டவுனில் உள்ள ஒரு நகைக்கடைக்கு. அந்த நாளில் தங்கம் வெள்ளி வாங்க ஒரே ஒரு செட்டியார் கடையும், வைர நகைகளுக்கு ஒரு வடக்கத்திய சேட்டுக்கடையுமாக இரண்டே கடைகள் தான் இருக்கும். இரண்டுமே நம்பிக்கைக்கும் நாணயத்திற்கும் பெயர்போன கடைகள். 

உள்ளே போனதும் இன்முகத்துடன் கடை முதலாளி வரவேற்பார். அமர ஒரு இருக்கை கொடுத்து, மின் விசிறியைத்தட்டி விட்டு, குழல்விளக்குகள் மூலம் அதிக வெளிச்சம் தர ஏற்பாடு செய்வார்கள். 

ஊர் பெயர், நமது பெயர் முதலியன கேட்டு, ஊரிலுள்ள மற்றவர்களைப்பற்றியும் நலம் விசாரித்து, கோடை வெப்பம் தணிய குளுமையான பானைத்தண்ணீர் அருந்தச்சொல்லி, அதன்பின் வியாபாரம் பேச ஆரம்பிப்பார்கள்.

மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் கணக்குப்போட்டு நகைகளை ஒரு கடவுள் படத்தின் காலடியில் வைத்துத்தருவார்கள். 

நம் பழைய நகைகளை வாங்கி, ஒரு சொரசொரப்பான சாணைக்கல்லில் உரசிப்பார்த்து, தரத்திற்கு தகுந்தபடி, அதையே அழித்து, மேலும் கொஞ்சம் தங்கம் சேர்த்து புதியதாக நகைகள் செய்து தருவார்கள்.  

கூலி, சேதரம், உபரித்தங்கம் முதலியவற்றிற்கு கணக்குப்பார்த்து வாங்கிக்கொள்வார்கள். அந்த நாளில் விற்பவருக்கும் பொறுமை உண்டு, வாங்குபவருக்கும் பொறுமை உண்டு. கைராசி என்று நினைப்பதுண்டு. இன்றைய நிலைமையே வேறு.

இது ஒரு அவசர உலகம். நகைகளை உடனே வாங்கி உடனே அணிய வேண்டும் என்பதே பெரும்பாலானோர் விருப்பம். பழைய நகைகளைத் தனியாக விற்று காசாக்கிக்கொள்வதற்கும் வசதி. 

இன்று ஏராளமான நகைக்கடைகள். வியாபாரத்தில் நிறைய போட்டிகள். கவர்ச்சிகரமான விளம்பரங்கள். குளுகுளு வசதிகளுடன் பெரியபெரிய கடைகள்.

நகை வாங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டவுடன் கூல்டிரிங்க்ஸ் வழங்கி உபசரித்து தாஜா செய்தல்.கொட்டிக்கிடக்கும் நகைகள். டிசைன்கள். ஒவ்வொரு கடைகளிலும் கூட்டமான கூட்டங்கள். க்யூவில் நிற்க வேண்டிய நிலைமை.

கையில் குடையுடன், மஞ்சள் பையில் பணத்துடன், ஒரு நல்ல நாளில், நல்ல நேரத்தில்,  பஸ் பிடித்து, டவுனில் உள்ள ஒரு பிரபல நகைக்கடைக்குள், காலை பத்து மணிக்குப் பிரவேசித்தேன்.

தொடரும் 



பின்குறிப்பு:-

1) இந்தச்சிறுகதையில் வரும் கதாபாத்திரம் வேறு, இந்தச்சிறுகதையை எழுதியுள்ள கதாசிரியனான நான் வேறு என்று தெரிவித்துக்கொள்கிறேன். யாரும் தயவுசெய்து குழப்பிக்கொள்ள வேண்டாம் என்பதற்காக இதை இங்கு முதலிலேயே குறிப்பிட்டுள்ளேன் 

2) இந்தச்சிறுகதையின் தொடர்ச்சி [பகுதி - 2 of 7] வரும் செவ்வாய்க்கிழமை 24.05.2011 அன்று வெளியிடப்படும்.

வெள்ளி, 20 மே, 2011

யார் முட்டாள்?









