என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 10 மே, 2017

'காய்க்காத மரமும்....’ - மின்னூல் - மதிப்புரை


மின்னூல் ஆசிரியர்

திருமதி. 
  ஜெயஸ்ரீ 
அவர்கள்

 



 


மின்னூல்கள் மூலம்
இவரைப்பற்றி நாம் அறிவது

1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு. பேரை. சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய் திருமதி. சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.
1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.
2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து, கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம், சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.




என் பார்வையில் 
'காய்க்காத மரமும்....’ 
மின்னூல்


மொத்தம் 66 பக்கங்கள் கொண்ட இந்த மின்னூலில் முத்தான + சத்தான மூன்று கதைகள் மட்டும் இடம் பெற்றுள்ளன. 

(1) ’மீள் உயிர்ப்பு’ - 29 பக்கங்கள் 
(2) ’கூந்தல் அழகி கோகிலா’ - 24 பக்கங்கள் 
(3) ’காய்க்காத மரமும்....’ - 13 பக்கங்கள்.

ஒவ்வொரு கதை பற்றியும், சுருக்கமாக ஒருசில வரிகள் மட்டும் இங்கு நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.



(1) ’மீள் உயிர்ப்பு’

மிகவும் அருமையான கதையாகத்தான் உள்ளது.

கால் செண்டரில் வேலைக்குச் செல்லும் ஓர் பெண் ஆர்த்தி. அவளுடன் ஒன்றாகப் படித்தவனும், அவளின் சம வயதே உள்ளவனும், அவள் அலுவலகத்திலேயே, அவளுக்கு சமமாக வேலை செய்பவனும் ஆன சிவா இவளை மணம் புரிய விரும்புகிறான்.  இவளுக்கும் இதில் சம்மதம்தான் என்றாலும், மிகவும் புரட்சிகரமான, மிகத்தெளிவான இந்தக்கால மாடர்ன் பெண்ணாக இருப்பதால், தன் மாமியார்-மாமனாரை முதலில் தான் மட்டும் சென்று பேட்டி காண விரும்பி காரை ஓட்டிக்கொண்டு சிவா வீட்டு அட்ரஸ் தேடிக்கொண்டு தனியே வருகிறாள்.

அப்போது சிவாவின் அம்மா கல்யாணி மட்டுமே வீட்டில் இருக்கிறாள். ஓர் புதன்கிழமை காலை தன் வீட்டு அழைப்பு மணி அடிக்க கதவைத் திறக்கும் கல்யாணிக்கு ஒரே ஆச்சர்யம். 



ஒரு அழகான பெண் கையில் ஒற்றை ரோஜாவுடன் சிரித்துக்கொண்டே “நீங்கதானே சிவாவின் தாயார் - அதுதான் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறதே - அப்போ இந்த ரோஜா உங்களுக்குத்தான்” எனச் சொல்லி கொடுத்துவிட்டு, “நான் உள்ளே வரலாமா” எனக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்து வீடு பூராவும் நோட்டம் விடுகிறாள், ஆர்த்தி.  

அவள் கொடுத்த அந்த ஒற்றை ரோஜாவுக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லியபடியே ஆர்த்தியை ஆச்சர்யத்துடன் பார்க்கிறாள், கல்யாணி.

"மாமி.... நான் ஆர்த்தி. என்னை சிவா, அதான் உங்க பிள்ளை லவ் பண்றேன்னு சொல்றான். எனக்கும் அவன் மேல் இஷ்டம்தான். இருந்தாலும் என்னைப்பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும்.... ஆனால் என்னைப்பற்றி உங்களுக்கும் தெரிந்துவிட்டால்.... நாளைக்கு நமக்குள்ளே...... உங்க கிட்ட சொல்லிட்டு...."

கல்யாணியின் முகத்தில் ஏற்பட்ட ஆச்சர்யங்களைப் பற்றி ஆர்த்தி கவலைப்பட்டவளாகவே தெரியவில்லை.

கல்யாணி: ”என்ன சொல்ல வந்திருக்க நீ?”

ஆர்த்தி: “உங்க ஒரே பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.. ஐ மீன் இந்த வீட்டுக்கு மருமகளாக வரணும்ன்னு.. உங்க பிள்ளை சிவாவுக்கு ஆசையாம்.. எனக்கும்தான்” சொல்லிவிட்டு வீட்டைச்சுற்றி நோட்டமிட்டாள் ஆர்த்தி.

கல்யாணி: ”அதுக்கு உங்க அம்மா அப்பா சம்மதிப்பாளா?”

ஆர்த்தி: “அதுக்கும் முன்னாலே சிவாவின் அம்மா-அப்பாவைப் பார்த்து நான் சம்மதம் வாங்கணும்ன்னு எனக்குத் தோணித்து.. அதான் நேராக உங்களைப் பார்த்து பேசிட்டு..” என்று தான் வந்ததன் நோக்கத்தை இரத்தினச் சுருக்கமாகச் சொன்னாள்.

கல்யாணி: ”சிவாவுக்கு  நான் தான் அம்மா-அப்பா எல்லாமே.”

ஆர்த்தி: ”அப்போ ப்ராப்ளம் சால்வ்ட். நான் சொல்ல வந்ததை உங்களிடமே சொல்லிட்டு போய்டறேன்”

கல்யாணி: ”ம்ம்... சொல்லு... கேட்கறேன்”

ஆர்த்தி: ”நான் வேலைக்குப் போவேன். என் சுதந்திரம் யாராலும் தடைபடுவதை நான் விரும்பமாட்டேன்.”

கல்யாணி: ”அதை ஏன் என்னிடம் சொல்றே?”

ஆர்த்தி: “கல்யாணத்துக்கு அப்புறமும்”

கல்யாணி: “ம்ம்ம்ம்”

ஆர்த்தி: ”எனக்கு தெய்வம், கடவுள் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. விளக்கேத்தறது, கோலம் போடறது, எண்ணெய் தேய்த்துக் குளிக்கறது .... ம்க்கும்.. ஏன் மஞ்சள் பூசி தாலி கட்டிண்டு ... நோ... நோ... இதிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. 
ஒரு மஞ்சள் கயிறைக்கட்டி என்னை அடிமையாக்கறத்துக்கு நான் உடன்பட மாட்டேன்ன்னு சொல்ல வந்தேன்; 

எனக்கு அவனைப் பிடிச்சுருக்கு. அவனுக்கு என்னைப் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்றதுன்னா ஒரு ரிஜிஸ்டர் மேரேஜ் போதும்.  அதுக்காகச் செலவு செய்து பந்தல் போட்டு, ஊரைக்கூட்டி, விருந்து வைக்கறது இதெல்லாம் அவசியமாத் தோணலை எனக்கு; 

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற ஒவ்வொரு காசையும் ஒரே நாளில் கல்யாண சூதாட்டத்தில் தொலைக்க விரும்பலை. அதே சமயம் என் அப்பா அம்மாவுக்கும் கஷ்டம்தர விரும்பலை நான்;

மாசாமாசம் என் சம்பளம் பூராவும் உங்க கையிலே கொண்டு வந்துதர தயாராக இருக்கேன். நான் சேர்க்க நினைப்பதை நீங்க சேர்த்து வையுங்கள்;

கல்யாணம் ஆன கையோடு உங்களுக்கு ஒரு நமஸ்காரம். என் அப்பா அம்மாவுக்கு ஒரு நமஸ்காரம். அவாளோட ஆசீர்வாதம் மட்டும் போதும்;

நானா சிவாவை என்னிக்கும் கண் கலங்க விட மாட்டேன். அவன் என்னைக் கண்கலங்க விட்டால் நானும் சும்மா இருக்க மாட்டேன். போராடுவேன். ஜெயிப்பேன்”   
 


கல்யாணி இந்தக் கல்யாணத்திற்கு சம்மதித்தார்களா? கல்யாணம் நடந்ததா? இந்த ஜோடிக்குக் குழந்தை பிறந்ததா? கல்யாணியின் கணவர் எங்கே? அவர் என்ன ஆனார்? போன்ற அனைத்துக்கும் இந்த மின்னூலை வாங்கி விடை காணவும்.

ஒரு காலத்தில் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்ணாக இருந்துள்ள கல்யாணியின் ப்ளாஷ் பேக் வாழ்க்கையும், அவளின் கணவரின் பல்வேறு கொடுமைகளும் கலந்து கலந்து கதை விறுவிறுப்பாக நகர்கிறது.

கல்யாணியும், ஆர்த்தியும், புரட்சிகரமான தங்களின் எண்ணங்களாலும், செயல்களாலும் மிகச்சுலபமாக ஒத்துப் போய்விடுகின்றனர் ..... முக்கால்வாசிக் கதைவரை.

இருப்பினும் கடைசிவரை அவர்களின் இந்த புரட்சிகரமான கொள்கைகள் மட்டும் நீடிக்காமல், இடையில் ஒருசில செண்டிமெண்ட்ஸ் புகுந்துவிடுவதால், கதையின் இறுதிப்பகுதியை சஸ்பென்ஸ்ஸாகக் கொண்டு வந்திருப்பினும், வழக்கம்போல இன்னதான் நடக்கும் என மிகச்சுலபமாக யூகிக்க முடிவதாக உள்ளது ..... ஒரு சின்ன குறையாக எனக்குத் தோன்றியது.

கதையின் சுபமான சுகமான முடிவுக்காக சிலவற்றை ஏற்க முடியாமல் இருப்பினும், சமாதானம் செய்துகொள்ள வேண்டியதாக உள்ளது.



