என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 1 நவம்பர், 2011

நீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் ! [பகுதி 4 / 5]




நீ முன்னாலே போனா ......
நா ... பின்னாலே வாரேன் !

[சிறுகதை - பகுதி 4 / 5]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


முன்கதை முடிந்த இடம்:

நேற்று அந்தப்பெரியவர் சஸ்பென்ஸுடன் முடித்த இடத்திலிருந்து கதையைத் தொடராமல் வேறு ஏதேதோ விஷயங்களுக்குத் தாவியது, கேட்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தாலும், அனைவருக்கும் அவர் மனைவி இறந்ததில் ஏதோ ஒரு பெரிய மர்மம் இருப்பதாகவும், அது தெரியாமல் தங்கள் மண்டையே வெடித்துவிடும் போலவும் ஒருவித உணர்வு ஏற்பட்டது.


======================




அந்த முதியோர் இல்ல வளாகத்தை ஒட்டிய மற்றொரு கட்டடத்தில், இளஞ் சிறுவர்களுக்கான வேத பாடசாலை ஒன்று நடந்து வந்தது. அங்குள்ள சிறுவர்களுக்கு வேத பாடங்களுடன் தமிழ், கணிதம், ஆங்கிலம், கணிணி முதலியனவும் போதிக்கப்பட்டு வந்தன.

அங்கு நுழைவாயிலில் வைத்திருந்த மிகப்பெரிய விளம்பரத்தை, பெரியவர் நிறுத்தி நிதானமாக வாசிக்கத் தொடங்கினார். மறுநாள் முதல் தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு ஒரு பிரபல பண்டிதர் வருகை புரிய உள்ளதாகவும், பகல் முழுவதும் ஸ்ரீமத் பாகவத ஸப்தாக மூல பாராயணம் நடைபெறப்போவதாகவும், இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை மேற்படி பண்டிதரால் ஸப்தாக உபன்யாசம் [கதையாகச் சொல்லுதல்] நடைபெறப் போவதாகவும் விளம்பரப் படுத்தப்பட்டிருந்தது.   

விளம்பரத்தைப் பார்த்த பெரியவருக்கு மிகவும் மகிழ்ச்சி எற்பட்டது.முதியோர் இல்லத்திற்குத் திரும்பிய அவர், மற்ற அனைவரிடமும் இந்த மகிழ்ச்சியான விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். 


பாகவத ஸப்தாக பாராயணமும் உபன்யாசமும் என்றால் என்ன? அதன் மகிமை என்ன? என்று ஒரு சிலர் அவரிடம் விளக்கம் கேட்டனர்.   

பெரியவர் சுருக்கமாக விளக்கம் கொடுக்கத் தொடங்கினார்:

“நம் எல்லோருக்குமே ஓரளவுக்கு நம் பிறந்த நாள், நம் பெற்றோர்கள் வாயிலாகத் தெரிந்திருக்கும். ஆனால் நாம் இறக்கப்போகும் நாள் நம்மில் யாருக்காவது தெரியுமா? என்று கேட்டார், பெரியவர்.

“அது தெரியாமல் தானே நாம், வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டு, இங்கு வந்து திண்டாடிக்கொண்டு இருக்கிறோம்” என்றனர் ஒருசிலர் ஆதங்கத்துடன்.

“ஆம் நம் யாருக்குமே நாம் இறக்கப்போகும் நாள் தெரியாது. ஆனால் நம் புராணங்கள் ஒன்றினில் தான் இறக்கப்போகும் நாளை முன்கூட்டியே அறிந்தவர் ஒருவர் இருந்திருக்கிறார்; 

அவர் பெயர் பரீக்ஷித் மஹாராஜா. மிகவும் பக்திமானான அவருக்கு, இறைவன் அருளால் ஜோஸ்யர் ஒருவர் மூலம், தான் இன்னும் ஏழு நாட்களில் இறக்கப் போகிறோம் என்பதை முன்னதாகவே அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.  


மஹாராஜாவாக இருப்பினும், நல்ல திருடகாத்திர சரீரத்துடன் நோய் நொடி எதுவும் இல்லாமல் இருப்பினும் தனக்கே ஒரே வாரத்தில் மரணம் நிகழப்போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்து கொண்ட அவருக்குப் பெருந்துயரமும், கவலையையும் ஏற்படலாயிற்று. மாபெரும் ஞானியான ’சுகர்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ’சுகப்பிரும்ம ரிஷி’  என்பவரிடம் தன் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்; 

அதைக்கேள்விப்பட்ட சுகப்பிரும்ம ரிஷி, பரீக்ஷித் மஹாராஜாவிடம்: 


”ஒருவரின் மரணம் என்பது யாராலும் எந்த காலத்திலும் தடுக்கவே முடியாதது. பிறந்தவர் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும். தனக்கு வரப்போகும் மரணத்தைப் பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிந்த தாங்கள் உண்மையிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியும், பாக்கியசாலியும் ஆவீர்கள். வேறு யாருக்குமே கிடைக்க முடியாத ஒரு பாக்யம் இது.  யாருக்குமே இதுபோல தனக்கு மரணம் சம்பவிக்கப்போகும் நாள் முன்கூட்டியே தெரியும் சந்தர்ப்பம் அமையவே அமையாது; 

இதிலிருந்து வேறொரு உண்மையும் நமக்கு நன்றாகப் புலப்படுகிறது பாருங்கள். அதாவது இன்று முதல் முழுசாக அடுத்த ஏழு நாட்களுக்கு, நீர் உயிருடன் இருக்கப்போகிறீர் என்ற ஒரு பெரிய உத்தரவாதம் கிடைத்துள்ளதே! அது போதுமே! அதுவே நீர் செய்துள்ள மிகப்பெரிய புண்ணியம் தானே!!


