என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

முன்னெச்சரிக்கை முகுந்தன்



முன்னெச்சரிக்கை முகுந்தன்

நகைச்சுவைச் சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

ஐம்பது வயதைத் தாண்டிய முகுந்தனுக்கு சற்று பெருத்த சரீரம்.  நடந்தாலே பெருமூச்சு வாங்கும். சுகர் பிரஷருடன் சமீபகாலமாக சற்று ஞாபக மறதியும் சேர்ந்து கொண்டுள்ளது. எப்போதுமே எதிலுமே ஒருவித படபடப்பு. எதையாவது மறந்து விட்டு விடுவோமோ என்று முன்னெச்சரிக்கையாகவே இருப்பார்.

ஆபீஸுக்குப் புறப்படும் முன் தனது அலுவலக அடையாள அட்டை, வீட்டு விலாசம், தொலைபேசி எண்களுடன் கூடிய விசிடிங் கார்டு, பஸ் சார்ஜுக்கு வேண்டிய சரியான சில்லரைகளுடன் கூடிய மணிபர்ஸ், அதில் ஒரு தனி அறையில் ரிஸர்வ் கேஷ் ஆக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு, மூக்குக்கண்ணாடி, அதற்கான கூடு, மூன்று வேளைகளுக்கான மருந்து மாத்திரைகள், டிபன் பாக்ஸ், வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு, பல் குத்தும் குச்சிகள், காது குடையும் பஞ்சுக்குச்சிகள், கைக்கடிகாரம், பேனா, ஆபீஸ் ஃபைல்கள், செல்போன், சார்ஜர், ஆபீஸ் டிராயர் சாவி, குடை, பஸ்ஸில் படித்துக்கொண்டே போக ஏதாவது வார இதழ்கள், செய்தித்தாள், பேண்ட், பெல்ட், பனியன், ஜட்டி, ஷர்ட், கர்சீப், ஆபீஸ் முடிந்து திரும்புகையில் காய்கறி ஏதாவது கண்ணில் பட்டால் வாங்கி வர ஒரு துணிப்பை, இடுப்பிலிருந்து அடிக்கடி நழுவிப்போகும் அரணாக்கயிறு, வேஷ்டி, துண்டு, செருப்புகள் என்று சகல சாமான்களையும் லிஸ்ட் போட்டு, வீட்டினுள் ஒரு பெரிய கரும்பலகையில் எழுதி, கண்ணில் படும்படியாக தொங்க விட்டிருப்பார். ஏழு மணிக்கு பஸ் பிடிக்க ஆறரை மணிக்கே ரெடியாகி லிஸ்டில் உள்ளபடி சாமான்களையும் ஒரு முறை சரிபார்த்துக்கொள்வார். பேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட.

ஆபீஸில் அவருக்கு முன்னெச்சரிக்கை முகுந்தன் என்று ஒரு பட்டப்பெயரே கொடுத்திருந்தனர்.

பேண்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு ஆபீஸ் போகும் இவருக்கு வேஷ்டி-துண்டு எதற்கு என்று நீங்கள் யோசிப்பதும் நியாயமே. அது ஒரு பெரிய கதை. 

ஓடும் பஸ்ஸில் அவசரமாக ஏறிய அவருக்கு, அன்றொரு நாள் போதாத காலம். இவர் போட்டிருந்த டைட் பேண்ட், ஜிப்பு முதல் கணுக்கால் வரை, டாராகக் கிழிந்து (தையல் பிரிந்து) தொடை தெரிய பயணித்ததில் (தொடை நடுங்கி) மனிதன் கூசிக்குறுகிப் போய் விட்டார். அன்று முதல் இன்று வரை, வேஷ்டியும் துண்டும், இவர் போகுமிடமெல்லாம் கூடவே தொற்றிக்கொள்ள ஆரம்பித்தன. 

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலையிலிருந்து காவிரிக்குப்போகும் வழியில் தான் அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு அமைந்துள்ளது.

அன்று சனிக்கிழமை. அரை நாள் மட்டுமே ஆபீஸுக்குத் தலையைக் காட்டிவிட்டு, சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டார், முகுந்தன்.

மறுநாள் காலை ஆறரை மணிக்கு திருச்சி ஜங்ஷனிலிருந்து புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலைப்பிடித்து சென்னை செல்ல வேண்டிய நிர்பந்தம் அவருக்கு.

ஞாயிறு மாலை அவர் பிள்ளைக்கு சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் பார்த்து விட்டு வர ஏற்பாடு. அவரின் மனைவியும் மகனும் ஏற்கனவே சென்னை பெரம்பூரிலுள்ள இவரின் மைத்துனர் வீட்டுக்குப்போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. 

முகுந்தனுக்கு வேண்டிய துணிமணிகள், மருந்து மாத்திரைகள், முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட் முதலியன அனைத்தும் ஒன்று விடாமல், அவர் மனைவி ஏற்கனவே ஒரு பெட்டியில் ரெடி செய்து வைத்திருந்தாள்.

அவற்றையெல்லாம் ஒரு செக்-லிஸ்டு போட்டுவிட்டு, ஒருமுறை சரி பார்த்துவிட்டு,  ஹோட்டலிலிருந்து வரவழைத்த ஸ்பெஷல் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிவிட்டு ஜன்னல் ஓரக் கட்டிலில் படுத்தவர், நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிப்போனார்.

ஜன்னல் வழியே மழைச்சாரல் பட்டு, திடீரென்று கண் விழித்த முகுந்தனுக்கு ஒரே அதிர்ச்சி. மணி 5.30 ஆகிவிட்டது. வெளியே மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மேக மூட்டமாக எங்கும் ஒரே இருட்டு. மின்னலுடன் கூடிய பலத்த இடிகள் வேறு பயமுறுத்தி வருகிறது. மின்வெட்டுக்கூட ஏற்படக்கூடிய சூழ்நிலை.     

அவசர அவசரமாக பாத்ரூம் போய்விட்டு , பல் தேய்த்து முகம் கழுவி, துண்டு ஒன்றால் துடைத்துக்கொண்டு, மெயின் ஸ்விட்சை ஞாபகமாக ஆஃப் செய்துவிட்டு, வீட்டைப்பூட்டிக்கொண்டு, பூட்டை நன்கு இழுத்துப்பார்த்து விட்டு, காலில் செருப்பு, ஒரு கையில் பெட்டி, மறு கையில் குடை+டார்ச் லைட்டுடன், லிஃப்ட் வேலை செய்யாத எரிச்சலில் படியிறங்கி ரோட்டுக்கு வந்தார்.

“சரியான மழை ... இன்னும் 48 மணிநேரம் தொடருமாம்” யாரோ இருவர் குடை பிடித்த வண்ணம் பேசிச்சென்றது இவர் காதிலும் விழுந்தது.







கனத்த மழையினால் சாலை முழுவதும் சாக்கடை நீரும் கலந்து ஓடிக்கொண்டிருந்ததால் சேறும் சகதியுமாகக் காலை வைக்கவே மிகவும் அருவருப்பாக இருந்தது. 


அதிகமாக ஜனங்கள் நடமாட்டமோ, வாகங்கள் தொல்லையோ இல்லை. ஏற்கனவே ஒருமுறை இதே போன்ற நல்ல மழையில், நடுரோட்டில் குண்டும் குழியுமாகத் தேங்கியிருந்த, மழை நீருக்கு அடியில் இருந்த மாட்டுச்சாணத்தில் காலை வைத்து, அது அப்படியே இவரை வழிக்கி விட்டு, சறுக்கி விழச்செய்ததில், உடம்பெல்லாம் சேறும் சகதியுமாகி, வலது தோள்பட்டை எலும்பு நழுவி. பலநாட்கள் அவஸ்தைப்பட்ட அனுபவத்தில், தற்போது மெதுவாக ஊன்றி, அடிமேல் அடிவைத்து, வாஜ்பாய் ஸ்டைலில் நடக்கும் போது, இவர் அருகில் ஒரு ஆட்டோ வந்து நிற்க, அதில் உடனே ஏறிக்கொண்டார்.

மணி இப்போதே 6.10 ஆகிவிட்டது. பல்லாண்டுகளாக நடைபெற்று வரும் **பாலக்கரை மேம்பாலம் கட்டும் பணிகளால்**, ஊரைச்சுற்றிக்கொண்டு, திருச்சி ஜங்ஷனுக்குப்போக எப்படியும் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். அதற்குள் பல்லவன் எக்ஸ்பிரஸ் வண்டி எப்படியும் புறப்பட்டு விடக்கூடும்.   திருச்சி டவுன் ஸ்டேஷனில் இந்த வண்டி நிற்காது. மழை வேறு வலுத்துத் தொல்லை கொடுத்து வருகிறது.