(2) ’கூந்தல் அழகி கோகிலா’

 

ஆணோ பெண்ணோ கூந்தல் கருகருவென அடர்த்தியாக இருப்பின் அது ஒர் தனி அழகுதான். அதுவும் பெண்களுக்கு அது மேலும் அவர்களின் அழகுக்கு அழகூட்டுவதாக அமைந்து விடுகிறது.

கூந்தல் பராமரிப்பு ஓர் மிகக்கஷ்டமான காரியமே என்றாலும், அடர்த்தியான அதனை நன்கு எண்ணெய் வைத்து அழுந்த வாரி, கெட்டியாக சாட்டை போல, கருநாகம் போல, ஒன்றைப்பின்னலோ அல்லது இரட்டைப் பின்னலோ போட்டுச்சென்றால் பார்ப்போரின் மனதை சுண்டியிழுத்து மயக்கத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

’மயிருள்ள சீமாட்டி வாரி முடிகிறாள்’ என்ற பழமொழியே உண்டே. அடர்த்தியான கூந்தல் உள்ள பெண்ணுக்கு அதுவே ஒரு பெருமையாக உள்ளது. அவளைப் பார்க்கும் மற்ற பெண்களுக்கு, அந்த முடிக்காகவே அவள் மீது கொஞ்சம் பொறாமையும் ஏற்படுகிறது.  

முடி நன்கு செழுமையாக வளர்வது என்பது வாழ்க்கையின் ஒரு காலக் கட்டமாக மட்டுமே உள்ளது. அதன்பின் சிலருக்கு ‘இலையுதிர் காலம்’ போல முடி கொட்ட ஆரம்பிக்கிறது. பொடுகு, பேன் முதலியவற்றால் ஒரே அரிப்பு, சீப்பினால் வார வார முடி உதிர்தல், நரைமுடிகள், சொட்டை, வழுக்கை என இதில் பலவித தொல்லைகள் ஏற்பட்டு விடுகின்றன.

பெண்களிலேயே சிலருக்கு எலிவால் போலவும், சிலருக்கு அணில்வால் போலவும், சிலருக்கு கொத்தமல்லிக் கட்டு போலவும், இயற்கையிலேயே முடி குறைவாகவே இருப்பதும் உண்டு. முடி நன்கு செழித்து வளர அவரவர் பல்வேறு வழி முறைகளைக் கையாள்வதும் உண்டு. பல்வேறு தைலங்களை வாங்கி உபயோகிப்பதும் உண்டு. 

சிடுக்குவாரி, சீப்பு என பல்வேறு ஆயுதங்களுடன் ஒருவர் முடியை ஒருவர் பிடித்தபடி, ஒருவர் பின் ஒருவராக அமர்வதும் உண்டு. நாகரீகம் என்ற பெயரில் தன் நீண்ட கூந்தலையே வெட்டிக் குறைத்துக்கொண்டு, ஆண்களைப் போல ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொள்ளும் பெண்களும் உண்டு. உலகம் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.

இதையெல்லாம் ஒருங்கிணைத்து, தொடைக்குக்கீழும் தொங்கிடும் ஓர் மிக நீண்ட அழகிய, அடர்த்தியான முடியுடையவளான கோகிலா என்பவளையும், அவளின் முடி மீது எப்போதுமே கொஞ்சம் பொறாமை கொண்டுள்ள + தலையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதிகம் முடி இல்லாத அவளின் உயிர்த்தோழி வசந்தி என்பவளையும், இறுக்கிப் பின்னலாகப் பின்னி, இந்தக்கதையினை வெகு அழகாக உருவாக்கி சுமார் 24 பக்கங்களுக்குக் கொடுத்துள்ளார்கள். படிக்கப்படிக்க சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும், சற்றே நகைச்சுவையாகவும் உள்ளது.

கதையில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு சில வரிகள் (பக்கம்: 39):


ப்ளாட்பாரத்தைக் கடந்து கொண்டிருந்த என்னை, தட்டி நிறுத்தி என் கவனத்தை இழுத்தது, கண்ணாடிக்குள் இருந்து கவர்ச்சியாய்ச் சிரிக்கும் “டம்மிப் பெண்கள்”. அந்த அழகிய பொம்மைப்பெண் அவள் மேனி நிறத்துக்கு எடுப்பாக, கருநீலப் பட்டு உடுத்தி, நிமிர்ந்த புன்னகையில் என் மனதைச் சுண்டி இழுத்தாள்.      

ஆஹா அவளுக்குத்தான் எத்தனை நீளத் தலைமுடி. அதைப் பின்னி அழகாக முன்னால் போட்டுக்கொண்டு.. போதாக்குறைக்கு தலை நிறைந்து வழியும் மல்லிகைப்பூவினைச் சூடி இருந்தாள்.

பொறந்தாலும் பட்டுப்புடவைக்கடையின் பொம்மையாய் பொறக்கணும். ஒரு வேலையும் செய்யாமல் நித்தம் ஒரு புதுப் பட்டுப்புடவையுடன், தலை நிறைய பூவோடும், அங்கங்கள் பூராவும் புதுப்புது நகைகளோடும் நின்னாப் போதும். மனசு தன்னை மீறி எண்ணியது......

 

அத்தனை அழகு பொம்மையைப் பார்த்ததும் .....


”பின்னிய கூந்தல் ..... கருநிற நாகம் ......
பெண்மையின் இலக்கணம் ..... அவளது தேகம் .....”

என்று பாடியது என் மனது.

  




’முடி’க்கதை இத்தோடு ’முடி’யவில்லை.
’முடி’போல சுமார் 24 பக்கங்களுக்கு நீண்டு கொண்டே போகிறது.
’முடி’வில் என்ன ஆச்சு? 

என்பதனை அறிய இந்த மின்னூலினை வாங்கிப் படித்து மகிழுங்கள்.



(3) ’காய்க்காத மரமும் .....’

பல வருடங்களாகக் காய்க்காததோர் மிகப்பெரிய மாமரத்தை மறுநாள், மரம் வெட்டுபவரான கந்தசாமியின் உதவியால், வெட்டிவிட வேண்டும் எனத் திட்டமிடுகிறார் வாசுதேவன்.






அவர்களுக்குள் நிகழும் ஓர் சிறிய உரையாடல் இதோ:



“நானும் பார்த்துப்பார்த்து ஏமாந்து போயிட்டேன் கந்தசாமி.... இந்த வருஷமாவது.... இந்த வருஷமாவது.... காய் வருமான்னு.... நினைச்சு நினைச்சே.... வருஷங்கள்தான் ஓடுதே தவிர.... பூக்கவே காணும்.... சும்மா தண்டத்துக்குத் தண்ணி ஊத்திக்கிட்டு....!



”ஏனுங்க.... பச்ச மரம்.... பறவைங்க கூடுகட்டியிருக்குது .... அம்சமா நிழல் தருது .... அப்படியிருந்தும் மாமரத்தை ஏன்யா வெட்டச்சொல்றீங்க .... என்றாவது ஒரு நாள் காய்க்கும்... எதுக்கும் கடைசியா இன்னொருவாட்டி யோசிச்சுப்பாருங்க....இது....” என்று இழுத்தான் கந்தசாமி.

“அதெல்லாம் தொல்லைதான்... இத்தனை வருஷமாக் காய்க்கலை... இனி எங்கே காய்க்கப்போவுது....   ஒரே பறவைங்க கூச்சலும் எச்சமும்.... இடத்தை நாசம் பண்ணுதுங்க... நிலத்தைப்பூரா நிழல் அடைச்சு.... வேற எந்தத்தொட்டிச் செடிக்கும் சூரியனைக் காட்ட மாட்டேங்குது.... வேரு மட்டும் காம்பெளண்ட் சுவத்தையே தூக்கிடும்போல இருக்குது ... அங்கன வரைக்கும் போயிட்டுது பாரேன், அடுத்த மழைக்கு சுவரு அம்பேல்தான்.... இந்த மரத்தோட வேரே காம்பெளண்ட் சுவத்தத் தூக்கிறும்... அதான் கந்தசாமி .... சும்மா நானும் மரம்ன்னு வளர்த்து நின்னா போதுமா? இந்த இடத்திலே வேறு மரத்தையாவது நட்டு வைக்கலாம்.... அதுவாச்சும் காய்க்கட்டும்....   மரத்தை வெச்சமாம் .... பழத்தைத் தின்னமாம்ன்னு இருக்கணும் ..... அத்த உட்டுட்டு இன்னும் எத்தனை காலம் தான் காத்துக் கெடக்கிறது... பூ விடும் ... பிஞ்சு விடும்ன்னு..”

“அதுக்கென்ன... சாமீ... பண்றது; நீங்க மரத்தைப்பத்தி சொல்றீங்க... எங்க சாதி சனங்க... கண்ணாலம் கட்டி புள்ள பொறக்கலைன்னா... அடுத்த வருஷமே பொஞ்சாதியை வெட்டி உட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்குவாங்க நம்ம பசங்க”

"ஏம்பா..... இது ரொம்ப அநியாயம்.... புள்ள இல்லேன்னா அதுக்கு அந்தப் பொண்ணுதான் காரணமா? ....  புருஷனுக்கு இதுல பங்கு இல்லையா என்ன....? இதோ இந்த மூணு வீடுதாண்டி ஒரு மாப்பிள்ளை இருக்காரு.... அவரு இப்படித்தான்.... வாரிசு இல்லைன்னு காரணம் சொல்லி.... கட்டினவளை விவாஹரத்து பண்ணிட்டு.... இப்போ.... உள்ளதும் போச்சுடா .... நொள்ளக்கண்ணான்னு ..... மோட்டு வளையப் பாத்துட்டு உட்கார்ந்திருக்காரு. இவனுக்கெல்லாம் இனி யாரு பொண்ணு கொடுத்து ....  அவன் நினைச்சது நடந்து .... ம்ம்ம்ம்...!”

