என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 7 / 8 ]

இந்தக்கதையின் முன்பகுதிகளைப் படிக்க:
http://gopu1949.blogspot.com/2011/02/4-8.html பகுதி 1 முதல் 4 வரை
http://gopu1949.blogspot.com/2011/02/5-8.html பகுதி 5

முன்கதை..................... பகுதி 6

சற்று நேரத்தில் கண் விழித்த அந்த ஆசாமி தனக்குக் கீழே உள்ள இருக்கைகள் யாவும் காலியாக இருப்பது கண்டு, மெதுவாக அப்பர் பெர்த்திலிருந்து கீழே இறங்கி, சுதந்திரமாகச் சோம்பல் முறித்து விட்டு, சோப்பு, பேஸ்ட், ப்ரஷ், துண்டு, விபூதி சம்புடம் முதலியனவற்றை கையில் எடுத்துக்கொண்டு, தன் ஜோடி செருப்புகளில் ஒன்று மட்டும் கண்ணுக்குப் புலப்பட, மற்றொன்றைத் தேடி எடுக்க கீழே குனிந்தார். வாராணசி வரை செல்ல வேண்டிய அந்த வண்டி அலஹாபாத்திலிருந்து புறப்பட இன்னும் ஏழு நிமிடங்களே இருந்தன.

சங்கர மடத்தை அடைந்த பட்டாபியின் குடும்பத்தை வரவேற்று, தங்குவதற்கு ரூம் கொடுத்து, பாத்ரூம் டாய்லெட் வசதிகளை விளக்கி விட்டு, “எல்லோரும் ஸ்நானம் செய்து விட்டு, ஆகாரம் முடித்து விட்டு, பயணக் களைப்பு தீர சற்று ஓய்வு எடுத்துக்கோங்கோ. மத்யானமா நான் வந்து, நாளைக்கு திரிவேணி சங்கமம் போய் என்னென்ன கர்மாக்கள் எப்படி எப்படி செய்யணும், கங்கா ஜலத்தை சின்னச் சின்ன சொம்புகளில் அடைத்து சீல் செய்து கொள்வது எப்படி; பிறகு மறுநாள் காசிக்குப் போய் தம்பதி பூஜை செய்வது, புனித கங்கையின் பல்வேறு ஸ்நான கட்டங்களில், படகில் சென்று பித்ருக்களுக்கு பிண்டம் போடுவது, காசி விஸ்வநாதர் + விசாலாக்ஷியைத் தரிசனம் செய்வது, காலபைரவர் கோவிலுக்குப் போய் மந்திரம் சொல்லி காசிக்கயிறு அணிவது, அதற்கு மறுநாள் கயா போய், கயா ஸ்ரார்த்தம் செய்வது முதலியனவற்றைப் பற்றி விபரமாகச் சொல்லுகிறேன்” என்று சொல்லி விட்டு, நித்யப்படி பூஜை செய்ய தன் பூஜை ரூமுக்குள் புகுந்தார், சங்கரமடத்து சாஸ்திரிகள்.

அவர் இவ்வாறு சுருக்கமாகச் சொல்லிவிட்டு தன் நித்தியப்படி பூஜை செய்யச் சென்றதும் ,பட்டாபிக்கு ஏதோ சுருக்கென்றது. ரத்தக் கொதிப்பு உச்சநிலைக்கு எகிறியது. ரயிலின் ஓரமாக உள்ளடங்கி வைத்த அஸ்திக் கலசத்துடன் கூடிய அட்டைப்பெட்டி, ரயிலிலிருந்து இவர்களுடன் கொண்டு வரப்படவில்லை.

சென்னையை விட்டுக் கிளம்பும் போது, தூக்கி வரமுடியாமல் மிகவும் கனமாக இருந்த ஒரு பெரிய பை, இப்போது ரயிலில் வரும் போது பங்கஜத்தால், எளிதில் தூக்க செளகர்யமாக வேறு ஒரு காலிப் பையின் உதவியினால், இரண்டாக மாற்றப்பட்டதால், மொத்த சாமான்களின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னையை விட்டுப் புறப்படும் போது மொத்தம் 12 பேக்கிங் ஆக இருந்தவை, ரயிலில் வரும் போது பங்கஜத்தால் 13 ஆக மாற்றப்பட்ட விபரம் யாருக்குமே தெரிய நியாயமில்லை. பங்கஜத்திற்கும் அது ஞாபகம் வராமல் போய் விட்டது.

அதிகாலை தூக்கக் கலக்கத்திலும், ரயிலை விட்டு இறங்க வேண்டும் என்ற அவசரத்திலும், அந்த ஆசாமி முகத்தில் மீண்டும் விழிக்கக் கூடாது என்ற எண்ணத்திலும், அஸ்திக் கலசம் வைத்துக் கட்டப்பட்ட அட்டைப் பெட்டி மட்டும், ரயிலில் உட்காரும் இடத்திற்கு கீழே மிகவும் உள்ளடங்கி ஒரு ஓரமாக இருந்ததால், ரயிலிலேயே மறந்து வைத்து விட்டு, மீதி சாமான்களை மட்டும் எண்ணி மொத்தம் 12 அயிட்டங்கள் மிகச் சரியாக உள்ளன என்ற திருப்தியில் அலஹாபாத் ஸ்டேஷன் வந்ததும், இறங்கி டாக்ஸி பிடித்து சங்கர மடத்துக்கு வந்து விட்டிருந்தனர்.

கொஞ்சம் கூட, பொறுப்போ கவனமோ இல்லை என, பங்கஜமும் பட்டாபியும் ஒருவர் மேல் ஒருவர் பழி போட்டுக் கொண்டிருந்தனர்.

குழந்தைகள் ரவியும் கமலாவும், சங்கர மடத்து வாசலில் புல்வெளியில் படுத்திருந்த பசுக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பசு ஒன்று தன் முதுகில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களையும், கொசுக்களையும் விரட்டி விரட்டி அடிக்க, தன் நீண்ட வாலைச் சுழட்டிச் சுழட்டி அடிப்பதையும், காதுகள் இரண்டையும் ஆட்டிக்கொண்டே இருப்பதையும் , அதன் கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள சிறிய மணி ஒன்று, அந்தப் பசுவின் அசைவுகளுக்கு ஏற்ப எழுப்பும் இனிய ஒலியையும், ஆராய்ச்சி செய்த வண்ணம் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர்.

பெரியவள் விமலா மட்டும், வந்த இடத்திலும், பட்டாபி, பங்கஜத்தின் வாய்ச் சண்டை முற்றி கைச் சண்டையாக மாறாதவாறு, அவர்களைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

கை நிறையப் பணம் உள்ளது. போதாக்குறைக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட், ஏ.டி.எம். கார்டு எல்லாம் உள்ளது. ரயிலில் தவற விட்ட, தன் அன்புத் தந்தையின் அஸ்தியை இந்தப் பணத்தால் வாங்கிவிட முடியுமா? பார்ஸலில் வரவழைக்கத் தான் முடியுமா? பட்டாபி கண் கலங்கினார்.

இங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து, வாராணசி ஸ்டேஷன் வரை ரயிலைத் துரத்திப் பிடித்துப் பார்த்து விட்டு வரலாமா? அதற்குள் யாராவது அதை எடுத்துக் கொண்டு போய் இருப்பார்களோ? அதைப் பிரித்துப் பார்த்து ஏமாந்து போய் குப்பை என்று தூக்கிப் போட்டு ஒருவேளை உடைத்திருப்பார்களோ? பட்டாபிக்கு இவ்வாறு பலவித எண்ணங்கள் தோன்றி வந்தன.

எதற்காக காசிக்குப் புறப்பட்டு வந்தோமோ, அந்தக் காரியமே நடக்குமோ நடக்காதோ என்ற கவலையில் அடிவயிற்றைக் கலக்கிய பட்டாபிக்கு, ஸ்நானம் செய்யவோ, ஆகாரம் செய்யவோ எதுவும் தோன்றாமல் பித்துப் பிடித்தாற்போல ஆகி, தவியாய்த் தவிக்க ஆரம்பித்தார்.

எப்படியும் ஒரு டாக்ஸி பிடித்துப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து ரத்தக் கொதிப்பு மாத்திரை ஒன்றுக்கு இரண்டாகப் போட்டுக் கொண்டு , கிளம்பத் தயாராகி விட்டார்.

“பூஜை அறையிலிருக்கும் சங்கர மடத்து சாஸ்திரிகள் வெளியே வரட்டும். அவரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போங்கோ” என்று பட்டாபியின் பதட்டத்துடன் கூடிய பயணத்தை சற்றே ஒத்தி வைத்தாள் பங்கஜம்.


தொடர்ச்சி .................. பகுதி 7 இதோ .... இப்போது :

தன் நித்யப்படி பூஜையை முடித்துக் கொண்டு வெளியே வந்த சங்கரமடத்து சாஸ்திரிகளிடம் விவரம் சொல்ல பட்டாபியும், பங்கஜமும் நெருங்கவும், மடத்து வாசலில் யாரோ ஆட்டோவில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.

சங்கர மடத்து வாசலில் புல்வெளிகளில் படுத்திருந்த பசுமாடுகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ரவி & கமலா வின், கவனம் தங்கள் அருகில், படபடவென்ற சப்தத்துடன் வந்து நின்ற ஆட்டோ பக்கம் திரும்பியது.

“கோன் ஐஸ் வாங்கித் தந்த, ‘உடம்பெல்லாம் உப்புச் சீடை’ த் தாத்தா இங்கேயும் வந்துட்டார்டீ” எனக் கத்திக்கொண்டே, ரவியும்
கமலாவும், சங்கர மடத்தின் உள்பக்கம் இருந்த விமலாவிடம் சொல்ல வேகமாக ஓடி வந்தனர்.

“வாங்கோ, வாங்கோ, வரணும்! தங்கள் வரவு நல்வரவு ஆகணும்., உட்காருங்கோ! என நாற்காலியைப் போட்டு, மின் விசிறியைத் தட்டி விட்டு, தன் மேல் அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கொண்டு, மிகவும் பெளவ்யமாக,
வந்தவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார், சங்கரமடத்து சாஸ்திரிகள்.

வந்தவர் வேறு யாருமில்லை. இவர்களுடன் கூடவே ரயிலில் வந்த பயணி (பிராணி) தான். அவர் கையில் அஸ்திக்கலசம் வைத்துக் கட்டப்பட்ட இவர்களின் அட்டைப்பெட்டி பார்ஸல், இருந்தது.

இதைப் பார்த்த பட்டாபிக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. இருக்காதா பின்னே! அவருடைய தந்தையின் உயிர் அல்லவா அடங்கி ஒடுங்கி அதனுள் சாம்பலாக உள்ளது!


அந்தப் பவித்ரமான வஸ்துவை இந்த அருவருப்பான மனுஷன் கையால் தூக்கி வரும்படி ஆகிவிட்டதே என்ற சிறு வருத்தமும் மனத்தின் ஆழத்தில் ஏற்பட்டது, பட்டாபிக்கு.


“இந்த அட்டைப்பெட்டியை மறந்து போய் ரயிலிலேயே வைச்சுட்டு, நீங்கள் எல்லோரும் அலஹாபாத் ஸ்டேஷனில் இறங்கிட்டேள் போலிருக்கு. நான் என் பாத ரக்ஷைகளை (செருப்புகளை) எடுக்கக் குனிந்த போது தான் இது என் கண்ணில் பட்டது.

உங்களுடையாகத் தான் இருக்கும்; இங்கு எங்காவது தான் தங்கியிருப்பேள்னு யூகித்துக் கொண்டு வந்தேன்.

நான் வாராணசி வரை போக வேண்டியவன். ரயில் கிளம்பாததால், இந்த அட்டைப் பெட்டியை உத்தேசித்து, நானும் அலஹாபாத்திலேயே இறங்கி விட்டேன்.

நல்லவேளையாக உங்களையும் மறுபடியும் பார்த்து விட்டேன். இந்தாங்கோ ஜாக்கிரதை” என்று சொல்லி பட்டாபியிடம் நீட்டினார்.


கைகள் நடுங்க நன்றியுடன் வாங்கிக்கொண்டார் பட்டாபி.


அட்டைப் பெட்டியில் உள்ள பொருள் அஸ்திக்கலசம் என்பதை சங்கர மடத்து சாஸ்திரிகள் மூலம் கேள்விப்பட்ட அந்தப் பெரியவர், அதைத் தான் தூக்கி வந்ததால் ஏற்பட்ட தீட்டுக்கழிய, சாஸ்திரப்படி ஸ்நானம் செய்ய மடத்தின் கொல்லைப்புறம் இருந்த கிணற்றடிக்கு விரைந்தார்.


அதற்குள், அந்தப் பெரியவரின் அருமை பெருமைகளை சங்கர மடத்து சாஸ்திரிகள், பட்டாபி தம்பதிக்கு விளக்க ஆரம்பித்தார்.


“நான்கு வேதங்களும், அனைத்து சாஸ்திரங்களும் கரைத்துக் குடித்தவர். நானே அவரிடம் வேதம் படித்தவன். என்னைப் போல எவ்வளவோ பல்லாயிரம் பேர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுத்த மஹான். எங்களுக்கெல்லாம் அவர் தான் குருநாதர்.

அவா விளையாட்டுக்குக்கூட பொய் பேசாதவா. எதற்கும் கோபமே படாத தங்கமான குழந்தை மனஸு அவாளுக்கு.

அவாளுக்கு சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி பக்கம், காவேரிக்கரை ஓரம் ஏதோ ஒரு கிராமம். ஏழு தலைமுறைகளா வேதம் படித்து வரும் குடும்பம். வேதத்தை ரக்ஷிக்கும் பரம்பரையில் வந்தவா !

சங்கர மடத்து ஆச்சார்யாள், ஜகத்குரு மஹாபெரியவா ஆக்ஞைப்படி, கடந்த பல வருஷங்களாக இந்தப் பக்கமே தங்கி விட்டார்கள். இந்த கங்கைக் கரைப் பக்கம், இவாளைத் தெரியாதவாளே கிடையாது.

வேதம் படிச்சு முடிச்சவாளுக்கெல்லாம் “வித்வத் சதஸ்” ன்னு, ஒரு பெரிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பரீட்சை மாதிரி நடக்கும். அதில் இவா தான் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மாதிரி உட்கார்ந்து, தப்பாச் சொல்றவாளை டக்குனு பிடிச்சுத் திருத்திக் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு ரொம்ப பாண்டித்யம் உள்ளவா !

ஒரு ஈ எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்க மாட்டார்கள். லோகத்திலே உள்ள எல்லா ஜனங்களும் எல்லா ஜீவராசிகளும் க்ஷேமமாய் இருக்கணும்னு எப்போதுமே பிரார்த்திப்பவர்கள்.


இந்த மஹான் உங்களுடன் ஒரே ரயிலில், ஒரே கம்பார்ட்மெண்டில், பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் பயணம் செய்தது நீங்கள் செய்த ஒரு பெரிய பாக்யம்தான்னு சொல்லணும்.

நீங்களோ அல்லது உங்களின் அப்பாவோ செய்த புண்ணியம் தான், நீங்கள் ரயிலில் தவற விட்ட உங்க அப்பாவின் அஸ்திக்கலசத்தை, இந்த வேதவித்தாகிய ஒரு பெரிய மஹான், தன் கைப்படவே தூக்கி வரும்படி நேர்ந்துள்ளது.

கங்கையில் அதைக் கரைப்பதற்கு முன்பு, இந்த ஒரு பெரிய மஹான் கைப்பட்டுள்ளதால், உங்கள் தகப்பனாருக்கு சொர்க்கம் தான் என்பது இப்போது உறுதியாகி விட்டது, பாருங்கோ !

அந்த அட்டைப்பெட்டியில் உள்ளே உள்ளது என்ன ஏது என்றே தெரியாமல், பத்திரமாக உங்களிடம் சேர்த்திருக்கிறா பாருங்கோ! ; எல்லாம் பகவத் சங்கல்ப்பம்.

நீங்கள் மிகவும் ஸ்ரத்தையாக காசிக்கு வந்து கங்கையில் உங்கள் தந்தையின் அஸ்தியைக் கரைக்கணும்னு வந்த காரியம் வீண் போகவில்லை, பாருங்கோ !

நான் அவாள்ட்ட வேதம் படிக்கும் போது, மிகவும் தேஜஸுடன் அழகாக மினுமினுப்பாக இருந்தவர் தான் இந்த என் குருநாதராகிய மஹான்” எனச் சொல்லி, தான் அவரிடம் பாடசாலையில் படிக்கும்போது எடுக்கப் பட்ட (கருப்பு வெள்ளை) க்ரூப் போட்டோ ஒன்றைக் காட்டினார்.

“ஏதோ ஒரு பூர்வ ஜன்ம பாவம்; கடந்த ரெண்டு வருஷமாத்தான் இதுபோல அவருடைய வெளித் தோற்றத்தை இப்படி ஆக்கியுள்ளது” என மிகவும் வருத்தத்துடன் சொல்லி முடித்தார்.

சங்கர மடத்து சாஸ்திரிகள் வாயால், ரயிலில் தன்னுடன் கூடவே பயணித்தவரின் மஹிமைகள் பற்றிச் சொல்லுவதை உன்னிப்பாகக் கேட்டதும்,
யாரோ ஒரு சாட்டையால் தன்னை சுழட்டிச் சுழட்டி அடிப்பது போல உணர்ந்தார், பட்டாபி.

தொடரும்




32 கருத்துகள்:

  1. ஆரம்பரப் பகுதியிலிருந்து இதுவரை தொடர்ந்து படித்து விட்டேன். படிப்பவரும் உங்கள் கூட இருந்து எல்லாவற்றையும் அனுபவிக்கிற மாதிரி எப்படியோ அந்த இயல்புச் சூழ்நிலையை கொண்டு வந்து விடுகிறீர்கள்.. அந்த சூட்சுமம் தான் எழுதி எழுதிப் பழகிப்போன உங்கள் எழுத்தின் வெற்றி.

    தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து வருகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நம்முடைய சின்னத்தனத்தால், நாம்
    நல்ல விஷயங்களையும் நல்ல
    மனிதர்களையும் மதிக்க தவறி விடுகின்றோம்.

    வாசலை திறந்ததும் பவழமல்லியின் நறுமணத்தை
    சுமந்து வரும் தென்றல் போன்ற மிக அழகான நடையுடன்
    கதை செல்கிறது

    பதிலளிநீக்கு
  3. கதையின் முக்கியமான பகுதி இது தான். நமது மூடத்தனத்தால், வெளித்தோற்றத்தினை வைத்து, ஒருவரை எடைபோட்டது தவறு என்று பட்டாபி இப்போதாவது உணர்ந்தால் சரி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கட்டத்துக்கு கதை வந்து விட்டது. அடுத்த பகுதி முடிவா சார்?

    பதிலளிநீக்கு
  5. மூச்சு வாங்குகிறது. ரயிலை தவறவிட்டு அடுத்த ஸ்டேசனில் ஒடி வந்து ஏறுகிறேன். எக்ஸ்ப்ரெஸ் வேகமெடுக்கத் தொடங்கி விட்டது.

    பதிலளிநீக்கு
  6. சார்! நீங்கள் ஏன் இன்னும் இன்ட்லி
    தமிழ்மணம் போன்றவற்றை உங்கள்
    வலைப்பூவில் இணைக்காமல் இருக்கிறீர்கள்?

    அவ்வாறு செய்வதால் உங்களின் பதிவுகள் இன்னும்
    பலரை சென்றடையும்.அது மட்டுமின்றி
    தமிழ்மணத்தில் பல விருதுகள் அறிவிப்புகள் வரும்.
    நீங்கள் அவற்றுக்கெல்லாம் தகுதியானவர் என்பது
    எனது கருத்து

    பதிலளிநீக்கு
  7. raji said...//
    //சார்! நீங்கள் ஏன் இன்னும் இன்ட்லி
    தமிழ்மணம் போன்றவற்றை உங்கள்
    வலைப்பூவில் இணைக்காமல் இருக்கிறீர்கள்?//

    அவைகளைப் பற்றியெல்லாம் அதிகம் அறியாதது தான் காரணம். இது விஷ்யங்களில் நான் ஒரு LKG படிக்கும் குழந்தை போலத்தான். உங்களைப் போன்ற யாராவது என் மீது கருணை காட்டி, விலாவரியாக எனக்குப் புரிவது போல மிகத் தெளிவாக (stage by stage) என்ன செய்யணும், எப்படிச் செய்யணும் என்று பொறுமையாக ஒரு மெயில் கொடுத்து உதவினால், அதன்படி அப்படியே செய்து விடுவேன்.

    என் மெயில் விலாசம்: valambal@gmail.com
    Phone 0431-2708138 & Mobile : 9443708138

    தங்களுக்கு இதில் விருப்பம் இருந்தாலும், எதுவும் ஆட்சேபணை இல்லை என்றாலும், மெயில் கொடுத்து உதவுங்கள்; அல்லது இது போலவே பின்னோட்டம் ஒன்றில் விளக்குங்கள்.

    அவசரமில்லை. வரும் 20.02.2011 அன்று வீட்டில் ஒரு சுப காரியம் நடக்க உள்ளது. அதனால் நான் 22.02.2011 வரை கொஞ்சம் பிஸியாக இருப்பேன்.
    அதன் பிறகு தங்கள் பதில் பார்த்து ஏதாவது செய்வோம்.

    //அவ்வாறு செய்வதால் உங்களின் பதிவுகள் இன்னும்
    பலரை சென்றடையும்.அது மட்டுமின்றி
    தமிழ்மணத்தில் பல விருதுகள் அறிவிப்புகள் வரும்.
    நீங்கள் அவற்றுக்கெல்லாம் தகுதியானவர் என்பது
    எனது கருத்து //

    தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, நல்லெண்ணம் முதலியன எனக்கு மிகவும் வியப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது.

    இந்த ஆத்மார்த்தமான நட்பை விட பெரிய விருதுகள் ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

    மேலும், இதுவரை பல விருதுகள், நான் சற்றும் எதிர்பார்க்காமலேயே என்னை வந்தடைந்ததில், எனக்கு மேன்மேலும் எதிர்பார்ப்புகள் எதுவும் பெரியதாக இல்லை.

    ஆனால் என் படைப்புகள் பல ஆர்வமுள்ள வாசகர்களைச் சென்று அடைய வேண்டும், என் எழுத்துக்கள் அவர்களை மகிழ்விக்க வேண்டும், அவர்களிடமிருந்து என் படைப்புகளுக்கு நிறை & குறை பற்றிய feed-back வரவேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் உண்டு.

    தாங்கள் என் மீது காட்டும் மிகுந்த அக்கரைக்கும், தாங்கள் என் நலம் விரும்பியாக இருந்து வருவதற்கும், நான் வணங்கும் தெய்வத்திற்கு நன்றி சொல்லுகிறேன். மற்றவை தங்கள் பதில் பார்த்து, 22/02/2011 க்குப் பிறகு.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  8. //நான் ஒரு LKG படிக்கும் குழந்தை போலத்தான்.//


    சார்,தாங்கள் வயதான குழந்தைதான் சார் ( ஐஸ் வைப்பதற்காக சொல்லவில்லை ) ,தங்களின் பின்னூட்டம்,மற்ற பதிவுகளில் தங்களின் பின்னூட்டம் இடும் விதம்,தங்கள் பதிவை விட இந்த வயதில் தங்களின் ஆர்வம்தான் எனக்கு அதிகம் தெரியும்.இன்டலி,தமிழ்மணத்தில் இணையாமலே இத்தனை உள்ளங்களை கவர்ந்திழுத்தமைக்கு பாராட்டுக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  9. ஜீவி said...
    // ஆரம்பரப் பகுதியிலிருந்து இதுவரை தொடர்ந்து படித்து விட்டேன். படிப்பவரும் உங்கள் கூட இருந்து எல்லாவற்றையும் அனுபவிக்கிற மாதிரி எப்படியோ அந்த இயல்புச் சூழ்நிலையை கொண்டு வந்து விடுகிறீர்கள்.. அந்த சூட்சுமம் தான் எழுதி எழுதிப் பழகிப்போன உங்கள் எழுத்தின் வெற்றி.

    தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து வருகிறேன். நன்றி.//

    தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

    சூட்சுமம என்று எதுவும் கிடையாது. நான் எதுவுமே தெளிவாகவும், சுவையாகவும், நகைச்சுவை கலந்ததாகவும் இருந்தால் மட்டுமே கேட்கவோ, படிக்கவோ விரும்புவேன்.

    அது போலவே என் படைப்புகள் மற்றவர்களுக்கும் தெளிவாகவும், சுவையாகவும், நகைச் சுவை கலந்ததாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் தர வேண்டும் என்று நினைத்து, சற்று நீட்டி முழக்கி எழுதுகிறேன். அவ்வளவு தான்.

    அது போல, (எனக்கு பரிசளிக்கப் பட்ட ஒரு சில புத்தகங்கள் தவிர) பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் எதுவும் நான் இதுவரை வாங்கிப் படித்ததும் கிடையாது.

    நான் சிறுகதைகள் எழுத ஆரம்பித்ததே சமீபத்தில் தான். (முதல் கதை வெளியிடப்பட்டது 2005 கடைசியில்) அந்த ஆரம்பமே ஒரு பெரிய கதை. பிறகு நேரம் கிடைக்கும் போது அது பற்றியும் எழுதுவேன்.

    தங்கள் பதிவினில் பிரபல எழுத்தாளர்களைப் பற்றி அவ்வப்போது எழுதுகிறீர்கள். அந்தப் பகுதி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தொடர்ந்து அது போல எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  10. raji said...
    // வாசலை திறந்ததும் பவழமல்லியின் நறுமணத்தை சுமந்து வரும் தென்றல் போன்ற மிக அழகான நடையுடன் கதை செல்கிறது //

    உங்களின் பின்னூட்டத்தில் ஒரேயடியாக கும்மென்று வாசனை தூக்கலாக உள்ளதே என்று நினைத்து வியந்தேன்.

    பிறகு தான் தெரிந்தது, ஸ்ரீ ராமபக்த ஹனுமான் வாஸம் செய்யும் வேர்களையுடைய பாரிஜாதப் பூவின் மகிமை என்று.

    இதே போல ப்வழமல்லி, நந்தியாவட்டை, செம்பருத்தி முதலிய செடிகள் வாசலில் பூத்துக் குலுங்கிய தெற்கு பார்த்த வீட்டில் குடியிருந்தோம் அந்த நாட்களில் BHEL Quarters இல். தென்றலையும் அனுபவித்தோம்.

    இப்போது சொந்த வீடு என்ற பெயரில், Heart of the City இல், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாம் தளத்தில். என்ன செய்ய, எல்லாம் அவன் செயல்!

    பதிலளிநீக்கு
  11. வெங்கட் நாகராஜ் said...
    // கதையின் முக்கியமான பகுதி இது தான். நமது மூடத்தனத்தால், வெளித்தோற்றத்தினை வைத்து, ஒருவரை எடைபோட்டது தவறு என்று பட்டாபி இப்போதாவது உணர்ந்தால் சரி.//

    ஆமாம் வெங்கட். பட்டாபி தன் தவறை உணர்ந்து விடுவார் என்றே நம்புவோம். முடிவுப் பகுதி இதை விட முக்கியமானதாகவும் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  12. middleclassmadhavi said...// அருமை! //
    நன்றி. தங்கள் பின்னூட்டமும் “அருமை” மட்டுமே !

    பதிலளிநீக்கு
  13. கோவை2தில்லி said...//அருமையான கட்டத்துக்கு கதை வந்து விட்டது.//
    அடுத்த கட்டம் கூட, இதைவிட இன்னும் அருமையான இருப்பதாக நீங்கள் நினைத்தாலும் நினைக்கலாம்.
    // அடுத்த பகுதி முடிவா சார்? //
    ஆமாம் மேடம். ஆரம்பித்து விட்டோம், ஏதாவது ஒரு முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும்? நல்லபடியாக மங்கலம் பாடி முடித்து விடுவோம்.

    பதிலளிநீக்கு
  14. சிவகுமாரன் said...
    //மூச்சு வாங்குகிறது. ரயிலை தவறவிட்டு அடுத்த ஸ்டேசனில் ஒடி வந்து ஏறுகிறேன். எக்ஸ்ப்ரெஸ் வேகமெடுக்கத் தொடங்கி விட்டது.//

    அமைதி,அமைதி, சற்றே மூச்சுவிட்டுக் கொள்ளுங்கள் ஓடும் ரெயிலில் இனி எப்போதுமே ஏறாதீர்கள். அது சமயத்தில் ஆபத்தாகி விடும்.

    இந்த எக்ஸ்பிரஸ் ரயில் இறுதியாக நிற்கும் போது, புகழ்பெற்ற கவிஞரான உங்கள் விமரிசனத்திற்கு, ஏதோ ஒரு பாடலோ, கவிதையோ, தத்துவமோ, தத்துப்பித்தானதோ, எதோ ஒன்று என்னால் கிறுக்கப்பட்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. thirumathi bs sridhar said...
    //நான் ஒரு LKG படிக்கும் குழந்தை போலத்தான்.//
    சார்,தாங்கள் வயதான குழந்தைதான் சார் ( ஐஸ் வைப்பதற்காக சொல்லவில்லை ), தங்களின் பின்னூட்டம், மற்ற பதிவுகளில் தங்களின் பின்னூட்டம் இடும் விதம், தங்கள் பதிவை விட இந்த வயதில் தங்களின் ஆர்வம்தான் எனக்கு அதிகம் தெரியும். இன்டலி, தமிழ்மணத்தில் இணையாமலே இத்தனை உள்ளங்களை கவர்ந்திழுத்தமைக்கு பாராட்டுக்கள் சார். //

    என்னைப்பற்றி அதிகம் எடை போட்டுள்ள (என் எடை சற்று அதிகம் தான் என்று மருத்துவர்களே சொல்லி விட்டனர்) தங்களுக்கு என் முதற்கண் நன்றிகள்.

    “அருமை”; ”அற்புதம்”, “ம்...அப்புறம்”, “ம்ம்ம்ம்ம்” என்ற ஓரிரு வார்த்தைகளில், பின்னுட்டம் எழுத எனக்கென்னவோ மனம் வருவதில்லை. [தாராள மனம் கொண்டவன் என் உடம்பைப் போலவே!]

    சற்று விபரமாக, ஒரு மாறுதலாக, பதிவு செய்தவருக்கும் / கருத்துக் கூறியவருக்கும், சற்றே மனதை மகிழ்விப்பதாக குறிப்புகள் எழுதுவதால், சற்று நேரம் கூடுதலாக செலவழியுமே அன்றி, வேறு எதுவும் நமக்கு நஷ்டம் இல்லை.

    நம் தொடர்புகள் குறிப்பிட்ட ஒரு சிலரோடு மட்டுமே, தற்சமயம் இருந்து வருவதால், இவ்வாறு பொறுமையாக என்னால் செய்து காட்ட முடிகிறது.

    குறைவான தொடர்புகளே ஆனாலும், நிறைவான நட்பு தொடர்ந்தால் சரி என்றும் தோன்றுகிறது.

    இதெல்லாம் எவ்வளவு நாட்களுக்கு பொறுமையாகச் செய்ய முடியும் என்றும் தோன்றுகிறது.

    முடிந்த வரை முயற்சிப்போம். பிறகு நாளை நடப்பதெல்லாம் அவன் செயல். அன்புடன்.....

    பதிலளிநீக்கு
  16. இந்த கதை ஒரு தெளிவான நீரோடை. அதன் மூலம் காவிரியையும் கங்கையையும் இணைத்த பெருமை உங்களையே சாரும். கங்கை மண்ணுக்குச் சென்று காவிரி மண்ணின் கல்வி பெருமையை விளக்கிய இடத்தில் நீர் நிஜமாகவே கலையுலகம் தந்த காவிரிக் கரை மன்னன் .

    கணேஷ்.

    பதிலளிநீக்கு
  17. Ganesh said...//
    இந்த கதை ஒரு தெளிவான நீரோடை. அதன் மூலம் காவிரியையும் கங்கையையும் இணைத்த பெருமை உங்களையே சாரும். கங்கை மண்ணுக்குச் சென்று காவிரி மண்ணின் கல்வி பெருமையை விளக்கிய இடத்தில் நீர் நிஜமாகவே கலையுலகம் தந்த காவிரிக் கரை மன்னன் .

    கணேஷ்.//

    அன்புள்ள கணேஷ்,

    உனக்கும், உன் மனைவி, குழந்தைகளுக்கும் அநேக ஆசீர்வாதங்கள்.

    இன்று 15.02.2011 அன்று உன் மெயில் பார்த்த பிறகு தான் இந்த பின்னூட்டத்தைப் படித்தேன்.

    உன்னுடைய பின்னூட்டம் என்னை மேலும் உற்சாகப் படுத்துவதாக அமைந்துள்ளது.

    கடைசியிலிருந்து ஏழாவது வார்த்தை “நீர்” மிகப் பொருத்தமாக பொறுக்கி எடுத்துப் போட்டுள்ளது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

    கங்கை நீர் புனிதம்,
    காவிரி நீர் புண்ணியம்,
    என்னை நீ குறிப்பிட்ட நீர்,
    மரியாதை நிமித்தம்.

    பதிலளிநீக்கு
  18. யாரோ ஒரு சாட்டையால் தன்னை சுழட்டிச் சுழட்டி அடிப்பது போல உணர்ந்தார், பட்டாபி.//
    உணர்ந்து திருந்தினால் சரி.
    கங்கையில் புனிதமாய காவிரி என்பார்களே!!

    பதிலளிநீக்கு
  19. இராஜராஜேஸ்வரி said...
    //யாரோ ஒரு சாட்டையால் தன்னை சுழட்டிச் சுழட்டி அடிப்பது போல உணர்ந்தார், பட்டாபி.//
    உணர்ந்து திருந்தினால் சரி.
    கங்கையில் புனிதமாய காவிரி என்பார்களே!!//

    மிகவும் ரஸித்துப் படித்து ரஸித்த ஒரு சில வரிகளை என்னைப் போலவே சுட்டிக் காட்டி எழுதும் உங்கள் பாணி எனக்குப் பிடிச்சிருக்கு.

    ஆம் கங்கையில் புனிதமாய் காவிரி என்றும் சொல்லுவார்கள். நானும் கேட்டிருக்கிறேன். ந்ன்றி.

    பதிலளிநீக்கு
  20. கதை இப்படி தான் போகும் என்று ஒரு யூகம் இருந்தது... ஆனால் எல்லாததையும் தூக்கி சாப்பிடுவது போல இன்னும் பிரமிப்பில் இருந்து மீள இயலவில்லை எனக்கு...

    சாஸ்திரியே இவரிடம் பாடம் பயின்றவரா?
    வேதங்களை கரைத்து குடித்தவரா?
    அவரைப்பற்றிய விஷயங்கள் எல்லாம் சாஸ்திரி மூலம் அறியவரும்போது குடத்திலிட்ட விளக்காய் எத்தனை தன்னடக்கத்துடன் இருந்திருக்கார் என்று மனதில் அவரை வணங்க தோன்றுகிறது....

    பட்டாபி திருந்த பகவான் எப்படி எல்லாம் காட்சிகள் அமைக்கிறார்....

    சாஸ்திரியின் வார்த்தைகள் இப்போது சுழலும் சாட்டையாய் பட்டாபி முன் நின்று கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டது...

    இனி அடுத்த காட்சி பட்டாபி பங்கஜம் இருவரும் சாஷ்டாங்கமாய் அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்...

    மனிதராய் பிறக்கும் எல்லோரும் தவறு செய்வது இயல்பு... ஆனால் செய்த தவற்றை ஏற்று திருத்திக்கொள்வது பெரிய விஷயம்....

    பார்ப்போம் கதையின் இறுதி காட்சிக்கு வந்துவிட்டோம் என்று தெரிந்துவிட்டது...

    பட்டாபி கூனிக்குறுகி நிற்கும் கட்டம்....

    அருமையான நடை... அற்புதமான விஷயங்கள் சாஸ்திரி மூலமாக கதையாசிரியர் எல்லோருக்கும் அறியச்செய்தமை....

    அடுத்த பகுதி பார்க்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK To மஞ்சு

      //மனிதராய் பிறக்கும் எல்லோரும் தவறு செய்வது இயல்பு... ஆனால் செய்த தவற்றை ஏற்று திருத்திக்கொள்வது பெரிய விஷயம்....//

      //அருமையான நடை... அற்புதமான விஷயங்கள் சாஸ்திரி மூலமாக கதையாசிரியர் எல்லோருக்கும் அறியச்செய்தமை ....

      அடுத்த பகுதி பார்க்கிறேன்....//

      மிகவும் சந்தோஷம் ..... மஞ்சு.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  21. அருமையான கதைக்கு அருமையான பின்னூட்டம்

    //இந்த கதை ஒரு தெளிவான நீரோடை. அதன் மூலம் காவிரியையும் கங்கையையும் இணைத்த பெருமை உங்களையே சாரும். கங்கை மண்ணுக்குச் சென்று காவிரி மண்ணின் கல்வி பெருமையை விளக்கிய இடத்தில் நீர் நிஜமாகவே கலையுலகம் தந்த காவிரிக் கரை மன்னன் .//

    உருவு கண்டு எள்ளாமை வேண்டும். - இதை பட்டாபி புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANI February 4, 2013 at 1:21 AM

      G.GANESH [SOUDI ARABIA] said....
      *****இந்த கதை ஒரு தெளிவான நீரோடை. அதன் மூலம் காவிரியையும் கங்கையையும் இணைத்த பெருமை உங்களையே சாரும். கங்கை மண்ணுக்குச் சென்று காவிரி மண்ணின் கல்வி பெருமையை விளக்கிய இடத்தில் நீர் நிஜமாகவே கலையுலகம் தந்த காவிரிக் கரை மன்னன் .*****

      //அருமையான கதைக்கு அருமையான பின்னூட்டம்//

      Madam, வாங்கோ. தாங்கள் பாராட்டியுள்ள இந்தப்பின்னூட்டம் கொடுத்துள்ளது யார் தெரியுமா?

      என்னுடைய சொந்த பெரிய அக்காவின் ஐந்தாவது பிள்ளை.

      என் அக்காவுக்கு 6 பிள்ளைகள் + 2 பெண்கள். எல்லோருக்கும் திருமணம் ஆகி உலகின் பல்வேறு ஊர்களில் செளக்யமாக உள்ளார்கள். இவர் செளதியில் இருக்கிறார்.

      என் அக்காவும் அத்திம்பேரும் [ஸதாபிஷேகம் ஆன தம்பதி] இன்றும் என் தொடர்பு எல்லைக்குள் தான் உள்ளனர். நான் வசிக்கும் தெருவிலேயே தான் குடியிருக்கிறார்கள்.

      நீங்கள் இவ்விடம் என்னைப்பார்க்க வரும்போது கூட்டிப்போய் காட்டுவேன்.

      நான் என் பெரிய அக்காவுக்கு மூத்த பிள்ளைபோல ... அவ்வளவு பிரியம் என் மீது அவளுக்கு ......... நல்ல தாராள மனசு. மிகவும் அனுபவசாலி மற்றும் சாமர்த்தியசாலி. படிக்காத மேதை அவள்.

      //உருவு கண்டு எள்ளாமை வேண்டும். - இதை பட்டாபி புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்.//

      அப்படியா, அச்சா, பஹூத் அச்சா !!

      நீக்கு
  22. கதையின் நல்ல திருப்பம் இங்கேதான் ஏற்படுகிறது. பட்டாபியின் மனச்சாட்சி அவனைச் சுடுகின்ற சூட்டுக்கு கங்கையிலேயே மூழ்கினால்தான் தணியும்.

    பதிலளிநீக்கு
  23. யாரையுமே உருவத்தைப்பார்த்து எடை போடக்கூடாது என்று புரிய வைத்த பகுதி.

    பதிலளிநீக்கு
  24. ஒரு சாதாரண மனிதராயிருந்தாலும் அவருடைய புறத்தோற்றத்தைக் கொண்டு அவமதித்தல் கூடாது என்றிருக்கையில் ஒரு பெரிய மகானை... வேதவித்துவை இப்படி அவமரியாதை செய்த பட்டாபியும் அவர் மனைவியும் இப்போது முகத்தை எங்கு கொண்டுவைத்துக்கொள்வார்கள்? கங்கையில் கரைக்குமுன்பே மகானின் கைபட்டதால் அவருடைய தந்தையார்க்கு சொர்க்கம் நிச்சயம் என்று சொன்ன சாஸ்திரிகளின் வாக்கு சாட்டை போல சொடுக்கியதில் ஆச்சர்யம் என்ன?

    பதிலளிநீக்கு
  25. அதான மொகத்த பாத்து நல்லது கெட்டதுன்னு நெனச்சுப்போடபிடாது.

    பதிலளிநீக்கு
  26. அந்த பவித்ரமான பெட்டியை இந்த அருவெருப்பான ஆள் கொண்டு வராரேன்னு அப்ப கூட நல்ல நினைப்பு வராம இருக்காரே.
    அவர் அந்த பெட்டி கொண்டு வந்ததை எவ்வளவு நன்றியுடன் நினைச்சிருக்கணும்.

    பதிலளிநீக்கு
  27. உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...உப்புச்சீடை மனிதர் மஹா பண்டிட்...அக்கறையுடன் அஸ்தியையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டார்..மஹா மனிதர்களுக்கு...அலட்சியத்தையும் அலட்சியம் செய்யும் பாங்கு உண்டு என்பதற்கு நல்ல உதாரணம்...

    பதிலளிநீக்கு
  28. //கங்கையில் அதைக் கரைப்பதற்கு முன்பு, இந்த ஒரு பெரிய மஹான் கைப்பட்டுள்ளதால், உங்கள் தகப்பனாருக்கு சொர்க்கம் தான் என்பது இப்போது உறுதியாகி விட்டது, பாருங்கோ ! //
    தேருக்கு அச்சாணி! மனதில் பதிந்த மகான்!

    பதிலளிநீக்கு
  29. ஒரு வாரமா நெட் ப்ராப்ளம். அதான் லேட். சங்கர மடத்து ஸாஸ்திரிகள் அந்த பெரியவரின் மகிமைகளைச்சொல்லும்போது சிலிர்க்கிறது. நிறைகுடம் தளும்பாது என்பதற்கு இந்த பெரியவர்தான் சரியான உதாரணம். யார் எந்த விதத்தில் அவர் மனதை காயப்படுத்தி இருந்தாலும் ஏதுமே நடக்காதது போல எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறார். அது தெரியாமல் பட்டாபி புலம்புவது .......... பட்டாபி நிலமையில் எந்த சாதாரண மனுஷா இருந்தாலும் இப்படித்தான் நினைச்சிருப்பா. சங்கர மடத்து ஸாஸ்த்திரிகள் சொல்ல சொல்லத்தான் பெரியவரைப்பற்றி நன்கு புரிந்து கொள்ள முடிஞ்சிருக்கு. எப்படியோ பிதுர் காரியம் தடைப்படாமல் நடந்ததே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... March 2, 2016 at 12:45 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஒரு வாரமா நெட் ப்ராப்ளம். அதான் லேட்.//

      அதனால் பரவாயில்லை. இங்கு எனக்கும் அதுபோல எவ்வளவோ ப்ராப்ளம்ஸ். மேலும் ஒரு மிகப்பெரிய சவாலான PROJECT WORK எடுத்து இப்போது செய்ய ஆரம்பித்துள்ளேன். அதனால் என் கவனம் முழுவதும் அதில் மட்டுமே உள்ளது. அதுபற்றி என்றாவது ஒருநாள் உங்கள் அனைவரின் கவனத்திற்கும் அது வரக்கூடும்.

      //சங்கர மடத்து ஸாஸ்திரிகள் அந்த பெரியவரின் மகிமைகளைச்சொல்லும்போது சிலிர்க்கிறது. நிறைகுடம் தளும்பாது என்பதற்கு இந்த பெரியவர்தான் சரியான உதாரணம். யார் எந்த விதத்தில் அவர் மனதை காயப்படுத்தி இருந்தாலும் ஏதுமே நடக்காதது போல எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறார். அது தெரியாமல் பட்டாபி புலம்புவது .......... பட்டாபி நிலமையில் எந்த சாதாரண மனுஷா இருந்தாலும் இப்படித்தான் நினைச்சிருப்பா. சங்கர மடத்து ஸாஸ்திரிகள் சொல்ல சொல்லத்தான் பெரியவரைப்பற்றி நன்கு புரிந்து கொள்ள முடிஞ்சிருக்கு.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      //எப்படியோ பிதுர் காரியம் தடைப்படாமல் நடந்ததே.//

      நடந்ததே அல்ல .... இனிமேல்தான் அது நடக்கணும்.

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு