என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை [ இறுதிப் பகுதி ( 8 / 8 ) ]

இந்தக் கதையின் முன் பகுதிகளைப் படிக்க:
http://gopu1949.blogspot/2011/02/4-8.html பகுதி 1
to 4
http://gopu1949.blogspot/2011/02/5-8.html பகுதி 5
http://gopu1949.blogspot/2011/02/7-8.html பகுதி 6 & 7


இப்போது இந்தக் கதையின் நிறைவுப் பகுதி [ பகுதி 8 ]


சமையல் கட்டுக்குள் நுழைந்த சங்கர மடத்து சாஸ்திரிகள், தன் தர்ம பத்னியிடம் “என் குருஜி - பாடசாலை வாத்யார் - பெரியவர் வந்திருக்கார். ஸ்நானம் பண்ண கொல்லைப்பக்கம் கிணற்றடிக்குப் போயிருக்கார். இப்போ வந்துடுவார்.

அவர் வந்ததும் சாப்பிட சூடா கோக்ஷீரம் (பசும்பால்) பனங்கல்கண்டு போட்டு, வெள்ளி டவரா டம்ளரில் கொடுத்துடு.

பிறகு நம் ஆத்திலேயே சாப்பிடச்சொல்லி அவாளை நாம் வேண்டிக் கேட்டுக்கொள்வோம். பாயஸம் பச்சிடியோட சாப்பாடு தயார் செய்துடு. நுனி இலை நேத்திக்கு வாங்கி வந்ததே இருக்கும்னு நினைக்கிறேன்; முடிஞ்சாக் கொத்துமல்லித் தொகையல் கொஞ்சம் அரைச்சுடு. அதுனா அவா கொஞ்சம் இஷ்டமாச் சாப்பிடுவான்னு எனக்கு ஏற்கனவே நன்னாத் தெரியும்
” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.


ஸ்நானம் செய்துவிட்டு மடி வஸ்திரம் அணிந்து கொண்டு வந்து அமர்ந்த பெரியவரின் கைகளில் இருந்த கொப்புளத்தில் ஒன்றை மீண்டும் திருகி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான், ரவி.

அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிக் கொண்டிருந்த, பட்டாபி பங்கஜம் தம்பதியின் கண்ணீர் அவரின் பாதங்களை நனைத்துக் கொண்டிருந்தது.


“மாமா ... என்னை நீங்கள் தயவு செய்து க்ஷமித்துக் கொள்ளணும் (மன்னித்துக் கொள்ளணும்).

ரயிலிலே வரும்போது, தாங்கள் யார், தங்கள் மஹத்துவம் என்ன என்று தெரியாமல், அடியேன் ஏதேதோ வாய்க்கு வந்தபடி பேசி விட்டேன்.

பாவத்தைப் போக்க வந்த இடத்தில், பல்வேறு பாபங்களை மேலும் சம்பாதித்து விட்டேன். இப்பொது நான் மஹாபாவியாகி விட்டேன்.


தயவுசெய்து இந்த மிகச்சிறிய தொகையான இருபதாயிரம் ரூபாயை தங்களுக்கு நான் தரும் வித்வத் ஸம்பாவனையாக தாங்கள் ஏற்றுக்கொண்டு, எங்களை மனப்பூர்வமாக மன்னித்து ஆசீர்வதிக்கணும். அப்போது தான் குற்ற உணர்வு நீங்கி என் மனம் கொஞ்சமாவது சற்று ஸாந்தி அடையும். தயவு செய்து மறுக்காமல் ஏத்துக்கோங்கோ” என்று சொல்லி ஒரு தட்டில் வெற்றிலை பாக்குப் பழங்களுடன், அந்தப் பணம் ரூ. 20000 த்தையும் அவர் முன்பாக வைத்து சமர்ப்பித்து விட்டு, பிறகு தன் இரு கன்னங்களிலும், தன் கைகளால், நல்ல வலி ஏற்படும்படி பளார் பளாரென்று, அறைந்து கொண்டார், கண்ணீருடன் பட்டாபி.


இதைக் கேட்ட அந்தப் பெரியவர் ஒரு குழந்தை போல சிரித்துக் கொண்டே பேசத் தொடங்கினார்:

“நீங்கள் எந்தத் தவறும் செய்ததாக நான் நினைக்கவே இல்லையே. நான் அவற்றையெல்லாம் அவ்வப்போதே மறந்தும் மன்னித்தும் விடுவது தான் என் வழக்கம்.

கோபதாபங்கள் என்பதெல்லாம், சாதாரணமாக எல்லா மனிதர்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டு வரும் இயற்கையான ஒரு செயல். ஞானம் ஏற்படும் வரை தான் கோபதாபங்கள் இருக்கும்.

ஞானம் வந்து விட்டால் இத்தகைய தேவையில்லாமல், நம்மை ஆட்டிப் படைக்கும் அல்ப விஷயங்களெல்லாம், நமக்கு மறந்தே போய் விடும்.

கோபங்களையெல்லாம் கட்டுப்படுத்தி, நடப்பது யாவும் நம் செயல் அல்ல, நமக்கெல்லாம் மேலே கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார்; அவர் பார்த்து அவ்வப்போது நமக்குத் தரும் சுக துக்கங்களை சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவம் ஒரு சிலருக்கு மட்டுமே, ஞானத்தால் ஏற்படும்.

அந்த ஞானம் என்பதும் பகவத் க்ருபை இருந்தால் மட்டுமே ஏற்படுவது. தொடர்ந்து பக்தி செய்யச்செய்ய அந்த மனப் பக்குவம் தங்களுக்கும் சீக்கரமாகவே ஏற்பட்டுவிடும்.

அடுத்த க்ஷணம் யாருக்கு என்ன நடக்கும் என்பது, நம் பூர்வ ஜன்மத்து பாவ புண்ணியச் செயல்களால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று.

அதனால் நீங்கள் என்னை ரயிலில் மரியாதைக் குறைவாகப் பேசியதாகச் சொல்லுவதோ, நான் அதற்காக வருத்தப்பட்டதாக தாங்கள் நினைத்துக்கொண்டு வருந்துவதோ முற்றிலும் தவறான ஒரு அபிப்ராயமே.

நடந்து முடிந்தது, இப்போது நடப்பது, இனி நடக்கப்போவது எல்லாமே அவன் செயல் தான்.

உங்களிடம் உண்மையாகவே கோபப்பட்டவனாக நான் இருந்திருந்தால், நீங்கள் மறந்து போய் ரயிலில் விட்டுச்சென்ற இந்தப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு மீண்டும் உங்களை சந்திக்க விரும்பியிருக்குமா என் மனஸு?

எது எது, எப்படி எப்படி, எப்போ எப்போ, யார் யார் மூலம் நடக்கணுமோ, அது அது, அப்படி அப்படியே, அப்போ அப்போ, அவரவர்கள் மூலம் அவனால் நடத்தி வைக்கப்படுகிறது என்ற உண்மையை எல்லோருமே உணர்ந்து கொண்டு விட்டால், இந்த லோகத்தில் சண்டை சச்சரவுகளுக்கே இடம் இருக்காது.

நமது வேத சாஸ்திரங்கள் படித்தவாளுக்குத் தான் இந்த உண்மைகள் ஓரளவுக்குத் தெரிந்து, அந்த மாதிரியான மனப் பக்குவம் ஏற்படும்.

அது போன்ற மனப் பக்குவம் வந்து விட்டால், எந்த வயதை எட்டினாலும், நாமும் தங்கள் குழந்தை ரவி போல, கள்ளங்கபட மில்லாத, எதற்கும் பயம் என்பதே இல்லாத, தெளிவான மன நிலையை அடைந்து, பிரகலாதன் போல மாறி, நடப்பதெல்லாம் அந்த நாராயணன் செயல் என்பதை சுலபமாக உணர்ந்து விட முடியும்.

நீங்கள் எனக்கு ஸம்பாவனையாகக் கொடுக்க நினைக்கும் இந்தப் பணம் எதுவும் எனக்குத் தேவையே இல்லை. அதை எடுத்து முதலில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கோ!

அதற்கு பதிலாக, ஒரு வேளை நீங்களும் விருப்பப் பட்டால், நான் சொல்லுவதைச் செய்யுங்கோ!

இங்கு பக்கத்திலேயே ஒரு வேத பாடசாலையில் சுமார் அறுபது வித்யார்த்திகள் (வேதம் பயின்று வரும் ஏழைக் குழந்தைகள்) படிக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் வஸ்திரமும் (நாலு முழம் வேஷ்டியும் துண்டும்), குளிருக்குப் போர்த்திக்கொள்ள ஒரு போர்வையும் வாங்கிக் கொடுத்துடுங்கோ;

தங்கள் குழந்தை ரவி கையால் அந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிட பிஸ்கட் பாக்கெட்டோ, சாக்லேட்களோ அல்லது பழங்களோ விநியோகம் செய்யச் சொல்லுங்கோ. நம் ரவிப்பயல் போலவே அந்தக் குழந்தைகளும் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

நாளைக்கு இங்குள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்தால், எல்லா பாபமும் விலகி விடும். உங்களுக்கு சகல க்ஷேமமும் ஏற்படும்” என மனதார வாழ்த்தி கை தூக்கி ஆசீர்வதித்தார், அந்த வேத வித்தான பெரியவர்.

அந்தப் பெரியவரை உற்று நோக்கினார் பட்டாபி. அவர் இருந்த இடத்தில் “நடமாடும் தெய்வமாய், கருணைக் கடலாய் இன்றும் நம்மில் பலரின் உணர்வுகளில் வாழும் ஜகத்குரு காஞ்சீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள், ஸ்ரீ மஹாபெரியவா அவர்கள்” ஒரு நிமிடம் தோன்றி மறைந்தது பட்டாபியை மெய்சிலிர்க்க வைத்தது.

அழகிய உடலோ
அருவருப்பான உடலோ
உயிர் என்ற ஒன்று பிரிந்தபின்
அழுகக்கூடிய, நாறக்கூடிய
அப்புறப் படுத்த வேண்டிய பொருளாகி விடுகிறது.
அதை எரிக்க வேண்டிய அவசரமும், அவசியமும்
நிர்பந்தமும் ஏற்படுகிறது.

எரிந்த அதன் சாம்பலில்
அழகும் இல்லை
அருவருப்பும் இல்லை
.

சாம்பல் கரைக்கப்படும் கங்கையோ
என்றுமே புனிதமாகப் போற்றப்படுகிறது!

பெரியவர் சொல்லாமல் சொல்வது போலத் தோன்றியது, பட்டாபிக்கு.


-oooooooooo-

இந்த நெடுங்கதை, மார்ச் 2006 “மங்கையர் மலர்” தமிழ் மாத இதழின் பக்கம் எண்கள்: 98 முதல் 112 வரை, என் அன்பு மனைவி திருமதி: வாலாம்பாள் கோபாலகிருஷ்ணன் என்ற பெயரில், முதன் முதலாக வெளியிடப்பட்டது.

இந்தக் கதையைப் படித்து மகிழ்ந்த, தமிழ் மொழி தெரிந்த கன்னட எழுத்தாளர் ஒருவர், மங்கையர் மலர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, எங்கள் விலாசம் பெற்று, பிறகு எங்களுடனும் தொடர்பு கொண்டு பாராட்டியதோடு மட்டுமல்லாமல், எங்கள் அனுமதியுடன், இந்தக் கதையை, கன்னடத்தில் மொழிபெயர்த்து, கன்னடப் பத்திரிகையான ”கஸ்தூரி” யில், “மையெல்லாக் கண்டு” என்ற தலைப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

மேலும் அவரே எனது வேறு சில கதைகளையும், மொழிபெயர்த்து, கன்னடப் பத்திரிகைகளில் அவ்வப்போது வெளியிட்டு வ்ருகிறார். கடிதம் / தொலைபேசி / மின்னஞ்சல் மூலம் எங்கள் நட்பு இன்றும் தொடர்ந்து வருகிறது.
நான்கு வருஷங்கள் ஆகியும், ஒருவரை ஒருவர் நேரில் இதுவரை சந்தித்தது பேச சந்தர்ப்பம் அமையவில்லை.

அவர் ஓய்வு நேரம் ஏதும் இல்லாத, மிகவும் பிஸியான, பிரபல கர்நாடிக் ம்யூசிக் மேதை; கர்நாடக அரசால் அவ்வப்போது நடத்தப்படும் ம்யூசிக் தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு மதிப்பெண் கொடுக்கும் மகத்தான பணியை மேற்கொள்ளும் அளவுக்கு கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த திறமையும் ஈடுபாடும் புகழும் பெற்றவர். தன் வீட்டிலேயே பலருக்கும் ம்யூசிக் கற்றுத்தருபவரும் கூட. ஒரு ஆர்வத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழியில் எழுத்துத் துறையிலும் அவ்வப்போது, ஒரு பொழுது போக்குக்காக ஈடுபட்டு வரும் அவர், பெங்களூரூவில் வசிக்கும், ஒரு குடும்பத் தலைவி என்பதும் குறிப்பிடத் தக்கது.

-=-=-=-=-=-=-=-=-

42 கருத்துகள்:

  1. எட்டு பகுதியையும் படித்து முடித்தவுடன் ”உருவம் கண்டு எள்ளாமை வேண்டும்” என்பது நினைவுக்கு வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. பட்டாபியின் கண்களில் அந்த பெரியவர் ”மஹாபெரியவளா” தெரிந்தது மெய் சிலிர்க்க வைத்தது. வேதம் பயிலும் குழந்தைகளுக்கு உதவி செய்யச் சொல்லி சுபமாய் முடிந்ததில் மகிழ்ச்சி சார்.
    மங்கையர் மலர் நான் படிப்பதுண்டு. இந்த கதையை படித்து இருக்கலாம் நினைவில் இல்லை.

    பதிலளிநீக்கு
  3. சுபம் போடுற வேளையில், எட்டி பார்க்கிறேனே.... அவ்வ்வ்வ்....

    பதிலளிநீக்கு
  4. அருமையான கதை, சுபமான முடிவு!எனக்குப் பிடித்த வரிகள் //நடந்து முடிந்தது, இப்போது நடப்பது, இனி நடக்கப்போவது எல்லாமே அவன் செயல் தான்// கீதாசாரம்.

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப ஆத்மார்த்தமா எழுதி இருக்கீங்க.தன்னிலை உணரலும், பற்றரற்று பணி செய்யலும்,
    வாழ்கையில் பக்குவப் பட்டால் இயலும்.கடைசி பகிர்வுதான் படித்தேன்.நெகிழ வைச்சிடிங்க.மனம் கனிந்த வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  6. இந்த கதைக்கு பின்னூட்டம் போடுவதற்கு கூட
    ஒரு தகுதி வேண்டும் சார்.அது எனக்கில்லை
    என்றே தோன்றுகிறது.

    கடைசி பகுதியைப் படித்ததும்
    மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் துளிர்த்து விட்டது
    என்பதை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்

    இந்த இறுதி பகுதியை இனி எனக்கு
    தோன்றும் பொழுதெல்லாம் படிப்பேன் எனவும்
    கூறிக் கொள்கிறேன்

    எழுதுகிறேன் என்ற பெயரில் பிதற்றிக் கொண்டிருக்கும்
    எனக்கு மிகவும் வெட்கமாக கூட இருக்கிறது

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. சென்னையிலிருந்து காசி செல்லும் வரை இந்தக் கதையை மீண்டும் மீண்டும் படித்தாலும் அலுப்பு தெரியாது.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல நடை. உருவம் கண்டு எள்ளாமை முக்கியம் என்ற நீதி மறுபடியும் உங்கள் கதை மூலம். இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு நல்ல நடையில் எடுத்து சென்று உள்ளீர்கள்.

    இதற்கு மேல் இதை விமர்சனம் செய்ய எனக்குத் தகுதி இல்லை

    பதிலளிநீக்கு
  9. பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. அன்புடன் வருகை தந்து, பொன்னான கருத்துக்கள் கூறி, வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    தனித்தனியே உங்கள் 9 பேர்களுக்கும் பதில் எழுதத்தான் எனது விருப்பம்.

    இந்த வாரம் மட்டும் அதற்கான நேரமும் சூழ்நிலையும் சரியாக இல்லாமல் உள்ளது. மன்னிக்கவும்.

    அப்படி என்ன பெரிய ’சூழ்நிலை’ என்று கோபப்படாமல் அடுத்த பதிவான “சூழ்நிலை” என்ற சிறுகதையைப் படித்துப் பார்க்கவும்.

    அதற்குள் இந்த வாரம் போய் அடுத்த வாரம் வந்து விடும். பிறகு நாம் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்,

    பதிலளிநீக்கு
  11. எது எது, எப்படி எப்படி, எப்போ எப்போ, யார் யார் மூலம் நடக்கணுமோ, அது அது, அப்படி அப்படியே, அப்போ அப்போ, அவரவர்கள் மூலம் அவனால் நடத்தி வைக்கப்படுகிறது//
    என்றும் நினைவு கொள்ளத்தக்க வரிகள். மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்துக்காட்டிய ஆத்மார்த்தமான வரிகள். நன்றி!!

    பதிலளிநீக்கு
  12. raji said...// இந்த கதைக்கு பின்னூட்டம் போடுவதற்கு கூட ஒரு தகுதி வேண்டும் சார். அது எனக்கில்லை
    என்றே தோன்றுகிறது.

    கடைசி பகுதியைப் படித்ததும் மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் துளிர்த்து விட்டது என்பதை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

    இந்த இறுதி பகுதியை இனி எனக்கு தோன்றும் பொழுதெல்லாம் படிப்பேன் எனவும் கூறிக் கொள்கிறேன்.

    எழுதுகிறேன் என்ற பெயரில் பிதற்றிக் கொண்டிருக்கும் எனக்கு மிகவும் வெட்கமாக கூட இருக்கிறது.

    பகிர்வுக்கு நன்றி.//

    அன்புள்ள திருமதி ராஜி அவர்களே !

    தாங்கள் என் இந்தக் கதையைப் படித்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

    இது சமீபத்தில் அன்றாடம் நான் தினமும் ஆபீஸ் சென்று வரும் போது பேருந்தில் சந்தித்து வந்த ஒரு மனிதரின் விசித்திர உருவத்தையும், உட்கார இடமிருந்தும் அவர் அருகே யாரும் உட்கார விரும்பாமல் நின்று கொண்டே பயணித்து வந்ததையும், இந்த சூழ்நிலையில் அவர் மனம் என்னபாடு படும் என்ற கற்பனையையும், எப்போதோ பல வருடங்களுக்கு முன்பு அலஹாபாத், காசி முதலிய இடங்களுக்கு நான் சென்று வந்ததையும், எனக்கே உள்ள ஒரு சில நகைச்சுவை உணர்வுகளையும் கலந்து, பிசைந்து எழுதிய கதை இது.

    என்னையும் என் குடும்பத்தையும் இன்றும் கூட வழி நடத்திச்செல்லும் காஞ்சி மஹாபெரியவா அவர்களின் அனுக்கிரஹத்தினால், நான் எழுத ஆரம்பித்ததும் எந்தத் தொய்வோ, சோர்வோ இல்லாமல் அடுத்தடுத்து கோர்வையாக வார்த்தைகள் என் உணர்வில் வந்து விழுந்து, ஓரிரு நாட்களிலேயே, ஒரு வித மனத்திருப்தியுடன் எழுதி முடிக்க முடிந்தது.

    என் நண்பரும் பிரபல எழுத்தாளருமான ரிஷபன் அவர்களிடம் தான் முதன் முதலாகப் படிக்கக் கொடுத்தேன். அவர் ஒரே மூச்சில் படித்து முடித்து கதையில் நல்ல ஒரு flow இருப்பதாகச் சொல்லி பாராட்டிவிட்டு, சிறுகதையாக இல்லாமல், சற்றே பெரிய கதையாக இருப்பதால், மங்கையர் மலருக்கு அனுப்பச்சொல்லி ஆலோசனை கூறினார்.

    இது நான் எழுதிய இரண்டாவது கதை. அனுப்பிய உடன் பிரசுரம் ஆனதும் கூட. அன்று எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

    உங்களுக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கிறது. உங்களுடைய தகுதி, திறமை, எழுத்தின் மேல் உள்ள ஆர்வம் முதலியன எனக்கு நன்றாகப் பளிச்சென்று தெரிகிறது. உங்களுக்கு ஒரு வேளை அது தெரியாமல் இருப்பது ஒரு வித தன்னடக்கமாகக் கூட இருக்கலாம்.

    தயவுசெய்து தங்கள் படைப்புகளை பிதற்றிக் கொண்டிருப்பதாகச் சொல்லவே சொல்லாதீர்கள்.

    இன்று பிரபலமாக உள்ள எழுத்தாளர்கள் பலரும், தாங்கள் ஒரு காலத்தில் உண்மையிலேயே பிதற்றிக் கொண்டிருந்ததாகவும், அனுப்பிய அனைத்துக் கதைகளும் பத்திரிகைகளில் பிரசுரம் ஆகாமல் கட்டுக்கட்டாக திரும்பி வந்ததாகவும் தான்
    சொல்லியிருக்கிறார்கள்.

    ”சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்பது போல நாம் தொடர்ந்து எழுத எழுதத்தான் நம் எழுத்து நம் கட்டுப்பாட்டுக்குள் வந்து அழகாக வெளிப்படும்.

    வைரத்தைப் பட்டை தீட்டத்தீட்டத்தான், அது ஜொலிக்கும், அது போலவே தான் நமது எழுத்தும். தொடர்ந்து எழுத எழுத அது தானாகவே ஜொலிக்க ஆரம்பிக்கும். இதில் நாம் வெட்கப்பட ஏதுமே இல்லை.

    தாங்கள் சற்றும் தொய்வு அடையாமல் தொடர்ந்து தயவுசெய்து எனக்காகவாவ்து, என் வேண்டுகோளுக் காகவாவது எழுதி வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இது மற்றவர்கள் படிக்க வேண்டிய அவ்சியம் இல்லை என்பதால் சற்று தாமதமாகவே, தங்களுக்காகவே பிரத்யேகமாக எழுதியுள்ளேன்.
    தாங்கள் வெகு விரைவில் மிகவும் பிரபல எழுத்தாளராக வரக்கூடும் என்று என் உள்மனது சொல்லுகிறது. நிச்சயம் அது போலவே நடக்க என் அன்பான ஆசிகள். ALL THE BEST & GOOD LUCK !

    பதிலளிநீக்கு
  13. தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும்
    தங்களது ஆசிக்கும் மிக்க நன்றி சார்.

    உங்களைப் போன்றோரின் ஊக்கத்தில் நான் இன்னும் எழுத
    அந்த இறைவன் அனுக்ரஹம் செய்யட்டும்

    (பி.கு- ஒரு வாரமாக வலது ஆள்கட்டி விரலில் அடி பட்டு
    விட்ட காரணத்தால் பதிவு போட இயலவில்லை.
    பின்னூட்டங்கள் மட்டும் இடது கையால் போட்டுக்
    கொண்டிருந்தேன்.இப்பொழுது பரவாயில்லை.
    இனி போடலாம் என்றிருக்கிறேன்.
    ஊக்கத்திற்கு நன்றி)

    பதிலளிநீக்கு
  14. அன்புள்ள திருமதி ராஜி அவர்களுக்கு,

    தங்கள் பதில் பார்த்த பிறகு தான் என் மனதுக்கு சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் உள்ளது.

    அவசரமே இல்லை.

    விரலில் ஏற்பட்டுள்ள காயம் நன்றாக ஆறட்டும். பிறகு எழுத ஆரம்பிக்கவும்.

    திருஷ்டி போல இப்படி ஆகிவிட்டதே என வருத்தமாகவும் உள்ளது.

    விரைவில் பரிபூர்ண குணமாக பிரார்த்திக்கிறேன்.

    அன்புடன் ..... vgk

    பதிலளிநீக்கு
  15. எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று.. உங்கள் எழுத்து திறமைக்கு கட்டியம் கூறும் அற்புதமான படைப்பு.. ராஜி சொன்னது போல எப்போது படித்தாலும் திகட்டாத எழுத்து.

    பதிலளிநீக்கு
  16. ரிஷபன் said...
    //எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று.. உங்கள் எழுத்து திறமைக்கு கட்டியம் கூறும் அற்புதமான படைப்பு.. ராஜி சொன்னது போல எப்போது படித்தாலும் திகட்டாத எழுத்து.//

    ”வஷிஸ்டர் வாயால் ..... பிரும்மரிஷி”
    த ண் ய னா னே ன். நன்றி.. நன்றி... நன்றி!

    பதிலளிநீக்கு
  17. இதை ஏற்கனவே மங்கையர்மலரில் படிக்கும் பாக்கியம் எனக்கு கிடைச்சது. என் ஞாபகசக்தி சரியாக இருக்குமானால், அந்த இதழையும் பத்திரப்படுத்தி வெச்சிருப்பதாகத்தான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. அமைதிச்சாரல் said...
    //இதை ஏற்கனவே மங்கையர்மலரில் படிக்கும் பாக்கியம் எனக்கு கிடைச்சது. என் ஞாபகசக்தி சரியாக இருக்குமானால், அந்த இதழையும் பத்திரப்படுத்தி வெச்சிருப்பதாகத்தான் நினைக்கிறேன்.//

    தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ஏற்கனவே மங்கையர் மலரில் படித்த ஞாபகம் இருப்பதாகச் சொல்வது மகிழ்ச்சியளிக்கிறது.

    அதையும் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக ஞாபகம் உள்ளது என்று சொல்வது உங்களின் இலக்கிய ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

    மொத்தத்தில் உங்களின் இந்தப் பின்னூட்டம், உங்கள் வலைப்பூவில் சமீபத்தில் வெகு அழகாக காட்டப்பட்டுள்ள பவழமல்லிப்பூக்களின் சுகந்தமான நறுமணம் போல இருந்து என் மனதைக் கொள்ளை கொள்கிறது.

    நன்றி! நன்றி!! நன்றி!!!

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் வாங்க!
    WELCOME.

    பதிலளிநீக்கு
  19. Mail message from Miss. Rani Krishnan to vgk on 15/10/2011

    உடம்பெல்லாம் உப்புச்சீடை கதையின் எட்டு பகுதிகளையும் படித்து முடித்துவிட்டேன் சார். எனக்கு என்ன பின்னூட்டமிடுவது என்றே
    தெரியவில்லை. கண்கள் கலங்கி விட்டன என்பதை விடவும் அழுதுவிட்டேன்
    என்பதுதான் உண்மை.

    நான் பேருந்துகளில் செல்லும் நேரங்களில், நிறையபேர் திருநங்கைகளைப் பார்த்து ஒதுங்கி நிற்பதைக் கண்ணுற்றிருக்கிறேன். யாரிடமும் எதுவும் கேட்க முடியாது. மனம் குமுறிப் போகும்.

    அம்மாவிடம் சொல்லி அழுவேன். நான் பெரியவளானதும் ஒரு தொழிற்சாலை
    ஆரம்பித்து ஆதரவற்ற பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் வேலை தருவேன் என நிறைய முறை சொல்லியிருக்கிறேன்.

    திருநங்கைகள் அவதிப்படுவது ஒரு புறமிருக்க, இது போல சரும வியாதி
    உள்ளவர்களையும் நம் சமுதாயம் காயப்படுத்த தவறுவதே இல்லை.

    இதுபோன்ற கொடுமைகள் நம் சமுதாயத்தில் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. உங்களைப் போன்ற சிலர், இதுபோன்றவர்களின் நிலையுணர்ந்து எழுதும் எழுத்துக்களால்தான் மனிதம்
    இன்னும் சாகவில்லை எனத் தோன்றுகிறது.

    வாழ்விற்கும், சாவிற்கும் நடுவில் வதைபடும் மனிதம் உங்களைப்
    போன்றவர்களால்தான் பிழைத்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் நிற்பதாகத்
    தெரிகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கும்
    ஏதோ நம்மாலான மறைமுக உதவி...!

    மிக நீண்ட பின்னூட்டம் இல்லையா சார்...?

    அதனால்தான், வலைத்தளத்தில் எழுத முடியவில்லை.

    அன்புடன்,
    ராணி கிருஷ்ணன்.

    பதிலளிநீக்கு

  20. “நீங்கள் எந்தத் தவறும் செய்ததாக நான் நினைக்கவே இல்லையே. நான் அவற்றையெல்லாம் அவ்வப்போதே மறந்தும் மன்னித்தும் விடுவது தான் என் வழக்கம்.// உண்மையான மனிதப்பண்பு. இந்தப்பண்பு எத்தனைபேரிடம் இருக்கு. இப்பொழுது பழிவாங்குதல்,வன்மம்,குரோதம்தான் மேலோங்கி நிற்கிறது.குடும்பத்தில் அதிகமாகியிருப்பது மிக வேதனைக்குரிய விடயம்.

    //எது எது, எப்படி எப்படி, எப்போ எப்போ, யார் யார் மூலம் நடக்கணுமோ, அது அது, அப்படி அப்படியே, அப்போ அப்போ, அவரவர்கள் மூலம் அவனால் நடத்தி வைக்கப்படுகிறது என்ற உண்மையை எல்லோருமே உணர்ந்து கொண்டு விட்டால், இந்த லோகத்தில் சண்டை சச்சரவுகளுக்கே இடம் இருக்காது.//பகவத்கீதைதான் ஞாபகம் வருகிறது.

    சிறந்தமுறையில் நல்லதொரு கதையை,செய்தியோடு எழுதிறீங்க அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச்சகோதரி ’அம்முலு’ வின் வருகை மகிழ்வளிக்கிறது.
      சென்னையிலிருந்து கிளம்பி வாரணாசி வரை செல்லும் ‘கங்கா காவேரி எக்ஸ்ப்ரஸ்’ இரயிலைவிட வேகமாக இந்தக் கதையின் எட்டு பகுதிகளையும் மிக வேகமாகப் படித்து முடித்து கருத்துக்களும் அளித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

      தங்கையின் இரயில் நடுவே ஒரு மூன்று ஸ்டேஷன்களில் மட்டும் நிற்காமலேயே போய் விட்டது.

      [மூன்று பகுதிகளுக்கு மட்டும் பின்னூட்டம் தரவில்லை. அதனால் பரவாயில்லை, சகோதரி.]

      //உண்மையான மனிதப்பண்பு. இந்தப்பண்பு எத்தனைபேரிடம் இருக்கு. இப்பொழுது பழிவாங்குதல்,வன்மம்,குரோதம்தான் மேலோங்கி நிற்கிறது.குடும்பத்தில் அதிகமாகியிருப்பது மிக வேதனைக்குரிய விடயம்.//

      ஆமாம் தங்கச்சி. போதாக்குறைக்கு இவற்றை பற்றி தெரியாத நல்லவர்களையும் கெடுத்து, இவற்றை போதிக்க டி.வி. சீரியல்களும் வீட்டுக்குள் வந்தாச்சு.

      நல்ல பண்புகள் குறைவதை நினைக்க மிகவும் வருத்தமாகவே உள்ளது.

      //பகவத்கீதைதான் ஞாபகம் வருகிறது.//

      மிகவும் சந்தோஷம்.

      //சிறந்தமுறையில் நல்லதொரு கதையை,செய்தியோடு எழுதிறீங்க அண்ணா.//

      கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்றியோ நன்றிகள்.

      பிரியமுள்ள,
      VGK

      நீக்கு
  21. மனதை அப்படியே உருக்கிவிட்ட கதை.
    கதை என்றே சொல்லமுடியாத அளவு நிகழ்வுகள் அனைத்தும் நிஜமாய் ரயில் வண்டியில் நாமும் கூடவே பயணம் செய்ததுபோலவும் அந்தப் பெரியவருடனே நாமும் நிழலாக இருப்பது போலவும் எனக்குள் ஓர் உயிரோட்டமான உணர்வை தோற்றுவித்தது உங்கள் எழுத்து நடை.

    ஒவ்வோர் தடவையும் பெரியவரை பட்டாபியும் அவர் மனைவியும் நடத்தும் விதமும் அவரைப்பார்த்து சொல்லும் வார்த்தைகளும் கண்களில் நீரை வரவைத்துவிட்டது.

    //எது எது, எப்படி எப்படி, எப்போ எப்போ, யார் யார் மூலம் நடக்கணுமோ, அது அது, அப்படி அப்படியே, அப்போ அப்போ, அவரவர்கள் மூலம் அவனால் நடத்தி வைக்கப்படுகிறது என்ற உண்மையை எல்லோருமே உணர்ந்து கொண்டு விட்டால், இந்த லோகத்தில் சண்டை சச்சரவுகளுக்கே இடம் இருக்காது.//
    பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய உண்மை.

    சண்டை சச்சரவு மட்டுமில்லை உயர்வு தாழ்வு, பெரியவன் சிறியவன் ஏற்ற இறக்கம் எதுவுமே இருக்காதே.

    கதை, வர்ணனை,வசன அமைப்பு எல்லாமே உணர்ச்சிமிகுந்தவையாய் இருக்கிறது.
    அருமையான ஒரு படைப்பினைத்தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  22. அன்புச் சகோதரி இளமதி அவர்களே, வாருங்கள், வணக்கம்.

    //கதை, வர்ணனை,வசன அமைப்பு எல்லாமே உணர்ச்சி மிகுந்தவையாய் இருக்கிறது.

    இளமதி September 28, 2012 8:31 AM
    //மனதை அப்படியே உருக்கிவிட்ட கதை.//

    அப்படியா? நன்றி.

    அருமையான ஒரு படைப்பினைத்தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!//

    தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்வளிக்கின்றன. என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  23. இந்த பாகம் படித்து முடிக்கும்போது மனம் ஆழ்ந்த அமைதியுடன் இருப்பதை உணர முடிகிறது....

    கதை எழுத கரு அவசியம்... கரு இல்லாது கதையோ கவிதையோ படைக்க இயலாது.... இந்த கதைக்கு கருவாக தினமும் அண்ணா அவர்கள் பேருந்தில் சந்திக்கும் ஒரு விசித்திர மனிதர் காரணம் என்றும் காசிக்கு போனபோது அங்கு கண்ட கேட்ட ஏற்பட்ட அனுபவங்களையும் மஹா பெரியவா மீது கொண்டுள்ள அளவில்லா பக்தியினாலும் இந்தகதை இத்தனை அற்புதமாக எழுத முடிந்தது அண்ணாவால் என்று உணர முடிந்தது...

    ஆமாம் உண்மையே மஹாபெரியவாளின் கருணை தான் தங்கு தடை இல்லாமல் கதை எட்டு பாகங்கள் படிக்கும் வரை எங்குமே தொய்வு ஏற்படாமல் மிக அருமையாக ஒவ்வொரு பாகத்திலும் சொல்லிச்செல்லும் நல்ல நல்ல கருத்துகளும், நகைச்சுவையும் சமயோஜிதமாக கருத்துகளை கூட சுவாரஸ்யமாக பகிரும்படி கதை படைத்தது மிக மிக சிறப்பு அண்ணா....

    இதை எல்லாம் நான் மனசுலயே வெச்சுக்கலையே என்று சொல்லி நிறுத்தாமல் குழந்தை ரவி போல மனசுல கல்மிஷமும் களங்கமும் இல்லாது இருக்க ஞானம் கிடைக்கவேண்டும் என்றும்.. அந்த ஞானம் வேதம் பயின்றால் மட்டுமே அறியமுடியும் என்றும் தெரிந்துக்கொள்ள முடிந்தது....

    மனிதனை மனிதன் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்... வெளிப்புறத்தோற்றம் கண்டு மதிப்பிடாமல் அகம் கண்டு தூய்மையான உள்ளம் கண்டு கௌரவிக்க கற்கவேண்டும்...

    நிறைய நல்ல விஷயங்களை இத்தனை எளிதாக வாசிப்போர் மனதிலும் நிலைத்து நிற்கும்படியாக பகிர்ந்தது எத்தனை சிறப்பு என்றால்...

    இந்த கதை மங்கையர் மலரில் வெளிவந்ததும் கன்னடத்தில் மொழி பெயர்க்க ஒரு இசைமேதை விருப்பம் தெரிவித்து கதையை கன்னடத்தில் மொழிப்பெயர்த்ததும்... மிக மிக கௌரவிக்கவேண்டிய விஷயம்...

    சிறப்பாக நல்ல கருத்துகளை தாங்கி வந்த கதைக்கு அன்புவாழ்த்துகள்...

    கதையை தொய்வில்லாமல் எல்லோருக்கும் பயன்படக்கூடிய அளவுக்கு எப்படி மனிதர் இருக்கவேண்டும் எப்படி இருக்க்கக்கூடாது என்று நகைச்சுவையும் உணர்ச்சி பூர்வமாகவும் கொண்டுச்சென்ற கதாசிரியருக்கு அன்பு வாழ்த்துகள்...

    எழுதியதும் முதலில் வாசிக்கக்கொடுத்தது ரிஷபனிடம் என்றும்...

    மங்கையர் மலரில் கதை வெற்றியாக வெளிவந்ததும்....

    கன்னடத்தில் மொழிப்பெயர்த்த நண்பர் இன்றளவும் நல்ல நட்புடன் தொடர்புடன் இருப்பதற்கும்...

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா அற்புதமான பகிர்வுக்கு....

    கடைசி வரிகளில் அந்த மனிதரை பார்க்கும்போது திருந்திய மனிதனாக இருந்ததால் தான் பட்டாபியின் கண்ணுக்கு தெய்வம் தெரிந்தது....படிக்கும்போது மனம் நெகிழ்ந்தது அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிறப்பாக நல்ல கருத்துகளை தாங்கி வந்த கதைக்கு அன்புவாழ்த்துகள்...

      கதையை தொய்வில்லாமல் எல்லோருக்கும் பயன்படக்கூடிய அளவுக்கு எப்படி மனிதர் இருக்கவேண்டும் எப்படி இருக்க்கக்கூடாது என்று நகைச்சுவையும் உணர்ச்சி பூர்வமாகவும் கொண்டுச்சென்ற கதாசிரியருக்கு அன்பு வாழ்த்துகள்...//

      அன்பின் மஞ்சு,

      தங்களின் அன்பான வருகையும் அனைத்துப்பகுதிகளுக்கும் கொடுத்துள்ள அழகான பின்னூட்டமும் மிகவும் மகிழ்வளிக்கிறது.

      நான் நவம்பர் 2011 இல், தமிழ்மணத்தில் நட்சத்திரப்பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வாரத்தில், இதே கதையை மீள் பதிவாக [ஒரே முழு நீளக்கதையாக] ஒரே ஒரு பகுதியாக வெளியிட்டிருந்தேன்.

      அதில் நிறைய படங்கள் இணைத்துள்ளேன். தயவுசெய்து படங்களை மட்டும் கண்டு களிக்கவும்.

      அங்கு உப்புச்சீடை மனிதரும் உள்ளார். பட்டாபி பங்கஜம், ரவி, கமலா, விமலாவுடன், காசி யாத்திரை பற்றிய நிறைய பயனுள்ள படங்களும் உள்ளன.

      இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_2406.html

      நான் நட்சத்திரப்பதிவராக செயல்பட்ட வாரத்தில் மட்டும் 28 படைப்புகள் கொடுத்திருந்தேன். அதாவது தினமும் நான்கு இடுகைகள். அதில் காலை 11 மணிக்கு மட்டும் புதிய இடுகை. அதன் பிறகு சற்றே 2 மணி நேர இடைவெளியில் தினமும் மூன்று மீள் பதிவுகள்.

      கடைசி நாள் கடைசி பதிவும் புதியது. அதன் தலைப்பு
      ”HAPPY இன்று முதல் HAPPY.” அதையும் தாங்கள் அவசியமாகவும் அவசரமாகவும் படிக்க வேண்டும். அதில் என் மனதைத்திறந்து பலவிஷயங்கள் கூறியுள்ளேன்.
      அதன் இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  24. அப்பாடா நல்லதொரு முடிவு.

    கதையின் HIGHLIGHTS:
    1. கண்முன்னே நடக்கும் நாடகத்தைப் பார்ப்பது போல் இருந்தது. (நான் தான் TIME MACHINEல் ஏறி கூடவே போய் பார்த்துட்டேனே).
    2. சரளமான தெளிந்த நீரோடை போன்ற நச்சென்ற நடை.
    3. தெளிவான கருத்துக்கள் etc. etc.

    மங்கையர் மலரில் வெளி வந்ததற்கும், கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டதற்கும் வாழ்த்துக்கள்.

    மானசீக குருவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    மானசீக குருதான். என்னுடைய ‘குல தெய்வம்’ பதிவில் போட்ட படங்கள், கொஞ்சம் நகாசு வேலைகள் எல்லாம் உங்க கிட்ட இருந்து திருடிய ஐடியாக்கள்தான்.

    சரியான சிஷ்யைதான். எனக்கும் இந்த இண்ட்லி, தமிழ்மணம் இதெல்லாம் ஒன்றும் புரியவில்லை. ஆனால் உங்கள் எழுத்துக்களால் கவரப்பட்டு உங்களுக்கு அங்கெல்லாம் சிகப்புக் கம்பளம் விரிக்கப்பட்டுவிட்டது. அதற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    உங்கள் எழுத்துக்களைப் படிப்பதால் என் எழுத்துக்கள் கொஞ்சமாவது மெருகேறும் என்று நினைக்கிறேன்.

    2006ல் எல்லாம் மங்கையர் மலர் வாங்கிப் படிப்பேன். ஒருவேளை படித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

    இதேபோல் ஒரு கதை எழுதியது யார் என்று நினைவில்லை. தலைப்பு ‘நாக்கு’ அதுவும் கங்கைக்கரையில் நடப்பதைப் பற்றிதான். மிக அருமையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANI February 4, 2013 at 2:23 AM
      //அப்பாடா நல்லதொரு முடிவு.

      கதையின் HIGHLIGHTS:
      1. கண்முன்னே நடக்கும் நாடகத்தைப் பார்ப்பது போல் இருந்தது. (நான் தான் TIME MACHINEல் ஏறி கூடவே போய் பார்த்துட்டேனே).
      2. சரளமான தெளிந்த நீரோடை போன்ற நச்சென்ற நடை.
      3. தெளிவான கருத்துக்கள் etc. etc.//

      அ ப் பா டா !, என் மனதுக்குப் பிடித்தவர்களிடமிருந்து HIGHLIGHT ஆன சில கருத்துக்கள். சந்தோஷம். ;)))))

      நீக்கு
    2. கோபு >>> திருமதி ஜெயந்தி [2]

      //மங்கையர் மலரில் வெளி வந்ததற்கும், கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டதற்கும் வாழ்த்துக்கள்.//

      சந்தோஷமான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      //மானசீக குருவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.//

      வணக்கம். உங்களுக்கு நான் மானசீக குருவா? சரி இருக்கட்டும். சந்தோஷமே.

      //மானசீக குருதான். என்னுடைய ‘குல தெய்வம்’ பதிவில் போட்ட படங்கள், கொஞ்சம் நகாசு வேலைகள் எல்லாம் உங்க கிட்ட இருந்து திருடிய ஐடியாக்கள்தான்.//

      குருவிடமிருந்தே திருடியவை ஐடியாக்கள் மட்டும் தானே! அது வழக்கமாக சிஷ்யர்கள் + சிஷ்யைகள் செய்யக்கூடிய ஆரோக்கியமான திருட்டுத்தானே.

      அதனால் என்ன? சந்தோஷமே.

      //சரியான சிஷ்யைதான். எனக்கும் இந்த இண்ட்லி, தமிழ்மணம் இதெல்லாம் ஒன்றும் புரியவில்லை. //

      அதெல்லாம் சுத்த ஹம்பக் / பித்தலாட்ட வேலைகள். புரியாமலும் தெரியாமலும் இருப்பதே நல்லது.

      இதைப்பற்றி நான் ஓரளவு சுருக்கமாக திரு. தி. தமிழ் இளங்கோ என்ற என் நண்பருக்குக் கொடுத்துள்ள 13 பின்னூட்டங்களில் எழுதியுள்ளேன். தயவுசெய்து மறக்காமல் படித்துப்பாருங்கோ.
      இணைப்பு இதோ:

      http://tthamizhelango.blogspot.com/2013/01/1-100-traffic-rank-2012.html

      //ஆனால் உங்கள் எழுத்துக்களால் கவரப்பட்டு உங்களுக்கு அங்கெல்லாம் சிகப்புக் கம்பளம் விரிக்கப்பட்டுவிட்டது. அதற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      சிவப்புக் கம்பளங்கள் விரித்தார்கள். அதை நான் மறுக்கவில்லை.

      ஆனால் அந்த சிவப்புக்கம்பளத்தால் எனக்கு என்ன சிறப்பு என்று அறியாத ஓர் பச்சைக் குழந்தை போல மட்டுமே [லயாக்குட்டி போல] அதை நான் ஒருவாரம் அனுபவித்து வந்துள்ளேன் என்பதே உண்மை. சத்தியம்.

      //உங்கள் எழுத்துக்களைப் படிப்பதால் என் எழுத்துக்கள் கொஞ்சமாவது மெருகேறும் என்று நினைக்கிறேன்.//

      கொஞ்சமென்ன, நிறையவே மெருகேறும்.

      உங்கள் எழுத்துக்கள் எனக்குப் பிடித்துள்ளன. பிடித்ததனால் மட்டுமே தான், உங்களின் அத்தனைப் பதிவுகளுக்கும் ஒன்று விடாமல், ஆரம்பத்திலிருந்து இன்றுவரை கருத்தளித்துள்ளேன்.

      உங்களுக்கு எழுத்துலகில் மிகப்பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. மேலும் மேலும் ஜொலிக்கத்தான் போகிறீர்கள்.

      அன்பான மனமார்ந்த ‘மணம் [மனம்] வீசும்’ வாழ்த்துகள்.

      நீக்கு
  25. ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.

    கதைக்குப் பொருத்தமான கன கச்சிதமான தலைப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANI February 4, 2013 at 3:02 AM
      //ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.
      கதைக்குப் பொருத்தமான கன கச்சிதமான தலைப்பு.//

      இந்தக்கதையை நான் ஓரிரு நாட்களில் எழுதி முடித்து விட்டேன்.

      அப்போதெல்லாம் என்னிடம் கம்ப்யூட்டர் கிடையாது. தமிழிலும் அடிக்கத்தெரியாது.

      இது நான் கையால் பேப்பரில் எழுதிய என் இரண்டாவது கதை.

      2006 பிப்ரவரி மாதம் எழுதினேன் என்ற ஞாபகம்.

      இதற்கு நான் நான்கு அல்லது ஐந்து தலைப்புகள் தேர்ந்தெடுத்து என் மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் அவர்களிடம் ஆலோசனை செய்தேன்,

      கதையை முதன் முதலாக அவர் படிக்கட்டும் என்றும் கொடுத்தேன்.

      கதையை மளமளவென்று ஒரே மூச்சில் படித்தார்.

      என் கையைப் பிடித்து குலுக்கினார்.

      கதையில் பயங்கர FLOW இருப்பதாகச் சொல்லி மிகவும் பாராட்டினார்.

      ”சற்றே நீண்ட கதையாக எழுதியுள்ளீர்கள். இதை அப்படியே உங்கள் மனைவி பெயரில் “மங்கையர் மலர்” க்கு அனுப்புங்கோ” என்றும் யோசனை சொன்னார்.

      அதில் “உடம்பெல்லாம் உப்புச்சீடை” என்று நான் எழுதியிருந்த தலைப்பே அவருக்கும் திருப்தியாக இருந்து அதற்கே அவரும் தன் ஒப்புதல் அளித்தார்.

      மங்கையர் மலருக்கு நான் அனுப்பி வைத்த உடனே அவர்கள் அதை அப்படியே தகுந்த படங்களுடன் வெளியிட்டு விட்டார்கள்.

      அப்போது மங்கயர் மலர் ஆசிரியர் திருமதி. ரேவதி சங்கரன் அவர்கள்.

      இந்த நெடுங்கதையில் ஒரு வாக்கியமோ, ஒரு வார்த்தையோ, ஒரு எழுத்தோ கூட EDIT செய்யாமல் அப்படியே சுமார் 10-12 பக்கங்களுக்கு வெளியிட்டிருந்தார்கள், என்பது குறிப்பிடத்தக்கது.

      நீக்கு
    2. கோபு >>>> திருமதி. ஜெயந்தி

      //ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.//

      நானும் ஒன்று சொல்ல மறந்து விட்டேன். இந்தக்கதையில் எட்டு பாகங்களையும் சேர்த்து ஒரே பதிவாக [மீள் பதிவாக] நான் தமிழ்மண நட்சத்திரமாக ஜொலித்த போது கொடுத்துள்ளேன். அதன் இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_2406.html

      அதில் ஏராளமான படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவை உங்களுக்கு நிச்சயமாகப்பிடிக்கும். அங்கும் சென்று, ஓர் சின்ன பின்னூட்டம் கொடுத்தால் மட்டுமே, காசி யாத்திரை முடிந்த பலன் உங்களுக்குக்கிடைக்கும்.

      அதாவது காசிக்குப்போய் வருபவர்கள், கங்கா ஜலத்துடன் இராமேஸ்வரத்துக்கும் போய் வர வேண்டும் என்பது முக்கியம்.

      அதுபோலவே தாங்கள் மேற்படி என் பதிவுக்கும் சென்று, ஒரு சின்ன பின்னூட்டம் [படங்களுக்காகவாவது] கொடுத்து விட்டு, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளையும் தரிஸித்து விட்டு வாங்கோ.

      oooOooo

      நீக்கு
  26. எல்லாவற்றையும் ஆட்டுவிக்கும் எல்லையில்லா சக்தி ஒன்றுதான் நம்மையும் ஆட்டுவிக்கிறது என்ற ஞானம் ஏற்பட்டுவிட்டால் அப்புறம் இவ்வுலகில் நமக்கு எத்துன்பமும் இல்லை.

    பதிலளிநீக்கு
  27. என்ன இருந்தாலும் பெரியவா பெரியவாதான்.
    கதை ரொம்ப யதார்த்தமா மனதில நிறைந்தது

    பதிலளிநீக்கு
  28. கொஞ்சம் படித்திருந்தாலே தலைக்கனம் மிகுந்துவிடும் பலருக்கும். ஆனால் வேதங்களை முழுமுதலாய்க் கற்றறிந்தும் கொஞ்சம் கூட தற்பெருமையோ தலைக்கனமோ இல்லாமல் தன்னடக்கத்துடனும் தவறிழைத்தவர்களை மன்னிக்கும் மனோபாவத்துடனும் அப்பெரியவர் நடந்துகொள்ளும் முறை மனம் கசியச் செய்கிறது. பட்டாபி தம்பதியினர் இனிமேலாவது மனந்திருந்தி எவரையும் புறத்தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடக்கூடாது. அவர்கள் மட்டுமல்ல, இக்கதையின் மூலம் வாசகராகிய நாங்களும் அதையே அறிகிறோம்... மிகவும் அருமையானதொரு கதைக்கும் அது கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானதற்கும் இனிய பாராட்டுகள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
  29. அந்த வயசாளிய இவுக எத்தர அவமான படுப்பினா கூட மனசுல போட்டுகிடாம ஒதவி செய்திருக்காவுளே.

    பதிலளிநீக்கு
  30. இப்பவாவது தங்களின் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்களே அதுவே பெரிசு. பெரியவரும் பக்குவப்பட்ட ஞானி ஆகையால் எதையும் பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுகிறார். முடிவு நெறைவா இருக்கு.

    பதிலளிநீக்கு
  31. //அழகிய உடலோ
    அருவருப்பான உடலோ
    உயிர் என்ற ஒன்று பிரிந்தபின்
    அழுகக்கூடிய, நாறக்கூடிய
    அப்புறப் படுத்த வேண்டிய பொருளாகி விடுகிறது.
    அதை எரிக்க வேண்டிய அவசரமும், அவசியமும்
    நிர்பந்தமும் ஏற்படுகிறது.

    எரிந்த அதன் சாம்பலில்
    அழகும் இல்லை
    அருவருப்பும் இல்லை.

    சாம்பல் கரைக்கப்படும் கங்கையோ
    என்றுமே புனிதமாகப் போற்றப்படுகிறது!// ஆழ்ந்த இந்த கருத்தினை எளிமையான, சுவாரசியமான் நடையில் கண்முன்னே நிறுத்தும் காட்சி அமைப்புகளுடன் அருமையான தொடராக கொடுத்து அசத்திவிட்டீர்கள்...முத்தாய்ப்பாக பெரியவரின் உருவத்தில் பெரியவரே தொன்றியதான உருவகம் அற்புதம்..சற்றும் தொய்வில்லாத நடை...அட்டகாசம் வாத்யாரே...

    பதிலளிநீக்கு
  32. //நடந்து முடிந்தது, இப்போது நடப்பது, இனி நடக்கப்போவது எல்லாமே அவன் செயல் தான்.//
    ஆழ்ந்த கருத்தினை அருமையாகச் சொல்லிச் சென்ற கதை! அருவருப்பான உருவமாகப் படைத்து விஸ்வரூப தரிசனம் வெளிப்படச் செய்துவிட்டீர்கள்! அருமை!

    பதிலளிநீக்கு
  33. இந்தக்கதையின் நிறைவு பகுதி இன்னமும் காணோமேன்னு நினைத்தேன். சங்கரமடத்து ஸாஸ்த்திரிகள் பெரியவருக்கு பிடித்தமான பதார்த்தங்களை செய்யச்சொல்வது விருந்தோம்பலின் சிறப்பு. பட்டாபி பெரியவர்காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதும் பெரியவர் அவர்களை அரவணைத்து கொள்வதும் பட்டாபி தரும் சன்மான தொகையை வேதம் படிக்கும் மாணவர்களுக்கு அத்யாவசியமான பொருடுகள் வாங்கி கொடுக்கும்படி சொல்வதும் அந்த பெரியவர் வேத ஸம்ரஷணத்தில் எவ்வளவு ஆர்வம் உள்ளவராக இருக்கிறார் என்பதும் புரிந்து கொள்ள முடிகிறது. கதையை சுவாரசியமாக கொண்டு சென்று நிறைவாக முடித்திருக்கீங்க.. பின்னூட்டஙுகள் எல்லாமுமே வெகு சுவாரசியமாக இருக்கு. குறிப்பாக ஒருவர் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்ததை வெகுவாக ரசித்தேன். தமிழ் பத்திரிகை, கன்னட பத்திரிகைகளில் இந்தக்கதை வெளியானதற்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... March 14, 2016 at 10:15 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இந்தக்கதையின் நிறைவு பகுதி இன்னமும் காணோமேன்னு நினைத்தேன்.//

      கடைசியில் ஒருவழியாக் கண்டுபிடிச்சுட்டீங்கோ. :)

      //சங்கரமடத்து ஸாஸ்த்திரிகள் பெரியவருக்கு பிடித்தமான பதார்த்தங்களை செய்யச்சொல்வது விருந்தோம்பலின் சிறப்பு.//

      ஆஹா, யாரும் குறிப்பிடாத ஒன்றைத் தாங்கள் சுட்டிக்காட்டி மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.

      //பட்டாபி பெரியவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதும் பெரியவர் அவர்களை அரவணைத்து கொள்வதும் பட்டாபி தரும் சன்மான தொகையை வேதம் படிக்கும் மாணவர்களுக்கு அத்யாவசியமான பொருட்கள் வாங்கி கொடுக்கும்படி சொல்வதும் அந்த பெரியவர் வேத ஸம்ரஷணத்தில் எவ்வளவு ஆர்வம் உள்ளவராக இருக்கிறார் என்பதும் புரிந்து கொள்ள முடிகிறது.//

      அதே, அதே, அழகாகப் புரிந்துகொண்டு சொல்லிட்டீங்க.

      //கதையை சுவாரசியமாக கொண்டு சென்று நிறைவாக முடித்திருக்கீங்க..//

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

      //பின்னூட்டங்கள் எல்லாமுமே வெகு சுவாரசியமாக இருக்கு. குறிப்பாக ஒருவர் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்ததை வெகுவாக ரசித்தேன்.//

      அவர் என் கதைகளின் பரம ரஸிகையாக இருந்தார் ஒரு காலத்தில். அவர்களுக்கு பல பெயர்கள் உண்டு. ஒவ்வொருமுறையும் ஒவ்வொருவிதமாகத்தான் நான் அவர்களை அழைத்து வந்தேன். ஓர் இரவில் விடிய விடியத் தூங்காமல் 50க்கும் மேற்பட்ட என் கதைகளைப்படித்து பின்னூட்டமிட்டவர். என் பதிவினில் எங்கேனும் எழுத்துப்பிழைகள் இருப்பின் அதனையும் மெயில் மூலம் எனக்குச் சுட்டிக்காட்டி உதவுவார். நான் அவற்றை உடனுக்குடன் திருத்தி விடுவேன்.

      இப்போது 2-3 ஆண்டுகளாக அவர்களை என் பக்கம் காணும். அவர்களின் வலைப்பதிவிலேயும் புதிய பதிவுகள் ஏதும் வெளியிடுவதாகத் தெரியவில்லை. நான் அவர்களுக்கு மெயில் கொடுத்தாலும் UNDELIVERED எனத் திரும்பி வந்துவிடுகிறது. அவர்கள் இப்போது எங்கிருந்தாலும் செளக்யமாக சந்தோஷமாக இருக்க நான் பிரார்த்திக்கிறேன்.

      //தமிழ் பத்திரிகை, கன்னட பத்திரிகைகளில் இந்தக்கதை வெளியானதற்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.//

      தங்களின் தொடர் வருகைக்கும், வித்யாசமான விரிவான நல்ல பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

      நீக்கு
  34. கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. நாள் கழித்துப் படிப்பதில் ஒரு அனுகூலம், மொத்தக் கதையையும் ஒரே மூச்சில் படித்துவிடலாம்.

    ரொம்ப வித்தியாசமான ஒரு சப்ஜெக்ட் எடுத்துக்கொண்டு, குழந்தை மனம் பாலாக இருப்பதையும், வளர வளர பெரியவர்களானபின் கசடாக மாறுவதையும் (ஒரே குடும்பத்தில்) மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    உடல் நோய் கண்டு அசூயைப் படுவதையும், குழந்தைகள் அவரைத் தொடுவதைக்கூட அருவருப்பாக நினைக்கும் மன நிலையையும் சரியாகப் பிரதிபலித்திருக்கிறீர்கள்.

    பெரியவர் குண'நலன் மிகச் சிறப்பாக வெளிவந்துள்ளது.

    தகுதியான கதை. நல்ல அறத்தைச் சொல்லும் கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் October 3, 2016 at 8:35 PM

      //கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. நாள் கழித்துப் படிப்பதில் ஒரு அனுகூலம், மொத்தக் கதையையும் ஒரே மூச்சில் படித்துவிடலாம்.//

      கரெக்ட்.

      //ரொம்ப வித்தியாசமான ஒரு சப்ஜெக்ட் எடுத்துக்கொண்டு, குழந்தை மனம் பாலாக இருப்பதையும், வளர வளர பெரியவர்களானபின் கசடாக மாறுவதையும் (ஒரே குடும்பத்தில்) மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //தகுதியான கதை. நல்ல அறத்தைச் சொல்லும் கதை.//

      அன்பான வருகைக்கும், தெளிவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு