என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 3 அக்டோபர், 2014

VGK 38 - மலரே ....... குறிஞ்சி மலரே !



இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்  : 09.10.2014

வியாழக்கிழமை


இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 

valambal@gmail.com 


REFERENCE NUMBER:  VGK 38

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:

 



’ மலரே .... 
குறிஞ்சி மலரே ! 

சிறுகதைத் தொடர்

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




டெல்லியின் அந்தப்பரபரப்பான போக்குவரத்து நெரிசல் மிகுந்தப் பகுதியில், சிக்னல் சிவப்பு விளக்காக மாறியதால் நந்தினியின் கார் நிறுத்தப்பட்டது. அவளின் காரை உரசுவது போல நெருக்கமாக அந்த போலீஸ் ஜீப்பும் சடர்ன் ப்ரேக்கிடப்பட்டு டயர்கள் தேயும்படி ஒரு சப்தம் எழுப்பியபடி நின்றது.

அதனுள் கைகளில் விலங்கிடப்பட்டபடி ஒரு இளைஞன். நந்தினிக்கு அவனை எங்கேயோ எப்போதோ பார்த்துப் பரிச்சியப்பட்ட ஒரு முகமாகத் தோன்றியும் சரிவர ஞாபகம் வரவில்லை. சிவந்த நிறம். வயது 25க்கு மேல் 30க்குள் இருக்கும். கர்லிங் சுருள் முடி நெற்றியில் விழுந்தபடி.

வேறு ஏதோ ஒருபுறம் திரும்பியபடி இருந்த அந்த வாலிபன், நந்தினியின் பக்கமாக தன் முகத்தைத் திருப்பியதும் வலது கன்னத்தில் மூக்கின் அருகில் இருந்த காய்ந்த திராட்சை போன்ற அந்த சிறிய மச்சம் நந்தினியின் கண்களில் பட்டதும், ஒரு சிறு பொறி தட்டியது அவள் நினைவுக்கு.

அதற்குள் சிக்னல் மாறி அந்த ஜீப் சீறிப்பாய்ந்து வலது புறமாகத் திரும்ப, இவள் வண்டி நேராக சென்று கொண்டிருந்தது. சுமார் ஆறு மாதங்கள் முன்பு அவளின் கல்லூரித்தோழி கல்பனாவின் கல்யாணத்திற்கு சேலம் சென்று வந்தது, மனதில் ஓடத்துவங்கியது.

”திருஷ்டிப்பொட்டுபோல, உன் வீட்டுக்காரரின் கன்னத்தில் என்னடி காயம்?”  என்று தான் கல்பனாவிடம் கிசுகிசுக்க, தன் அருகில் இருந்த மைதிலி, “இந்த வண்ணக்கிளி செய்த மாயம்!” என்று கல்பனாவைச் சுட்டிக்காட்டியபடி சொல்ல, தாங்கள் மூன்று பேருமே கொல்லென்று சிரித்தது பசுமையாக நினைவில் வந்தது.

அப்படியென்றால் இந்த விலங்கிடப்பட்ட இளைஞன் ஒருவேளை நம் கல்பனாவின் கணவராக இருக்குமோ! மனதில் ஒரு சிறு சந்தேகம் எழுந்தது. கல்பனாவின் செல் நம்பர் கைவசம் உள்ள போனில் பதிவு செய்யப்படவில்லை. சேலத்தில் தன்னுடன் படித்த ஒரு சில தோழிகளை விசாரித்து கல்பனாவின் லேண்ட்லைன் போன் நம்பர் மட்டுமே கிடைப்பதற்குள், ஒரு வழியாக நந்தினியின் கார் அவளின் வீட்டு போர்ட்டிகோவுக்குள் நுழைந்து நின்றதும், இறங்கி வீட்டினுள் சென்றாள்.

கல்பனாவைத் தொடர்ந்து தொடர்பு கொண்டும், ரிங் போய்க்கொண்டே இருந்தும், யாரும் போனை எடுப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை விஷயம் கேள்விப்பட்டு டெல்லிக்கே புறப்பட்டு வந்து கொண்டிருப்பாளோ? பல்வேறு சிந்தனைகளில் மூழ்கியவாறு உணவருந்த உட்கார்ந்தும் சாப்பிட முடியாமல் ஒருவித சங்கடமாக உணர்ந்தாள்.

வெள்ளிக்கிழமை கோயிலுக்குப்போய்விட்டு, வீட்டுக்கு வந்த கல்பனா டெலிபோன் அருகிலேயே நெடுநேரம் அமர்ந்திருந்தும் தன் கணவரிடமிருந்து அழைப்பு வராததில் மிகவும் கவலை கொண்டாள்.

இவள் அவரின் செல் போனுக்கு முயற்சித்தும், தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக தகவல் வந்த வண்ணமே இருந்தது. கல்பனா சாப்பிட்டு இரவு படுக்கப்போகும் முன், டெலிபோன் மணி ஒலித்தது. கல்பனா பாய்ந்து வந்து போன் ரிஸீவரை கையில் எடுத்து “ஹலோ கல்பனா ஹியர்” என்றாள்.

”ஹலோ, கல்பனா, நான் நந்தினி பேசறேன். நீ எப்படி இருக்கே! உன் கணவர் எப்படி இருக்கிறார்!  ஏதும் விசேஷம் க்ளாட் நியூஸ் உண்டா?” என்றாள்.

“ஹலோ, நந்தினி; நான் நல்லா இருக்கேன். இந்த மாதம் தான் எனக்கு பீரியட்ஸ் தள்ளிப்போய், கன்பாஃர்ம் செய்திருக்கிறார்கள்”.

“கன்க்ராஜுலேஷன்ஸ் கல்பனா; உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோ..!

“தாங்க் யூ டீ; நீ எப்படி இருக்க! என்ன ராத்திரி திடீர்ன்னு அண்டைம்ல இப்படி கூப்பிட்டு அசத்துகிறாய்! உன்னிடமிருந்து போன் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லைடீ. டெல்லியிலிருந்தா பேசுகிறாய்? என் வீட்டுக்காரர் கூட ஏதோ டூட்டி விஷயமா டெல்லியில் இறங்கி இப்போது ஹரித்வார் போய்க்கொண்டு இருப்பார்ன்னு நினைக்கிறேன். H.நிஜாமுதீன் ஸ்டேஷன் நெருங்குவதாக ஐந்து மணி சுமாருக்கு போன் செய்து சொன்னார். அவர் டெல்லிப்பக்கம் போவது இது தான் முதல் தடவை. அவரிடமிருந்து தான் போன் வருகிறது என்று நினைத்து போனை எடுத்தேன். ஆனால் உன்னுடைய போன்; வாட் ய வெரி சர்ப்ரைஸ் டு மீ” என்றாள் கல்பனா.

நந்தினிக்கு எப்படி மேற்கொண்டு இவளிடம் அந்த விஷயத்தைப்பற்றிச் சொல்வது என்று மிகவும் சங்கடமாக இருந்தது. சொல்லவும் விரும்பவில்லை. தனக்கே சந்தேகமாக உள்ள ஒரு விஷயம். இவளிடம் சொல்லி இவளையும் நிம்மதியாகத் தூங்க விடாமல் செய்வதில் விருப்பமில்லை.

“சும்மாதாண்டி போன் செய்தேன். எனக்கும் கல்யாணம் நிச்சயமாக உள்ளது. டெல்லி மாப்பிள்ளை தான்” என்றாள்.

“அப்படியா! ஆல் தெ பெஸ்ட். ரொம்ப ரொம்ப சந்தோஷம்டீ. உன் வுட் பீ என்ன பண்ணுகிறார்? எப்போ கல்யாணம்? எங்கே கல்யாணம்?” வியப்புடன் வினவினாள் கல்பனா.

“அவரும் என்னைப்போலவே இங்கு வக்கீலாகவே பிராக்டீஸ் செய்து வருகிறார்.  டெல்லியில் தான் கல்யாணம். இன்னும் கல்யாண தேதி முடிவாகவில்லை. பிறகு சொல்கிறேன். நீயும் உன் கணவரும் கட்டாயம் என் கல்யாணத்திற்கு டெல்லி வரணும். உன் வீட்டுக்காரர் செல்போன் நம்பரும், உன் செல்போன் நம்பரும், எனக்குக்கொடு. அவர் வந்துள்ள இந்த டிரிப்பிலேயே எங்கள் வீட்டுக்கு வந்து விட்டுப்போகட்டும். நானும் அவருடன் பேசுகிறேன். நீயும் அவரிடம் சொல்லு” என்றாள் நந்தினி.

தனக்கு என்று தனியாக செல்போன் எதுவும் கிடையாது என்றும், அதற்கு அவசியமும் இல்லை என்றும் கல்பனா கூறும்போதே, அவளுக்கு கண் கலங்கி தொண்டையை அடைத்தது. தன் கணவரின் செல் நம்பரை மட்டும் நந்தினியிடம் கொடுத்தாள்.    










“ஏய் .. நீ என்னடி சொல்றே? இந்த நவீன யுகத்தில், பெண்களுக்கு 33 

சதவீத இட ஒதிக்கீட்டு மஸோதா பாராளுமன்றத்தில் நிறைவேற 

இருக்கும் நேரத்தில், செல்போன் வைத்துக்கொள்ள உனக்கு அவசியம் 

இல்லையா?   கல்லூரி நாட்களில் புரட்சிகரமாக, பாரதி கண்ட 

புதுமைப்பெண்ணாக விளங்கி, எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக 

இருந்த நீயா, இப்படிப் பட்டிக்காட்டுப்பாட்டி மாதிரி பேசுகிறாய்? என்னால் 

நம்பவே முடியவில்லை” என்றாள் நந்தினி.


கூண்டில் அடைக்கப்பட்டு வீட்டினுள் உள்ள பச்சைக்கிளிகள் கீ..கீ.. 

எனக்கத்தின. 


“ஒன் மினிட் நந்தினி” என்று கூறிவிட்டு, கிளிகளின் பசிக்கு பழங்கள், 

கொட்டைகள் என கூண்டினுள் போட்டுவிட்டு, குடிக்க நீரும் ஊற்றினாள், 

கல்பனா.







“கிளிகள் வளர்க்கிறோம் நந்தினி; அவற்றில் பல பச்சைக்கிளிகள். 

கோவைப்பழச் சிவப்புடன் வளைந்த மூக்குடன், பார்க்க வெகு அழகாக 

உள்ளன. அவைகள் தான் இப்போது கத்தின. ஸாரிடீ...அவைகளுக்கு 

ஆகாரம் கொடுத்து விட்டு வந்தேன்” என்றாள் கல்பனா.



“பெண்கள் சுதந்திரத்தைப்பற்றி அனல் பறக்கும் விதமாக கல்லூரி 

விழாவில் அருமையான சொற்பொழிவு ஆற்றி, பலரின் 

கைத்தட்டல்களைப் பெற்று, எங்கள் அனைவருக்குமே ஒருவித 

விழிப்புணர்வு ஏற்படுத்திய நீ போய், சுதந்திரமாகப் பறக்க வேண்டிய 

கிளிகளைக் கூண்டில் அடைத்து வீட்டில் வளர்கிறாயா? என்னால் 

நம்பவே முடியவில்லையேடி, கல்பனா” என்றாள் நந்தினி.



“நான் என்ன செய்வது நந்தினி? நானும் முன்புபோல் சுதந்திரப்பறவை 

இல்லையே இன்றைக்கு; திருமணத்திற்குப்பிறகு நானும் இந்தக்கிளிகள் 

போல ஒரு கூண்டுக்கிளியாகவே தானே இருந்து வருகிறேன். 

தயவுசெய்து புரிந்து கொள்ளுடி” என்றாள் கல்பனா.



“ஏன் நீ இப்போது அந்த பேங்க் வேலையைத் தொடரவில்லையா? 

ராஜிநாமா செய்து விட்டாயா? உன் கணவர் உன்னுடன் அன்புடன் தானே 

இருக்கிறார்? என்று வினவினாள் நந்தினி.



”ரொம்ப ரொம்ப அன்புடன் இருக்கிறார். அது தான் பிரச்சனையே. 

ஒருவித வித்யாசமான பொஸஸிவ்நெஸ். வீட்டைவிட்டு எங்குமே நான் 

தனியாகப் போகக்கூடாது. வேலைக்கும் போகக்கூடாது. யாரிடமும் 

பேசக்கூடாது. ஜன்னலிலோ, பால்கனியிலோ நின்று வெளியில் 

வேடிக்கைகூட பார்க்கக்கூடாது ..... 


”வீட்டு வேலைகள் செய்ய, சமையல் செய்ய, துணிதுவைக்க, இஸ்திரி 

போட்டுவர, கடைக்குப்போய் காய்கறி மளிகை சாமான்கள் வாங்கிவர 

என அனைத்து வேலைகளையும் கவனிக்க தனியாக இரண்டு 

வேலைக்காரப் பெண்களை வேறு நியமித்துள்ளார் ..... 


”மகாராணி போல் ஓய்வெடுப்பதும், சாப்பிடுவதும், தூங்குவதும், டீ.வி. 

பார்ப்பதும், செய்தித்தாள்கள் வார மாத இதழ்கள் படிப்பதும் மட்டுமே 

எனக்கு வேலை. என் பொழுதுபோக்கிற்கு என்னைப்போலவே வீட்டினுள் 

சிறைப்பறவைகளாக இருக்கும் இந்த சில கிளிகள் மட்டுமே.

எப்போதாவது வாரம் ஒருநாள் வெள்ளிக்கிழமை மட்டும் அருகில் உள்ள 

ஒரு கோயிலுக்குப் போய்வருவேன். இன்று கூட 

வெள்ளிக்கிழமையானதால் போய் வந்தேன், அதுவும் பாதுகாவலர் 

போல கூடவரும் என் மாமியாருடன் .....



”என் பேங்க் வேலையை இன்னும் நான் ராஜிநாமா செய்யவில்லையே 

தவிர, ராஜிநாமா செய்துவிட்டது போலத்தான். கல்யாணம் 

ஆனதிலிருந்து லாங்க் லீவில் இருக்கிறேன்” என்றாள் கல்பனா.    
   


"ஓ.கே. கல்பனா, நேரம் ஆகிறது. உன் வீட்டுக்காரர் பெயரும், அவர் 

வேலை பார்க்கும் அலுவலகப்பெயரும், அவர் டூட்டி விஷயமாக 

ஹரித்வார் செல்லும் இடத்தின் விலாசமும் சொல்லு, 

குறித்துக்கொள்கிறேன்.  மற்ற விஷயங்கள் நாளைக்கு பகலில் 

பேசிக்கொள்ளலாம்” என்றாள் நந்தினி.




அவள் கேட்ட தகவல்களையெல்லாம் கொடுத்துவிட்டு “நீ அவரை உன் 

வீட்டுக்கு வரச்சொல்லி இப்போது கூப்பிட வேண்டாம். அவர் மிகவும் 

சங்கோஜப்பேர்வழி. நீ கூப்பிட்டால் உடனே புறப்பட்டு வந்து விடவும் 

மாட்டார். பிறகு உன் கல்யாணத்திற்கு நானே அவரை வற்புருத்தி 

கட்டாயம் அழைத்து வருகிறேன்” என்றாள் கல்பனா.



“ஓ.கே. ..... பை ..... குட் நைட்” தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டனர்.



தான் போலீஸ் ஜீப்பில் கண்ட காட்சியை கல்பனாவிடம் சொல்லாமல் 

இருந்து விட்ட நந்தினிக்கும் தூக்கமில்லை.  கணவனைடமிருந்து 

எந்தத்தகவலும் வராத கவலையில் கல்பனாவுக்கும் தூக்கம் 

வரவில்லை.




இனிமையான கல்லூரி நாட்களையும், தன்னை மறக்காமல் இன்று 

தன்னுடன் போன் செய்து பேசிய நந்தினியையும் நினைத்து மகிழ்ந்து 

கொண்டாள் கல்பனா.




முதன் முதலாக, நாட்டின் தலைநகரில், ஏதோவொரு சிறைச்சாலையில் 

அடைக்கப்பட்ட சிவராமனுக்கும் தூக்கம் வராமல், துக்கம் 

தொண்டையை அடைத்துக்கொண்டது. 




தன்னுடைய உடமைகளான சூட்கேஸ், மணிபர்ஸ், ஏ.டி.எம். கார்டு, 

செல்போன், ஐடெண்டிஃபிகேஷன் கார்டு, டிரெயின் டிக்கெட் என 

எல்லாமே கொள்ளையடிக்கப்பட்டு, தானும் ஏமாற்றப்பட்டு, நிர்கதியாக 

நின்ற தன்னை, தீவிரவாதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் 

பிடித்து உள்ளே தள்ளியுள்ள போலீஸ்காரர்களின் கெடுபிடிகளும், 

மனிதாபிமானமற்ற முறையில் தான் நடத்தப்படுவதையும் நினைத்து, 

வருந்த மட்டுமே முடிந்ததே தவிர வேறு எதுவுமே செய்ய இயலவில்லை.




டெல்லியில், தனக்கு உதவிட யாருமே இல்லையே; மேற்கொண்டு என்ன 

நடக்குமோ; கல்பனாவுடன் கூட தன் நிலைமையைச்சொல்லி பேச 

முடியவில்லையே என வருந்திக்கொண்டிருந்தான்.




இந்த அஃபிஷியல் ட்யூர் முடிந்ததும், அடுத்தவாரம் ஜாலியாக 

கல்பனாவுடன் ஊட்டி மலர் கண்காட்சிக்குச் செல்ல வேண்டும் என்று 

நினைத்திருந்தான். சிறுவயது முதலே அபூர்வமாகப்பூக்கும் குறிஞ்சி 

மலரைக்காண வேண்டும் என்ற ஒரு ஆவல், சிவராமனுக்கு. இன்றுவரை 

அது நிறைவேறாத ஒரு ஆசையாகவே உள்ளது. இந்த ஆண்டும் தனது 

நெடுநாளைய ஆசை நிறைவேறாதபடி இந்த மன உளைச்சலுடன் கூடிய 

எதிர்பாராத சிறைவாசம்.



சிவராமனைப் பொறுத்தவரை இந்தச் சிறைவாசமும், குறிஞ்சி 

மலரைப்போலவே இதுவரைப் பார்த்தறியாத ஒரு புது அனுபவம் தான்.     





க்கீல் நந்தினி மறுநாள் சனிக்கிழமை தன்னுடைய 
வருங்காலக் கணவரும், சீனியர் வக்கீலுமான வஸந்த் இடம் எல்லா விஷயங்களையும் கூறி, மேற்கொண்டு என்ன செய்து, தன் 
சினேகிதியின் கணவரை மீட்கலாம் என்று ஆலோசித்தாள்.

வக்கீல் வஸந்த் தனக்குத்தெரிந்த ஒரு போலீஸ் ஆபீஸர் மூலம், சிவராமனை அடைத்து வைத்துள்ள சிறைச்சாலையைப் பற்றிய விவரம் தெரிந்து கொண்டு, திங்கட்கிழமை காலையில் சிவராமனை ஜாமீனில் எடுக்க, முயற்சிகள் மேற்கொண்டார்.

ஜாமீனில் எடுக்கப்பட்ட சிவராமனிடம் நந்தினியும், வஸந்தும் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு, நந்தினியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைப்பற்றி, வக்கீல்களின் ஆலோசனைப்படி, சிவராமனால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. 

நந்தினி வீட்டுக்குச்சென்ற சிவராமனுக்கு வேண்டிய உதவிகள் அனைத்தும் நந்தினியால் செய்து கொடுக்கப்பட்டன.  சிவராமனை கல்பனாவுடன் போனில் பேசச்சொல்லி தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தாள் நந்தினி.


நடந்த கதைகளை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை முழுவதுமாகக் கூறி, ஆபத்தான நெருக்கடியான சூழ்நிலையில் மிகவும் அன்பாகவும், பண்பாகவும், தனக்கு பல்வேறு உதவிகள் செய்து கொடுத்து, போலீஸ் காவலிலிருந்து தன்னை விடுவித்த, நந்தினியைப்பற்றி, கல்பனாவிடம் வானளாவப் புகழ்ந்து தள்ளினான், சிவராமன்.

இரண்டு முழுநாட்களும், மூன்று முழு இரவுகளும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனுபவம் அவனை முற்றிலும் ஒரு புது மனிதனாகவே மாற்றியிருந்தது. மிகவும் சங்கோஜியானவன் இப்போது மிகவும் சகஜமாகப்பழக ஆரம்பித்தான்.

படித்த பெண்கள் எவ்வளவு அறிவாளிகள் என்றும், முற்போக்கானவர்கள் என்றும், அவர்களின் விவேகமான, தைர்யமான செயல்கள் இன்றைய சமுதாயத்திற்கு எவ்வளவு தேவைப்படுகிறது என்றும் நந்தினி மூலம் உணர்ந்து கொண்டான். அவளின் சமயோஜித புத்தியால் மட்டுமே, தன் கன்னத்து மச்சம் மூலம், தான் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, பிறகு சிறையிலிருந்து மீண்டு வர முடிந்ததை அறிந்து, நந்தினிக்கு தன் மனமார்ந்த நன்றிகளை வார்த்தைக்கு வார்த்தை தெரிவித்து கொண்டான். 

தான் இதுவரை ஹிந்தி மொழியைக் கற்காததை நினைத்தும், ஹிந்தி பேசத்தெரியாமல் தலைநகருக்கு புறப்பட்டு வந்ததை நினைத்தும், கவனக்குறைவாக இருந்து தன் உடமைகளைப் பறிகொடுத்ததை நினைத்தும், மிகவும் துரதிஷ்டவசமாக போலீஸில் மாட்டியதை நினைத்தும், மிகவும் வருந்தினான்.

அவனுக்கு ஆறுதல் சொல்லிய நந்தினி “தங்கள் மனைவி கல்பனாவுடன் பழகியதால் தான், இன்று நான் இந்தப்பரபரப்பான டெல்லியில் தன்னம்பிக்கையுடனும், துணிச்சலுடனும், அச்சமின்றியும் வாழ முடிகிறது; 

”தங்கள் கல்பனா என்னைவிட எல்லாவிதத்திலும் மிகச்சிறந்த ஒரு உன்னதமான பெண். அவளுக்கு மட்டும் முழுச் சுதந்திரமும், வாய்ப்பும் அளிக்கப்பட்டால், இந்த நம் நாட்டையே ஆளக்கூடிய அளவுக்கு எல்லாத் திறமைகளும், அசாத்ய துணிச்சலும் அவளுக்கு உண்டு; 


”அவளுடைய அன்பான அணுகுமுறை, மனோதைர்யம், பொதுஅறிவு, பேச்சாற்றல் மற்றும் ஆளுமைத்திறனால் நல்லதொரு சமுதாய மாற்றத்தைக் கல்பனாவால் கொண்டு வர முடியும்; 


கல்லூரியில் படிக்கும்போது எங்களுக்கெல்லாம் கல்பனா தான் ரோல்மாடலாக இருந்து வந்தாள். எதிலும் தனித்தன்மையும், முழுத்திறமையும் ஒருங்கே வாய்ந்த உங்கள் மனைவியால் உங்களுக்கே கூட சமூகத்தில் மிகவும் புகழும், பெருமையும் அதிகரிக்க வாய்ப்புண்டு; 

உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். அடுத்தமுறை நீங்கள் டெல்லி வரும்போது, கட்டாயம் சரளமாக ஹிந்திமொழி பேசத்தெரிந்தவளான என் உயிர்த்தோழி கல்பனாவுடன் தான் வரவேண்டும்” என்று நந்தினி தன் விருப்பத்தைக் கூறினாள்.

எப்போதுமே எந்தவிதமான அலட்டலோ, ஆரவாரமோ இன்றி அன்புடனும், அமைதியுடனும் இருந்து வரும் தன் மனைவிக்குள் இவ்வளவு நல்ல விஷயங்களா! சிவராமனுக்கே மிகவும் ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் இருந்தது.

ஒரு புதிய சூட்கேஸில் பயணத்திற்கு வேண்டிய அவசியமான துணிமணிகள், புதியதாக வஸந்த் ஆல் வாங்கிவரப்பட்ட ரெடிமேட் பேண்ட்கள், டீ ஷர்ட்கள், புதியதோர் செல் போன், சிம்கார்ட், ரொக்கப்பணம் முதலியவற்றைக்கொடுத்து, தன் வீட்டில் நல்ல விருந்தும் அளித்து, சிவராமனை ஹரித்வாருக்கு வழியனுப்ப ஸ்டேஷன் வரை தன் காதலன் வஸந்துடன் காரில் சென்று வந்தாள் நந்தினி..

அலுவலக வேலை முடிந்து தன் ஊருக்கும் வீட்டுக்கும் திரும்பிய சிவராமன், கல்பனாவுக்கு மிகவும் பிடித்தமான, பால் ஸ்வீட்ஸ் டப்பாக்களை திறந்து நீட்டினான். தாய்மைப்பேறு பெறப்போகும் கல்பனாவுக்கு ஒரே மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்குக் காரணம் பால் ஸ்வீட் மட்டுமல்ல, அந்த ஸ்வீட் டப்பாவின் மேல் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் வெகு அழகாக எழுதப்பட்டிருந்த “நந்தினி” என்ற தன் ஆருயிர்த் தோழியின் பெயர். அதைத்தன் கணவனிடம் சுட்டிக்காட்டி மகிழ்ந்தாள். 

அப்போது தான் அதை கவனித்த சிவராமனும், ”உன் தோழி ’நந்தினி’ பெயர் போட்டிருந்ததால் தான் நானும் இதை வாங்கி வந்தேன்; நமக்கு பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்குமானால் ’நந்தினி’ என்று தான் நாம் பெயர் வைக்க வேண்டும்” என்று சொல்லி சமாளித்தான்.

தன் கணவனிடம் புதிதாக, இதுவரை இல்லாத ஏதோவொரு கலகலப்பும், உற்சாகமும் கரைபுரண்டு ஓடுவதை கல்பனா கவனிக்கத் தவறவில்லை.

முதல் வேலையாக கூண்டில் அடைபட்டிருந்த கிளிகள் அத்தனையையும், கல்பனா கையால் சுதந்திரமாக பறக்க விடச்சொன்னான், சிறையில் இருப்பது எவ்வளவு கொடுமை என்பதைத் தன் சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்டு வந்துள்ள சிவராமன். 

அந்தக்கிளிகள் சில மிகவும் மகிழ்ச்சியுடன் கல்பனாவின் தோளில் உரசியவாறே கத்திக்கொண்டே பறந்து சென்றன. அவைகள் எல்லாம் மிகவும் நன்றியுடனும், பிரியா விடையுடனும் தனக்கு டாட்டா சொல்லிப்போவது போல இருந்தது கல்பனாவுக்கு. 





           

கிளிகளைச் சுதந்திரமாகப் பறக்க விட்ட கல்பனா மிகுந்த மகிழ்ச்சியுடன் கணவனை நோக்கினாள்.


”கல்பனா, உன்னைப்பற்றி நந்தினி மிகவும் உயர்வாகப் புகழ்ந்து பாராட்டிப் பேசினாள். கல்லூரி நாட்களில் பல்வேறு திறமைகள் படைத்தவளாமே நீ! அது பற்றியெல்லாம் நீயாகவும் என்னிடம் சொல்லிக்கொள்ளவில்லை. நானாகவும் உன்னிடம் கேட்டுக்கொள்ளவும் இல்லை. இதுவரை உன் விருப்பு வெறுப்புக்களைத் தெரிந்து கொள்ள நான் தவறிவிட்டேன். உன் திறமைகளை நீ வெளிக்காட்ட நான் இதுவரை ஏதும் சந்தர்ப்பமே கொடுக்காமல் இருந்து விட்டேன். என் மீதும் தப்பு தான். அதற்காக நான் இப்போது மிகவும் வருந்துகிறேன், கல்பனா” என்று தன் மனம் திறந்து தொடர்ந்து பேசலானான் சிவராமன்.

”இவ்வளவு நல்ல குணங்களையும், திறமைகளையும் உன்னிடத்தே வைத்துக்கொண்டு, குடத்திலிட்ட விளக்காக இருந்துவிடுவது நல்லதல்ல, கல்பனா.  குன்றிலிட்ட விளக்காக நீ மாறி, சமுதாய நலனுக்கு நீ உன்னுடைய படிப்பையும் திறமைகளையும் பயன்படுத்தி புகழோடு நீ விளங்க வேண்டும். அதைக் கண்குளிர நானும் கண்டு பெருமையடைய வேண்டும்; 

”நீ ஏற்கனவே பார்த்து வந்த பேங்க் வேலையில் மறுபடியும் நாளை முதல் சேர்ந்து பணியாற்று. பேங்க்குக்கு வரும் பொது மக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உன்னால் முடிந்த சிறந்த சேவையை, உன் தனித்திறமையுடன் சிறப்பாக செய்து கொண்டு இரு” என்றான் சிவராமன்.

சிவராமனைப் புது மனிதனாகக் கண்ட கல்பனாவுக்கு மிகவும் வியப்பாகவே இருந்தது. நாலு நாள் சிறைவாசமும், நந்தினியிடம் பழகியதும் தான் ஆளை அடியோடு மாற்றியிருக்கும் என்று நினைத்துக்கொண்டாள்.

”என்ன கல்பனா யோசனை? நான் சொல்வதற்கெல்லாம் எதுவும் பதில் சொல்லாமல் ஏதோ யோசனையில் இருக்கிறாயே?” என்றான் சிவராமன். 

கல்பனா தன் மெல்லிய மென்மையான விரல்களால், சிவராமன் கன்னத்தில் இருந்த, அதிர்ஷ்டம் வாய்ந்த அந்த மச்சத்தை, அன்புடன் வருடிக்கொடுத்தாள். 

தான் நேரில் பார்க்க விரும்பிய குறிஞ்சிமலரே தன் அருகில் வந்து தன்னைத் தழுவிய உணர்வு ஏற்பட்டது சிவராமனுக்கு.  



 
   







oooooOooooo



  


   VGK-36
’எலி’ஸபத் டவர்ஸ் 

விமர்சனப்போட்டி முடிவுகள்
வழக்கம்போல் நாளை
சனி / ஞாயிறு / திங்களுக்குள்
முற்றிலுமாக வெளியிடப்படும்.

 

காணத்தவறாதீர்கள்.


 

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

22 கருத்துகள்:

  1. அபூர்வமாகப்பூக்கும் குறிஞ்சி மலரைப்போல்
    அழ்கான கதை..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  2. பெண்களுக்குப் பிடித்த கதையாக இருக்கிறது. இன்றைய நாட்களில் பெண் சுதந்திரம் எனப் பேசப்படுவதற்கு ஆதரவும் தெரிவிக்கிறது. :)

    பதிலளிநீக்கு
  3. அருமையான கதை. அழகாகத் தொடுக்கப் பட்ட சம்பவங்கள். கதையின் கரு சக்தி வாய்ந்தது..வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கதை.

    கதைக் களன் எங்கள் ஊர் ஆயிற்றே! அதனால் இன்னமும் அதிகம் பிடித்தது! :)

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள அய்யா திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு,
    வணக்கம். எனது வலைப்பூவில் பாலோயராக வந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    என்னுடைய சிறுகதைகளைப் படித்து கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு
  6. கதை மிகவும் அருமையாகத் தொடுக்கப் பட்டிருக்கிரது. குறிஞ்சிமலர் பூப்பதற்கு வெகு காலம் தேவைப்படும். ஆனால் உங்கள் குறிஞ்சிமலர் தக்க ஸமயத்தில் பூத்தது மிகவும் அருமையாக இருக்கிறது. நல்ல தோழிகள், நல்ல விஷயங்கள்.
    அனுபவித்துப் படித்தேன். வாழ்த்துகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  7. பெண்களுக்கு வேறு மொழியறிவும் துணிச்சலும் அவசியம்.
    இதை உணர்த்தும் அருமையான கதை!

    பதிலளிநீக்கு
  8. பெண்களின் மேன்மையை அடையாளம் காட்டிய முறை சிறப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  9. இந்த வருஷம் குறிஞ்சிப்பூ பூத்து குலுங்குகிறதாமே. பெண்களுக்கு நாலு பாஷைகள் தெரிந்திருந்தாலே கான்பிடென்ஸ் வந்து விடும்தான்.

    பதிலளிநீக்கு
  10. ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்க அலுக்கவே இல்லை. உங்கள் கதை எதுதான் அலுப்பைத்தந்தது.

    பதிலளிநீக்கு
  11. என்னதா இருந்துகிட்டாகூட இதுபோல கிளி மத்த பறவைகளை சொதந்திரமா பறக்க வுட்டு போடோணும் இப்பூடி கூண்டுகள்லலா அடைச்சி போட்டுகிட கூடாது. படத்துல கிளிலா நல்லா இருக்கு. பொட்ட புள்ளகளுக்கும் சொதந்திரம் கொடுத்துபோடோணும்

    பதிலளிநீக்கு
  12. குறிஞ்சி மலர் போலவே அழகான கதை. நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  13. குறிஞ்சித்தேனை ஞாபகப்படுத்தும் கதை. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  14. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கல்வி பெறுவதில் நல்ல முன்னேற்றம் கண்டு, நல்ல விழிப்புணர்வுடன் ஆண்களை விட மிகுந்த திறமை பெற்றவர்களாய்த் திகழ்ந்தாலும், பெண்கள் உழைப்பதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கான தைரியத்தை, திறமையை பெற்றிருந்தாலும், அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதத்தில் வாய்ப்பளித்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு எந்த விதத்திலும் தடையாய் இல்லாமல், அவர்கள் வாழ்வில் பீடுநடை போட பேருதவியாய் இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்தில் சமுதாயச் சிந்தனையோடு படைக்கப்பட்டுள்ள கதை.

    பிற மொழிகளிடையே வெறுப்புணர்வு பாராட்டாமல், அவற்றை அறிந்து கொள்ள முயலுதல் நன்று என்பதையும் நன்கு உணர்த்தும் கதை

    ஆனால் சில ஆண்கள் மனதில் மட்டும் பெண்கள் குறித்த பார்வை இன்னும் மாறவில்லை. “எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை” என்று முழுமனதுடன் நம்பினால் மட்டுமே பெண்கள் நிறைய வெற்றிகளைப் பெற முடியும். பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்காத சமுதாயம், நாகரிகமான சமுதாயமாக இருக்க முடியாது என்பதை அழகாய் உணர்த்திச் செல்கிறார் கதாசிரியர்.
    அருமையான கதை! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.

      //........ என்பதை வலியுறுத்தும் விதத்தில் சமுதாயச் சிந்தனையோடு படைக்கப்பட்டுள்ள கதை.

      //பிற மொழிகளிடையே வெறுப்புணர்வு பாராட்டாமல், அவற்றை அறிந்து கொள்ள முயலுதல் நன்று என்பதையும் நன்கு உணர்த்தும் கதை//

      //...... என்பதை அழகாய் உணர்த்திச் செல்கிறார் கதாசிரியர். அருமையான கதை!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

      தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  15. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:

    41 + 42 + 52 = 135

    அதற்கான இணைப்புகள் (பகுதி-1 to பகுதி-3):

    http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_19.html

    http://gopu1949.blogspot.in/2011/08/2-of-3.html

    http://gopu1949.blogspot.in/2011/08/3-of-3.html

    பதிலளிநீக்கு
  16. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-38-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-38-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-38-03-03-third-prize-winner.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு
  17. WHATS APP MESSAGE FROM Mrs. VIJI [VIJAYALAKSHMI KRISHNAN] OF RAIL NAGAR, TIRUCHI ON 26.09.2018

    -=-=-=-=-

    [26/09 11:43] Viji Rail Nagar:

    Malare, kurinji malare story super.

    -=-=-=-=-

    [26/09 12:04] Gopalakrishnan.V: 🙏✋ ஆஹா...... மிக்க நன்றி. தங்கள் கருத்துக்கள் அந்தக் கதையினில் வரும் 'நந்தினியின் பால்கோவா' போலவே மிகவும் எனக்கு இனிமையாகவும், சுவையாகவும் உள்ளது. With Best Wishes ...... GOPU ✋🙏

    பதிலளிநீக்கு
  18. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. DURAI. MANIVANNAN SIR, 9750571234 ON 28.06.2021

    பெண்களை கல்வி கற்க அனுமதிப்பதோடல்லாமல் அவர்களை சுயமாக சிந்திக்கவும் சம்பாதிக்கவும் கூட ஆண்கள் இந்த நூற்றாண்டிலும் அனுமதிக்க வேண்டிய கட்டாயத்தில் வைத்திருக்கின்றோம் என்ற கசப்பான உண்மையை உணர செய்துள்ளீர்கள். கூண்டில் அடைக்கப்பட்ட கிளிக்கும் வீட்டில் அடைக்கப்பட்ட பெண்கிளிக்கும் சுதந்திர காற்றை பரிசளித்த ஆசிரியர் வைகோ அவர்களுக்கு பாராட்டுக்கள். துரை.மணிவண்ணன்.
    -=-=-=-=-

    THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. 
    - VGK 

    பதிலளிநீக்கு