என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
’விமர்சனப் போட்டிக்கான’ சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
’விமர்சனப் போட்டிக்கான’ சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 3 of 4]



முக்கிய அறிவிப்பு 

இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான 

கடைசி கதையாக இருப்பதால்
இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து

சென்ற வெள்ளிக்கிழமை முதல்
 நாளைய திங்கட்கிழமை வரை 
தினம் ஒரு பகுதியாக
வெளியிடப்பட்டு வருகிறது

நான்கு பகுதிகளையும் 
பொறுமையாகப் படித்து
ஒரே விமர்சனமாக 
எழுதி அனுப்பி வைத்தால் போதுமானது. 


விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

இறுதி நாள்: 26.10.2014 
ஞாயிற்றுக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 40

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:






மனசுக்குள் மத்தாப்பூ

சிறுகதைத் தொடர் 

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


பகுதி-1 க்கான இணைப்பு:  

http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html

பகுதி-2 க்கான இணைப்பு:  

http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-2-of-4.html

பகுதி-3





த்தகைய அழகிய தன் இளம் பெண் அனுவுக்கு வாய் பேசமுடியாமல் உள்ளது என்று தற்செயலாகக் கோயிலில் சந்தித்த அனுவின் தாயார் மூலம் நேற்று கேள்விப்பட்டதும் மனோவுக்கு அதிர்ச்சியாகிப் போனது.

அழகிய அந்த முழுநிலவுக்குள் இப்படியொரு களங்கமா? மனோவுக்கு மனதை நெருடியது. இறைவனின் படைப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கே அனைத்துத் திறமைகளும் அபரிமிதமாக அளிக்கப்பட்டிருக்கும் என்பதை அவளின் கோலப் படைப்புக்களில் காட்டப்படும் தனித்திறமையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது என நினைத்துக்கொண்டான்.

இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டதிலிருந்து, அனுவின் மேல் அவனுக்கு ஏற்கனவே இருந்து வந்த ஈடுபாடு சற்றும் குறையாமல், மேலும் அதிகரிக்கவே செய்தது. 

அன்று சனிக்கிழமை. இரவு மணி எட்டு இருக்கும். அனுவைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்த மனோவுக்கு, தன் அறையின் வெளியே யாரோ அழைப்பு மணி அடிப்பது கேட்டது. ஓடிச்சென்று கதவைத் திறந்தான் மனோ. அறையின் வெளியே, வீட்டின் சொந்தக்காரரான அனுவின் அம்மா தான் நின்று கொண்டிருந்தார்கள்.

“வாங்கம்மா! என்ன இவ்வளவு தூரம், மாடிப்படிகளில் ஏறி நீங்களே வந்துட்டீங்க! ஒரு குரல் கூப்பிட்டிருந்தால் நானே வாடகைப் பணத்துடன் கீழே ஓடி வந்திருப்பேனே” என்று சொல்லி அங்கிருந்த நாற்காலியை மின் விசிறிக்குக்கீழே போட்டு, அவர்களை அமரச்சொல்லி, மின் விசிறியையும் சுழலவிட்டான், மனோ. 


”தம்பி, நான் வாடகைப்பணம் வசூல் செய்ய வரவில்லை. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே, நீங்க ஆபீஸ் டூட்டிக்குப்போக வேண்டியிருக்குமா அல்லது விடுமுறையா எனக் கேட்டுட்டுப் போகலாம்னு தான் நான் வந்தேன்” என்றாள்.

“டூட்டிக்குப் போகணும்னு கட்டாயம் ஏதும் இல்லை. பொழுது போக்கா இருக்கட்டுமே என்று நானாகத்தான் ஞாயிற்றுக்கிழமைகளில் போய் வருவது என் வழக்கம். சொல்லுங்கம்மா, நான் ஏதாவது உங்களுக்கு உதவி செய்யணுமா?” மனோ மிகுந்த ஆவலுடனும், துடிப்புடனும் கேட்டான். அவனின் அன்புக்குரிய அனுவின் அம்மா அல்லவா அவர்கள்!


“ஆமாம் தம்பி, நீங்க ஒரு உதவி செய்யணும். நம்ம வீட்டுப்பொண்ணு அனுவை பொண்ணு பார்க்க பட்டணத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருகிறாங்க. எங்க வீட்டுக்காரர் போய்ச் சேர்ந்ததிலிருந்து, ஆம்பளைத்துணை இல்லாத வீடாப்போச்சு. நீங்க கொஞ்சம் அவங்க வந்து போற சமயம் மட்டும், நாளை காலை பத்து மணி சுமாருக்கு நம்ம வீட்டுக்கு வந்து கூடமாட பேச்சுத்துணையா இருந்துட்டுப்போனீங்கன்னா, எங்களுக்கும் கொஞ்சம் தைர்யமா இருக்கும்” என்றாள்.


இதைக்கேட்ட மனோவுக்கு ஒரு பக்கம் ஆச்சர்யமாகவும், மறுபக்கம் ஒருவித அதிர்ச்சியாகவும் இருந்தது. 


“ரொம்ப சந்தோஷமான சமாசாரம் தான் அம்மா. மாப்பிள்ளைப் பையன் என்ன செய்கிறார்? நம் அனுவைப்பற்றி எல்லாம் விபரமாகச் சொல்லி விட்டீர்களா?” மனோ மிகுந்த அக்கறையுடன் வினவினான்.


“சென்னையில் ஏதோ பிஸினஸ் பண்ணுகிறாராம். பணம் காசுக்கு ஒண்ணும் பஞ்சமில்லையாம். கல்யாணத் தரகர் ஒருவர் மூலம் தான் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் இதுவரை நடந்துள்ளது; 

நீங்க தான் தம்பி நேரில் வந்து பேசி முழு விபரம் கேட்டு, நல்லது கெட்டது பற்றி விசாரித்துச் சொல்லணும். நல்லபடியா முடிஞ்சு, நல்ல இடமாக இருக்கணுமேன்னு ஒரே விசாரமாக இருக்கிறது” என்றாள்.


”சரிம்மா, நீங்க கவலைப்படாம போங்க. நான் நாளைக்கு காலையிலேயே சரியா பத்து மணிக்கு முன்னாடியே வந்துடறேன்” என்று சொல்லி டார்ச் அடித்து கீழே கடைசிபடி வரை கூடவே தானும் சென்று வழியனுப்பி வைத்தான், மனோ.

மனோ ஓட்டலுக்குச் சென்று வழக்கம்போல் இரவு உணவருந்தி விட்டு தன் அறைக்கு திரும்ப வந்து படுத்தும், தூக்கமே வரவில்லை. நெடுநேரம் புத்தகங்கள் படித்தும் எதுவுமே மனதில் பதியவில்லை. மனோவில் மனதில் ஏதோ இனம்புரியாததோர் சோகம் கவ்விக்கொண்டது போல உணரமுடிந்தது. பிறகு நள்ளிரவுக்கு மேல் ஒரு வழியாகத் தூங்கிப்போனான்.




திகாலையில் வழக்கம்போல் தன் பைனாக்குலரில் அனுவையும், அவள் போடும் கோலத்தையும் தரிஸிக்க ரெடியாகி விட்டான். இன்று அவனால் எப்போதும் போல இயல்பாக அனுவையும், அவள் போடும் கோலத்தையும் ரசிக்க முடியவில்லை. 

அனுவைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எத்தனை நாட்களுக்கோ? விரைவில் கல்யாணம் ஆகிச் சென்று விடப்போகிறவள். மெளன மொழி பேசும் அவளுக்கு, அவள் மனதைப்புரிந்து கொள்ளும் கலகலப்பான கணவன் அமைந்து, அவளையும் கலகலப்பாக சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும், என மனதிற்குள் பிரார்த்தித்தான்.       

தன்னை இன்று பெண் பார்க்க வருகிறார்கள் என்ற சந்தோஷத்தில், குனிந்த நிலையில் பூமித்தாயைக் குளிப்பாட்டி, மேக்-அப் செய்வது போல், அழகிய தன் கையின் பிஞ்சு விரல்களால் பொட்டு வைத்து, கோலமிட்டு, கலர் கலரான ஆடைகள் அணிவித்து, பறங்கிப்பூக்களை சூடி மகிழ்கின்றாள் அனு. தன் வீட்டுப் பக்கத்திலிருந்து, நடு ரோட்டுப்பக்கம் போய் அமர்ந்து ஆங்காங்கே [ பூமித்தாயின் உடலில் ] கோலத்தில் டச்-அப் வேறு செய்கிறாள். அவள் இவ்வாறு நடுத்தெருவில் குந்திட்டு அமர்ந்திருப்பது அவளின் வீட்டை நோக்கி.

அவள் வீட்டுக்கு நேர் எதிர்புறம் உள்ள செடி கொடிகள் மண்டிக்கிடக்கும் புதர்போன்ற பகுதியிலிருந்து சுமார் ஆறடி நீளமுள்ள கருநாகப்பாம்பு ஒன்று வேகமாக அவளின் முதுகுப்புறம் நோக்கி சரசரவென்று வந்து கொண்டிருப்பதை மனோ தன் பைனாக்குலர் மூலம் பார்த்து விட்டான். 





அவளின் முதுகுப்புறம் வந்த அந்த பாம்பு அவளைத் தீண்டாமலும், கோலத்தைத்தாண்டாமலும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல படம் எடுத்து ஆட ஆரம்பித்தது.



 




இதைப்பார்த்து விட்ட மனோவுக்கு பதட்டம் அதிகரித்து, தன் பைனாகுலரை வீசிவிட்டு, வேகமாக மாடியிலிருந்து கீழே ஓடோடி வருகிறான். 

அனுவின் பக்க வாட்டில் நெருங்கிய அவன், அவளை அப்படியே அலாக்காகத்தூக்கிச் சென்று, அவள் வீட்டு வாசல் பக்கம் நின்று அவளை அப்படியே திருப்பி, படமெடுக்கும் அந்தப் பாம்பைப் பார்க்கச் செய்கிறான்.

திடீரென்று ஒரு வாலிபன் தன்னைக் கட்டிப்பிடித்து தூக்கி விட்டதையும், எதிரில் தன்னை ஒரு கருநாகம் தீண்ட இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்த அனு, வாழ்க்கையில் முதன் முதலாக தன் வாய் திறந்து “அம்மா” என்று அலறிக் கத்திவிட்டாள்.

அவளை அது சமயம் வாய் திறந்து பேச உதவிய அந்தப் பாம்பும், தான் வந்த வேலை முடிந்து விட்டது என்பது போல தான் வந்த வழியே திரும்பிச்சென்று, எதிர்புறம் இருந்த செடி கொடிகளுடனான புதர் பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டது.


டாக்டர் மனோவுக்கு அந்தக் கடிக்க வந்த பாம்பை விட, இதுவரை வாய் பேச முடியாத குறையுடன் இருந்த அனு, தன் வாய் திறந்து ”அம்மா” என்று அலறியதில் அதிர்ச்சியாகி அவனும் “ஹை..ய்..ய்..ய்..யோ” என அவளைப் பார்த்து கத்திவிட்டான்.

காலை வேளையில் இவர்கள் எழுப்பிய இந்தச் சத்தத்தில் ஊரே கூடி நின்று விட்டது. 

நம்ம ஊரு வயசுப்பொண்ணு ஒருத்தியை, அதுவும் வாய் பேசமுடியாத ஒரு அப்பாவிப் பெண்ணை, எங்கிருந்தோ வந்த இவன் கட்டிப்பிடித்துத் தூக்கி விட்டான். இந்த அயோக்யனை நாம் சும்மா விடக்கூடாது. கட்டிப்போட்டு உதைக்க வேண்டும் என அந்த ஊர்ப் பஞ்சாயத்தில் முடிவு ஆனது.

இதில் சம்பந்தப்பட்ட ’அனு’வாலும் வாய் திறந்து உண்மையைப் பேசமுடியாத நிலை. அந்தப் பாம்பாலும் பஞ்சாயத்தில் சாட்சி சொல்ல வரமுடியாத நிலை. 

’அனு’வைக் கட்டிப்பிடித்து மனோ தூக்கியதை மட்டும், அங்கே அகஸ்மாத்தாக வந்த பாக்கெட் பால் போடுபவன் ஒருவன் பார்த்துவிட்டான். அவனே இதில் மனோவுக்கு எதிரான வில்லனாகவும், கண்ணால் சம்பவத்தை நேரில் கண்ட முக்கியமான சாட்சியாகவும் ஆனதால், பஞ்சாயத்தில் இவ்வாறு ஒரு மோசமான தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.


பஞ்சாயத்தாரின் தீர்ப்பினைக்கேட்ட மனோவுக்கு மிகவும் அவமானமாகி விட்டது. அழுகையாக வந்தது. 

அதைவிட கொடுமை ..... கீழ் வீட்டு, அனுவின் அம்மா, மனோவைப் பார்த்த பார்வையே, அவனை அப்படியே சுட்டெரிப்பது போல இருந்தது.


தொடரும்



     



/ இந்தக்கதையின் தொடர்ச்சி -
இறுதிப்பகுதி நாளை வெளியாகும் /

காணத்தவறாதீர்கள் !

போட்டியில் கலந்துகொள்ள 
மறவாதீர்கள் !!

இதுவே இந்தப்போட்டியில்
கலந்துகொள்ளத் தங்களுக்கான 
இறுதி வாய்ப்பு !!!

    





தகவலுக்காக


 

 


VGK-38 - மலரே ..... குறிஞ்சி மலரே !
விமர்சனப்போட்டி பரிசு முடிவுகள்
25.10.2014 சனிக்கிழமை
முதல் வெளியிடப்படும்.

21.10.2014 முதல் 24.10.2014 வரை
தினமும் ஒரு ’நேயர் கடிதம்’ வீதம் வெளியிடப்படும்


 

என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்



சனி, 18 அக்டோபர், 2014

VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]



முக்கிய அறிவிப்பு 

இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான 

கடைசி கதையாக இருப்பதால்
இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து

நேற்று வெள்ளிக்கிழமை முதல்
 வரும் திங்கட்கிழமை வரை 
தினம் ஒரு பகுதியாக
வெளியிடப்பட்டு வருகிறது. 

நான்கு பகுதிகளையும் 
பொறுமையாகப் படித்து
ஒரே விமர்சனமாக 
எழுதி அனுப்பி வைத்தால் போதுமானது. 


விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

இறுதி நாள்: 26.10.2014 
ஞாயிற்றுக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 40

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:




மனசுக்குள் மத்தாப்பூ

சிறுகதைத் தொடர் 

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

பகுதி-1 க்கான இணைப்பு:  

http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html

பகுதி-2

ட்டென துள்ளி எழுந்தான் மனோ, தன் படுக்கையிலிருந்து


இதுவரை தான் கண்டதெல்லாம் வெறும் கனவு தான் என்பதை அறிந்து, சிரித்துக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்து பல் துலக்கி முகம் கழுவச்சென்றான்.


மாடியிலிருந்து கீழ் வீட்டு வாசலை நோக்கினான். அனு வழக்கம் போல கோலம் போட அமர்ந்திருப்பதை அறிந்து கொண்டான்.  




இந்த பாவாடை சட்டை தாவணியுடன் கோலமிட, வெளியே தெருவில் அமர்ந்திருக்கும் அனு, சற்று முன்பு புடவையுடன், நிறை மாத கர்ப்பிணியாய், என் மனைவியாய், என்னுடன் எப்படி என் கைப்பிடிக்குள் சிக்கினாள். நினைக்க நினைக்க அவனுக்கு ஒரே சிரிப்பாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது. 


சதா சர்வ காலமும் நம் மனதிலும், நினைவிலும், அன்பிலும், ஆசையிலும் இருப்பவர்கள், கனவிலும் வரக்கூடும் என்று நினைத்து தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.


அனு வீட்டு மாடிப்போர்ஷனில் ரூம் எடுத்துத் தங்கியிருந்தான் மன நல மருத்துவ மனையில் பயிற்சியாளராகச் சேர்ந்துள்ள இளம் டாக்டர் மனோ.


உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. 


வெள்ளைப்பணம், கறுப்புப்பணம் என பணத்திற்காக பேயாக அலையும் மனிதர்கள், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோர், சாமி பெயரைச் சொல்லி கோயில் பணத்தைக் கொள்ளையடிப்போர், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்போர், கஞ்சா கடத்துவோர், எதைப்பற்றியும் கவலையின்றி சதாசர்வ காலமும் குடி போதையில் மிதப்போர், பொடி, புகையிலை, வெற்றிலை பாக்கு, பீடி சிகரெட் சுருட்டுப் பிரியர்கள், காதல் போதையில் காமக்களியாட்டம் போடுவோர், காதல் தோல்வியால் மனம் உடைந்தோர்; 


கம்ப்யூட்டர், லாப்டாப், சாட்டிங், கார், பைக், செல்போன், சினிமா, டி.வி, டி.வி.சீரியல்கள், புடவைகள், நகைகள், புத்தகம், அரசியல், லாட்டரி, சூதாட்டம், சீட்டாட்டம், ஷேர்மார்க்கெட், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என சிலவற்றின் மேல் அபரிமிதமான ஆசை வைத்து அல்லல் படுவோர்; 


கற்பனை உலகில் மிதப்போர், திடீரென இயற்கைச்சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளைச் சந்திப்போர், நெருங்கிய சொந்தங்களின் மரணங்களால் அன்பை இழப்போர், விபத்துகள், கொலை, கொள்ளை போன்றவற்றால் ஏற்படும் நஷ்டங்களால் பாதிக்கப்பட்டோர் என பலவகை விசித்திர நோயாளிகளை தினமும் பார்த்துப் பழகிவிட்ட மனோவுக்கு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியுள்ள கேஸ்களைவிட, அட்மிட் ஆகாத கேஸ்களே அதிகம் வெளியுலகில் சுற்றித் திரிவதாகத் தோன்றும். 


கீழ் வீட்டுப்பெண் அனுராதாவும் அதற்கு விதிவிலக்கல்ல என்று அவனுக்குத் தோன்றியது, இங்கே அவன் புதிதாகக் குடிவந்த சமயம். அவள் ஒரு கோலப்பைத்தியம் என்று ஆரம்பத்தில் நினைத்தவன் தான், மனோ.


அதிகாலையில் எழுந்து, வீட்டு வாசலைப்பெருக்கி சாணத்துடன் கூடிய நீர் தெளித்து, கோலம் போடக் குனிந்தால் என்றால், சுமார் ஒரு மணி நேரம் குத்துக்காலிட்டு, இங்கும் அங்கும் தத்தித்தாவி மிகவும் அழகாகக் கோலம் போடுபவள்.   


விடியற்காலம் எழுந்து வாக்கிங் போய் விட்டுத் திரும்பும் மனோவை அன்றைய தினம் அனுவால் போடப்பட்ட அழகிய புத்தம் புதிய மிகப்பெரிய கோலம் வரவேற்று, அவனை மிகவும் வியப்படையச் செய்யும்.  


நாளடைவில் மனோவின் மனதினில், அனுவின் அன்றாடக் கோலங்கள், அன்புக் கோலங்களாக பதிந்து, என்றும் அழியாத காதல் கோலங்களாக மாறத்துவங்கி விட்டன.  


”மாடிக்கு ஏறிச்செல்லும் நீங்கள், என்னை அழிக்காமல், மிதிக்காமல், பாதுகாத்து, ஓரமாக என்னைப் பிரதக்ஷணமாகச் சுற்றிச்செல்லுங்கள்”, என அனுவே அன்புக்கட்டளை இடுவது போல மனோவுக்குத் தோன்றும்.


கோலத்தைச் சற்று நேரம் நின்று ரசித்துப்பார்த்து விட்டு, மாடி ஏறிப்போகும் மனோவை, சில நேரங்களில் அனுவும் வீட்டுக்குள்ளிருந்து கதவிடுக்கு வழியாகவோ, ஜன்னல் இடுக்கு வழியாகவோ பார்ப்பதுண்டு.


எந்த ஒரு படைப்பாளிக்கும், ரசிகனின் பாராட்டு மட்டும் தானே மிகவும் மகிழ்ச்சியளிக்க முடியும்!


மார்கழி மாதம் நெருங்கி விட்டது. பனி அதிகமாகக் கொட்டுகிறது. விடியற்காலம் வாக்கிங் போவதையே மனோ அடியோடு நிறுத்தி விட்டான். காரணம் கொட்டும் பனி மட்டுமல்ல. 



வாசலில் கோலம் போடும் அனுவை தன் அருகே அழைத்து ரசித்திட நேற்று அவன் புத்தம் புதியதாக வாங்கி வந்திருக்கும் பவர்ஃபுல் பைனாக்குலரும் தான்.


தினமும் அதிகாலை மனோதத்துவ டாக்டரின் மனதிற்கும், கண்களுக்கும் விருந்தளித்தது அந்த பைனாக்குலர். பருவமங்கையான அனுவின் அழகை அணுஅணுவாக அள்ளிப்பருகி ரசிக்க முடிந்தது, அவனின் மாடி அறையின் ஜன்னலிலிருந்தபடியே. 



என்னதான் மனோ தத்துவப் படிப்பு படித்த டாக்டர் என்றாலும், மனோவுக்கும் இளம் வயதல்லவா .... அவனுக்குள்ளும் ஓர் மனம் உண்டல்லவா .... அதிலும் ஓர் காதல் உணர்வு துளிர்க்குமல்லவா .... !


பாவாடை, சட்டை, தாவணியில், காதில் தொங்கும் ஜிமிக்கிகளுடன், காலில் கொஞ்சும் கொலுசுகளுடன், வாழைத்தண்டு போன்ற வழுவழுப்பான கைகளில் அணிந்த கண்ணாடி வளையல்களின் ஒலிகளுடன், தலை நிறைய பூவுடன், அன்ன பக்ஷியொன்று தத்தித்தத்தி தாவித்தாவி வட்டமிட்டு கோலம் வரையும் அழகைக் காணக் கண் கோடி வேண்டுமென்று தோன்றியது மனோவுக்கு. 


அனுவின் இடுப்பு மடிப்புகளில் பனித்துளிகள் படர்வதையும், சிறிய பட்டாம்பூச்சியொன்று அவளின் முதுகுப்புறம் தேன் தேடி மேய்வதையும், மிகுந்த ஆர்வத்துடன் தன் பைனாக்குலரால் மிகத்துல்லியமாக ரசித்து மகிழ்ந்தான் மனோ. 


அந்த மிகச்சிறிய அழகிய பட்டாம்பூச்சிக்கு அனுவை நெருங்கி முத்தமிடக் கிடைத்துள்ள வாய்ப்பு தனக்குக் கிடைக்க வில்லையே என்று, அதன் மேல் பொறாமை ஏற்பட்டது, மனோவுக்கு.  




தொடரும்



    



/ இந்தக்கதையின் தொடர்ச்சி 
நாளை வெளியாகும் /

காணத்தவறாதீர்கள் !

போட்டியில் கலந்துகொள்ள 
மறவாதீர்கள் !!

இதுவே இந்தப்போட்டியில்
கலந்துகொள்ளத் தங்களுக்கான 
இறுதி வாய்ப்பு !!!

     



தகவலுக்காக


 

 


VGK-38 - மலரே ..... குறிஞ்சி மலரே !
விமர்சனப்போட்டி பரிசு முடிவுகள்
25.10.2014 சனிக்கிழமை
முதல் வெளியிடப்படும்.

21.10.2014 முதல் 24.10.2014 வரை
தினமும் ஒரு நேயர் கடிதம் வீதம் வெளியிடப்படும்


 

என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்




வெள்ளி, 26 செப்டம்பர், 2014

VGK 37 - எங்கெங்கும் .... எப்போதும் .... என்னோடு .... !



இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்  : 02.10.2014

வியாழக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 

valambal@gmail.com 



REFERENCE NUMBER:  VGK 37

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:

 



   எங்கெங்கும் ....
  எப்போதும் .......
   என்னோடு ....  

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-



நேற்றுடன் அறுபது வயது முடிந்து இன்று முதல் மூத்த குடிமகன் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளேன்.  என்னுடைய உடல் எடை மிகவும் அதிகம் என்பது எனக்கே நன்றாகத் தெரியும். என்ன செய்வது; சூதுவாது இல்லாதவன் நான். யாரையும் வருத்தப்பட வைக்க மாட்டேன்.  நானும் என் உடம்பை எதற்கும் வருத்திக்கொள்ள மாட்டேன். ரொம்பவும் மசமசப்பான பேர்வழி நான் என்று என் காது படவே என் மனைவி முதல் மாமனார் மாமியார் வரை எல்லோருமே சொல்லி வந்தது எனக்கும் தெரியாதது அல்ல.


நான் அதிகமாக வாரி வளைத்து சாப்பிடக்கூடியவனும் கிடையாது. காய்கறிகளில் பலவற்றைப் பிடிக்காது என்று தவிர்த்து விடுபவன். திரும்பத் திரும்ப  சாம்பார் சாதம், குழம்பு சாதம், ரஸம் சாதம், மோர் சாதம் என்று கை நனைத்து பிசைந்து சாப்பிட சோம்பலாகி விடுகிறது எனக்கு. 


கையில் ஒட்டாத டிபன் அயிட்டங்களான காரசாரமான அடை, முறுகலான தோசை, பூப்போன்ற மிருதுவான இட்லி, பூரி மஸால், ஒட்டலுடன் கூடிய காரசாரமான குழம்புமா(வு) உப்புமா, மோர்மிளகாய் போட்டு, நிறைய எண்ணெயைத் தாராளமாக விட்டுச் செய்த அல்வாத்துண்டு போன்ற மோர்களி, சேவைநாழியில் கையால் பிழிந்த சேவை (இடியாப்பம்) முதலியன என்றால் ஒரு பிடி பிடித்து விடுவதுண்டு.  




வடை, பஜ்ஜி, உருளைக்கிழங்கு போண்டா, வெங்காய பக்கோடா, சிப்ஸ், தட்டை (எள்ளடை), முறுக்கு என்றால் ஒரு பிரியமும், அவற்றுடன் ஒரு தனி ஆவர்த்தனமும் செய்வது உண்டு.  படுக்கை பக்கத்தில் எப்போதும் ஸ்டாக் வைத்துக்கொண்டு, நேரம் காலம் இல்லாமல் இத்தகைய நொறுக்குத் தீனிகளுடன் கரமுராவென்று உரையாடி, உறவாடி வருவேன். 


உடலின் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆவலில் டாக்டர் ஒருவரை சந்தித்தேன்.  

”உங்கள் உயரம் மற்றும் வயதுக்கு ஒரு 75 கிலோ வரை இருக்கலாம் .... ஆனால் நீங்க 96 கிலோ எடை உள்ளீர்கள் .... 21 கிலோ எடையைக் குறைக்க வேண்டும்” என்று சொன்னார், அந்த டாக்டர். 


“சரி ..... அப்படியானால் உடனடியாகக் குறையுங்கோ ..... டாக்டர்” என்றேன் அப்பாவியாக நானும். 


”நான் குறைப்பதா ! நீங்கள் தான் உங்கள் எடையைக்குறைக்க வேண்டும்”  என்றார் அந்த டாக்டர்.


”என் எடையை நானே குறைப்பதற்கு உங்களுக்கு கன்சல்டிங் ஃபீஸ் நான் தரவேண்டுமா?” என என் மனதில் நான் நினைத்துக்கொண்டேன்.


“சரி ..... டாக்டர் ..... என் எடையை நானே குறைக்க .... நான் என்ன செய்ய வேண்டும்” என வினவினேன்.


தினமும் நாய் ஒன்று துரத்தி வருவதாக நினைத்துக்கொண்டு, எங்கும் நில்லாமல், ஓட்டமும் நடையுமாக தொடர்ச்சியாக 40 நிமிடங்களுக்கு வேகமாக வாக்கிங் செல்ல வேண்டும்” என்று உறுதியாகச் சொல்லி, ஏதோ ஒருசில மருந்து மாத்திரைகளும் எழுதிக் கொடுத்து விட்டார். 

வீட்டை விட்டுச் சென்றால் தெருவில் நாய் துரத்தக்கூடும் என்ற கவலையில் தான், நான் வீட்டை விட்டு வெளியே எங்கும் அதிகமாக நடந்து செல்வது இல்லை.  ஒரு கிலோ மீட்டர் தூரம் போகணும் என்றாலும் ஆட்டோவில் தான் போய் வருவேன்.  

அடுக்குமாடி கட்டடத்தின்  இரண்டாவது தளத்தில் உள்ள என் வீட்டிலிருந்து புறப்பட்டு லிஃப்ட் மூலம் இறங்கி, தெருவில் சற்று தூரம் நடந்து ஆட்டோவில் ஏறி அமர்வதற்குள் கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்கி பெருமூச்சு விடும் ஆள் நான்.  என் உடல்வாகு அப்படி.  என் தாத்தா, அப்பா என்று பரம்பரை ஜீன்ஸ் அப்படி.  அது புரியாமல் அந்த டாக்டர், என்னைப் போய் நடக்கச் சொல்கிறார்.  நடக்கற ......... காரியமா அது!

இருந்தாலும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசையில் வாக்கிங் செல்ல முடிவெடுத்து இன்று முதன் முதலாக கிளம்பி விட்டேன். ஒரு அரை கிலோ மீட்டர் போவதற்குள் எனக்கு நாக்கு தள்ளிப் போச்சு. அங்கிருந்த ஒரு கடையில் பன்னீர் சோடா ஜில்லென்று ஒன்றுக்கு இரண்டாக வாங்கிக் குடித்து விட்டு, அங்கிருந்த டீக்கடை பெஞ்ச் ஒன்றில் ஒரு கால் மணி நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, மீண்டும் பல்லைக் கடித்துக் கொண்டு, என் நடை பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டேன், ஒரு நடைப் பிணம் போல.

மேலும் ஒரு கால் கிலோ மீட்டர் தான் சென்றிருப்பேன்.  ஒரேயடியாக கால் விண்விண்ணென்று கெஞ்சுகிறது.  ஏந்தினாற்போல உட்கார ஒரு இடமும் இல்லை.  முட்டிக்கால் சுளிக்கிக் கொண்டது போன்ற ஒரு உணர்வு.   சுற்றும் முற்றும் பார்த்தேன்.  ரோட்டோரமாக சூடாக வடை, பஜ்ஜி போட்டு விற்கும் கைவண்டிக்கடை கண்ணில் பட்டது.  



பையில் எப்போதும் பணம் நிறையவே வைத்திருப்பேன்.  ஆமை வேகத்தில் நடந்து, அந்தக்கடையை நெருங்கினேன்.   ஆமவடை வாசனை மூக்கைத் துளைத்தது.  ஆறஅமர உட்கார்ந்து ஆமவடை சாப்பிட அவ்விடம் வசதியில்லாதது எனக்குப் பெருங்குறையாக இருந்தது. 


இருப்பினும் வீட்டை விட்டுக் கிளம்பி நடந்தே சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூரம் வந்ததால், உடலுக்கும் உள்ளத்திற்கும் தெம்பு ஏற்பட நாலுவடைகளும், நாலு பஜ்ஜிகளும் மட்டும் சூடாக வாங்கி உள்ளே தள்ளினேன்.  

உணவுக் கட்டுப்பாடு விஷயமாக டாக்டர் எச்சரித்திருந்ததால், சூடாகவும் சுவையாகவும் இருப்பினும் அதற்கு மேல் வாங்கி சாப்பிட என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.  

மீண்டும் தள்ளாடியவாறு என் நடைபயணத்தை மேற்கொண்டேன். அந்த மலையைச் சுற்றியுள்ள 4 வீதிகளில் நான் நடந்தாலே போதும், மொத்தம் 40 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடும், என் நடையின் வேகத்திற்கு. 

பெளர்ணமியன்று இதே மலையை அரை மணி நேரத்தில் 3 சுற்று சுற்றி வருபவர்களும் உண்டு.  நான் என்ன செய்வது?  அவ்வாறு வேகவேகமாகச் சுற்றி வருபவர்களைப் பார்த்தாலே எனக்கு கால் வலிப்பது போலத் தோன்றும்.



 



ந்தக் காலத்தில் மனிதாபிமானம் மிக்கவர்கள், அவரவர் வீடு கட்டும்போது, வாசலில் பெரிய பெரிய திண்ணைகள் திண்டுடன் கட்டி வைப்பார்கள். வழிப்போக்கர்களும், ஊர் விட்டு ஊர் செல்வோரும், ஆங்காங்கே சற்று நேரம் இத்திண்ணைகளில் அமர்ந்து ஓய்வு எடுத்துச் செல்ல வசதியாக இருந்தது.  

ஆனால் நான் நடந்து செல்லும் இந்த நகரத்தின் மலையைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில், மனிதன் நடந்து செல்வதே மிகவும் கஷ்டமாக உள்ளது. கொஞ்சம் அசந்தால் நம் முழங்கையை ஒரு சைக்கிள்காரர் பெயர்த்துச் சென்று விடுவார்.  சற்று நம் நடையில் வேகம் காட்டினால் போச்சு - காலின் மேல் ஆட்டோவின் பின் சக்கரத்தை ஏற்றி விடுவார் ஒரு ஆட்டோக்காரர்.  இவர்களுக்காக சற்றே ஒதுங்கினால் நம் கால், ஆங்காங்கே தெருவில் வெட்டப்பட்டு, மூடப்படாமல் உள்ள சாக்கடைக் குழிக்குள் நம்மை இறக்கிவிடும்.  

இந்த லட்சணத்தில் கால் வீசி வேக வேகமாக நடக்க நான் என்ன ஒட்டடைக்குச்சியோ அல்லது ஓமக்குச்சியோ போல ஒல்லியானவனா என்ன! 

எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு கொஞ்ச தூரம் தான் சென்றிருப்பேன்.  மெயின் ரோட்டுக்கு குறுக்கே ஒரு சிறிய சந்து.  சந்து பொந்துகளுக்கெல்லாம் பஞ்சமில்லாத ஊரு எங்களுடையது.  சிறிய அந்த சந்தின் வலது பக்க முதல் வீடு பூட்டப்பட்டிருந்தது.  வாசலுக்கு இருபுறமும் இரண்டு மிகச்சிறிய தாழ்வான திண்ணைகள். என்னைப்போல உருவம் உள்ளவர்கள் திண்ணைக்கு ஒருவர் வீதம் மொத்தம் இருவர் மட்டும் மிகவும் கஷ்டப்பட்டு அமரலாம்.  

சந்துக்கு உள்ளடங்கிய திண்ணையில் என் உருவத்தில் முக்கால் வாசியானவரும் சற்றே குள்ளமான கறுப்பான ஒரு பெரியவர், கையில் செய்தித்தாளுடன், அருகே ஒரு கைத்தடியை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.  கால் கடுத்துப் போன நான் அவர் அருகில் உள்ள மற்றொரு திண்ணையில் கஷ்டப்பட்டு குனிந்து உட்காரலாமா என யோசித்து என் கைக்குட்டையால் ஒரு தட்டுத் தட்டினேன். 

“வாங்கய்யா!  வணக்கம்.  உட்காருங்க!” என்றார் மிகுந்த உற்சாகத்துடன். 

“ஐயாவுக்கு எந்த ஊரு?  வீடு எங்கே?”  கனிவுடன் விசாரித்தார் அந்தப் பெரியவர்.   ஒருவருக்கொருவர் பரஸ்பர அறிமுகம் செய்து கொண்டோம்.

“நீங்கள் பிராமணர் தானே?” என்றார் மிகச்சரியாக என்னைப் பார்த்த மாத்திரத்தில்.

“ஜாதிகள் இல்லையடிப் பாப்பா” என்று முண்டாசுக் கவிஞர் சொன்னதை நினைவூட்டினேன்.  

“முண்டாசுக் கவிஞர் அந்தக் காலத்தில் சொன்னதை யாரு இப்போ பின்பற்றுகிறார்கள்?  நம் முண்டாசுப் பிரதமர் தான் ஜாதி அடிப்படையில் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு செய்யணும் என்று சொல்லி விட்டாரே” என்றார். [இது காங்கிரஸ் ஆட்சி காலத்தில்  என்னால் எழுதப்பட்ட கதை என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்]

அவரை அப்படியே கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் போல இருந்தது எனக்கு.  உலகச் செய்திகள், நாட்டுநடப்பு எல்லாவற்றையும் செய்தித்தாள் படிப்பதன் மூலம் விரல் நுனியில் வைத்திருந்தார் அந்தப் பெரியவர்.  88 வயதிலும் தெளிவான அனுபவம் மிக்க அறிவு பூர்வமான அவரின் பேச்சு என்னைக் கவர்ந்தது.

“நீங்கள் பிராமணர் தானே”  என்றார் மீண்டும் மறக்காமல்.

“அப்படித்தான் எல்லோரும் சொல்லுகிறார்கள்” என்றேன்.

“அப்போ நீங்க பிராமணர் ஜாதி இல்லீங்களா?”  என்றார்.

“ஜெயா டி.வி.  யில் “எங்கே பிராமணன்” பார்த்து வந்ததால் எனக்கே இதில் இப்போது ஒரு பெரிய சந்தேகம் ” என்றேன். 

புரிந்து கொண்டவர் சிரித்துக்கொண்டே தன்னுடைய ஜாதியைக் கூறினார், நான் கேட்காமலேயே.   பிரபல ஜவுளிக்கடைகளில் முன்னொரு காலத்தில் விற்பனையாளராக இருந்தவராம்.   அவருக்கு ஒரே ஒரு பெண் மட்டுமாம். அவளின் கணவருக்கும் ஜவுளிக்கடையில் தான் வேலையாம். ஒரு பேத்தியும், ஒரு பேரனுமாம்.  குடியிருப்பது வாடகை வீடுதானாம். அதே சின்ன சந்தின் கடைசிக்குப் போய் வலது பக்கம் திரும்பினால் ஒரு பத்தடி தூரத்தில் அவரின் வீடு உள்ளதாம்.   பெண், மாப்பிள்ளை பேரன் பேத்தியுடன் சேர்ந்தே இவரும் இருக்கிறாராம். நான் அவருடன் அமர்ந்திருந்த அரை மணி நேரத்தில் பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். ஒருவருக்கொருவர் நீண்ட காலம் பழகிய நண்பர்கள் போலவே இருவருமே உணர்ந்து மகிழ்ந்தோம்.

அவருக்கும் முழங்காலில் முட்டி வலியாம்.  குச்சி ஊன்றி நடப்பதாக தன் கைத்தடியை எடுத்துக் காண்பித்துச் சொன்னார்.    அந்தக் கைத்தடி பளபளவென்று அழகாக உறுதியாக நல்ல வேலைப்பாடுகளுடன் புதியதாக வாங்கப்பட்டதாகத் தெரிந்தது.  61 வயதாகும் முன்பே நடக்கக் கஷ்டப்படும் நான், 88 வயதாகும் அவரை எண்ணி வியந்து போனேன்.

மாலை வெய்யில் குறையும் நேரமாக இருந்தது.  அருகில் சைக்கிளைத் தள்ளியபடியே,  கையில் அரிவாளுடன் ஒருவரைக் கண்டேன்.  அவரின் சைக்கிள் கம்பிகளில் நிறைய இளநீர் தொங்கிக்கொண்டிருந்தன. 




எனக்கும் அந்தப் பெரியவருக்கும் இரண்டு இளநீர், நல்ல வழுக்கையாக, பெரியதாக, சுவையான நீர் நிறைந்ததாகச் சீவச் சொன்னேன்.    இளநீர் குடித்துப் புத்துணர்ச்சி அடைந்த அந்தப் பெரியவர் என்னை ஒருவித வாஞ்சையுடன் பார்த்து கண்களால் நன்றி கூறினார்.

7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடனும், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுடனும் பொறுமையாகப் பேச்சுக்கொடுத்துப் பேசினால், நமக்கு நிறைய புதுப்புது விஷயங்கள் கிடைக்கும்.   அவர்கள் இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வை புதுமையானது, வித்யாசமானது, புதுப்புது அனுபவங்களை எடுத்துச் சொல்லக்கூடியது.    நான் இன்று இந்தப் பெரியவரை சந்தித்து நட்புடன் உறவாடி உரையாடியதில் அவருக்கும் சந்தோஷம் எனக்கும் ஏதோவொரு மனத் திருப்தி கிடைத்தது.

“உங்களை இன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி; அடிக்கடி இந்தப் பக்கம் மாலை வேளையில் 5 மணி சுமாருக்கு வரும் போதெல்லாம் நான் இந்தத் திண்ணையில் இருக்கிறேனா என்று பார்த்து விட்டு, கொஞ்சம் நேரம் பேசிவிட்டுப் போங்க” என்றார்.

அவரிடம் பிரியா விடை பெற்று நான் எழுந்துகொள்ள முயன்றேன்.



  


தாழ்வான அந்தத் திண்ணையிலிருந்து எழும் போதே என்னைத் தள்ளி விடுவது போல உணர்ந்தேன்.  இனிமேலும் நடந்தால் சரிப்பட்டு வராது என்று அங்கே வந்து நின்ற ஆட்டோவில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன். 

ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்துவிட்டு, என் குடியிருப்பை நோக்கி நடக்க நினைக்கையில், டாக்டர் எதிரில் தென்பட்டார்.  வணக்கம் தெரிவித்தேன்.  

“என்ன....இன்னிக்கு வாக்கிங் போனீங்களா?” என்று கேட்டார்.  

”இப்போது வாக்கிங் போய் விட்டுத் தான் திரும்ப வந்து கொண்டிருக்கிறேன்” என்றேன்.   

”வெரி குட் - கீப் இட் அப்” என்று சொல்லி விட்டுப்போனார்.

பழக்கமே இல்லாமல் இன்று ரொம்ப தூரம் நடந்து விட்டு வந்திருக்கிறோம் என்ற நினைப்பிலேயே, இரவு பலகாரம் சாப்பிட்டு விட்டு, இரண்டு கால்களுக்கும் ஆயிண்மெண்ட் தடவிகொண்டு, படுத்தவன் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்து விட்டேன்.  

அடுத்த இரண்டு நாட்களுக்கு வாக்கிங் போக வேண்டாம் என்று முடிவு எடுக்குமாறு, சற்றே மழை பெய்து உதவியது.  அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் ஏதோ சோம்பலில் வாக்கிங் போக நான் விரும்பவில்லை.  

மறுநாள் ஆங்கில முதல் தேதியாக இருந்ததால், நாளை முதல் தொடர்ச்சியாக வாக்கிங் போக வேண்டும் என்று எனக்குள் சங்கல்பித்துக் கொண்டேன். 


மறுநாள் மழை இல்லை.  வெய்யிலும் மிதமாகவே இருந்தது. எனக்குள் என்னவோ அந்தப் பெரியவரை மீண்டும் சந்தித்துப் பேசிவிட்டு வரவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.  

நடந்து போக மிகவும் சோம்பலாக இருந்ததால், போகும் போது ஆட்டோவில் சென்று விட்டு, திரும்ப வரும் போது நடந்தே வந்து விடலாம் என்ற எண்ணத்தில் ஆட்டோவில் ஏறினேன்.  அந்தச் சந்தின் அருகே இறங்கிக் கொண்டேன்.  

அந்த முதல் வீட்டுத் திண்ணைக்கு இன்னும் அந்தப் பெரியவர் வந்து சேரவில்லை.  கொஞ்சம் நேரம் வெயிட் செய்து பார்ப்போம், பிறகு அவர் வீட்டுக்கே சென்று அழைத்து வந்து விடலாம் என்ற யோசனையுடன் நான் மட்டும் அந்தக் குட்டைத் திண்ணையில் குனிந்து அமர்ந்தேன். 

சற்று நேரத்தில், நான் நினைத்தபடியே அந்தப் பெரியவர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.   



   




னால் அந்தப்பெரியவர் தானே நடந்து வரவில்லை.   மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அமரர் ஊர்தியில் படுத்த நிலையில் வந்துகொண்டிருந்தார்.  சங்கு ஊதி தாரை தப்பட்டம் அடித்தவாறு பலரும் கும்பலாக அந்த அமரர் ஊர்தியைச் சூழ்ந்தவாறு பூக்களைத் தெருவில் தூவியபடி வந்து கொண்டிருந்தனர்.    


இதைக்கண்ட எனக்கு ஏனோ என்னை அறியாமல் என் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.  வண்டியைச் சற்று நிறுத்தி அந்தப் பெரியவரின் முகத்தை நன்றாக ஒரு முறை உற்று நோக்கிவிட்டு, அவரின் கால்களைத் தொட்டு வணங்கினேன்.  

“வாங்கய்யா .. வாங்க, வணக்கம், உட்காருங்க” என்று வாய் நிறைய  அன்று  என்னை வரவேற்றவர், இன்று பேரமைதியுடன் ஆனால் சிரித்த முகத்துடன் படுத்திருப்பது  என் மனதைப் பிசைவதாக இருந்தது.

முன்னால் தீச்சட்டியை தூக்கிச்சென்ற நபர் அந்தப் பெரியவரின் மாப்பிள்ளையாகத்தான் இருக்க வேண்டும். என்னை, யார் நீங்கள்?” என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.  பெரியவரின் உடலுக்கு அருகே அவர் உபயோகித்த கைத்தடியும் இருந்தது.




“அந்தக் கைத்தடியை பெரியவரின் ஞாபகார்த்தமாக நான் வைத்துக் கொள்கிறேனே” என்ற என் கோரிக்கை விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்தக் கைத்தடி என் கைக்கு உடனடியாக மாறியது. அதை ஊன்றியபடியே, பெரியவரின் இறுதி ஊர்வலத்தில் நானும் நடந்தே சென்று கலந்து கொண்டேன்.

ஆற்றில் குளித்து விட்டு அவரின் வீடு இருக்கும் சந்து வரை மீண்டும் நடந்தே வந்தேன். 

அன்று வந்த இளநீர் வியாபாரி இன்றும் என்னிடம் வந்தார்.  இரண்டு இளநீர் சீவச் சொன்னேன்.  சீவிய ஒன்றை பெரியவர் அன்று அமர்ந்திருந்த திண்ணையில் படையலாக வைத்தேன்.  மற்றொன்றை நான் குடித்தேன்.  

இன்றைக்கு நான் குடித்த இளநீர் அன்று போல இனிப்பாகவே இல்லை. மனதில் எதையோ பறிகொடுத்தது போல எனக்குத்தோன்றியது.  என் வீடு நோக்கி மீண்டும் நடக்கலானேன்.

’எங்கெங்கும்... எப்போதும்...  என்னோடு...’ பெரியவரின் கைத்தடியும் பயணம் செய்கிறது. என்னாலும் நடக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்து வருகிறது.  தினமும் அதே கைத்தடியை ஊன்றியபடி என்னால் முடிந்த வரை நடந்து போய் வருகிறேன். 

கைத்தடியை ஊன்றிச்செல்லும் போது, அந்தப் பெரியவரும் என்னுடன் பேசிக்கொண்டே வாக்கிங் வருவது போல எனக்குள் ஒரு பிரமை ஏற்படுகிறது. 




oooooOooooo

VGK-35 - பூபாலன் 


 

VGK-35 - பூபாலன் 

சிறுகதைக்கான விமர்சனப்போட்டி 

முடிவுகள் வழக்கம்போல் 

நாளை சனி / ஞாயிறு / திங்களுக்குள்

முற்றிலுமாக வெளியிடப்படும்.




காணத்தவறாதீர்கள் !



  




என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்