என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 19 அக்டோபர், 2011

மா மி யா ர்


மா மி யா ர்

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-





உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமியாரைக் காணாமல் வீடு முழுவதும் தேடிவிட்டு, தன் கணவரிடம் வினவினாள்.



”அம்மா இங்கு இல்லை. எங்கு போனார்களோ தெரியாது. இனி வரவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வனஜாவை கடுப்புடன் முறைத்துப் பார்த்து விட்டு, எங்கோ வெளியே புறப்பட்டுச் சென்று விட்டார். 



பகல் பூராவும் எப்போதுமே இந்த மனுஷனுக்கு வனஜா மேல் ஒரே கடுப்பு வருவது சகஜம் தான். வாக்கப்பட்டு வந்து [வாழ்க்கைப்பட்டு வந்து] ஆறு மாதங்களாகத்தான் அவளும் பார்த்து வருகிறாளே! ஆனால் ராத்திரியானால் அவரின் கடுப்பையெல்லாம் எங்கோ பறந்து போக வைத்து, பெட்டிப்பாம்பாக ஆக்கிவிடுவாள், அந்த கெட்டிக்காரி, வனஜா. 



ஜாதக விசேஷம் அப்படி. ஜாதகப் பொருத்தம் இல்லை, இந்த ரெண்டு ஜாதகத்தையும் சேர்க்க வேண்டாம் என்றார் ஒரு ஜோஸ்யர். செகண்ட் ஒபினியனுக்காக இன்னொரு ஜோஸ்யரிடம் போனார், வனஜாவின் தந்தை.



அந்த ஜோஸ்யர் ஜாதகங்களைப் பார்த்துவிட்டு, பையனுக்குப் புனர்பூசம் நக்ஷத்திரம்; பெண்ணுக்கு உத்திராடம் நக்ஷத்திரம். சஷ்டாஷ்டக தோஷம் மட்டும் உள்ளது என்றார். அதுவும் மித்ர சஷ்டாஷ்டகம் தான். மற்றபடி தேவலாம் என்றார்.



“சஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன? அது என்ன செய்யும்? அதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா?  என்றார் வனஜாவின் அப்பாவும் விடாப்பிடியாக. 



வந்துள்ள நல்ல வரனை விடக்கூடாது. நல்ல பையன். வீட்டுக்கு ஒரே பையன். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான் இருக்கிறார்கள். அவர்களும் மிகவும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். நல்ல உத்யோகம். நல்ல சம்பளம். சொந்த வீடும் சொத்து சுகமும் உள்ளது. ஜாதகப்பொருத்தம் இல்லை என்று சொல்லி, மற்ற எல்லாம் பொருந்திய மாப்பிள்ளையை நழுவவிடலாமா? என்பது பெண்ணைப் பெற்றவரின் கவலை.



”சஷ்டாஷ்டகத்திலும் இது மித்ர சஷ்டாஷ்டகம் தான். அதனால் பரவாயில்லை ஜோடி சேர்க்கலாம்.  என்ன ஒன்று, இதுபோன்ற தம்பதியினர் பகல் பூராவும் சண்டை போட்டுக் கொண்டே வாக்குவாதம் செய்துகொண்டே இருப்பார்கள். ராத்திரியானா சமாதானமாப் போய்விடுவார்கள்” என்று புன்சிரிப்புடன் சொல்லிக்கொண்டே, வாயில் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலை, பாக்கு பன்னீர்ப் புகையிலையை எட்டிப்போய்த் துப்பிவிட்டு, ஒரு சொம்பு தண்ணீரால் வாயையும் கழுவிக்கொண்டு வந்தவர் “என்ன ஸ்வாமி, நான் சொல்வது விளங்கிச்சா உமக்கு” என்று மீண்டும் நமட்டுச் சிரிப்பொன்றை வெளிக்கொணர்ந்தார், அந்த ஜோஸ்யர். 