இந்த ஏழு நாட்களும் உமக்காக நான் ஸ்ரீமத் பாகவத ஸப்தாக பாராயணம் செய்கிறேன்.  நீர் பக்தி ஸ்ரத்தையுடன் இந்த நான் செய்யும் பாராயணத்தை ஸ்ரவணம் செய்தால்  (காதால் கேட்டால்) போதும். நேராக நீர் ஸ்வர்க்கம் போய்ச்சேர்ந்து பகவானின் திருவடிகளை அடைவது ஸர்வ நிச்சயம்” என்றார். 

அதுபோலவே சுகர் அவர்கள் ஸ்ரீமத் பாகவத ஸப்தாகம் ஏழு நாட்களுக்குப் பாராயணம் செய்து, அதை பரீக்ஷித்து மஹாராஜா பக்தி ஸ்ரத்தையுடன் ஸ்ரவணம் செய்து, பகவான் திருவடிகளை அடைந்தார் என்பது சரித்திர உண்மை;

இந்த மிகச்சிறந்த புண்ணிய சரித்திரமான ஸ்ரீமத் பாகவத ஸப்தாகம் என்பது சாக்ஷாத் பகவானே பிரும்மாவுக்குச் சொன்னது, ப்ரும்மா நாரதருக்குச் சொன்னது, நாரதர் வியாசருக்குச் சொன்னதும், வியாசர் சுகருக்குச் சொன்னது, சுகர் பரீக்ஷித்து மஹாராஜாவுக்குச் சொன்னது என்பார்கள்; 

நமக்கு இப்போது நம் முதியோர் இல்லத்திற்குப் பக்கத்திலேயே பாகவத ஸப்தாக பாராயணம் கேட்க ஒரு அரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. பகவானின் கல்யாண குணங்களைக் கேட்டாவது, நம் அன்றாடத் துயரங்களிலிருந்து நாமும் கொஞ்சம் விடுபடுவோம்” என்று பெரியவர் அனைவருக்கும் விளக்கினார். 

மறுநாள் முதல், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைப்பாளர்களுடன் தானும் சேர்ந்து கொண்டு, பாகவத ஸப்தாக பாராயணம் செய்யும் பாகவதருக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும், செளகர்யங்களையும், வசதிகளையும் செய்து கொடுத்து, பண உதவிகள் பலவும் செய்து, பகலில் மூல பாராயணமும், இரவில் பாகவத உபன்யாசமும் மிகவும் பக்தி ஸ்ரத்தையுடன் கேட்டு மகிழ்ந்து வந்தார், அந்தப்பெரியவர். 

இதில் அந்தப்பெரியவருக்கு உள்ள ஆர்வத்தையும், உற்சாகத்தையும் பார்த்த அந்த முதியோர் இல்லத்திலிருந்த பலரும் இரவு நடந்த உபன்யாசத்தை மட்டும் கேட்க, அவருடன் வந்து போனார்கள்.

[மூல பாராயணத்தை பகல் நேரம் முழுவதும், பொறுமையாக உட்கார்ந்து கேட்பது என்பது வயதானவர்களுக்கு சற்று சிரமமான காரியம் தான். 


உபன்யாசத்தில் புராணங்களைக் கதையாகச் சொல்வதனால் கேட்க இன்பமாக இருக்கும்.  


மூல பாராயணத்தில், ஸ்லோகங்களை மட்டும் படித்துக்கொண்டே போவதனால், அதில் அவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது. 


மூல பாராயணத்தை ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து கேட்டால், ஒருவேளை வயதான அவர்களின் மூலக்கடுப்பு அதிகரிக்கக்கூடுமோ என்னவோ]

இவ்வாறு பெரியவரும் அந்த முதியோர் இல்லத்தில் உள்ள பலரும் ஸப்தாக மூல பாராயணமும் உபன்யாசமும் கேட்கப்போய் வந்து கொண்டிருந்ததால், அரட்டை ராமசாமி இந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு விட்டார். பெரியவர் தங்கியிருந்த இடத்தில் உள்ள பெரியவரின் பெட்டியைத் திறந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.  

அதில் பெரியவரின் மனைவி மட்டும் உள்ள ஒரு பெரிய படம் லாமினேட் செய்யப்பட்டு இருக்கக் கண்டார். புத்தம் புதிய பசுமஞ்சளைப் புட்டது போன்ற தெய்வீகமானதொரு நிறத்தில், பூவும் பொட்டுமாக அந்த அம்மாள் புன்னகையுடன் காட்சி அளித்தாள்.  


இந்த அம்மாளின் மரணம் பற்றிய மர்மத்தை அறிவதே அரட்டையாரின் அவசர நோக்கம். மேலும் பெட்டியைக் குடைந்து துப்புத் துலக்கலானார். 

உயில் பத்திரம் ஒன்று, இவர் வீட்டு விலாசம், இவரின் மகன்கள், மகள், மாப்பிள்ளை போன்றவர்களின் பெயரும் விலாசங்களும், தொலைபேசி எண்களும் இருந்தன. 