ரிஸ்க் எடுக்க விரும்பாதவராய், ஆட்டோவை நேராக ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு விடச்சொன்னார். நேரம் இருப்பதால் பதட்டம் இல்லாமல், 6.45க்குள் அங்கு போய் செளகர்யமாக வண்டியைப்பிடித்து விடலாம் என்று நல்லதொரு முடிவு எடுத்தார்.

ஆட்டோ 6.30 க்கே ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை அடைந்து விட்டது. முகுந்தனுக்கு ஒரு பெரிய நிம்மதி. சூடான காஃபி ஒன்று வாங்கி மழைக்கு இதமாக அருந்தினார். 



6.45 ஆகியும் இன்னும் இருட்டாகவே சூரிய வெளிச்சம் வராமல் இருந்ததும் அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. பலத்த மழையும் கருத்த மேகமுமே காரணம் என்று நினைத்துக்கொண்டார்.

“சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு வரும்? இந்த ப்ளாட்ஃபார்ம் தானே!” என அங்கிருந்த ஃபோர்டரிடம் வினவினார்.

“என்ன சாமீ! ஊருக்குப்புதுசா நீங்கள்? சென்னைப் பட்டணத்திற்குப்போக ராத்திரி பத்தரை மணிக்குத்தான் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் வண்டி இருக்கு. பல்லவனுக்குத்தான் போகணும் என்றால் பேசாமப்போய்ப் படுங்க. நாளைக்குக் காலையிலே 6.45 க்குத்தான் அது வரும்” என்றான்.

அழாக்குறையாக இங்கும் அங்கும் திரும்பிய அவர் கண்களில் பட்டது அந்த ரயில்வே கடிகாரம் 18.50 என்று சிவப்புக்கலர் டிஜிட்டலில் காட்டியவாறே.

ராசி பலனில் இன்று சனிக்கிழமை உங்களுக்கு வீண் அலைச்சலும், விரையமான வெட்டிச் செலவுகளும் என்று போட்டிருந்தது அவருக்கு ஞாபகத்திற்கு வந்தது. 

கொட்டும் மழையால், பகலில் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அவருக்கு, சனிக்கிழமை மாலை நேரம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையாகத் தோன்றியதால் வந்தக் குழப்பமே இவ்வளவுக்கும் காரணம்.   எதிலும் ஓரளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது தான்.

ஞாயிறு காலை பிடிக்க வேண்டிய ரிஸர்வேஷன் செய்த வண்டிக்கு, சனிக்கிழமை மாலையே புறப்பட்டுச் சென்றால், யார் தான் என்ன செய்வது?

கொட்டும் மழையிலும், மின்னல் இடியிலும், அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா இவரைப்பார்த்து கண் சிமிட்டிச் சிரிப்பது போலத் தோன்றியது.






-o-o-o-o-o-o-
முற்றும் 
-o-o-o-o-o-o-



**பாலக்கரை மேம்பாலம் கட்டும் பணிகளால்**

திருச்சி டவுனிலிருந்து திருச்சி ஜங்ஷன் வரை செல்லும் நேர் வழிப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் அடைக்கப்பட்டிருந்த 
ஓரிரு வருடங்களில், இந்தக்கதை எழுதப்பட்டது. 

இப்போது பாலக்கரைப் பகுதியில் அதுபோன்ற 
போக்குவரத்துத் தொந்தரவுகள் ஏதும் இல்லை.  


-oOo-




வெள்ளி, 23 டிசம்பர், 2011

தேடி வந்த தேவதை [சிறுகதை - இறுதிப்பகுதி 5 of 5]



தேடி வந்த தேவதை

[ சிறுகதை நிறைவுப்பகுதி (5 of 5) ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-



முன்கதை முடிந்த இடம்:



எனவே தங்கள் தாயாரின் எதிர்பார்ப்பு என்பது மிகவும் நியாயமானதே.  அவர்களிடம் உண்மையைச்சொல்லி விட்டு, பிறகு அவர்கள் விருப்பப்படியே, நீங்கள் வேறு யாரையாவது உங்கள் ஸ்டேட்டஸுக்குத் தகுதியானவளாகப் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்; 


ALL THE BEST ...... AND ..... GOOD BYE  ......." என்று சொல்லி போனை வைத்துவிட்டாள், சுமதி.       


சுந்தர் அடுத்த ஒரு வாரமும் சுமதியின் நினைவினில் தவியாய்த் தவித்து வந்தான். வேறு எந்த வேலையும் அவனுக்கு ஓடவில்லை. 


தன் தாயிடமும் இதுபற்றிப் பேசவும், உண்மையைச் சொல்லவும் மிகவும் தயங்கினான். 


இப்போது இந்த உண்மையை தன் வாயால் தன் தாயிடம் சொல்லப்போய், ஒருவேளை அதன் காரணமாகவே, தன் மனதுக்கு மிகவும் பிடித்தமான தேவதையாகிவிட்ட, சுமதியை தன் மனைவி ஆக்கிக்கொள்ள முடியால் போய் விடுமோ! என்ற கவலையும் அவனுக்கு ஏற்பட்டது.


அவன் தாயார் மரகதமும் அவனை அழைத்துக்கொண்டு, சுமதி வீட்டுக்குப் பெண் கேட்கப்போக, எந்தவொரு துரித நடவடிக்கைகளும் எடுக்காமலேயே காலம் கடத்தி வந்தாள்.

==================================

தொடர்ச்சி இப்போது இங்கே ..............



தினமும் இரண்டு வேளைகள் வீதம் கூட, ஷேவிங் செய்துகொண்டு, தன் சிவந்த முகத்தில், பச்சைநிறக் கன்னங்களுடன், எப்போதுமே பளபளப்பாகவும் பொலிவுடனும் காட்சி அளித்து வந்த சுந்தர், கடந்த நான்கு நாட்களாக ஷேவிங் செய்துகொள்ளாமலும், ஆபீஸுக்கு போகாமலும், ஏதோ பித்துப்பிடித்தவன் போலக் காட்சியளிப்பதை கண்டு மரகதம் வருந்தினாள். 


சுமதி வந்து விட்டுப் போனதிலிருந்து, சுந்தரின் போக்கினில் ஒருவித மாற்றத்தையும், சோகத்தையும் உணர்ந்த மரகதம் மேற்கொண்டு என்ன செய்வதென்று தீவிரமாகச் சிந்திக்கலானாள்.


“உடம்பு ஏதும் சுகமில்லையாப்பா? நம் டாக்டரிடம் வேண்டுமானால் போய்க் காட்டி விட்டு வருகிறாயா?” என்றாள் மரகதம். 


இந்த எயிட்ஸ் என்ற சனியன், ஏதாவது தன் மகனை இதுபோலெல்லாம் உள்ளூர வாட்டி வதைக்கிறதோ என்ற கவலை அவளுக்கு.


“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்” என்று சொல்லி சட்டையை மாட்டிக்கொண்டு எங்கோ வெளியில் புறப்படத் தயாராகி விட்டான், சுந்தர். 


“இந்தா, வீட்டுச்சாவியில் ஒன்றை நீ எடுத்துக்கொண்டு போ. மற்றொன்றை எடுத்துக்கொண்டு நான் கோயிலுக்குப் போய்விட்டு வருகிறேன்” என்றாள், மரகதம்.    


சுந்தர் தன் பைக்கில் எங்கோ கிளம்பியதைப் பார்த்த பிறகு, மரகதம் தானும் தன் வீட்டைப்பூட்டிக்கொண்டு, ஓர் ஆட்டோ பிடித்து, திடீரென்று சுமதி வேலை பார்க்கும் மருத்துவமனைக்குப் புறப்பட்டுச் சென்றாள்.  


அங்குள்ள ரிஸப்ஷன் + என்கொயரியில், தான் ”சுமதி” என்ற பெயரில் இங்கு வேலை பார்க்கும் நர்ஸை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்து விட்டு, சுழலும் மின் விசிறிக்கு அடியில், பெருமூச்சு வாங்கியபடி அமர்ந்து கொண்டாள். 


ஆட்டோவில் புறப்பட்டு பயணம் செய்து வந்ததே, அவளுக்கு என்னவோ அவளே பொடிநடையாக நடந்து வந்தது போல மூச்சு வாங்கித் திணறியது, அவளின் அசத்தலான தேகவாகினால். 