“நானும் என் சம்சாரமும் கூட இதே போலத்தானே!; எங்க வனஜா பிறந்தன்னிலேந்து கடந்த 25 வருஷமா, பகலெல்லாம் சண்டை போட்டுண்டு, ராத்திரியானா சமாதானம் ஆகிண்டு தானே இருக்கோம்!; அதனால் என்ன பரவாயில்லைன்னு எனக்குத் தோணுது; 



வேறு ஒன்றும் ஜாதகக்கோளாறு இல்லையே! அப்போ மித்ர சஷ்டாஷ்டகம் மட்டும் தான்; அதனால் பரவாயில்லை; மேற்கொண்டு ஆக வேண்டிய கல்யாண வேலைகளைப்பார்க்கலாம்னு சொல்றேளா!” என்றார் வனஜாவின் அப்பா, மிகுந்த ஆர்வத்துடன்.



அதுபோல பாஸிடிவ் ஆகச் சொன்னால் தேவலாம் என்று பெண்ணைப் பெற்றவரே எதிர்பார்க்கிறார் என்பது ஜோஸியருக்கும் புரிந்து விட்டது. 



“பேஷா இவங்க ரெண்டு பேரையும் ஜோடி சேர்க்கலாம் ஸ்வாமி;  இன்றைக்கு சண்டை சச்சரவு இல்லாத புருஷன் பெண்டாட்டி எங்கே இருக்கிறார்கள்?” எங்கேயாவது நூற்றுக்கு ஒத்தரோ, ஆயிரத்துக்கு ஒத்தரோ இருக்கலாம்; குடும்பம்னா சண்டை சச்சரவுகள் இருக்கத்தானே செய்யும்;



இப்போ நானும் என் சம்சாரமுமே மித்ரசஷ்டாஷ்டக தோஷம் உள்ளவா தான்;  எங்களுக்கு விளையாட்டுபோல ஆறு புள்ளைகள், ரெண்டு பொண்ணுகள். பகலெல்லாம் இங்கே தான் ஜோஸ்யம் பார்த்துண்டு இருப்பேன். வீட்டுக்குப்போனா ஒரே பிரச்சனைகள்; ராத்திரி படுத்துக்க மட்டும் தான் வீட்டுக்கே போவேனாக்கும்”   என்று சொன்ன ஜோஸ்யருக்கு ரூபாய் 100 க்கு பதில் ரூபாய் 200 ஆகக் கொடுக்கப்பட்டது, வனஜாவின் அப்பாவால்.



இந்த ஜோஸ்யர் சொன்ன மித்ர சஷ்டாஷ்டக விஷயம் வனஜாவுக்கும் கல்யாணத்திற்கு முன்பே தெரிவிக்கப்பட்டது. அவளுக்கு இதிலெல்லாம் அதிகமாக நம்பிக்கை ஏதும் கிடையாததால், இதை ஒரு பொருட்டாகவே அவள் எடுத்துக் கொள்ளவில்லை. 




இப்போது தான் அவ்வாறு க்ளீனாக எடுத்துச் சொன்ன ஜோஸ்யர் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்கிறாள். சில விஷயங்கள் எல்லாம் பட்டால் தானே, அனுபவித்துப் பார்த்தால் தானே, புரிகிறது.   



சரி இந்த சஷ்டாஷ்டக தோஷத்தைப் பற்றிய ஆராய்ச்சியை இத்துடன் விட்டு விட்டு, தொலைந்து போன வனஜாவின் மாமியார் என்ன ஆனாள்ன்னு பார்ப்போமா!




நேற்று காலையில் உப்புச்சப்பில்லாத ஒரு விஷயத்தில் ஒருவருக்கொருவர் சற்றே சப்தம் போட்டுப் பேசிக்கொண்டதனால் ஏற்பட்ட விளைவே இது,  என்பது வனஜாவுக்குப் புரிந்து விட்டது.




நேற்று சாயங்காலம், நான் என் அம்மா வீடுவரை போய்விட்டு நாளைக்கு வந்து விடுகிறேன் என்று தான் சொன்னபோதே, மாமியார் முகத்தில் ஒரு மகிழ்ச்சியோ, பதிலில் ஒரு சுரத்தோ இல்லை என்பதை எண்ணிப்பார்த்தாள்.




தன் கணவராகிய ஒரே பிள்ளையை பெற்றெடுத்தவள் வேறு எங்கு தான் கோபித்துக்கொண்டு போய் இருப்பார்கள்? என்று ஊகிக்க முடியாமல் தவியாய்த் தவித்தாள், வனஜா.




வனஜா தன் தாயாருக்கு போன் செய்து, தான் பஸ் பிடித்து செளகர்யமாக, வந்து சேர்ந்து விட்டதைத் தெரிவித்து விட்டு, தன் மாமியார் காணாமல் போய் உள்ள விஷயத்தையும் கலக்கத்துடன் கூறினாள். 




”நேத்திக்கு ஞாயிற்றுக்கிழமையா இருக்கே, நம் கையால் தான் இன்று சமையல் செய்வோமேன்னு, சமையல் அறையில் புகுந்தேன். அது என்ன பெரிய ஒரு தப்பா? என்னை சமைக்க விடாம தடுத்துட்டாங்க, என் மாமியார். 




“நான் என்ன தீண்டத்தகாதவளா” ன்னு ஏதேதோ கோபமாப் பேசிட்டேன்” என்றாள் வனஜா தன் தாயிடம்.




”வயசான காலத்திலே, ஆசை ஆசையா, உன் மாமியார் தன்னால முடிஞ்ச எல்லாக் காரியங்களையும் இழுத்துப்போட்டு செஞ்சு கொடுத்து, உனக்கு ரொம்பவும் உபகாரமாகத்தானே இருக்காங்க! அவங்க மனசு வருத்தப்படும்படியா ஏன் நீ ஏதாவது இப்படி பேசுகிறாய்?;




தலைய வாரிப்பின்னிண்டு, மூஞ்சிய பளிச்சுனு அலம்பிண்டு, தலை நிறையப் பூ வெச்சுண்டு, புதுசு புதுசா புடவையைக்கட்டிண்டு, நீ உன் புருஷனை கவனிச்சிண்டா போதும்டீ கண்ணேன்னு தானே உன் மாமியார் அடிக்கடி சொல்றாங்க!; 




அதுக்கு நீ ”உங்களுக்கு வயசாயிடுச்சு; நீங்க எதுவும் செய்ய வேண்டாம்; நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க;  நானே எல்லாம் பார்த்துக்கறேன்னு’ சொல்கிறாயாமே! பாவம், நீ இதுபோலச் சொல்லும் போதெல்லாம், அது அந்த அம்மாவை மனதளவில் பலகீனமானவங்களா ஆக்கிடுதோ என்னவோ;  



மேலும் நீ புதிசா கல்யாணம் ஆகி வந்தச் சின்னப்பொண்ணு; சமையல் கட்டுல அவசரத்துல ஏதாவது நீ சுட்டுக்கொண்டாலோ , குக்கர் முதலியவற்றைத் திறக்கும் போது உன் முகத்தில் ஆவி அடித்து விட்டாலோ, அப்பளம் வடகம் முதலியன பொரிக்கும் போது ஏதாவது சுடச்சுட எண்ணெய் தெளித்து விட்டாலோ, அந்த அம்மாவுக்கும், உன் கணவருக்கும் தாங்கவே முடியாதாம்; 




அன்றொரு நாள், நான் அங்கே வந்திருந்த போது, குழந்தை மாதிரி, கண் கலங்கிப்போய், என் கையைப் பிடித்துக்கொண்டு என்னிடம் இதெல்லாம் சொன்னாங்க! இவ்வளவு நல்ல மனசு உள்ள உன் மாமியாரை புரிந்து கொள்ளாமல் நீ ஏன் அவங்க மனசு வருத்தப்படும் படியாக நடந்து கொள்கிறாய்?” என தன் மகளைத் திட்டித் தீர்த்தாள் வனஜாவின் தாய்.




”சரிம்மா, இப்போ அவங்களைக் காணோமே, நான் எங்கு போய் அவங்களைத் தேடுவேன்?” அழாக்குறையாகக் கேட்டாள், வனஜா தன் தாயிடம்.




”நேத்து சாயங்காலத்திலிருந்து உன்னைப் பார்க்காமல், வீடே விருச்சோன்னு இருந்ததாகச் சொல்லி, இங்கே நம் வீட்டுக்குப் புறப்பட்டு வந்திருக்காங்க உன் மாமியார். நீ இங்கிருந்து புறப்பட்ட அதே நேரம் அவங்க அங்கிருந்து புறப்பட்டிருக்காங்க. உன்னை நேரில் சந்தித்துப்பேசி சமாதானப்படுத்தி, அழைச்சிட்டுப் போகலாம்னு, பாவம் அவங்களே புறப்பட்டு வந்திருக்காங்க;




”நீ இங்கே இல்லாமல் புறப்பட்டு விட்டதால், ஒவ்வொரு விஷயமா என்னிடம் இப்போ தான் கண் கலங்கியபடிச் சொன்னாங்க”




“இன்னும் என்னென்ன சொன்னாங்க, என் மாமியார்” வனஜா கேட்டாள்.




சின்னஞ்சிறுசுகள், கல்யாணம் ஆன புதுசு, ஞாயிற்றுக்கிழமை லீவுன்னா, சினிமா, டிராமா, பார்க்கு, பீச், குற்றாலம், கொடைக்கானல்ன்னு ஜாலியாப் போய்ட்டு வந்தால் தானே, நானும் நீங்களும் சீக்கரமா பாட்டியாகப் பிரமோஷன் வாங்க முடியும்னு சொன்னாங்க; 




இதெல்லாம் புரியாம உங்க பொண்ணு, இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை, நானே சமைக்கிறேன்னு எனக்குப் போட்டியா சமையல்கட்டுக்கு வந்தாள்னா, நான் அவளுக்கு எப்படி இதையெல்லாம் புரிய வைக்கமுடியும்” என்று சொல்லி வருத்தப்படறாங்க. 




இவ்வளவு நல்ல ஒரு மாமியாரை அடைய நீ போன ஜன்மத்துலே ஏதோ புண்ணியம் செய்திருக்கனும்னு நினைக்கிறேன். சம்பந்தியம்மாவுக்கு நம்ம வீட்டுலே விருந்து போட்டு, நானே அவங்களை அங்கே அழைச்சிட்டு வரேன், நீ கவலைப்படாம இரு” என்றாள் வனஜாவின் தாய்.




தங்கமான தன் மாமியாரின், நியாயமான எதிர்பார்ப்பை, தன் தாயின் மூலம் அறிந்துகொண்ட வனஜாவுக்கு, ஒரே மகிழ்ச்சி கலந்த வெட்கம் ஏற்பட்டது.  




மாமியார் வந்ததும், தான் ஏதாவது நேற்று தவறுதலாகப் பேசியிருந்தால், தயவுசெய்து மனதில் வைத்துக்கொள்ளாமல் மன்னித்து விடுங்கள் என்று சொல்லி நமஸ்கரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள், வனஜா.


-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o- 




இந்தச்சிறுகதை 18.10.2011 வல்லமை மின் இதழில் வெளியிடப்பட்டுள்ளது
Reference: http://www.vallamai.com/archives/9301/

53 கருத்துகள்:

  1. ஒவ்வொரு கணவனின் ஏக்கம் உங்கள் வார்த்தைகளில்.. இது போல் நடக்குமா?

    பதிலளிநீக்கு
  2. நல்ல மாமியார்.தன் மகளுக்கு மாமியாரை புரிய வைத்த நல்ல அம்மா.

    சூர்ய ஜீவாவின் கருத்து உண்மையென்றாலும் அவர் கருத்து எனக்கு சிரிப்பை உண்டாக்கிவிட்டது.

    பதிலளிநீக்கு
  3. மாமியார் வந்ததும், தான் ஏதாவது நேற்று தவறுதலாகப் பேசியிருந்தால், தயவுசெய்து மனதில் வைத்துக்கொள்ளாமல் மன்னித்து விடுங்கள் என்று சொல்லி நமஸ்கரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள், வனஜா./

    சுபமாக சந்தோஷமான முத்தாய்ப்பான வரிகளுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அதுபோல பாஸிடிவ் ஆகச் சொன்னால் தேவலாம் என்று பெண்ணைப் பெற்றவரே எதிர்பார்க்கிறார் என்பது ஜோஸியருக்கும் புரிந்து விட்டது.

    வித்தை கால்பங்கு!
    பேச்சு சாமர்த்தியம் முக்கால் பங்கு!
    இன்றைய ஜோதிடம் இப்படித்தான்.

    பதிலளிநீக்கு
  5. இப்போது தான் அவ்வாறு க்ளீனாக எடுத்துச் சொன்ன ஜோஸ்யர் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்கிறாள். சில விஷயங்கள் எல்லாம் பட்டால் தானே, அனுபவித்துப் பார்த்தால் தானே, புரிகிறது. /

    பட்டும் சுட்டும்தானே மிகப் பல விஷயங்கள் அறிகிறோம்??!!!

    பதிலளிநீக்கு
  6. தங்கமான தன் மாமியாரின், நியாயமான எதிர்பார்ப்பை, தன் தாயின் மூலம் அறிந்துகொண்ட வனஜாவுக்கு, ஒரே மகிழ்ச்சி கலந்த வெட்கம் ஏற்பட்டது.


    நல்ல மாமியார்!!
    நல்ல மருமகள்!!!!!

    பதிலளிநீக்கு
  7. நல்ல மாமியார். கொடுத்து வைத்த மருமகள்.
    அழகான கதை ஐயா.

    பதிலளிநீக்கு
  8. அபூர்வமான மாமியார்
    கேட்கவே சந்தோஷமாக உள்ளது
    போன ஜென்மத்தில் மருமகள்
    அத்தனை புண்ணியம் பண்ணியிருக்கவேண்டும்
    அருமையான கதை
    வாழ்த்துக்கள் த.ம 4

    பதிலளிநீக்கு
  9. நல்ல மாமியார். கொடுத்து வைத்த மருமகள்.
    அழகான கதை ஐயா.


    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. இப்படி ஒரு மாமியார் இருப்பார்
    என்று கேட்பதற்கே சந்தோசமாக இருக்கிறது.
    படிக்கையில் மனதுக்கு நிறைவாய்
    இருந்தது ஐயா.

    பதிலளிநீக்கு
  11. நல்ல கதை. நல்ல குடும்பம். அருமையான கதையமைப்பு.

    பதிலளிநீக்கு
  12. நல்ல மித்ர ஷஷ்டாஷ்டகம்!

    ஆணின் தாயாருக்கும், பெண்ணிற்கும் பொருத்தம் இருந்தால் சரிதான்! ஆண்-பெண் ஜாதகப் பொருத்தம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்!

    முந்தையது சரியாய் இருந்தால், பிந்தையது தன்னாலே சரியாகிப் போகும் என்பது எல்லா காலத்தும் எழுதப்படாத விதி போலும்!

    பதிலளிநீக்கு
  13. அருமையான கதை.அழகான படம்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. " வாக்கப்பட்டு வந்த ஆறு மாதங்களில் அந்த மாமயாரின் ஆசை நிறைவேறவில்லையா.?”கொடுத்துவச்ச தம்பதிகள். கதை நன்றாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  15. மாமியார்!!
    ஏதோ அரக்கியாக எதிர்பார்த்துதான்
    வரும் மருமகள்கள் வரும் காலம் இது.
    இன்முகத்தோடு இனிய குணமும் கொண்ட மாமியார் இருக்கும் இந்தக் கதை இனிமை.

    பதிலளிநீக்கு
  16. ஆஹா!படிக்கவே ரொம்ப நல்லா இருக்கிறதே சார்!
    எங்க மாமியார் கூட எனக்கு கல்யாணம் ஆன புதிதில் என்னை வேலை செய்ய விடவே மாட்டார்கள்.இப்பொழுது மூன்று வருடமாக நடை வராமல் இருக்கிறார்கள் பாவம்.

    பதிலளிநீக்கு
  17. மாமியார் வந்ததும், தான் ஏதாவது நேற்று தவறுதலாகப் பேசியிருந்தால், தயவுசெய்து மனதில் வைத்துக்கொள்ளாமல் மன்னித்து விடுங்கள் என்று சொல்லி நமஸ்கரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள், வனஜா.//

    தங்கமான மாமியார் . தங்கமான மருமகள்.

    நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  18. மாமியார் vs மருமகள் நல்ல கதை.


    நட்புடன்,
    http://tamilvaasi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சார் இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றது இனி தொடர்ந்து வருவேன் நன்றி

    பதிலளிநீக்கு
  20. நாலு நாளா என்னோட பிளாக் காணாமல் போச்சு..
    Your blog has been removed னு வருது..

