என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 3 ஜூன், 2013

4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....

2
ஸ்ரீராமஜயம்




சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும்.

பல வாய்க்கால்களில் ஒன்றில் ஜலத்தை அடைத்துத் திருப்பினால் இன்னொன்றில் அதிகம் நீர் பெருகுவதுபோல், ஓர் அங்கத்தில் ஊனம் இருப்பதே இன்னொன்றில் தீஷண்யத்தைத் தருகிறது.

ஆத்ம ஞானம் பெற்ற ரிஷிகளின் சக்தியே இதற்கு திருஷ்டாந்தம். சகல லோகங்களுக்கும், சகல காலங்களுக்கும் சென்று அவர்கள் விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். 

நம் காதுக்குக் கேட்காத சப்தங்களை ஆகாயத்தில் கேட்டு வேத மந்திரங்களைக் கொடுத்தார்கள்.

‘எப்படி ஆசையை அடக்குவது; எப்படி மனதை நிறுத்துவது; எப்படி நிலைத்த ஆனந்தத்தை அடைவது?” என்று கேட்கிறவர்கள், அந்த வேதங்கள் சொன்னபடி நடந்தாலே போதும். முடிவில் பேரானந்தம் அடையலாம். 

இதற்குப் பரமேஸ்வரன் அநுக்கிரஹம் செய்வாராக !



ooooOoooo



அன்புடையீர், 

அனைவருக்கும் வணக்கம். 

நான் இந்தத்தொடரினை மிகச்சிறிய பகுதிகளாக கொடுக்க மனதில் திட்டமிட்டு, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நான் படித்த பல்வேறு புத்தகங்களிலிருந்து தொகுக்க ஆரம்பித்தேன்.  

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் அவர்களின் சரித்திரம் மிகப்பெரியதோர் சமுத்திரம்.  அகல ஆழங்கள் நிறைந்தது.  பழகிப் பார்த்தவர் அறிந்தது. 

அவர்கள் செய்த விந்தைகளும், அற்புதங்களும் ஏராளம் ஏராளம். அவற்றை உணரும் பாக்யம் கிடைத்தவர்கள் மிகவும் சொற்பமே. முக்காலமும் உணர்ந்த அந்த மஹான், தன்னை தன் சித்து வேலைகளால், எப்போதுமே  பிரசித்தப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. 

தன் தபோ வலிமையாலும், பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டிய தன் எளிய வாழ்க்கை முறையாலும், எல்லோர் மீதும் தான் வைத்த அன்பினாலும்,கருணையினாலும், வாத்ஸல்யத்துடன் கூடிய அனுக்ரஹத்தாலும், இன்றும்   மக்களிடையே மிகப்பிரபலமாக பேசப்பட்டு வருகிறார்கள்.

அவர்கள் அறியாத விஷய ஞானங்கள் ஏதும் இல்லை. அவர்கள் பேசாத சப்ஜெக்ட் எதுவுமே இல்லை என்று அடித்துச் சொல்லலாம். 

அவர்கள் பல நேரங்களில் பேசிய பேச்சுக்களை,  

[ஓர் தாய் தன் கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போலவும், 

துளித்துளியாக சாதத்துடன்  நன்றாக வெந்த பருப்பையும், நெய்யையும், அதிக காரசாரம் இல்லாத தெளிந்த ரஸத்தையும் கொஞ்சமாகச் சேர்த்து அவற்றை நன்கு மையப்பிசைந்து, ஸாத்வீகமாகச் சோறு ஊட்டுவதுபோலவும், 

இடையிடையே கொதிக்கும் வெந்நீரை நன்கு ஆற்றிவிட்டு, தான் கொஞ்சம் குடித்துப்பார்த்து, சூடு தணிந்துள்ளதா எனச் சோதித்துப்பார்த்துவிட்டு, அதன்பின் ஒரு சிறிய ஸ்பூன் மூலம் குழந்தைக்குக் குடிக்கத்  தண்ணீர் தருவதுபோலவும்  ] 

நான் இந்தத் தொடரினில், மிகச்சிறிய பகுதிகளாகத்தான், வெளியிடத் திட்டமிட்டு ஆரம்பித்தேன்.

என்னவொரு ஆச்சர்யம் பாருங்கோ! முதல் நாள் முதல் பகுதியை நான் COMPOSE செய்யும் போது [21.05.2013], கொரியர் தபாலில் ஒரு மிகப்பெரிய புத்தம் புதிய புஸ்தகம் எனக்கு வந்து சேர்ந்தது. 

சென்னையிலிருந்து பிரும்மஸ்ரீ ஏகாம்பரநாத சாஸ்திரிகள் [தற்போது அவருக்கு வயது எழுபது] என்பவர் சமீபத்தில் எழுதி வெளியிட்ட புஸ்தகம். அது 425 பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய வெயிட்டான புஸ்தகம். 

ஒரு பிரதி விலை ரூ. 250. கொரியர் செலவு இரண்டு பிரதிகளுக்கும் சேர்த்து ரூ. 120. எனக்கும் திருச்சியில் உள்ள மற்றொருவருக்குமாக இரண்டு பிரதிகள் [To Pay யில்] ஒரே கவரில் வைத்து அனுப்பப் பட்டுள்ளன.

