என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 17 ஜனவரி, 2011

ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் !

”ஏய் சீமாச்சூ! ஒரு சின்ன ஹெல்ப் பண்ணணும்டா. அந்தப் பிள்ளையார் கோயில் டெய்லரிடம் போய் இந்தப் புதுசா தைத்த ஜாக்கெட்டை கைப்பக்கம் கொஞ்சம் பிரிச்சு லூஸ் ஆக ஆக்கிக்கொண்டு வரணும்டா. விலை ஜாஸ்தியான ஒஸ்தித் துணிடா. ஜாக்பாட் நிகழ்ச்சியில் வந்த, குஷ்பு போல முதுகுப் பக்கம் பெரிய ஜன்னல் வைக்கச் சொன்னேன்டா. ஏதோ சுமாரான ஜன்னல் வைத்துவிட்டு கைகள் பக்கம் ரொம்பவும் டைட்டா தைத்துத் தொலைத்து விட்டாண்டா. அளவு ரவிக்கையைக் கொடுக்கும் போதே படித்துப் படித்து சொன்னேண்டா. பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிவிட்டு, வேணும்னே இப்படி டைட்டாகத் தைத்துத் தொலைத்திருக்கிறாண்டா. நானே போகலாம் தான் நினைச்சேண்டா. ஆனாக்க அவனையும் அவன் அசட்டுச் சிரிப்பையும், திருட்டு முழியையும் பார்க்கப் பிடிக்கலைடா”, என்றாள் என் பக்கத்து வீட்டு ஜிகினாஸ்ரீ.

அவள் உண்மைப் பெயர் என்னவோ ஜெயஸ்ரீ தான். இருந்தாலும் நான் அவளுக்கு என் மனதுக்குள் வைத்துள்ள பெயர் ஜிகினாஸ்ரீ.


நொடிக்கு நூறு தடவை என்னை “டா” போட்டு பேசி வருகிறாள். “ஸ்ரீனிவாசன்” என்கிற என் முழுப்பெயரைச் சுருக்கி “சீமாச்சூ” என்கிறாள். அதிலும் எனக்கென்னவோ ஒரு வித கிளுகிளுப்பு தான்.

சின்ன வயதிலிருந்தே எங்களுக்குள் மிகவும் பழக்கம். தாயக்கட்டம், பரமபத சோபான படம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி, பாண்டி, கோலிகுண்டு, சடுகுடு, பச்சைக்குதிரை தாண்டுதல் எனப் பல விளையாட்டுகள், நாங்கள் சேர்ந்தே விளையாடியதுண்டு.


என்னை விட இரண்டு வயது சிறியவள். விஞ்ஞான பாட நோட்டில் சயன்ஸ் டயக்கிராம் வரைய என் உதவியை நாடுவாள். அவளுக்கு சரியாக ஓவியம் வரைய வராது. இந்த வேலை, அந்த வேலை என்று பாகுபாடு இல்லாமல் என்னை நன்றாகப் பயன் படுத்திக் கொள்வாள்.

நானும் மகுடிக்கு மயங்கும் நாகம் போல அவள் எது சொன்னாலும், சின்ன வயதிலிருந்து என்னையுமறியாமல் தட்டாமல் செய்து கொடுத்துப் பழகி விட்டேன்.


என் தந்தையும் அவள் தந்தையும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வரும் நண்பர்கள். என் தாயும் அவள் தாயும் மிகவும் சிநேகிதிகள். அக்கம்பக்கத்திலேயே எங்கள் வீடுகள். நாங்கள் இவ்வாறு பழகுவதை யாருமே தவறாகவோ, வித்யாசமாகவோ நினைப்பதில்லை.


நான் படிப்பில் சுமார் தான். இப்போது பீ.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். அவள் அப்படியில்லை. படிப்பில் படு சுட்டி. ப்ளஸ் டூ வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் வாங்கிப் புகழ் பெற்றவள்.

படிப்பு மட்டும் அல்ல, அவள் அழகோ அழகு. அன்று சிறு வயதில் என்னைவிட நோஞ்சானாகத் தான் இருந்தாள்.
அவள் எட்டாவது படிக்கும் போது, அவர்கள் வீட்டில் திடீரென ஒரு விழா எடுத்தார்கள்.

காது, மூக்கு, கழுத்து, கைகள் என புதுப்புது நகைகள் அணிவித்திருந்தார்கள். இதுவரை கவுன், பாவாடை சட்டை, சுடிதார், நைட்டி என அணிந்திருந்தவளுக்கு பட்டுப்பாவாடை சட்டையுடன், நல்ல பளபளப்பான ஜிகினா ஜரிகைகளுடன் மின்னும் தாவணி அணிவித்திருந்தார்கள். தலை நிறைய பூச்சூடிக்கொண்டிருந்தாள். கழுத்தில் நெருக்கமாகத் தொடுத்த நறுமணம் கமழும் மல்லிகைப்பூ மாலை அணிவித்திருந்தனர். பூப்போட்ட தாவணியின் ஜரிகைகள் ஜிகினா போல மிகவும் பளபளப்பாக டால் அடித்துக் கண்ணைப் பறிப்பதாக இருந்தது. அதைப் பார்த்து திகைத்துப்போன நான், அவளை ஜிகினாஸ்ரீ என்று வாய் தவறி அழைத்தேன். விழா அமர்க்களத்தில் நான் சொன்னது அவள் காதில் சரியாக விழவில்லை போலும்.


அவள் வயதுக்கு வந்து விட்டதாகப் பேசிக்கொண்டார்கள். எங்கள் எல்லோருக்கும் இனிப்புப் புட்டு, எள்ளுப்பொடி என ஏதேதோ தின்பதற்கான பலகாரங்கள் கொடுத்தார்கள். பெண்களெல்லாம் என் ஜிகினாஸ்ரீயை ஒரு நாற்காலியில் பட்டுத்துணி போட்டு அமர வைத்து, கூடி நின்று பாட்டுப் பாடினார்கள்.

எனக்கு இந்த திடீர் விழாவைப் பற்றி ஒன்றும் புரியவில்லை. என் தாய் உள்பட எனக்குப் புரியும் படியாக யாரும் எதுவும் எடுத்துச் சொல்லவும் இல்லை.


பிறகு ஒரு நாள் இது பற்றி அவளிடமே கேட்டு விட்டேன். அதற்கு அவள் “மக்கு, மக்கு; பத்தாவது படிக்கிறாய்; உனக்கே உனக்காக ஒரு எழவும் புரியாது. என்னைக் கேட்டது போல வேறு யாரையும் கேட்டு வைக்காதே; உதை விழும். உனக்கு முரட்டு மீசை முளைக்கும் போது ஒரு பொண்டாட்டி வருவாள். அவளிடம் கேளு. அவ எல்லாம் விபரமா சொல்லுவா” என்றாள்.

இப்போது தான் அரும்பு மீசை முளைக்கலாமா என்று பார்த்துவரும் என் மேல் உதட்டுக்கும், நாசித் துவாரங்களுக்கும் இடைப்பட்ட பகுதியைத் தடவி பார்த்துக் கொண்டேன்.


அவளைவிட இரண்டு வயது பெரியவனாகிய எனக்கு, எங்கள் வீட்டில், வயது வந்து விட்டதாக விழா எதுவுமே எடுக்கவில்லை. இவளுக்கு மட்டும் என்ன திடீர் விழா ? என்பதே எனக்கான மிகப்பெரிய சந்தேகம்.


பள்ளியில் விசாரித்ததில் பருவம் அடைந்த வயதுப்பெண்களுக்கு நடைபெறும் விழாவென்றும், அதைப் பூப்பு நீராட்டு விழா என்று சொல்லுவார்கள் என்றும், ஏதேதோ தனக்குத் தெரிந்ததைச் சொன்னான் என் வயது நண்பன் ஒருவன்.

மொத்தத்தில் யாருக்கும் ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லையோ அல்லது எனக்குப் புரியும்படியாகத்தான் சொல்லத் தெரியவில்லையோ! சரியென்று நானும் அதைப் பற்றி சந்தேகம் கேட்பதையே ஒரு வழியாக விட்டு விட்டேன்.


அந்த விழா நடைபெற்ற பிறகு, அவளின் நடை உடை பாவனை தோற்றம், எல்லாவற்றிலும் ஒரு வித திடீர் மாற்றங்கள். திடீரென கொஞ்ச நாளிலேயே நல்ல சதை பிடிப்புடன் மொழு மொழுவென்று தேக அமைப்பு மாறி விட்டது. ஆப்பிள் போன்ற செழுமையான கன்னங்கள், ஆங்காங்கே அசத்தலான மேடு பள்ளங்கள் என ஆளே முற்றிலும் மாறி விட்டாள்.


என்னை “டா” போட்டு அழைப்பதும், அதிகாரமாக வேலை ஏவுவதும் மட்டும் இப்பொதும் குறையவே இல்லை. அவள் எங்கு போனாலும் என்னையும் துணைக்கு அழைத்துப் போவதும், கடையில் வாங்கிய துணிமணிகள் போன்ற பொருட்களை என்னை விட்டு தூக்கி வரச்செய்வதுமாக, மொத்தத்தில் என்னை, ஒரு வேலையாள் போலவே நடத்தி வந்தாள்.


ஆனால் ஒன்று, ஹோட்டலில் வயிறு முட்ட டிபனும், ஐஸ் க்ரீம் போன்றவையும், அவள் செலவிலேயே, அவ்வப்போது வாங்கித் தரவும் தவற மாட்டாள். நானும் அவளுடன் சிறு வயதிலிருந்தே பழகிய தோஷமோ என்னவோ தெரியவில்லை, வாலிப வயதாகிய எனக்கு அவள் மேல் நாளுக்கு நாள் ஒரு வித ஈர்ப்பும் இனக் கவர்ச்சியுமாக, என்னை ஆட்டிப் படைத்து வந்த ஏதோவொன்று, அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடி ஓடி உதவிகள் செய்து வரச் செய்தது என்னை.


எனக்கு இப்போதெல்லாம் அவளைப் பார்க்காவிட்டாலோ, அவளுடன் பேசாவிட்டாலோ, ஏதோ பைத்தியம் பிடித்தாற்போல ஒரு உணர்வு ஏற்பட்டு வருகிறது.

நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு போகும் போது, அவள் பொறியியற் கல்லூரியில் நுழைந்து படிக்க முயற்சித்து வருகிறாள். சிறந்த படிப்பாளியும், வருங்கால இஞ்ஜினியருமான அவளை, சாதாரணமானதொரு பட்டதாரியாகப் போகும் நான் என் சுமாரான நிறத்துடனும், மிகச் சாதாரணமான பெர்சனாலிடியுடனும், என்னுடைய வாழ்க்கைத் துணைவியாக அடைய முடியுமா?

அவளுக்கு என் மேல் ஒரு வித ஈர்ப்பும், ஈடுபாடும் ஏற்பட நான் என்ன செய்வது என்று யோசித்து, முடிவில் என்னுடைய ஓவியத் திறமைகளை முழுவதும் உபயோகித்து, என் மனதில் முழுவதுமாக நிறைந்துள்ள என் அன்புக்குரிய அவளை மிகப்பெரிய அளவில் ஓவியமாகத் தீட்டி வர்ணம் கொடுத்து வந்தேன்.

அவளின் அதே, ஆப்பிள் கன்னங்களுடன் படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. அதை ப்ரேம் போட்டு அவளுக்குப் பரிசாக அளிக்க நினைத்துக் கொண்டிருந்தேன்.


நேற்று மாலை நல்ல ராயல் ஆப்பிள் பழமொன்று பெரியதாக வாங்கி வந்திருந்தேன். நான் வரைந்த அவளின் படத்தையும், படத்தில் நான் வரைந்துள்ள அவளின் ஆப்பிள் கன்னங்களையும், நான் வாங்கி வந்த ஆப்பிளையும் மாறி மாறிப் பார்த்து ரசித்தேன்.

பிறகு ஆப்பிள் பழத்தைக் கத்தியால் அழகாக வெட்டினேன். படத்திலிருந்த அவளின் கன்னத்தின் மேல் ஒரே ஒரு துண்டு ஆப்பிளை வைத்து குனிந்து என் வாயினால் கவ்வி ருசித்தேன். அவள் கன்னத்தையே லேசாகக் கடித்து விட்டது போன்ற ஒரு வித இன்பம் எனக்கு ஏற்பட்டது.


அந்த நேற்றைய நிகழ்ச்சியையே மீண்டும் மீண்டும் நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்த என் கையில், இப்போது அவளின் ஜாக்கெட் டெய்லரிடம் சென்று ஆல்டர் செய்து வரக் கொடுக்கப்பட்டுள்ளது.


டைட்டான அவளின் ஜாக்கெட்டை லூஸாக்க, அவள் சொன்ன அந்த டெய்லரிடம் அமர்ந்திருந்தேன். ஜாக்கெட்டை மட்டுமில்லாமல் என்னையும் லூஸாக்கி விட்டது அந்த டெய்லர் சொன்ன சமாசாரம்.


“யாரு சாமி, அந்தப் புதுப் பையன்? அந்தப் பொண்ணு அடிக்கடி ஒரு வாட்டசாட்டமான, சிவத்த, வாலிபனுடன் பைக்கில் உட்கார்ந்து ரெளண்டு அடிக்குது !” என்ற ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அந்த டெய்லர்.


“யோவ் ! வாய்க்கு வந்தபடி ஏதாவது உளறாதே; அவள் அப்படிப் பட்ட பெண் இல்லை” என்றேன்.


“நான் இப்போ என்ன சொல்லிப்புட்டேன்னு நீங்க கோச்சுகிறீங்க? அந்தப் பையன் யாருன்னு உங்களுக்குத் தெரியுமோன்னு கேட்டேன். தெரிந்தா யாருன்னு சொல்லுங்க; இல்லாவிட்டால் தெரியாதுன்னு சொல்லிட்டுப் போங்க !

அந்தப் பையன் ஏதாவது முறைப் பையனாக் கூட இருக்கலாம். அல்லது நண்பனாக இருக்கலாம். கூடவே அந்தப் பெண்ணுடன் காலேஜில் படிப்பவனாகக் கூட இருக்கலாம். கம்ப்யூட்டர் சாட்டிங் அல்லது செல் போன் தொடர்புன்னு ஏதேதோ நியூஸ் பேப்பர்களில் போடுறாங்களே அது போல கூட இருகலாம். ஏதோ பாய் ஃப்ரண்டுன்னு சொல்றாங்களே அதுவாகவும் கூட இருக்கலாம்.

அவன் யாராக இருந்தாலும் சரி; நமக்கு எதற்கு வீண் வம்பு” என்று சொல்லி, கைப்பக்கம் சற்று லூஸாக்கிய அந்த ஜாக்கெட்டை ஒரு பேப்பர் பையில் போட்டு என்னிடம் கொடுத்தான் அந்த டெய்லர்.


இதையெல்லாம் கேட்ட எனக்கு ஒரே பதட்டமாகிப் போனது. ஜிகினாஸ்ரீ ஒரு வேளை எனக்குக் கிடைக்காமல் போய் விடுவாளோ? இனியும் தாமதிக்காமல் அவளிடம் என் காதலைத் தெரிவித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேனே தவிர , அவளிடம் எப்படி ஆரம்பிப்பது, எப்படிப் பேசுவது என்பது ஒன்றும் புரியாமல் ஒரே குழப்பமாக இருந்தது.


தன் புது ஜாக்கெட்டை கையில் வாங்கிக் கொண்டவள், “தாங்க்யூடா சீமாச்சு” என்றாள்.


ஏதோ அவளிடம் கேட்க நினைத்த நான், சற்றே தயங்கினேன்.


“அந்த டெய்லர் உன்னிடம் ஏதாவது கேட்டானா” என்றாள் அவளாகவே.


“நீ யாருடனோ பைக்கில் சுற்றுகிறாயாமே; அதை அவன் பார்த்து விட்டதில் உனக்கு ஒரு குற்ற உணர்ச்சியோ! அதனால் தான் நீ டெய்லர் கடைக்குச் செல்லாமல் என்னை அனுப்பினாயோ?” கேட்டு விடலாமா என்று நினைத்தும் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வர மறுத்தன.


“அந்த டெய்லர் என்னிடம் என்ன கேட்பான் என்று நீ நினைக்கிறாய்?” என்றேன், மிகவும் புத்திசாலித் தனமாக.

”நீ சுத்த ட்யூப் லைட்டுடா, சீமாச்சூ; ஜாக்கெட்டை லூஸாக்கிக் கொடுத்தற்கு ஏதாவது காசு கேட்டானா?” என்றாள் சர்வ அலட்சியமாக.


“அதெல்லாம் ஒண்ணும் கேட்கவில்லை. எல்லாமே அவன் செய்த கோளாறு தானே, எப்படி கேட்பான்” என்று மட்டும் சொல்லிவிட்டு என் வீடு நோக்கி சென்று விட்டேன்.

நான் வரைய ஆரம்பித்த அவளின் படத்தை பைனல் டச் அப் செய்து, கீழே ஜிகினாஸ்ரீ என்கிற ஜெயஸ்ரீ என்று எழுதி, என் கையொப்பமிட்டு, ப்ரேம் செய்து கொண்டு வந்து விட்டேன்.

என் தாயாரிடம் மட்டும் காட்டினேன்.
“சபாஷ்டா ஸ்ரீனிவாஸா, சூப்பரா வரைந்திருக்கிறாய். வரும் பதினெட்டாம் தேதி அவளுக்கு பிறந்த நாள் வருகிறது. அப்போது கொண்டுபோய் அவளிடம் கொடு. ரொம்பவும் சந்தோஷப்படுவாள்” என்றாள்.

“தாங்க் யூம்மா” என்றேன். ஆனால் பதினெட்டாம் தேதிக்கு, முழுசா இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஒருவழியாக அந்தப் பதினெட்டாம் தேதியும் வந்தது. நானும் என் அம்மாவும் அவர்கள் வீட்டுக்குப் புறப்பட்டோம். ஞாபகமாக அழகிய பேப்பர் கலர் பேக்கிங்குடன் படத்தை ஒரு பையில் போட்டு கையில் எடுத்துச் சென்றேன்.

அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போதே, நிறைய ஜோடி காலணிகள் வீட்டு வாசலில் கிடந்ததைக் காண முடிந்தது. அங்கு யார் யாரோ புது முகங்களுடன், பழத்தட்டுகள் மற்றும் பரிசுப் பொருட்களுடன் சோபாவில் அமர்ந்திருந்தனர்.

எங்களை ஜிகினாஸ்ரீயின் பெற்றோர்கள் வரவேற்று அமரச் செய்தனர். அவர்களுக்கு எங்களையும், எங்களுக்கு அவர்களையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தனர்.


டெய்லர் சொன்ன அதே வாட்டசாட்டமான சிவத்த வாலிபன், என் கையைப் பிடித்து குலுக்கியவாறே “அயம்...சுரேஷ்...சாப்ட்வேர் எஞ்சினியர்....டி.ஸி.எஸ்; நெள அட் யுனைடெட் ஸ்டேட்ஸ்; ஜெயஸ்ரீயின் அத்தை பிள்ளை தான் நான்; கிளாட் டு மீட் யூ; ஜெயஸ்ரீ உங்களைப்பற்றி நிறைய என்னிடம் சொல்லியிருக்கிறாள்” என்றான்.


புத்தம் புதியதொரு பட்டுப்புடவையில், சர்வ அலங்காரங்களுடன், என் ஜிகினாஸ்ரீ, கையில் ஒரு ட்ரேயில் ஸ்வீட் காரம் முதலியன எடுத்து வந்து, மிகவும் நிதானமாக, முகத்தில் வெட்கத்துடன் கூடிய புன்னகையுடன், எல்லோருக்கும் விநியோகம் செய்தாள்.


என்னைப் பார்த்ததும் “வாடா சீமாச்சூ, நீ எப்போ வந்தாய்? என்னுடைய ’வுட் பீ’ சுரேஷைப் பார்த்தாயா, உனக்கு அவரைப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டாள்.

“பார்த்தேன், உனக்கு எல்லா விதத்திலும் மிகவும் பொருத்தமானவரே” என்றேன்.

என் கையிலிருந்த, நான் வரைந்துள்ள அவளின் படத்தை, அவளிடம் கொடுக்கத் தோன்றவில்லை எனக்கு. ஆனால் அவளாகவே என் கையிலிருந்து வெடுக்கென அதைப் பிடுங்கிக் கொண்டு பிரித்துப் பார்த்து, அசந்து போனாள்.

“யூ ஆர் ரியல்லி வெரி கிரேட்....டா..... சீமாச்சூ” என்று கூறி என் கையைப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கி, விரல்களை முத்தமிட்டு, தன் கண்களில் ஒத்திக் கொண்டாள்.


பிறகு தன் வருங்காலக் கணவன் சுரேஷிடம் அந்தப் படத்தை நீட்டினாள். அவரும் அதை ரசித்துப் பார்த்து விட்டு, எழுந்து என்னிடம் ஓடி வந்து என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். என்னை மிகவும் புகழ்ந்து பாராட்டினார்.


“எப்படி ஸார், இவ்வளவு தத்ரூபமாக வரைய முடிகிறது உங்களால்?” என்றார் சுரேஷ்.

“எந்த உருவம் என் மனதில் ஆழமாகப் பதியுமோ, அதை என் கைகள் மிகச் சுலபமாக வரைந்து விடும்” என்று சொல்லத் துடித்தது, என் உதடுகள். ஆனால் நான் எதுவுமே சொல்லவில்லை.


“எங்க சீமாச்சூ சின்ன வயதிலிருந்து நன்றாக படங்கள் வரையுவான். எனக்கு சயன்ஸ் டயக்ராம் எல்லாம் இவன் தான் வரைந்து தந்து உதவுவான். படம் வரைவதில் எங்கள் சீமாச்சூ...சீமாச்சூ தான்” என்று பெருமையாகக் கூறினாள், ஜிகினாஸ்ரீ.


சுரேஷுக்கும் ஜெயஸ்ரீக்கும் வரும் தை பிறந்ததும் கல்யாணம் நடத்தலாம்னு இருக்கிறோம் என்று பொதுவாக அங்கு கூடியிருப்பவர்களுக்கும், எங்களுக்குமாக ஒரு தகவல் போல, ஜெயஸ்ரீயின் அப்பா மிகுந்த சந்தோஷத்துடன் தெரிவித்தார்.

“டேய், சீமாச்சூ, இந்தக் கல்யாணம் முடியும் வரை நிறைய வேலைகள் இருக்கும். நீ தான் எனக்குக் கூடமாட இருந்து எல்லா உதவிகளும் செய்யணும். எனக்குக் கூடப் பிறந்த அண்ணன் தம்பிகள் யாரும் இல்லாத குறையை நீ தான் தீர்த்து வைக்கணும்” என்று உத்தரவு பிறப்பித்தாள், என் அன்புக்குரிய ஜிகினாஸ்ரீ.

நான் வரைந்த ஓவியம் அவர்கள் வீட்டுச் சுவரில் ஆணி அடித்து அப்போதே மாட்ட ஏற்பாடானது. சுத்தியலால் ஆணியை ஓங்கி அடிக்கும் போது ஒரு ஆணி பறந்து வந்து என் நெற்றிப் பொட்டில் வேகமாக மோதித் தெறித்து கீழே விழுந்தது. நல்ல வேளையாக, என் கண்ணில் படாமல் தப்பியது.

அதை யாரும் கவனிக்காத போதும், என்னால் மட்டுமே அந்த வலியை நன்கு உணர முடிந்தது. சிற்றுண்டி சாப்பிட்டிருந்த நான் எழுந்து அருகிலிருந்த, வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டேன்.
-ooooooooo-

[இந்தச் சிறுகதை 01.09.2010 தேதியிட்ட ’தேவி’ வார இதழில் பிரசுரிக்கப்பட்டது]

52 கருத்துகள்:

  1. ஹ்ம்ம். ஆண்கள் எளிதில் காதலில் வீழ்ந்து விடுவர்.

    பதிலளிநீக்கு
  2. முன்பே ஒரு பின்னூட்டத்தில் எழுதியதாய் ஒரு நினைவு.

    வெவ்வேறு ஆண்களின் ஊடான உறவுகளுக்கு பெண்கள் வெவ்வேறு விதமான பாகுபாட்டுடன் பிரித்துக்கொள்கிறார்கள்.

    சீமாச்சு உள்ளிட்ட ஆண்கள் பலரும் இப்படித்தான் குழப்பிக் கொள்கிறார்கள்.

    நல்ல சரளமான நடையும் சுவாரஸ்யமான மொழியும்.

    ஜமாய்க்கிறீங்க கோபு சார்.சில சமயங்களில் உடனே படிக்கமுடியாமல் போகிற்து வருத்தம் தருகிறது.

    பதிலளிநீக்கு
  3. நல்ல கதை. முடிவும் நன்று!

    வெங்கட் நாகராஜ்

    பதிலளிநீக்கு
  4. ஜிகினாஸ்ரீயின் வருங்காலக் கணவன் என்று தெரிந்தவுடன் 'அவன்' 'அவர்'ஆனது ஸ்ரீனிவாசனின் உயர்ந்த மனத்தைக் காண்பிக்கிறது, வருங்காலத்தில் அவனுடைய ஆட்டோக்ராஃப் நினைவுகள்!!

    பதிலளிநீக்கு
  5. சிறுகதை அருமை. தேவியில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அய்யா எழுத்தின் அளவை சிறிதாக்கலாமே... நீல வண்ணம் என்பதாலும் கண்களுக்கு உறுத்தலாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  7. அன்புடன் வருகை புரிந்து பாராட்டியுள்ள திருவாளர்கள்: எல்.கே, சுந்தர்ஜி சார், வெங்கட் & பாரத்...பாரதி
    திருமதிகள்: மிடில் க்ளாஸ் மாதவி, ராஜி, கோவை2தில்லி & புதுகைத்தென்றல்
    அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    //நல்ல சரளமான நடையும் சுவாரஸ்யமான மொழியும். ஜமாய்க்கிறீங்க கோபு சார்.சில சமயங்களில் உடனே படிக்கமுடியாமல் போகிற்து வருத்தம் தருகிறது.//

    சுந்தர்ஜி சார் !
    ப்ளாக்குக்கு நான் புதியவனாகையால் ஏதோ ஒரு ஆர்வக் கோளாரில், இந்த ஜனவரி மாதமே நிறைய எழுதி வெளியிட்டு விட்டேன். இனி திகட்டாமல், வாரம் ஒரு முறை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் மட்டும், அதுவும் ஒன்றே ஒன்று வீதம், வெளியிடலாம் என்று நினைக்கிறேன். அப்போது தான் தங்களைப் போன்றவர்களின் பொன்னான கருத்துக்களை, தவறாமல் பெற்று மகிழ முடியும்.

    //அய்யா எழுத்தின் அளவை சிறிதாக்கலாமே... நீல வண்ணம் என்பதாலும் கண்களுக்கு உறுத்தலாக இருக்கிறது.//

    பாரத்...பாரதி அவர்களே !
    எழுத்துக்கள் பெரியதாகவும், பளிச்சென்ற கலரிலும் இருந்தால் படிப்பவர்களைக் கவரும் என்றும், படிக்க சுலபமாக இருக்கும் என்றும் நினைத்தேன். தங்கள் கண்களுக்கு உறுத்தல் இன்றி, சற்றேனும் சிறிதாக்கி விடுகிறேன். ஆலோசனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. சம்பவம் சாதாரணமானது என்றாலும் சொல்லப் பட்டிருக்கும் விதம் வசீகரிக்கிறது. டீன் ஏஜில் தொண்ணூறு சதவிகிதத்தினர் அனுபவிக்கும் உணர்வுகள். கடைசியில் கதாநாயகனுக்காக சினிமாவில் வருவது போல ஒரு ட்விஸ்ட் வராதது ஒரு ட்விஸ்ட்!

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
    தங்கள் வருகைக்கு நன்றி. தங்களின் வசீகரிக்கப்பட்ட கருத்துக்களும், என்னை மிகவும் வசீகரித்து விட்டது, ட்விஸ்ட் இல்லாத ட்விஸ்ட் போல.

    பதிலளிநீக்கு
  10. என் பிளாக்கிற்கு வருகை தந்திருந்தவர்களை நானும் தேடி வந்தேன்,வலைச்சரம் என்னை மட்டுமல்ல எனக்கும் பலரை அறிமுகப் படுத்தியுள்ளது.கண்கள் மக்கர் செய்தாலும் ஆர்வமாக படிக்க வைத்தது.போஸ்டின் பக்கத்தை அகலப் படுத்தினால் கூடுதல் அழகா இருக்கும்னு நினைக்கிறேன்.(கோபப் பட்டுடாதிங்க சார்)

    பதிலளிநீக்கு
  11. கோபு ஸார்..கதை சூப்பர்! தேவியில் படித்தாலும் திகட்டவில்லை, மறுபடியும் படிக்க!

    பதிலளிநீக்கு
  12. எனது பதிவில் போட்டி அறிவித்துள்ளேன்,படித்துப் பார்க்கவும்

    பதிலளிநீக்கு
  13. thirumathi bs sridhar,
    தங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கு நன்றி. நானும் ப்ளாக்குக்கு புதியவன். சரி செய்ய முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி அவர்களுக்கு,
    கதையை மீண்டும் படித்ததாகச் சொல்வதையும், திகட்டவில்லை என்பதையும் முழுமையாக நம்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    Matangi Mawley & அன்புடன் மலிக்கா
    இருவ்ரின் வருகைக்கும் மேலான கருத்துகளுக்கும்
    மனமார்ந்த நன்றி.

    //raji said...
    எனது பதிவில் போட்டி அறிவித்துள்ளேன்,படித்துப் பார்க்கவும்//

    தங்களின் பதிவையும், போட்டி அறிவிப்பையும் படித்தேன். பின்னூட்டம் எழுதி அனுப்ப பலமுறை
    முயற்ச்சித்தும் ஏனோ அது போகாமல் சண்டித்தனம் செய்ததால் விட்டுவிட்டேன்.

    கஷ்டப்பட்டு எழுதியுள்ள நகைச்சுவையான அந்தப் பதில் பதிவு வெளியிட்டுள்ள தங்களைத்தான், ஆரண்ய நிவாஸுக்கு வரவழைத்து தடபுடலாக விருந்து வைத்து பரிசளிக்க வேண்டும், நண்பர் இராமமூர்த்தி சார். நானும் அவரிடம் பரிந்துரை செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. கதை ரொம்ப நல்ல இருந்ததும் ஆனால் சீமாச்சு வின் ஏமாற்றம் தான் என்னவோ போல் இருக்கு,.
    ஆனால் சில பெண்கள் சகஜமாக பேசுவதை சில ஆண்கள் இப்படி தான் எடுத்து கொள்கிறாரக்ள்.

    பதிலளிநீக்கு
  16. Jaleela Kamal அவர்களே!
    //சில பெண்கள் சகஜமாக பேசுவதை சில ஆண்கள் இப்படி தான் எடுத்து கொள்கிறாரக்ள்.//

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே !

    //சீமாச்சு வின் ஏமாற்றம் தான் என்னவோ போல் இருக்கு//

    என்ன செயவ்து? தன் ஆசைகளைத் தன் மனதிற்குள்ளேயே வைத்துப் பூட்டிக்கொண்டு, மறுகும் ஆண்களின் நிலை, கடைசியில் சீமாச்சூ போலத்தான் ஆகிறது.


    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. மொத தடவையா வரேன். சீமாச்சு கேரேக்டரைசேஷன் சூப்பர்.. ;-)

    பதிலளிநீக்கு
  18. திரு. RVS அவர்களே,
    தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!

    //மொத தடவையா வரேன். சீமாச்சு கேரேக்டரைசேஷன் சூப்பர்..//

    கருத்துரையில் ’சூப்பர்’ க்கு முன்னால் ஏதோ இடிக்குதே ?

    பதிலளிநீக்கு
  19. திரு. RVS அவர்களே !

    OK OK "CHARACTRIZATION"
    என்று புரிந்து கொண்டேன்.

    முன்னால் தலைமை தேர்தல் கமிஷனர் சேஷனோ என்று நினைத்து, அவர் எங்கே எதற்கு எப்படி இங்கே வந்தார் என்று சற்று குழம்பிப்போனேன்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் vgk சார்...
    உங்களுக்கு மட்டும் சீமாச்சு, ஜிகினா ஸ்ரீ, பஞ்சாமி போன்ற பெயர்கள் எங்கிருந்துதான் கிடைக்கிறதோ...!

    சில பெண்களுக்கு சிறு வயதிலிருந்தே பழகும் ஆண்கள் மீது ஏனோ காதல் வருவதில்லை...!

    இது சீமாச்சு போன்ற ஆண்களுக்கு புரியாமல் போவது வருத்தமே...!

    எனினும் காதலை சொல்லத் துணிவற்றவர்கள் சீமாச்சூ போல நடப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்...!

    எடுத்துக்கொண்ட கருத்தும், கதையை நகர்த்திய விதமும் அருமை சார்.ஒவ்வொரு வரியும் படிக்கத் தூண்டுவதாய் அமைத்திருக்கிறீர்கள்...

    "ஆப்பிள் கண்ணங்களும் அபூர்வ எண்ணங்களும்" நிஜமாகவே அபூர்வம்.

    அன்புடன்,
    ராணி கிருஷ்ணன்.

    பதிலளிநீக்கு
  21. ராணி said...
    //வணக்கம் vgk சார்...
    உங்களுக்கு மட்டும் சீமாச்சு, ஜிகினா ஸ்ரீ, பஞ்சாமி போன்ற பெயர்கள் எங்கிருந்துதான் கிடைக்கிறதோ...!//

    வாங்க ராணி! வணக்கம்.

    நான் கொஞ்சம் அந்தக்கால ஆசாமி அல்லவா, அதனால் இது போன்ற பெயர்கள் சுலபமாகக் கிடைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    //சில பெண்களுக்கு சிறு வயதிலிருந்தே பழகும் ஆண்கள் மீது ஏனோ காதல் வருவதில்லை...!//

    ஆமாம். வராது தான். எங்காவது புதுமையைத் தேடிப்போய், சமயத்தில் மாட்டிக் கொள்வதும் உண்டு.

    //இது சீமாச்சு போன்ற ஆண்களுக்கு புரியாமல் போவது வருத்தமே...! //

    புரியாமல் இல்லை. கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போய்விடுமா என்ற நம்பிக்கையாகவும் இருக்கலாம்.

    //எனினும் காதலை சொல்லத் துணிவற்றவர்கள் சீமாச்சூ போல நடப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்...!//

    என்னையே தாக்குவது போல உணர்கிறேன். துணிந்து சொல்ல எல்லோராலும் முடிவதில்லை என்பதே உண்மை.

    //எடுத்துக்கொண்ட கருத்தும், கதையை நகர்த்திய விதமும் அருமை சார்.ஒவ்வொரு வரியும் படிக்கத் தூண்டுவதாய் அமைத்திருக்கிறீர்கள்...

    "ஆப்பிள் கண்ணங்களும் அபூர்வ எண்ணங்களும்" நிஜமாகவே அபூர்வம்.

    அன்புடன்,
    ராணி கிருஷ்ணன்.//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    இதை நான் இன்று 20.01.2012 அன்று தான் அகஸ்மாத்தாகப் பார்த்தேன். அதனால் பதில் எழுத தாமதம் ஆகிவிட்டது. vgk

    பதிலளிநீக்கு
  22. ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் !

    அபூர்வமான அற்புத தலைப்பூ !

    பதிலளிநீக்கு
  23. இந்தச் சிறுகதை 01.09.2010 தேதியிட்ட ’தேவி’ வார இதழில் பிரசுரிக்கப்பட்டது]

    நிறைவான வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  24. “எந்த உருவம் என் மனதில் ஆழமாகப் பதியுமோ, அதை என் கைகள் மிகச் சுலபமாக வரைந்து விடும்” என்று சொல்லத் துடித்தது, என் உதடுகள். ஆனால் நான் எதுவுமே சொல்லவில்லை.

    சொல்லத்துடிக்குது மனது..
    சொல்லாமல் தவிக்குது உதடு !

    பதிலளிநீக்கு
  25. நான் வரைந்த ஓவியம் அவர்கள் வீட்டுச் சுவரில் ஆணி அடித்து அப்போதே மாட்ட ஏற்பாடானது. சுத்தியலால் ஆணியை ஓங்கி அடிக்கும் போது ஒரு ஆணி பறந்து வந்து என் நெற்றிப் பொட்டில் வேகமாக மோதித் தெறித்து கீழே விழுந்தது. நல்ல வேளையாக, என் கண்ணில் படாமல் தப்பியது.

    தலைக்கு வந்தது
    தலைப்பாகையோடு போனதே!1

    பதிலளிநீக்கு
  26. இராஜராஜேஸ்வரி said...
    ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் !

    //அபூர்வமான அற்புத தலைப்பூ !//

    பலநாள் இரவு தூங்காமல் யோசித்து நான் தேர்ந்தெடுத்த தலைப்”பூ” அல்லவா!

    அதனாலேயே அபூர்வமாக அற்புதமாக தங்கள் மனதுக்கும் அது மணம் வீசியுள்ளதில் வியப்பு இல்லை எனக்கு.

    இதை வெளியிடும் காலக்கட்டத்தில் எனக்கு உங்களைப்போன்ற மிகச்சிறந்த ஆலோசகர்களும் இல்லையே!

    பிறகு என் வேறொரு கதைக்கு “மறக்க மனம் கூடுதில்லையே”
    என பெயர் வைக்கலாமா, அவைகள் சரியான வார்த்தைகள் தானா, என உங்களைக் கலந்து ஆலோசித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

    உங்கள் ஒப்புதலுடன் அந்தப்பெயர் சூட்டிய என் கதை மாபெரும் வெற்றியடைந்து, மிகவும் அதிக பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது என்பதையும் என்னால் என்றும்

    “மறக்க மனம் கூடுதில்லையே!”

    நன்றி.

    பதிலளிநீக்கு
  27. இராஜராஜேஸ்வரி said...
    “எந்த உருவம் என் மனதில் ஆழமாகப் பதியுமோ, அதை என் கைகள் மிகச் சுலபமாக வரைந்து விடும்” என்று சொல்லத் துடித்தது, என் உதடுகள். ஆனால் நான் எதுவுமே சொல்லவில்லை.

    //சொல்லத்துடிக்குது மனது..
    சொல்லாமல் தவிக்குது உதடு !//

    அதே .... அதே ! ;)))))

    பதிலளிநீக்கு
  28. இராஜராஜேஸ்வரி said...
    நான் வரைந்த ஓவியம் அவர்கள் வீட்டுச் சுவரில் ஆணி அடித்து அப்போதே மாட்ட ஏற்பாடானது. சுத்தியலால் ஆணியை ஓங்கி அடிக்கும் போது ஒரு ஆணி பறந்து வந்து என் நெற்றிப் பொட்டில் வேகமாக மோதித் தெறித்து கீழே விழுந்தது. நல்ல வேளையாக, என் கண்ணில் படாமல் தப்பியது.

    //தலைக்கு வந்தது
    தலைப்பாகையோடு போனதே!//

    ஏதாவது இதுபோல சமாதானம் சொல்லி விடுகிறீர்கள்

    [அந்த ஜிகினாஸ்ரீ போல].

    அவர் மனதிலும் காயம் ....

    நெற்றிப்பொட்டிலும் ஆணியால் தாக்குதல் ...................

    பாவமில்லையா

    [அந்த சீமாச்சூ]

    vgk

    பதிலளிநீக்கு
  29. இராஜராஜேஸ்வரி said...
    இந்தச் சிறுகதை 01.09.2010 தேதியிட்ட ’தேவி’ வார இதழில் பிரசுரிக்கப்பட்டது]

    //நிறைவான வாழ்த்துகள்!//


    “தேவி”யின்
    அமுத அருள்
    வாழ்த்துகள்
    மகிழ்வளிக்கின்றன.

    நன்றியோ நன்றிகள்.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  30. arul said...
    //nice//


    Thank you very much for your kind visit to my blog & for the NICE comments, Sir.

    vgk

    பதிலளிநீக்கு
  31. இக்கதையும் நன்றாக இருக்கிற‌து அண்ணா. உங்க ஒவ்வொரு பதிவுக்கும் வார்த்தைகளை தேட வைக்கிறீங்க பாராட்டுவதற்கு.

    பதிலளிநீக்கு
  32. ammulu September 25, 2012 2:49 AM
    //இக்கதையும் நன்றாக இருக்கிற‌து அண்ணா. உங்க ஒவ்வொரு பதிவுக்கும் வார்த்தைகளை தேட வைக்கிறீங்க பாராட்டுவதற்கு.//

    அடடா! பொறுமையாக வார்த்தைகளைத் தேடி கண்டுபிடித்து அதன் பிறகு விரிவாகக் கருத்துக்கள் கூறி இருந்தால், படைப்பாளியான எனக்கு மேலும் சந்தோஷமாக இருந்திருக்குமே !

    கடைசியில் கதையில் வரும் சீமாச்சு போலல்லவா ஆகிவிட்டது என் நிலைமையும்! ;(

    ஜிகினாஸ்ரீ போன்ற தாங்கள் யாராக இருந்தாலும், எந்த நாட்டில் எந்த ஊரில் எப்படியிருந்தாலும் வாழ்க வாழ்கவே என வாழ்த்தும்

    அன்பு அண்ணா
    VGK


    பதிலளிநீக்கு
  33. இதுதான் வயசுக் கோளாறு என்பது. எந்தப் பெண்ணாவது நம்மை மதித்து கொஞ்சம் பேசிவிட்டால் அவளுக்கு நம் மேல் காதல் என்று கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு இந்த லோகத்தையே ஒரு வலம் வர வேண்டியது. நம் இளைஞர்கள் மனமுதிர்ச்சி அடைய இன்னும் பல காலமாகும்.

    பதிலளிநீக்கு
  34. பொதுவாக ஆணோ, பெண்ணோ கொஞ்சம் நட்பாகப் பேசினால் காதல்ன்னு நினைக்கிறவங்க நிறைய பேர். கல்லூரிகள்ல நண்பர்கள் சொல்லி சொல்லியே சில பேர காதலிக்க வெச்சுடுவாங்க. இந்த விடலைப் பருவத்து நிறைவேறாத காதல் நிறைய இளைஞர்களுடைய வாழ்க்கையில் இருக்கும். பல வருடங்களுக்குப் பிறகு மனதால் அசை போடும் போது பைத்தியக்காரத்தனமாக அவர்களுக்கே தோணும்.

    எப்படியோ வழக்கம் போல் அருமையான கதை, பொருத்தமான தலைப்பு, மனதில் நிற்கும் வரிகள்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  35. ஸூ ஸூ நிறைய ஸ்ரீனிவாசன் கள் இப்படி சும்மவாச்சும சீமாச்சு வா மாறி இருக்காங்க. இளவயசுக காரங்க மன உணர்வுகளை அழகா சொல்லி இருக்கீங்க. நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  36. பருவ வயதில் ஒரு ஆண்பிள்ளைக்கு ஏற்படும் மன உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்திய கதை. அதிலும் ஒரு இளம்பெண் தன்னுடன் நெருங்கிப் பழகும்போது உண்டாகும் உணர்வை காதல் என்பதிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க இயலாத இரண்டுங்கெட்டான் பருவம். அந்த வயதுக்குரிய உணர்வை, ஏக்கங்களை, எதிர்பார்ப்புகளை அப்படியே கதாபாத்திரத்தின் வழியே வெளிப்படுத்திய விதம் அருமை. இறுதியில் ஏமாற்றத்துடன் சீமாச்சு வலியை விழுங்கிய விதமும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அழகானதொரு கதைக்கு இனிய பாராட்டுகள் கோபு சார்.

    இந்தக் கதைக்கான விமர்சனப் போட்டியில் நான் பரிசு பெற்றது நினைவுக்கு வந்து மகிழ்வுற வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  37. எங்கேந்து பேரு புடிக்குறீங்க? சில பொண்ணுக சாதாரணமா பேசுரதகூட சில பயனுக மிஸ்டேக்காவே எண்ணிபோடுதுங்க.

    பதிலளிநீக்கு
  38. இதுதான் அடலஸண்ட பருவ கோளாரோ? சீமாச்சு அவகிட்ட பேசி கன்பார்ம் பண்ணி இருக்கணும் இவனே ஐன் ஸைடா நெனச்சுண்டா அதுக்கு யாரு பொறுப்பு.

    பதிலளிநீக்கு
  39. பாத்திரங்களும் குறிப்பாக பெயர்களும் அருமை...அடலஸன்ட் பருவ பெண்ணையும் பையனையும் அப்பருவத்தின் குறுகுறுப்பையும் அருமையாகப் படம்பிடித்துக்காட்டியுள்ளீர்கள். பெண்களைப்பொறுத்தவரை எல்லாமே வேகம்தான். பயலுக கொஞ்சம் ஸ்லோதான். கடசியா ஹீரோ நெத்தியடி வாங்கிகிட்டு கைய கழுவுறது...யதார்த்தம்..

    பதிலளிநீக்கு
  40. //“எந்த உருவம் என் மனதில் ஆழமாகப் பதியுமோ, அதை என் கைகள் மிகச் சுலபமாக வரைந்து விடும்” என்று சொல்லத் துடித்தது, என் உதடுகள். ஆனால் நான் எதுவுமே சொல்லவில்லை. //
    வலியுணர்த்தும் வரிகள்!

    பதிலளிநீக்கு
  41. தலைப்பே கதையை படிக்க வா வான்னு கூப்பிடுது. இளவயது ஆண்மனதின் தாபங்களும் ஏக்கங்களும் புரிஞ்சுக்க வைத்த எழுத்து. ஆண்களுக்கு தோன்றும் சபல உணர்வுகள் பெண்களுக்கு தோன்றாமல் நட்பாக மட்டுமே பார்க்கும் ஜிகினாஸ்ரீயின் மன உணர்வுகளையும் புரிஞ்சுக்க முடிகிறது. வயதுக்கு வருவது என்பது பெண்களுக்கு மட்டும் நடக்கும் விஷயமா. ஆண்களும் வயதுக்கு வரும் பருவமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை இப்படி வெமிச்சத்துக்கு வருவதில்லை. ஜிகினாஸ்ரீ இவன்கூட நட்பாகத்தான் பழகிவருகிறாள் என்பது படிப்பவர்களுக்கு புரியும் அளவுக்கு சீமாச்சு புரிந்து கொள்ளவில்லையே. அதனால்தானே ஒருதலையாக அவளை விரும்புகிறான். டெய்லர் அவளைப்பற்றி கேட்டதும் அவனுக்கு ஏன் கோவம் வருகிறது. அதிக அன்பால்தானே. சிறுவயது முதல் ஒன்றாகவே பழகி வருபவர்கள் மனதில் காதல் இருக்காது என்று ஜிகினாஸ்ரீயின் மூலம் பிரியவருகிறது. அதே சீமாச்சு வேறுவிதமாக எண்ணுகிறான். அவளுக்கு வேறு ஒருவருடன் மணம் பேசும்போது வெறும் பார்வையாளனாக மட்டுமே இவனால் கலந்து கொள்ள முடிகிறது. மனதில் நிறைந்தவளை தத்ரூபமாக ஓவியமாக வரைந்து திருப்தி பட்டுக்கொள்கிறான். அப்படி அவன் மனதில் அவள் இருப்பதை ஜாடை மாடையாக அவளிடம் முதலிலேயே தெரியப்படுத்தி இருந்தால் அவளும் யதார்த்தத்தை உணர்த்தியிருப்பாள்.ஒவ்வொரு கதையும் ரொம்பவே யோசிக்க வைக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 27, 2016 at 9:51 AM

      //தலைப்பே கதையை படிக்க வா வான்னு கூப்பிடுது.//

      மிக்க மகிழ்ச்சி. :) மிக்க நன்றி !

      //இளவயது ஆண்மனதின் தாபங்களும் ஏக்கங்களும் புரிஞ்சுக்க வைத்த எழுத்து. ஆண்களுக்கு தோன்றும் சபல உணர்வுகள் பெண்களுக்கு தோன்றாமல் நட்பாக மட்டுமே பார்க்கும் ஜிகினாஸ்ரீயின் மன உணர்வுகளையும் புரிஞ்சுக்க முடிகிறது.//

      புரிதலுக்கு நன்றிகள்.

      //வயதுக்கு வருவது என்பது பெண்களுக்கு மட்டும் நடக்கும் விஷயமா. ஆண்களும் வயதுக்கு வரும் பருவமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை இப்படி வெளிச்சத்துக்கு வருவதில்லை.//

      கரெக்டூஊஊஊஊ :)

      //ஜிகினாஸ்ரீ இவன்கூட நட்பாகத்தான் பழகிவருகிறாள் என்பது படிப்பவர்களுக்கு புரியும் அளவுக்கு சீமாச்சு புரிந்து கொள்ளவில்லையே. அதனால்தானே ஒருதலையாக அவளை விரும்புகிறான்.//

      மசமசன்னு மக்குப் பயலாக இருப்பானோ என்னவோ ! :)

      //டெய்லர் அவளைப்பற்றி கேட்டதும் அவனுக்கு ஏன் கோவம் வருகிறது. அதிக அன்பால்தானே. சிறுவயது முதல் ஒன்றாகவே பழகி வருபவர்கள் மனதில் காதல் இருக்காது என்று ஜிகினாஸ்ரீயின் மூலம் தெரியவருகிறது. அதே சீமாச்சு வேறுவிதமாக எண்ணுகிறான். அவளுக்கு வேறு ஒருவருடன் மணம் பேசும்போது வெறும் பார்வையாளனாக மட்டுமே இவனால் கலந்து கொள்ள முடிகிறது.//

      அவனைப்பொறுத்தவரை இது மிகவும் கொடுமைதான் !

      //மனதில் நிறைந்தவளை தத்ரூபமாக ஓவியமாக வரைந்து திருப்தி பட்டுக்கொள்கிறான்.//

      பாவம் .... அவனால் முடிந்தது அது மட்டுமே !

      //அப்படி அவன் மனதில் அவள் இருப்பதை ஜாடை மாடையாக அவளிடம் முதலிலேயே தெரியப்படுத்தி இருந்தால் அவளும் யதார்த்தத்தை உணர்த்தியிருப்பாள்.//

      ஒருவித பயம். ஒருவித கூச்சம். ஒருவித தயக்கம் அவனைத் தடுத்து விட்டது போலும். மேலும் கிணற்றுத்தண்ணீரை ஆறு அடித்துச்சென்றுவிடுமா என்ன, என அவன் ஒருவேளை மாற்றி யோசித்துத் தனக்குள் நினைத்திருக்கலாம்.

      //ஒவ்வொரு கதையும் ரொம்பவே யோசிக்க வைக்குது.//

      இதே கதை 2014-இல் ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு மீள் பதிவாக வெளியிட்டபோது, மேலும் சில கிளுகிளுப்பூட்டும் விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதையும் இப்போதே தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். அதன் இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2014/02/vgk-07.html

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அசத்தலான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  42. என் பக்கம் ஃபாலோவர் கெடஜெட் இணைத்துவிட்டேன். ( தகவலுக்காக)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 27, 2016 at 5:42 PM

      //என் பக்கம் ஃபாலோவர் கெடஜெட் இணைத்துவிட்டேன். ( தகவலுக்காக)//

      தங்களின் வேண்டுகோளின்படி, தங்களின் வலைப்பதிவுக்கு நான் முதல் பின்தொடர்பவராக (FOLLOWER ஆக) ஆகியுள்ளேன். மகிழ்ச்சிதானே ! :)

      வாழ்த்துகள். வாழ்க ! வளர்க !!

      நீக்கு
  43. இதே சிறுகதை சற்றே மெருகூட்டப்பட்டு, ’சிறுகதை விமர்சனப்போட்டி - 2014’ க்கு மீள் பதிவாக என்னால் வெளியிடப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:
    http://gopu1949.blogspot.in/2014/02/vgk-07.html

    பதிலளிநீக்கு
  44. Mail message received today 31.03.2017 at 09.46 Hrs.
    =====================================================

    அன்பின் கோபு ஸார்,

    சீமாச்சுஊஊஊ கதை அல்ல திரைப்படம்.

    மனதோடு ரீல் புகுந்து ஓடியது போலவே இருந்தது. கடைசி டச்....... நச்.... என்று ஆணி அடித்த கதை.

    தகுதிக்கு மீறியும், நிகழ்கால உரிமையையும் இவ்வளவு அழகாக எழுத்தில் ஜிகினாஸ்ரீக்கு சிலை வடித்த விதம் அருமை.

    கதை சிறிது ......... சாரம் பெரிது.

    இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
    பரம ரஸிகை

    பதிலளிநீக்கு