யார் முட்டாள் ?

[நகைச்சுவைச் சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்








ரமேஷ், சுரேஷ் என்ற மிகப்பெரிய தொழிலதிபர்கள் இருவர் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டு தங்கள் வியாபார விஷயமாக தங்களுக்குள் மிகுந்த நட்புடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் பேச்சு ஒரு கட்டத்தில் தங்கள் பணியாட்களின் [ப்யூன்ஸ்] அறிவற்ற முட்டாள் தனத்தைப்பற்றி திரும்பியது.

“தன்னுடைய ப்யூனைப் போன்ற ஒரு முட்டாளை இந்த உலகத்தில் வலை வீசித்தேடினாலும் எங்கும் கிடைக்கமாட்டான்”  என்று ரமேஷ் சொன்னார்.

இதை ஒத்துக்கொள்ளாத சுரேஷ் “என்னுடைய ப்யூனைப்போன்ற ஒரு வடிகட்டிய முட்டாள் யாருமே இருக்க முடியாது” என்றார்.

அவர்களுக்குள் அதை அப்போதே நிரூபித்துப் பார்க்க விரும்பினார்கள்.

ரமேஷ் காலிங் பெல்லை அழுத்தி தன் ப்யூனை ரூமுக்குள் அழைக்கலானார். 


”யெஸ் சார்” என்ற படி ரமேஷின் ப்யூன் ராசா உள்ளே ஓடி வந்தான்.

அவனிடம் ஒரு பத்து ரூபாய் சலவைத்தாளை எடுத்து நீட்டி “நீ போய் உடனடியாக புத்தம்புதிய மாருதி ஏ.ஸீ. கார் ஒன்று உனக்குப்பிடித்த ஏதாவது ஒரு கலரில் வாங்கிக்கொண்டு சீக்கரமாக வந்துடு” என்றார்.

அவனும் “எஸ். சார்.” என்று கூறி அவர் கொடுத்த பத்தே ரூபாயுடன் ரூமை விட்டு வெளியேறினான்.

இதைப்பார்த்து தனக்குள் லேசாகச் சிரித்துக்கொண்ட சுரேஷ் தன் காலிங் பெல்லை அழுத்தி தன் ப்யூனை ரூமுக்குள் அழைக்கலானார். 


”யெஸ் சார்” என்ற படி சுரேஷின் ப்யூன் மகாராசா உள்ளே ஓடி வந்தான்.

“மகாராசா, இப்போது மணி 10 ஆகப்போகிறது. நான் மிகச்சரியாகப் பத்து மணிக்கு தாஜ் ஹோட்டலில் ஒரு அவசர மீட்டிங்கில் இருக்க வேண்டும். நீ உடனே ஓடிப்போய் தாஜ் ஹோட்டல் மீட்டிங்கில் நான் இருக்கிறேனா என்று பார்த்து விட்டு வந்து என்னிடம் சொல்ல வேண்டும், இது மிகவும் அவசரமான விஷயம், தாமதிக்காமல் உடனே புறப்படு” என்றார்.

மகாராசாவும் “யெஸ் சார்” என்று சொல்லி விட்டு அந்த ரூமை விட்டு வெளியேறினான்.

வெளியே வந்த ராசாவும், மகாராசாவும் ஆற அமர ஒரு மரத்தடியில் நின்று தங்களுக்குள் தங்கள் முதலாளிகளைப்பற்றி பேச ஆரம்பித்தனர். 

“என் முதலாளியை மாதிரி ஒரு முட்டாள் இருக்க முடியாது.  புத்தம் புதிய மாருதி ஏ.ஸி. கார் உடனடியாக வாங்கிவரச் சொல்லியிருக்கிறார். கார் வாங்க 10 ரூபாய் பணத்தையும் கொடுத்து விட்டார். 


இன்று ஞாயிற்றுக்கிழமை, கார் விற்பனைக்கடைகள் எதுவும் திறந்திருக்காது என்று கூடத் தெரியாத முட்டாளாக இருக்கிறார்” என்றான் ராசா, மகாராசாவிடம்.