    என்ன செய்யணும்னு புரியல.. அவங்க கொடுக்கற லிங்கை வச்சுகிட்டு உள்ளே போனா.. திருப்பதில மொட்டை தாத்தாவை தேடாறாப்ல அவ்வளவு கன்ப்யூஷன்..

    என்னங்க செய்யட்டும்..

    பதிலளிநீக்கு
  21. @ரிஷபன்

    அவங்க கொடுக்கற லிங்க் வச்சுக்கிட்டுத்தான் உள்ள போகணும்.அதுல கேக்கற கேள்விகளுக்கெல்லாம் பதில் டைப் பண்ணினா கடைசியா உங்க ஃபோன் நம்பர் கேப்பாங்க.அதையும் டைப் பண்ணினப்பறம் உங்க மொபைல்க்கு ஒரு மெஸேஜ் வரும்.அப்பறம் ஆக்டிவேட் ஆயிடும்.ட்ரை பண்ணிப் பாருங்க

    பதிலளிநீக்கு
  22. அழகிய முடிவு அருமையான கதை .இந்த மாதிரி விட்டு கொடுத்து வாழ்ந்தால் பூலோகம் சொர்க்க பூமிதான் .

    பதிலளிநீக்கு
  23. @ரிஷபன்

    அதுல உங்க ப்லாக் எப்ப ஆரம்பிச்சீஙக?கடைசியா எப்ப ஆப்பரேட் செஞ்சீங்க?உங்க URL என்ன?உங்க மெயில் ஐடி என்ன? இப்பிடிலாம் கேள்வி கேட்டிருக்கும்.எல்லாத்துக்கும் கரெக்டா பதில் டைப் பண்ணி மொபைல் நம்பரும் டைப் பண்ணினா மொபைலுக்கு மெசேஜ் வரும்.அப்பறம் ஆக்டிவேட் ஆயிடும்

    பதிலளிநீக்கு
  24. நல்ல மாமியார். நல்லதாய் சொல்லிய வனஜாவின் அம்மா என்று நல்லவர்கள் சூழ இருப்பதால் வனஜாவும் நல்லவளாகவே இருக்கட்டும்...

    நல்ல சிறுகதை. வல்லமையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  25. மகளுக்கு ஆதரவாக பேசி பிரச்சனையை பெரிதாக்காமல், மகளுக்கு அறிவுரை சொல்லும் நல்ல அம்மா! பல குடும்பங்களில் இது தலைகீழ்!

    பதிலளிநீக்கு
  26. இப்படி எல்லா மாமியார் மருமகளும் இருந்துவிட்டால் சீரியல் எடுப்பவர்கள் கதைக்கு எங்கே போவார்கள் ?..நல்ல கதை ...

    பதிலளிநீக்கு
  27. நல்ல ஜோசியர்,நல்ல அப்பா,நல்ல அம்மா,நல்ல மாமியார் ஆக மொத்தத்தில் நல்ல கதை...

    பதிலளிநீக்கு
  28. மாமியார் என்ற சொல்லுக்கே புது அர்த்தம் சொல்லிவிட்டீர்கள்! நல்ல கதை

    பதிலளிநீக்கு
  29. இந்த என் சிறுகதைக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறி பாராட்டி வாழ்த்தி மகிழ்வித்துள்ள என் அன்புத் தோழர்கள் + தோழியர் 27 பேர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    vgk

    பதிலளிநீக்கு
  30. இந்த காலத்து மாமியார்களே, ரொம்ப நல்லவங்களா இருக்காங்க! அவங்கைள பாராட்டும் , ஒரு நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  31. Ms. PATTU Madam,

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  32. அருமையான கதை.... நல்ல மாமியார்.. நல்ல மருமகள்.... சூப்பர் ஐயா....

    பதிலளிநீக்கு
  33. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இதைப்படிக்கும் அனைத்துப் பெண்மணிகளும், இன்று நல்ல மருமகளாகவும், நாளை நல்ல மாமியாராகவும் விளங்க வேண்டும் என்பதே என் அவா.

    All the Best ..... Mrs. VijiParthiban, Madam.

