என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 31 மே, 2014

VGK 18 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - ஏமாற்றாதே ! ஏமாறாதே !!



’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 18 - ’ ஏமாற்றாதே .... ! ஏமாறாதே .... !! 


இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-18.html






 

  

 



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து


















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 








    



இனிப்பான இரண்டாம்  பரிசினை 


வென்றுள்ளவர்  இருவர் 



அதில் ஒருவர்



திருமதி



 கீதா மதிவாணன்  


அவர்கள். 





வலைத்தளம்: கீதமஞ்சரி

geethamanjari.blogspot.in






 



இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள


திருமதி



 கீதா மதிவாணன்  


அவர்களின் விமர்சனம் இதோ:




ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இங்கு ஒரு பெரிய மனிதர் இறைவனைக் குளிர்விக்க ஒரு ஏழையை அழவைக்கிறார். அழுகிய தேங்காயில் அவர் அழவைத்துவிட்டு வந்த கிழவியின் உருவம் தெரிய, பெரிய மனிதரின் சின்ன புத்தி திருந்துவதாக கதாசிரியர் காட்டுகிறார். உண்மையில் இப்படிப்பட்ட கஞ்சமகாப்பிரபுக்களை திருத்துவது மிக அரிதான ஒரு காரியம். சொல்லப்போனால் மனசாட்சியில்லாமல்மறுபடி கிழவியிடம் சென்று உன்னிடம் வாங்கிய காய்களுள் ஒன்று அழுகல் என்று காட்டி அதற்கு ஈடாக மற்றொரு காயை வாங்கிவரக்கூடியவர்கள் அவர்கள்.  

பிள்ளையாருக்கு உடைத்தக் காய்களுள் ஒன்று அழுகலாக இருந்திருந்தால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகிவிட்டோமே என்ன தண்டனை கிடைக்குமோ என்ற பயத்தில் மனந்திருந்த (அப்போதைக்கு மட்டுமாவது) வாய்ப்புண்டு. ஆனால் பிள்ளையாருக்கு வேண்டிக்கொண்டு உடைத்த காய்களில் ஒன்றுகூட அழுகல் இல்லை. அதாவது பேரம் பேசி வாங்கிய பன்னிரண்டு காய்களும் நல்ல தரமான காய்கள். வீட்டில் தனக்காக உபயோகிக்கவிருந்த காய் மட்டுமே அழுகல். அதாவது திருட்டுத்தனமாய் எடுத்த காய். அதனால் கடவுள் தனக்கு தக்க தண்டனை கொடுத்துவிட்டதாக நினைக்கிறார். ஆனால் இனியும் இதுபோன்ற தவறை செய்யாமல் திருந்துவாரா என்பது சந்தேகமே.

பெரிய மனிதர்கள் என்னும் போர்வைக்குள் வலம் வரும் இதுபோன்ற சிறிய மனமுடைய மனிதர்களின் நடவடிக்கைகளை அழகாகத் தெளிவாகக் காட்டியுள்ளார் கதாசிரியர். பிரமாண்டமான குளிரூட்டப்பட்ட கடைகளிலோ உணவகங்களிலோ, மான அவமானத்துக்கு பயந்தோ அல்லது தங்கள் செல்வச்செழிப்பைக் காட்டிக்கொள்ளவோ அவர்கள் சொல்லும் விலையை என்ன ஏது என்று எதிர்கேள்வி கேட்காமல் வாயை மூடிக்கொண்டு வாங்கி வருபவர்கள், அன்றாடங்காய்ச்சிகளான ஏழை மக்களிடம்… உழைத்துக் களைத்து சோர்ந்துபோனவர்களிடம் பேரம் பேசுவது கொடுமையிலும் கொடுமை. அதைவிடக் கொடுமை பேரம் பேசி வாங்கிய பொருட்களோடு திருட்டுத்தனமாய் இன்னும் சிலவற்றை எடுத்துவருவது. இதனால் என்ன சாதித்ததாய் நினைக்கிறார்கள் அவர்கள்? கொழுத்த பணம் படைத்த முதலாளிகளுக்கு கோடி கோடியாய் வருமானம் ஈட்ட வழிபண்ணிவிட்டு, ஒரு ஏழையின் வீட்டில் ஒரு வேளை எரியும் அடுப்பிலும் தண்ணீர் ஊற்றி அணைத்துவிடுவதுதான் சாதனையா?

சக மனிதர்பால் கருணை வேண்டாம், அவர்களுடைய வறுமை கண்டு இரங்கவும் வேண்டாம், ஆனால் அவர்களுடைய உழைப்பையும் உழைப்பின் பலனையும் உறிஞ்சாமல் இருக்கலாம் அல்லவா? ஆனால் இந்தக்கதையில் குறிப்பிடப்படுபவருக்கு அந்த அடிப்படை சிந்தனை கூட இல்லை என்பது கதையின் மூலம் நமக்கு நன்கு விளங்குகிறது. பலனை எதிர்பார்த்து வேண்டுதல் வைத்து கடவுளுக்கு காணிக்கையாய் உடைக்கும் தேங்காய்க்கே லாபநட்டக் கணக்குப் பார்க்கும் இவரா ஒரு ஏழைக்கிழவிக்கு மனமிரங்கப் போகிறார்? அப்படிப்பட்டவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பை காலம் வழங்கினாலும் அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்பவர்கள் எத்தனைப் பேர்?

பல பலமான கருத்துக்களை முன்வைக்கும் இக்கதையைப் பாராட்டும் அதே வேளை, கதையின் வேகத்தை மட்டுப்படுத்தும் அல்லது கதையின் போக்கை பலவீனப்படுத்தும் சிறு குறையொன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தக் கதையை வாசித்து முடித்த பின் வாசகர் மனத்தில் தோன்றும் கதைமாந்தர் பற்றிய சிந்தனைகளையும் கதைக்கரு பற்றிய எண்ணவோட்டங்களையும் கதாசிரியரே எழுத்தால் இழைத்திருப்பது கதைக்கு சற்று பலவீனம் எனத் தோன்றுகிறது.

இது போன்ற டிப்டாப் ஆசாமிகளில் சிலர்….’ என்று ஆரம்பிக்கும் பத்தியிலிருந்து காய்கறிகளைமனதார வாழ்த்தியல்லவா கொடுத்திருப்பார் .... அந்த வியாபாரியும்.’ என்னும் வரி வரையிலுமான ஒன்பது பத்திகள் கதையோட்டத்திலிருந்து மாறுபட்டு கதாசிரியரின் எண்ணவோட்டத்தைக் காட்டுவதாக உள்ளன. நிகழ்வுகளை மட்டும் காட்டிவிட்டு சிந்தனையை வாசகரின் போக்குக்கு விடுவது போலல்லாமல் கதாசிரியரின் சொந்தக் கருத்தையும் கூடவே வாசிக்கையில் வாசகருக்கு தனிப்பட்ட சிந்தனைக்கு வேலையில்லாமல் போகிறது. கதாசிரியர் தன் கருத்தாக சொல்லவந்த விஷயங்களையே கதையில் நிகழ்வுகளாக அதாவது கதையிலிருந்து ஒதுங்கி நின்று ஒரு பார்வையாளனாக சித்தரித்திருப்பின் கதையின் வீரியம் கூடியிருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.




 


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.








    


இனிப்பான இரண்டாம் பரிசினை 

வென்றுள்ள மற்றொருவர்: 



திரு. ரவிஜி 


மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.


அவர்கள்






mayavarathanmgr.blogspot.com




இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள




திரு. ரவிஜி 


மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.


அவர்களின் விமர்சனம் இதோ:






தலைப்பே நமக்கு முதலில் எம்.ஜி.ஆர். அவர்களின் பிரபலமான அடிமைப்பெண் படப்பாடலை ஞாபகப்படுத்தி நம்மை சற்றே யோசிக்கவைக்கிறது. யார் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்? எவ்வாறு ஏமாந்து போகப்போகிறார்கள்?  வாருங்கள் கதைக்குள் போகலாம்!
     

துவக்கக் காட்சியில் ஒரு தள்ளாத கிழவி தேங்காய் வியாபாரம் செய்ய தெருவோரமாக சாக்குப்பையை விரித்து தேங்காய்களை அளவு வாரியாக அடுக்குவது காட்டப்படுகிறது. தேங்காய் வியாபாரம் செய்வது மார்க்கெட் தவிர்த்து பெரும்பாலும் ஆலயங்களை ஒட்டிய நடை பாதையில்தானே இருக்கும்?! இங்கும் அப்படித்தான்.  வியாபாரம் துவங்குவதற்கு முன்பாக (உழைப்பை!) தள்ளாத கிழவியைப்பற்றி ஒரு பிளாஷ் பேக் கொண்டு செல்கிறார் கதாசிரியர்!
      

தலையில் ஒரே சமயத்தில் 150 தேங்காய்களை சும்மாடு வைத்து தூக்கிவந்த காலத்தில் துவங்கி இன்றோ 50 காய்களையே தூக்கிவரத் திணறும் நிலை வரை அவள் வியாபாரம் செய்து வருவது, வெய்யில் ஏறும் முன்பாக வியாபாரத்தை முடித்தால் தேவலாம் என்ற எண்ணம் தள்ளாமை காரணமாக ஏற்படுவது,, ஒரு காய் விற்றால் எட்டணா முதல் ஒன்றரை ரூபாய் வரையே லாபம் கிடைத்தல், வயதின் காரணமாக, கண்பார்வை மங்குதல், கணக்கில் குழப்பம் கிழிந்த நோட்டு, செல்லாத நோட்டு, ஒரேமாதிரியான ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்களால் ஏற்படும் குழப்பம்… இத்யாதி… ஏமாற்றப்படப்போவது அனேகமாக இந்தக் கிழவிதானோ என்ற ஓர் ஆர்வத்தை வாசகனின் மனதில் தூண்டிவிடும் வேளையில் ப்ளாஷ் பேக் முடிந்து அடுத்த காட்சி! தேங்காய் வியாபாரத்தின் துவக்கம்!
      

கிழவி சொல்லும்  காயின் விலையான சிறியது ஆறு ரூபாய், பெரியது ஏழு ரூபாய் என்பதைக்கேட்டு ஏறக்குறைய சிறிய காயின் விலைக்கே பெரிய காயை பேரம்பேசும் அதே நேரத்தில் பன்னிரண்டு காய்களுக்கு பதிலாக பதிமூன்றாக பைக்குள்ளே தள்ளிவிட்டு ஒரு நூறு ரூபாய் நோட்டினை நீட்டியபடி மீதிப்பணத்தைக் கேட்கிறார்.  இந்த இடத்தில் ஏமாற்றுபவர் யார் என்பதனை சொல்லிவிடுகிறார்.


சாமீ .... வாங்க ... தேங்காய் வாங்கிட்டுப்போங்க” என்று கிழவி குரல் கொடுத்ததில் துவங்கி நாலணா, எட்டணாவுக்கெல்லாம்கூட வசதியான மனிதர்களெல்லாம்கூட பிளாட்பாரக்கடை நடத்தும் ஏழைக்கிழவியிடம் எப்படி பேரம் பேசுகிறார்கள் என்பதையும், எவ்வாறு திறமையாக தட்டிப்பார்த்து வாங்குகிறார்கள் என்பதையும், எப்படியெல்லாம் நைசாக லவுட்டுகிறார்கள் என்பதையும், அதுவே கிழவியின் அன்றைய முதல் போணி என்பதனை மீதித்தேங்காய்களின் மேல் சுற்றிவிட்டு சுருக்குப்பையில் வைத்துக்கொள்வதுவரை மிகவும் யதார்த்தமான வசனங்கள் மற்றும் காட்சி அமைப்புடன் ஒரு பிளாட்பாரத்து தேங்காய் கடையில் நடக்கும் வியாபாரக்காட்சியை நம் கண்முன்னே நிறுத்திவிடுகிறார்.  வயதின் காரணமாக எவ்வாறு ஒரு டசன் தேங்காய்க்கான விலையைக்கூட கூட்டத்தடுமாற்றம் ஏற்படுகிறது என்பதனையும் இங்கே கோடிட்டுக்காட்டுகிறார்.


அதற்கும் ஒருபடி மேலே போய் இவ்வாறு கிழவியிடம் தேங்காயை ‘சுட்டு’ச்செல்லும் மனிதர்களெல்லாம் நகைக் கடைகள், பெரிய துணிக்கடைகள் மற்றும் பிற பிராண்டட் கடைகளில் எவ்வாறு பேரம்பேசாமல் வாங்கிச்செல்கிறார்கள், இன்னும் சொல்லப்போனால் எவ்வாறு பேரம் பேசுபவர்களை எல்லாம் கூட இளக்காரமாகப் பார்க்கிறார்கள், ஐந்து பைசா மீதி சில்லறையை அந்தக்கடைகளில் எவ்வாறு ‘கெளரவத்துடன்’ கேட்காமலே விட்டு விடுகிறார்கள் என்று லேசாக சாட்டையைச் சொடுக்குகிறார். அத்தகைய மனிதர்கள் எவ்வளவு வசதியாக இருந்தாலும் அற்பமாக சிறு திருட்டுகள் செய்யும் கிளெப்டோமேனியா (KLEPTOMANIA வசப்பட்டுக் கிடக்கிறார்கள் என்பதனை லேசான நகைச்சுவை கலந்த கோபத்துடன் சொல்கிறார். அத்தகைய ஒரு மனிதரையே இங்கே ‘ஏமாற்றும்” மனிதராகக் காண்பிக்கிறார்.


இதுபோலவே கதையின் இடையில் இலவச இணைப்பாக காய்கறி விற்கும் தெருவோர வியாபாரிகளின் சங்கம் அமைத்துக்கொள்ளல், ஒரேமாதிரியான விலையை அவர்கள் நிர்ணயித்துக்கொள்வது, விளைச்சலை அனுசரித்து காய்களின் விலையில் ஏற்ற இறக்கம், மார்க்கெட் நிலவரம், ஆனால் மற்ற பொருள்களிலோ ஏறிய விலையின் இறக்காத தன்மை என்று பலவற்றையும் கோடிட்டுக்காட்டிச்செல்கிறார்.


பசுமை மாறாத காய்களை நியாயமான விலை சொல்லும்பொழுது, பேரம் பேசாது வாங்கினால் எவ்வாறு அவர்கள் பொருள்களை மனதார வாழ்த்தி மகிழ்ச்சியுடன் கொடுப்பர், அது எவ்வாறு ருசிக்குமென்பதுவரை தனது ஆதங்கத்தைத் தெரிவித்து மீண்டும் சிறு  ‘இடைவேளை’க்குப்பின் கதைக்குத் திரும்புகிறார்.  ஏமாற்றிய மகானுபாவர் எவ்வாறு ஏமாறுகிறார் என்று காட்டவேண்டுமே.


கிழவியை ஏமாற்றிய மனிதர், 15 வருடங்களுக்கு முன்பாக திருச்சிமாநகரின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு வந்திருந்தபொழுது வேலைகிடைக்கவேண்டுமென்று உச்சிப்பிள்ளையார் உள்பட மொத்தம் 12 பிள்ளையார் கோயில்களுக்கு சதிர்காய்களை உடைக்க வேண்டிக்கொண்ட ‘வேண்டுதலை’ உடனே நிறைவேற்ற இயலாதவாறு போபாலில் உடனடியாக வேலையில் சேர நேர்ந்தது, பின்னர் திருச்சிக்கே மாற்றலில் வந்தது, அதனால் மேலும் கால தாமதம் செய்யாமல் வேண்டுதலை நிறைவேற்ற இங்கே வந்தது இவையெல்லாம் சிறிய ஃபிளாஷ் பேக்கில், காட்சி நகர்த்தலில் அருமையாக சொல்லிவிடுகிறார்.


இங்கே தேங்காய் வாங்கியவரின் கஞ்சத்தனத்தை, 15 ஆண்டுகளுக்கு முன்பே வேண்டுதலை நிறைவேற்றியிருந்தால் 12 ரூபாய் அல்லது 18 ரூபாய் செலவிலேயே முடித்திருக்கலாம், இப்பொழுதோ அதிகமாகிவிட்டது, நல்லவேளையாக கிழவியிடம் ஒரு தேங்காயை சுட்டதால் சிறிய தேங்காயின் விலையிலேயே (ரூபாய். 6-00) பெரிய தேங்காயை வாங்கியதாக கடவுளுக்கு வேண்டுதலை நிறைவேற்றுவதிலும்கூட திருப்திப்பட்டுக்கொள்வதில் காணமுடிகிறது.


ஒருவழியாய் தேங்காய்களை வாங்கியாகிவிட்டது. அவற்றை எடுத்துச்சென்று ஒவ்வொரு காயாக சதிர்காய் உடைத்து அதனை சிறுவர்கள் பொறுக்கிச் செல்வது, காய்கள் நன்றாக சிதறியதில் மகிழ்ச்சி…வேண்டுதல் நிறைவேறிய சந்தோஷம்…ஏமாற்றியவர் ஏமாறுவது எப்படி? இறுதிக்கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.


வேண்டுதலை முடித்து வீட்டிற்குப்போனதும் மீதமிருக்கும் ஒரு தேங்காயை மனைவியிடம் கொடுத்ததும் அவர் தயாராக உள்ள சாப்பாட்டில் துருவிப்போட தேங்காயை உடைத்து இளநீரை அவருக்குக் குடிக்கத்தருகிறார். வாயில் ஊற்றிக்கொண்ட இளநீரை விழுங்கமுடியாமல் ஓடிப்போய் ஒருவழியாக வாஷ்பேசினில் துப்புகிறார். அதே நேரத்தில் தேங்காயைப் பிளந்த மனைவியோ தேங்காய் அழுகல் என்று கூறுகிறார்.


அவர் கொண்டு வந்து காண்பிக்கும் அழுகல் தேங்காய் மூடிகளில் அந்த கிழவியின் தளர்வான முகம் தெரிவதாக கதை முடிக்கப்படுகிறது.

என்னங்க இது; இந்தத்தேங்காய் அழுகலாக உள்ளதே! பார்த்து வாங்கியிருக்கக்கூடாது! ஸ்வாமிக்கு உடைத்ததெல்லாமாவது நன்றாக இருந்ததா?” என்ற வசனமே கதையின் முத்தாய்ப்பு! இதற்கு அவரால் என்ன பதிலைச் சொல்லமுடியும்? கிழவியை ஏமாற்றிய கதையை மனைவியிடம் சொல்லத்தான் முடியுமா?
      

12 காய்களிலும் தப்பி வேண்டுதலை நல்லபடி முடித்துவிட்டாலும், கிழவியை ஏமாற்றியது அவரை உறுத்திக்கொண்டே அல்லவா இருக்கும்? அங்கேதான் கொடுக்கிறார் கதாசிரியர் கடைசி பஞ்ச்.
      
உப்பு தின்றவன் தண்ணி குடிப்பான்!
ஏமாற்றுபவன்…….நிச்சயம் ஏமாறுவான்!
  

இதில் இன்னொரு செய்தியும் சொல்லப்பட்டுவிடுகிறது. முதலில் நீ ஏமாற்றாமல் நியாயமாக இரு.  அடுத்தது ஏமாற்று(ம்) மனிதர்களும் நிறைந்த உலகத்தில் ஏமாறாமல் நீ சுதாரிப்புடன் இரு என்பதுதான்.
      

மொத்தத்தில் இயக்குனர் மகேந்திரன், மலையாள இயக்குநர் அடூர் பாஸி இவர்களின் பாணியில் யதார்த்த காட்சி அமைப்புகள் கொண்ட எளிமையான முறையில் சொல்லவந்த நீதியை வலிமையாகச் சொல்லும், ‘நிதி’ (தேங்காய் விலை)யைக் கொண்டே ‘நீதி’யைப் புகட்டும் அருமையான கதை.


பாராட்டுக்கள்! நன்றி!




 










மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.








    



   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.






நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது
.



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



’முன்னெச்சரிக்கை முகுந்தன்’




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


05. 06. 2014





இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.












என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்