மோதமொழங்க ‘கும்’ என்றிருக்கும் ஆசாமியல்லவா நம் மரகதம் அம்மாள்!


வைர டாலர் டாலடிக்க, ஜில்லென்று குளிர்ச்சியுடன், B M W காரில், சீருடை அணிந்த டிரைவர் கார்க்கதவை திறக்க, ஒரு கெட்-அப் ஆக வந்து இறங்கியிருக்க வேண்டிய, செல்வச் சீமாட்டி தான் இந்த மரகதம் அம்மாள். 


என்ன செய்வது; இன்று தன் மகன் சுந்தருக்கும், தன் கார் டிரைவருக்குமே கூட தெரியாமல் ரகசியமாக, சுமதியை சந்தித்து விட்டு வரவேண்டும் என்று அவள் நினைத்ததால், ஏதோ ஒரு ஆட்டோவைப்பிடித்து, அவசரமாகப் புறப்பட்டு வந்து விட்டாள். 


ஜில்லென்று எப்போதும் ஏ.ஸீ. வீடு, ஏ.ஸீ. கார், ஏ.ஸீ. பாத்ரூம் என்றே வாழ்ந்து பழகிவிட்டவளுக்கு, இப்போது இன்று மட்டும் ஆட்டோவில் வந்ததால் சற்றே அவஸ்தையாகி விட்டது.   


அவளின் ’ரவிக்+கை’ க்கு இடைப்பட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட நீரூற்று போன்ற கசகசப்பே வெளியே அடிக்கும் வெய்யில் 40 டிகிரிக்குக் குறையாது என்று வானிலை அறிக்கை போல் அவளுக்கு உணர்த்தியது.


அவள் கண்ணெதிரே, அதே மருத்துவமனைக்குள் சில வெளிநாட்டுப் பெண்மணிகள், துள்ளிவரும் புள்ளி மான் கூட்டம் போல அப்போது நுழையக்கண்டாள், மரகதம்.


வாழைத்தண்டு போல வழவழப்பான கைகளும் கால்களும் அவர்களுக்கு. புதிதாகப் பறித்து வந்த, பச்சை வேர்க்கடலையின் மேல்தோலியை உடைத்ததும் உள்ளே இருக்குமே, அதே ரோஸ் கலர் (கடலையின் உள்தோலியின் கலர்) போலவே அவர்களின் ஒட்டுமொத்த நிறம். 


அவர்களில் ஒருசிலர் பெளர்ணமி முழுநிலவு போல பால் வெண்மையாகவும், சிலர் குட்டியூண்டு இளம் நொங்கு போல பார்க்கவே பரவசமாகவும், சிலர் பறங்கிப்பழத்தைப் பிளந்தது போல செக்கசெவேலென்றும், முகத்தோற்றம் கொண்டிருந்தனர். 


அவர்கள் அணிந்திருந்த ஆடைகளோ, காத்தாட அங்கு கொஞ்சம் இங்கும் கொஞ்சம் மட்டுமே. 


அவர்கள் எல்லோருமே மேலாடைகளில் கை இல்லாத ”ரவிக்” மட்டுமே [’ரவிக்கை’ மைனஸ் ’கை’ = ரவிக்] அணிந்திருந்தனர். அதாவது எல்லோருமே மொத்தத்தில் முண்டா பனியன் கேஸ்கள் தான்.


அடிக்கும் வெய்யிலுக்கு என்னமாய் சுதந்திரமாக காற்றோடமாக இவர்கள் திரிகிறார்கள்! என்ற எண்ணத்தில் அவர்களைப் பார்த்ததும், மரகதம் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டாள். 


ஆனாலும் அந்தக்கூட்டத்தை நம் ஆட்கள், வாயைப்பிளந்தபடி பார்க்கும் பார்வையைக் கண்ட மரகதத்திற்கு, தன் புடவைத்தலைப்பை சரி செய்து, இழுத்துப் போர்த்திக் கொள்ளத் தோன்றியது, ஒரு வித கூச்சத்தால்.  


இதுபோல புடவைத்தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொள்வதால் அவள் கழுத்தில் இன்று அணிந்து வந்துள்ள,  டால் அடிக்கும் புத்தம் புதிய வைர நெக்லஸ், மற்ற பெண்மணிகளின் பார்வையிலிருந்து மறைவதில், மரகதத்திற்கும் கொஞ்சம் வருத்தமே!


[ ”அடடா! மருத்துவமனை என்றால் பலரும் பலவிதமாக இதுபோல வரத்தான் செய்வார்கள்! 


இந்த வர்ணனைகளிலிருந்து முதலில் வெளியே வந்து மெயின் கதை என்னாச்சுன்னு சொல்லுங்கள்!”  ,,,..  என உங்களில் சிலர் முணுமுணுப்பது எனக்கும் புரிகிறது. 


சும்மா ஒரு ஜாலிக்குத்தான்! 


சுமதியும் மரகதமும் ஒருவரையொருவர் சந்திக்கும் வரை உங்களுக்கும் எனக்கும் போர் அடிக்கக்கூடாது அல்லவா!! 


அதனால் தான், அதுவரை அங்கு நடந்தவற்றை, நான் கொஞ்சம் வர்ணிக்கும் படியாகி விட்டது!!!  


இதோ நம் சுமதியே வந்துவிட்டாள்!   .........................  மெயின் கதைக்குப் போவோமா? ]



திடீரென்று மருத்துவ மனைக்கு, தன்னை சந்திக்க வருகை தந்துள்ள மரகதம்மாவை சுமதி சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவர்களை கைகூப்பி வரவேற்று, தனி அறை ஒன்றுக்குள் கூட்டிச்சென்றாள்.

கொஞ்சநேரம் எதுவுமே பேசாமல் சுமதி மிகவும் அமைதியாகவே இருந்தாள். 


அவள் ஏதோ இறுக்கமாக இருந்ததை உணர்ந்த மரகதம், தானே பேசலானாள்:


“சுமதி! உன் வீட்டுக்கு நானும் சுந்தரும் எப்போதும்மா புறப்பட்டு வரட்டும்? ;


நீயாகவே என்னிடம் போன் செய்து ஏதாவது இதுபற்றிப் பேசுவாய் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன், நான்; 


உன்னை மறுபடியும் நேரில் பார்க்கணும் போல எனக்கு ஒரு சின்ன ஆசை மனதுக்குள் இருந்தது;


அதனால் தான் இப்போ நானே உன்னைப்பார்க்க புறப்பட்டு வந்துட்டேன்; 


உன் வீட்டில் உள்ள எல்லோரிடமும் இதுபற்றி ஏதாவது நீ பேசினாயா? 


அவர்கள் எல்லோரும் என்ன சொல்லுகிறார்கள்? 


எல்லோருக்குமே இதில் திருப்தி தானே? 


பிரச்சனை ஏதும் இல்லையே?” 


என பலவிதக் கேள்விகளை ஆதங்கத்துடன் கேட்கலானாள், மரகதம்.

“என்னை மன்னித்து விடுங்கள் அம்மா; நான் எடுக்கும் எந்த முடிவுக்கும் என் வீட்டில் யாரும் எப்போதும் மறுபேச்சோ, மறுப்போ ஏதும் சொல்ல  மாட்டார்கள்;


நன்கு யோசித்துப் பார்த்ததில், எனக்குத்தான் இப்போது இந்த விஷயத்தில் சுத்தமாக விருப்பம் இல்லை” என்றாள் சுமதி.

சுமதி வாயால் இப்படிச்சொன்னதும், மரகதத்திற்கு ஒருவித ஏமாற்றமும், வருத்தமும், கோபமும் வந்து விட்டன.

“என் பிள்ளை சுந்தரையா வேண்டாம் என்கிறாய்? ; 


அவனுக்கு வந்திருக்கும் வியாதியைக்கண்டு பயப்படுகிறாய் போலிருக்கு; 


வியாதி என்று சொல்லித்தானே விளம்பரம் கொடுத்திருந்தான்? 


பிறகு எதற்காக அன்று எங்கள் வீட்டுக்கு வந்து அவ்வளவு பேச்சுப் பேசிவிட்டுப் போனாய்?;

உன் நினைவாகவே நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கும் என் மகன் சுந்தரின் நிலைமையை யோசித்துப் பார்த்திருந்தால், நீ மிகச்சுலபமாக ’நன்கு யோசித்துப் பார்த்ததில், எனக்குத்தான் இப்போது இந்த விஷயத்தில் சுத்தமாக விருப்பம் இல்லை’ என்று இப்போது நீ என்னிடம் சொல்லியிருக்க மாட்டாய்! 


எல்லாம் என் தலையெழுத்து” 


என்று சொல்லிவிட்டு, கோபமாகப் புறப்பட்டு விட்டாள், மரகதம். 


மரகதம் மிகக்கோபமாக எழுந்த வேகத்தில், அவள் அமர்ந்திருந்த சுழலும் நாற்காலி, நீண்ட நேரம் அசைந்து ஆடிக்கொண்டே இருந்தது.

சுமதிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. சுந்தர் நடத்தியுள்ள எயிட்ஸ் என்ற நாடக விளையாட்டை, தன் வாயால் அவர்களுக்கு விளக்கிக் கூறவும் விருப்பமின்றி, மிகவும் தயங்கியபடி மெளனமாகவே, இருந்து விட்டாள். 


தன் மீது மிகுந்த கோபத்துடன் மரகதம் வெளியே செல்வதையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள், சுமதி. 


பிறகு ஏழாம் நம்பர் கட்டிலில் உள்ள பேஷண்ட் ஆன பெரியவருக்கு ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டுமே! என்று நினைவுக்கு வந்தவளாக, தன் கடமையில் மூழ்கிப்போனாள்.  








எங்கோ பைக்கில் வெட்டியாக ஊரைச் சுற்றிவிட்டு வந்திருந்த சுந்தர் மிகவும் சோகத்தில் மூழ்கியிருந்தான். வீட்டின் மேல் கூரையில் சுழலும் மின் விசிறியை வெறித்துப்பார்த்தபடி, கட்டிலில் மல்லாக்காகப் படுத்திருந்த சுந்தரை நெருங்கி மரகதம் பேசலானாள்:

“நமக்கு அதிர்ஷ்டம் இல்லேடா, சுந்தர். சுமதிக்கு இந்தக் கல்யாணத்தில் சுத்தமாக விருப்பம் இல்லையாம்; என்னிடமே இதை அவள் நேரில் சொல்லிவிட்டாளே! நான் என்ன செய்வது? ;


எவ்வளவு தான் பணம் காசு, சொத்து சுகம் நம்மிடம் கொட்டி இருந்தாலும், சுமதியைப்போல ஒரு அழகான, அமைதியான, அடக்கமான, நாகரீகமான, படித்த, பண்புள்ள, புத்திசாலியான பெண் எனக்கு மருமகளாக அடையக் கொடுத்து வைக்க வில்லையே .....” எனக்கூறி கண்ணீர் விட்டுப் புலம்பினாள், மரகதம்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட சுந்தருக்கு, தன் விபரீத விளையாட்டை, தன் தாயாரிடம் மேலும் மறைக்க விருப்பமில்லை.

நடந்த விஷயங்களை ஒன்றுவிடாமல் தன் தாயாரிடம் விளக்கிக்கூறி, சுமதியின் விருப்பமின்மைக்கான உண்மைக் காரணத்தையும் எடுத்துச்சொல்லி, தனக்கு எப்படியாவது சுமதியே மனைவியாக வருமாறு ஏற்பாடுகள் செய்து உதவுமாறு, தன் தாயிடம் கெஞ்சினான்.


எப்படியோ தான் பெற்ற ஒரே பிள்ளை சுந்தருக்கு, எயிட்ஸ் என்ற கொடிய வியாதி ஏதும் இல்லை என்றதைக் கேள்விப்பட்டதும், அவளின் பெற்ற வயிறு, பாலை வார்த்தது போல குளிர்ந்து போனது. 


தன் மகன் சுந்தர் தன்னிடமே நடத்தியுள்ள பொய் நாடகத்தையும், அதற்கு துணைபோன குடும்ப டாக்டரையும், மனதிற்குள், கண்டபடி திட்டித்தீர்த்தாள். 


இருப்பினும் சுந்தரைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு சுமதி ஏன் மறுப்பு தெரிவித்தாள் என்பதன் உண்மைக்காரணம் இப்போதுதான் மரகதத்திற்கும் புரிய வந்தது.  உடனே, சுமதி மீது மரகதத்தின் மதிப்பு பலமடங்கு உயர்ந்தது. 

தனக்கு ஆதாயம் இருப்பினும், தன் மகன் தன்னிடமே பொய் சொன்னதைப் பொறுத்துக் கொள்ள மனமின்றி, கொஞ்சமும் சுயநலமில்லாமல், துணிச்சலுடன் நடந்து கொண்ட சுமதியே, தனக்கு ஏற்ற மிகச்சிறந்ததொரு மருமகளாக இருக்க முடியும் என்று பேரானந்தப்பட்டாள் மரகதம்.





அடுத்த ஒரே மாதத்திலேயே “சுமதி+சுந்தர்” திருமணம் வெகு விமரிசையாக, மரகதத்தால் நடத்தி வைக்கப்பட்டது.






ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே !  







[கெளரிக்கல்யாண வைபோவமே!]



சுமதி.....சுந்தர்க் கல்யாண வைபோவமே!














சுபம் !!



-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-  






     
[ என் அடுத்த நகைச்சுவைச் சிறுகதை 
“முன்னெச்சரிக்கை முகுந்தன்” 
என்ற தலைப்பில்  வருகிற 27.12.2011 
செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்படும். ]


அன்புடன்
vgk

புதன், 21 டிசம்பர், 2011

தேடி வந்த தேவதை [சிறுகதை பகுதி 4 of 5]



தேடி வந்த தேவதை

[சிறுகதை - பகுதி 4 of  5]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




முன்கதை முடிந்த இடம்:



“தயவுசெய்து தனிமையில் பிரித்துப்படிக்கவும்” என்று எழுதிய கவர் ஒன்றை சுமதி கையில் கொடுத்து விட்டு, அவளை ஆட்டோ ஒன்றில் ஏறச் செய்துவிட்டு, தன் வீடு நோக்கித் திரும்பி வந்தான்.


தன் வீட்டுக்கு வந்து அந்தக் கவரைப் பிரித்து முதல் பத்தியைப் [Paragraph] படித்ததும், சிறு குழந்தையின் கையில் மிகப்பெரிய பலூன் ஒன்றைக் கொடுத்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டது, சுமதிக்கு. 


ஆனால் அடுத்தடுத்து எழுதப்பட்டிருந்த விஷயங்களைப் படித்ததும், அதே பலூன் பட்டென்று உடைந்து போனால், அந்தக் குழந்தைக்கு எவ்வளவு வருத்தம் ஏற்படுமோ அதே வருத்தத்தையும் அளித்தது. 


மொத்தத்தில் அந்தக்கடிதம் தந்த அதிர்ச்சியால், அவள் மனம் மிகவும் வேதனை தான் அடைந்தது.


=================================


தொடர்ச்சி இப்போது இங்கே ............




என்னதான் இருந்தாலும், வரதட்சனை வாங்கக்கூடாது, தன் கல்யாண விஷயமாக பெண் வீட்டாருக்கு எந்த செலவுகளும் வைக்கக்கூடாது என்ற தன் பிடிவாதக் கொள்கைக்காக, தன் குடும்ப டாக்டரின் உதவியுடன், தன்னைப் பெற்றெடுத்த தாயிடமே. தனக்கு எயிட்ஸ் நோய் வந்திருப்பதாகப் பொய் சொல்லி நாடகமாடுவதா?


சுந்தரின் இந்தச்செயலை ஆதரிக்க மனமின்றி சுமதி தவித்தாள். இந்த சம்பவம் தொண்டையில் முள் ஒன்று தைத்தது போல, அவளால் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சங்கடப்பட வைத்தது.    


மறுநாள் காலை அவளிடம் தொலைபேசியில் சுந்தர் தொடர்பு கொண்டதும், தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.

“தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள், சுந்தர். முதலில் உங்கள் தாயாரிடம் உண்மையை உண்மையாகக் கூறி விடுங்கள். அவர்கள் அதன்பிறகும் என்னையே தன் மருமகளாக ஏற்றுக்கொள்ள விரும்பினால், நல்லபடியாக நம் திருமணம் நடக்கட்டும். இல்லையென்றால் பிராப்தம் எப்படியோ அப்படியே நடக்கட்டும்; 


தங்கள் தாயாரை நான் மிகவும் மதிக்கிறேன். நேசிக்கிறேன். அவர்களிடம் உண்மையை மறைக்க என்னால் முடியவே முடியாது” தீர்மானமாகத் தன் முடிவை எடுத்துக்கூறினாள், சுமதி.


“ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்தச் சொல்லியல்லவா சொல்லுவார்கள், சுமதி.  நாம் ஒரே ஒரு பொய் தானே சொல்லப்போகிறோம். அதுவும் என் தாயார் ஒருவரிடம் மட்டுமே தானே. திருமணத்திற்குப்பிறகு நாமே இந்த உண்மையைச் சொல்லிவிட்டால் போகிறது” என்றான் சுந்தர்.


“நோ .... மிஸ்டர் சுந்தர். எனக்குப் பொதுவாக யார், யாரிடம், எதற்காகப் பொய் சொன்னாலுமே பிடிக்காது. 


“சுமதி, ப்ளீஸ் ...... நான் எதற்காகச் சொல்றேன்னு கொஞ்சம் புரிஞ்சுக்கோ; எங்க அம்மாவைப் பற்றியும், அவங்க எதிர்பார்ப்புகள் பற்றியும் உனக்கு எதுவுமே தெரியாது. நான் ஒரே பிள்ளை என்பதாலும், நாங்கள் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் என்பதாலும், நிறைய வரதட்சணை, சீர்செனத்தியோட மருமகள் வரணும்னு ரொம்ப பேராசைப்பிடித்து அலைகிறார்கள். எனக்கோ அதிலெல்லாம் கொஞ்சம் கூட இஷ்டமே கிடையாது. 


அதனால் தான் இப்படியொரு வீண் பழியை நானே என் மீது சுமத்திக்கொண்டு நாடகம் ஆடினேன். எங்கள் குடும்ப டாக்டரும் எனக்காக, என் புரட்சிகரமான கொள்கைகளுக்காக, அவரும் எனக்கு ஆதரவாக இருந்து, எனக்கு அதுபோல எயிட்ஸ் நோய் வந்திருப்பதாக அம்மாவிடமும் சொல்லி, அவர்களை நம்பும்படியாக உதவி செய்துள்ளார்.


அப்போதாவது என் அம்மா தன்னைத் திருத்திக்கொள்ள மாட்டார்களா; தன் எதிர்பார்ப்புகளை கைவிட்டுவிட்டு எப்படியோ, தன் மகனுக்குக் கல்யாணம்னு ஒண்ணு ஆனால் போதும்; பொண்டாட்டின்னு ஒருத்தி வந்தால் போதும், என்று நினைத்து செயல்படமாட்டர்களா! என்று நினைத்துத்தான் நான் இதுபோல நாடகமே ஆடியுள்ளேன்.      


இப்படி எல்லாம் கூடி வரும் போது, வெண்ணெய் திரண்டு வரும் போது [வெண்ணெய்த்] தாழியை உடைத்த கதையாக நீ செய்துவிடாதே, சுமதி .....  ப்ளீஸ் .... என்று சுந்தர் கெஞ்சினான்.


“ஹலோ மிஸ்டர் சுந்தர்! வரதட்சணை வாங்குவதும் குற்றம்; கொடுப்பதும் குற்றம் என்ற சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தங்களின் புரட்சிகரமான கொள்கைக்காக நானும் உங்களைப் பாராட்டுகிறேன்; 


ஆனால் இதை தங்கள் விஷயத்தில் செயல் படுத்துவதற்கும், நடைமுறைப் படுத்துவதற்கும், தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள வழிமுறை எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவேயில்லை; 


உண்மையைச் சொல்லி தாங்கள் விளம்பரம் கொடுத்திருந்தீர்கள் என்ற மகிழ்ச்சியால் தான், நான் உங்கள் வீட்டுக்கே வந்தேன். அதுவே சுத்தப்பொய் என்று ஆனதும், எனக்கு எதையுமே நம்ப முடியாமல் உள்ளது” என்றாள் சுமதி.


”சுமதி, ப்ளீஸ் ..... சுமதி, என்னைத் தயவுசெய்து நம்பு, நான் சொல்வதை தயவுசெய்து புரிஞ்சுக்கோ! எனக்கு உண்மையிலேயே எயிட்ஸ் எல்லாம் ஏதும் கிடையாது. நான் வேண்டுமானால் நீ வேலை பார்க்கும் மருத்துவ மனைக்கே நாளைக்கே, ரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வந்து, இதை உன்னிடம் நிரூபித்துக்காட்டுகிறேன், ...... போதுமா?” என்றான்.


“தேவையே இல்லை. அது போலெல்லாம் எதுவும் நீங்கள் தயவுசெய்து செய்ய வேண்டாம்;


உங்களுக்கு எயிட்ஸ் எதுவும் இல்லை என்பதைக் கேட்க, எனக்கும் மிகவும் சந்தோஷமே; 


ஆனால் அதை நான் நம்பி, அது எனக்குத்தெரிந்து, அதை என்னிடம் நீங்கள் நிரூபித்து என்ன ஆகப்போகிறது? நீங்கள் முதலில் இந்த சந்தோஷமான விஷயத்தைத் தெரிவிக்க வேண்டியது உங்களைப் பெற்றெடுத்த தாயாரிடம் மட்டும் தான்” என்றாள் சுமதி.  


”அது மட்டும் என்னால் முடியவே முடியாது, சுமதி; எங்க அம்மாவைப்பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாது” என்றான் சுந்தர் மிகவும் ஏக்கத்துடன்.


“உங்களால் இது முடியாது என்றால், பேசாமல் விட்டு விடுங்கள்” என்றாள் சுமதி, மிகவும் அலட்சியமாக.   


”நான் உன்னை நேரில் பார்த்ததிலிருந்து, உன் அழகான, இனிமையான, பக்குவமான பேச்சுக்களைக் கேட்டதிலிருந்து, என் மனதை உன்னிடம் பறிகொடுத்து விட்டேன்!மணந்தால் உன்னைத்தான் மணப்பது என்று முடிவே செய்து விட்டேன், தெரியுமா!” என்றான் சுந்தர்.


”நீங்கள் முடிவெடுத்து விட்டால் மட்டும் போதுமா?” என்றாள், சுமதி.

”முடிவாக நீ என்ன தான் சொல்ல வருகிறாய், சுமதி?” அழாக்குறையாகக் கேட்டான் சுந்தர்.


”தங்கள் தாயாருக்கு தாங்கள் ஒரே பிள்ளை. நல்ல அழகானவர், நிறைய படித்தவர், நன்கு சம்பாதிப்பவர், வசதி வாய்ப்புக்களுக்கும் குறைவில்லை. உங்களை மணக்க வரும் பெண்ணும் அதுபோல வசதி வாய்ப்புக்கள் உள்ளவளாக, நிறைய சீர்செனத்தியுடன் வரவேண்டும் என்று தங்கள் தாயார் எதிர்பார்ப்பதையும், நான் குறை கூறவே மாட்டேன்; 


அவர்கள் போன தலைமுறை ஆசாமிகள்.  அவர்களுக்கென்று ஒரு சில ஆசைகள், கற்பனைகள், எதிர்பார்ப்புகள் இருக்கத்தானே செய்யும்! அதில் தப்பு எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை; 


அரசாங்கம் ஆயிரம் சட்ட திட்டங்கள் போட்டிருந்தாலும், பிறருக்குத் தெரியும் வண்ணம் ரொக்கப்பணமாக கொடுக்கல் வாங்கல் பரிமாற்றங்கள் வெளிப்படையாக நடைபெறாவிட்டாலும், நகைகள், தங்கம், வைரம், வெள்ளி, பிற சொத்துகள் என்று வேறு ஏதேதோ வகையில் வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும், நம் நாட்டின் எல்லா இடங்களிலும் வெகு சகஜமாக, இன்றும் நிகழ்ந்து வரும் மிகச் சாதாரண நிகழ்ச்சிகள் தானே; 


திருமணமாகி புதுப்பெண்ணாய் வருபவள் எல்லாச் செல்வங்களுடனும் வந்தால் தான், புகுந்த வீட்டில் அவளுக்கும் ஒரு கெளரவமாகவும், பெருமையாகவும், மரியாதையாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தான்; 


எனவே தங்கள் தாயாரின் எதிர்பார்ப்பு என்பது மிகவும் நியாயமானதே;  


அவர்களிடம் உண்மையைச்சொல்லி விட்டு, பிறகு அவர்கள் விருப்பப்படியே, நீங்கள் வேறு யாரையாவது உங்கள் ஸ்டேட்டஸுக்குத் தகுதியானவளாகப் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்; 


ALL THE BEST ...... AND ..... GOOD BYE  ......." என்று சொல்லி போனை வைத்துவிட்டாள், சுமதி.       








சுந்தர் அடுத்த ஒரு வாரமும் சுமதியின் நினைவினில் தவியாய்த் தவித்து வந்தான். வேறு எந்த வேலையும் அவனுக்கு ஓடவில்லை. 


தன் தாயிடமும் இதுபற்றிப் பேசவும், உண்மையைச் சொல்லவும் மிகவும் தயங்கினான். 


இப்போது இந்த உண்மையை தன் வாயால் தன் தாயிடம் சொல்லப்போய், ஒருவேளை அதன் காரணமாகவே, தன் மனதுக்கு மிகவும் பிடித்தமான தேவதையாகிவிட்ட, சுமதியை தன் மனைவி ஆக்கிக்கொள்ள முடியாமல் போய் விடுமோ! என்ற கவலையும் அவனுக்கு ஏற்பட்டது.


அவன் தாயார் மரகதமும் அவனை அழைத்துக்கொண்டு, சுமதி வீட்டுக்குப் பெண் கேட்கப்போக, எந்தவொரு துரித நடவடிக்கைகளும் எடுக்காமலேயே காலம் கடத்தி வந்தாள்.


தொடரும் 






[ இந்தச்சிறுகதையின் அடுத்த
இறுதிப்பகுதி வரும் 24.12.2011
சனிக்கிழமையன்று வெளியிடப்படும் ]

திங்கள், 19 டிசம்பர், 2011

தேடி வந்த தேவதை [சிறுகதை பகுதி 3 of 5]




தேடி வந்த தேவதை

[சிறுகதை பகுதி 3 of  5]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-






முன்கதை முடிந்த இடம்:




“அவரைப்பெற்ற தாயாராகிய உங்கள் வாயால் அப்படியெல்லாம் தயவுசெய்து சொல்லாதீர்கள் .... அம்மா! 



நாம் யாருமே இந்த உலகில் நம் விருப்பதிற்காக, நாம் விருப்பப்பட்ட பெற்றோர்களுக்கு, நாம் விருப்பபட்ட ஊரில்,  நாம் விருப்பபட்ட நாளில் பிறந்து விடவில்லை;


அதுபோலவே நாம் நினைத்தாலும் கூட இந்த உலகத்தை விட்டு நம் விருப்பப்படி உடனடியாகப் போய் விடவும் முடிவதில்லை;  


மொத்தத்தில் பிறப்போ அல்லது இறப்போ நம் கையில் எதுவுமே இல்லை; 

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட, நாம் வாழ வாய்ப்பு கிடைத்துள்ள, இந்த மிகக்குறுகிய காலத்தில், நாம் நம்மால் பிறருக்கு என்ன உதவிகள் செய்திட முடியும் என்பதையே எப்போதும் சிந்திப்பவள் நான்;  


இந்த யதார்த்தத்திலேயே தினமும் எங்கள் மருத்துவ மனைக்கு வரும் பல நோயாளிகளுக்கு என்னால் முடிந்த மருத்துவ சேவைகள் செய்து வருகிறேன்” என்றாள் சுமதி.


தன் ஒவ்வொரு கேள்விகளுக்கும், சுமதி அளித்து வரும் பதில்களால் சற்றே ஸ்தம்பித்துப்போனாள், மரகதம்.


==============================

தொடர்ச்சி இப்போது இங்கே ...........

’இந்தச்சின்ன வயதில் இவளுக்கு இவ்வளவு பக்குவமா?’ ஓரளவுக்குத் திருப்தியடைந்த மரகதம், சுமதியுடன் தன் மகனும் தனிமையில் ஏதாவது பேச வேண்டியிருக்குமே என்பதை இங்கிதமாக உணர்ந்துகொண்டு, ”நீங்க ரெண்டு பேரும் ஏதாவது பேசிக்கொண்டு இருங்கோ ... ஒரு பத்து நிமிஷத்தில் நானும் திரும்பி வந்துடறேன்” என்று சொல்லியபடி, மரகதம் எழுந்து சமையல் அறைக்குள் நுழைந்தாள்.


கூட்டிக்கழித்துப்பார்த்ததில், இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் சுமதியே தன் மகன் சுந்தருக்குப் பொருத்தமானவளாக இருக்கக்கூடும் என்று தன் ஒரு மனது சமாதானம் கூறினாலும், அவளின் மறுமனது அதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.


அவள் தன் ஒரே மகன் சுந்தர் கல்யாண விஷயமாக எவ்வளவு கற்பனைகள் செய்து வைத்திருந்தாள்? அவை கொஞ்சமா .... நஞ்சமாக அடடா எல்லாம் இப்படி அவன் கொடுத்துள்ள ஒரே ஒரு விளம்பரத்தால் தவிடுபொடியாகும் என்று அவள் நினைத்தே பார்க்கவில்லையே!     

சிறிது நேரம் கழித்து மூவருக்குமான சிற்றுண்டித் தட்டுகளுடன் மீண்டும் வந்து அமர்ந்தாள், மரகதம். 

டிபன் ஏதும் தனக்கு வேண்டாமே என்று தவிர்க்க நினைத்த, சுமதியை, சுந்தரும் அவன் தாய் மரகதமும் வற்புருத்தி தங்கள் வீட்டுச் சிற்றுண்டியைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்; இல்லாவிட்டால் நாங்களும் சாப்பிட மாட்டோம்; சூடும் ஆறிவிடும்; என்று சொல்லி சாப்பிட வைத்தனர்.  




  
  

 




உடுத்தி வந்த ஆடையும் கசங்காமல், கீழே சிந்தாமல் சிதறாமல் அவள் டிபன் தட்டை தன் கழுத்தருகே நெருக்கிப் பிடித்தபடி வைத்துக்கொண்டு, சாப்பிடும் அழகையும், காஃபியை இரண்டு ஆற்றுஆற்றி விட்டு சொட்டுச்சொட்டாக ரஸித்துக் குடித்த நளினத்தையும், மரகதமும் அவள் மகன் சுந்தரும் மிகவும் வியப்பாக நோக்கினர்.  

“அப்புறம் உங்களுக்குள் தனியாகப்பேசியதில் என்ன முடிவு எடுத்தீர்கள்?” சுமதியையும், மகன் சுந்தரையும் பார்த்துக் கேட்டாள், மரகதம்.

”அம்மா! சுமதியை உங்களுக்குப் பிடித்திருந்தால், அவர்கள் வீட்டுக்குப்போய், அவள் பெற்றோரிடம் முறைப்படி பெண் கேட்டுப் பார்ப்போமே” சுந்தர் சற்றும் தாமதிக்காமல் பதில் அளித்தான்.

“சுமதிக்கு எந்தக்குறைச்சலும் இல்லை தான் ....... ஆனால் .......... “ என்று இழுத்து நிறுத்தினாள் மரகதம்.

“புரியுதும்மா, சுமதி வீட்டில் வசதி போதாது. நீ எதிர்பார்க்கும் அளவில் அவர்களால் எதுவுமே செய்ய முடியாது. உன் அந்தஸ்துக்கும், அவர்கள் அந்தஸ்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று தானே சொல்ல நினைக்கிறாய்? சற்று எரிச்சலுடன் சுந்தர் எதிர்க்கேள்வி கேட்க, [அதுவும் சுமதியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே] மரகதம் மிகவும் மிரண்டு போனாள்.  

“எப்போதும்மா, உங்க வீட்டுக்கு கல்யாண சம்பந்தமாப் பேச வரலாம்?” என்று சுமதியிடம் மரகதம் கேட்டாள்.

“நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக போன் செய்துவிட்டு வந்தால், நானும் உங்களை வரவேற்க செளகர்யமாக இருக்கும்”என்று சொல்லி தன் ஹேண்ட்பேக்கைத் திறந்து, பேப்பர் பேனா எடுத்து, தன் வீட்டு விலாசத்தையும், போன் நம்பரையும் முத்துமுத்தாக அவளைப் போன்றே அழகாக, எழுதிக் கொடுத்தாள்.        

அவள் எழுதிக்கொடுத்த பேப்பரை, அம்மாவும் பிள்ளையும் ஆசையுடன் பார்வையிட்டுக் கொண்டிருந்த போதே, டிபன் சாப்பிட்ட எல்லோருடைய தட்டுக்களையும், காஃபி சாப்பிட்ட எல்லா டவரா டம்ளர்களையும், சேர்த்து அழகாக எடுத்துக்கொண்டுபோய், சமையல் அறையில் அவற்றைக் கையோடு கழுவி, அங்கிருந்த மேடையில் கவிழ்த்து வைத்து விட்டு, தன் கை விரல்களில் படிந்த ஈரத்தை, அழகான பூப்போட்டப் புது கர்சீப் ஒன்றினால், ஒத்தியபடி வந்த சுமதியின் செயல், மரகதத்தை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  

அடுத்தடுத்து காரியங்களிலேயே கவனமாக சுறுசுறுப்பாக இருக்கும், குடும்பப் பொறுப்புள்ள இவள் தனக்கு மருமகளாக வரப்போகிறாள்; தனக்கும் தன் மகன் சுந்தருக்கும் இனி எப்போதுமே எதற்குமே கவலையில்லை! என்ற சிந்தனைகள் மரகதத்தின் மனதுக்குள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சுமதி விடைபெற்றுச்செல்லத் தயாராகி எழுந்து நின்று கொண்டாள். 

மரகதம் எழுந்து அருகே இருந்த பூஜை ரூமுக்குள் சுமதியையும் கூட்டிப்போய், ஸ்வாமி விளக்கை ஏற்றினாள். வெற்றிலை-பாக்கு, தேங்காய், ஆப்பிள்பழம், ஜாதிப்பூச்சரம், பட்டுரோஜா, மஞ்சள் கிழங்குகள், ஒஸ்தியான ரவிக்கைத்துணி ஆகியவற்றுடன் ஒரு நூறு ரூபாய் சலவைத்தாளையும் அதில் மடித்து, ட்ரேய் ஒன்றில் வைத்து குங்குமச்சிமிழுடன், மரகதம் சுமதியிடம் நீட்டினாள்.     

மரகத்தின் காலில் விழுந்து கும்பிட்டு விட்டு, அவற்றை கையில் வாங்கிக் கண்களில் ஒத்திக்கொண்டாள், சுமதி. 


ரெடியாக சுந்தர் ஒரு அழகிய காலியான கைப்பையை எடுத்து, சுமதியிடம் நீட்ட, ”ரொம்ப தாங்க்ஸ், டைம்லி ஹெல்ப்” என்று சொல்லி அதைத் தன் கையில் வாங்கி, மரகதம் கொடுத்த பொருட்களை அதில் போட்டுக்கொண்டாள்.  


ஜாதிப்பூச்சரத்தைத் தன் தலையில் சூடிக்கொண்டாள்.  பட்டுரோஜாவையும் அதன் நடுவில் பதித்துக்கொண்டாள். 


மிகவும் அழகானப்பெண்ணான சுமதியின் நீண்ட கருமையான கூந்தலில் ஏறிய பிறகு தான் அந்தப்பூக்களுக்கும், மேலும் ஒரு தனியழகு ஏற்பட்டுள்ளது என்று மரகதம் தன் மனதுக்குள் நினைத்து மகிழ்ந்து கொண்டாள்.

“டேய் சுந்தர், இவளுடன் தெரு முனை வரை நீயும் போய், பத்திரமாக வழியனுப்பிவிட்டு வா” என்று மரகதம் சொல்ல, வெற்றிக்களிப்புடன் சுமதியுடன் பேசிக்கொண்டே சென்றான் சுந்தர்.

சுந்தரின் குடும்ப டாக்டர் எதிரே வந்தார். அவரை சுமதிக்கு அறிமுகம் செய்துவிட்டு, இதுவரை நடந்த விஷயங்களை டாக்டரிடம் சுருக்கமாக எடுத்துரைத்தான் சுந்தர்.  


”இவள் தான் சார், என் வுட் பீ [WOULD BE] பெயர் சுமதி” என்றான் மிகவும் சந்தோஷமாக!

இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறிய டாக்டர், “சுமதி! யூ ஆர் ரியலி .... ய வெரி வெரி ...... லக்கி கேர்ள்”  எனக்கூறிச்சென்றார். 

டாக்டர் சொல்வதன் பொருள் விளங்காத குழப்பத்தில் சுமதி, சுந்தரை ஒரு மாதிரியாக நோக்கினாள்.

“இந்த டாக்டர் எப்போதுமே இப்படித்தான். மிகவும் தமாஷாகப் பேசக்கூடியவர்” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் சுந்தர். 


“தயவுசெய்து தனிமையில் பிரித்துப்படிக்கவும்” என்று எழுதிய கவர் ஒன்றை சுமதி கையில் கொடுத்து விட்டு, அவளை ஆட்டோ ஒன்றில் ஏறச் செய்துவிட்டு, தன் வீடு நோக்கித் திரும்பி வந்தான்.


தன் வீட்டுக்கு வந்து அந்தக் கவரைப் பிரித்து முதல் பத்தியைப் [Paragraph] படித்ததும், சிறு குழந்தையின் கையில் மிகப்பெரிய பலூன் ஒன்றைக் கொடுத்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டது, சுமதிக்கு. 


ஆனால் அடுத்தடுத்து எழுதப்பட்டிருந்த விஷயங்களைப் படித்ததும், அதே பலூன் பட்டென்று உடைந்து போனால், அந்தக் குழந்தைக்கு எவ்வளவு வருத்தம் ஏற்படுமோ அதே வருத்தத்தையும் அளித்தது. 


மொத்தத்தில் அந்தக்கடிதம் தந்த அதிர்ச்சியால், அவள் மனம் மிகவும் வேதனை தான் அடைந்தது.

தொடரும்

  
[ இந்தச் சிறுகதையின் அடுத்த பகுதி வரும் 22.12.2011 வியாழக்கிழமை வெளியிடப்படும். ]

சனி, 17 டிசம்பர், 2011

தேடி வந்த தேவதை [சிறுகதை பகுதி 2 of 5]




தேடி வந்த தேவதை

[சிறுகதை பகுதி 2 of  5]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-








முன்கதை முடிந்த இடம்:

“காஃபி, டீ, பூஸ்டு, போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ்,  க்ரேப் ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் ...... என்ன சாப்பிடுகிறீர்கள்?” தூத்பேடாக்கள், வறுத்த முந்திரிகள், ஸ்பெஷல் மிக்சர், ஆரஞ்ச் க்ரீம் பிஸ்கட்டுகள் முதலியன நிறைந்த தட்டொன்றை டீப்பாயுடன் சுமதி அருகில் நகர்த்தியவாறு கேட்டான், சுந்தர்.

“நோ ... தாங்க்ஸ் .... குடிக்க தண்ணீர் மட்டும் போதும்”

ப்ரிட்ஜிலிருந்து ஐஸ் வாட்டர் பாட்டில் எடுத்து சுமதியிடம் சுந்தர் நீட்ட இருவர் மனதிலும் ஏதோ ஜில்லென்ற உணர்வு ஏற்பட்டது.

=====================================

தொடர்ச்சி இப்போது இங்கே ......


“வாம்மா; நான் தான் மரகதம் ..... என் வீட்டுக்காரர் நாடுநாடாகச் சுற்றிக்கொண்டிருக்கும் பெரிய பிஸினஸ்மேன். குடும்ப விஷயங்களிலெல்லாம் தலையிட அவருக்கு நேரமே கிடையாது. இவன் என் ஒரே மகன் சுந்தர் ..... இவன் தான் எனக்கே தெரியாமல், அந்த விளம்பரம் கொடுத்திருக்கிறான்” என்று சொல்லி, முரட்டு நாற்காலி ஒன்று நிரம்பி வழியுமாறு கும்மென்று உட்கார்ந்து கொண்டாள் மரகதம். 

மரகதத்தைப் பார்த்ததும் மரியாதை நிமித்தமாக எழுந்து கைகூப்பி நின்ற சுமதியின் செயலால் மனதுக்குள் மகிழ்ந்த மரகதம் ”பரவாயில்லை ..... நீ உட்கார்ந்து கொள்” என்று சொல்லிவிட்டு, சுந்தரையும் வேறு ஒரு நாற்காலியில், வாயைத்திறக்காமல் அமைதியாக உட்காரும்படி, தன் ஒருமாதிரியான கண் அசைவுகளாலேயே உத்தரவு பிறப்பித்தாள், மரகதம்.

“உங்களுக்குப் பூர்வீகம் எந்த ஊரும்மா? சென்னையில் எவ்வளவு நாளா இருக்கீங்க?” சுமதியைப்பார்த்து மரகதம் தன் பேச்சை ஆரம்பித்தாள்.

“எங்க அப்பா அம்மாவின் பூர்வீகம் திருச்சிராப்பள்ளி பக்கம். ’ஆங்கரை’ கிராமம். ஆனால் நாங்கள் சென்னை வந்து 25 வருஷங்களுக்கு மேல் இருக்கும், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம், இதே சென்னையில் தான்” என்றாள் சுமதி.

இவள் பெற்றோர்களின் பூர்வீகம் திருச்சி என்று கேள்விப்பட்டதும் மரகதத்திற்கு சற்றே மகிழ்ச்சி ஏற்பட்டது. மரகதத்தின் பிறந்த வீடும் திருச்சி மாவட்டத்தில் உள்ள ’மணக்கால்’ என்ற கிராமம். 


திருச்சியிலிருந்து சுமதி சொன்ன ’ஆங்கரை’ என்ற கிராமத்தைத் தாண்டித்தான் ’லால்குடி’ வழியாக ‘மணக்கால்’ போக வேண்டும். 

சுமதி மேலும் தாமதிக்கவில்லை. தன்னைப்பற்றியும், தன் உத்யோகம் பற்றியும், தன் குடும்ப சூழ்நிலை பற்றியும், தாய், தந்தை, நான்கு தங்கைகள் முதலிய எல்லா விபரங்களையும் சுருக்கமாக எடுத்துரைத்தாள். 

“என் மகன், எனக்கே தெரியாமல், இப்படி ஒரு கேவலமான விளம்பரம் கொடுத்திருந்தும், ஒரு பெரிய குடும்பத்தில் மூத்த பெண்ணாக பிறந்துள்ள நீ, எந்த தைர்யத்தில் இங்கே புறப்பட்டு வந்தாய்?” மரகதம் தன் முதல் அம்பைத் தொடுத்தாள்.

இவரைப்போன்ற சிலர், இன்றுள்ள சாதகமான சூழ்நிலையில், உண்மையை முழுவதுமாக மறைத்துக்கூட, மிகச்சுலபமாகத் திருமணம் செய்து கொள்ள நினைக்கலாம்; 


எந்தவொரு மருத்துவப் பரிசோதனைகளோ, மருத்துவச் சான்றிதழ்களோ வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லாமலேயே, நம் நாட்டில் ஜாதகப் பொருத்தத்தையும், ஜோஸ்யர்கள் சொல்லும் பலன்களையும், கல்யாணத் தரகர்களின் வாய்ச்சவடால்களையும் மட்டுமே நம்பி, நிறைய திருமணங்கள் மிகச்சுலபமாக நடந்து முடிந்து விடுகின்றன;    


இதுபோன்ற ஏமாற்றும் உலகத்தில், இவர் தன் விளம்பரத்தில் உண்மையை உண்மையாக மறைக்காமல் ஒத்துக்கொண்டு கூறியிருந்தது, முதலில் என்னை மிகவும் கவர்ந்தது;  


மேலும் எயிட்ஸ் என்பது மிகவும் மெதுவாகப் பரவும் ஒரு ஆட்கொல்லி நோய். இன்றோ அல்லது நாளையோ கூட அதைப் பூரணமாக குணப்படுத்த நம் மருத்துவ விஞ்ஞானிகளால் மருந்து கண்டுபிடித்து விடக்கூடும். அந்த நம்பிக்கை எனக்கிருப்பதால், புறப்பட்டு வந்தேன்” என்றாள் சுமதி.

தனக்கு வரப்போகும் கணவன் ஒரு ஒழுக்கம் கெட்டவன் என்ற ”ஐ.எஸ்.ஐ.” முத்திரை உன்னை பாதிக்கவில்லையா?” மரகதத்திடமிருந்து பாய்ந்து வந்த இரண்டாவது அஸ்திரம் இது.

வயசுக்கோளாறினாலும், ஏதோவொரு ஆர்வக் கோளாறினாலும், கெட்ட நண்பர்களின் சேர்க்கையினாலும், அவர்களின் தவறான வழிகாட்டுதலாலும், சில ஆண்கள் அவசரப்பட்டு, தெரிந்தோ தெரியாமலோ இதுபோல, தவறான போகக்கூடாத இடங்களுக்குப் போய்விட்டு, தவறு என்றே தெரியாமல் தவறுகள் செய்துவிட்டு, பின்னால் அதற்காக வருந்தி, வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு, மீண்டும் அதுபோல தவறுகள் செய்யாமல் திருந்தி விடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்;  


இவர்களின் இத்தகைய செயலை நான் நியாயப்படுத்துவதாக தயவுசெய்து எண்ண வேண்டாம்; 


மழைகாலத்தில் நாம் தெருவில் நடந்து போகும் போது கால் வழுக்கியோ கல் தடுக்கியோ தவறுதலாக சேற்றிலோ சாக்கடையிலோ விழுந்து விடுவது இல்லையா? அதுபோலத்தான் இதுவும்; 


தெரிந்தோ தெரியாமலோ நம் கை அல்லது கால் விரல்களால் அசிங்கத்தைத் தொட்டு விடுவதில்லையா? அது போலத்தான் இதுவும்; 


அதற்காக அந்த அசிங்கத்தின் மேல் பட்ட நம் விரல்களை உடனே நாம் வெட்டி எறிந்து விடுகிறோமா!  ........   இல்லையே;


அதுபோலவே, இவர்களை நாம் ‘ஒழுக்கம் கெட்டவர்கள்’ என ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாது. எதிர்பாராமல் நம்மை மீறி, நடந்து முடிந்து விட்ட இதை, ஒரு சிறிய விபத்து என்று தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்; 


இது போன்ற விபத்துக்கள் ஆண்களுக்கு மட்டுமல்ல, ஒரு சில அப்பாவிப் பெண்களுக்கும் கூட திருமணத்திற்கு முன்பே துரதிஷ்டவசமாக ஏற்பட்டு விடுவதுண்டு, அதை நாம் ஒரு கெட்ட கனவு போல மறந்து விடுவதே நல்லது” மிகத்தெளிவாகவே பேசினாள், சுமதி.

“நீ இவனை மணந்தால் உனக்கும், உனக்குப்பிறக்கும் குழந்தைக்கும் கூட இந்த வியாதி பரவக்கூடும் அல்லவா?” இந்தக்கேள்வி அவளை எப்படியும் வீழ்த்தி விடும் என எதிர்பார்த்தாள், மரகதம்.

”பாதுகாப்பாக இருந்தால் அதைப் பரவாமலும் தடுக்கலாம். மருத்துவ விஞ்ஞானம் இன்று நன்கு வளர்ந்து விட்டது. அது மேலும் மேலும் வளரவே செய்யும். எந்தப் பிரச்சனைக்கும் அது நல்லதொரு தீர்வைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது”

பக்குவமாகவும் மிகவும் மென்மையாகவும் அதற்கு விடையளித்தாள், சுமதி.

“இன்றைய சூழ்நிலையில் இவனுடைய ஆயுட்காலம் மிகவும் குறைவு என்பது உனக்கே தெரியும். ஒருவேளை, உன்னை மணந்தபின், இவன் அற்ப ஆயுளில் போய் விட்டால், உன் நிலைமையை எண்ணிப் பார்த்தாயா?” மரகதம் தொடர்ந்தாள்.

“அவரைப்பெற்ற தாயாராகிய உங்கள் வாயால் அப்படியெல்லாம் தயவுசெய்து சொல்லாதீர்கள் .... அம்மா! 


நாம் யாருமே இந்த உலகில் நம் விருப்பதிற்காக, நாம் விருப்பப்பட்ட பெற்றோர்களுக்கு, நாம் விருப்பபட்ட ஊரில்,  நாம் விருப்பபட்ட நாளில் பிறந்து விடவில்லை;


அதுபோலவே நாம் நினைத்தாலும் கூட இந்த உலகத்தை விட்டு நம் விருப்பப்படி உடனடியாகப் போய் விடவும் முடிவதில்லை;  


மொத்தத்தில் பிறப்போ அல்லது இறப்போ நம் கையில் எதுவுமே இல்லை; 

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட, நாம் வாழ வாய்ப்பு கிடைத்துள்ள, இந்த மிகக்குறுகிய காலத்தில், நாம் நம்மால் பிறருக்கு என்ன உதவிகள் செய்திட முடியும் என்பதையே எப்போதும் சிந்திப்பவள் நான்;  


இந்த யதார்த்தத்திலேயே தினமும் எங்கள் மருத்துவ மனைக்கு வரும் பல நோயாளிகளுக்கு என்னால் முடிந்த மருத்துவ சேவைகள் செய்து வருகிறேன்” என்றாள் சுமதி.


தன் ஒவ்வொரு கேள்விகளுக்கும், சுமதி அளித்து வரும் பதில்களால் சற்றே ஸ்தம்பித்துப்போனாள், மரகதம்.


தொடரும்
     

[இந்தச் சிறுகதையின் அடுத்த பகுதி வரும் 20.12.2011 
செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்படும்]