என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 15 ஜூலை, 2014

TIPs & SUGGESTIONs FOR WINNING ! [சிறுகதை விமர்சனப்போட்டிகளில் வெற்றி பெற சில ஆலோசனைகள்]



அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.

இதுவரை நம் ‘சிறுகதை விமர்சனப்போட்டி’யில் 26 சிறுகதைகள் வெளியிடப்பட்டு, அதில் 24 சிறுகதை விமர்சனங்களுக்கான போட்டி முடிவுகளும் வெற்றிகரமாக முற்றிலுமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதுவரை இந்த முதல் 24 போட்டிகளில் [ {21*5=105}  + {2*3=6}  + {1*6=6} ]  = 117 விமர்சனங்கள் பரிசளிக்கத் தேர்வாகியுள்ளன.

போட்டியில் கலந்துகொள்ள மேலும் [VGK-26 TO VGK-40] 15 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.

இந்த சிறுகதை விமர்சனப் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு பரிசினை சுலபமாக வென்றிட மிகவும் பயனளிக்கும் வழிகாட்டுதல்கள் ஏற்கனவே அவ்வப்போது சில பதிவுகளில் என்னாலும் உயர்திரு நடுவர் அவர்களாலும் வெளியிடப்பட்டுள்ளன. 

சிலர் மட்டும் அவற்றைப் படித்திருக்கலாம், பலர் படிக்கும் வாய்ப்பினை  இழந்திருக்கலாம். அவற்றைப் படித்தவர்களிலேயே சிலர் அவற்றை  இப்போது மறந்திருக்கலாம். புதிதாக விமர்சனம் எழுதி அனுப்பத் தொடங்கியுள்ளவர்கள் அவற்றை தங்களின் கவனத்திலேயே கொள்ளாமலும் இருக்கலாம்.

அனைவரும் பயன்பெறும் வகையில் அவற்றின் இணைப்புகளுடன் மீண்டும் அவற்றை இப்போது இங்கே கொடுத்துள்ளேன்.




[ 1 ]

யாரோ சொன்னது:


"எதை எழுதினாலும் எழுதுபவரின் மன ஓட்டம் வரிகளில் படிந்து ஆற்றோட்டம் போல அழகாக அமைவது எழுதுவதின் சிறப்பைக் கூட்டும்.  



கதைக்கு மட்டுமல்ல .... விமரிசனங்களுக்கும் விமரிசிப்பவரின் இந்த எண்ண ஓட்ட 

அமைதி இன்றியமையாத ஒன்று.


விமரிசிக்கப் போகும் வரிகளை // ......... // இப்படி அடைப்புக்குறிக்குள் சிறையிட்டு 

துண்டு துண்டாக அந்த அடைப்புச் செய்தியை விமரிசிப்பது அல்லது 

சிறப்பித்து சொல்வது, சொல்லப் போகும் எண்ண ஓட்ட வேகத்திற்கு தடுப்பு 

அணை போட்டதாகவே அமையும்.  


இந்த அடைப்பாகிய தடுப்பு வேலிகள் நடுநடுவே குறுக்கிட்டு குறுக்கிட்டு 

கோர்வையாகச் சொல்லப் போவதின் அழகையும் குலைக்கும்.   


விமரிசிக்கப் போகும் வரிகளை உள்வாங்கிக் கொண்டு தன் மொழியில், தன் நடையில், 

அவற்றையே வெளிப்படுத்தினால், விமரிசனங்களின் அழகும் கூடும்."  


    [ இது யாரோ எப்போதோ எங்கோ என்றோ சொன்னது ]


                              
இப்படி அடிக்கடி 'விமரிசனக்கலை' பற்றி பலர் சொன்னதை அல்லது நான் படித்ததை 

அவ்வப்போது வெளியிடுவதாக இருக்கிறேன். எங்கிருந்தெல்லாமோ திரட்டப்படும் 

இப்படியான கருத்துக்கள் விமரிசனங்கள் எழுதுவோருக்கு உதவியாக 

இருந்தால் எனக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.