பெரியவர் அன்றாடம் எழுதிவரும் டைரி ஒன்றும் அரட்டையாரின் கண்ணில் பட்டது. அவசர அவசரமாக டைரியில் இருந்த கடைசி ஒரு மாத சமாசாரங்களைப் படித்துத் தன் மெமரியில் ஏற்றிக்கொண்டார். அவரின் ஆராய்ச்சி முடிவுக்கு ஒருவேளை உதவலாம் என்பதாலோ என்னவோ!

பெட்டியை மேலும் குடைந்ததில் மற்றொரு க்ரூப் போட்டோ, அரட்டையாருக்குக் கிடைத்தது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெரியவருக்கு சதாபிஷேகம் [80 வயது பூர்த்தி விழா] நடைபெற்றுள்ளது. குடும்ப நபர்கள் அனைவருடனும், இந்தப் பெரியவரும் அவர் மனைவியும் மாலையும் கழுத்துமாக தம்பதி ஸமேதரராய் அமர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்ந்தார். 


கெடிகாரத்தில் மணியைப் பார்த்தார் அரட்டையார்.  இரவு 8.45 ஆகி விட்டது தெரிந்தது. உடனே தனது அன்றைய ஆராய்ச்சிகளை அத்துடன் நிறுத்திக்கொண்டு, பெட்டியில் இருந்த அனைத்துப்பொருட்களையும் ஏற்கனவே இருந்தவாறு ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு, தானும் பாகவத உபன்யாசம் சொல்லும் இடத்திற்கு, உபன்யாசம் முடிவதற்குள் போய்ச்சேர்ந்து, ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டார்.

தொடரும்

o========oOo========o





[*** பரீக்ஷித்து மஹாராஜாவுக்கு ஒரு சாபத்தினால் பாம்பு கடித்து மரணம் ஏற்பட்டது. அது பற்றிய சுருக்கமான {இரண்டு விதமான} புராணக்கதைகள் கீழே தனித்தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளன ***]



***
கதை-1

பல யுகங்களுக்கு முன் முனிவர் ஒருவர் வனத்தில் தவம்புரிந்து கொண்டு இருக்கையில், அவருடைய புதல்வன் அவர் செய்ய வேண்டிய வேள்விக்கு சமித்துகளைச் சேகரிக்க வனத்தின் மற்றொரு பகுதிக்குப் போய் இருந்தான். 

அப்போது அவ்வழியாக வேட்டையாட குதிரையில் வந்த பரீக்ஷித்து மஹாராஜாவின் மகன், தவத்தில் இருந்த முனிவரைக் கூப்பிட, ஆழ்ந்த தவத்தில் இருந்த முனிவர் செவிசாய்க்கவில்லை. 

அதனால் கோபமடைந்த இளவரசன் இறந்த பாம்பு ஒன்றை எடுத்து அந்த முனிவரின் கழுத்தில் போட்டுவிட்டுச் சென்று விட்டான். 

சமித்துகளைச் சேமித்து வந்த முனிகுமாரன் அவ்விடம் வந்தவுடன், தம் தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு இருப்பதைக் கண்டு, கோபமடைந்தான். 

உடனே அதனை அகற்றிவிட்டு, இதனை யார் செய்தது? என ஞான திருஷ்டியால் அறிந்தான். 

உடனே “எந்தப் பாம்பை என் தந்தை மீது போட்டாயோ, அந்தப் பாம்பாலேயே உன் தந்தை அழிவான்” என சாபமிட்டான்.

சில நாள்கள் கழித்து பரீக்ஷித்து மஹாராஜனின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோஸ்யர்கள் அவருக்கு கால ஸர்ப்பதோஷம் உள்ளதாகவும், ஸர்பத்தினால் தீங்கு ஏற்படவாய்ப்பு அதிகம் உண்டு எனவும் கூறி, பாதுகாப்பாக இருக்கச் சொல்லி அறிவுறுத்தினர். 

அதனால் பதற்றமடைந்த பரீக்ஷித்து மஹாராஜா, ஏழு கடல்கள் ஏழு மலைகள் கடந்து எட்டாவது கடலின் நடுவில் ஒரு மண்டபம் கட்டி, அதன்மேல் ஒரு கட்டில் போட்டு மிகவும் பாதுகாப்பாகத்தான் இருந்து வந்தார். 

“தன்னை மிதிச்சாரைக் கடித்தாலும் கடிக்காவிட்டாலும், விதிச்சாரைக் கடித்தே தீரும்” என்ற சொல்லுக்கிணங்க, கார்க்கோடகன் என்ற அரவம் (பாம்பு) புழுவடிவம் பூண்டு, ஒரு பழத்தினுள் நுழைந்து, பழம் மூலமாக பரீக்ஷித்து இருக்கும் இடத்திற்குச் சென்றது. 

பழத்தினைப் புசிக்க கையில் எடுத்த அரசன் புழு என நினைத்து உதறிவிட அது உடனே பாம்பாக மாறி அவரைத் தீண்டிவிட்டது.


***
கதை-2



பரீக்ஷித்து மகா ராஜா ஒரு நாள் பரிவாரங்களோட காட்டில் வேட்டையாடிக் கொண்டு இருந்தார். வேட்டை மும்முரத்தில் எல்லோரும் மஹா ராஜாவைவிட்டுப் பிரிந்து விட்டார்கள். பரீக்ஷித்துக்கு தாகம் எடுத்தது. தண்ணீர் தேடிப் போனார். 


அங்கே சமீரகர் என்கிற முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார். அவரை தண்ணீர் கேட்டார். அவரோ தவம் கலையாமல் இருந்ததால பதில் சொல்ல வில்லை.