    பதிலளிநீக்கு
  34. நல்ல மாமியார்! நல்ல மருமகள்! இப்படி எல்லா இடத்திலும் இருந்தால் நன்றாக இருக்கும்...:)

    பதிலளிநீக்கு
  35. கோவை2தில்லி March 15, 2013 at 12:24 AM

    வாங்கோ, வணக்கம்.

    //நல்ல மாமியார்! நல்ல மருமகள்! இப்படி எல்லா இடத்திலும் இருந்தால் நன்றாக இருக்கும்...:)//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  36. மாமியார் என்றாலே அரக்கியாகத்தான் இருக்கும். ஆரம்பத்திலேயே கட் பண்ணிடணும்னு கதைகள் வந்த காலத்தில் மாமியாருக்கும் இதயம் உண்டு என்ற நோக்கில் கதை பயணித்து அருமையாக முடிகிரது. மனதுக்கு ஸந்தோஷமாக இருந்தது. நல்ல கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi March 15, 2013 at 6:34 AM

      வாங்கோ மாமி, நமஸ்காரம்.

      //மாமியார் என்றாலே அரக்கியாகத்தான் இருக்கும். ஆரம்பத்திலேயே கட் பண்ணிடணும்னு கதைகள் வந்த காலத்தில் மாமியாருக்கும் இதயம் உண்டு என்ற நோக்கில் கதை பயணித்து அருமையாக முடிகிறது. மனதுக்கு ஸந்தோஷமாக இருந்தது. நல்ல கதை//

      தங்களின் அன்பான வருகையும், மனம் திறந்து சொல்லியுள்ள அழகான கருத்துக்களும், மனதுக்கு ஸந்தோஷம் அளிப்பதாக உள்ளது. என் மனமார்ந்த நன்றிகள், மாமி.

      நீக்கு
  37. அழகான கதை. கணவன் மனைவியாகட்டும் மாமியார் மரும்களாகட்டும் புரிந்துணர்விருப்பின் எல்லாம் சுகமே.

    என் மாமியாரும் என்னை வாங்கோடா அதிரா... ரீ போடட்டோடா கொஃபீ வேணுமோடா இப்படித்தான் கேட்பா... வெளியே எங்காவது போய்விட்டு வீட்டுக்குள் வந்து ஏறும்போதே இப்படித்தான் வரவேற்பா. வருங்காலத்தில் நானும் இப்படித்தான் இருக்கோணும் என நினைப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira March 16, 2013 at 12:42 AM

      வாங்கோடா அதிரா... ;)))))) வணக்கம்.

      //அழகான கதை. கணவன் மனைவியாகட்டும் மாமியார் மருமகளாகட்டும் புரிந்துணர்விருப்பின் எல்லாம் சுகமே.//

      பூசணிக்காயைப் பிளந்தது போல மிக அருமையாகச் சொல்லிவிட்டீர்கள்.

      அதே அதே ... சபாபதே! அதிரபதே!! நன்றி

      //என் மாமியாரும் என்னை வாங்கோடா அதிரா... ரீ போடட்டோடா கொஃபீ வேணுமோடா இப்படித்தான் கேட்பா... வெளியே எங்காவது போய்விட்டு வீட்டுக்குள் வந்து ஏறும்போதே இப்படித்தான் வரவேற்பா. //

      சொல்லாடல் அழகாக, கிளி கொஞ்சுவதாக உள்ளது. சந்தோஷம்!
      நல்லதொரு மாமியாரைப்பெற்ற அதிரா வாழ்க வாழ்கவே!

      //வருங்காலத்தில் நானும் இப்படித்தான் இருக்கோணும் என நினைப்பேன்.//

      இருங்கோ. அது தான் நல்லது. இதைக்கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  38. என்ன ஒரு அழகான கதை! மனதுக்கு நிறைவாகவும் மகிழ்வாகவும் உள்ளது வை.கோ.சார்.

    பெண்கள் மாமியாரையும் தன் தாய்போல் நினைத்தால் பிரச்சனையே இல்லை. அதுபோல் மாமியாரும் மருமகளை தன் மகளாகவே நினைக்கவேண்டும். பெண்பிள்ளைகளுக்கு தாய்வீட்டிலேயே நல்ல பண்புகளைக் கற்றுக்கொடுத்து வளர்த்தால் புகுந்த வீட்டில் பிரச்சனைகள் உருவாகாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதமஞ்சரி April 10, 2013 at 3:51 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //என்ன ஒரு அழகான கதை! மனதுக்கு நிறைவாகவும் மகிழ்வாகவும் உள்ளது வை.கோ.சார். //

      இதைத்தாங்கள் சொல்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி மேடம்.

      //பெண்கள் மாமியாரையும் தன் தாய்போல் நினைத்தால் பிரச்சனையே இல்லை. அதுபோல் மாமியாரும் மருமகளை தன் மகளாகவே நினைக்கவேண்டும். பெண்பிள்ளைகளுக்கு தாய்வீட்டிலேயே நல்ல பண்புகளைக் கற்றுக்கொடுத்து வளர்த்தால் புகுந்த வீட்டில் பிரச்சனைகள் உருவாகாது.//

      அழகாக அருமையாகச்சொல்லி விட்டீர்கள், மேடம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்..

      நீக்கு
  39. நிறைவான கதை. ஆனால் அந்தப் பெண்ணிற்கும் தன் கணவனுக்குத் தன் கையால் சமைச்சுக் கொடுக்கணும்னு ஆசை இருக்குமே. அந்த மாமியார் அதையும் புரிஞ்சுட்டு ஒரு நாளைக்காவது விட்டுத் தான் கொடுக்கணும். :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam July 10, 2013 at 5:14 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நிறைவான கதை.//


      மிக்க நன்றி, சந்தோஷம்.

      //ஆனால் அந்தப் பெண்ணிற்கும் தன் கணவனுக்குத் தன் கையால் சமைச்சுக் கொடுக்கணும்னு ஆசை இருக்குமே. அந்த மாமியார் அதையும் புரிஞ்சுட்டு ஒரு நாளைக்காவது விட்டுத் தான் கொடுக்கணும். :)))))) //

      கரெக்ட். அதுவும் சரிதான்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்..

      நீக்கு
  40. இதுபோல மாமியார் மறுமகள் புரிந்துணர்வு இருந்தூல் வீடே சொர்க்கமாயிடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 19, 2015 at 1:46 PM

      //இதுபோல மாமியார் மருமகள் புரிந்துணர்வு இருந்தால் வீடே சொர்க்கமாயிடும்//

      ஆஹா, இதைப்படித்ததும் சொர்க்கமே என் வீட்டுப்பக்கம் வந்துவிட்டது போல ஒரே மகிழ்ச்சியாக உள்ளது. :)

      நீக்கு
  41. அடடா!

    எல்லாப் பொண்ணுங்களுக்கும் இந்த மாதிரி மாமியார் கிடைச்சா நன்னா இருக்குமே. நிறைய பொண்ணுங்க விடற பெருமூச்சு கேக்குதா உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  42. மாமியாளும் ஒரு வூட்டுக்கு மொதகா மருமவளா வந்தவுக தானே. நல்ல கொணத்த வளத்துகிட்டாக போல.

    பதிலளிநீக்கு
  43. புது மருமகள் கஷ்டப்படக்கூடாது என்று மாமியார் பார்த்து பார்த்து வீலைகளை இழுத்துப் போட்டுண்டு செய்வது மருமகள் அதை மிஸ் அண்டர்ஸ்டாண்ட் செய்வது இது பல குடும்பங்களில் நடப்பதுதான். நாளாக நாளாக நல்ல புரிந்துணர்வு வந்து விட்டால் எல்லாம் சரி ஆகிவிடும்.

    பதிலளிநீக்கு
  44. மாமியார் வந்ததும், தான் ஏதாவது நேற்று தவறுதலாகப் பேசியிருந்தால், தயவுசெய்து மனதில் வைத்துக்கொள்ளாமல் மன்னித்து விடுங்கள் என்று சொல்லி நமஸ்கரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள், வனஜா.///மாமியார் அம்மாவா மாறிட்டாங்கன்னுறதுக்கு வேற என்ன அத்தாட்சி வேணும்???

    பதிலளிநீக்கு
  45. மாமியார் மருமகள் உறவு எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்திய கதை! மிக அருமை!

    பதிலளிநீக்கு