அன்புடன் கோபு [ VGK ]

[ 2 ]

எங்கோ படித்தது:



"சிறுகதை, புதினம், கவிதை போன்ற இலக்கிய வடிவங்களுக்கு ஒரு கட்டுக்கோப்பு  

இருப்பது  போல, விமர்சனங்களுக்கும் உண்டா என்று கேட்டால் 'ஆம்' என்பதே  

நம் பதிலாகிப் போகிறது. 


விமரிசனங்களும், உடலுக்கு அளவாகத் தைத்த சட்டை போல தொங்காமல், 

துவளாமல் 'சிக்'கென்று இருக்க வேண்டும்.



"ஒரு கதைக்கு எழுதப்படும் விமரிசனம் என்பது அந்தக் கதையையே 

சாங்கோபாங்கமாக மறுபடியும் எடுத்து எழுதுவதும், இடையிடையே கதையின் 

 நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி சிலாகிப்பதும் இல்லை.


கதையின்  ஜீவனை விட்டு விலகி விடாமல், அதை நடுவில் நிறுத்தி, கதையின் 

வாசிப்பு அனுபவிப்பில் நாம் ரசித்த ரசனைகளை அணிகலனாக்கி அலங்கரித்து 

அழகு பார்ப்பதே...."




[ இதை நான் எங்கோ படித்தது ! 

இது தங்களுக்கும் இன்று பயன்படலாம் ]


அன்புடன் கோபு [ VGK ]



[ 3 ]


எங்கோ படித்தது:


பொதுவாக முன்னுரை, முடிவுரை  எல்லாம் போட்டு விமர்சனக் கட்டுரைகள் எழுதுவது பள்ளிக்கல்வி காலத்தோடு போயாச்சு.  

அதுவும் சிறுகதை, நாவல் போன்ற படைப்புகளுக்கு விமர்சனம் எழுதுகையில், எழுதுகின்ற அப்படிப்பட்ட விமர்சனங்களும், கதை போல வாசிக்கிறவர்களை ஈர்க்கிற மாதிரியான புதுமைகளைக் கொண்டிருந்தால் எடுப்பாக இருக்கும்.  

இப்படியான புதுமைகள், விமர்சனம் செய்வோரின் கற்பனை வளத்தையும், அவர்தம் எழுத்துத்திறமையையும் எடுத்துச் சொல்வதாக அமைந்து விமர்சிப்பவருக்கும் பெருமை சேர்க்கும்.

எழுதுகின்ற விஷயங்களுக்கு ஏற்பவான மேற்கோள்கள், பழமொழிகள், இலக்கிய வரிகள் போன்ற எடுத்துக்காட்டல்கள் எல்லாம், ரஸத்தில் கடுகு தாளிப்பது போல அளவோடு இருந்தால் அழகாக இருக்கும். 

அவையே அளவுக்கு மிஞ்சினால் கடுகு தான்  கண்ணை உறுத்தும். ரஸத்தின் சுவையும் மாறுபடும்.



[இதை நான் எங்கேயோ, எப்போதோ, எதிலோ படித்தது.

சிறுகதைக்கு விமர்சனம் அளிக்கும் தங்களுக்கு இது 
பயன்படக்கூடுமானால் எனக்கும் மகிழ்ச்சியே.]


அன்புடன் கோபு [ VGK ]

[ 4 ] 

எங்கோ படித்தது:


சிலருக்கு எதை எழுதினாலும் அல்லது சொன்னாலும் 'நான் கூட அப்படித்தான்' அல்லது 'இதே மாதிரி எனக்குக் கூட..' என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது வழக்கம். எழுதுகிற விஷயத்தில் தன்னை எப்படியாவது நுழைத்துக் கொள்ளாவிட்டால் எழுதின மாதிரியே அவர்களுக்கு தோன்றாது.

கதைக்கும் கவிதைக்கும் தன்னையும் உள்ளே நுழைத்துக் கொண்டு கற்பனையில் ஆழ்வது எழுதுகிற விஷயத்திற்கு சுயதரிசன சிறப்பைக் கூட்டும்.

ஆனால் விமர்சனக் கட்டுரைகளுக்கு அப்படியல்ல. எழுதுகின்ற விமரிசனத்தில் தன்னையும் பொருத்திக் கொள்ளாமல் தப்பிப்பது, சொல்லப் போனால் பெரிய கலை. எதை விமரிசிக்கிறோமோ அதிலிருந்து விமரிசிப்பவர் விலகியிருந்து ஒரு மூன்றாம் மனித ஆராய்ச்சியில் நுணுக்கமாக எழுத எடுத்துக் கொண்ட விஷயத்தை அலசுவது எழுதப்படுகின்ற விமரிசனங்களுக்கு தனிச் சிறப்பைக் கூட்டும்.விமரிசனம் செய்யக்  கூடிய விஷயம் மட்டுமே முன்னிலை படுத்தப்பட்டு தானும், எவரது எழுத்து பற்றி விமரிசிக்கிறோமோ அவரும் மனசில் மறைந்து போகின்ற உன்னத நிலை இது. இந்த நிலையில் தான் தனிமனித ஆசாபாசங்கள் அழிந்து போய் விமரிசனம் செய்யக் கூடிய விஷயத்தோடு விமர்சனம் செய்பவனுக்கு ஓர் நேரடியான  தொடர்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் அர்சுனனின் அம்பைப் போல எய்யும் குறி தான் ஒரே கவனமாய் போய் எழுதும் பொருளில் உண்மையின் சுடலையும் பிரகாசத்தையும் ஒரு சேரக் குவிக்கும்.



 [ இதை நான் எங்கோ எதிலோ என்றோ படித்தது. 
விமர்சனம் எழுதி அனுப்பும் தங்களுக்கு 
இது இப்போது எந்த வகையிலாவது 
பயன்படுமானால் எனக்கும் மகிழ்ச்சியே ! ]


அன்புடன் கோபு [ VGK ]

[ 5 ] 

நடுவர் குறிப்பு:

[கதைகளில் வரும் வெற்றுச் செயற்கைப் பூச்சுகள் + அதன் அவசியங்கள்]

வெகுஜன  பத்திரிகைகளின் பிரசுரத்தை எதிர்பார்த்து  எழுதப்படும் கதைகளுக்கென்றே சில 'எழுத்து லட்சணங்கள்'  உண்டு.  அதில் ஒன்று: கதையின்  போக்கை ’ஒரு மாதிரி' நடத்திச்  சென்று விறுவிறுப்பைக் கூட்டி அதன் வழியிலேயே வாசகர்களை யோசிக்கச் செய்து கதையின் முடிவை மட்டும் நாம் எதிர்பார்க்காதவாறு வேறு மாதிரி முடித்து வைப்பது.


இந்த மாதிரி கதைகளில்  கதைக்கான கதாசிரியரின்  முடிவு தான் முக்கியத்துவம் பெறும்..  கதை வளர்ந்த பாதையை, சும்மா படிக்கிறவர்களுக்கு, வேறு மாதிரி நினைப்பதற்கான போக்குக் காட்டலே என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  


இந்த அடிப்படையிலேயே இந்தக்  கதையிலும் சிவகுருவின் சில நடவடிக்கைகள் சித்தரிக்கப்படுவதாக நான் நினைக்கிறேன். அதாவது சிவகுருவின்  சில செயல்கள் அவரைப் பற்றி நாம் 'ஒரு மாதிரி'யாக நினைப்பதற்காக நிகழ்த்தப்பட்ட வெற்று செயற்கை பூச்சுகளே தவிர நிஜத்தில் கதை சொல்ல வந்த சேதி வேறு.


அதனால்  சிவகுருவின்  'ஒரு மாதிரியான' சில செயல்பாடுகளையே முன்னிலைப்படுத்தி,  கதையின் நோக்கத்தை விமரிசித்த விமரிசனங்களை, அவ்வளவாக முக்கியப்படுத்த முடியாமல் போய்விட்டது, என்பதை இக்கதைக்கு விமரிசனம் எழுதிய அன்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.



 


[ 6 ] 

நடுவர் குறிப்பு:
 ’விமர்சங்களுக்கான விமர்சனம்’

ழகு படுத்தப் படுத்த எதற்குமே ஒரு ஜொலிப்பு கூடத்தான் செய்கிறது.  எழுத்தும் 

இதற்கு விதிவிலக்கல்ல.  அந்த அழகுபடுத்தலின் விளைவாகத் தான் எழுதுதலின் 

வடிவங்களும் வெவ்வேறு உருக்கொள்கின்றன.



சிறுகதைகள் எழுதுவதில் தான் எத்தனை வடிவங்கள்?..



எழுத்தாளரே கதையைச் சொல்கிற மாதிரியான பாணி ரொம்ப அதரப்பழசான பாணி. 

நாளாவட்டத்தில் கதையை எழுதும் எழுத்தாளன் கதையின் போக்கில் 

வாசிப்பவர்களுக்கு தெரிகிற மாதிரி. வாசிப்பதின் அமைதியைக் குலைக்கிற மாதிரி 

வெளிப்பட தான் குறுக்கிடாமல் விலகியிருந்து  ஒரு பொம்மலாட்ட இயக்கம் போல 

கதாபாத்திரங்களை ஆட்டிப் படைக்கும் முறை வந்தது.



பிறகு தான் கடிதங்களாய் கதை சொல்லுதல்,  கதையின் கதாபாத்திரங்கள் தாங்களே 

பேசுவது போல கதையை வடித்தல்,  கதாபாத்திரங்களின் உரையாடல்கள் 

மூலமாகவே கதையை நகர்த்துதல்,  நிகழ்வுகளின் கோர்த்தல் கதையாக வடிவம் 

கொள்ளுதல் என்று சிறுகதைகளின் வடிவங்கள் காலந்தோறும் பல மாற்றங்களைக் 

கொண்டன.



சிறுகதைகளைப் போல வடிவங்களில் பல வெரைட்டிகள் இல்லாவிடினும் 

விமரிசனங்களை எழுதுவதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.   அவற்றில் 

ஒன்று தான் வேறுபட்ட கோணங்களில், தான் விமரிசிக்க எடுத்துக் கொண்ட 

பொருளை (கதையை) அலசுவது.



இப்படியான பாணி, எதுபற்றியும் விமர்சிப்பதில் அற்புதமான வடிவம்; விமர்சிப்பவரின் 

சுய திறமைக்கு வடிகால் காணுகின்ற சுகமான வடிவம்.



விமர்சனங்களை இந்த வடிவில் அமைப்பது ரொம்ப சிரமமான காரியம்.  அதற்கு 

நிறைய பயிற்சி வேண்டும்.  குறிப்பாக இந்த மாதிரியான வடிவத்தில் விமர்சகர் தான் 

விமர்சிக்கும் கருத்துக்களை தன் விமர்சனத்தில் பதிப்பது முக்கியம்.



ஷொட்டோ, குட்டோ அது விமரிசனக் கருத்தாய் பதியவில்லை என்றால் பொட்டில்லா 

நெற்றி போல வெறுமையாய் தோற்றமளிக்கும்;  தண்ணீரில் சொட்டிய எண்ணைத் 

துளி போல தனித்துத் தோற்றமளிக்கும்;  எவ்வளவு சிறப்பாக விமரிசனத்தை 

வடித்திருந்தாலும் எழுத எடுத்துக் கொண்ட பொருளிலிருந்து விலகி தனிக்கச்சேரி 

நடத்தியது போலத் தோற்றம் கொள்ளும்.  



இன்னொன்று. விமரிசனம் எழுத எடுத்துக் கொண்ட கதையையே வேறு வடிவங்களில் 

கவிதை, உரையாடல் என்று விமரிசன லேபிள் தரித்துச் சொல்வதும் விமர்சனமாகாது. 

கவிதை, உரையாடல் போன்ற வேறு வடிவங்களில் சொல்லும் பொழுது அப்படிச் 

சொல்லும் வடிவங்களில் விமரிசனக் கருத்துக்கள் வருகிற மாதிரி  பார்த்துக் கொள்ள 

வேண்டும்.




இப்படியான குறைகள் இருப்பினும் எழுத எடுத்துக் கொண்ட சிரமத்திற்காகவும் 

எழுதியவரின் எழுத்துத் திறமைக்காகவும் இதுகாறும் பரிசுக்குத் தேர்வாயின.