கோபப்பட்டு பரீக்ஷித்து அங்கே பக்கத்தில கிடந்த ஒரு செத்த பாம்பை தூக்கி அவர் கழுத்துல மாலை மாதிரி போட்டு விட்டுப் போய் விட்டார்.

பிறகு சமீரகரோட பிள்ளை அங்கே வந்தார். வயசு சின்னதானாலும் தபசு பெரிசு. அப்பா கழுத்தில செத்த பாம்பை பார்த்தார். நடந்த விஷயத்தை ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார். அவருக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. 



"இவனென்லாம் ஒரு ராஜாவா? என் அப்பா கழுத்தில பாம்பை மாலையா போட்டவன் ஒரு வாரத்தில தக்ஷகன் என்ற பாம்பு கடிச்சு சாகட்டும்" ன்னு சாபம் கொடுத்துட்டார்.

சமீரகர் தவம் கலைந்து எழுந்ததும் தன் பையன் அழுது கொண்டு இருப்பதைப் பார்த்தார். ”ஏண்டா குழந்தாய் அழுகிறாய்?” என்று கேட்டார். பையனும் நடந்ததைச் சொன்னான்.



"அவசரப்பட்டு என்ன காரியமடா செய்து விட்டாய்? நானோ முனிவன். எனக்கு பாம்பைப் போட்டால் என்ன பூ மாலையை போட்டா என்ன? இரண்டும் ஒண்ணுதானே! இதுக்குப்போய் நீ ராஜாவை சபித்து விட்டாயே!; 


அந்த பரீக்ஷித்து மஹாராஜாவால் நாட்டில் எத்தனை ஜனங்கள் இன்று சந்தோஷமாக இருக்கிறார்கள்!” 


என்று சொல்லித் தன் மகனைக் கடிந்து கொண்டு விட்டு, ”நீ நேராக அந்த ராஜாவிடம் போய், நீ அவருக்குக் கொடுத்துள்ள சாபம் பற்றியும் சொல்லிவிட்டு, இன்னும் ஏழு நாட்கள் தான் அவர் உயிர் வாழ்வார் என்ற விஷயத்தையும் சொல்லி விட்டுவா” என்றார். 

இதை கேள்விப்பட்ட ராஜா மிகவும் வருத்தப்பட்டார். இன்னும் ஒரு வாரம்தான் நான் உயிருடன் இருக்க முடியுமா? அதற்குள் நான் என்னசெய்து எப்படி உருப்படலாம் என யோசித்தார். சரி, வடக்கிலிருந்து உயிர் தியாகம் பண்ணலாம்னு கங்கை கரைக்கு போனார். 



அங்கு பல ரிஷிகளும் வந்து சேர்ந்தார்கள். அவர்களை வணங்கி தன் சாபத்தைச் சொல்லி ”ஏதாவது நான் தேற வழி இருந்தால் சொல்லுங்கள்” என்று பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டார், பரீக்ஷித்து மஹாராஜா.


அந்த முனிவர்கள், ”கொஞ்ச நேரத்திலே ’சுகர்’ இங்கே வருவார். உனக்கு மோக்ஷம் கிடைக்க வழி அவரால உனக்குத் தெரியவரும்” என்று சொல்லி ஆசிர்வாதம் செய்துவிட்டுப் போனார்கள்.


சிறிது நேரத்தில் அங்கே சுகப் பிரம்ம ரிஷியும் வந்து சேர்ந்தார். அவரை வணங்கி பரீக்ஷித்து யோசனை கேட்க அவர் ”ஒரு வாரத்தில மோக்ஷம் கிடைக்க மிகச்சுலபமான வழி, பகவானைப் பற்றிய பத்திக் கதைகள் கேட்பது ஒன்றே ஒன்று மட்டும் தான்” என்று சொல்லி, பாகவதக்கதை சொல்ல ஆரம்பித்தார்.


ஒன்பதாவது அத்தியாயக் கடைசியிலே சுகர் ஸ்ரீகிருஷ்ணரோட பெருமைகளை சுருக்கமாகச் சொன்னார். 


"நான் ஹரிசந்திரன், துஷ்யந்தன், சூரிய குல மன்னர்கள், சந்திர குல மன்னர்கள் கதை எல்லாம் கேட்டபோது, எப்போ ஸ்ரீகிருஷ்ணர் கதை வரும்னு காத்துக்கிட்டு இருந்தேன்; 


என் உறவினர்கள் எல்லோருமே ஸ்ரீகிருஷ்ண பக்தியைப்பற்றி எவ்வளவோ உயர்வாகச் சொல்லி இருக்கிறார்கள்;  ஸ்ரீ கிருஷ்ணரின் கதையை கேக்கத்தான் நான் இதுவரை உயிர் பிழைத்து இருக்கிறேன் போலத் தோன்றுகிறது. அதனால ஸ்ரீ கிருஷ்ணா அவதாரக் கதையை எனக்கு தாங்கள் விரிவாகச் சொல்லுங்கள்" என்று மிகவும் ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார். 


ரொம்பவும் சந்தோஷப்பட்ட சுகர் ஸ்ரீ கிருஷ்ணா அவதாரக் கதையை விஸ்தாரமாகச் சொல்ல [10 வது அத்தியாயம்] ஸ்ரத்தையோட கேட்ட பரிக்ஷித்து மோக்ஷம் அடைந்தார். 