பூக்காத + காய்க்காத மாமரத்தை வெட்ட நினைப்பதையும், தாய்மையடையாத மனைவியைக் கணவன் விலக்கி வைக்க நினைப்பதையும் ஒப்பிட்டு இந்தக் கதையை மிகவும் அழகாகவும், உணர்வு பூர்வமாகவும் எழுதி சிந்திக்க வைத்துள்ளார்கள். 

சுகமான கார்ப்பயணம் போல வழக்கிச்சென்ற விறுவிறுப்பான இந்தக் கதையின் ஓட்டம், தெருவின் குறுக்கே சென்ற ஒரு குட்டியூண்டு பெண் பூனையைக் காப்பாற்ற நினைத்து, சடர்ன் ப்ரேக் போட்டது போல ஓரிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த மாமரம் மறுநாள் வெட்டப்பட்டதா? ரோட்டின் குறுக்கே ஓடி வந்த அந்தப்பூனை விபத்து ஏதும் இல்லாமல் காப்பாற்றப்பட்டதா? பிறகு அது குட்டி போட்டதா? என்பதையெல்லாம் இந்த மின்னூலை வாங்கி வாசித்து அறியுங்கள். 

கதையின் முடிவினை அவரவர்கள் யூகித்துக்கொள்ளும்படி முடித்துள்ளதும் சிறப்பாகத்தான் உள்ளது.





காய்க்காத மரமும்....... 
என்ற தனது மின்னூலை அன்பளிப்பாக 
எனக்கு அனுப்பி வைத்து 
வாசிக்க வாய்ப்பளித்துள்ள
 திருமதிஜெயஸ்ரீ மேடம் 
அவர்களுக்கு 
என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்



 



இந்த மின்னூலை உடனடியாக படிக்க விருப்பமுள்ளோர் 
http://www.pustaka.co.in/home/ebook/tamil/kaaikatha-maramum-sirukathai-thoguppu
என்ற இணைப்புக்குச் சென்று ’Buy Now’ என்பதை க்ளிக் செய்யுங்கோ, போதும். 
உங்களைத்தேடி மின்னல் வேகத்தில் இந்த மின்னூல் வந்து சேரும் . 


 



இன்று 10.05.2017 சித்ரா பெளர்ணமி தினம் !
அனைவருக்கு என் நல்வாழ்த்துகள் !!







'கொஞ்சம் வெட்டி பேச்சு'
வலைப்பதிவர்

சித்ரா

 'கொஞ்சம் வெட்டி பேச்சு' 

மிகப்பிரபலமானதோர் வலைப்பதிவரும், பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரமும், தற்சமயம் அமெரிக்காவில் வாழ்ந்து வருபவரும், என்னை ’கோபு மாமா’ என அன்புடன் அழைப்பவருமான, நம் அன்புக்குரிய ’சித்ரா’ பிறந்த தினமும் ஒரு ’சித்ரா பெளர்ணமி’ அன்றுதான். அதனாலேயே அவருக்கு ‘சித்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

அதனாலேயே பெளர்ணமி முழு நிலவு போல சும்மா ஜொலிக்கிறாரோ என்னவோ, என நான் அடிக்கடி எனக்குள் நினைத்துக்கொள்வது உண்டு. :) 

சித்ராவின் தந்தை, பிரபலமான திரு. பொ.ம.ராசமணி அவர்கள் போலவே, சித்ராவும் மிகச் சிறந்ததோர் நகைச்சுவையாளர். 

ஜனவரி 2012 வரை, வலையுலகில் கொடிகட்டிப்பறந்து வந்த இவர், ஏனோ அதன்பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக புதிய பதிவுகள் ஏதும் தரவில்லை. 

 இனிய பிறந்த நாள் 
நல்வாழ்த்துகள் ..... சித்ரா. :)

 
அன்புடன் 
கோபு மாமா



திருமதி. ஜெயஸ்ரீ அவர்களின் 
அடுத்த மின்னூல் மதிப்புரையில் 
மீண்டும் நாம் சந்திப்போம்.



 

என்றும் அன்புடன் தங்கள்,

40 கருத்துகள்:

  1. மூன்று கதைகளுமே அருமை. ஜெயஸ்ரீக்கு பாராட்டுகள் & வாழ்த்துகள்.

    வழக்கம்போல் உங்கள் விமர்சனம் விமரிசை..

    சித்துவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    நான் உங்க சொல்பேச்சு கேட்டாலும் என் லாப்டாப் தமிழ்ல டைப்ப மாட்டேங்குது. நோட்பேடில் அடித்து வெட்டி ஒட்டி இருக்கேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan May 10, 2017 at 5:28 PM

      வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

      //மூன்று கதைகளுமே அருமை. ஜெயஸ்ரீக்கு பாராட்டுகள் & வாழ்த்துகள். //

      முக்கனியில் ஊறிய தேன் போல மூன்று கதைகளுமே அருமை என கதாசிரியரைப் பாராட்டி வாழ்த்தியுள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      //வழக்கம்போல் உங்கள் விமர்சனம் விமரிசை..//

      வழக்கம்போல் எனக்கும் சந்தோஷம், மேடம்.

      //சித்துவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்//

      அது யாரு ’சித்து’ என சித்தநாழி யோசித்தேன் :) ......

      ஓ ...... நம் சித்ராவாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு பிறகு வந்தேன் !

      வெரி குட். தாங்கள் வைத்துள்ள செல்லப்பெயர் நல்லாவே இருக்குது.

      //நான் உங்க சொல்பேச்சு கேட்டாலும் என் லாப்டாப் தமிழ்ல டைப்ப மாட்டேங்குது.//

      அடாடா ! என் சொல்பேச்சு கேட்க நினைப்போர்க்கெல்லாம் இதுபோல ஏதேனும் சோதனைகள் வந்து விடுகின்றன போலிருக்குது. :(

      //நோட்பேடில் அடித்து வெட்டி ஒட்டி இருக்கேன் :) //

      அச்சச்சோ ..... எவ்ளோ சிரமம் இது. உங்களின் லாப்-டாப் தமிழ்ல டைப் அடிக்கும் வரையிலும், என் பழைய பதிவுகளுக்கெல்லாம் ஹனி மேடம் வருகை தந்து சப்ஜாடாக பின்னூட்டமிடும் வரையிலும், நானும் ஏதும் புதிய பதிவுகள் தராமல் நிறுத்துக்கொள்ளலாமா என யோசித்து வருகிறேன். :)

      என் இந்தப்பதிவுக்குத் தங்களின் அன்பான + சிரமத்துடன் கூடிய முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  2. திருமதி ஜெயஸ்ரீ அவர்களின் ‘காய்க்காத மரமும்....’ என்ற மின்னூல் பற்றிய தங்களின் திறனாய்வு, ஆசிரியரின் மூலக் கதையையே வாசிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. மூன்று கதைகளுமே முத்தான மற்றும் சத்தான கதைகள் என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பது சரியே.

    முதல் கதையான ‘மீள் உயிர்ப்பு’ இன்றைய இளைய தலைமுறையினரின் மனப்போக்கை துல்லியமாக படம் பிடித்து காட்டுகிறது என நினைக்கிறேன். கதையின் இடையே சென்டிமெண்ட் புகுந்துவிடுகிறது என்று எழுதியுள்ளீர்கள்.அது இல்லாவிடில் கதையை சுபமாக முடிக்க இயலாது என்பதால் அப்படி செய்திருக்கலாம்.

    இரண்டாவது கதையான ‘கூந்தல் அழகி கோகிலா’ பெண்களுக்கே உரித்தான ஒப்பீட்டு குணத்தை விவரிக்கிறது என நினைக்கிறேன். தங்களுக்கு பிடித்த அந்த வரிகள் எனக்கும் பிடித்திருக்கிறது .
    ‘பின்னிய கூந்தல் கருநிற நாகம்
    பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்’
    என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளை பொருத்தமாக இணைத்திருக்கிறார் கதாசிரியர்.

    மின்னூலின் தலைப்பைக் கொண்ட மூன்றாவது கதை தனக்கு உபயோகமில்லாததை புறந்தள்ளும் மனிதனின் சுயநலத்தை திருமதி ஜெயஸ்ரீ அழகாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் என எண்ணுகிறேன்.

    பூக்காத மற்றும் காய்க்காத மாமரத்தை வெட்ட நினைப்பதையும், தாய்மையடையாத மனைவியைக் கணவன் விலக்கி வைக்க நினைப்பதையும் ஒப்பிட்டு இந்தக் கதையை மிகவும் அழகாகவும், உணர்வு பூர்வமாகவும் எழுதி சிந்திக்க வைத்துள்ளார்கள். என்று என்று குறிப்பிட்டும், பூனை ஒன்று குறுக்கே வந்ததால் கதையின் ஓட்டம் நிறுத்தப்பட்டதாகக் கூறி அந்த மாமரம் மறுநாள் வெட்டப்பட்டதா? ரோட்டின் குறுக்கே ஓடி வந்த அந்தப்பூனை விபத்து ஏதும் இல்லாமல் காப்பாற்றப்பட்டதா? பிறகு அது குட்டி போட்டதா? என்பதையெல்லாம் இந்த மின்னூலை வாங்கி வாசித்து அறியுங்கள் என்று சஸ்பென்ஸ் வைத்து அந்த கதையை வாசிக்கும் ஆவலை உண்டாக்கிவிட்டீர்கள்.


    மின்னூலை அருமையாய திறனாய்வு செய்திருக்கிற தங்களுக்கு பாராட்டுகளும் முத்தான மூன்று கதைகளைத் தந்த திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகளும்!



    திருமதி சித்ரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள்
    வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி May 10, 2017 at 5:41 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //திருமதி ஜெயஸ்ரீ அவர்களின் ‘காய்க்காத மரமும்....’ என்ற மின்னூல் பற்றிய தங்களின் திறனாய்வு, ஆசிரியரின் மூலக் கதையையே வாசிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. மூன்று கதைகளுமே முத்தான மற்றும் சத்தான கதைகள் என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பது சரியே.//

      மிக்க மகிழ்ச்சி, ஸார். மூலக்கதையின் ஏதோவொரு மூலையில் உள்ளவற்றை மட்டுமே நான் சாம்பிள்களாக எடுத்துக்கொடுத்துள்ளேன்.

      //முதல் கதையான ‘மீள் உயிர்ப்பு’ இன்றைய இளைய தலைமுறையினரின் மனப்போக்கை துல்லியமாக படம் பிடித்து காட்டுகிறது என நினைக்கிறேன்.//

      ஆமாம், ஸார். கதையின் ஆரம்பமே இதனால் களை கட்டி, முழுக்கதையையும் ஒரே மூச்சில் படிக்க வைத்து விட்டது.

      //கதையின் இடையே சென்டிமெண்ட் புகுந்துவிடுகிறது என்று எழுதியுள்ளீர்கள்.அது இல்லாவிடில் கதையை சுபமாக முடிக்க இயலாது என்பதால் அப்படி செய்திருக்கலாம்.//

      ஆமாம் ஸார். அதுபோலத்தான் செய்திருக்கிறார்கள். இருப்பினும் என்னைப்போன்ற மிகச்சாதாரண ஆசாமிகளுக்கு, எதிலும் ஒரு செண்டிமெண்ட் ஏற்படலாம். ஆனால் பேரெழுச்சிமிக்க இந்தக் கதாநாயகி
      ஆர்த்திக்குப்போய் இதுபோல ஏற்படலாமா என நான் நினைத்துக் கொண்டேன்.

      //இரண்டாவது கதையான ‘கூந்தல் அழகி கோகிலா’ பெண்களுக்கே உரித்தான ஒப்பீட்டு குணத்தை விவரிக்கிறது என நினைக்கிறேன்.//

      ஆம். கூந்தல் அழகி கோகிலா பற்றி அவர்கள் எழுதியிருப்பது முற்றிலும் வேறு. நான் இங்கு கொடுத்திருப்பவைகள் எல்லாம் 80% என்னுடைய சொந்தச் சரக்குகள் மட்டுமே ஆகும்.

      //தங்களுக்கு பிடித்த அந்த வரிகள் எனக்கும் பிடித்திருக்கிறது//

      ‘பின்னிய கூந்தல் கருநிற நாகம் - பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்’ என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளை பொருத்தமாக இணைத்திருக்கிறார் கதாசிரியர்.

      நான் சொன்ன 80% தவிர மீதியில் 10% கவிஞர் கண்ணதாசன் அவர்களுடையதாகப் போய் விட்டன. 1975-இல் வந்த படம். 42 ஆண்டுகள் ஆகியும் மறக்க முடியாத வரிகளாக இன்றும் உள்ளன.

      ஜவுளிக்கடை வாசல் பொம்மை வர்ணனைகளான மீதி 10% மட்டுமே, திருமதி ஜெயஸ்ரீ அவர்களுடையதை நான் எடுத்துச் சொல்லியுள்ளேன். :)

      //மின்னூலின் தலைப்பைக் கொண்ட மூன்றாவது கதை தனக்கு உபயோகமில்லாததை புறந்தள்ளும் மனிதனின் சுயநலத்தை திருமதி ஜெயஸ்ரீ அழகாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் என எண்ணுகிறேன். //

      ஆமாம் ஸார். இருப்பினும் அதில் வரும் அந்த வாசுதேவன் ஒரு அப்பாவி ..... யதார்த்தவாதி ..... ஒரேயடியாக அவரை சுயநலக்காரர் என்று நாம் சொல்வதற்கு இல்லை.

      //பூக்காத மற்றும் காய்க்காத மாமரத்தை வெட்ட நினைப்பதையும், தாய்மையடையாத மனைவியைக் கணவன் விலக்கி வைக்க நினைப்பதையும் ஒப்பிட்டு இந்தக் கதையை மிகவும் அழகாகவும், உணர்வு பூர்வமாகவும் எழுதி சிந்திக்க வைத்துள்ளார்கள். என்று குறிப்பிட்டும், பூனை ஒன்று குறுக்கே வந்ததால் கதையின் ஓட்டம் நிறுத்தப்பட்டதாகக் கூறி அந்த மாமரம் மறுநாள் வெட்டப்பட்டதா? ரோட்டின் குறுக்கே ஓடி வந்த அந்தப்பூனை விபத்து ஏதும் இல்லாமல் காப்பாற்றப்பட்டதா? பிறகு அது குட்டி போட்டதா? என்பதையெல்லாம் இந்த மின்னூலை வாங்கி வாசித்து அறியுங்கள் என்று சஸ்பென்ஸ் வைத்து அந்த கதையை வாசிக்கும் ஆவலை உண்டாக்கிவிட்டீர்கள்.//

      ஆமாம் ஸார். கதையில் அதுபோன்ற பூனை எதுவும் வரவே இல்லை. அந்தப் பெண் பூனையை நான் தான் ஒரு குறியீடாக என் விமர்சனத்தில் கொண்டுவந்து குழப்பியுள்ளேன். சஸ்பென்ஸ் வைத்து அந்த கதையை வாசிக்கும் ஆவலைத் தூண்டுவதற்காக என்னால் அந்தப்பூனை கொண்டுவரப் பட்டுள்ளது.

      அந்தப் பூனை குறுக்கிட்டதாலோ என்னவோ சகுனம் சரியில்லையென கதையை டக்கென்று நிறுத்தி விட்டார்கள் போல நான் உணர்ந்தேன்.

      //மின்னூலை அருமையாய திறனாய்வு செய்திருக்கிற தங்களுக்கு பாராட்டுகளும் முத்தான மூன்று கதைகளைத் தந்த திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகளும்! //

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆழமாக, ஆத்மார்த்தமாக, அலசியுள்ள கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      //திருமதி சித்ரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள்
      வாழ்த்துகள் !//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  3. திருமதி ஜெயஶ்ரீ அவர்களுக்கு , பாராட்டுக்கள் !

    அனைவருக்கும் என் அன்பின வாழ்த்துக்கள்.
    ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும் , மறக்காமல் தாங்கள் வழங்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆசிருக்கும் மனமார்ந்த நன்றி, கோபு மாமா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Chitra May 10, 2017 at 5:45 PM

      வாங்கோ சித்ரா, வணக்கம். தங்களின் அபூர்வ வருகை, சித்திரை மாத பெளர்ணமி நிலா போல, மனதைக் குளிர்வித்து மகிழ்ச்சியளிக்கிறது.

      //திருமதி ஜெயஶ்ரீ அவர்களுக்கு, பாராட்டுக்கள் ! //

      மிக்க மகிழ்ச்சி, சித்ரா.

      //அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். //

      சந்தோஷம்.

      //ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும், மறக்காமல் தாங்கள் வழங்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆசிருக்கும் மனமார்ந்த நன்றி, கோபு மாமா !//

      சித்ரா பெளர்ணமி என்றாலே ஆட்டோமேடிக் ஆக
      சித்ராவின் ஞாபகம் எனக்கு வந்துவிடுகிறது. அதே நாளில் நான் என் வலைத்தளத்தில் பதிவேதும் கொடுக்க நேர்ந்தால், உங்களுக்கும் அதில் அங்கு வாழ்த்துச்சொல்லி, அனைவருக்கும் தெரியப் ப-டு-த்-தி க்கொண்டு வருகிறேன். :)

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கு மிக்க நன்றி, சித்ரா.

      என்றும் அன்புடன்
      கோபு மாமா

      நீக்கு
  4. ஓஓஓ நோஓஓஒ மீ த 1ச்ட்டூஊஊஊ இல்லை இம்முறை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

    சித்திரைச் சித்திராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எத்தனை மணிக்கு கேக் கட்டிங் எனச் சொல்லுங்கோ, மீ மேக்கப் பண்ணிக்கொண்டு வாறேன்.

    மிகுதி படிக்க ஈவினிங் வாறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira May 10, 2017 at 6:04 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஓஓஓ நோஓஓஒ மீ த 1ச்ட்டூஊஊஊ இல்லை இம்முறை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... //

      பூகம்பம் வந்ததுபோல இந்த ப்ளாக்கே சும்மா ..... ஆடுது ..... அதிருது ..... ஒரே நடுக்கமாக உள்ளது. உங்களின் இந்த கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... என்பதால் !

      உங்களுக்கு 4-ம் நம்பர்தான் மிகவும் ராசின்னு என்னிடம் ஒருமுறை சொல்லியிருக்கீங்கோ. அதனால் ஃபர்ஸ்டூஊஊ இல்லாவிட்டாலும் நான்கு கிடைத்துள்ளது பாருங்கோ. வாழ்த்துகள்.

      //சித்திரைச் சித்திராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //எத்தனை மணிக்கு கேக் கட்டிங் எனச் சொல்லுங்கோ,//

      கேக் பூராவுமே உங்களுக்கு மட்டும்தான். நீங்க வந்தால்தான் வெட்டுவோம்.

      ஐ மீன் அந்தக் ’கேக்’ஐ.

      //மீ மேக்கப் பண்ணிக்கொண்டு வாறேன்.//

      அப்போ இப்போ நீங்க மேக்கப் ஏதும் போடலையோ? அதனால்தான் எனக்கு, உங்களை சுத்தமாக அடையாளமே தெரியாமல் போய்விட்டது.

      //மிகுதி படிக்க ஈவினிங் வாறேன்.//

      வாங்கோ .... வாங்கோ .... அவசியமா வாங்கோ. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

      நீக்கு
  5. ஜெயஸ்ரீ அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    மூன்று கதைக்கருக்களும் அருமை. முழுவதும் படிக்க ஆவலாக உள்ளேன்.

    திருமதி சித்ரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

    பதிவுக்குள் பதிவு வைத்து அசத்தும் கோபு அண்ணாவிற்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya May 10, 2017 at 6:06 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்.

      //ஜெயஸ்ரீ அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      ’ஜெய’ஸ்ரீக்கு ’ஜெயா’வின் மனமார்ந்த வாழ்த்துகள்.

      என்னப் பொருத்தம்.... ஆஹா இந்தப் பொருத்தம்....

      //மூன்று கதைக்கருக்களும் அருமை. முழுவதும் படிக்க ஆவலாக உள்ளேன்.//

      எப்போதும் அந்த ஆவலுடனேயே இருங்கோ. படிக்கணும் என்ற அவசியம்கூட இல்லை. :)

      //திருமதி சித்ரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //பதிவுக்குள் பதிவு வைத்து அசத்தும் கோபு அண்ணாவிற்கு சிறப்பு வாழ்த்துக்கள்.//

      அது என்ன .... பதிவுக்குள் பதிவு வைத்து அசத்துவது?

      ரமணி ஸார் செய்துதரும் கொழுக்கட்டை மாவு சொப்புக்குள் தித்திப்பான தேங்காய்+வெல்லம்+ஏலக்காய் போட்ட வெல்லப் பூர்ணத்தைத் தாங்கள் வைப்பது போலவா?

      நீக்கு
  6. திருமதி சித்ரா அவர்கள் ஏன் வெட்டிப் பேச்சை நிறுத்தி விட்டார்கள். மீண்டும் தொடரச் சொல்லுங்கள் அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya May 10, 2017 at 6:09 PM

      //திருமதி. சித்ரா அவர்கள் ஏன் வெட்டிப் பேச்சை நிறுத்தி விட்டார்கள்.//

      உறுப்படியில்லாத வெறும் வெட்டிப்பேச்சாக இருக்க வேண்டாம் என நினைத்து விட்டார்களோ என்னவோ. :)

      //மீண்டும் தொடரச் சொல்லுங்கள் அண்ணா//

      எதை ........... வெட்டிப்பேச்சையா? :)

      இது உங்கள் அண்ணாவுக்கு ஒரு வெட்டி வேலையாக அல்லவா போகும். பரவாயில்லையா? :)

      நீக்கு
  7. எப்போதும்போல் நல்ல விமரிசனம். மூன்று கதையும் நல்லாத்தான் இருக்கு போலிருக்கு.

    கூந்தல் கதைக்கு, மின்னூல்ல படம் இருந்ததா அல்லது இதுதான் சாக்குன்னு, நீங்களே பல பல படங்களைப் போட்டிருக்கிறீர்களா? நல்லாத்தான் இருக்கு.

    GIF என்றாலும் மரம் வெட்டப்படும் படம் பார்க்க சந்தோஷமாக இல்லை.

    "கல்யாணம் நடந்ததா? இந்த ஜோடிக்குக் குழந்தை பிறந்ததா? " - ரெண்டு கேள்வியும் செட் ஆகலயே.

    பாளையங்கோட்டை என்றதும் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று படித்தேன். எனக்கு பொ.ம.ராசமணி அவர்கள் தமிழ் எடுத்ததில்லை. எனக்கு புலவர் கிரகோரி அவர்கள் எடுத்தார். ஆனால், பொ.ம.ராசாமணி அவர்கள் எங்கள் பிரிட்டோ ஹாஸ்டலுக்கு (11-12th-79-80) வந்து சொற்பொழிவாற்றியிருக்கிறார். அவருடைய நகைச்சுவை ஆற்றலை, நான் சொல்லியா தெரிந்துகொள்ளணும். தேவி வார இதழிலும் நெடு'நாட்கள் எழுதினார். (அது ரொம்ப காலம் பின்பு). அவருடைய பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லியதன் மூலம் எனக்கு பாளையங்கோட்டை நினைவுகளைக் கொண்டுவந்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் May 10, 2017 at 6:27 PM

      வாங்கோ .... ஸ்வாமீ, வணக்கம்.

      //எப்போதும்போல் நல்ல விமரிசனம்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //மூன்று கதையும் நல்லாத்தான் இருக்கு போலிருக்கு. //

      அதெல்லாம் அவங்களோடது எல்லாமே சூப்பராகத்தான் இருக்கும். மிகப்பிரபலமான எழுத்தாளர் ஆச்சே.

      //கூந்தல் கதைக்கு, மின்னூல்ல படம் இருந்ததா//

      மின்னூலில் ஏதும் படம்?

      ’ஏப்ரில் மே யிலே பசுமையே இல்லே .... காஞ்சு போச்சுடா’ பாட்டுப்போலத்தான்.

      எனக்குத் தெரிந்து மின்னூல் கதைகளிலெல்லாம் படம் உள்ளது அடியேன் இதுவரை வெளியிட்டுள்ள பத்து மின்னூல்களில் மட்டுமேவாக்கும். (முதலில் அதற்காக பலமாகக் கை தட்டுங்கோ). அதிலும் GIF ANIMATION ஆக இல்லாமல் இருப்பதில் எனக்கு நெஞ்சு மட்டும் குறையாக உள்ளதாக்கும்.

      //அல்லது இதுதான் சாக்குன்னு, நீங்களே பல பல படங்களைப் போட்டிருக்கிறீர்களா? //

      அதே ..... அதே ..... கரெக்டா கண்டு பிடிச்சுட்டீங்கோ. சபாஷ். வெரி குட்.

      செவ்வாய்க்கிழமை 09.05.2017 நல்லிரவு/நள்ளிரவுதான் நூலை முழுவதுமாக நான் படித்து முடித்தேன். புதன் கிழமையான நேற்று (10.05.2017) பதிவு வெளியிட்டு விட வேண்டும் என்று எனக்குள் ஓர் வெறி.

      நான் எதிர்பார்த்த அளவுக்குப் படம் கிடைக்காமல் பாடாய்ப் படுத்தி விட்டது. ஏதோ அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை என்பதுபோல மனதை சமாதானம் செய்துகொண்டு, கிடைத்ததில் சிறந்தவைகளாக வெளியிட்டுள்ளேன். அதுவும் எனக்காக அல்ல. ரசிகர் பெருமக்களான உங்களின் கண்களின் குளுமைக்காகவும், கவர்ச்சிக்காகவும் மட்டுமே. படங்களே இல்லாத பதிவினை யார் படிப்பார்கள் .... சொல்லுங்கோ?

      //நல்லாத்தான் இருக்கு.//

      எது நல்லா இருக்கு? ஓஓஓஓ அதுவா? வெரி குட். நல்ல ரஸனை உங்களுக்கும். :)

      //GIF என்றாலும் மரம் வெட்டப்படும் படம் பார்க்க சந்தோஷமாக இல்லை.//

      பார்க்க சந்தோஷமாக இல்லாவிட்டாலும், உலகில் அவனவன் தினமும் எங்கோ ஒருசில மரங்களை வெட்டிக்கொண்டுதானே இருக்கிறான். வெட்டாமல் இதனை எப்படி GIF ஆக நமக்குக் காட்ட முடியும்?

      //"கல்யாணம் நடந்ததா? இந்த ஜோடிக்குக் குழந்தை பிறந்ததா? " - ரெண்டு கேள்வியும் செட் ஆகலயே.//

      குழந்தை பிறப்புக்கும், கல்யாணத்திற்கும் துளியும் சம்பந்தமே கிடையாதே, ஸ்வாமீ.

      விசு ஒரு படத்தில் ஒருவனிடம் கேட்பார்: “ஏம்பா உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?” என்று. அவன் அதற்கு பதிலாக: “மூணு குழந்தை இருக்கு, ஸார்” என்பான். “அதிருக்கட்டும், உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா இல்லையா?” எனத் திரும்பவும் கேட்பார். அவன் குழம்பிப் போவான்.

      அவன் தன் மனைவி பானுமதிக்கு லெட்டர் எழுத உட்காரும் போது விசு மீண்டும் உதவி செய்வார். ’அன்புள்ள பனுமதி’, ’அன்புள்ள பனுமாதி’ என்றெல்லாம் காலை மாத்தி மாத்திப் போட்டு கடிதம் எழுத ஆரம்பிப்பான். விசு அடிக்கடி அதில் தன் மூக்கை நுழைத்து, கரெக்‌ஷன் சொல்லுவார். ஒரு ஸ்டேஜில் வெறுத்துப்போகும் அவன்: ”அடப்போய்யா, என் பொண்டாட்டி காலை நான் எங்கே போட்டால் உனக்கென்னய்யா” என்பான். :)))))

      ஒரே தமாஷாக இருக்கும்.

      //பாளையங்கோட்டை என்றதும் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று படித்தேன். எனக்கு பொ.ம.ராசமணி அவர்கள் தமிழ் எடுத்ததில்லை. எனக்கு புலவர் கிரகோரி அவர்கள் எடுத்தார். ஆனால், பொ.ம.ராசாமணி அவர்கள் எங்கள் பிரிட்டோ ஹாஸ்டலுக்கு (11-12th-79-80) வந்து சொற்பொழிவாற்றியிருக்கிறார். அவருடைய நகைச்சுவை ஆற்றலை, நான் சொல்லியா தெரிந்துகொள்ளணும். தேவி வார இதழிலும் நெடு'நாட்கள் எழுதினார். (அது ரொம்ப காலம் பின்பு). அவருடைய பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லியதன் மூலம் எனக்கு பாளையங்கோட்டை நினைவுகளைக் கொண்டுவந்துவிட்டீர்கள்.//

      மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்வாமீ.

      நீக்கு
    2. "எது நல்லா இருக்கு? ஓஓஓஓ அதுவா? வெரி குட். நல்ல ரஸனை உங்களுக்கும். :) " - நீங்க எழுதினப்பறம்தான் இப்போ அந்தப் படங்களைப் பெரிதுபடுத்திப் பார்த்தேன். அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை என்ற வாக்கியம்தான் ஞாபகம் வந்தது. உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கவில்லை போல் தெரிகிறது. கிடைச்ச அவகாசத்துல கிடைச்ச படத்தைச் சேர்த்திருக்கிறீர்கள்.

      நீக்கு
    3. நெல்லைத் தமிழன் May 11, 2017 at 3:55 PM

      **"எது நல்லா இருக்கு? ஓஓஓஓ அதுவா? வெரி குட். நல்ல ரஸனை உங்களுக்கும். :)"** - நீங்க எழுதினப்பறம்தான் இப்போ அந்தப் படங்களைப் பெரிதுபடுத்திப் பார்த்தேன்.//

      இன்னும் பெரிசாக்கியே பார்த்துட்டேளா? போச்சு ... போச்சு ... நானே பெரிய சைஸில் வெளியிடலாமா என யோசித்தேன். எல்லோரும் ஒரேயடியா பயந்துடப் போறாளேன்னும் சின்னூண்டு சைஸ் ஆகக் கொடுத்து விட்டேன்.

      //அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை என்ற வாக்கியம்தான் ஞாபகம் வந்தது. உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கவில்லை போல் தெரிகிறது. கிடைச்ச அவகாசத்துல கிடைச்ச படத்தைச் சேர்த்திருக்கிறீர்கள்.//

      ’நாம் நினைச்சது/நினைப்பது/நினைக்க இருப்பது எதுவுமே நமக்குக் கிடைக்காவிட்டாலும், கிடைத்ததை நினைத்து வாழ்க்கையை நாம் சந்தோஷப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்பதே என் கொள்கையாகும்.

      நீக்கு
    4. மேலே என் முதல் பின்னூட்ட பதிலில் ஓர் எழுத்துப் பிழை ஏற்பட்டுள்ளது. மன்னிக்கணும். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

      மின்னூலில் ஏதும் படம்? =

      மின்னூலில் ஏது படம் ?????? கிஞ்சித்துக்கூட கிடையாது ஸ்வாமீ. :(


      நீக்கு
  8. மீள் உயிர்ப்பு நல்ல கதையாக இருக்கிறது.. ஏதோ ஒரு படத்திலும் இப்படி ஒரு கட்டம் வருகிறது.. ஹன்ஷிகா நடித்ததென நினைக்கிறேன்.. முடிவு என்ன கல்யாணம் நடந்திருக்கலாம்.. ஆனா குடும்பம் நடத்தியிருக்க மாட்டினம்:) என்றே நம்புகிறேன்.

    ஓ... முடிபற்றிய அந்த விமர்சனம் அத்தனையும் உங்களோட கற்பனையா?.. நான் ஜயஸ்ரீ அக்கா ட கற்பனை எனத் தப்பா நினைச்சுட்டேன்ன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira May 10, 2017 at 9:49 PM

      வாங்கோ _______, வணக்கம்

      //மீள் உயிர்ப்பு நல்ல கதையாக இருக்கிறது..//

      உயிர்ப்பு உள்ள கதையாக இருக்குமோ என்னவோ.

      //ஏதோ ஒரு படத்திலும் இப்படி ஒரு கட்டம் வருகிறது.. ஹன்ஷிகா நடித்ததென நினைக்கிறேன்..//

      அதுபற்றி எனக்கு சரியாகத் தெரியவில்லை. [ஹன்ஷிகாவை மட்டும் கொஞ்சூண்டு தெரியுமாக்கும். நானும் பார்த்திருக்கிறேன் ..... ஆஹ்ஹாஹ்ஹா]

      //முடிவு என்ன கல்யாணம் நடந்திருக்கலாம்.. ஆனா குடும்பம் நடத்தியிருக்க மாட்டினம்:) என்றே நம்புகிறேன்.//

      ஏன் நீங்க அப்படி நம்ப வேண்டும்? கல்யாணம் ஆனவர்கள் குடும்பம் நடத்தினாலும் நடத்தலாம். நடத்தாமல் இருந்தாலும் இருக்கலாம். அதுபோல கல்யாணமே ஆகாமலும்கூட குடும்பம் நடத்தலாம் அல்லவா.

      //ஓ... முடிபற்றிய அந்த விமர்சனம் அத்தனையும் உங்களோட கற்பனையா?.. நான் ஜயஸ்ரீ அக்காவோட கற்பனை எனத் தப்பா நினைச்சுட்டேன்ன்:).//

      எப்பூடீஈஈஈஈஈஈஈ இதனைக் கரீட்டாகக் கண்டு பிடிச்சீங்கோ? சபாஷ். வெரிகுட்.

      மேலே நம் திருவாளர்: வே. நடனசபாபதி ஸாருக்கு இதற்கான விளக்கம் கொடுத்துள்ளேன் பாருங்கோ.

      இன்னொரு விஷயம் .... விமர்சனம் என்பதில் நாம் படித்த கதையை அப்படியே வரிக்கு வரி திரும்பச்சொல்லணும் என்ற அவசியமே இல்லை.

      கதையைப் படித்து மனதில் வாங்கிக்கொண்டு அதன் குறை+நிறைகளைச் சொல்வதுடன், அந்தக் கதையினால் நம் மனதில் நமக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களையும், நாம் கேள்விப்பட்டுள்ள விஷயங்களையும், நம் சொந்த அனுபவங்களையும், நம் பாணியில் மேலும் கண் காது மூக்கு வைத்து சொந்த நடையில் சிறப்பித்து எழுதலாம். அதையேதான் நானும் கொஞ்சம் இதில் செய்திருக்கிறேன்.

      2014-ம் ஆண்டு, என் வலைத்தளத்தினில் நான் தொடர்ச்சியாக 40 வாரங்களுக்கு, வாரம் ஒன்று வீதம் வெளியிட்டு நடத்திய ‘சிறுகதை விமர்சனப்போட்டி’ யின் நான்காவது வாரத்தில் ‘காதல் வங்கி’ என்ற தலைப்பில் ஓர் சிறுகதையை வெளியிட்டிருந்தேன். அந்தக் கதைக்கான இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04.html

      அந்த என் விமர்சனப்போட்டியில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். அதில் முதல் பரிசுக்கு இருவரும், இரண்டாம் பரிசுக்கு இருவரும், மூன்றாம் பரிசுக்கு ஒருவரும், போட்டியின் நடுவர் அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தனர்.

      அதில் முதல் பரிசினை வென்ற நம் மிகப் பிரபலமான பதிவர் உயர்திரு. ரமணி ஸார் (விமர்சனச் சக்ரவர்த்தி) அவர்களின் விமர்சனத்தினை தயவுசெய்து படித்துப்பாருங்கோ. இதோ அதன் இணைப்பு:

      https://gopu1949.blogspot.in/2014/02/vgk-04-01-03-first-prize-winners.html

      அதில் உங்கள் அன்புக்குரிய இராஜராஜேஸ்வரி அக்கா கொடுத்துள்ள பின்னூட்டத்தை கீழே கொடுத்துள்ளேன். தயவுசெய்து படித்துப் பாருங்கோ.

      -=-=-=-=-=-

      இராஜராஜேஸ்வரி February 23, 2014 at 5:30 PM

      தொடர்ச்சியாக முதல் பரிசினை அதுவும் நான்காம் முறையாக வென்றுள்ள ’விமர்சன சக்ரவர்த்தி’ திரு. ரமணி ஐயா அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்..

      ஒரு விமர்சனம் எப்படி எழுதப்படவேண்டும் என்று அழகாக பாடம் நடத்துகிறார்..

      கதையின் ஒரு வரியைக் கூட மேற்கோளாக எழுதாமல் .. அதன் கருப்பொருளை அலசி ஆராய்ந்து ஆழ்ந்து பொருளுணர்த்தும் அற்புத ஆற்றல் கைவரப்பெற்ற ஐயா அவர்களுக்கு விமர்சனச் சக்ரவர்த்தி பட்டம் மிகப்பொருத்தம் தான்..!

      வாழ்த்துகள்...பாராட்டுக்கள்..!

      -=-=-=-=-=-

      நீக்கு
  9. காய்க்காத மரம்... முடிவில் மரம் வெட்டப்படாது என்றே நம்புகிறேன்..

    ஆனா உண்மையில் அந்த மரம் வெட்டும் படம் என்னமோ செய்கிறது பார்க்க.. அப்படியான ஒரு மரத்தை குறுக்கே தறிப்பதுபோல பார்க்க மனம் கனக்கிறது.

    ஜெயஸ்ரீ அக்கா வின் கதைகளுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira May 10, 2017 at 9:53 PM

      //காய்க்காத மரம்... முடிவில் மரம் வெட்டப்படாது என்றே நம்புகிறேன்..//

      முடிவில் (வேரில்) மட்டுமல்ல. ஆரம்பத்திலிருந்தே இலைகள் கிளைகளிலிருந்தே வெட்டப்படக்கூடாது என்பதே எனது விருப்பமாகும். கதையில் வரும் அந்த மரம் என்ன ஆச்சோ? எனக்கும் ஒரே கவலையாக்கீதூஊஊஊஊ.