இப்பொழுது நிலைமை என்னவென்றால்,  இப்படி எழுதினால் தான் தேர்வாகும் 

என்கிற எண்ணத்தினாலோ என்னவோ நிறைய இந்த மாதிரியான வடிவம் கொண்ட 

விமரிசனக் கட்டுரைகள் வர ஆரம்பித்து விட்டன.




வை.கோ.சாரின் கதைகளை விமர்சிக்கிற  விதத்தில் இந்த மாதிரியான வேறுபட்ட 

கோணங்களில் எழுதும் விமரிசனங்களை அமைத்தால் அது அற்புதமாக இருக்கும். 

அது தவறின், இந்தப் போட்டிக்கு சம்பந்தமில்லாத தனிப்படைப்பாய் அவை அமைந்து 

விடுகிற ஆபத்து இருக்கிறது.



கோபு சாரின் சிறுகதைகளுக்கான விமரிசனப் போட்டி என்று ஆரம்பித்து இராம 

காதையில் அணிலின் உதவி போல் தமிழில் 'விமர்சனக்கலை'யை வளர்க்கும் 

சின்னஞ்சிறிய வாய்ப்பாக இந்தப் போட்டிப்பகுதி உருவாகியிருப்பதால்,  வரும் 

விமர்சனங்களை வாய்க்கால் திருத்தி வழிபடுத்த ஒரு நெறியாக இதைக் கொள்ள 

வேண்டியிருக்கிறது.



விமர்சக அன்பர்கள் கோபு சாரின் நல்முயற்சிக்கு தங்கள் எழுத்துத் திறமையோடு 

துணையாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கை என்றும் உண்டு.



மென்மேலும் சிறப்பான விமரிசனங்களை அனுப்பி வைத்து இந்தப் போட்டிப் 

பகுதியை மேலும் சிறப்பிக்க கோபு சாரின் சார்பில் வேண்டுகிறேன்.



 

[ 7 ]

நடுவர் குறிப்பு:

உங்கள் எழுத்துக்கு நீங்களே நீதிபதி’ 


தேர்வான ஒவ்வொரு விமரிசனக் கட்டுரையையும் வெளியிடும் பொழுது கதாசிரியரே எந்தக் கதைக்கான விமரிசனம் இது என்று வாசிப்பவர்களுக்கு தெளிவாகத் தெரியும்படி அந்தக் கதையின் சுட்டியை தலைப்பிலேயே கொடுத்து விடுகிறார்.  

அப்படியிருக்க தாங்கள் விமரிசிக்கும் விமரிசனத்திலும் அந்தக் கதையையே மறுபடியும் narrate பண்ணுகிற மாதிரி நீங்கள் விமரிசன வரிகளை அமைக்க வேண்டுமா?...

இது உங்கள் விமரிசங்களை வாசிக்கிற வாசக அன்பர்களுக்கு  சலிப்பேற்படுத்தும் இல்லையா?..

கதாசிரியரின் கதை வரிகளை எடுத்தாண்டு  சீராட்டிச் சிறப்பிப்பதோ சிந்திக்க வைப்பதோ இல்லை அந்தக் கதையைப் படித்ததினால் தனக்கு என்ன உணர்வேற்பட்டது என்பதை கதாசிரியருக்கே தெரியப்படுத்துவதோ நல்ல விமரிசனம் ஆகும் தான்; ஒப்புக்கொள்கிறேன்.

அதற்காக தாங்கள் எழுதும் விமரிசனக் கட்டுரையிலும் மீண்டும் அந்தக் கதையையே கோர்வையாகச் சொல்வது விமரிசனங்களின் தகுதிச் சிறப்பைக் குறைவு படுத்தும், இல்லையா?..

உங்கள் விமரிசனத்தை வாசிக்க வரும் அன்பர்கள் எல்லாம் எந்தக் கதைக்கு நீங்கள் விமரிசனம் எழுதுகிறீர்களோ அந்தக் கதையை அதன் வெளியீட்டு நிலையிலேயே ஏற்கனவே படித்தவர்கள் தாம்.  பின்னூட்டம் கூட போட்டவர்கள் தாம்.  அப்படியிருக்க படித்த கதையையே உங்கள் விமரிசனத்திலும் மீண்டும் படிக்க விரும்ப மாட்டார்கள், இல்லையா?..

விமரிசனங்கள் எழுதுவோர் இனி எழுதவிருக்கும் விமரிசங்களிலாவது இந்தக் குறைப்பாட்டை சீர்படுத்திக் கொள்ள விழைகிறேன்.

உங்கள் எழுத்துக்கு நீங்களே நீதிபதி.  அந்த நிலையில்  உங்கள் எழுத்து  அமைய வேண்டுகிறேன்.   அது இந்த மாதிரியான வேறு எந்த போட்டியிலும் உங்கள் வெற்றியை நிச்சயப்படுத்தும்.



[ 8 ]




நடுவர் அவர்களின் பாராட்டு:



ஆசிரியரே நகைச்சுவையாய் 

எண்ணி எழுதியிருக்கும் கதையில் 

தம் விமரிசனத் திறமையால்

அனுதாப அலைகளை புரளச் செய்த 

விமரிசகருக்கு பாராட்டுகள்..   


 


-  நடுவர்

[ 9 ] 

நடுவர் குறிப்பு:


தேர்ந்தெடுக்கப்பட்ட விமர்சனங்களில் ஓர் ஒற்றுமை இழையோடுவதை வாசகர்கள் உணரலாம்.

கதாசிரியரின் கதை வரிகளை கூடியவரை வரிக்கு வரி வலிந்து பாராட்டாமல்---

கதாசிரியரின் கதையையே மறுபடியும் எடுத்துச் சொல்லி ஆங்காங்கே ஓரிரு வரிகளை விமரிசனமாய் நுழைக்காமல் ---

எழுத்தாக்கங்களில் சில தவறுகள் இருந்தாலும் மொத்த  கதையையும் உள்வாங்கிக் கொண்டு தங்கள் மனப்பிரதிபலிப்பினை விமரிசனம் ஆக்கியவர்கள் இவர்கள்.

படித்துப் பாருங்கள்.

 










இவற்றை மீண்டும் படித்து, பயன்படுத்திக்கொண்டு, 
அதன் மூலம் இந்த சிறுகதை விமர்சனப்போட்டியில் 
யாரேனும் ஒருவருக்காவது மேலும் கூடுதலாகப் 
பரிசு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் எனக்கும் அதில் மகிழ்ச்சியே. 

அனைவருக்கும் என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.





அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 


இணைப்பு: 



கதையின் தலைப்பு:



 VGK-26 



     பல்லெல்லாம்  



பஞ்சாமியின் பல்லாகுமா !  



  
[ நகைச்சுவை விருந்து ]




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


17.07.2014




இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.














என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்




16 கருத்துகள்:

  1. ஆகா விமர்சனம் எழுதுவதற்குக்கூட வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துக் கூறிவிட்டீர்கள் அற்புதம் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு குறிப்பும் சிறப்பு + மிகவும் பயனுள்ளவை... அவைகளை பகிர்ந்த விதமும் அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. விமர்சனத்திற்கு விமர்சனம் தெளிவான பாதையை அமைத்துத்தருகிறது..

    பயனுள்ள அருமையான வழிகாட்டித் தகவல்களுக்குப் பாராட்டுக்கள்..நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
  4. அற்புதமான வழிகாட்டிப்பதிவு
    அனைவருக்கும் அவசியம் பயன்படும்படியான பகிர்வு

    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வை.கோ - விமர்சனம் எப்படி எழுத வேண்டும் என்று கோனார் நோட்ஸ் போடுகிறீர்களா ? விமர்சனர்களை ஊக்குவிக்கும் தங்களின் பரந்த மனப் பான்மை பாராட்டுக்குரியது. விம்ர்சனர்கள் தங்களீன் அரிய கருத்துகளை உள் வாங்கி- மனதில் நிரந்தரமாக வைத்து - இதன அடிப்படையில் விமர்சனங்கள் எழுதி மேன் மேலும் சிறந்த பரிசுகள் பெற வேண்டும் என நல்வாழ்த்துகளைக் கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

    நல்வாழ்த்துகள் விமர்சனர்கள் அனைவருக்கும்
    நல்வாழ்த்துகள் நடுவர் அவர்களூக்கு
    நல்வாழ்த்துகள் அருமை நண்பர் வை.கோ அவர்களுக்கு

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. ஆஹா, விமரிசனம் எழுதுவதில் கூட இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா, அருமை அருமை.

    பதிலளிநீக்கு
  7. விமர்சனம் எழுத வழிகாட்டுதல்.... அருமை சார். பயனுள்ள பகிர்வு.

    பதிலளிநீக்கு
  8. விமர்சனம் எழுதுவது பற்றிய அருமையான குறிப்புகளும் நடுவர் அவர்களின் வழிகாட்டல் குறிப்புகளும் எழுதவிருக்கும் விமர்சனங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. பகிர்வுக்கு மிகவும் நன்றி கோபு சார். பலருக்கும் இவை உதவிகரமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. // இதுவரை நம் ‘சிறுகதை விமர்சனப்போட்டி’யில் 26 சிறுகதைகள் வெளியிடப்பட்டு, அதில் 24 சிறுகதை விமர்சனங்களுக்கான போட்டி முடிவுகளும் வெற்றிகரமாக முற்றிலுமாக அறிவிக்கப்பட்டுள்ளன. //

    தனி மனிதர் ஒருவராக தனித்து நின்று எந்தவித லாப நோக்கமும் இன்றி வலைப்பதிவினில் நீங்கள் செய்து வரும் இந்த மகத்தான இலக்கியப் பணிக்காக, தங்களுக்கு தலைவணங்கி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ஒரு விமரிசனம் எப்படி இருக்க வேண்டும் என்பதனைப் பற்றி அழகாகச் சொன்னீர்கள்.

    // "எதை எழுதினாலும் எழுதுபவரின் மன ஓட்டம் வரிகளில் படிந்து ஆற்றோட்டம் போல அழகாக அமைவது எழுதுவதின் சிறப்பைக் கூட்டும். //

    நல்ல கருத்தோட்டம். எதனையும் உள்ளார்ந்து படிக்க வேண்டும். நுனிப்புல் மேயக் கூடாது என்பதனை அழகாகச் சொன்னீர்கள்.

    எது எப்படி இருப்பினும் ஒரு எழுத்தாளனின் நடையினில் மற்றவர்கள் எவ்வாறு குறுக்கிட முடியாதோ, அவ்வாறே ஒரு விமர்சனகர்த்தாவின் போக்கிலும் (தனிப்பட்ட முறையினில் யாரையும் தாக்காத வரையில்) இப்படித்தான் எழுத வேண்டும் என்று, நாம் ஒன்றும் சொல்ல இயலாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நடை என்பது எளியேனது கருத்து ஆகும்.

    பதிலளிநீக்கு
  10. விமரிசனம் எழுதுபவர்களுக்கு மிகவும் உபயோகமான குறிப்புகள்.

    பதிலளிநீக்கு
  11. பரிசு தான் கொடுக்கறீங்கன்னு பார்த்தா விமர்சனம் எழுத டிப்சுமா? உங்கள் வலைத் தளத்தை முழுமையாக வலம் வந்தால் நானும் ஒரு அரைவாசி எழுத்தாளரா ஆகிடலாம் போல இருக்கே.

    பதிலளிநீக்கு
  12. விமரிசனம் எளுத கூட டிப்சுலா கொடுத்து அசத்திட்டீங்க. சூப்பரு.

    பதிலளிநீக்கு
  13. ஆர்வமாக விமரிசனப்போட்டியில் கலந்துகொள்கிறவர்களுக்கு இதுபோல டிப்ஸெல்லாம் யாரு கொடுப்பா. அதிலயும் புதுமை. அனைவருக்கும் பயன்படும் டிப்ஸ் .

    பதிலளிநீக்கு
  14. வாத்யாரோட சிஸ்டமேட்டிக் அப்ரோச்..டைமிங் சென்ஸ்..ஹார்ட் ஒர்க்...அதான் இந்த ரிஸல்ட். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு