என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 31 மே, 2011

மூ க் கு த் தி [ பகுதி 7 of 7 ] இறுதிப்பகுதி



முன்கதை முடிந்த இடம்:

அவனை நெருங்கி, “என்னப்பா தம்பி, முகமெல்லாம் வாடிப்போய் ஒரு மாதிரியாக இருக்கிறாய்! வாங்கிவந்த நகைகளில் எதையாவது தொலைத்து விட்டாயா? திருட்டுப்போய் விட்டதா? என்று விசாரித்தேன்.  ஆமாம் என்பது போலத்தலையை ஆட்டினான். எனக்கு அவனைப்பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.

----------------------------------------

“பஸ்ஸில் ஏறும் போதோ, பயணம் செய்யும்போதோ, இறங்கும் போதோ கும்பலில் என் மஞ்சள் பையிலும் எவனோ ப்ளேடு போட்டுக்கிழித்து என் நகைப்பெட்டியையும் திருடி விட்டானப்பா;  

ஆனால், ’இதுபோலெல்லாம் நடக்கலாம் ஜாக்கிரதை’ என்று நீ என்னை நல்லவேளையாக அந்தக்கடையிலேயே உஷார் படுத்தியிருந்ததால், ஓட்டலில் சாப்பிடும் போதே மூக்குத்தியையும், மொத்தப்பணத்தையும் பத்திரமாக என் சுருக்குப்பையில் போட்டு வேட்டித்தலைப்பில் வைத்து இறுக்க முடிந்து கொண்டுவிட்டேன்; 

பஸ்ஸில் பிட்பாக்கெட் போனது என் மஞ்சள் பையிலிருந்த காலி மூக்குத்தி டப்பா மட்டும் தான்.  அந்தக்காலி நகைப்பெட்டி போனால் போகட்டும் என்று என் மனதை சமாதானம் செய்துகொண்டு விட்டேனப்பா; 

என்னைச் சரியான நேரத்தில் உஷார்ப்படுத்திய நீ இவ்வாறு நகையைத்தொலைத்து விட்டு வந்து நிற்கிறாயேயப்பா!”என்று என் வருத்தத்தைத் தெரிவித்தேன்.

பிறகு ஆதரவாக அவன் தோளைத் தட்டிக்கொடுத்து, “சரி ..... இப்போ என் வீட்டுக்கு வந்து ஏதாவது சாப்பிட்டுவிட்டு, அல்லது மோர் தண்ணியாவது குடித்துவிட்டுப்பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஒரு புகார் எழுதிக்கொடுத்துவிடு; உன் நல்ல குணத்திற்கு, உன் காணாமல் போன நகை நிச்சயம் கிடைத்துவிடும்” என்று ஆறுதல் சொல்லி என் வீட்டுக்கு அவனை அழைத்தேன். 

என் அழைப்பை ஏற்க மறுத்த அவன், கோபமாகவும், வருத்தமாகவும், என்னிடமிருந்து நகர்ந்து சென்றுவிட்டான்.   

இந்தக்காலப் பயலுகளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.நல்ல பயலுகளாகவே நடந்து கொள்கிறார்கள். ஆனால் இவன்களுக்கு பதட்டம் ஜாஸ்தியாக இருக்கே தவிர,  பாவம் .... கவனம் பத்தாது என்று நினைத்துக்கொண்டேன். 

பிறகு நானும் ஒரு வழியாக, வெய்யிலுக்கு குடையைப்பிடித்துக்கொண்டு, மேலத்தெருவின் நடுவில் இருந்த, என் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டேன்.  

புது மூக்குத்தியையும், மொத்தப்பணத்தையும் பத்திரமாக வைக்க வேண்டிய இடத்தில் வைத்துப்பூட்டினேன். 

அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டைப் பையனையே நினைத்துக்கொண்டிருந்ததில், எனக்கு எந்த வேலையுமே ஓடவில்லை. மனதுக்கு மிகவும் வேதனையாகவே இருந்து வந்தது.

மாலை வேளையில் வழக்கம்போல மெயின் ரோட்டுப்பக்கம் இருந்த பிள்ளையார் கோயிலுக்கு, கையில் ஒரு முழுத்தேங்காயை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். 

அந்தப்பிள்ளையாரிடம், “இன்று காலையில் மட்டும் எனக்குப்பழக்கமாகி, நகை திருட்டுப்போகாமல் இருக்க என்னை சரியான நேரத்தில் உஷார்படுத்தி, வயதான எனக்கு அந்த கும்பலான பஸ்ஸில் உட்கார இடம் போட்டுக்கொடுத்து பலவழிகளில் உதவிசெய்த மனிதாபிமானமிக்க,  அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டை அணிந்திருந்த பையனுக்கு, அவன் தொலைத்ததாகச் சொல்லும் நகைகள் திரும்பக்கிடைத்து, அவனும் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என மனதார வேண்டிக்கொண்டேன். 

நான் வாங்கிவந்த புதிய மூக்குத்தி பத்திரமாக என் வீடு வந்து சேர்ந்ததற்கு, அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டை போட்டப்பையன் ரூபத்தில் வந்து உதவிய பிள்ளையாருக்கு ஒரு சதிர் தேங்காய் அடித்தேன்.

நான் உடைத்த அந்தத் தேங்காய் நன்கு தூள்தூளாக சிதறி உடைந்து விட்டதா என்று பார்க்க, அங்கிருந்த சதிர் தேங்காய் உடைக்கும் தொட்டியைக் குனிந்து நோக்கினேன்.  

அதில் நான் உடைத்த தேங்காய் சிதறல்கள் மட்டுமின்றி, எனக்கு அந்தக்கடையில் மூக்குத்தி போட்டுக்கொடுத்திருந்த அந்த மிகச்சிறிய நகைப்பெட்டியும் உடைந்திருக்கக்கண்டேன்.   



கஷ்டப்பட்டு ப்ளேடு போட்டு தான் திருடிய நகைப்பெட்டியில் நகை ஏதும் இல்லையே என்ற கடுப்பில், அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டை அணிந்திருந்த பையன் தான், இதை இங்கு போட்டு உடைத்திருப்பானோ என்ற ஒரு சிறு சந்தேகம் எனக்குள் இப்போது எழுந்தது.  

அந்த சிறிய நகைப்பெட்டிக்குள் மூக்குத்தி இல்லாததால் ஏமாற்றமடைந்த அவன், அந்த நகை எங்குதான் மறைந்து போயிருக்கும் என்று தெரிந்துகொள்ளும் நோக்கத்தில் தான் என் வருகைக்காக இந்தப்பிள்ளையார் கோயில் வாசலில், நின்று கொண்டிருந்திருப்பானோ? என நினைத்து, ஒன்றும் புரிபடாமல் குழம்பிய நான் அந்தப்பிள்ளையாரை நோக்கினேன்.


மற்ற யாரையுமே தவறுதலாக நினைக்கத் தெரியாத வெள்ளந்தியான என்னை நினைத்து அந்தப்பிள்ளையார் அழுதாரோ அல்லது ஆனந்தக்கண்ணீர் விட்டாரோ! திடீரென பலத்த இடி மின்னலுடன் பெரும் மழையொன்று பெய்யத்தொடங்கியது.


-o-o-o-o-o-o-o-o-o-
முற்றும் 
-o-o-o-o-o-o-o-o-o-










[ இந்தச்சிறுகதை 19.05.2010 தேதியிட்ட “தேவி” வார இதழில் வெளியானது] 

திங்கள், 30 மே, 2011

மூ க் கு த் தி [ பகுதி 6 of 7 ]



முன்கதை முடிந்த இடம்:

வயிறு பசிப்பதுபோல இருந்தது. காலையில் நீராகாரம் மட்டும் குடித்துவிட்டு கிராமத்திலிருந்து, வீட்டைவிட்டுப்புறப்பட்டது.  மதியம் இப்போது பன்னிரெண்டரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. எதிர்புறம் இருந்த ஓட்டலுக்குப்போய் ஒரு ஓரமாக அமர்ந்து, வயிற்றுக்கு சாப்பிட ஏதோ ஆர்டர் கொடுத்தேன்.

---------------------------------

அந்த ஓட்டலில் எனக்கு முன்பு ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு, கைகழுவிக்கொண்டிருந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன் என்னைப்பார்த்து புன்சிரிப்பை உதிர்த்தவாறே,  ஓட்டலிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தான்.  

வயசுப்பையன் பாவம், அவனுக்கு என்னைப்போலவே பசி எடுத்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். ஓட்டலில் அதிகம் கும்பல் இல்லாமல் இருந்ததால் மீண்டும் நகையை பையிலிருந்து எடுத்துப்பார்த்து, பத்திரப்படுத்திக்கொண்டேன்.

ஓட்டலுக்கான பில்லுக்கும், திரும்பிப்போக பஸ் செலவுக்கும் மட்டும் வேண்டிய பணத்தைத் தனியாக சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன். 

அடிக்கும் வெய்யில் என் தலையைத்தாக்காமல் இருக்க, குடையை விரித்தபடி, பொடிநடையாக நடந்து, பேருந்து நிலையம் வந்து விட்டேன்.  அங்கும் ஒரே கும்பல். எங்கள் ஊர் பக்கம் செல்லும், ஒரு பஸ் உட்கார இடமில்லாமல் நிறை மாத கர்ப்பிணி போல, நிரம்பி வழிந்து, மிகவும் தள்ளாடியவாறு புறப்படத்தயார் ஆனது. 

நான் அடுத்த பஸ்ஸில் செல்லத்தீர்மானித்து, கும்பலோடு கும்பலாக நிற்கும் போதே, அடுத்த பஸ்ஸும் வந்துவிட்டது. 

டவுனில் வெய்யில் அடிக்கும் போதே மழையும், [கோடைமழை] படபடவென்று பெரும் தூரலாய்ப்போட்டது.

புளியங்கொட்டைக்கலர் சட்டை போட்டப்பையன் அப்போதும் திடீரென என்முன் தோன்றி, என் குடையை உரிமையுடன் வாங்கி, ஜன்னல் பக்கமாக அந்த பஸ்ஸில் ஒரு இடம்போட்டுவிட்டு, தொங்கவிட்ட மஞ்சள் பையுடன் இருந்த என்னை, அந்தக்கும்பலில் ஏற்றிவிட, படிக்கட்டில் இருந்த கூட்டத்தாரை, தன் பலம் கொண்டமட்டும் விலக்கி உதவியும் செய்தான்.

அவனுக்கு வேறு ஏதோ அவசர வேலை இருப்பதாகவும், அடுத்த பஸ்ஸில் வருவதாகவும் சொல்லியவன், நான் குடை வைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து விட்டேனா என்று உறுதி செய்துகொண்ட பிறகே புறப்பட்டான்.

அந்த பஸ் ஸ்டாண்டு கும்பலில் அவன் மறையும் வரை, நன்றியுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்த என்னை, என் அருகில் அமரவந்த ஒரு இரட்டைநாடி மனிதரின் “குடையை மடக்கி நேராக வைத்து நகர்ந்து உட்காருஙக” என்ற குரல் திரும்பச்செய்தது.

பஸ் எங்கள் கிராமத்தை நெருங்குவதற்கு சற்று முன்னர் நான் எழுந்து படிக்கட்டுப்பக்கம் போய் இறங்குவதற்கு வசதியாக நின்று கொண்டேன். 

எங்கள் கிராமத்தில் மட்டும் மழைபெய்த அடையாளமே எதுவும் தெரியாமல், சுள்ளென்று வெய்யில் அடித்துக்கொண்டிருந்தது.

பஸ்ஸிலிருந்து இறங்கிய நான், எங்கள் ஊர் ரோட்டின் மேல் இருந்த பிள்ளையார் கோயில் அருகில், எதையோ பறிகொடுத்ததுபோல நின்று கொண்டிருந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையனை மீண்டும் கண்டேன். 

எனக்கு முன்னால் இவன் எப்படி இங்கு வந்துசேர்ந்தான்? ஒருவேளை டூ வீலரில் யாருடனாவது தொத்திக்கொண்டு ஸ்பீடாக வந்திருப்பானோ என்ற நினைப்பில் அவனை நெருங்கினேன்.

“என்னப்பா தம்பி, முகமெல்லாம் வாடிப்போய் ஒரு மாதிரியாக இருக்கிறாய்! வாங்கிவந்த நகைகளில் எதையாவது தொலைத்து விட்டாயா? திருட்டுப்போய் விட்டதா? என்று விசாரித்தேன்.  

ஆமாம் என்பதுபோலத்தலையை ஆட்டினான். எனக்கு அவனைப்பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.


தொடரும்




{ நீங்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தச்சிறுகதையின் இறுதிப்பகுதி [பகுதி 7 / 7] நாளை செவ்வாய்க்கிழமை 31.05.2011 அன்று வெளியிடப்படும் }

ஞாயிறு, 29 மே, 2011

மூ க் கு த் தி [ பகுதி 5 of 7 ]



முன்கதை முடிந்த இடம்:

”அதோ அந்தப்பக்கம் போய் பேக்கிங் செக்‌ஷனில் பில்லைக்காட்டுங்கள், நகையைத்தருவார்கள்” என்றார். அங்கு பார்த்தால் அங்கேயும் ஒரே கூட்டமாக ஜனங்கள்.   


-------------------------------------

அந்தத்தரைத்தளத்தின் கிழக்குப்பகுதி முழுவதும் மோதிரங்கள் வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது.  மேற்குப்பகுதியில் கேஷ் கவுண்டர் ஒரு மூலையில், வாயிற்கதவின் அருகே அமைந்திருக்க, மற்றொரு மூலையில் பேக்கிங் + பார்ஸல் ஒப்படைத்தல் நடைபெற்று வந்தது.  

மோதிரம் பார்க்க வந்த ஒருவர் எழுந்திருக்க, அவர் அமர்ந்திருந்த ப்ளாஸ்டிக் ஸ்டூல் ஒன்றைத்தாவிப்பிடித்து, அதில் நான் அமர்ந்து கொண்டேன். 

சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டேன்.   பணம் கட்டிய இடத்தில் நெடுநேரம் நின்றதில் என் கால்கள் கடுத்தன. மீண்டும் பார்ஸல் வாங்கும் பகுதியில் நிற்க சற்று தெம்பு வேண்டுமே!

புளியங்கொட்டை கலர் சட்டைப்போட்ட பையன் மீண்டும் என்னிடம் வந்தான். 

“ஐயா, வந்த காரியம் முடிந்து விட்டதா? பணம் கட்டிப்பொருளை வாங்கி விட்டீர்களா?” அன்புடன் விசாரித்தான்.

“பணம் கட்டிவிட்டேன், தம்பி.  மூக்குத்தி தான் வாங்கணும். ஒரே கூட்டமாக உள்ளது. அதனால் சற்று நேரம் உட்கார்ந்து விட்டேன்” என்றேன்.

“மெதுவாகப்பார்த்து வாங்கி ஜாக்கிரதையாக வீட்டுக்கு எடுத்துட்டுப்போங்க, எங்கு பார்த்தாலும் கும்பலாகவும், திருட்டு பயமாகவும் உள்ளது” என்று கூறி விடை பெற்றுச்சென்றான். 

நம்ம கிராமத்துப் பக்கப்பையன், நல்ல பையன், நல்ல நேரத்தில் எச்சரித்து விட்டுபோகிறான் என்று நினைத்துக்கொண்டே, பொருட்கள் பார்ஸல் வாங்கும் பகுதியில் போய் நின்று கொண்டேன்.

கூட்டம் குறைவதாகவே தெரியவில்லை. ஒருவர் பின் ஒருவராக க்யூ முறையில் ஒழுங்காக வாங்கிச் செல்வதாகவும் தெரியவில்லை.

மேலும்மேலும் பில்லுக்கான பணம் கட்டிவிட்டு வருபவர்கள் கூட்டமும் சேர்ந்து கொண்டே இருக்கிறது.  

நகையைப்பேக் செய்து கொடுக்கும் முன்பு, மீண்டும் ஒருமுறை தராசுத்தட்டில் வைத்து நிறுத்து, பில்லுடன் சரிபார்த்து, அதற்கான சிறிய பெரிய நகைப்பெட்டிகளில் போட்டு, கிஃப்ட் ஐட்டமாக பில்லில் உள்ள தொகைக்குத்தகுந்தபடி, பலவிதமான ஜிப் பைகள், எவர்சில்வர் பாத்திரங்கள், ஹேண்ட் பேக், சூட்கேஸ் முதலியன தரப்பட்டு வந்தன.

90000 ரூபாய்க்கு நகைகள் வாங்கிய ஒருவர், தனக்கு சூட்கேஸ் வேண்டும் என்று மன்றாடிக்கொண்டிருந்தார். 

ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகைகள் வாங்கினால் தான் சூட்கேஸ் தருவோம் என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள். 

300 ரூபாய் மதிப்புள்ள அந்த சூட்கேஸை எப்படியும் கிஃப்ட் பொருளாகப் பெற்றுவிடத்துடித்த அந்த ஆசாமி, ஏற்கனவே 90000 ரூபாய்க்கு நகைகள் வாங்கிய பின்னும், மேலும் 10000 ரூபாய்க்கு நகைகள் வாங்க ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் என தன்னிடமிருந்த எல்லாவற்றையும் குடைந்து ஏதேதோ கணக்குப்போட்டுக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்கவே எனக்கு பரிதாபமாக இருந்தது. 

கிஃப்ட் பொருட்களை இது வேண்டும் அது வேண்டும் என்று மாற்றி மாற்றி கேட்பவர்களால் மேலும் தாமதம் ஆகிக்கொண்டிருந்தது அந்தப்பகுதியின் வேலைகள். 

ஒருவழியாக பெரியவர், வயசானவர் என்ற தகுதியினால் ஒரு சிலர் இரக்கப்பட்டு,  எனக்கு முன்னுரிமை அளித்து,என் மூக்குத்தியை நான் பெற்றுக்கொள்ள என்னை முன்னே அனுப்பினர். 

எனக்கான நகைப்பெட்டியை, ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பையில் போட்டு, அதனுடன் ஜிப் வைத்த ஒரு சிறிய மணிபர்ஸ் போல ஏதோவொன்று போட்டு, பில், கியாரண்டி கார்டு, வேறு ஏதோ மாதாந்தர நகை சேமிப்புத்திட்டம் பற்றிய வழவழப்பான விளம்பரத்தாள் முதலியன போடப்பட்டு, என் பெயரைச்சொல்லி அழைத்து, ஒரு வழியாக என்னிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். 

அதில் போடப்பட்டுள்ள அடசல் பேப்பர்களுடன் முக்கியமான அந்த சிறிய நகைப்பெட்டி உள்ளதா, அதற்குள் முக்கியமாக அந்த மூக்குத்தியும் உள்ளதா என ஒருமுறை சரிபார்த்துவிட்டு, அனைத்தையும் என் மஞ்சள் பைக்குள் திணித்துக்கொண்டு பத்திரமாகக் கடையைவிட்டு வெளியே வந்தேன். 

வயிறு பசிப்பதுபோல இருந்தது. காலையில் நீராகாரம் மட்டும் குடித்துவிட்டு கிராமத்திலிருந்து, வீட்டைவிட்டுப்புறப்பட்டது.  

மதியம் இப்போது பன்னிரெண்டரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. எதிர்புறம் இருந்த ஓட்டலுக்குப்போய் ஒரு ஓரமாக அமர்ந்து, வயிற்றுக்கு சாப்பிட ஏதோ ஆர்டர் கொடுத்தேன். நல்லவேளையாக ஓட்டலில் இப்போது கும்பல் அதிகமில்லை.


தொடரும்



அன்புள்ள நண்பர்களே !

ஓர் வேண்டுகோள்

நேற்று 28/5/11 சனிக்கிழமை மதியம் முதல் என்னுடைய Comment Box Open ஆகாமல் உள்ளது; அதனால் பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை என்று பலரும் ஈ.மெயில் மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.

என்னாலும் பின்னூட்டம் கொடுத்துள்ளவர்களுக்கு பதில் கொடுக்கவோ, நன்றி தெரிவிக்கவோ முடியாத நிலை தான் உள்ளது.

இந்தப்பிரச்சனைக்கு தீர்வு ஏதும் உண்டா? இது விஷயமாக நான் மேலும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு ஆலோசனை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என் e-mail ID   :     valambal@gmail.com 

அன்புடன் தங்கள்,
வை.கோபாலகிருஷ்ணன்

சனி, 28 மே, 2011

மூ க் கு த் தி [ பகுதி 4 of 7 ]



முன்கதை முடிந்த இடம்:


... அப்படியே மூக்குத்தி போட்டாலும், ஒரே ஒரு சிறியகல் வைத்தது போதும் என்கிறார்கள்.  எட்டுக்கல்லு பேஸ்திரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்குன்னு சொன்னதெல்லாம் அந்தக்காலம் ஐயா” என்றான்.   

----------------------------------------

மிகவும் கஷ்டப்பட்டு, இந்தக்கடையின் நாலாவது மாடிக்கு வந்துவிட்ட நான், வேறு கடைகளுக்குப்போய், வெயிட் உள்ள மூக்குத்தி இருக்குமா என விசாரிக்க விரும்பாமல், அங்கிருந்தவற்றிலேயே சற்று பெரியதாக உள்ள ஒரு மூக்குத்தியை எடுத்து எவ்வளவு விலையாகும் என்றேன். 

எடைபோட்டுப்பார்த்த அவன், ஒரு கிராமுக்கு சற்றே, ஒரு குந்துமணியளவு குறைவாக உள்ளதாகச்சொல்லி,  கூலி, சேதாரம், விற்பனை வரி, சேவை வரி என்று ஏதேதோ கூட்டிக்கழித்து பெருக்கி வகுத்து, ரூபாய் 2022 ஆகும் என்றான். 

இதே பணத்துக்கு என் பொஞ்சாதிக்கு 10 பவுனில் இரட்டைவடம் சங்கிலி ஒன்று 1973 இல் வாங்கிய ஞாபகம் வந்தது. 

அப்போது ஒரு பவுன் அதாவது 8 கிராம் விலை ரூபாய் 200 க்குள் தான். ஒரு கிராம் தங்கம் வெறும் 25 ரூபாய்க்குள் தான்.  

38 வருடங்களில் 80 மடங்கு தங்கம் விலை ஏறியுள்ளது என்பதை என்னால் மனக்கணக்காகப் போடமுடிந்தது, கையிருப்பில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான். 

எந்தப்பொருள் தான் விலை ஏறாமல் உள்ளது? வருமானமும் ஏறுது! போட்டிபோட்டுக்கொண்டு விலைவாசியும் ஏறுது! 

அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்துக்கும் தான் சாண் ஏறினால் முழம் சறுக்குவதாக ஒருவித ஏக்கப்பெருமூச்சு ஏற்படுகிறது.

“பில் போட்டுவிடலாமா? வேறு ஏதாவது பார்க்கிறீங்களா?” கடைக்காரன் என்னிடம் கேட்டான். ரூபாய் ஐயாயிரம் ஆனாலும் உறுதியாக கெட்டியாக மூக்குத்தி அமையவில்லையே என்று ஒரு மனக்குறை இருப்பினும் வேறுவழியில்லாமல், ”பில் போட்டுவிடுப்பா” என்று சொல்லி பணம் எடுக்க என் மஞ்சள் பைக்குள் கையை விட்டேன். 

பட்டத்தின் வால் போன்ற ஏதோவொரு கம்ப்யூட்டர் பில்லை, கார்பன் பேப்பருடன் ஒரு மெஷினிலிருந்து எடுத்து, என் பெயரைக்கேட்டு அதில் அதை எழுதி, என் கையில் கொடுத்தான். நான் பணத்தை எடுத்து அவனிடம் நீட்டப்போனேன்.

”கீழே கிரவுண்ட் ப்ஃளோரில் உள்ள கேஷ் கவுண்டரில் போய், இந்த பில்லைக்காட்டி  பணத்தைக்கட்டுங்கள். உங்கள் மூக்குத்தியும் அங்கே வந்துவிடும். அங்கேயே நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்” என்றான். 

பத்திரமாக பணத்துடன் என் மஞ்சள் பையையும், குடையையும் எடுத்துக்கொண்டு, தட்டுத்தடுமாறி, லிஃப்டில் மீண்டும் ஏறி கீழ்த்தளத்திற்கு வந்தேன்.

புளியங்கொட்டைக்கலரில் முழுக்கைச்சட்டை அணிந்த ஒருவன் என் எதிரில் தென்பட்டான். அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். 

“யாரு தம்பி” என்றேன். 

“நம்ம ஊரு பக்கம் தான். நீங்க பஸ் ஏறிவரும்போதே பார்த்தேன்” என்றான்.

எனக்கு பஸ்ஸில் உட்கார இடம் கொடுத்து எழுந்து கொண்டான் ஒருவன், அவனாக இருக்குமோ? என்று நினைத்துக்கொண்டேன். சரியாக நினைவுக்கு வரவில்லை. பிறகு அவன் ஒருவித புன்சிரிப்பை உதிர்த்தவாறே என்னிடமிருந்து விடைபெற்றுச்சென்றான்.

கேஷ் கவுண்டரில் ஒரே கூட்டம் அலை மோதியது. நான் அங்கு பணம் கட்ட நின்ற 10 நிமிடங்களில் சுமார் எட்டு லட்சங்களுக்கு மேல் கல்லாவில் வசூலாகியதை கவனித்தேன்.

இதேபோல கணக்குப்போட்டால் ஒரு நாளைக்கு 4 முதல் 5 கோடி வரை வியாபாரம் இருக்கும் என்று கணக்கிட முடிந்தது என்னால்.  

பலகோடிகள் முதல்போட்டு, பல பேர்களுக்கு வேலை கொடுத்து, சுறுசுறுப்பாக இயங்கும் பெரியதொரு நிறுவனம் அல்லவா. இவ்வாறு தினம் ஐந்து கோடியாவது வியாபாரம் ஆனால்தான் அவர்களுக்கும் கட்டுப்படியாகும் என்றும் எனக்குத்தோன்றியது. 

ஒருவழியாக என் பில்லுக்கான பணத்தைச்செலுத்தினேன். பெரிய மனதுசெய்து ரூ. 2000 மட்டும் வாங்கிக்கொண்டு, ரூபாய் 22 ஐத்தள்ளுபடி செய்துவிட்டு, படபடவென்று ஏதேதோ ரப்பர் ஸ்டாம்புகள் குத்தி என் பெயரைச்சொல்லி பில்லை நீட்டினார், சிரித்த முகத்துடன், எல்லா விரல்களிலும் தங்கத்திலோ வைரத்திலோ மோதிரம் அணிந்திருந்த அந்தக்கடை முதலாளி . 

“நகை எங்கே?” என்று நான் அவரிடம் கேட்டேன்.  

”அதோ அந்தப்பக்கம் போய் பேக்கிங் செக்‌ஷனில் பில்லைக்காட்டுங்கள், நகையைத்தருவார்கள்” என்றார். 

அங்கு பார்த்தால் அங்கேயும் ஒரே கூட்டமாக ஜனங்கள்.     


தொடரும்


{இந்தச்சிறுகதையின் தொடர்ச்சி [பகுதி 5/7] நாளை ஞாயிற்றுக்கிழமை 29.05.2011 அன்று வெளியிடப்படும் }

வியாழன், 26 மே, 2011

மூ க் கு த் தி [ பகுதி 3 of 7 ]



முன்கதை முடிந்த இடம்:

லிஃப்டில் ஏறுவதற்கே ஒரு நீண்ட க்யூ வரிசை காத்திருந்தது.  பேசாமல் படி ஏறிச்சென்றுவிடலாமா என்று நான் நினைத்தபோதே, “அய்யா, பெரியவரே! சீக்கரம் நகர்ந்து போங்க, லிஃப்ட் வந்து விட்டது” என்று சொல்லி என்னை அந்த லிஃப்ட் ரூமுக்குள் தள்ளிக்கொண்டு போய்விட்டனர், அங்கு கூடியிருந்த ஜனங்கள்.

----------------------------------------

“செயின், சங்கிலி, கிஃப்ட் அயிட்டம் பார்க்கப்போகிறவர்கள் எல்லாம் வெளியே வாங்க” என்றார், லிஃப்ட் ஆபரேட்டர், முதல்மாடி வரும்போது. 

லிஃப்டில் இருந்த பெண்கள் அவரவர் கழுத்தில் இருந்த செயின் சங்கிலி பத்திரமாக உள்ளதா என்று தடவிப்பார்த்துக்கொண்டனர்.

“நெக்லஸ் பார்க்க யாராவது இருந்தா தயவுசெய்து வெளியே வாங்க”  என்றார் இரண்டாவதுமாடி வரும்போது.  

“தங்க வளையல், ப்ரேஸ்லெட்டுகள்” என்றார் மூன்றாவது மாடியில் லிஃப்ட் கதவைத்திறக்கும்போது. 

“தோடு முக்குத்தி” என்றார் நான்காவது மாடியில். ஒவ்வொரு மாடி வரும்போதும் லிஃப்டில் பலர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர்.  நான்காவது மாடியில் நான் லிஃப்டை விட்டு வெளியே வந்த பிறகும், சிலர் ஐந்தாவது மாடிக்குச்செல்ல லிஃப்டினுள் இருந்தனர். 

அவர்கள் அனைவரும் ஏதாவது வெள்ளிச்சாமான்கள் பார்க்கவோ அல்லது வாங்கவோ செல்பவர்களாக இருக்கலாம் என்று தோன்றியது, எனக்கு.

நாலாவது மாடியில் இருந்த விற்பனைப்பிரிவுக்குள் நுழைத்தேன், நான். அங்கும் ஒரே கூட்டம். ஒருபுறம் காதுத்தோடுகள். மறுபுறம் மூக்குத்தி வகையறாக்கள்.  

உட்கார இடமில்லாமல் ஒருவர் முதுகை ஒருவர் பார்த்த வண்ணம், உட்கார்ந்து சிலரும், நின்றுகொண்டே பலரும் ஏதேதோ நகைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

குறுக்கும் நெடுக்கும் ஓடியாடும் சிறுவர் சிறுமியர்களும், ஒருசில கைக்குழந்தைகளும் வேறு ஆங்காங்கே தென்பட்டனர்.

பொறுமையிழந்த நானும் முண்டியடித்தபடி மூக்குத்தி இருக்குமிடம் நெருங்கி, அப்போதுதான் காலியான ப்ளாஸ்டிக் ஸ்டூல் ஒன்றில், மஞ்சள் பையையும், மடக்கிய குடையையும் பத்திரமாகப்பிடித்தபடி, அமர்ந்து கொண்டேன்.

“பெருசுக்கு என்ன வேண்டும்ன்னு கேட்டு சீக்கரம் அனுப்புப்பா” சிறுசுகள் (வயதுப்பெண்கள்)  கூட்டத்திற்கு நெடுநேரமாக மூக்குத்திகளைக் காட்டிக்கொண்டிருந்த ஒருவன், மற்றொருவனிடம் சொன்னான்.

சுமார் ஐம்பது மூக்குத்திகள் பதித்த பலகையொன்று,  அந்த கண்ணாடி மேஜை மீது ஒரு துணிவிரிக்கப்பட்டு, அதன் மேல் வைக்கப்பட்டு, என் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.     

ஒத்தைக்கல்லு, மூணுகல்லு, அஞ்சுகல்லு, ஆறுகல்லு, எட்டுக்கல்லு, முழுவதும் வெள்ளைக்கல்லு, மேலே ஒன்று மட்டும் சிவப்புக்கல்லு, என பலவகைகள் இருந்தன. 

அவற்றில் ஒன்றிரண்டை கையில் எடுத்துப்பார்த்தேன். மிகவும் லேஸானதாக வெயிட் இல்லாமல், காற்றில் பறந்து விடும்போல இருந்தன.

“இரண்டு கிராமுக்கு மேல், நல்ல வெயிட் உள்ளதாக, உறுதியாக உள்ளதாகக் காண்பிப்பா” என்றேன்.

“இப்போதெல்லாம் யாருங்க வெயிட் உள்ள மூக்குத்தியாக விரும்புறாங்க? மூக்குக்கும் மூக்கோட்டைக்கும் சிரமம் இல்லாமல், மூக்குத்தி போட்டுள்ளோமா இல்லையா என்றே தெரியாதபடி, வெயிட் இல்லாமல் இருக்கணும்னு தான் சொல்றாங்க;  

சில நவநாகரீகப்பெண்மணிகள், மூக்கில் ஓட்டையே போடாமலும், மூக்குத்தியே அணியாமலும் இருந்து விடுகிறார்கள்; 

அப்படியே மூக்குத்தி போட்டாலும், ஒரே ஒரு சிறியகல் வைத்தது போதும் என்கிறார்கள்; 

’எட்டுக்கல்லு பேஸ்திரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்குன்னு’ சொன்னதெல்லாம் அந்தக்காலம் ஐயா” என்றான்.   


தொடரும்


[ இந்தக்கதையின் தொடர்ச்சி ( பகுதி 4 / 7 ) நாளை மறுநாள் சனிக்கிழமை 28.05.2011 அன்று வெளியிடப்படும் ]