[ இந்தப் புராணக்கதைகளை தக்க நேரத்தில் எனக்கு அளித்து உதவியவரும்,  
அடிக்கடி இந்த ஸ்ரீமத் ஸப்தாகத்தைத் தானே பாராயணம் செய்து வருபவருமான 
என் அன்புக்குரிய தோழியின் கருணைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.  vgk  ]

36 கருத்துகள்:

  1. பாகவத சப்தாகம் பற்றிய விவரங்கள் அருமையாக இருக்கு.

    கதையும் மிக சுவாரசியமாக போகிறது.பெரியவரின் மனைவி எப்படி இறந்தார் என்பது பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. “நம் எல்லோருக்குமே ஓரளவுக்கு நம் பிறந்த நாள், நம் பெற்றோர்கள் வாயிலாகத் தெரிந்திருக்கும். ஆனால் நாம் இறக்கப்போகும் நாள் நம்மில் யாருக்காவது தெரியுமா/

    சாகிற நாள் தெரிந்து கொண்டால் வாழுகிற நாட்கள் நரகமாகிவிடும்
    என்பது பிரபலமானவரின்
    பிரபல மொழி.

    பதிலளிநீக்கு
  3. "நான் ஹரிசந்திரன், துஷ்யந்தன், சூரிய குல மன்னர்கள், சந்திர குல மன்னர்கள் கதை எல்லாம் கேட்டபோது, எப்போ ஸ்ரீகிருஷ்ணர் கதை வரும்னு காத்துக்கிட்டு இருந்தேன்; //

    பாகவதம் வாசிக்க ஆரம்பிக்கும் போது அதிர்ச்சியாக இருக்கும்..
    பாண்டவர்கள் தங்கள் இறுதி நாட்களை முடிக்கும் நோக்கில் செல்லுவதில் ஆரம்பிக்கும்...

    பதிலளிநீக்கு
  4. தனக்கு வரப்போகும் மரணத்தைப் பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிந்த தாங்கள் உண்மையிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியும், பாக்கியசாலியும் ஆவீர்கள்./

    அடுத்த நிமிடம் உயிரோடு இருப்போமா என்று யாருக்கும் நிச்சயமில்லாத போது
    ப்ரீட்சித்து இன்னும் ஏழு நாட்கள் நிச்சயம் உயிரோடு இருப்பார். உயிருக்கு ஆபத்து இல்லை என்பது சத்திய வாக்காயிற்றே!

    பதிலளிநீக்கு
  5. வேத பாடசாலை ஒன்று நடந்து வந்தது. அங்குள்ள சிறுவர்களுக்கு வேத பாடங்களுடன் தமிழ், கணிதம், ஆங்கிலம், கணிணி முதலியனவும் போதிக்கப்பட்டு வந்தன./

    காலத்திற்கு ஏற்றமாதிரி வாழ வேதவித்துக்களுக்கு த்ரும் பயிற்சிகளை அருமையாக உரைத்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  6. சஸ்பென்ஸுடன் இன்றும் கதை தொடர்கிறதே!

    பதிலளிநீக்கு
  7. என்ன இது, பரீக்ஷித் கதையை வேறு மாதிரி படித்திருக்கிறோமே என்று நினைத்தேன், கீழே அழகாக இரு கதை விளக்கங்கள்! அருமை!
    அரட்டை அவர்களின் பூர்வாசிரமம்(!!) என்னவோ? :-))

    அதிகபட்ச கதைகளை 'வம்சி' போட்டிக்கு அனுப்பியிருப்பதாகப் படித்தேன்! தனித் தொகுப்பாகவே உங்கள் கதைகள் வெளிவர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. கதை சுவாரஸ்யமாக செல்கிறது .
    இந்த அத்தியாயத்திலிருந்து அரட்டை ராமசாமிக்கு ஆராய்ச்சி ராமசாமி என்ற பட்ட பெயரை சூட்டலாம்

    பதிலளிநீக்கு
  9. மிகவும் ரசித்துக்கொண்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. வழமைபோல சுவாரஸ்யம்


    ////ஒருவரின் மரணம் என்பது யாராலும் எந்த காலத்திலும் தடுக்கவே முடியாதது. பிறந்தவர் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும். தனக்கு வரப்போகும் மரணத்தைப் பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிந்த தாங்கள் உண்மையிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியும், பாக்கியசாலியும் ஆவீர்கள். வேறு யாருக்குமே கிடைக்க முடியாத ஒரு பாக்யம் இது. யாருக்குமே இதுபோல தனக்கு மரணம் சம்பவிக்கப்போகும் நாள் முன்கூட்டியே தெரியும் சந்தர்ப்பம் அமையவே அமையாது;
    /////

    இதுதான் கொடுமையான விடயம்.......இங்குதான் மன உறுதியின் உண்மை நிலை வெளிப்படும்...

    பதிலளிநீக்கு
  11. சுவாரஸ்யமான கதையுடன்
    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய
    பரீட்ஷித்து மகாராஜாவின் கதையையும்
    இணைத்துச் சொன்ன விதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 4

    பதிலளிநீக்கு
  12. கதைக்குள்ளேயே கதை சொல்லும் விதம் அருமை. கடைசி பகுதிக்காக என்ன சர்ப்ரைஸ் வைத்திருக்கிறீர்கள். ?

    பதிலளிநீக்கு
  13. அரட்டையாரின் ஆர்வம் எங்களுக்கும் இருக்கிறது. தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  14. மிக பரபரப்பாய் போய்க் கொண்டிருக்கிறது..
    கூடவே புராண விளக்கங்களும்..
    கதையில் உங்களுக்கான தனி முத்திரை பதித்து வருகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  15. கதை அருமை. கதையின் போக்கு சரளமாய் போகிறது.
    முடிவை அறிய ஆவலை தூண்டுகிறது.

    புராணகதைகள் தெரியாதவர்களுக்கு நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  16. மிக பரபரப்பாய் போய்க் கொண்டிருக்கிறது..
    கூடவே புராண விளக்கங்களும்..
    கதையில் உங்களுக்கான தனி முத்திரை பதித்து வருகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  17. கேட்பதற்கும் படிப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  18. சப்தாகம் பற்றிய விவரங்கள் அருமை... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  19. இந்த நான்காம் பாகத்தில் மிக மிக பயனுள்ள யாருக்கும் தெரியாத ஒரு அற்புதமான விஷயத்தை பகிர்ந்திருக்கிறீர்கள் அண்ணா... பாகவதம் படிப்பதைப்பற்றியும்.. பாகவதம் என்றால் என்ன, மூல பாராயணம் என்றால் என்ன உபன்யாசம் என்றால் என்ன என்பதை மிகத்தெளிவாக எல்லோரும் புரிந்துக்கொள்ளும் வகையில் சொல்லி இருக்கீங்க. நம்ம கதையின் நாயகன் ஹீரோ எப்பவும் ஒரு துறுதுறுப்பான கேரக்டராகவும், வயதாகிவிட்டால் வெந்ததை தின்னுவிட்டு சோர்ந்து மூலையில் உட்காரும் முதியோர் இல்லை நான் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் வித்தியாசமான ஒரு மனிதராக (இளைஞராக) காட்டி இருக்கீங்க. எப்படி என்றால்....

    எதார்த்தத்தில் ஒரு மனிதர் வாழ்க்கையில் அடி மேல் அடித்த சோகங்களின் தொடர்ச்சியில் ஒன்று தன்னை முடக்கிக்கொண்டு படுக்கையே கதியாக இருப்பார்.. இல்லன்னா தன் சோகங்களை சொல்லி தன்னைத்தேற்ற ஆள் தேடிக்கொண்டு இருப்பார்.. ஆனால் இவர் ரொம்ப வித்தியாசமானவரா இருக்கார். மனைவி இறந்த சோகம் மனதில் ஒரு பக்கம், மகன் பாராமுகமாக தன்னை இங்கே கொண்டு வந்து விட்டுச்சென்ற வெறுமை... இதெல்லாம் மனதில் மண்டிக்கிடந்தாலும் சோர்ந்துப்போய் விடாமல் மெல்ல நடந்து பக்கத்தில் இருக்கும் வேத பாடச்சாலை இருப்பதை கவனித்திருக்கிறாரே.. இவ்வளவு ஏன் அரட்டை ராமசாமியும் இன்னும் சிலரும் அங்கே தானே இத்தனை வருடங்கள் இருந்தார்கள்.. ஆனால் அவர்களுக்கு ஏன் இதைப்பற்றி தெரியாமல் போனது? இதில் இருந்து ஆரம்பிக்கிறது பெரியவரின் குணாதிசயங்களில் ஒன்றான துறுதுறுப்பான இந்த கேரக்டர்....

    முதல் பாகத்தில் மகனின் வெறுப்பை சம்பாதித்த பாசத்தில் தோற்ற ஒரு அப்பாவாக.... மனைவியை இழந்த (தாயிழந்த கன்றுக்குட்டியின் நிலை) கணவராக.... இரண்டாவது பாகத்தில் சர்க்கரை நோயாளிக்கு சட்டென உதவி ஹீரோ லெவலுக்கு உயர்ந்த உதவும் கரங்களாக... மூன்றாம் பாகத்தில் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வை எல்லோருக்கும் பகிரும் ஒரு நல்ல ஆசானாக இடை இடையே தனக்கும் தன் ப்ரியசகிக்குமான அன்பை, நேசத்தை பகிர்ந்த ஒரு நல்ல மனிதராக.. தன்னைப்பற்றிய குறைகளை கூட நேர்மையாய் உரைக்கும் உண்மையானவராக.. நான்காம் பாகத்திலோ இப்ப இருக்கும் இந்த கலியுலகத்துக்கு மிக கட்டாயமாக தேவையான ஸ்ரீமத் பாகவதம் பற்றி அறியத்தரும் ஒரு பண்டிதராக.....

    பதிலளிநீக்கு
  20. இடைச்செருகலாக அரட்டை ராமசாமிக்கு பொறுக்கலை.. அப்படி என்னதான் மர்மம் இருக்குன்னு தெரிஞ்சுக்கிறதுல இருக்கிற ஆர்வக்கோளாறு இன்னொருத்தர் ரகசியங்களை ஆராய வெச்சுட்டுதே.. தப்பு தப்பு.. இது ரொம்ப தப்பு... அரட்டை ராமசாமி ஏன் இப்படி செய்கிறார்? எப்படியும் கதையாசிரியர் கடைசி பகுதியில் தான் சஸ்பென்ஸ் உடைக்கபோகிறார்... ஆனால் அதுவரை சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாமல் கதையை நகர்த்தும் விதம் ஆஹா மிக மிக சிறப்பு...

    பாகவதம் ஸ்கந்தங்கள் நிறைந்தது.. சமஸ்கிரதத்தில் ஸ்லோகம் போல் இருக்கும்... அதை படிக்க சிரமமாகவும் இருக்கும்... ஹரே உங்கக்கிட்ட எனக்கு மிகவும் பிடித்த ஒரு அம்சம் சொல்லியே ஆகணும் அண்ணா.. ஒரு விஷயம் பற்றி சொல்லும்போது அதன் நிறை குறைகளை, அதைப்பற்றிய விவரங்களை மிக அழகாக தெள்ளத்தெளிவாக யாரும் எதிர்க்கேள்விகள் கேட்கவிடாமல் எழுதி விடுகிறீர்கள் இதோ இங்கேயும்... பாகவதம் பக்கத்துல உபன்யாசம் சொல்றா... அப்டின்னு நிறுத்தாம மூல பாராயணம் உட்கார்ந்துட்டு கேட்கமுடியாது முதியவர்களால் என்றும் அவர்களுக்கு உடல் அதற்கு இடம் கொடுக்காது என்றும் அதற்கு காரணமும் சொல்லி அதாவது முதியவர்கள் ரொம்ப நேரம் உட்கார்ந்து முதுகொடிய கேட்க இயலாது, கால் நீட்டி மடக்க முடியாது, இடுப்பு வலிக்கும் இதுபோன்ற அசௌகர்யங்கள் பற்றிய தெளிவான பகிர்வு... அதோடு பாகவதம் எப்படி தோன்றியது என்பதற்காக கீழே அதன் இரு கதைகளை மிக விரிவாக எல்லோருமே ரசிக்கும் விதமாக தந்த தங்கள் இந்த பகிர்வு மிக மிக அருமை... நானும் பாகவதம் படித்துக்கொண்டு இருக்கிறேன் அண்ணா இரண்டு வருடங்களாக... இந்த பகிர்வைப்பற்றி எழுதும்போது இதை எழுத உதவியவர்களையும் மறக்காமல் குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றி சொல்லவும் மறப்பதில்லை நீங்கள்.. இதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த அம்சம்... அன்று மற்றொரு பகிர்வில் கூட இப்படி தான் உங்கள் எழுத்துலக பிரவேசம் பற்றி எழுதிய போது அங்கு ரிஷபன் தான் உங்களை வலைப்பூவில் எழுத தூண்டுகோலோக இருந்தார் என்று சொல்லி அவருக்கு நன்றிகள் சொல்லவும் மறக்கவில்லை.. நிறைய நற்குணங்கள் அறியமுடிகிறது. தங்களிடம் இருந்து கற்க வேண்டிய நல்லவை இவை எல்லாம்....

    அடுத்து என்னாகும்??

    அன்பு நன்றிகள் அண்ணா அருமையான பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  21. அன்புச் சகோதரி மஞ்சு, வாருங்கள், வணக்கம்.

    நேற்று [17.09.2012] இரவு தான் குவைத்திலிருந்து திருச்சிக்கு ஃபோன் போட்டு, இந்தப்பகுதியைப்பற்றி சிலாகித்து நெடுநேரம் என்னுடன் தொலைபேசியில் பேசினீர்கள்.

    இன்று இவ்வளவு மிகப்பெரிய பின்னூட்டம் வேறு தந்துள்ளீர்கள்!

    அடடா என் தங்கை மஞ்சுவின் பிஞ்சு விரல்களுக்கு வலி ஏற்படாதா?

    ஆண்டவா! இப்படியொரு அன்புத்தங்கையாக மஞ்சுவைப் படைத்து எனக்கு அடையாளம் காட்டியுள்ளாயே ... நான் இதற்கு என்ன தவம் செய்தேனோ?

    //இந்த பகிர்வைப்பற்றி எழுதும்போது இதை எழுத உதவியவர்களையும் மறக்காமல் குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றி சொல்லவும் மறப்பதில்லை நீங்கள்.. இதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த அம்சம்...//

    நன்றி மறப்பது நன்றன்று அல்லவா, மஞ்சு.

    நான் எந்தவொரு சிறு சம்பவத்தையும், எதையுமே, யாரையுமே, எப்போதுமே மறக்கக்கூடியவனே அல்ல. அதுவும் என் மனதுக்குப் பிடித்தவர்கள் என்றால், அவர்கள் விட்டாலும் நான் விடவே மாட்டேன்.

    என்னால் முடிந்தவரை, நான் அவர்கள் பார்வையில் மிகவும் தாழ்ந்து போக நேர்ந்தாலும் கூட, அவர்களை மிக உயர்வாகவே என் மனதில் எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பேன்.

    அது எனக்குக் கிடைத்துள்ள மாபெரும் Gift of God. ஒரு சிலரால் மட்டுமே என்னுடைய நல்ல குணங்களையும், தூய எண்ணங்களையும் முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியும்.

    தங்களின் அன்பான வருகைக்கும் மிகவும் நீ....ண்....ட தொரு பின்னூட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள், மஞ்சு.

    பிரியமுள்ள
    VGK

    பதிலளிநீக்கு
  22. இந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து ஆதரவாகக் கருத்தளித்து என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ள என் [அன்புத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும்] அனைத்துச் சொந்தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சொந்தம் .... எப்போதும் தொடர் ... கதைதான்!

    முடிவே ..... இல்லாதது!!

    பிரியமுள்ள
    VGK

    பதிலளிநீக்கு
  23. //ஹரே உங்கக்கிட்ட எனக்கு மிகவும் பிடித்த ஒரு அம்சம் சொல்லியே ஆகணும் அண்ணா.. ஒரு விஷயம் பற்றி சொல்லும்போது அதன் நிறை குறைகளை, அதைப்பற்றிய விவரங்களை மிக அழகாக தெள்ளத்தெளிவாக யாரும் எதிர்க்கேள்விகள் கேட்கவிடாமல் எழுதி விடுகிறீர்கள்//

    தங்களின் புரிதலுக்கு நன்றி. அதற்கான உதாரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    //நானும் பாகவதம் படித்துக்கொண்டு இருக்கிறேன் அண்ணா இரண்டு வருடங்களாக... //

    அப்படியா! மிகவும் சந்தோஷம் மஞ்சு. நாங்களும் வேதம், பாகவதம், நாராயணீயம், ஸ்ரீமத் ராமாயணம் போன்ற ஸத்சங்கத் தொடர்புகளில் ஈடுபாடுள்ள முன்னோர்களின் பாதையில் வந்த வழித்தோன்றலாக இருப்பதனால், இப்போது உங்களையும் ஏற்கனவே வேறுசிலரையும் என் மனதுக்குப் பிடித்தமான நட்புக்களாக நான் நினைத்ததில் வியப்பேதும் இல்லை தான்.

    எல்லாம் தெய்வ சங்கல்ப்பம் தான். கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    VGK

    பதிலளிநீக்கு
  24. பாகவத சப்தாகம் சிரவணம் செய்வது எல்லோருக்கும் கிடைக்காத பாக்கியம் ஆகும். அது நம் பெரியவருக்கு கிடைத்தது அவர் செய்த புண்ணியம்.

    பதிலளிநீக்கு
  25. புராணக் கதைகள் நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு என்பது உண்மையே, தொடர் நன்றாகவே போய்க்கொண்டு இருக்கிறது. அதிலும் கீழே சொன்ன இரண்டு கதைகளும் சூப்பர். நான் சின்ன வயதில் வாய்வழியாகவே கேட்டுள்ளேன். மேலும் பரிக்ஷித்மகாராஜா தான் நல்லவர் என்பர்.மகாபாரத வாரிசுகளிலே சரியானவர் என்று, சரி. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mageswari balachandran May 6, 2015 at 11:13 AM

      வாங்கோ, வணக்கம்.

      //புராணக் கதைகள் நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு என்பது உண்மையே, தொடர் நன்றாகவே போய்க்கொண்டு இருக்கிறது.//

      மிக்க மகிழ்ச்சி.

      //அதிலும் கீழே சொன்ன இரண்டு கதைகளும் சூப்பர்.//

      அந்த இரண்டு கதைகளையும் எனக்குத் தக்க நேரத்தில் அனுப்பி உதவிய நட்பினை இப்போது மீண்டும் நன்றியுடன் நினைத்து மகிழ்கிறேன்.

      //நான் சின்ன வயதில் வாய்வழியாகவே கேட்டுள்ளேன். மேலும் பரிக்ஷித்மகாராஜா தான் நல்லவர் என்பர். மகாபாரத வாரிசுகளிலே சரியானவர் என்று, சரி. தொடர்கிறேன்.//

      தொடர்ந்து படியுங்கோ .... மிக்க நன்றி + மகிழ்ச்சி. :)

      நீக்கு
  26. அரட்டைக்காரரு இங்கிதமில்லாத ஆளா இருக்காரே. மத்தவங்க பொருட்களை அவங்க இல்லாத நேரம் இப்படி குடையலாமோ. ஸாப்தாகம் பூனாவில் இருக்கும் போது கேட்டிருக்கேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 19, 2015 at 6:32 PM

      வாங்கோ சிவகாமி, வணக்கம்மா

      //அரட்டைக்காரரு இங்கிதமில்லாத ஆளா இருக்காரே. மத்தவங்க பொருட்களை அவங்க இல்லாத நேரம் இப்படி குடையலாமோ.//

      அதானே, மற்றவாப் பொருட்களைப்போய் இப்படிக் குடையலாமோ ! :)

      //ஸப்தாகம் பூனாவில் இருக்கும் போது கேட்டிருக்கேன்//

      புண்ணியாத்மா தான் பூந்தளிர் அவர்கள்.

      மிக்க மகிழ்ச்சிம்மா. :)

      நீக்கு
  27. என்னடா இந்த வாசகர்களுக்கு வந்த சோதனை.

    கதையில், கிளைக்கதையை சொல்லி சஸ்பென்சை அப்படியே வெச்சுட்டாரே.

    சரி நல்ல விஷயங்களைதானே தெரிஞ்சுண்டோம்.

    அவசரப்படாதே மனமே, கொஞ்சம் பொறு.

    அடுத்த பகுதிக்குப் போகலாம். கடைசி பகுதியாம். அதுல கண்டிப்பா சஸ்பென்சை உடைச்சுத்தானே ஆகணும்.

    பதிலளிநீக்கு
  28. அரட்ட ஆளு பண்ணினது தப்புங்க. மத்தவங்க அனுபதி இல்லாத அவங்க பொருட்கள கொடஞ்சு பாக்க கூடாதில்ல. ஸாபதாகம்லா சரியா வெளங்கிகிட ஏலல. மவுத் ஆகுர நாளு தெரிஞ்சு போட்டா இருக்குர நாளுலகூட அதே நெனப்பால்ல இருக்கும்

    பதிலளிநீக்கு
  29. பிறக்கும் யாருக்குமே இறக்கிற நாள் தரியாதுதான். இந்த இடத்தில் பரீஷித்து ராஜா கதையைச் சொன்னது பொருத்தம்.. நல்ல நல்ல விஷயங்கள நிறய தெரிஞ்சுக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
  30. கதையின் போக்கு சுவாரசியம்...கிளைக்கும் புராணக் கதைகளும்கூட...

    பதிலளிநீக்கு