      //ஆனா உண்மையில் அந்த மரம் வெட்டும் படம் என்னமோ செய்கிறது பார்க்க.. அப்படியான ஒரு மரத்தை குறுக்கே தறிப்பதுபோல பார்க்க மனம் கனக்கிறது.//

      ஆமாம். எனக்கும் தான். மேலே நம் ஸ்வாமீயும் அதையே சொல்லியிருக்கிறார். அவருக்கும் நான் பதில் அளித்துள்ளேன், பாருங்கோ.

      //ஜெயஸ்ரீ அக்கா வின் கதைகளுக்கு வாழ்த்துக்கள்.//

      ’அக்கா’வுக்கான ’கொக்கா’வின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள். :)

      நீக்கு
  10. இன்னும் எத்தனை நாள் விமரசனமாகவே கடத்தப் போகிறீர்கள் என்று தெரியவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Chellappa Yagyaswamy May 10, 2017 at 10:45 PM

      வாங்கோ ஸ்வாமீ ...... வணக்கம்.

      //இன்னும் எத்தனை நாள் விமரசனமாகவே கடத்தப் போகிறீர்கள் என்று தெரியவில்லையே...//

      எனக்கும் இப்போது அதுபற்றி சரியாகத் தெரியவில்லை ஸ்வாமீ.

      இந்த திருமதி. ஜெயஸ்ரீ அவர்கள் எனக்குத் தெரிந்த ஓர் மிகப் பிரபலமான எழுத்தாளவர் ஆவார்.

      அவருடைய எழுத்துத் திறனும், என்னுடைய ரஸிப்புத்தன்மையும் ஒரே நேர்க்கோட்டிலும், ஒரே அலைவரிசையிலும் அமைந்து போய் உள்ளன.

      மேலும் இவர் தான் இதுவரை எழுதி வெளியிட்டுள்ள ஐந்து மின்னூல்களையும், மின்னல் வேகத்தில், முதல் நபராக எனக்கு அன்பளிப்பாக (AS A FREE GIFT) அனுப்பி வைத்துள்ளார்கள்.

      கேட்டால் என்னுடைய ’மின்னல் வேகத்தில் மின்னூல்கள்’ என்ற https://gopu1949.blogspot.in/2017/03/blog-post_30.html இந்தப் பதிவினைப் படித்த அவர்களுக்கு தானும் மின்னூல்கள் வெளியிட வேண்டும் என்ற ஓர் உந்துதல் ஏற்பட்டதாம். ஆகையால் இந்த மின்னூல்கள் வெளியீடு விஷயத்தில் மட்டும், ஏகலைவன் போல என்னை தன் மானஸீக குருவாக ஏற்றுக்கொண்டுள்ளார்களாம்.

      இருப்பினும் நான் அவர்களின் கட்டை விரலை குரு தக்ஷணையாகக் கேட்கப்போவது இல்லை. :)))))

      மிகச் சாதாரணமானவனான என்னையும் ஓர் குருவாக நினைத்து, மதித்து அன்புடனும், ஆசையுடனும் இலவசமாக மின்னூல்களை அனுப்பியிருக்கும் போது, அவற்றை என்னால் பிரித்துப் படிக்காமல் இருக்க முடியவில்லை. படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் படித்து முடிக்காமலும் இருக்க முடியவில்லை. அவ்வளவு ஒரு சுவையோ சுவை, ருசியோ ருசி அவர்களின் எழுத்துக்கள்.

      படித்து முடித்ததும் பரவஸம் ஏற்பட்டு, அதனைப் பாராட்டி நான்கு பேர்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற ஓர் உந்துதல் எனக்கும் உடனே ஏற்பட்டு விடுகிறது.

      அதனால் ஒவ்வொரு மின்னூலுக்கு ஒவ்வொரு பதிவு வீதம் இதுவரை நான்கு பதிவுகள் வெளியிட்டு விட்டேன்.

      மேலும் அவர்களின் ஒரேயொரு மின்னூல் என்னால் படிக்கப்பட வேண்டியது பாக்கியுள்ளது. அதையும் நான் வெற்றிகரமாக முடித்து விட்டால் இப்போதைக்கு நான் கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்ளலாம்.

      மேலும் இன்னும் எவ்வளவு மின்னூல்கள் வெளியிடுவார்களோ எனக்கு அதுபற்றி இப்போது எதுவும் தெரியாது ஸ்வாமீ ..... ஈஸ்வரோ ரக்ஷது.:)

      நீக்கு
    2. மேலே என் பின்னூட்ட பதிலில் ஓர் எழுத்துப் பிழை
      ஏற்பட்டுள்ளது. மன்னிக்கணும். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

      எழுத்தாளவர் = எழுத்தாளர்

      நீக்கு
  11. விமரிசனங்கள் அருமை. நான் கணிணியில் ஏற்கெனவே நூற்றுக்கணக்கான மின்னூல்களும் வேறு புத்தகங்களும் சேகரித்து வைத்துள்ளேன். அவைகளை இந்த ஜன்மாவில் படித்து முடிப்பேன் என்ற நம்பிக்கை இல்லை. ஆகவே இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகள் அருமையாக இருப்பினும் வாங்குவதாக இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப.கந்தசாமி May 11, 2017 at 4:01 AM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.

      //விமரிசனங்கள் அருமை.//

      மிக்க மகிழ்ச்சி, ஸார்.

      //நான் கணிணியில் ஏற்கெனவே நூற்றுக்கணக்கான மின்னூல்களும் வேறு புத்தகங்களும் சேகரித்து வைத்துள்ளேன்.//

      அடடா ! அச்சு நூல்களால் வீட்டில் அடசல் என்றால், மின்னூல்களால் கணினியிலும் அடசலாகச் சேர்ந்து போய் விடுமே. அடப்பாவமே !

      //அவைகளை இந்த ஜன்மாவில் படித்து முடிப்பேன் என்ற நம்பிக்கை இல்லை.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! என்னைப்போலவே உங்களுக்கும் இதில் இப்படி நம்பிக்கையில்லாமல் போய் விட்டது. இதைப் படித்ததும் நான் குபீரென்று சிரித்து விட்டேன்.

      எதையுமே பளிச்சென்று தேங்காய் உடைப்பது போல வெளிப்படையாகப் பேசும் உங்களை அப்படியே கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கணும் போல, எனக்கு ஆசையாக உள்ளது. இதற்காகப் போய் என்னால் கோவைக்கு வரமுடியுமா என்ன? உங்கள் புகைப்படங்கள் தான் என்னிடம் நிறைய இருக்கின்றனவே. அதுபோதும் எனக்கு.

      //ஆகவே இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகள் அருமையாக இருப்பினும் வாங்குவதாக இல்லை.//

      வாங்காதீங்கோ ..... வாங்காதீங்கோ ..... தயவுசெய்து வாங்காதீங்கோ. காசைக் கரியாக்காதீங்கோ. நமக்கெல்லாம் வயசாச்சு அல்லவா. கையில் துட்டு மட்டும்தான் எப்போதும் இருக்கணும்.

      இது ஏதோ எனக்கு ஓஸியில் அன்பளிப்பாக அனுப்பினார்கள். நானும் படித்தேன். எனக்கும் மனசுக்குத் திருப்தியாக இருந்ததால் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான்.

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

      அன்புடன் கோபு

      நீக்கு
    2. "காசைக் கரியாக்காதீங்கோ" - இது தீபாவளி வெடிக்குன்னா சொல்லுவா. நீங்க புத்தகங்களுக்கும் சேர்த்தே சொல்லிட்டீங்க.

      நீக்கு
    3. நெல்லைத் தமிழன் May 11, 2017 at 3:51 PM

      //"காசைக் கரியாக்காதீங்கோ" - இது தீபாவளி வெடிக்குன்னா சொல்லுவா. நீங்க புத்தகங்களுக்கும் சேர்த்தே சொல்லிட்டீங்க.//

      தீபாவளி வெடிகளே பழைய புத்தகக் காகிதங்களை வைத்துத்தானே சுருட்டி சுருட்டித் தயாரிக்கிறார்கள்.

      அத்யாவஸ்யமான உணவு, உடை, இருப்பிடம் தவிர அனைத்து, ஆடம்பரமான வெட்டிச்செலவுகளும் காசைக் கரியாக்குவது மட்டுமே.

      நீக்கு
  12. பட அலங்காரங்களுடன் விமர்சனப் பதிவு
    வழக்கம்போல் வெகு வெகு அருமை

    கதைக்கான தலைப்புகள் அதன் கருவுடன்
    மிக ஒத்துப் போவது வெகு வெகு அருமை

    வழமைபோல அவர்கள் எழுத்து நடையைப்
    புரிந்து கொள்ளும்படியாக சில பத்திகளைக்
    கொடுத்திருந்தது அருமை

    உங்கள் விமர்சனப் பதிவைப் பெறவாவது
    என்னுடைய பதிவுகளை
    மின் நூலாக்கலாமா என்னும் எண்ணம்
    வருவதைத் தவிர்க்க இயலவில்லை

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S May 11, 2017 at 5:47 AM

      வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

      //பட அலங்காரங்களுடன் விமர்சனப் பதிவு வழக்கம்போல் வெகு வெகு அருமை.//

      படங்களைத் தேடித்தேடி ஓடிஓடி மிகவும் அவசர அவசரமாகச் சேர்த்தேன், அதுவும் எனக்காக அல்ல ..
      பதிவினைப்படிக்க வருவோரின் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கணுமே என்ற ஒரே கவலையில் மட்டுமே. :)

      நீங்கள் ஒருவர்தான் இதனை பின்னூட்டத்தில் அலங்காரப்படுத்தி அழகாகவும் வெகு வெகு அருமையாகவும் இங்கு எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், ஸார்.

