என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

அ ஞ் ச லை - 5 [ பகுதி 5 of 6 ]


முன்கதை முடிந்த இடம்:

த்ரீ பெட் ஏ.ஸி. ரூமுக்குள் அழைத்துச்செல்லப்பட்டபின், சிவகுருவுக்கும், அஞ்சலைக்கும், குழந்தைக்கும் வயிற்றுப்பசிக்குச்சாப்பிட வேண்டிய அனைத்துப்பதார்த்தங்களும், அந்த ரூமுக்கே வரவழைக்க சிவகுருவால் ஆர்டர் செய்யப்பட்டன.  

குழந்தை அங்கு கும்மென்று போடப்பட்டிருந்த மெத்தை தலையணிகளில் ஜம்மென்று குதித்து விளையாடத் தொடங்கியது. மிகவும் ரம்யமான அந்த சூழ்நிலையில், சிவகுரு அஞ்சலையிடம் தன் மனம் திறந்து பேசத்தொடங்கினார்.     
=========================================================================
இப்போது பகுதி-5 .......... தொடர்கிறது

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள்.  அந்த தெய்வமே இன்று இந்த சிவகுரு ஐயா உருவத்தில் வந்து, தனக்கு தகுந்த நேரத்தில் உதவிட முன்வந்திருப்பதை அஞ்சலை உணரத்தொடங்கினாள்.

தான் மேற்கொண்டு எப்படி இந்தப் பொல்லாத உலகத்தில்,  மானம் மரியாதையுடன் வாழ்ந்து, இந்தத் தன்கைக்குழந்தையையும் ஆளாக்க முடியும் என்று கலங்கிப்போய் இருந்தவளுக்கு, வயிறு நிரம்ப நல்ல உணவுகள் வாங்கிக்கொடுத்து, இந்த மிகப்பெரிய ஹோட்டலில் இன்று ரூம் போட்டு தங்கச்சொல்லி, மனதுக்கு இதமாக ஒத்தடம் கொடுப்பது போல பலவித யோசனைகள் கூறி, எந்தவிதமான நிர்பந்தங்களோ, கட்டாயமோ செய்யாமல், நன்றாக யோசித்து உன் முடிவைச்சொல், நான் ஒரு மணி நேரம் கழித்து வருகிறேன் என்று சொல்லிப்போய் உள்ள, சிவகுரு ஐயாவை நினைத்து கண் கலங்கினாள், அஞ்சலை.

இப்படியும் சில நாகரீகமான, நல்ல உள்ளம் கொண்ட, பரந்த மனப்பான்மை கொண்ட, மிகச்சிறந்த மனிதர்கள் இருப்பார்களா, என வியந்துதான் போனாள்,அதிகம் படிக்காதவளும்,  சேரியிலேயே பிறந்து வளர்ந்து சேரியிலேயே வாழ்க்கைப்பட்டவளுமான, அஞ்சலை என்ற அப்பாவிப்பெண்.

சிவகுரு ஐயாவின் விருப்பப்படி நான் நடந்து கொள்ள சம்மதிப்பது சரிதானா; அது பாவச்செயல் இல்லையா? மறைந்த தன் கணவனுக்கும், அவர் நினைவாக விட்டுச்சென்றுள்ள என் குழந்தைக்கும் நான் செய்யும் துரோகச்செயல் இல்லையா? இது, எந்த ஒரு பெண்ணும் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் செயல் அல்லவே! உற்றார் உறவினர் என்று சொல்லிக்கொள்ளும் படியாக தனக்கு யாரும் இல்லையென்றாலும், ஊரார் சும்மா இருப்பார்களா? அஞ்சலையின் ஒரு மனசாட்சி இவ்வாறெல்லாம் பலவாறு, அவளைக்குழப்பலானது.

அதேசமயம் அவளின் மற்றொரு மனசாட்சி “நீ இன்றிருக்கும் ஆதரவற்ற நிலையில், உன்னிடம் இரக்கம் காட்டி, உனக்கும் உன் குழந்தைக்கும் ஒரு பாதுகாப்பும், நல்வாழ்வும் அமைத்துத்தர, ஒரு மனிதர் தானே முன்வந்து, உன் வீட்டுக்கதவைத் தட்டுகிறார்.  அவரைத்தட்டிக்கழித்து விட்டு, உன்னால் இந்தக்கைக்குழந்தையுடன், வறுமை என்ற ஓட்டைப்படகுடன், கணவனை இழந்த வெறுமைவாழ்வு என்னும் பெரும் கடலில் எதிர்நீச்சல் போடமுடியுமா?” என்று கேட்டு எள்ளி நகையாடியபடி மேலும் தொடர்ந்தது:

”வசதி வாய்ப்புள்ள சிவகுரு ஐயாவுக்கு, நீ இல்லாவிட்டால் உன்னைப்போலவே 10 அஞ்சலைகள் கிடைக்கக்கூடும். ஆனால் நீ நினைத்தாலும் இவரைப்போன்ற இன்னொரு சிவகுருவைக்காணவே முடியாது” என மிரட்டியது.   
  