“உன் முதலாளியாவது பரவாயில்லை. இன்று இல்லாவிட்டாலும் நாளை கார் வாங்கிக்கொள்ளலாம். எங்க ஆளு 10 மணிக்கு தாஜ் ஹோட்டல் மீட்டிங்கில் இருக்கணுமாம். நான் தாஜ் ஹோட்டலுக்குப்போய் அவர் அங்கே இருக்கிறாரா என்று பார்த்து வந்து சொல்லணுமாம். 

சுத்த வடிகட்டின முட்டாளாக இருக்கிறார். தன் டேபிள் மீது டெலிபோன் வைத்திருக்கிறார். 


தாஜ் ஹோட்டலுக்கு டயல் செய்து அவர் அங்கு இருக்கிறாரா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வதை விட்டுவிட்டு, என்னை இந்த வேகாத வெய்யிலில் அலையவிடுகிறார், பார்” என்றான்.

-o-o-o-o-o-o-o-






  


வியாழன், 19 மே, 2011

டிஸ்மிஸ்




மிகவும் கறார் பேர்வழியான அந்த அலுவலக மேனேஜர், ஊழியர்கள் பகுதிக்கு திடீர் விஜயம் செய்தார். 

அவர் வருவதை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள், அரட்டை அடித்துக்கொண்டும், வீண் வம்பு பேசிக்கொண்டும், வீணாகப் பொழுதைக் கழிப்பதைப் பார்த்ததும், கோபம் வந்து கத்தலானார். 

அனைவர் டேபிள் மீதும் பல்வேறு செய்தித்தாள்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் எனக் குவிந்திருந்தன.

ஒவ்வொருவராகத் தன் அறைக்கு வரவழைத்து, இன்று காலை முதல் உறுப்படியாக என்ன வேலைகள் பார்த்தாய்? எவ்வளவு கதைகள் படித்தாய்? எவ்வளவு ஜோக்குகள் படித்தாய்? என்னென்ன செய்திகள் படித்தாய்? எதைஎதைப்பற்றி யாரிடம் என்னென்ன பேசினாய்? அதைப்பற்றிய உண்மை விபரங்களை மறைக்காமல் கூறவும் என மிரட்டலானார். 

பொய் சொன்னால் அவருக்கு சுத்தமாகப்பிடிக்காது. குறுக்கு விசாரணை செய்து உண்மையை எப்படியும் கண்டு பிடித்து விடுவார் என்பது அங்கு வேலை பார்க்கும் அனைவருமே அறிந்த விஷயம்.

அவரவர்கள் தாங்கள் செய்து முடித்த அலுவலகப்பணிகளை பயந்து கொண்டே விபரமாக எடுத்துக்கூறினர். 

எல்லாவற்றையும் உடனுக்குடன் மேனேஜர் குறிப்பெடுத்துக்கொண்டார்.

விசாரணை முடிவில், மிகவும் சாத்வீகமானவனும், பயந்த சுபாவம் உள்ளவனும், நல்ல பையனும்,  புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தவனுமான ரவிகுமார் மட்டும் எந்தக்கதையோ, கட்டுரையோ, ஜோக்குகளோ, செய்திகளோ படிக்கவில்லை என்றும், யாரிடமும் எந்த அரட்டைப்பேச்சுகளும் பேசவில்லை என்ற உண்மை மேனேஜருக்குப் புலப்பட்டது.

..........
..........
..........
..........
..........


”நீ நம் அலுவலகத்துக்குப் பொருத்தமான ஊழியர் அல்ல” என்று கூறி ரவிக்குமாருக்கு மட்டும் வேலையிலிருந்து டிஸ்மிஸ் ஆர்டர் கொடுத்து அனுப்பி வைத்தார் மேனேஜர்.  

.............
.............
.............
.............
.............
.............
.............

வேலையை இழந்த சோகத்தில் அந்த மிகப்பெரிய பத்திரிக்கை அலுவலகத்தை விட்டு வெளியேறினான், ரவிகுமார்.  


-o-o-o-o-o-o-o-o-

செவ்வாய், 10 மே, 2011

திருமண மலைகளும் ....... மாலைகளும் !


"நித்யா, நாம் வழக்கமாக சந்திக்கும் பார்க்குக்கு இன்று ஈவினிங் வழக்கமான நேரத்திற்கு வந்துடு.   

நம்ம கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால்,  நாம் நிறைய வேலைகள் பார்க்க வேண்டி இருக்கும்.

கல்யாணத்திற்கு முன்பு, இதுவே நமது கடைசி சந்திப்பாக வைத்துக் கொள்வோம். 

இருவருக்கும் கல்யாணம் என்று முடிவான பிறகு, பார்க் பீச் என்று தனிமையில் நாம் சந்திப்பது தேவையில்லாதது மட்டுமல்ல, யார் கண்ணிலாவது பட்டால், அவர்கள் வம்பு பேசவும் இடமளித்து விடும்” என்றான் செல்போனில் பேசிய ரமேஷ்.  

ரமேஷின் பேச்சு நித்யாவுக்கு நியாயமாகப் பட்டதால் ”மாலையில் கட்டாயம் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்திப்போம்” என்றாள்.

அவரவர்கள் வீட்டில் வெவ்வேறு டிசைனில் தனித்தனியே பிரிண்ட் செய்திருந்த திருமண அழைப்பிதழ்களை பரஸ்பரம் ஒருவொருக் கொருவர் கொடுத்துக் கொண்டனர், வாழ்த்திக் கொண்டனர்.
....................
....................
....................
....................
....................
....................

நேரில் கலந்து கொள்ள இயலாமைக்கு இருவருமே ஒருவருக்கொருவர் வருத்தமும் தெரிவித்துக் கொண்டனர்.

....................
....................
....................
....................             
....................
                                                

அவர்களும் தான் என்ன செய்வார்கள் .... பாவம் !   

நித்யாவின் திருமணம் திருப்பதி மலையில்,  அதே தேதியில் ரமேஷின் திருமணம் ஸ்வாமி மலையில்.


-o-o-o-o-o-o-o-

ஞாயிறு, 8 மே, 2011

எங்கெங்கும் எப்போதும் என்னோடு [ பகுதி 3 of 3 ] இறுதிப்பகுதி



தாழ்வான அந்தத் திண்ணையிலிருந்து எழும் போதே என்னைத் தள்ளி விடுவது போல உணர்ந்தேன்.  இனிமேலும் நடந்தால் சரிப்பட்டு வராது என்று அங்கே வந்து நின்ற ஆட்டோவில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன். 

ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்துவிட்டு, என் குடியிருப்பை நோக்கி நடக்க நினைக்கையில், டாக்டர் எதிரில் தென்பட்டார்.  வணக்கம் தெரிவித்தேன்.  

“என்ன....இன்னிக்கு வாக்கிங் போனீங்களா?” என்று கேட்டார்.  

”இப்போது வாக்கிங் போய் விட்டுத் தான் திரும்ப வந்து கொண்டிருக்கிறேன்” என்றேன்.   

”வெரி குட் - கீப் இட் அப்” என்று சொல்லிப்போனார்.


பழக்கமே இல்லாமல் இன்று ரொம்ப தூரம் நடந்து விட்டு வந்திருக்கிறோம் என்ற நினைப்பிலேயே, இரவு பலகாரம் சாப்பிட்டு விட்டு, இரண்டு கால்களுக்கும் ஆயிண்மெண்ட் தடவிகொண்டு, படுத்தவன் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்து விட்டேன்.  

அடுத்த இரண்டு நாட்களுக்கு வாக்கிங் போக வேண்டாம் என்று முடிவு எடுக்குமாறு, சற்றே மழை பெய்து உதவியது.  அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் ஏதோ சோம்பலில் வாக்கிங் போக விரும்பவில்லை.  

மறுநாள் ஆங்கில முதல் தேதியாக இருந்ததால், நாளை முதல் தொடர்ச்சியாக வாக்கிங் போக வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டேன். 


மறுநாள் மழை இல்லை.  வெய்யிலும் மிதமாகவே இருந்தது. எனக்குள் என்னவோ அந்தப் பெரியவரை மீண்டும் சந்தித்துப் பேசிவிட்டு வரவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.  

நடந்து போக மிகவும் சோம்பலாக இருந்ததால், போகும் போது ஆட்டோவில் சென்று விட்டு, திரும்ப வரும் போது நடந்தே வந்து விடலாம் என்ற எண்ணத்தில் ஆட்டோவில் ஏறினேன்.  அந்தச் சந்தின் அருகே இறங்கிக் கொண்டேன்.  