      //கதைக்கான தலைப்புகள் அதன் கருவுடன் மிக ஒத்துப் போவது வெகு வெகு அருமை//

      தங்களின் இந்த ‘வெகு வெகு அருமை’ என்ற அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி, ஸார். இது அந்த மின்னூல் ஆசிரியருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடும்.

      //வழமைபோல அவர்கள் எழுத்து நடையைப் புரிந்து கொள்ளும்படியாக சில பத்திகளைக்
      கொடுத்திருந்தது அருமை.//

      என்னதான் நான் என் மதிப்புரையில் எடுத்துச் சொன்னாலும்கூட, அவர்களின் எழுத்து நடையிலேயே சிலவற்றையாவது படிக்கும் போதுதான், தங்களைப்போன்ற தலை சிறந்த எழுத்தாளர்களால், அந்த நடையினை சுலபமாக எடைபோட்டுப் புரிந்துகொள்ள முடியும் என்பதால் மட்டுமே அவ்வாறு கொடுத்துள்ளேன். அதுவும் அருமை எனச் சொல்லியுள்ளதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

      //உங்கள் விமர்சனப் பதிவைப் பெறவாவது என்னுடைய பதிவுகளை மின் நூலாக்கலாமா என்னும் எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. வாழ்த்துக்களுடன்...//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! *விமர்சனச் சக்ரவர்த்தி* அவர்களாலேயே மின்னூல் வெளியிடப்பட்டால் அதை வேறு யாரால் விமர்சனம் செய்து எழுத முடியும்?

      தங்களின் அன்பான வருகைக்கும், தங்களுக்கு வந்துள்ள இந்த மிக உயர்ந்த எண்ணத்திற்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      *விமர்சனச் சக்ரவர்த்தி* ..... வாழ்க!

      Ref Links:

      https://gopu1949.blogspot.in/2014/02/vgk-04-01-03-first-prize-winners.html

      https://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html

      நீக்கு
  13. திருமதி சித்ரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே. பி. ஜனா... May 11, 2017 at 6:47 AM

      வாங்கோ, வணக்கம்.

      //திருமதி சித்ரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.//

      மிகவும் சந்தோஷம், ஸார்.

      நீக்கு
  14. தங்கள் விமரிசனப் பணி மனதில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே. பி. ஜனா... May 11, 2017 at 6:48 AM

      //தங்கள் விமரிசனப் பணி மனதில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  15. ஜெயஸ்ரீ அவர்களின் இரண்டு கதைகளும் மிக அருமை.
    விமர்சனம் மிக மிக அருமை.

    வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    சித்திரை பெண் சித்திராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு May 11, 2017 at 7:25 AM

      வாங்கோ மேடம். வணக்கம்.

      //ஜெயஸ்ரீ அவர்களின் இரண்டு கதைகளும் மிக அருமை. விமர்சனம் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் இருவருக்கும்.//

      அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். மீண்டும் மிக மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. தங்களின் தங்கமான வாழ்த்துகளுக்கு என் நன்றிகள், மேடம்.

      //சித்திரை பெண் சித்திராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.//

      மிகவும் சந்தோஷம், மேடம். :)

      நீக்கு
  16. மூன்றும் முத்தான முன்னுரைகள் ..பின்னல் :) ரசித்தேன் ...
    அந்த மரம் வெட்டப்பட்டிருக்காது பூனைக்குட்டி பத்திரமாக இருக்கும் என நம்புகிறேன்

    பதிவர் சித்ராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angelin May 11, 2017 at 7:30 PM

      வாங்கோ, வணக்கம்.

      //மூன்றும் முத்தான முன்னுரைகள் .. பின்னல் :) ரசித்தேன் ...//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //அந்த மரம் வெட்டப்பட்டிருக்காது பூனைக்குட்டி பத்திரமாக இருக்கும் என நம்புகிறேன்.//

      :)

      //பதிவர் சித்ராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

      மிகவும் சந்தோஷம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. வணக்கம் கோபு சார்!
    கதையின் முடிவை யூகிக்கும் திறன் பற்றி ஏற்கெனவே வியந்திருக்கிறேன். மீள் உயிர்ப்பு கதையிலும் வழக்கம் போல யூகித்து விட்டீர்கள் போலிருக்கிறது. அதுவே சின்னக் குறையாக உங்களுக்குத் தெரிவதில் வியப்பில்லை. நீங்கள் யூகிக்கவே முடியாத முடிவு கொண்ட கதை ஒன்றை எழுதச் சொல்லிப் போட்டி வைக்கலாம்!
    ‘முடி’க்கதை இத்தோடு ‘முடி’யவில்லை. ‘முடி’ போல சுமார் 24 பக்கங்களுக்கு நீண்டு கொண்டே போகிறது. ‘முடி’வில் என்ன ஆச்சு?”
    என ‘முடி’யைப் பின்னியே எழுதிய ‘முடி’வுரை என்னை மிகவும் கவர்ந்தது
    ‘பூக்காத + காய்க்காத மாமரத்தை வெட்ட நினைப்பதையும், தாய்மையடையாத மனைவியைக் கணவன் விலக்கி வைக்க நினைப்பதையும் ஒப்பிட்டு இந்தக் கதையை மிகவும் அழகாகவும், உணர்வு பூர்வமாகவும் எழுதி சிந்திக்க வைத்துள்ளார்கள்.”

    என்ற உங்கள் மதிப்புரையிலிருந்து இக்கதை மிகவும் சிறப்பாக இருக்கும் எனத் தெரிகின்றது.

    ஆசிரியருக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி May 11, 2017 at 11:05 PM

      //வணக்கம் கோபு சார்!//

      வாங்கோ மேடம், வணக்கம் மேடம்.

      //கதையின் முடிவை யூகிக்கும் திறன் பற்றி ஏற்கெனவே வியந்திருக்கிறேன்.//

      தாங்கள் மட்டுமல்ல, தங்களின் தந்தையும், சமீபத்தில் இருமுறை இதுவிஷயமாக என்னை வியந்து பாராட்டியுள்ளார்கள். மிக்க மகிழ்ச்சி மேடம். :)

      //மீள் உயிர்ப்பு கதையிலும் வழக்கம் போல யூகித்து விட்டீர்கள் போலிருக்கிறது. அதுவே சின்னக் குறையாக உங்களுக்குத் தெரிவதில் வியப்பில்லை.//

      ஆமாம் மேடம். நானும் ஒரு சிறுகதை எழுத்தாளனாக இருப்பதனாலோ என்னவோ கதையின் போக்கிலிருந்தும், கதையில் சொல்லப்படும் ஒருசில டர்னிங் பாயிண்ட்ஸ்களிலிருந்தும், இதனை மிகச்சுலபமாக யூகித்துவிட முடிகிறது. பொதுவாக சாதாரண வாசகர்களுக்கு இது ஒரு குறையாகவே தெரிய வாய்ப்பில்லை.

      //நீங்கள் யூகிக்கவே முடியாத முடிவு கொண்ட கதை ஒன்றை எழுதச் சொல்லிப் போட்டி வைக்கலாம்!//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நல்லதொரு ஐடியாவாகத்தான் உள்ளது. பார்ப்போம்.

      **‘முடி’க்கதை இத்தோடு ‘முடி’யவில்லை. ‘முடி’ போல சுமார் 24 பக்கங்களுக்கு நீண்டு கொண்டே போகிறது. ‘முடி’வில் என்ன ஆச்சு?”** என ‘முடி’யைப் பின்னியே எழுதிய ‘முடி’வுரை என்னை மிகவும் கவர்ந்தது.//

      தாங்கள் ஒருவர் மட்டுமாவது இதனைக் குறிப்பிட்டுச் சொல்லி என்னைப் பாராட்டுவீர்கள் என நான் மிகவும் எதிர்பார்த்தேன். இந்த என் எதிர்பார்ப்பில் என்னைத் தாங்கள் ஏமாற்றவில்லை. இதுபோன்ற ஒருசில ஸ்பெஷல் நகைச்சுவை ரசனைகளில் நம் இருவர் எண்ணங்களும் ஒரே அலைவரிசையில் உள்ளன. இதனை நான் பலமுறை உங்களின் பின்னூட்டங்கள் மூலம் உணர்ந்து மகிழ்ந்துள்ளேன். தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம். :)

      **‘பூக்காத + காய்க்காத மாமரத்தை வெட்ட நினைப்பதையும், தாய்மையடையாத மனைவியைக் கணவன் விலக்கி வைக்க நினைப்பதையும் ஒப்பிட்டு இந்தக் கதையை மிகவும் அழகாகவும், உணர்வு பூர்வமாகவும் எழுதி சிந்திக்க வைத்துள்ளார்கள்.”** என்ற உங்கள் மதிப்புரையிலிருந்து இக்கதை மிகவும் சிறப்பாக இருக்கும் எனத் தெரிகின்றது.//

      ஆமாம் மேடம். மிகச்சிறப்பாகவே இருக்கின்றது. திடீரென்று கதை முடிந்து விட்டது போன்ற ஒரு உணர்வினையும் ஏற்படுத்துகின்றது. மின்னூலின் 65-ம் பக்கத்தை விறுவிறுப்பாக படித்துவிட்டு அடுத்த பக்கமான 66-ஐ அவசரமாகப் புரட்டினால் அதன் பாதிப்பக்கத்திலேயே கதை முடிந்து போய் விடுகிறது. கதையின் முடிவு இப்படித்தான் இருக்கும் என அவரவர்களின் யூகத்திற்கே விட்டுவிட்டார்கள்.

      //ஆசிரியருக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்!//

      தங்களின் அன்பான வருகைக்கும், மிகவும் அழகான + ஆழமான + ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நன்றியுடன் கோபு

      நீக்கு