மதியம் கேண்டீனுக்குப்போய் லஞ்ச் முடித்து விட்டு, ஆபீஸ் வேலைகளைக் கொஞ்சம் பார்க்கலாம் என்று தான், நான் நினைத்தேன். ஏதோ கண்ணைச்சொக்குவது போல இருந்தது.
வ.வ.ஸ்ரீ. சாப்பிட வீட்டுக்குப்போனவர் போனவர் தான். ஆளையே சீட்டில் காணும். எப்போதுமே சீட்டில் இருப்பவர் போல ஏதோ ஒரு ஃபைலை மேஜை மீது விரித்து வைத்து, அதன் மேல் ஒரு பேப்பர் வெயிட்டையும், மூக்குக்கண்ணாடியையும், மூக்குப்பொடி டப்பாவையும் வைத்து விட்டுச் சென்று விடுவார். பார்ப்பவர்களுக்கு அவர் இங்கு எங்கோ தான் பாத் ரூம் போய் இருப்பார் என்று நினைத்துக்கொள்ள, அது அவர் கையாளும் ஒரு டெக்னிக் என்பது, நான் மட்டுமே நாளடைவில் தெரிந்து கொண்டது.
தன் கைவசம், அவர் எங்கு சென்றாலும், எப்போதும் வேறு ஒரு மூக்குக்கண்ணாடியும், வேறு ஒரு மூக்குப்பொடி டப்பாவும் உஷாராக கைவசம் வைத்துக்கொண்டு தான் செல்வார்.
தூக்கக்கலக்கம் போக, அவர் டேபிளின் மேல் இருந்த மூக்குப்பொடி டப்பாவில் முதன் முதலாகக் கைவைத்து, அதைத் திறந்து, லேசாக ஆள்காட்டி விரலை மட்டும் அதற்குள் பதித்து, மூக்கருகில் கொண்டு செல்ல எத்தனிக்கும் போது, வ.வ.ஸ்ரீ. அவர்களே வந்து விட்டார்.
“என்னப்பா, இப்போதே Further ஆக நம்ம Discussions Continue பண்ணலாமா”, என்று சொல்லி ஒரு சிட்டிகை பொடியை வேகவேகமாக எடுத்து உறிஞ்சினார். கையில் உள்ள பொடியை அவர் உதற லேசாக என் கண்ணில் பட்டு, சற்றே எரிச்சல் ஏற்படுத்தியது என்றாலும், என் தூக்கம் சுத்தமாகக் கலைந்து போய் விட்டது. மேனேஜர் எங்கள் இருவரையும் ஒரு மாதிரியாகப் பார்த்தவாறே, தன் ரூமுக்குள் நுழைந்ததை நான் மட்டுமே கவனித்து விட்டு, வ.வ.ஸ்ரீ. யிடம் மெதுவாகச் சொன்னேன்.
”அவன் கிடக்கிறான், நீ எதற்குமே கவலையே படாதே; அவனால் உனக்கு ஏதாவது பிரச்சனையென்றால் என்னிடம் வந்து சொல்லு. RETIRE ஆக இன்னும் மூணு மாதங்களே உள்ளன எனக்கு. அதற்குள், I will teach him a Lesson” [நான் அவனுக்கொரு பாடம் கற்பிக்கிறேன்] என்றார். அவர் கொடுத்த தைர்யத்தில் என் பேட்டியைத் தொடர ஆரம்பித்தேன்.
”இந்தப்பொடிப் பழக்கத்தால் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் எதுவும் பாதிப்பு உண்டா, சார்” என்றேன்.
“நல்லதொரு கேள்வி தானப்பா” என்று உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தார்.
“எனக்குக் கல்யாணம் ஆன புதிதில், இந்தப்பொடி போடும் பழக்கமே எனக்கு அதிகமாகக் கிடையாது. எப்போதாவது யாராவது போடும்போது லேசாக வாங்கி மோந்து (முகர்ந்து) பார்ப்பதோடு சரி. அதுவும் என்னவளை நெருங்கும்போது பொடி நெடி ஏதும் இல்லாமல் சுத்தமாக மூக்கைக் கழுவிக்கொண்டு, பாதுகாப்பாகத்தான் இருந்து வந்தேன்.
அடுத்தடுத்து ஐந்தாறு பிள்ளைகுட்டிகள் பிறந்து, குடும்பத்தில் எவ்வளவோ பிரச்சனைகள், மனக்கசப்புக்கள், மனைவியின் விதண்டாவாதப்பேச்சுக்கள் முதலியன ஏற்பட்டதில் எல்லாவற்றிலுமே ஒரு வெறுப்பு ஏற்பட்டது எனக்கு,
புதுப்பொண்டாட்டியாக இருந்தபோது அவளிடம் இருந்த பூ வாசனை, செண்ட் வாசனையெல்லாம் நாளடைவில் மறைந்து, ஏதோவொரு சாம்பார்பொடி வாடையோ, பூண்டு வாடையோ எனத்தெரியாததொரு காரல் வாடை மாறிமாறி அடிக்க ஆரம்பித்ததும் தான், எனக்கு இந்தப் பொடியின் மீது , ஒருவித புதுக்காதல் மலர ஆரம்பித்தது. அதுவே இன்றுவரை அதனுடன் ஒரு தீராத காதலாகவும், மோகமாகவும் மாறிவிட்டது;
பொண்டாட்டி இல்லாமல் இருக்கவே முடியாது என்றிருந்த என்னை ‘பொண்டாட்டி’ யின் சுருக்கமான ‘பொ.............டி’ இல்லாமல் இருக்கவே முடியாது என்று ஆக்கிவிட்டது.
அவள் எனக்குக்கோபம் ஏற்படுத்தும் போதெல்லாம், எனக்கு என் பொண்டாட்டியை இரண்டு இழுப்பு இழுத்து விடணும் போல ஒரு வேகம் வருவதுண்டு. அந்த நேரங்களிலெல்லாம் பொடியை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு, அவளையே ஓங்கி இழுத்துவிட்டது போல ஒரு வித இன்பம் அடைவதுண்டு” என்றார், வ.வ.ஸ்ரீ.
கூடிய சீக்கரம் ரிடர்ய்ட் ஆகும் நிலையில் இருந்த அவரின் இந்த சோகமான சுய சரிதையைப் பொடிப்பொடியாகக் கேட்ட எனக்கு, அவர் மேல் ஒரு பச்சாதாபமே ஏற்பட்டது.
சற்றும் ஒரு சங்கோஜமோ, சங்கடமோ, லட்ஜையோ இல்லாமல் தன் இல்வாழ்க்கையின் இரகசியங்களை அவர் எடுத்துரைத்த விதம் எனக்கு அவர் மேல் ஒரு உயர்ந்த அபிப்ராயத்தை ஏற்படுத்தி விட்டது.
அவர் காதருகில் போய் மெதுவாக, ”மனைவி என்பவள் எவ்வளவு நாள் ஆனாலும், கண்டு களிக்கும் விதமாக, ஆரம்பத்தில் இருக்கும் அதே அழகுடனும், சுண்டியிழுக்கும் கவர்ச்சியுடனும், சுவைத்திட நல்லதொரு கட்டிக்கரும்பாகவும், கடைசிவரை இருக்கவே முடியாதா, சார்” என்றேன், நான்.
“புதுசா கல்யாணம் ஆகப்போகும் நீ, இதை ஏன் இவ்வளவு ஒரு பரமரகசியமாக, அதுவும் பயந்து கொண்டே கேட்கிறாய்? என்னிடம் பேச நீ இவ்வாறெல்லாம் கூச்சப்படலாமா? ஒரு சில உதாரணங்களுடன் விளக்கினால் தான் உனக்கு எல்லா விஷயங்களுமே நல்லாப்புரிபடும்” என்று சொல்லி, எழுச்சியுடன் மேலும் ஒரு சிட்டிகைப் பொடியை எடுத்து உறிஞ்சி உதறலானார். நான் என் கண்களை முன் ஜாக்கிரதையாக மூடிக்கொண்டு, காதுகளை மட்டும் நன்றாகத் தீட்டித் திறந்து கொண்டேன்.
“முதன் முதலாக பால்சொம்புடன் படுக்க வரும்போது, அவள் யாராயிருந்தாலும் அழகிய பால்குடம் போல பளபளப்பாத்தான், முன்னப்பின்ன அனுபவமில்லாத, உன் கண்களுக்குத் தெரியும்.
நாளாகநாளாக அதே பளபளப்பான பால்குடம், பழையசோத்துப்பானையா மாறிடுமப்பா, அதே உன் கண்களுக்கு!” என்றார் வ.வ.ஸ்ரீ. அவர்கள் .
”அச்சச்சோ, அது தான் ஏன் சார்ன்னு உங்களிடம் கேட்கிறேன். காரணம் என்னன்னு சொல்லாமல், பால்குடம் பழையசோத்துப்பானையா ஆகிடும்னு மட்டும் சொன்னா எப்படி சார்?” என்றேன் நானும் விடாமல்.
அவருக்கு மேலும் ஒருவித எழுச்சியை ஏற்படுத்தி முக்கியமானத் தகவலை பெற்றுவிட வேண்டும் என்பதே என் குறிக்கோள்.
”அவ்வளவு ஏனப்பா, இந்தப்பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு கொழுக்கட்டை சாப்பிட்டிருக்கிறாயா நீ ?” என்றார் வ.வ.ஸ்ரீ.
“எனக்கு அது ரொம்ப பிடிச்ச ஐட்டம், சார்; நிறைய சாப்பிட்டிருக்கிறேன்” என்றேன்.
“முற்றலான தேங்காய்த் துருவல், ஏலக்காய், வெல்லம் எல்லாம் போட்டு, **கம்பர்கட்** போல பதமாக பாகுகாய்ச்சி, அரிசி மாவை தனியே வேக வைத்து, மெல்லிசா அழகாக துணி மாதிரி அதை உள்ளங்கையில் கொஞ்சமாகப் பரப்பி, பிறகு அதை சொப்பு போலச்செய்து, அதில் இந்த தேங்காய், வெல்லம், ஏலம் கலந்த பூர்ணத்தை கொஞ்சமாக உருட்டி வைத்து, பிறகு அதை அப்படியே மூடி, சின்னதா ஒரு மூக்கு வைத்து முடித்துக்கொண்டு, பிறகு மீண்டும் இட்லி சுடுவது போல வேக வைத்து சூடாகத் தருவார்களே, அதைத் தின்னும் போது எவ்வளவு ருசியாகவும் சுவையாகவும் இருக்கும்? என்று சொல்லி நிறுத்தினார், வ.வ.ஸ்ரீ.
“ஆஹாஹா, சார்! நீங்க இப்படியொரு அருமையான கொழுக்கட்டை செய்முறைப் பக்குவம் சொல்லும்போதே, கொழக்கட்டைகள் என் கண்முன் இருப்பது போல, நாக்கிலே ஜலம் ஊறுகிறது, சார்” என்றேன்.
“இந்த சுடச்சுட சாப்பிடும் பிள்ளையார் கொழுக்கட்டை போலத்தானப்பா, புதுப்பொண்டாட்டியும். அதே கொழுக்கட்டையை அப்படியே மூடி வைத்து ஒரு நாலு நாள் கழித்து சாப்பிட முடியுமா உன்னால்?” என்றார், வ.வ.ஸ்ரீ.
“அது எப்படி சார், சாப்பிட முடியும், ஊசிப்போய் நல்லாவே இருக்காது, ஒரே நாத்தம் அடிக்கும் சார்” என்றேன் நான்.
“முதல் நாள் சூடாக சுவையாக சாப்பிட ருசியாக இருக்கும் புதுக்கொழுக்கட்டை போன்ற, இந்தப் புதுப்பொண்டாட்டி, நாளடைவில் இந்த ‘ஊசிப்போன கொழுக்கட்டை’ போல ருசி ஏதும் இல்லாமல் ஆகிவிடுகிறாள் என்பதை உனக்கு உணர்த்தவே நான் இவ்வளவு கஷ்டப்பட்டு உதாரணம் சொல்லிப் புரிய வைக்க வேண்டியுள்ளது” என்றார், வ.வ.ஸ்ரீ.
பிறகு அவரே, “நீ மட்டும் என்னப்பா, என்றும் மார்க்கண்டேயனாக 16 வயது இளமையோடும், மன்மதன் போல அழகோடும் எழுச்சியோடும் கடைசிவரை இருந்து விடப்போகிறாயா என்ன!
இந்த எழுச்சி, புரட்சி, மகிழ்ச்சி, விரைப்பு, முறைப்பு, ஆர்வம், அட்டகாசம், அதிகாரம், ஆணவம், ஆட்டம், பாட்டம் எல்லாமே எல்லோருக்குமே ஆரம்பத்தில் கொஞ்ச நாட்களுக்குத் தானப்பா; பிறகு போகப்போக கடைசியில் ஒரு நாள் எல்லோருமே எழுச்சிகுன்றி, வழுவட்டையாகத்தான் போயாக வேண்டும், என்பது தான் இந்த உலக நியதியப்பா;
பெண்களுக்கு இயற்கையாகவே ஏற்படும் மாதாந்தர சுழற்சிகளாலும், அடுத்தடுத்து பிள்ளைப்பேறுகளால் ஏற்படும் ஒருசில பிரத்யேகத் தொல்லைகளாலும், குழந்தைகள், குடும்பம், சமையல் அறை வேலைகள் என்ற கூடுதல் பொறுப்புகளை அவர்கள் முன்வந்து ஏற்பதாலும், பழையபடி சீவிமுடிச்சு சிங்காரிக்கவும், பவுடர், ஸ்னோ, செண்ட் என அப்பிக்கொண்டு கவர்ச்சியாக நிற்கவும் முடியாமல் போய்விடுகிறதப்பா;
பாவம் அவர்கள், நடுவில் இந்த டி.வி. சீரியல்களைப்பார்த்து அதில் வரும் பல சோகங்களுக்காக, கண்ணீர் வடிக்க வேண்டியதாகவும் உள்ளது. அதனால் கொஞ்சம் நம்மை விட சீக்கிரமாகவே தளர்ந்து போய் விடுகிறார்களப்பா” என்று விளக்கினார், வ.வ.ஸ்ரீ.
பிறகு அவரே, ” ஆணோ பெண்ணோ, உடம்பில் தெம்பு குறைந்தாலும், உயிர் உள்ளவரை, உள்ளத்தில் எப்போதும் எழுச்சியும், உற்சாகமும், இளமையும் ஊஞ்சலாட வேண்டுமப்பா, என்னைப்போல”, என்றார் வ.வ.ஸ்ரீ.
இவர் இப்படியெல்லாம் ஒவ்வொன்றையும் புட்டுப்புட்டு விலாவரியாக எடுத்துச் சொல்வதைக் கேட்டதும், நான் கல்யாணம் செய்து கொள்வதா வேண்டாமா, என்று ஒரேயடியாகக் குழம்பிப்போக வைத்தது என்னை.
எது எப்படியிருந்தாலும், இந்த வ.வ.ஸ்ரீ. உன்னை என்னதான் குழப்பினாலும், சுடச்சுட, நீ கொழுக்கட்டை சாப்பிட்டே ஆகணும் என்றது என் உள் மனது.
எனக்கும் சுடச்சுட ருசியான ஒரு கொழுக்கட்டை விரைவிலேயே கிடைக்க வேண்டும் என்று நானும் மனமுருக வேண்டிக்கொண்டேன்.
இவரின் இந்தக்கொச்சையான பேச்சை வேறு பக்கம் திருப்பிவிட வேண்டும் என்று நினைத்த நான் ”பொடி எதிலிருந்து எப்படி சார் தயாரிக்கிறார்கள்” என்று என் அடுத்த கேள்விக்குத் தாவிச்சென்றேன்.
அன்றைய ஆபீஸ் நேரம் அதற்குள் முடிந்து விட்டதால், நாளைக்குப் பேசுவோம் என்ற படி இருவரும் பிரியா விடை பெற்றுச்செல்ல வேண்டியதாகிப் போனது.
தொடரும்
ஒரு சிறு விளக்கம்:
[ ** கம்பர்கட் ** அல்லது கமர்கட் என்பது அந்தக்காலத்தில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் ஒரு தின்பண்டம். கடலைமிட்டாய், தேங்காய் பர்பி, ஆரஞ்ச் மிட்டாய் என்பதுபோல பல சாதாரண பெட்டிக்கடைகளிலும், பள்ளிக்கூட வாசல்களிலும் சுலபமாக கிடைக்கக் கூடியது.
தேங்காய் + வெல்லம் + ஏலம் கலந்த ஒரு கலவை தான், கையில் ஒட்டாதபடியும்,ஆனால் அமுக்கினால் அமுங்கக்கூடியதாகவும் ஒரு வித ஜவ்வுமிட்டாய் போல பாகுபதத்தில் உருண்டையாக கோலிக்குண்டுபோல செய்யப்பட்டிருக்கும். மிகவும் சுவையானதாக இருக்கும்.
இப்போதெல்லாம் கடைகளில் கிடைக்குமோ கிடைக்காதோ தெரியவில்லை.
என்றும் அன்புடன் உங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