அந்த முதல் வீட்டுத் திண்ணைக்கு இன்னும் அந்தப் பெரியவர் வந்து சேரவில்லை.  கொஞ்சம் நேரம் வெயிட் செய்து பார்ப்போம், பிறகு அவர் வீட்டுக்கே சென்று அழைத்து வந்து விடலாம் என்ற யோசனையுடன் நான் மட்டும் அந்தக் குட்டைத் திண்ணையில் குனிந்து அமர்ந்தேன். 

சற்று நேரத்தில், நான் நினைத்தபடியே அந்தப் பெரியவர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.   

ஆனால் அவர் தானே நடந்து வரவில்லை.   மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அமரர் ஊர்தியில் படுத்த நிலையில்.  சங்கு ஊதி தாரை தப்பட்டம் அடித்தவாறு பலரும் கும்பலாக அந்த அமரர் ஊர்தியைச் சூழ்ந்தவாறு பூக்களைத் தெருவில் தூவியபடி வந்து கொண்டிருந்தனர்.    


இதைக்கண்ட எனக்கு ஏனோ என்னை அறியாமல் என் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.  வண்டியைச் சற்று நிறுத்தி அந்தப் பெரியவரின் முகத்தை நன்றாக ஒரு முறை உற்று நோக்கிவிட்டு, அவரின் கால்களைத் தொட்டு வணங்கினேன்.  

“வாங்கய்யா .. வாங்க, வணக்கம், உட்காருங்க” என்று வாய் நிறைய  அன்று  என்னை வரவேற்றவர், இன்று பேரமைதியுடன் ஆனால் சிரித்த முகத்துடன் படுத்திருப்பது  என் மனதைப் பிசைவதாக இருந்தது.


முன்னால் தீச்சட்டியை தூக்கிச்சென்ற நபர் அந்தப் பெரியவரின் மாப்பிள்ளையாகத் தான் இருக்க வேண்டும்.  என்னை, யார் நீங்கள்? என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.  பெரியவரின் உடலுக்கு அருகே அவர் உபயோகித்த கைத்தடியும் இருந்தது.

“அந்தக் கைத்தடியை பெரியவரின் ஞாபகார்த்தமாக நான் வைத்துக் கொள்கிறேன்” என்ற என் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்தக் கைத்தடி என் கைக்கு மாறியது.  அதை ஊன்றியபடியே, பெரியவரின் இறுதி ஊர்வலத்தில் நானும் நடந்தே சென்று கலந்து கொண்டேன்.

ஆற்றில் குளித்து விட்டு அவரின் வீடு இருக்கும் சந்து வரை மீண்டும் நடந்தே வந்தேன். 

அன்று வந்த இளநீர் வியாபாரி இன்றும் என்னிடம் வந்தார்.  இரண்டு இளநீர் சீவச் சொன்னேன்.  சீவிய ஒன்றை பெரியவர் அன்று அமர்ந்திருந்த திண்ணையில் படையலாக வைத்தேன்.  மற்றொன்றை நான் குடித்தேன்.  

இன்றைக்கு நான் குடித்த இளநீர் அன்று போல இனிப்பாக இல்லை.  மனதில் எதையோ பறிகொடுத்தது போல இருந்தது.  என் வீடு நோக்கி மீண்டும் நடக்கலானேன்.

எங்கெங்கும், எப்போதும், என்றென்றும், என்னோடு பெரியவரின் கைத்தடியும் பயணம் செய்கிறது. என்னாலும் நடக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்து வருகிறது.  தினமும் அதே கைத்தடியை ஊன்றியபடி என்னால் முடிந்த வரை நடந்து போய் வருகிறேன். 

கைத்தடியை ஊன்றிச்செல்லும் போது, அந்தப் பெரியவரும் என்னுடன் பேசிக்கொண்டே வாக்கிங் வருவது போல எனக்குள் ஒரு பிரமை ஏற்படுகிறது. 

-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-

வெள்ளி, 6 மே, 2011

எங்கெங்கும் எப்போதும் என்னோடு [ பகுதி 2 of 3 ]


அந்தக் காலத்தில் மனிதாபிமானம் மிக்கவர்கள், அவரவர் வீடு கட்டும்போது, வாசலில் பெரிய பெரிய திண்ணைகள் திண்டுடன் கட்டி வைப்பார்கள். வழிப்போக்கர்களும், ஊர் விட்டு ஊர் செல்வோரும், ஆங்காங்கே சற்று நேரம் இத்திண்ணைகளில் அமர்ந்து ஓய்வு எடுத்துச் செல்ல வசதியாக இருந்தது.  

ஆனால் நான் நடந்து செல்லும் இந்த நகரத்தின் மலையைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில், மனிதன் நடந்து செல்வதே மிகவும் கஷ்டமாக உள்ளது. கொஞ்சம் அசந்தால் நம் முழங்கையை ஒரு சைக்கிள்காரர் பெயர்த்துச் சென்று விடுவார்.  சற்று நம் நடையில் வேகம் காட்டினால் போச்சு - காலின் மேல் ஆட்டோவின் பின் சக்கரத்தை ஏற்றி விடுவார் ஒரு ஆட்டோக்காரர்.  இவர்களுக்காக சற்றே ஒதுங்கினால் நம் கால், ஆங்காங்கே தெருவில் வெட்டப்பட்டு, மூடப்படாமல் உள்ள சாக்கடைக் குழிக்குள் நம்மை இறக்கிவிடும்.  

இந்த லட்சணத்தில் கால் வீசி வேக வேகமாக நடக்க நான் என்ன ஒட்டடைக்குச்சியோ அல்லது ஓமக்குச்சியோ போல ஒல்லியானவனா என்ன! 

எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு கொஞ்ச தூரம் தான் சென்றிருப்பேன்.  மெயின் ரோட்டுக்கு குறுக்கே ஒரு சிறிய சந்து.  சந்து பொந்துகளுக்கெல்லாம் பஞ்சமில்லாத ஊரு எங்களுடையது.  சிறிய அந்த சந்தின் வலது பக்க முதல் வீடு பூட்டப்பட்டிருந்தது.  வாசலுக்கு இருபுறமும் இரண்டு மிகச்சிறிய தாழ்வான திண்ணைகள்.  என்னைப்போல உருவம் உள்ளவர்கள் திண்ணைக்கு ஒருவர் வீதம் மொத்தம் இருவர் மட்டும் மிகவும் கஷ்டப்பட்டு அமரலாம்.  

சந்துக்கு உள்ளடங்கிய திண்ணையில் என் உருவத்தில் முக்கால் வாசியானவரும் சற்றே குள்ளமான கறுப்பான ஒரு பெரியவர், கையில் செய்தித்தளுடன், அருகே ஒரு கைத்தடியை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.  கால் கடுத்துப் போன நான் அவர் அருகில் உள்ள மற்றொரு திண்ணையில் கஷ்டப்பட்டு குனிந்து உட்காரலாமா என யோசித்து என் கைக்குட்டையால் ஒரு தட்டுத் தட்டினேன். 

“வாங்கய்யா!  வணக்கம்.  உட்காருங்க!” என்றார் மிகுந்த உற்சாகத்துடன். 

“ஐயாவுக்கு எந்த ஊரு?  வீடு எங்கே?”  கனிவுடன் விசாரித்தார் அந்தப் பெரியவர்.   ஒருவருக்கொருவர் பரஸ்பர அறிமுகம் செய்து கொண்டோம்.

“நீங்கள் பிராமணர் தானே?” என்றார் மிகச்சரியாக என்னைப் பார்த்த மாத்திரத்தில்.

“ஜாதிகள் இல்லையடிப் பாப்பா” என்று முண்டாசுக் கவிஞர் சொன்னதை நினைவூட்டினேன்.  

“முண்டாசுக் கவிஞர் அந்தக் காலத்தில் சொன்னதை யாரு இப்போ பின்பற்றுகிறார்கள்?  நம் முண்டாசுப் பிரதமர் தான் ஜாதி அடிப்படையில் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு செய்யணும் என்று சொல்லி விட்டாரே” என்றார்.

அவரை அப்படியே கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் போல இருந்தது எனக்கு.  உலகச் செய்திகள், நாட்டுநடப்பு எல்லாவற்றையும் செய்தித்தாள் படிப்பதன் மூலம் விரல் நுனியில் வைத்திருந்தார் அந்தப் பெரியவர்.  85 வயதிலும் தெளிவான அனுபவம் மிக்க அறிவு பூர்வமான அவரின் பேச்சு என்னைக் கவர்ந்தது.

“நீங்கள் பிராமணர் தானே”  என்றார் மீண்டும் மறக்காமல்.

“அப்படித்தான் எல்லோரும் சொல்லுகிறார்கள்” என்றேன்.

“அப்போ நீங்க பிராமணர் ஜாதி இல்லீங்களா?”  என்றார்.

“ஜெயா டி.வி.  யில் “எங்கே பிராமணன்” பார்த்து வந்ததால் எனக்கே இதில் இப்போது ஒரு பெரிய சந்தேகம் ” என்றேன். 

புரிந்து கொண்டவர் சிரித்துக்கொண்டே தன்னுடைய ஜாதியைக் கூறினார், நான் கேட்காமலேயே.   பிரபல ஜவுளிக்கடைகளில் விற்பனையாளராக இருந்தவர்.   ஒரே பெண், அவளின் கணவருக்கும் ஜவுளிக்கடையில் தான் வேலையாம்.  ஒரு பேத்தி, ஒரு பேரன்.  வாடகை வீடு.  அதே சின்ன சந்தின் கடைசிக்குப் போய் வலது பக்கம் திரும்பினால் ஒரு பத்தடி தூரத்தில் அவரின் வீடு.   பெண், மாப்பிள்ளை பேரன் பேத்தியுடன் சேர்ந்தே இருக்கிறார். 

அவருக்கும் முழங்காலில் முட்டி வலியாம்.  குச்சி ஊன்றி நடப்பதாக தன் கைத்தடியை எடுத்துக் காண்பித்துச் சொன்னார்.    அந்தக் கைத்தடி பளபளவென்று அழகாக உறுதியாக நல்ல வேலைப்பாடுகளுடன் புதியதாக வாங்கப்பட்டதாகத் தெரிந்தது.  61 வயதாகும் முன்பே நடக்கக் கஷ்டப்படும் நான், 85 வயதாகும் அவரை எண்ணி வியந்து போனேன்.

மாலை வெய்யில் குறையும் நேரமாக இருந்தது.  அருகில் சைக்கிளைத் தள்ளியபடியே,  கையில் அரிவாளுடன் ஒருவரைக் கண்டேன்.  அவரின் சைக்கிள் கம்பிகளில் நிறைய இளநீர் தொங்கிக்கொண்டிருந்தன.  எனக்கும் அந்தப் பெரியவருக்கும் இரண்டு இளநீர், நல்ல வழுக்கையாக, பெரியதாக, சுவையான நீர் நிறைந்ததாகச் சீவச் சொன்னேன்.    இளநீர் குடித்துப் புத்துணர்ச்சி அடைந்த அந்தப் பெரியவர் என்னை ஒருவித வாஞ்சையுடன் பார்த்து கண்களால் நன்றி கூறினார்.

7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடனும், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுடனும் பொறுமையாகப் பேச்சுக்கொடுத்துப் பேசினால், நமக்கு நிறைய புதுப்புது விஷயங்கள் கிடைக்கும்.   அவர்கள் இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வை புதுமையானது, வித்யாசமானது, புதுப்புது அனுபவங்களை எடுத்துச் சொல்லக்கூடியது.    நான் இன்று இந்தப் பெரியவரை சந்தித்து நட்புடன் உறவாடி உரையாடியதில் அவருக்கும் சந்தோஷம் எனக்கும் ஏதோவொரு மனத் திருப்தி கிடைத்தது.

“உங்களை இன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி; அடிக்கடி இந்தப் பக்கம் வரும் போதெல்லாம் நான் இந்தத் திண்ணையில் இருக்கிறேனா என்று பார்த்து விட்டு, கொஞ்சம் நேரம் பேசிவிட்டுப் போங்க” என்றார்.

அவரிடம் பிரியா விடை பெற்று நான் எழுந்துகொள்ள முயன்றேன்.

தொடரும்