தலைப்பு:  ”மஹாபெரியவாளும் ஏகாம்ரம் ஆகிய நானும்”. 

இதோ அந்த மிகவும் வெயிட்டான புஸ்தகத்தின் அட்டைப்படங்கள்:




[இந்த அட்டைப்படத்தில் உள்ள புகைப்படம் 
1981ல் எடுக்கப்பட்டுள்ளது]


இந்தத் தொடரினை நான் ஆரம்பித்து,  முதல் பகுதியை நான் 21.05.2013 செவ்வாய்க்கிழமையன்று COMPOSE செய்யும் போது, இந்தப் புஸ்தகம் என் கைக்கு வந்து சேர்ந்துள்ளது, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளே, இந்த என் தொடருக்கு அனுக்ரஹம் செய்துள்ளதுபோல, என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 

தினமும் விடிய விடிய நானும் அந்தப் புதிய புஸ்தகத்தை ஆர்வமாகப் படித்துக்கொண்டு வருகிறேன். கரும்பு தின்னக் கூலியா வேண்டும்! ;) 

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா தரிஸனத்திற்கு நான் சென்ற பல சந்தர்ப்பங்களில், ஒருசில சமயங்களில் மட்டும், இந்த ஸ்ரீ. ஏகாம்பரம் என்பவரை சந்தித்துள்ளேன்.  

அந்தக்காலத்தில், சென்னையில் சிம்ஸன் கம்பெனியில் வேலைபார்த்து வந்தவரும், திருமணம் ஆனவருமான இவர், அவ்வப்போது  விடுமுறை நாட்களில் மட்டும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்ய வந்து போய்க்கொண்டு இருந்தவர்.  இவருடன் எனக்கு ஓரளவு மட்டுமே பழக்கம் உண்டு. 

குறிப்பாக 1981 இல் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகள் பண்டரிபுரம் யாத்திரை மேற்கொண்டபோது, அவர்களுடன் கூடவே இருந்து சகல கைங்கர்யங்களும் செய்யும் பாக்கியம் பெற்றவர் இந்த அனக்காபுத்தூர் பிரும்மஸ்ரீ ஏகாம்பர சாஸ்திரிகள் அவர்கள்.  

இவரை நான் பண்டரிபுரத்தில் சந்தித்து 31 ஆண்டுகள் ஆகிறது. இவர் இப்போது இதுபோல ஒரு புஸ்தகம் வெளியிடப்போகிறார் என்பதும் எனக்குத்தெரியவே தெரியாது.  

எப்படியோ என் விலாசம் யாரிடமோ விசாரித்து புஸ்தகத்தை எனக்கு அனுப்பியுள்ளார்கள். இவையெல்லாம் அந்த சாக்ஷாத் நடமாடும் தெய்வத்தின் திருவிளையாடல்கள் மட்டுமே.

அந்தப்புஸ்தகத்தில் 220ம் பக்கத்தில் ஓர் சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த இன்றைய என் தலைப்புக்கு கொஞ்சம் சம்பந்தம் உடைய MIRACLE நிகழ்வாக இருப்பதால் அதை மட்டும் கீழே கொடுத்துள்ளேன்:

-=-=-=-=-=-=-=-=-

ஸ்ரீ ஏகாம்பரம் அவர்கள் எழுதியுள்ளது:

உடனே நான் காரில் புறப்பட்டேன். பண்டரீபுரம் டி.எஸ்.பி. யிடம் ஸ்ரீ பெரியவாளின் புரோக்ராமைச் சொன்னேன். அவர் இரண்டு படகுகள் ஏற்பாடு செய்தார். பண்டரீபுரத்தில் பக்தர்கள் கூட்டம் லட்சக்கணக்கில் இருந்தது. அதனால் சந்திரபாகா நதியில் இருந்தே கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் பந்தோபஸ்து ஏற்பாடு செய்யச்சொல்லி, ஸ்ரீ பெரியவாள் போய் ஸ்ரீ பாண்டுரங்கணை தரிஸனம் செய்துவிட்டு  வரும் வரையில் கோயிலில் கூட்டம் இல்லாமல் இருக்கவும் ஏற்பாடு செய்யச் சொன்னேன். இவைகளை எல்லாம் செய்துவிட்டு வந்துதான் உடன் இருந்தவர்களிடம் விஷயத்தைச் சொன்னேன். 

ஸ்ரீ பெரியவாளும் சந்திரபாகா நதியில் ஸ்நானம் செய்தார்கள். அனுஷ்டானத்தையும் முடித்துக்கொண்டார்கள். தயாராக இருந்த படகில் ஏறிக்கொண்டார்கள்.