இவ்வாறு “பணமா........பாசமா” என்ற குழப்பத்தில் இருந்த அஞ்சலை, தன் குழந்தைப்பக்கம் திரும்புகிறாள்.

பால் சாப்பிட்ட திருப்தியில், உறங்கும் தன் மகன் தூக்கத்திலும் ஏதோ இன்பக்கனா கண்டது போல கன்னத்தில் குழிவிழ சிரிப்பதைக்கண்டவள், அவனைக்குனிந்து முத்தமிடுகிறாள். 

எப்படிக்கூட்டிக்கழித்து பெருக்கிவகுத்துப் பார்த்தாலும்,  தான் இன்றுள்ள நிலையில், சிவகுரு ஐயா சொல்வதே சரியென்று படுகிறது அவளுக்கு.   ஐயா சொல்படி கேட்டு நடந்தால்தான், அவருக்கும், அவர் மனைவிக்கும், தனக்கும், தன் குழந்தைக்குமே பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தோம் என்ற ஆறுதல் கிடைத்து, தன் சொச்ச வாழ்நாளாவது ஓரளவு தன் மகனுக்கு அமையப்போகும் நல்லதொரு வளர்ப்பையும், வாழ்க்கையையும் நினைத்தாவது இன்பமாகக் கழியக்கூடும் என்ற நல்லதொரு எண்ணத்துடன் ஒரு இறுதி முடிவுக்கு வந்திருந்தாள், அஞ்சலை.

......................
................................
..........................................

/ இடைவேளை /

.........................
....................................
...............................................

வீட்டு ஹாலின் சுவரைச்சுற்றிலும், பல்வேறு பாவனைகளில் சிரித்த வண்ணம் குழந்தைகள் படங்கள் நிறையவே தொங்கவிடப்பட்டிருந்தன. தினமும் போல ஒவ்வொன்றாக அவற்றைப்பார்த்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் மல்லிகா.  

மணி மாலை 6 என்பதை ஆறு முறை ஒலித்த அந்த சுவர் கடிகாரம் நினைவு படுத்தியது. பூஜை அறையில் விளக்கேற்றிய அவளுக்கு அங்கு குனிந்த நிலையில், குழந்தை ரூபத்தில் இருந்த வெண்ணெய் திருடும் குட்டிக்கிருஷ்ணன் தன்னைப்பார்த்து குறும்புடன் சிரிப்பது போலத்தோன்றியது. 

காலையில் புறப்பட்டுச்சென்ற தன் கணவர் இன்னமும் வரக்காணோமே என்ற கவலையில் செல்போனில் தொடர்பு கொள்ள நினைத்தவளின் கவனத்தை வாசலில் கேட்ட அழைப்பு மணி ஈர்த்தது. 

கதவைத்திறந்த மல்லிகாவுக்கு, கையில் கஷ்குமுஷ்குன்னு ஒரு பணக்காரக்குழந்தையுடன், தன் கணவர் வந்து நிற்பதைக்கண்டு, சந்தோஷத்தில் பிரமிப்பு ஏற்பட்டது.

தலை நிறைய சுருட்டை முடி, குண்டு மூஞ்சி. குறுகுறுப்பான பார்வை. குட்டிக்கிருஷ்ணன் போன்றே சற்று கருமைநிறம். காது நுனிகளில் சொருகிய வண்ணம் தங்க அவல் போன்ற தொங்கட்டான்கள். கைக்கு ஒன்று வீதம் பட்டையான தங்க வளையல்கள். விரலில் குட்டியான அழகிய மாதுளைப்பழ முத்துக்கல் பதித்த மோதிரம். அந்த மோதிரத்தைக் கைவளையளுடன் இணைத்த பாம்பரணை போன்ற மெல்லியதோர் தங்கச்செயின்.  

கழுத்தினில் மினுமினுக்கும், மெஷின் கட்டிங்க்கில் செய்த வெந்தய டிசைன் தங்கச்சங்கிலி. இடுப்பில் தங்கத்தில் அரணா. தனியாக தங்க நாய்க்காசுகள், தங்கத் தாயத்துடன் கூடிய ஒரு கருப்புக்கயிறு.

கால்கள் இரண்டிலும் முத்துமுத்தாக ஒலிஎழுப்பும் வெள்ளிக்கொலுசுகள். பாதங்களில் நடந்தால், பூனை போல ஒலி எழுப்பும் அழகிய பூப்போட்ட பூட்ஸுகள். புதுச்சட்டை, புது டிராயர், கமகமக்கும் குழந்தைக்ளுக்கான விசேஷ பெர்ஃப்யூம் மணம்.  

தன்னிடம் தாவிய அந்தக்குழந்தையை அள்ளி எடுத்து முத்தமிட்டாள் மல்லிகா.

கூடவே வந்த வேலையாள் ஒருவன் ஒரு பெரிய அட்டைப்பெட்டியையும். அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த குட்டி மெத்தை தலையணியுடன் கூடிய, தொங்கும் தொட்டிலையும் வைத்துவிட்டு, சிவகுருவிடம் விடை பெற்றுச்சென்றான். 

அந்த அட்டைப்பெட்டி நிறைய, குழந்தைகளுக்கான விலை உயர்ந்த, தரமான விளையாட்டுச் சாமான்கள், ரப்பர் பொம்மைகள், பந்துகள், பால் பவுடர் டப்பாக்கள், ஃபீடிங் பாட்டில்கள், நிப்பிள்கள், நாப்கின்கள் இத்யாதி இத்யாதி, வாங்கிக்குவித்திருந்தார், சிவகுரு.

”இது யார் குழைந்தைங்க?” ஒருவித ஏக்கத்துடனும், மிகுந்த படபடப்புடனும் கேட்டாள், மல்லிகா.




தொடரும்

சனி, 9 ஏப்ரல், 2011

அந்த நாளும் வந்திடாதோ !


கிராமத்திலேயே பெரிய வீடு
மொத்த நபர்கள் பதினெட்டு
பச்சைப் பசேலென பரந்து விரிந்த
சொந்த வயல்வெளிகள்

ஆற்றுப் பாசனத்தில்
அருமையான சாகுபடி
வீட்டின் அனைவர்
தொழிலும் விவசாயம்

மூட்டை மூட்டையாய்
நெல்மணிகள்
வீடு முழுவதும்
விளை பொருட்கள்

சதங்கை ஒலியுடன்
வண்டி மாடுகள்
கூப்பிட்ட குரலுக்கு
வேலையாட்கள்

செல்வச் செழிப்பிலும்
பாச மழையிலும் 
வளர்ந்த என் 
மழலைச் செல்வங்கள்

சத்தான உணவு
முத்தான உழைப்பு
நிம்மதியான வாழ்வு
கவலையற்ற உறக்கம் - அன்று.



திடுக்கிட்டு எழுந்தேன் - இன்று



ரேஷன் கடைக் க்யூவில்
நின்ற நிலையில் தூங்கியுள்ளேன்
கனவில் கண்ட அந்த அருமையானக்
கூட்டுக் குடும்ப நாளும் வந்திடாதோ?



=========================================================================
ஓர் அறிவிப்பு

இன்றும் நாளையும், நான் வெளியிடுவதாக இருந்த "அஞ்சலை" சிறுகதைத்தொடரின் பகுதி-5  மற்றும் பகுதி-6,  ஒருசில தவிர்க்க முடியாத காரணங்களால், வரும் செவ்வாய் (12.04.2011) மற்றும் புதன் (13.04.2011)வெளியிட உத்தேசித்துள்ளேன்.

இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன். 

அன்புடன்,
வை.கோபாலகிருஷ்ணன்   

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

அ ஞ் ச லை - 4 [ பகுதி 4 of 6 ]


தூளியிலிருந்த குழந்தை, அடியில் போடப்பட்டிருந்த கெட்டித்துணியில் ஈரத்தைச் சொட்டவிட்டு சிணுங்க ஆரம்பித்தது. அஞ்சலை தன் குழந்தையைக் கையில் எடுத்து, தண்ணீர் தெளித்து துணியால் துடைத்தவாறே தன் இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டாள். 

இந்த ஏழைக்குடிசையில் பிறந்துள்ள அந்தக்குழந்தை, அழகோ அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தது சிவகுருவுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. அங்கிருந்த ஓலையால் செய்யப்பட்ட கிலுகிலுப்பையை எடுத்து சிவகுரு குழந்தைக்கு ஆட்டிக்காண்பித்ததும், அது கடகடவென்று வாய்விட்டுச்சிரிக்க ஆரம்பித்தது.

“டேய்....உன் பெயர் என்னடா?” என்று கேட்டபடி அதன் கன்னத்தைத்தொட்ட சிவகுருவிடம் சிரித்தவாறே அது தாவிச்சென்றது. பிறகு அவர் முகத்தையே உற்றுப்பார்த்த அது, அவரின் கோல்ட் ஃப்ரேம் போட்ட மூக்குகண்ணாடியை தன் பிஞ்சு விரல்களால் கழட்டி, தன் கையில் பிடித்து வாயில் வைத்துக்கொள்ளப்போனது. 

“பார்த்து......சாமீ.....கீழே போட்டு உடைச்சுடப்போவுது”  என்று பதறினால் அஞ்சலை. அவர் தன் மூக்குக்கண்ணாடியை, அதன் பிடியிலிருந்து ஒருவாறு கஷ்டப்பட்டுக் காப்பாற்றியதும், அவர் சட்டைப்பையில் குத்தியிருக்கும் பேனாவை எடுக்கக் குனிந்து முயன்றது. 

அந்தக்குழந்தையின் சுறுசுறுப்புடன் கூடிய குறும்புத்தனம் சிவகுருவுக்கு மிகவும் பிடித்துப்போனது. தன்னிடம் இருந்த செல்போன் கேமராவினால், தன்னுடன் சேர்த்து அந்தக்குழந்தையையும் பலவித போட்டோக்கள் எடுத்துக்கொண்டார்.

பிறகு அஞ்சலையுடன் அந்தக்குழந்தையையும் கூட்டிக்கொண்டு தன் காரில் வெளியே எங்கோ புறப்படவேண்டும் என்ற தன் விருப்பத்தை அஞ்சலையிடம் தெரிவித்த சிவகுரு, தன் காரை நோக்கிச்செல்லலானார்.

மரஸ்டூலை எதிர்புற டீக்கடையில் நன்றி சொல்லி பொறுப்பாக ஒப்படைத்து விட்டு, தன் குடிசைக்கதவுகளை சாத்தி, நாய் ஏதும் நுழையாத வண்ணம் கயிறு போட்டுக்கட்டிவிட்டு,   கையில் குழந்தையுடன் கிளம்பினாள் அஞ்சலை.

காரின் பின்புற ஓரமாக அமர்ந்தபடி, தன் குழந்தைக்கு வேடிக்கை காட்டியவாறே சென்ற அஞ்சலைக்கு, இவர் இன்று எதற்கு நம்மைத்தேடி வந்தார்? இப்போ எங்கே நம்மைக்கூட்டிப்போகிறார்? என்பது ஒன்றும் புரியாமல் குழப்பமாகவே இருந்தது.  

வந்ததொரு பெரும்புள்ளியுடன், அஞ்சலை ஒய்யாரமாகக் காரில் ஏறி அமர்ந்து எங்கோ புறப்பட்டுச் செல்வதைப்பார்த்த அக்கம் பக்கத்து சேரி ஜனங்கள் தங்களுக்குள் ஏதேதோ கற்பனைகள் செய்துகொண்டு, அவசர அவசரமாகக் கூடிப்பேசலானார்கள். 

”புடிச்சாலும் புடிச்சாள், நல்ல புளியங்கொம்பாத்தான் பார்த்துப் புடிச்சிருக்கிறாள்” என்றாள் கைத்தடி ஊன்றிய ஒரு கிழவி.  

“புருஷனை மலையா நம்பியிருந்தா, அந்தப்பொறம்போக்கும் போய்ச்சேர்ந்து, மாசம் ஒண்ணாச்சு; அவளுக்கும் சின்ன வயசுதானே; புருஷனையே நினைச்சுக்கிட்டு இருந்துட்டு, இப்போ வந்துள்ள அரசனையும் கைவிட்டுட முடியுமா என்ன?”, அடுத்த கிழவி ஏதோ ஒத்துஊதி, அந்த முதல் கிழவியின் பேச்சுக்கு தூபம் போடலானாள்.

“நம்ம அஞ்சலையைப்பத்தி நல்லாத் தெரிஞ்சிருந்தும் இப்படி நாக்கூசாம பேசுறீங்களே! இது உங்களுக்கே நியாயமா” அஞ்சலைக்குப்பரிந்து பேசுபவள் போல, மிகவும் ஆர்வமாக வந்துசேர்ந்துகொண்டாள், அஞ்சலை வயதையொத்த இன்னொருத்தி. 

இப்படியாக எப்போதுமே தங்களின் வெறும் வாயை மென்றுவரும் அவர்களுக்கு, இப்போது, இன்றைக்கு காரில் ஏறிச்சென்ற அஞ்சலை என்ற அவல் கிடைத்து விட்டதில், நேரம் போனது தெரியாமல், கிடைத்த அவலை வாய் ஓயாமல், நன்றாக மென்று வம்பு பேசிக்கொண்டிருந்தனர். 

பிரபல மிகப்பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடல்கள், குடும்பத்துக்குத்தேவையான அனைத்து பொருட்களும் விற்கப்படும் பல்பொருள் அங்காடிகள் பலவும் ஒருங்கே நிறைந்திருந்த அந்தப்பகுதியின் நடுவினில் அமைந்திருந்த ஒரு மிகப்பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குள் அந்த கார் புகுந்து நின்றது.   

த்ரீ பெட் ஏ.ஸி. ரூமுக்குள் அழைத்துச்செல்லப்பட்டபின், சிவகுருவுக்கும், அஞ்சலைக்கும், குழந்தைக்கும் வயிற்றுப்பசிக்குச்சாப்பிட வேண்டிய அனைத்துப்பதார்த்தங்களும், அந்த ரூமுக்கே வரவழைக்க சிவகுருவால் ஆர்டர் செய்யப்பட்டன.  

குழந்தை அங்கு கும்மென்று போடப்பட்டிருந்த மெத்தை தலையணிகளில் ஜம்மென்று குதித்து விளையாடத் தொடங்கியது. மிகவும் ரம்யமான அந்த சூழ்நிலையில், சிவகுரு அஞ்சலையிடம் தன் மனம் திறந்து பேசத்தொடங்கினார்.     



தொடரும்

வியாழன், 7 ஏப்ரல், 2011

அ ஞ் ச லை - 3 [ பகுதி 3 of 6 ]


”சொல்லுங்க சாமீ .... ஏதாவது ஜில்லுனு குடிக்க உங்களுக்கு சர்பத் வாங்கியாரட்டா? அம்மா நல்லா இருக்கங்களா?” என்று கேட்டாள் அஞ்சலை.

”சர்பத்தெல்லாம் ஒன்றும் வேண்டாம்மா, குடிக்க பானைத்தண்ணி கொடு போதும்; நானும் அம்மாவும் நல்லாத்தான் இருக்கோம். ஒரு மாதமா நீ ஏன் வீட்டுப்பக்கமே வரலை?  மேற்கொண்டு என்ன செய்வதாய் இருக்கிறாய்? 

ஏதோ நடக்கக்கூடாதது தான். போதாத காலமும் ஆகாத வேளையும் இப்படி சோதனையா நடந்து போச்சு. அதையே நினைச்சு நினைச்சு வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் எப்படிம்மா?” ஒரு வித வாஞ்சையுடன் வினவினார் சிவகுரு.

”நீங்களும் அம்மாவும் அன்னிக்கு இராமேஸ்வரத்துக்கு அவசரமா ஏதோ வேண்டுதல்ன்னு புறப்பட்டுக்கிட்டு இருக்கும்போது, என் புருஷன் ஆஸ்பத்தரியிலே தீவிர சிகிச்சைப் பிரிவுலே தன் உயிருக்குப் போராடிக்கிட்டு கிடந்தாரு. 

அப்போ நல்லவேளையா, நீங்கதான் தெய்வம் மாதிரி சுளையா நாலாயிரம் ரூபாய் கொடுத்துட்டுப்போனீங்க. அந்தப்பணத்துல கால் பகுதிக்குமேல் அந்த ஆஸ்பத்தரி நாயிங்க ஈவு இரக்கமே இல்லாமல் பிடுங்கி பங்கு போட்டுக்கிட்டாங்க. 

போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு, ஒருவழியா அவங்ககிட்டேயிருந்து ’பாடி’யை வாங்கி சொச்ச காரியங்களைப் பார்க்க செலவழித்தது போக மீதிப்பணம் ஏதோ கொஞ்சம் இருந்திச்சு. 

இந்த மாசம் பூராவும் நான் வேலைக்கு எங்கும் போகாததாலே, அந்த மீதிப்பணம் தான், ஏதோ எனக்குக்கஞ்சி காய்ச்சிக் குடிக்கவும், என் புள்ளைக்கு பால் வாங்கிக்கொடுக்கவும், இன்னிக்கு வரைக்கும் உதவியாய் இருக்குது.

இந்தப் போலீஸ்காரங்களும், அரசாங்க அதிகாரீங்களும் அடிக்கடி வந்து ஏதேதோ விசாரணை பண்ணிட்டுப்போறாங்க. மேற்கொண்டு என்ன செய்யறதுண்ணு ஒண்ணுமே புரியலே .... சாமீ.

நீங்க தான் கடவுள் மாதிரி எவ்வளவோ தடவை பணம் காசு கொடுத்து,  எனக்கு உபகாரம் செய்துகிட்டு இருக்கீங்க. அந்தக்கடனையெல்லாம் இந்த ஜென்மத்திலே நானு எப்படி அடைப்பேன்னு தெரியலை சாமீ.

என் புருஷன் இருந்தவரைக்கும் பகல் பொழுதிலே இந்தப்புள்ளைய அவரு பார்த்துக்கிட்டு, நைட்டுலே வாட்ச்மேன் வேலைக்குப்போயிட்டிருந்தாரு. இப்போ நானும் வேலைக்குப்போனா, இந்தப்புள்ளைய யாரு பார்த்துப்பாங்கன்னு வேறு புரியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன். 

இதுக்கு நடுவிலே பட்டணத்துலேந்து ஒருத்தர் வந்தாரு. இந்தக்குழந்தையைக் கொடுத்துடறா இருந்தா, முழுசா பத்தாயிரம் ரூபாய் வாங்கித்தந்துடுவாராம். நல்லா யோசனை பண்ணி வைய்யீன்னு சொல்லிவிட்டுப் போய் இருக்காரு. 

எப்படீங்க கஷ்டப்பட்டு பெத்து வளர்த்த புள்ளையப்போயீ மனசோட விக்க முடியும்?” கண்ணீர் விட்டவாறே புலம்பித்தீர்த்தாள் அஞ்சலை.    

அவளின் சோகக்கதையைக்கேட்டதும் சிவகுருவுக்கும் கண்ணீர் வந்துவிடும் போல வருத்தமாகவே இருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார்.  

எதிர்புறம் இருந்த டீக்கடையின் ரேடியோவில் “ஏன் பிறந்தாய் மகனே .... ஏன் பிறந்தாயோ .... நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே” என்ற பாடல் நேயர் விருப்பமாக ஒலிபரப்ப ஆரம்பித்த உடனேயே, திடீர் மின் தடை காரணமாக அத்துடன் நின்று போனது.  

”இல்லையொரு .... பிள்ளையென்று ... ஏங்குவோர் பலரிருக்க ... இங்கு வந்து ஏன் பிறந்தாய்.... “ என்று அடுத்துவரும் பாடல் வரிகளை, வேதனையுடன் கொப்பளிக்க நினைத்த சிவகுரு, கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டார்.  

அஞ்சலையின் புருஷனை இதுவரை ஒரே ஒருமுறை மட்டும் பார்த்த ஞாபகம் சிவகுருவுக்கு. 

ஒரு மாதம் முன்பு, அந்தப்பேட்டையில் விஷச்சராயம் அருந்தியதால், வாந்தி மயக்கம் ஏற்பட்டவர்களை, அள்ளிப்போட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தும், பலனின்றி பலியானவர்களில், இந்த அஞ்சலையின் புருஷனும் ஒருவர்.


தொடரும் 

புதன், 6 ஏப்ரல், 2011

அ ஞ் ச லை - 2 [ பகுதி 2 of 6 ]


அஞ்சலைக்கு வயது இருபத்து ஐந்துக்குள் தான் இருக்கும். மிகவும் அடக்கமானவள். சற்றே கறுத்த நிறமானாலும் கம்பீரமான வசீகர உடல்வாகு. கடந்த ஒரு வருடமாகத்தான், அவளுடன் சிவகுருவுக்குப் பழக்கம். 

வீட்டைப்பராமரிப்பதில் அவளுக்கு நிகர் அவளே. மனதிலும் செயலிலும் சுத்தமானவள். அவள் பாத்திரங்களைக்கழுவி வைத்தால் ஒரு வரவரப்போ, எண்ணெய்ப்பிசுபிசுப்போ இல்லாமல் அவை அப்படியே டால் அடிக்கும். துணிமணி துவைத்தாலும், அப்படியே பளிச்சென்று இருக்கும். 

ஃபிரிட்ஜ், டி.வி. ஷோகேஸ், கம்ப்யூட்டர், ஜன்னல்கள், கதவுகள் என எல்லாவற்றையும் தூசி இல்லாமல் துடைத்து, ஒட்டடை அடித்து,  பாத்ரூம் கழுவி, வீட்டைப்பெருக்கி, வாரம் ஒருமுறை தரையை அலம்பித்துடைத்து, அற்புதமாக வைக்கக்கூடியவள். 

நாணயம், நம்பிக்கை பற்றியோ கேட்கவே வேண்டாம். பீரோக்கள் எல்லாவற்றையும், திறந்து போட்டுவிட்டு, வீட்டு சாவியையும் அவளிடமே ஒப்படைத்து விட்டு, எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் நாம் போய் விட்டு, நிம்மதியாக வரலாம். 

ஒருமுறை துவைக்கப்போட்ட சட்டைப்பையிலிருந்து அறுநூறு ரூபாய்க்கு மேல் எடுத்துக்கொடுத்தவள். ஒரு நாள் வீட்டைக்கூட்டி சுத்தம் செய்யும் போது, பெட்ரூம் கட்டிலின் கீழ் சுவர் ஓரமாக கிடந்த இரட்டைவடம் தங்கச்சங்கிலியை பத்திரமாக ஒப்படைத்தவள். 

வீட்டுக்கு வேண்டிய காய்கறிகள், மளிகை சாமான்கள் முதலியன வாங்கித் தருபவளும் அவளே. ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு, ஆயிரம் வேலைகளை செய்து கொடுத்து, நல்ல பெயர் எடுத்தவள். அடுத்த மாதம் முதல் அஞ்சலைக்குத் தந்துவரும் மாதச்சம்பளத்தை ஆயிரத்திலிருந்து இரண்டாயிரமாக உயர்ந்த இருந்த நேரம் பார்த்துத்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்து விட்டது.  

*** வீட்டு வேலைகளை மிகவும் சிறப்பாகவும், சீக்கரமாகவும் முடித்து விட்டு, பகலில் “அத்திப்பூக்கள்” ளும், இரவில் “நாதஸ்வரம்” மும் டி.வி. யில் பார்த்துவிட்டுத்தான் தன் வீட்டுக்குப் புறப்படுவாள். வாடகைத்தாயாக நடிக்கும் ’கற்பகம்’ என்ற கதாபாத்திரத்தை அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். ***

அஞ்சலை வராமல் தன் வீடு கடந்த ஒரு மாதமாக தவித்துத்தத்தளித்து வருவதை ஒரு நிமிடம் நினைத்துப்பார்க்கிறார், சிவகுரு. பாவம் அவர் மனைவி மல்லிகா. அவளுக்கு எப்போதும் வயிற்றுப்பகுதியில் ஏதோவொரு பிரச்சனை. அடிக்கடி சுருட்டிப்பிடித்து வலி வந்துவிடுகிறது. அதற்கான தொடர் சிகிச்சை எடுத்து வருபவள்.

குழந்தைப்பைத்தியமான அவளுக்கு இதுவரை குழந்தை ஏதும் பிறக்கவில்லை.தற்சமயம் கருத்தரித்து குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், அவளுக்கு வயிற்றுப்பகுதியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளை ஒவ்வொன்றாக நாளடைவில் சரிசெய்ய வேண்டியிருப்பதாகவும் அந்த லேடி டாக்டர் சிவகுருவுக்கு மட்டும் தெரியப்படுத்தியிருந்தார்கள். 

இப்போது உள்ள பல்வேறு பிரச்சனைகளை ஒவ்வொன்றாக சரிசெய்த பிறகு, தானே அவளுக்குத் தேவையான மற்ற சிகிச்சைகள் மேற்கொண்டு, குழந்தை பாக்யம் கிடைக்கச்செய்வதாகவும்,  இதற்கெல்லாம் குறைந்தது இரண்டு மூன்று வருடங்கள் ஆகலாம் என்றும், அதே லேடி டாக்டர் சிவகுருவிடம் சொல்லியதில், அவருக்கு சற்றே ஆறுதலாகவும் மனநிம்மதியாகவும் இருந்து வருகிறது. 

இவ்வாறு உடலிலும் உள்ளத்திலும் உற்சாகம் குறைந்த மல்லிகாவால், அவ்வளவு பெரிய தன் வீட்டை, அஞ்சலையின் உதவியின்றிச் சரியாக பராமரிக்க முடியவில்லை.


தொடரும்


=========================================================================


இந்தச்சிறுகதை 2005 ஆண்டு இறுதியில் முதன்முதலாக எழுதப்பட்ட போது மேலே கொடுத்துள்ள 7 வது பத்தி (7th Paragraph) கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது:

*** வீட்டு வேலைகளை மிகவும் சிறப்பாகவும், சீக்கரமாகவும் முடித்து விட்டு, பகலில் “அகல்யா” வும், இரவில் “ஆனந்தம்” மும் டி.வி. யில் பார்த்துவிட்டுத்தான் தன் வீட்டுக்குப் புறப்படுவாள்.  சாந்தியாக நடிக்கும் சுகன்யாவை அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். ***

இப்போது அதைப்பற்றி ஏன் இங்கு குறிப்பிடப்பட வேண்டும் என்கிறீர்களா?அதற்கொரு குறிப்பிட்ட காரணம் உள்ளது. கதையின் முடிவில் உள்ள பின்குறிப்பைப் படிக்கும் போது உங்களுக்கே புரியும். 

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அ ஞ் ச லை - 1 [ பகுதி 1 of 6 ]


அந்தச்சேரிப்பகுதி குடிசை ஒன்றின் வாசலில், மிகவும் ஊர்ந்து சென்று நின்றதில் புத்தம் புதிய, அந்த தக்காளி நிற மாருதி கார், மேலும் கூடுதல் அழகாக இருப்பது போலத்தோன்றமளித்தது.

காலைவேளைக்கதிரவனின் ஒளி, டிரைவர் சீட்டின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியில் பட்டுப்பிரதிபலித்தது. சேரியில் சைக்கிளின் பழைய டயர்களை ஒரு சிறிய குச்சியால் தட்டி வண்டியாக ஓட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் காரைச்சுற்றி வட்டமடித்துக்கொண்டிருந்தனர்.  அதில் ஒருசிலர் அந்தக்காரை ஆசையுடன் தொட்டுப்பார்த்தனர். அவர்களின் புழுதி படிந்த கைரேகைகள் ஆங்காங்கே திருஷ்டிப்பொட்டு போல அந்தக்காரின் உடம்பில் பதிந்தன.

தன் குடிசையிலிருந்து வெளியில் வந்து எட்டிப்பார்த்த அஞ்சலைக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. 

“சாமீ.... நீங்க ஏன் சாமீ இந்தக்குடிசைக்கெல்லாம் வரணும்?  சொல்லி அனுப்பியிருந்தால் நானே ஓடியாந்திருப்பேனில்ல. சரி வந்துட்டீங்க.... வாங்க” எனச்சொல்லி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, எதிர்புறம் இருந்த டீக்கடைக்கு ஓடிப்போய், ஒரு கால் மட்டும் சற்றே நொடிக்கும், மர ஸ்டூல் ஒன்றை இரவல் வாங்கியாந்து, தன் சேலைத்தலைப்பால் அழுத்தித் துடைத்துவிட்டு, குடிசை வாசலில் போட்டுவிட்டு, அமரும்படி வேண்டினாள்.  

அக்கம்பக்கத்து குடிசை வாழ் மக்களின் பார்வை முழுவதும் இவர்கள் மேலேயே இருந்ததால், சிவகுருவுக்கு சற்று சங்கடமாக இருந்தது.  அதை உணர்ந்த அஞ்சலை மரஸ்டூலுடன் குடிசைக்குள் நுழைந்து “மெதுவா குனிஞ்சு வாங்க....சாமீ” என்று உள்ளே அழைத்தாள்.

குடிசை வீடு ஒன்றுக்குள் முதன் முதலாகப்போன சிவகுருவுக்கு அதன் அமைப்பு மிகவும் வியப்பாக இருந்தது. 

நான்கு பக்கங்களும் மண்ணால் எழுப்பப்பட்ட குட்டிச் சுவர்கள். சாணத்தால் மொழுகிய மண் தரை மாட்டுக்கொட்டகையை நினைவுபடுத்தியது.  மேல் புறம் மூங்கில் குச்சிகள் கொடுத்து,  தென்னம் ஓலைகளாலும் முழுவதுமாக வேயப்பட்ட கூரைப்பகுதி. 

இடதுபுறம் இருந்த சமையலறைப்பகுதிக்குச் சிறிய குட்டையானதொரு தடுப்புச்சுவர். ஒரு மூலையில் ஏதோவொரு ஸ்வாமி படம். படத்தின் தலையில் அன்றே பறித்ததோர் செம்பருத்திப்பூ. படத்தின் கீழே அழகியதோர் சிறிய கோலம். அருகில் அழகாக ஏற்றி முத்துப்போல பிரகாசிக்கும் ஒரு மிகச்சிறிய அகல் விளக்கும், அதனருகே, ஒரு எண்ணெய் பாட்டிலும், தீப்பெட்டியும்.

வலதுபுற ஓரமாக கயிறுகள் தளர்ந்து தொங்கிய வண்ணம் ஒரு கயிற்றுக்கட்டில். அதன் மேல் ஒரு பனை ஓலை விசிறி. குடிசையின் மேல்பகுதி மூங்கில்களில் தொங்கும் நீண்ட S வடிவக்கொக்கிகள்.  அவற்றில் தொங்கவிடப்பட்டுள்ள இரண்டு லாந்தர் விளக்குகள்.

மற்றொரு மூலையில் 4 செங்கல்கள் மட்டும் வைத்து அதன் நடுவில் ஆற்றுமணல் பரப்பி, அந்த மணல் மேட்டின் மேல் ஒரு ஈரத்துணி சுற்றிய மண் பானை, மூடியுடன்.  அதன் மீது அந்தப்பானைக்கு கிரீடம் வைத்ததுபோல கவிந்த நிலையில் ஒரு அலுமினியக் குவளை.  

குடிசையின் வாசல்புறம், கொல்லைப்புறம் என்று இருபுறமும் மூங்கில் ப்ளாச்சுகளில் பனை ஓலையால் வேயப்பட்டு எப்போதும் திறந்த நிலையில் கதவுகள் போன்ற அமைப்பு ஒன்று இருந்ததால், அவையே அந்தக்குடிசை வீட்டுக்குள் வெளிச்சமும், காற்றும் வர உதவின.

”மண் குடிசை ... வாசலென்றால் ... தென்றல் வர ... மறுத்திடுமோ”, என்ற வாத்யார் படப்பாடலை, சிவகுருவின் வாய், அவரையறியாமலேயே முணுமுணுத்தது.   

கயிற்றுக்கட்டிலின் அருகே, சாயம் போன நீல நிற சேலை ஒன்றில், கயிற்றால் கட்டப்பட்டுத் தொங்கும் தூளி. வாயில் இரண்டு விரல்களைச்சூப்பியவாறு, சுகமாகத்தூங்கும், எட்டு மாதங்களே ஆன கொழுகொழுக்குழந்தை. 

குடிசை முழுவதும் இப்படி நோட்டம் விட்ட சிவகுருவுக்குத் தான் வந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்ற சிறு தடுமாற்றம்.


தொடரும்

       

செவ்வாய், 29 மார்ச், 2011

உனக்கே உனக்காக !




எனக்கே என்னைப் பார்த்தால் 
பிடிப்பதில்லை அப்போதெல்லாம்.

நிறைமாத கர்ப்பிணிபோல
எப்போதும் என் வயிறு

வேக நடைப் பயிற்சியுடன்
வேகத்தில் ஓடியும் விட்டேன்

மஃப்டியில் போலீஸோ 
என்று என்னை எண்ணி

எனக்கு முன்னே ஓடி 
ஒளிந்தனர் ஒருசிலர் ஒருநாள்.

நாடாத வைத்தியம் இல்லை, மனம் 
வாடாத நாட்களும் இல்லை.

காசு பணம் கரைந்ததேயன்றி, என்
தொந்தி மட்டும் கரையக்காணோம்

இஷ்ட தெய்வம் விநாயகரிடம்
இது பற்றி விண்ணப்பிக்க நான்

அவர் தனக்கும் இந்தத் தொந்திப் பிரச்சனையே எனத் துரத்தலானார், நொந்து போனேன்.

”பட்டினி கிட, விரதம் இரு” எனப்
படுத்தி வந்தனர் பார்த்தவர் என்னை.

”பணத்தொந்தி” எனப் பரிகசித்தனர்
ஒட்டிய வயிற்று எரிச்சலில் சிலரும்.

எதிலும் ஒரு பயனுமுண்டு தானே
உணர்ந்து கொண்டேன் நானும் இன்று.

பேரக்குழந்தை ஓடி வந்தான் 
செல்லமாகப் படுக்கவேண்டி

”தாத்தா, கதையொன்று 
சொல்ல வேணும்” என்றான்.

”பக்கத்து தலையணியில் 
படுத்துக்கோ சொல்வேன்” என்றேன்

”எதற்கு அந்தத் தலையணி” என்றே சொல்லி
என் தொந்தி மேல் தலையை வைத்தான்

ஒய்யாரமாகச் சாய்ந்தவாறே
உன்னிப்பாகக் கதையைக் கேட்டான்

உவகையுடன் நானும் சொன்னேன்
"என் தொந்தி என்றும் உனக்கே" என்று.