என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 13 ஜனவரி, 2011

”நா” வினால் சுட்ட வடு [ பகுதி 1 of 2 ]


ரேவதி என் வீட்டுக்கு வந்தால் முன்பெல்லாம் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். கலகலப்பாக மனம் விட்டு மணிக்கணக்காக பேசிக்கொண்டே இருப்போம்.

இப்போதெல்லாம் அவள் வருகிறாள் என்றாலே என் அடி வயிற்றைக் கலக்குகிறது. அவள் மட்டும் தனியாக வந்தால் பரவாயில்லை. இலவச இணைப்பு போல நண்டு சிண்டுகளாக அவளுடைய நாத்தனார் குழந்தைகளைக் கூட்டி வந்து விடுகிறாள்.
அந்த இரண்டும் ரெண்டுங்கெட்டான்கள். இரண்டு வயது கூட ஆகாத இரட்டைக் குழந்தைகள். வீட்டில் நுழைந்தவுடன் ஒரு இடத்தில் உட்காராதுகள். வெள்ளையான டைல்ஸ் தரையில் இங்கும் அங்கும் ஓடும். ஆங்காங்கே தரையை ஈரமாக்கிவிடும். பிறகு அதிலேயே வழுக்கி விழுந்து விடும். கைக்கு எட்டும் எல்லா சாமான்களையும் எடுத்து வாரி இறைக்கும். ராக்கில் உள்ள எல்லாப் பொருட்களையும் ஒவ்வொன்றாக விட்டெறிந்து கொண்டே இருக்கும். பேப்பர், புத்தகம் என்று எது கிடைத்தாலும் அதை கசக்கி கிழித்துப் போட்டு விடும்.

போன வாரம் வந்த போது, பெரிய சைஸ் இருமல் ஸிரப் பாட்டில் ஒன்றை கீழே போட்டு உடைத்து விட்டது, அந்தக்குழந்தகள். ஸிரப் வீணாகிப் போனதோடு மட்டுமல்லாமல், உடைந்த பாட்டில் சிதறல்கள், கை கால்களில் பட்டு காயம் படாமல், திரட்டி எடுத்து சுத்தம் செய்வதற்குள், போதும் போதும் என்று ஆகி விட்டது, எனக்கு.

அந்தக்குழந்தைகள் அழுதால் கொடுக்க ஏதாவது பிஸ்கட், பால், இட்லி, நெய்யுடன் பருப்பு அல்லது தெளிவான காரமில்லாத ரஸம் சாதம் என ஆகாரம் ஏதாவது நான் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.


அவள் வரும்போதெல்லாம், என் வீட்டில் இப்படி பலவிதமான அலங்கோலங்கள் இந்தக் குழந்தைகளால் நடந்து வருவதால், எனக்கே தர்ம சங்கடமாக இருந்து வருகிறது. என்ன செய்வது, வரவேண்டாம் என்றோ, அவ்வாறு வந்தால் இதுகளைக் கூட்டி வரவேண்டாம் என்றோ, சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தர்ம சங்கடமாக இருந்து வந்தேன்.


என் வீட்டுக்கு இன்று வரப்போவதாக போன் செய்து விட்டாள்., ரேவதி. “டி.வி.யில் அத்திப்பூக்கள் முடிந்த பிறகு வாடி” என்று கண்டிப்புடன் சொல்லி விட்டேன். நாளுக்கு நாள், விறுவிறுப்பாகப் போகும் ”அத்திப்பூக்கள்” இல் அவ்வளவு ஒரு ஈடுபாடு எனக்கு.
அவள் வீடும் என் அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து ஒரு பத்து கட்டிடங்கள் மட்டும் தள்ளியிருப்பதால், சரியாக இரண்டரை மணி எப்போது ஆகும் என்று காத்திருந்து 2.35 க்கு ஆஜர் ஆகிவிடுவாள். இன்று எனக்கு மத்தியானத் தூக்கம் கிடையாது என்பது புரிந்துவிட்டது.
வாசலில் காலிங் பெல் அடித்தது. திறந்தேன். வாயெல்லாம் பல்லாக ரேவதி வந்து விட்டாள். நல்ல வேளையாக இலவச இணைப்பு இன்று, ஒன்று மட்டுமே அவளுடன் வந்திருக்கிறது. பாவம் அந்த மற்றொன்று வீட்டிலேயே தூங்கி விட்டதாக துக்கத்துடன் கூறிக் கொண்டாள். இன்று ஒற்றைத் தலைவலி மட்டும் தான் என்று நினைத்துக்கொண்டு, அவளை வரவேற்றேன்.

உள்ளே நுழைந்தவன் மிகவும் சாதுவாக படுக்கை அறைக்குள் தட்டுத்தடுமாறி சென்றான். கண் சொக்கியபடி கட்டிலில் தாவி ஏறி படுத்துக் கொண்டான். கூட்டாளி இல்லாததால் லூட்டி அடிக்க விருப்பம் இல்லையோ என்னவோ! ரேவதியும் கட்டிலில் அமர்ந்து இரண்டு தட்டு தட்டியவுடன் தூங்கிப் போனான்.


பெட்ரூம் கதவை லேசாக சாத்தி விட்டு ஹாலில் உட்கார்ந்து வெகு நாட்களுக்குப் பிறகு எங்களால் மனம் விட்டு நிம்மதியாகப் பேச முடிந்தது. தன் நாத்தனார் அடுத்த வாரம் ரெயிலேறி தன் புகுந்த வீட்டுக்குப் புறப்பட்டுப் போக இருக்கிறாள் என்றாள். இதைக் கேட்டதும் என் மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பல சமாசாரங்கள் பேசிக்கொண்டே போனதில் பொழுது போனதே தெரியவில்லை. சூடாக ரேவதிக்குக் காஃபி கலந்து கொடுத்து விட்டு நானும் குடித்தேன்.


இந்த ரேவதி என் கல்லூரித் தோழி மட்டுமல்ல. நான் இருக்கும் இடத்தில் எனக்கு பதிலாக என் கணவருக்கு மனைவியாக வந்திருக்க வேண்டியவள். ஜாதகப் பொருத்தம் இல்லை என்று என் மாமியாரால் தட்டிக் கழிக்கப்பட்டவள்.
பிறகு அவள் சொல்லித்தான், என் தந்தை என் ஜாதகத்தைக் கொடுத்து, மிகவும் பொருந்தியிருப்பதாகச் சொன்னதனால், நான் இங்கு வாழ்க்கைப்பட ஒரு விதத்தில் உதவியவளும் கூட.

வேடிக்கை என்னவென்றால் அவளுக்கும் எனக்கும் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் திருமணம் நடந்ததால் ஒருவர் திருமணத்திற்கு ஒருவர் போக முடியாமல் போனது. வீடியோக்களைப் பார்த்து திருப்தி பட்டுக்கொண்டோம்.


இப்போது கூட என் சினேகிதி ரேவதியைப் பார்க்கும் போதெல்லாம் என் கணவருக்கு ஒரு வித உற்சாகமும், விட்டகுறை தொட்டகுறை போல ஒரு வித ஏக்கமும் ஏற்படுவதுண்டு.

திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகியும் எனக்கு இதுவரை தாய்மை அடையும் ப்ராப்தம் இல்லாமல் இருந்து வருகிறது. ஒரு சின்ன அல்ப சந்தோஷம் என் மனதிற்குள் என்னவென்றால், ரேவதியும் என்னைப் போலவே தான், இன்று வரை அரசமரத்தைச் சுதந்திரமாகச் சுற்றி வருபவளாக இருந்து வருகிறாள், என்பது மட்டுமே.


ஒரு வீடு கட்டவே நமக்குப் ப்ராப்தம் வருவதற்குள், சிலர் இரண்டு மூன்று வீடுகளுக்கு சொந்தக் காரர் ஆகி விடுவதுண்டு. அது போல ஒன்றுக்கே தவமாய் தவமிருக்கும் எங்களுக்கு, ரேவதியின் நாத்தனாருக்கு ஒரே பிரஸவத்தில் இரட்டைக் குழந்தைகள், இரண்டும் ஆண் குழந்தைகள், என்றதும் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.


குழந்தைகளுக்கு தொட்டில் இட்ட அன்று நானும் ரேவதியும் தான் அம்மிக் குழவிகளைக் குளிப்பாட்டி, அலங்காரம் செய்ய பணிக்கப் பட்டோம். அதுபோல செய்தால் விரைவில் வளைகாப்பு சீமந்தம் வரும் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள், கூடியிருந்த வயதான பெண்மணிகள்.


இது போலச் சொல்லிச் சொல்லியே பல வளைகாப்புகளில், எங்களையும் மறுமனை என்ற பெயரில் அந்தப் பிள்ளைத்தாச்சி பொண்ணுடன் மனையில் அமர்த்தி, எங்களுக்கும் கைநிறைய வளையல்கள் அணிவித்து, பல அம்மிக்குழவிகளை குளிப்பாட்டி, வேப்பிலை அடிக்க வைத்து விட்டனர்.

தொடர்ந்து இது போல அழைக்கப்படும் பெண்களின் மனது எவ்வளவு தூரம் பாதிப்புக்கும், அவமானத்திற்கும், உள்ளாகும் என்பதைப் பற்றி, யாரும் கொஞ்சமும் சிந்திப்பதில்லை.
இப்போது இதிலெல்லாம் எங்கள் இருவருக்கும் சுத்தமாக நம்பிக்கை போய்விட்டது. இப்போது அதுபோல யாராவது அழைத்தாலும் ஏற்றுக் கொள்வது இல்லை. அத்தகைய விழாக்களுக்கு செல்வதையே அடியோடு நிறுத்திக் கொண்டு விட்டோம்.

இவ்வாறு ஏதேதோ எங்களின் பிரத்யேகப் பிரச்சனைகளைப் பற்றி எங்களுக்குள் தனிமையில் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்த போது, பெட்ரூமிலிருந்து ஒரு மிகப்பெரிய சப்தம் கேட்டு திடுக்கிட்டு ஓடினோம்.

[இதன் தொடர்ச்சி தனியாக பகுதி-2 இல் இப்போதே வெளியிடப்பட்டுள்ளது]

புதன், 12 ஜனவரி, 2011

பொங்கல் வாழ்த்து




செங்கரும்புச் சாறெடுத்து
இதழினிலே தேக்கி,

சிந்துகின்ற புன்னகையால் துன்பம் நீக்கி,

மதமதத்த கைகளிலே வளையல் வீசி,

மங்கலமாம் ”தை” என்னும் மங்கை வருவாள் !

பொங்கியெழும் புத்தின்ப உணர்ச்சி தருவாள் !!

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா? [இறுதிப் பகுதி 8]

பாத் ரூமில் சோப்புப் போட்டுக் குளித்துக்கொண்டிருந்த பஞ்சாமி, சோப்பு நுரை வாயில் சற்று பட்டு விட்டதால், துப்பி விட்டு, தன் பல் செட்டைக் கழட்டி, பல்லையும் துலக்கி விடலாம் என அவசரமாக கழட்டும் போது, அதில் ஒன்று கை நழுவி கீழே விழுந்து இரண்டாக உடைந்து போனது. அது மட்டுமா ! அந்தப் பதட்ட வேளையில் மற்றொன்று கழிவறைப் பாதையில் சோப்பு நுரையுடன் வழுக்கிச் சென்று மறைந்தே போனது. பஞ்சாமி நொந்து நூலாகிப் போனார்.

பல் டாக்டரை நோக்கிய பஞ்சாமியின் பயணம் மீண்டும் தொடர்ந்தது. ஏற்கனவே பல் விஷயமாக பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து விட்ட பஞ்சாமியிடம், டாக்டர் ஆறுதலாகக் கூறியது:

“நவீன பல் சிகிச்சை முறையில், தனித்தனியாக பற்களை எகுறுக் குழிகளில் பதித்து ஸ்க்ரூ செய்துவிடும் மேல் நாட்டு முறை புதியதாக வந்திருப்பதாகவும், அவ்வாறுசெய்து கொண்டு விட்டால், தற்போது ஏற்பட்டது போன்ற விபத்து ஏதும் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும், பணம் தான் ஒரு அரை லட்சம் மட்டும் செலவாகும்” என்றார்.

இதைக்கேட்டதும் தன் ’பல்’ஸ் பிரச்சனை இப்படி ஆகிவிட்டதே என்ற அதிர்ச்சியில் ’பல்ஸ்’ வீக்காகி பஞ்சாமி மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார்.

முற்றும்

பின் குறிப்பு:

பஞ்சாமி மயங்கி மூர்ச்சையாய் விழுந்த அதே நாள் இரவு தமிழ் நாட்டிலுள்ள அனைத்து டீ.வி. சேனல்களிலும் கீழ்க்கண்ட ஒரு பரபரப்புச் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது:
”சென்னைப் பல்லாவரத்தைச் சேர்ந்தவரும், பல்லவராயன் என்ற பெயரில் பல்லாண்டுகளாக பல் டாக்டர் ஆக பணியாற்றி வருபவருமான ஒருவர், போலி டாக்டர் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாலும், அதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாலும், அவர் மேல் நிறைய புகார்கள் வந்துள்ளதாலும், பல்லவன் பஸ்ஸில், பல்பொருள் அங்காடிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையே பயணம் செய்யும் போது, போலீஸாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, இன்று கைது செய்யப்பட்டார்.”

நம் பஞ்சாமிக்கு பல் வைத்தியம் செய்தவர் இதே பல்லாவரத்தைச் சேர்ந்த பல் டாக்டர் பல்லவராயன் தான் என்று நான் சொல்லவும் வேண்டுமா என்ன? நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள் தானே !

-ooooooo-




மீண்டும் சந்திப்போம்.
அதுவரைத் தங்களிடமிருந்து
அன்புடன் விடைபெறும்,
வை.கோபாலகிருஷ்ணன்

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா? [பகுதி 7]

ஒவ்வொரு முறையும் ஏதாவது சாப்பிட்டவுடன் உணவுத் துகள்கள், ஆங்காங்கே பல்லிலும், அதைச்சுற்றிப் பொருத்தப்பட்டுள்ள செதில்களின் இடுக்குகளிலும் மாட்டி வருவதாக உணர்ந்த பஞ்சாமி, அதை அடிக்கடி வெளியே எடுப்பதும், சுத்தப்படுத்துவதும், திரும்பவும் கஷ்டப்பட்டு மாட்டிக் கொள்வதுமாகவே இருந்து வந்தார்.

நாளடைவில் இது போல செய்வதற்கு சோம்பல்பட்டு, அடிக்கடி ஏதாவது கடித்து சாப்பிடுவதையே குறைத்துக் கொண்டார். வாயின் இறுக்கத்தைக் குறைக்க, பகல் பொழுதினிலேயே பல்வேறு சமயங்களில், பல்செட்டைக் கழட்டி அதற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, வாயை காற்றாட, சுதந்திரமாக இருக்க விட்டு, தனக்குத் தானே உதவி செய்து கொண்டார்.

அடுத்த ஒரு மாதத்தில், பல் செட் அணிவதால் ஏற்பட்ட கஷ்டங்களிலிருந்து நம் பஞ்சாமி விலகினார் என்பதை விட மிகவும் கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டங்களுடன் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டார் என்றே கூற வேண்டும்.

அன்றொரு நாள் ... பாவம் .. மீண்டும் விதி நம் பஞ்சாமியுடன் விளையாடி விட்டது.
தொடரும்....

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா? [ பகுதி 6 ]

ஓர் முக்கிய அறிவிப்பு

ஏற்கனவே வெளியிடப்பட்ட இந்தக்கதையின் பகுதி-5 மட்டும் எங்கோ மறைந்து காணாமல் போய் உள்ளதால், தயவுசெய்து கீழ்க்கண்ட மீள் பதிவுக்குச் சென்று பகுதி 5 முதல் 8 வரை, ஒரே பதிவினில்  படிக்கவும்.



===============================================

பகுதி-6 இப்போது இங்கே தொடர்கிறது........

பஞ்சாமியை இருக்கையில் அமரச்செய்து, பல் செட் இரண்டையும் மேலும் கீழும் பொருத்தி, தன் கை விரல்களால் அழுத்தி இடைவெளியில்லாமல் மேல் ஓட்டிலும், கீழ்த்தாடையிலும் சரியாகப் பொருத்தி விட்டு, முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றைக் கையில் கொடுத்து, “பாருங்கள் - எப்படி உள்ளது” எனக் கேட்டார், அந்த டாக்டர்.

வாயைத்திறந்து பேச பயந்து, தலையை மட்டும் ஆட்டினார் பஞ்சாமி.

காற்றோட்டமாக செருப்புப் போட்டு பழகியவருக்கு திடீரென்று ஷூவும், சாக்ஸூம், அதுவும் டைட்டாகப் போட்டுவிட்டால் ஏதோ ஒரு முதலை, காலைக் கவ்விக் கொண்டிருப்பது போல உணர்வு ஏற்பட்டு கஷ்டப்படுத்தும். அது போல பஞ்சாமிக்கு வாய் முழுவதும் எதையோ வைத்து அடைத்து விட்டது போல ஒரு வித அவதி ஏற்பட்டது.

நாக்கால் தன் புது பல் செட்டைத் துலாவிப் பார்த்த அவருக்குப் பல் நுனிகள் ரம்பம் போல் கூர்மையாக இருப்பது போலத் தோன்றியது. அதெல்லாம் கரெக்ட் செய்து விடலாம் என வாக்களித்த டாக்டர், ஓரிரு முறை பல் செட்டை மெதுவாகத் தானே போட்டு, தானே கழட்டிப் பழகச் சொன்னார். புதியதாக இருந்ததால் கழட்டி மாட்டுவதற்குள் ப்ராணாவஸ்தையாகப் போய் விட்டது பஞ்சாமிக்கு.

புது செருப்பு காலைக் கடிப்பது போல புதுப்பல்செட் கீழ்த்தாடையிலும், மேல் தாடையிலும், ஆங்காங்கே நன்றாகப் பதம் பார்த்து விட்டது.

புண்ணான இடங்களைப் பற்றிய விபரம் அறிந்த டாக்டர் பல்செட்டைத் தனியே எடுத்து தக்ளி போன்ற மிகச்சிறிய சாணைக்கல்லில் ஆங்காங்கே சற்று ராவ ஆரம்பித்தார். உராய்வைக் குறைக்க கிரீஸ் போன்ற போன்ற ஏதோ ஒன்றைத் தடவி மீண்டும் பஞ்சாமியின் வாயில் பொருத்தி, பல்லின் நுனிப்பகுதிகளை சமப்படுத்த, அந்த மிகச்சிறிய சாணைக் கல்லை அவர் வாயருகில் கொண்டு சென்று மீண்டும் ஓடவிட்டு ஃபைனல் டச்-அப் செய்தார்.

சுழலும் சாணைக்கல், வாயில் பொருத்தப்பட்ட, பல் நுனியில் பட்டதும், உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை, பஞ்சாமிக்கு மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ச்சி ஏற்பட்டது.

ஒரு வாரம் பழகினால் சரியாக சூட் ஆகி விடும் என்றும், பல்லைப் பத்திரமாகப் பராமரிப்பது எப்படி என்றும், இரவு நேரங்களில் தேவைப்பட்டால் போட்டுக் கொண்டே தூங்கலாம் என்றும், தேவையில்லாது போனால் கழட்டி, அதற்கென தனியாக ஒரு சம்புடத்தில் நீர் ஊற்றி அதில் மிதக்க விடலாம் என்றும், இரண்டு பக்கமும் சமமாக கடிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் பலவித ஆலோசனைகள் கூறி அனுப்பி வைத்தார், டாக்டர்.

தூக்கலான பற்களுடனும், சிரித்த முகத்துடனும், கலகலப்பாகவும் பஞ்சாமியைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, இப்போது அவர் கோபமாகவும், படு சீரியஸ் ஆகவும், உம்மென்று இருப்பது போலத் தோன்றியது.

பஞ்சாமியைப் பொருத்தவரை, புதிய பல்செட் அணிந்துள்ளதால் முகம் ஏதோ பார்க்க பங்கரையாய் இல்லாமல் இருப்பதாக மட்டுமே உணர முடிந்தது. தேவையில்லாத ஏதோ ஒரு பொருள் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், வாய் முழுவதும் வியாபித்து அடை பட்டு உள்ளது போல, அருவருப்பாகத் தோன்றியது.

முதன் முதலாக நான்கு டைமன் கற்கண்டுகளை வாயில் போட்டுக் கொண்டு மிகவும் ஆசையுடனும், சற்று பயத்துடனும் கடித்துப் பார்த்தார். கல்கண்டு உடைந்து கடி பட்டதா அல்லது பல்செட்டே உடைந்து தூள் தூள் ஆனதா என்று ஒன்றும் விளங்காமல் இருந்தது, பஞ்சாமிக்கு.

பிறகு தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவராக, பெரு முயற்சி செய்து கொஞ்சம் காராபூந்தியை வாயில் போட்டு மென்று விழுங்கினார். அது ஆங்காங்கே பல்செட் முழுவதும் ஈஷிக்கொண்டு படாத பாடு படுத்தியது.

மொத்தத்தில் ஒரிஜினல் ஒரிஜினல் தான், டூப்ளிகேட் டூப்ளிகேட் தான் என்பதை அனுபவ பூர்வமாக ஒவ்வொரு முறையும் பற்களால் அசை போடும் போது, தன் மனதாலும் அசை போட்டுப் பார்த்தார்.


தொடரும் ....

சனி, 8 ஜனவரி, 2011

சொன்னதைச் சொல்லுமாம்...



நவராத்திரி முதல் நாள், என்
ஒன்றரை வயது அருமைப்
பேத்தியிடம் சொன்னேன்:
“கொலு பொம்மைகளைத்
தொடாமல் பார்க்கணும்” என்று!

அவள் அடுத்த பத்து நாட்களும்
அதையே திரும்பத் திரும்பச் சொன்னாள்
கொலு பார்க்க வந்த
பெரியவர்கள் அனைவரிடமும்.

புலிக்குக் கொடுத்த முத்தம் !





முதன் முதலாக
ஐந்தும் மூன்றும் எட்டு என்று

சரியாகச் சொன்ன
என் குழந்தையை

”கணக்கில் நீ ‘புலி’ “ என்று சொல்லி
முத்தம் கொடுத்துப் பாராட்டினேன்

”அப்பா ..... எனக்கொரு
சந்தேகம்” என்றது

”சந்தேகம் எதுவாகினும்
தயங்காமல் கேள்” என்றேன்

” ‘புலி’ க்கு கூட கணக்குப்
போடத் தெரியுமா?” என்றது.