படகில், ஸ்ரீ பெரியவாளுடன், திருச்சி ஸ்ரீ.ஸ்ரீகண்டன், ராயபுரம் ஸ்ரீ பாலு, ஃபோட்டோ கண்ணன், சிம்சன் ஸ்ரீ வைத்யநாதன், ஸ்ரீமெளலி மற்றும் நான் ஏறிக்கொண்டோம். மற்றொரு படகில் உடன் வந்த ஸ்ரீவெங்கடராமய்யர் போன்றவர்கள் ஏறிக்கொண்டார்கள். நதியில் வெள்ளம் அதிகமாக இருந்தது. 

எதிர்கரையில் டி.எஸ்.பி. அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். 

உரிய மரியாதைகளுடன் ஸ்ரீ பெரியவாளை கோயிலுக்கு அழைத்துச் சென்றார்கள். கோயிலினுள் ஸ்ரீ பெரியவாளுடன் வந்திருந்த நாங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டோம். 

உள்ளே ஸ்ரீ பாண்டுரங்க ஸ்வாமி சன்னதியில் ஸ்ரீ பெரியவாள் நின்றபடியே பதினைந்து நிமிடங்கள் தியானத்தில் இருந்தார்கள். பிறகு அருகில் சென்று விட்டலனுடைய கிரீடத்தை எடுக்கச் சொல்லி, அங்கு தலையில் இருந்த  மஸ்தகலிங்கத்தையும் தரிஸனம் செய்து கொண்டார்கள். 



மத்ஸகலிங்கம் என்றவுடன் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகின்றது. 

கல்யாணம் ஆகி பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர், ஸ்ரீ பெரியவாளின் தரிஸனத்திற்காக வந்திருந்தார்கள். 

ஸ்ரீ பெரியவாளிடம் ”நல்ல குழந்தை தங்களுக்கு பிறக்க வேண்டும்” என்று பிரார்த்தித்துக்கொண்டார்கள். ஸ்ரீ பெரியவாளும் அனுக்ரஹம் செய்து பிரஸாதம் கொடுத்தார்கள். அவர்களுக்கும் குழந்தை பிறந்தது. 

ஆனால் பிறந்த குழந்தைக்கு தலை மட்டும் சற்று லிங்கம் போல வீங்கி இருந்தது. மருத்துவர்களிடம் காண்பித்து எல்லா சோதனைகளும் செய்து பார்த்தார்கள். மருத்துவர்கள், ”அதனால் பாதிப்பு ஒன்றும் இல்லை”  என்று சொல்லிவிட்டார்கள். 

அவர்கள் மீண்டும் ஸ்ரீ பெரியவாளின் தரிஸனத்திற்கு குழந்தையை அழைத்து வரும்பொழுது, இந்த விஷயத்தை ஸ்ரீ பெரியவாளிடமும் தெரிவித்தார்கள். 

ஸ்ரீ பெரியவாள், அவர்களை பண்டரீபுரம் சென்று பாண்டுரங்கனை தரிஸனம் செய்துவிட்டு வரச்சொன்னார்கள். அப்போது அங்கு பூஜை செய்பவர்களிடம் சொல்லி பாண்டுரங்கனுடைய கிரீடத்தை எடுத்துவிட்டு, சிரசில் உள்ள மஸ்தகலிங்கத்தைக் குறிப்பாக தரிஸனம் செய்துவிட்டு வரச் சொன்னார்கள். 

அவர்களும் பண்டரீபுரம் சென்று, பாண்டுரங்க தரிஸனம் செய்து, மஸ்தக லிங்கத்தை தரிஸனம் செய்து வியப்படைந்தார்கள்.  என்ன காரணம்? அவர்களுடைய குழந்தையின் தலையில் வீக்கமும் அதுபோலவே ஆனால் சிறிய அளவில் இருந்தது. இதை ஸ்ரீ பெரியவாளிடம் திரும்ப வந்து தெரிவித்தார்கள்.

ஸ்ரீ பெரியவாள், “நீங்கள் குழந்தை வரம் வேண்டி என்னிடம் பிரார்த்தித்துக் கொண்ட சமயம், நான் பண்டரீபுரத்தில் தங்கியிருந்தேன். அதோடு மட்டுமல்லாமல் நான் பாண்டுரங்கனை தரிஸனம் செய்துவிட்டு, அந்த ஞாபகமாகவே இருந்தேன். அப்போது உனக்கு அனுக்ரஹம் செய்து பழம் கொடுத்ததால், குழந்தையின் தலையிலும் லிங்கம் போல உள்ளது. கவலைப்பட வேண்டாம். குழந்தை நீண்ட ஆயுளுடன் ஆரோக்யமாக இருப்பான்” என்று ஆசீர்வாதம் செய்தும் அனுப்பினார்.  


-=-=-=-=-=-=-=-=-





ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

[இதன் தொடர்ச்சி 05.06.2013 புதன்கிழமை வெளியாகும்]





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


54 கருத்துகள்:

  1. தொடர் ஆரம்பித்த நேரம் சிறப்பான புத்தகம் கிடைத்தது வியப்பு... ஸ்ரீ ஏகாம்பரம் அவர்கள் எழுதியுள்ள சம்பவம் அற்புதம்...

    நன்றி ஐயா...

    அமுத அருள் மழை பொழிய வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. மத்ஸகலிங்கம் குறித்த தகவல்கள் ஆச்சரியம் வரவைத்தது. தாய் சேய்க்கு உணவூட்டுவதாக அமைந்த தங்கள் பகிர்வும் சிறப்புங்க ஐயா.

    பதிலளிநீக்கு
  3. சுருக்கமாகச் சொல்வது படிக்க எளிதாக இருக்கிறது.
    புத்தகம் இந்த சமயத்தில் கைக்குக் கிடைத்தது நெகிழ்ச்சியான ஆச்சர்யம்.
    சொல்லப்பட்ட சம்பவம் மனதைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
  4. தொடர் ஆரம்பித்த நேரம் சிறப்பான புத்தகம் கிடைத்தது வியப்பு.

    பதிலளிநீக்கு
  5. என்னவொரு ஆச்சர்யம் பாருங்கோ! முதல் நாள் முதல் பகுதியை நான் COMPOSE செய்யும் போது [21.05.2013], கொரியர் தபாலில் ஒரு மிகப்பெரிய புத்தம் புதிய புஸ்தகம் எனக்கு வந்து சேர்ந்தது. //

    இதில் என்ன ஆச்சரியம். உங்கள் நல்ல எண்ணம் உங்களுக்கு இந்தப் புத்தகத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. இந்தத் தொடரை வெற்றிகரமாக தொடர்ந்து முடிப்பதற்கான மகா பெரியவாளின் வாழ்த்துக்களுடன் இந்தப் புத்தகம் உங்களை வந்து அடைந்திருக்கிறது.

    ‘பூவோடு சேர்ந்து நாறும் மணம் பெறும்’ என்ற பெரியோர்களின் வாக்குக்கு ஏற்ப நாங்களும் உங்களுடன் சேர்ந்து மகா பெரியவாளைப் பற்றி தெரிந்து கொள்ளும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.

    ஸ்ரீ பெரியவாள், “நீங்கள் குழந்தை வரம் வேண்டி என்னிடம் பிரார்த்தித்துக் கொண்ட சமயம், நான் பண்டரீபுரத்தில் தங்கியிருந்தேன். அதோடு மட்டுமல்லாமல் நான் பாண்டுரங்கனை தரிஸனம் செய்துவிட்டு, அந்த ஞாபகமாகவே இருந்தேன். அப்போது உனக்கு அனுக்ரஹம் செய்து பழம் கொடுத்ததால், குழந்தையின் தலையிலும் லிங்கம் போல உள்ளது. கவலைப்பட வேண்டாம். குழந்தை நீண்ட ஆயுளுடன் ஆரோக்யமாக இருப்பான்” என்று ஆசீர்வாதம் செய்தும் அனுப்பினார். //

    படித்ததும் மெய் சிலிர்த்தது.

    பதிலளிநீக்கு
  6. துளித்துளியாக சாதத்துடன் நன்றாக வெந்த பருப்பையும், நெய்யையும், அதிக காரசாரம் இல்லாத தெளிந்த ரஸத்தையும் கொஞ்சமாகச் சேர்த்து அவற்றை நன்கு மையப்பிசைந்து, ஸாத்வீகமாகச் சோறு ஊட்டுவதுபோலவும்,

    இடையிடையே கொதிக்கும் வெந்நீரை நன்கு ஆற்றிவிட்டு, தான் கொஞ்சம் குடித்துப்பார்த்து, சூடு தணிந்துள்ளதா எனச் சோதித்துப்பார்த்துவிட்டு, அதன்பின் ஒரு சிறிய ஸ்பூன் மூலம் குழந்தைக்குக் குடிக்கத் தண்ணீர் தருவதுபோலவும் ]

    அடடா என்ன அழகா சொல்லி இருக்கேள்.

    லயாக்குட்டிக்கு என் மருமகள் விஷ்ணுப் ப்ரியா கொடுக்கும் காட்சி அப்படியே என் கண் முன் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  7. மத்ஸகலிங்கம். பெயரே புதுசாகத்தான் இருக்கிரது. தகவல்கள் மிகவும் ஆச்சரியப் படவைக்கிரது. உங்களுக்கு எப்பேர்ப்பட்ட நம்பிக்கை
    இருக்கிரதோ, அதை உறுதிப் படுத்தும் வகையில் அவ்வப்போது நிகழ்வுகளும் ஏற்படுகிரது. புத்தக வரவும் அதை உறுதிப் படுத்துகிரது.
    உங்கள் பதிவுகளும் படிக்க எளிமையாக இருக்கிரது. மகிழ்ச்சி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  8. புத்தகம் இந்த தொடரை எழுதும் போது கிடைத்தது மிக ஆச்ச்ர்யமா இருக்கு..மேன்மேலும் அற்புதங்கள் படைக்க வாழ்த்துக்கள் ஐயா!!

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளே, இந்த தொடருக்கு அனுக்ரஹம் செய்துள்ளதுபோல, மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யும் அமுதமழைப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  10. இது எதையும் miracleஆக ஏற்கமுடியவில்லை; அற்புத சக்தி வாய்ந்தவர்கள் என்று சொல்வோரெல்லாம் பொதுவாக விபூதி வரவழைப்பவர்களாகவே வாழ்ந்தார்கள்.

    பிறக்கும் பொழுது தலை நீண்டும் பருத்தும் இருப்பது மிக மிகச் சாதாரண விஷயம். இதை லிங்கம் என்று சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதைகளை தெய்வ சங்கல்பம் என்று நாம் சொல்லிக்கொள்வது ஓரளவுக்கு சுயஆறுதல், தன்முனைப்பு, பெற உதவியாக இருந்தாலும்.. பெருமளவில் கண்மூடித்தனத்தை வளர்க்கவே உதவுகிறது.

    பெரியவர் கட்டுப்பாட்டுள்ள ஒரு நல்ல மனிதராக, எளிமையான ஞானியாக வாழ்ந்தார் என்ற அளவில் அவரைப் பற்றிய விவரங்கள் படிக்க சுவாரசியமாகவே இருக்கின்றன.

    (என் கருத்தால் உங்களைக் காயப்படுத்த எண்ணவில்லை)

    பதிலளிநீக்கு
  11. It is really a miracle you recieved the book when you were preparing all these post. Very very stunning and astonishing information about the lingam. Thankyou very much for sharing....

    பதிலளிநீக்கு
  12. அன்பின் வை.கோ - மஹாப் பெரியவாளின் அனுஹ்ரகம் தங்களுக்கு பூரணமாக வாய்த்திருக்கிறது - அதனால்தான் அமுத மழை எழுத இயல்கிறது. பண்டரிபுரம் நிகழ்வு உடல் சிலிர்க்கிற்து . இத்தொடர் துவங்கிய உடனே புத்தகம் வந்தது எவ்வளவு பெரிய செயல். நினைத்துப் பார்க்கவே இயலவில்லயே ! நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  13. It is really a wounderful that you have received the book.
    Really you have got the blessings of JagadGuru no doubt.
    Like to read furter. Waiting.
    viji

    பதிலளிநீக்கு
  14. மத்ஸகலிங்கம் எவ்வாறு பண்டரிநாதன் சிரசில் வந்தது என்ற கதை தெரியுமா. அடுத்தபாகத்தில் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

    ஒவ்வொஉ நாளும் புனிதமாகக் கழித்தவர் பெருமைதான் என்ன!

    பதிலளிநீக்கு
  15. தொடர் எழுத ஆரம்பித்ததும் புத்தகம் கைக்கு வந்தது மிகப் பெரிய ஆச்சரியமே. சில நேரங்களில் கடவுளின் இப்படியான ஆச்சரியங்கள் பல நிகழ்வதுண்டுதான். அதாவது என்னைப் பொறுத்து கடவுளுக்கெல்லாம் ஒரு விருப்பம், நாம்... தமக்கு ஏதும் குறை விட்டிடக்கூடாது என்பதில் குறியாக இருப்பினம்.

    நாம் சில விஷயத்துக்கு ஏதும் கேட்டால், கனவிலாவது முடிவு வராது:), ஆனால் ஏதும் காரணங்களால்.. வெள்ளி செவ்வாயில் விளக்கேத்த மறந்தோ.. அல்லது ஒழுங்காக கடவுளுக்கு செய்யும் அனுட்டானத்தில் ஒருநாள் ஏதும் குறை விட்டாலோ.. உடனே ஏதோ ஒரு வடிவத்தில் கனவில் வந்து, “உன் வீடு இருட்டாக இருக்கு உள்ளே வரமாட்டேன்”.. இப்படி ஏதும் கூறி, நாம் விட்ட பிழையை டக்கெனச் சுட்டிக் காட்டுவினம்.. இது எனக்கு அப்பப்ப நடக்கும் உண்மைச் சம்பவங்களே...

    இப்பவும் பாருங்கோ... அவரின் தொடரை நீங்க அழகாக எழுதி முடிக்கோணும், எனும் நோக்கிலேதான் உங்களை உற்சாகப் படுத்த, உந்தப் புத்தகம் அதே நேரத்தில் உங்கள் கைக்குக் கிடைக்கப் பண்ணியிருக்கிறார்ர்....

    என் மனதில் உதித்ததை எழுதினேன்ன்...கோபு அண்ணன்.. நான் எழுதியதேதும் தப்பெனில் மன்னிச்சிடுங்க.. சுவீட் 16 ல(என்னைச் சொன்னேன்:))), இப்படியான மாத்து யோசனைகள் வருவது இயல்புதானே:))

    பதிலளிநீக்கு
  16. ///‘எப்படி ஆசையை அடக்குவது; எப்படி மனதை நிறுத்துவது; எப்படி நிலைத்த ஆனந்தத்தை அடைவது?” என்று கேட்கிறவர்கள்,///

    பேசாமல் டக்கென ஞாஆஆஆஆஆஆஆஆனி ஆகிடுங்க:)) மீயைப்போல:)) ஹா..ஹா..ஹா..:)

    பதிலளிநீக்கு
  17. நல்லதொரு பதிவு
    மனதிற்கு இதம் தரும் பதிவு
    பாராட்டுக்கள் VGK

    எண்ணங்களுக்கு
    அசாத்திய வலிமை உண்டு
    என்பதற்கு பெரிவாளின்
    இந்த சம்பவமே சாட்சி.

    அதனால்தான் பாரதியும்
    நல்லவை எண்ணல்
    வேண்டும் என்றான்

    வள்ளுவனோ உள்ளுவதெல்லாம்
    உயர்வுள்ளல் என்றான்.

    பாமரத்தனமான நம்மை
    போன்றவர்கள் என்னும்
    எண்ணங்கள் கணக்கற்றவை .

    வீட்டினில் எப்போதும்
    நல்ல மங்கலமான
    சொற்களை பேச வேண்டும்.

    அமங்கலமான
    பேச்சுக்களை பேசக்கூடாது.

    வீட்டில் இருக்கும்
    வாஸ்து தேவதை அவ்வபோது
    ததாஸ்து அதாவது
    அப்படியே நடக்கட்டும்
    என்று வாழ்த்திக்கொண்டிருக்கும்.

    அது வாழ்த்தும்போது
    நாம் பேசும் தவறான பேச்சு
    அவ்வாறே நடக்கட்டும்
    என்று சொல்லிவிட்டால் .
    அந்த குடும்பத்தில் துன்பங்களும்
    துயரங்களும் நடப்பது நிச்சயம்

    எனவே யாராயிருந்தாலும்
    குடும்பத்தில் நல்ல எண்ணங்களை எண்ணி,
    நல்ல சொற்களை பேசவேண்டும்.
    நல்லதை கேட்கவேண்டும்.
    அப்போதுதான் வீடும் நாடும்
    நன்றாக இருக்கும்.

    பணிவுள்ளவர்கள்
    வீட்டில் அன்பு இருக்கும்.
    அன்புள்ளவர்கள் வீட்டில்
    அனைத்தும் இருக்கும்.
    அங்கு தெய்வம்
    வாசம் செய்யும்.

    இது இரண்டும் இல்லாத
    வீடுகளில் . செல்வம் இருக்கலாம்,
    செல்வாக்கு இருக்கலாம்

    ஆனால் தெய்வ சாநித்தியம் இருக்காது.
    தெய்வ சாநித்தியம் இல்லாத வீட்டில்
    பேய்கள்தான் நடமாடும்.

    பதிலளிநீக்கு
  18. // தினமும் விடிய விடிய நானும் அந்தப் புதிய புஸ்தகத்தை ஆர்வமாகப் படித்துக்கொண்டு வருகிறேன். கரும்பு தின்னக் கூலியா வேண்டும்! ;) //

    படித்து முடிந்தவுடன் ” நூல் விமர்சனம் “ செய்து ஒரு பதிவை எழுதவும்.

    பதிலளிநீக்கு
  19. சிலிர்க்க வைக்கும் நிகழ்வு. மத்சகலிங்கம் பற்றி இப்போதுதான் அறிகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  20. பாண்டுரங்கனின் சிரசில் இருப்பதாகச் சொல்லப்படும் மஸ்தக லிங்கம் பற்றியும் எழுதுங்கள். தகவல் புதிதாக இருப்பதால் அறிய ஆவல்.

    மஹா பெரியவாளின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது என்பதற்கு இதைவிட அத்தாட்சி வேறு என்ன வேண்டும்?

    தொடருங்கள். படிக்கக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  21. மேன்மேலும் அற்புதங்கள் படைக்க வாழ்த்து ஐயா!!
    மிக மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.
    ரசித்து வாசித்தேன்.
    இறையாசி இன்னும் பெருகட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  22. தொடரை ஆரம்பித்திருக்கும் வேளையில் புத்தகம் கிடைத்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  23. மத்ஸகலிங்கம் குறித்த தகவல்கள் ஆச்சர்யம் அளித்தது! மஹா பெரியவாளின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது என்பது தொடரை ஆரம்பித்திருக்கும் வேளையில் புத்தகம் கிடைத்ததில் இருந்து விளங்குகிறது! தொடருங்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  24. உங்களுக்கு புத்தகம் வந்தது பெரியவாளின் அருளாகத்தான் இருக்க முடியும். ஏகாம்பரம் அவர்கள் எழுதியுள்ள தெய்வீக நிகழ்வு அற்புதமாக உணர முடிகிறது. மிக்க நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  25. ஒண்ணொண்ணா எல்லாத்தையும் இப்போத் தான் படிக்கிறேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  26. பெரியவரின் ஆசி தங்களுக்கும்,எங்களுக்கும் எப்பவும் உண்டு,தொடருங்கள் ஐயா..புத்தகம் பற்றி படித்ததும் வியப்பாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  27. மஸ்தக லிங்கம் - புதிய தகவல்.

    ஒவ்வொரு பதிவிலும் ஒரு சுவையான தகவலைச் சொல்லி எங்களை வியப்பில் ஆழ்த்திச் செல்கிற உங்கள் பாணி தொடரட்டும்......

    பதிலளிநீக்கு
  28. எல்லாவற்றிக்கும் ஓர் மாற்றுதீர்வு இருப்பது போல்தான் குறையிலும் ஒரு நிறைவைக்கொடுத்திருப்பார் கடவுள். அதனால்தான் அவர்கள் மாற்றுதிறனாளிகளானார்கள்.மனதை அடக்கினாலே பேரானந்தம்தான் சிறப்பான கருத்து.

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளின் ஆசீர்வாதம் இன்னமும் உங்களிற்கு பரிபூரணமாக உண்டு என்பதையே, இப்புத்தகம் நீங்க தொடரெழுதும்போது வந்திருப்பது உணர்த்துகிறது.
    அப்புத்தகத்தில் மகாபெரியவரின் அற்புதங்களும்,ஸ்ரீ ஏகாம்பரம் அவர்களின் அனுபவங்களும் நிறைய இருக்கும்போல. நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  29. புத்தகம் காணக்கிடைத்தது. தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  30. பாண்டுரங்கன் தலையில் மஸ்தக லிங்கமா? கொஞ்சம் விவரிக்க முடியமா? அறிய ஆவல்.
    மகா பெரியவரின் அற்புதம் என்னவென்று சொல்வது?

    பதிலளிநீக்கு
  31. // ‘எப்படி ஆசையை அடக்குவது; எப்படி மனதை நிறுத்துவது; எப்படி நிலைத்த ஆனந்தத்தை அடைவது?” // இங்குதான் பரீட்சையே ஆரம்பம்...
    நல்ல தத்துவம்!

    புத்தகம் இந்த சமயத்தில் கைக்குக் கிடைத்தது ஆச்சர்யம்...

    சொல்லப்பட்ட சம்பவம் மனதைத் தொட்டதையா! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  32. உங்களுக்கு சரியான சந்தர்ப்பத்தில் வந்த புத்தகம் வியப்பு தான்!

    பதிலளிநீக்கு
  33. குழந்தைக்குத் தாய் சோறூட்டும் நீரூட்டும் அழகிய உவமையைத் துல்லியமாகக் காட்டியுள்ளீர்கள். எதிர்பாராத விதமாய் தங்களைத் தேடிவந்த புத்தக வரவு ஒரு பெரும் அற்புதம்தான். ஏகாம்பர சாஸ்திரிகளின் அனுபவக்குறிப்புகள் வியப்பளிக்கின்றன. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
  34. மஸ்தகலிங்கத்தைப் பற்றி விரிவாகப் பகிருங்களேன் வை.கோ ஐயா.

    பதிலளிநீக்கு
  35. ஓர் தாய் தன் கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போலவும்,

    துளித்துளியாக சாதத்துடன் நன்றாக வெந்த பருப்பையும், நெய்யையும், அதிக காரசாரம் இல்லாத தெளிந்த ரஸத்தையும் கொஞ்சமாகச் சேர்த்து அவற்றை நன்கு மையப்பிசைந்து, ஸாத்வீகமாகச் சோறு ஊட்டுவதுபோலவும்,

    இடையிடையே கொதிக்கும் வெந்நீரை நன்கு ஆற்றிவிட்டு, தான் கொஞ்சம் குடித்துப்பார்த்து, சூடு தணிந்துள்ளதா எனச் சோதித்துப்பார்த்துவிட்டு, அதன்பின் ஒரு சிறிய ஸ்பூன் மூலம் குழந்தைக்குக் குடிக்கத் தண்ணீர் தருவதுபோலவும் ]//

    என்ன அழகாய் எளிமையாக சொல்லிவிட்டீர்கள்!
    ஏகாம்பரசாஸ்திரிகள் புத்தகம் கிடைத்தது அவரின் அனுபவம் எல்லாம் வியப்பு அளிக்கிறது.
    இறைவனின் அருள் உங்களிடம் பரிபூரணமாய் இருக்கிறது.
    வாழ்த்துல்க்கள்.

    பதிலளிநீக்கு
  36. புத்தகம் கிடத்திருப்பதும் பண்டரீபுரம் கதையும் ஆச்சர்யம்!!

    பதிலளிநீக்கு
  37. மஸ்தகலிங்க சம்பவமும், புத்தகம் தங்களுக்கு கிடைத்திருப்பதும் ஆச்சரியம் தான். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  38. அன்பின் வை.கோ - ஜூன் 3ல் ஏற்கனவே மறுமொழி இட்டிருக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  39. இறைவன் அருள் எப்போது எப்படி கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

    பதிலளிநீக்கு
  40. நீங்க பெரியவா பத்தி சொல்லி வரும் ஒவ்வொரு விஷயமும் படிக்க படிக் சிலிர்க்கிறது.

    பதிலளிநீக்கு
  41. குஞ்சு குளுவானுக்கு சோறூட்டது நல்ல வெவரம்

    பதிலளிநீக்கு
  42. நீங்க எங்களுக்கெல்லாம் பெரியவா பத்தி நிறைய நிறைய சொல்லணும்னுதான் அந்த சரியான நேரத்தில் அந்த புக் உங்க கையில் கிடைச்சிருக்கு.

    பதிலளிநீக்கு
  43. இவரை நான் பண்டரிபுரத்தில் சந்தித்து 31 ஆண்டுகள் ஆகிறது. இவர் இப்போது இதுபோல ஒரு புஸ்தகம் வெளியிடப்போகிறார் என்பதும் எனக்குத்தெரியவே தெரியாது.

    எப்படியோ என் விலாசம் யாரிடமோ விசாரித்து புஸ்தகத்தை எனக்கு அனுப்பியுள்ளார்கள். இவையெல்லாம் அந்த சாக்ஷாத் நடமாடும் தெய்வத்தின் திருவிளையாடல்கள் மட்டுமே.// what a coincidence???? தேடி வந்த தெவதை???

    பதிலளிநீக்கு
  44. பெரிப்பா உங்களுக்கு அபூர்வமான ஆனந்தமான அநுபவங்கள் நிறையவே கிடைச்சிருக்கு. ரொம்ப அதிர்ஷ்டசாலி பெரிப்பா நீங்க. அந்த சந்தோஷத்தை எல்லோரும் பெற பதிவாகப் போடுவது எவ்வளவு பெரிய விஷயம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy October 22, 2016 at 3:40 PM

      வாம்மா ஹாப்பி, வணக்கம்.

      //பெரிப்பா உங்களுக்கு அபூர்வமான ஆனந்தமான அநுபவங்கள் நிறையவே கிடைச்சிருக்கு. ரொம்ப அதிர்ஷ்டசாலி பெரிப்பா நீங்க.//

      ஆமாம். எனக்கு சாக்ஷாத் அம்பாள் போன்ற, ஸர்வ அலங்கார பூஷிதையாக, மிக அழகான புன் சிரிப்புடன் கூடிய, உன் ஆத்மார்த்தமான, வாத்ஸல்யத்துடன் கூடிய, அளவற்ற பாசத்துடன் கூடிய, புதிய நட்பு கிடைத்துள்ளதும்கூட, என் அதிர்ஷ்டமே என வியந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.

      //அந்த சந்தோஷத்தை எல்லோரும் பெற பதிவாகப் போடுவது எவ்வளவு பெரிய விஷயம்...//

      உன் அன்பான வருகைக்கும், மழலை மொழியினில் நீ கூறிடும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.....டா தங்கம்.

      நீக்கு
  45. பெரிப்பா உடன் பதிலுக்கு நன்றி. இந்த பதிவோட தலைப்பு அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்......... எல்லா குறைகளுமே வெளியே தெரியறதில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy October 22, 2016 at 4:23 PM

      வாம்மா என் செல்லக்குழந்தாய், உனக்கு மீண்டும் என் ஆசிகள்.

      //பெரிப்பா உடன் பதிலுக்கு நன்றி.// :) :) :) :) :)

      //இந்த பதிவோட தலைப்பு அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்......... எல்லா குறைகளுமே வெளியே தெரியறதில்லையே...//

      எந்த ஒரு சிறு குறையும் இல்லாத மனிதர்கள் என்று யாருமே இந்த உலகத்தில் கிடையவே கிடையாதும்மா.

      அவரவர்களிடம் ஆயிரம் குறைகள் + துக்கங்கள் உண்டுதான். அதுபோல இருப்பதில் வியப்பேதும் இல்லைதான்.

      சிலர் தங்கள் குறைகளை வெளிப்படையாக வெளியே சொல்லுவார்கள். பலர் தங்கள் குறைகளை வெளியே சொல்ல முடியாமல் மனதில் மட்டும் வைத்துக்கொண்டு மறுகுவார்கள். உலகம் பலவிதம்.

      கோடி கோடியாக பணமிருந்தும், மனதில் எந்த நிம்மதியும் இல்லாமல், எப்போதும் துக்கத்திலேயே ஆழ்ந்து .... பாசத்தையும், கஷ்ட நஷ்டங்களையும், மனம் விட்டுப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளவோ, ஆறுதல் பெறவோ ஆளில்லாமல், அழுதுகொண்டிருப்பவர்களில் பலரையும் (கணவன் - மனைவியாகவும்கூட ) எனக்குத் தெரியும்.

      எதையுமே குறை என்று நாம் நம் மனதில் நினைத்தால் மட்டுமே குறையாகும்.

      நம்மிடம் பிறர் கண்ணுக்குத்தெரியாத ஒருசில குறைகள் இருப்பினும் அவற்றையும் நாம் நிறைகளாகவே நினைப்போம்.

      லக்ஷத்தில் ஒருவராக நாம் இருப்போம். நம் லட்சியத்தில் எப்போதும் குறியாக இருப்போம்.

      ’குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என பாடி மகிழ்வோம். வாழ்த்துகள்....டா.

      நீக்கு
  46. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (26.04.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://m.facebook.com/groups/427571634044436?view=permalink&id=1247319845402940

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  47. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (09.05.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/396877547481612/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  48. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (10.05.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/397263780776322/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு