என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 12 நவம்பர், 2011

நல்ல காலம் பிறக்குது !





நல்ல காலம் பிறக்குது !

[ சிறுகதை ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




"நல்ல காலம் பொறக்குது .... நல்ல காலம் பொறக்குது ..... வடக்கேந்து நல்ல சேதி வருகுது .... இந்த வூட்டு அம்மா எங்கேயே போகப்போகுது ... எட்டாக்கைப் பயணம் கைகூடப்போகுது ... நல்ல காலம் பொறக்குது ... நல்ல காலம் பொறக்குது” குடுகுடுப்பைக்காரரின் தொடர்ச்சியான அலறலால் மங்களத்து மாமி வெளியே வந்து எட்டிப்பார்த்தாள். 

”இந்தப்பெரியம்மாவுக்கு நல்ல காலம் பொறக்குது ... அரிசி பருப்போடு காசும் கொண்டாந்து போடுங்க ....! எட்டாக்கைப் பயணம் கைகூடப்போவுது. இந்தப் பெரியம்மா ப்ளேனில் பறக்கப்போகுது; 


ஜக்கம்மாவுக்கு அந்த கொடியிலே உள்ள புடவையைக் கழட்டிச் சுருட்டிப் போடுங்க! வெளியூர் போயிருக்கிற சின்னம்மாவுக்கு கல்யாணம் கூடி வருகுது; 


இந்த ஜக்கையாவுக்கு ஒரு பெரிய துண்டு இருந்தா போடுங்க! நல்ல காலம் பொறக்குது ... நல்ல சேதி வருகுது .... நாலு வீட்டுக்கு நல்ல சேதி சொல்லப்போகணும் ... நாழியாச்சு ... ஜக்கம்மாவுக்குப் போட வேண்டியதைப்போட்டு சீக்கரமா அனுப்பி வையுங்க! 


வஸ்திரத்தைப் போடுங்க; அரிசி பருப்பும் போடுங்க; காசு பணம் கொடுத்திடுங்க; அமெரிக்காவுக்குப் பயணம் போகப்போறீங்க .... புடவையைச் சுருட்டித் துண்டோட போடுங்க” என குடுகுடுப்பைக்காரர் சொல்லச்சொல்ல, மங்களத்தம்மா அவர் கேட்ட ஒவ்வொன்றாக போட ஆரம்பித்தாள். இதையெல்லாம் எதிர்புற மாடி வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த, எம்.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் படித்து வரும், ராஜிக்குச் சிரிப்பாய் வந்தது.

மங்களத்து மாமியைப்பற்றி ராஜிக்கு ரொம்ப நல்லாத்தெரியும். ராஜியின் தாயாரும் நிறையவே நிறைவாகச் சொல்லியிருக்கிறார்கள்.சின்ன வயதிலேயே வயிற்றில் குழந்தையைச் சுமந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதே, கணவனை இழந்து விதவையானவள். பொறுமையில் பூமாதேவி. சமையல் வேலைகளிலும், பட்சணங்கள் முதலியன செய்வதிலும் கை தேர்ந்தவள். 

கணவனை இழந்த மங்களம் மாமி பலர் வீடுகளில் பல்வேறு விசேஷங்களுக்கு, அடுப்படியின் அனலில் வெந்து, உழைத்து உழைத்து ஓடாகி, தான் படிக்காவிட்டாலும், தன் ஒரே மகள் பத்மாவை நன்கு படிக்க வைத்து, இன்று அவள் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் இஞ்சினியர் ஆகி கை நிறைய சம்பாதிக்கப் பட்டணம் போய் ஒரு மாதமே ஆகிறது. 


இந்த ஊரிலேயே இதுவரை வாழ்ந்து வந்துள்ள மங்களம் மாமி, இனி தன் பெண்ணுடன் சேர்ந்து வாழ சென்னைக்குச் சென்றாலும் செல்லலாம். அதைத்தான் அந்த குடுகுடுப்பைக்காரர் சொல்கிறாரோ என்னவோ, என ராஜி தன் மனதில் நினைத்துக் கொண்டாள்.

மதியம் மங்களத்து மாமி வீட்டுக்கு ராஜி வந்தாள். உள்ளே நுழையும் போதே ஏலக்காயுடன் வெல்லப்பாகு வாசனை மூக்கைத்துளைத்தது.

“வாடி, ராஜி ..... வா” அடுப்படியில் பாகு கிளறிக்கொண்டே, மங்களத்து மாமி ராஜியை வரவேற்றாள். 

தோல் நீக்கிய வேர்க்கடலைப் பருப்புக்களை வெல்லப்பாகில் போட்டு கலந்து சூட்டோடு இறக்கி, பருப்புத்தேங்காய்க் கூடுகளில் அடைக்க ஆரம்பித்தாள், மாமி.


சூடாக ஒரு உருண்டை பிடித்து, ராஜியிடம் கொடுத்து சாம்பிள் பார்க்கச் சொன்னாள்.

”சூப்பர் டேஸ்ட் மாமி” என்று சொல்லி மங்களத்து மாமியின் கைகளைப் பிடித்து முத்தமிட்டாள், ராஜி.

”நம்ம டாக்டர் வீட்டுப்பொண்ணுக்கு நிச்சயதார்த்தம். நாலு ஜோடி பருப்புத்தேங்காய் பிடித்துத் தரணுமாம். கடலைக்காய் முடிஞ்சுது. பர்பிக்காய், லாடுகாய், மனோரக்கா மூணும் இனிமேல் தான் பிடிக்கணும். கூடமாட எனக்கு ஒத்தாசையா நம்ம பத்மா இருந்தாள். அவள் இல்லாதது இப்போ வீடே விருச்சோன்னு இருக்கு” என்றாள் மாமி.

”என்ன மாமி, அமெரிக்கா போகப்போறேளாமே! கேள்விப்பட்டேன். என்னிடம் சொல்லவே இல்லையே நீங்கள்!!” என்றாள் ராஜி.

“அமெரிக்கா எங்கே இருக்கு? நம்ம ஊரிலேந்து எவ்வளவு தூரம்? பஸ்ஸிலே போகணுமா, ரயிலிலே போகணுமா? எவ்வளவு மணி நேரம் பயணம் செய்யணும்?  காசிக்குப்போகணும்னு எனக்கு வெகு நாளா ஒரு ஆசை உண்டு; 


இந்த அமெரிக்கா காசி தாண்டியிருக்குமா? காசிக்கு முன்னாலேயே இருக்குமா? மங்களத்து மாமி அப்பாவித்தனமாகக் கேட்டாள். ராஜிக்கு ஒரே சிரிப்பாக வந்தது.

”ஏதோ குடுகுடுப்பைக்காரன் காலம் கார்த்தாலே வந்து, நல்ல காலம் பொறக்குது, நல்ல சேதி வருகுதுன்னு, ஏதேதோ நாலு நல்ல வார்த்தைகள் சொல்லிப்போனான். சரின்னு சந்தோஷத்திலே, அவனுக்கு கொஞ்சம் அரிசி, பருப்பு, ஐந்து ரூபாய்ப் பணம், பத்மாவின் பழைய புடவை ஒண்ணு, தலை தவிட்டும் துண்டு ஒண்ணுன்னு எல்லாவற்றையும் அவனுக்குக் கொடுத்து அனுப்பி வெச்சேன்;

’துணி போனாப் பிணி போனாப்போல’ன்னு சொல்லுவா. அவன் கேட்கிறதைக் கொடுத்துடணும்; இல்லாவிட்டால் கோபத்திலே ஏதாவது தப்புத்தப்பா சொல்லிட்டுப் போயிடுவான். அப்புறம் நமக்கு மனசு ரொம்ப சங்கடப்பட ஆரம்பித்து விடும். சமயத்துலே இந்தக் குடுகுடுப்பைக்காரன் சொல்லுவதெல்லாம் அப்படியே பலிச்சிடும்னு எங்க அம்மா சொல்லுவா” மங்களத்து மாமி ராஜியிடம் சொன்னாள். 


மாமிக்கு யாரையுமே சந்தேகிக்கத் தெரியாது. நல்லதே நினைப்பாள்; நல்லதே செய்வாள்; நல்லதே பேசுவாள். அவ்வளவு ஒரு அப்பாவித்தனம். நல்ல மனுஷி. 


மாமிக்கும் அதுபோலவே நல்ல காலம் பிறந்து, நல்லபடியாக அவர்கள் சந்தோஷமாக இருக்கணும், ராஜி மனதார வேண்டிக்கொண்டாள்.


நாட்கள் நகர்ந்தன. பத்மாவுக்கு அவளுடன் வேலை பார்க்கும் ஒரு நல்ல வரனாகவே அமைந்தது. பிள்ளை வீட்டாருக்குப் பெண்ணைப் பார்த்ததும்  முழுத்திருப்தியாகிவிட்டது. 


பிள்ளை வீட்டார் பெரிய இடம். அவர்கள் மனசும் விசாலம். அதனால் அவர்கள் செலவிலேயே வெகுவிமரிசையாக, படு அமர்க்களமாக [பத்மாவைக் கொத்திக்கொண்டு போய்] திருமணம் செய்து கொண்டு விட்டார்கள்.  


பிரியமான தன் பெண்ணைப் பிரிய வேண்டி வருமே என்ற விசாரம் ஒரு பக்கம் இருந்தாலும், நல்ல இடமாக அமைந்ததில் மங்களத்து மாமிக்கும் இதில் மிகவும் மகிழ்ச்சியே.


பத்மாவும் அவள் கணவனும் ஒரு ஸ்பெஷல் ப்ராஜக்ட் செய்ய, அந்தக் கம்பெனியால் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


இதன் நடுவில் பத்மா கருவுற்றிருப்பதாக இனிய செய்தி வந்தது.  மங்களத்து மாமி வீட்டில் புதிதாக டெலிபோன் கனெக்‌ஷன், கம்ப்யூட்டர் கனெக்‌ஷன், இண்டெர்நெட் கனெக்‌ஷன், வெப் காமெரா, மைக், யூ.பீ.எஸ். என அனைத்து நவீன வசதிகளும் சம்பந்தி வீட்டாரால் செய்து தரப்பட்டது.


விஷயம் தெரிந்த ராஜியால் அவைகள் கையாளப்பட்டு, மங்களத்து மாமியால் தினமும் தன் பெண் பத்மாவையும், மாப்பிள்ளையையும் கேமரா மூலம் கம்ப்யூட்டர் திரையில் கண்டு களிக்கவும், மைக்கில் பேசி மகிழவும் முடிந்தது.


சம்பந்தி வீட்டாரால் மங்களத்து மாமிக்கு பாஸ்போர்ட் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது. வளைகாப்பு சீமந்தம் எல்லாம் அமெரிக்காவிலேயாம். சம்பந்திப் பேர்களுடன் மங்களத்து மாமியும் புறப்பட்டுப்போக வேண்டுமாம். பிறகு பிரஸவம் முடியும் வரை அங்கேயே இருக்க வேண்டுமாம். 


பேரனையோ பேத்தியையோ கொஞ்சி மகிழ வேண்டுமாம். பத்மாவும், மாப்பிள்ளையும் பிராஜக்ட் முடிந்து திரும்பி வரும்போது, அவர்கள் துணையுடன் ஊருக்குத் திரும்ப வேண்டுமாம். அதற்குத் தகுந்தாற்போல விசா ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்களாம்.


இதைக் கேள்விப்பட்ட ராஜிக்கு மிகவும் வியப்பாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.  அப்பாவியான இந்த மாமிக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பும், அதிர்ஷ்டமும் வாய்த்துள்ளதை நினைத்து மிகவும் ஆச்சர்யப்பட்டாள்.


மங்களத்து மாமி திரும்ப வரும் வரை மாமியின் வீடு, கம்ப்யூட்டர் முதலியன ராஜியின் முழுப்பொறுப்பில் விடப்பட்டன. மங்களத்து மாமியை விமானம் ஏற்றிவிட ராஜியும் விமான நிலையம் வரை போக காரில் ஏறிக் கொண்டாள்.


அவர்கள் கார் வீட்டைவிட்டுப் புறப்பட்டதும், எதிரே ‘நல்ல காலம் பொறக்குது ... நல்ல காலம் பொறக்குது ...’ என்று கூறியபடி அதே குடுகுடுப்பைக்காரன் வந்து கொண்டிருந்தான். 


மங்களத்து மாமி, ராஜியைப் பார்த்து ஒருவித அர்த்தபுஷ்டியுடன் சிரித்தாள். விமானம் மங்களத்து மாமியுடன் மங்களகரமாக பறக்கத் தொடங்கியது.







மங்களத்து மாமியை பல பெரிய பெரிய பணக்காரர்கள் காரில் தேடிக்கொண்டு வந்தனர். மாமி இல்லாததைக் கேட்டதும் மயக்கம் போடாத குறையாக ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாமியின் சேவை அவர்களுக்கு உடனேயே தேவை போலும். 


அவரவர்கள் வீட்டில் பலவித விழாக்கள், நிகழ்ச்சிகள், உபநயனம், நிச்சயதார்த்தம், பூப்பு நீராட்டு விழா, கல்யாணம், வளைகாப்பு, சீமந்தம், புண்ணியாவாசனம், ஆயுஷ்ஹோமம், விருந்தினர் வருகை, திவசம், பெரிய காரியம் போன்றவைகள் போலும்.


அனுமாருக்கு வடை மாலை சாத்தணும், பிள்ளையாருக்கு 1008 நெய் கொழுக்கட்டை படைக்கணும் என்று வேண்டிக்கொண்டு, அவற்றைப் பொறுப்பாக செய்து தந்திட மங்களத்து மாமியையே மலை போல நம்பியிருந்தவர்கள் பாடு இப்போது திண்டாட்டமாகவே ஆகிவிட்டது.


எல்லோரிடமும் இன்று பணம் உள்ளது. உடம்பில் பலம் இல்லை. தங்கள் வீட்டுக்காரியங்களைத் தாங்களே இழுத்துப்போட்டுச் செய்ய உடலும், உள்ளமும் ஒத்துழைப்பதில்லை. எதற்கெடுத்தாலும் எப்போதும் காண்ட்ராக்ட் விட்டே பழக்கமாகி விட்டது. 


மிகச்சாதாரண அன்றாட விட்டுச் சமையலுக்கே ஆள் போட்டுப் பழகி விடுகின்றனர். பெரும்படியான விசேஷங்கள் என்றால் மிகவும் மலைப்பாகவும் அதைர்யமாகவும் உள்ளது அவர்களுக்கு.  உடம்பில் வலுவுமின்றி, மனதில் தைர்யமும் இன்றி மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.


ருசிக்கும், கைராசிக்கும், கைப்பக்குவத்திற்கும் நம் மங்களத்து மாமியையே முழுமையாக நம்பியிருந்தவர்கள் அல்லவா, இவர்கள்! அதுவும் ஒருசில வீட்டுப்பெண்மணிகளுக்கு, அவர்கள் வீட்டு விசேஷ நாட்களில் மடிசார் புடவை கட்டிவிடுவது கூட, இந்த மங்களத்து மாமியின் வேலை தான் என்று ராஜி கேள்விப்பட்டிருந்தாள்.


ஒருசில அவசர அறுவை சிகிச்சைகளுக்கு, வெவ்வேறு நாடுகளிலிருந்து ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களை உடனடியாக வரவழைப்பார்களே! அது போலஇந்தப் பணக்காரர்களும், மங்களம் மாமியை அமெரிக்காவிலிருந்து அவசரமாக அழைத்து வந்து விடுவார்களோ என்ற பயம் ராஜிக்கு ஏற்பட்டது.


தன் ஒரே பெண்ணுக்கு, பிரஸவ நேரத்தில் உதவிட வேண்டி, ஒரு நிர்பந்தமாக அபூர்வமாக அமெரிக்கா சென்றுள்ள மாமி, அங்கேயாவது சற்று நிம்மதியாக இருந்துவிட்டு வரட்டும் என எண்ணி, மாமியின் தற்போதய விலாசமோ, தொலைபேசி எண்களோ, மின்னஞ்சல் முகவரியோ யாருக்கும் தராமல் இருந்து விட்டாள், ராஜி.


அமெரிக்காவிலிருந்து வந்த வீடியோப்படங்களில், மங்களம் மாமி சுடிதார், நைட்டி என நவநாகரீக உடைகள் அணிந்து கொண்டு, மிகவும் அழகாகத் தோன்றினார்கள். பத்மாவை விட மங்களம் மாமி மிகவும் அழகாகவும் இளமையாகவும் இருப்பது போலத் தோன்றியது ராஜிக்கு.


அமெரிக்க அரசாங்கம் மட்டும், மங்களத்து மாமிக்கு க்ரீன் கார்டு கொடுத்து அங்கேயே நிரந்தரமாகத் தங்க வைத்துக்கொண்டால்,  தன் கைராசியான ருசிமிக்க உணவுகள் தயாரிக்கும் தனித்திறமையால், அமெரிக்க மக்களையும் அசத்தி, மிகச்சுலபமாக கோடீஸ்வரி ஆகிவிடுவார்கள், என்று நினைத்துக்கொண்டாள் ராஜி.


அப்போது நல்ல சகுனம் போன் டெலிபோன் மணியும் ஒலித்தது. ராஜி போனை எடுத்து பேசுவதற்குள் வாசலில்


”நல்ல காலம் பொறக்குது ... நல்ல காலம் பொறக்குது ... நல்ல சேதி வருகுது......” மீண்டும் வாசலில் குடுகுடுப்பைக்காரர் உடுக்கடித்த படி நிற்கிறார். 


பத்மாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக, மங்களத்து மாமியிடமிருந்து தான் டெலிபோன் வந்துள்ளது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? 




-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-








21. ”உத்திராடம்” நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்:- 


அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் 
திருக்கோயில். 
[மீனாக்ஷி அம்மன்] 


இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து 
காரைக்குடி செல்லும் வழியில் 
உள்ள (12 கி.மீ.,ஒக்கூர் சென்று, 
அங்கிருந்து பிரியும் ரோட்டில் 
3 கி.மீ., சென்றால் பூங்குடி 
என்ற ஊரில் உள்ளது.  
ஆட்டோ உண்டு.  


மதுரையில் இருந்து சென்றால் 
(45 கி.மீ.,இரண்டு மணி நேரத்திற்கு 
ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.

  


21/27

29 கருத்துகள்:

  1. //மாமிக்கு யாரையுமே சந்தேகிக்கத் தெரியாது. நல்லதே நினைப்பாள்; நல்லதே செய்வாள்; நல்லதே பேசுவாள். அவ்வளவு ஒரு அப்பாவித்தனம். நல்ல மனுஷி. //

    நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்

    பதிலளிநீக்கு
  2. //எல்லோரிடமும் இன்று பணம் உள்ளது. உடம்பில் பலம் இல்லை. தங்கள் வீட்டுக்காரியங்களைத் தாங்களே இழுத்துப்போட்டுச் செய்ய உடலும், உள்ளமும் ஒத்துழைப்பதில்லை. எதற்கெடுத்தாலும் எப்போதும் காண்ட்ராக்ட் விட்டே பழக்கமாகி விட்டது. //

    உண்மை.

    இப்பொழுது எல்லாமே காண்ட்ராக்ட்தான்.
    அருமையான கதை.நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு நல்லதே நடக்கும்.

    பதிலளிநீக்கு
  3. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்
    என்ற குணம் கொண்ட மங்களத்திற்கு,
    அதை படைத்த தங்களுக்கும் என
    வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்
    ,

    பதிலளிநீக்கு
  4. நல்லகாலம் பிறக்குது! – இன்று என் கண்ணில்பட்ட முதல் பதிவு! மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா! கதையிலும் ”மங்களம்” இருப்பதும், மங்களமாக கதை முடிந்திருப்பதும் நன்று!

    பதிலளிநீக்கு
  5. அப்பாவித்தனமான, நல்ல உள்ளம் கொண்டவர்களின் அன்பிற்குத் தானே ஆண்டவனே இறங்கி வருகிறான். அப்படித்தான், மங்களம் மாமிக்கும் நடந்திருக்கிறது.

    ராஜியின் நல்ல உள்ளத்தையும் சொல்லாமல் சொல்லிய விதம் அருமை சார்.

    பணத்தை மட்டுமே கொண்டு, அடுத்தவர்களின் உடல் பலத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு பலத்த சூடு வைத்திருக்கிறீர்கள்.

    இந்தக் கதையிலும் எப்போதும் போலவே நடை அழகு.

    நல்ல படைப்புக்கு நன்றி VGK சார்.

    பதிலளிநீக்கு
  6. //மாமிக்கு யாரையுமே சந்தேகிக்கத் தெரியாது. நல்லதே நினைப்பாள்; நல்லதே செய்வாள்; நல்லதே பேசுவாள். அவ்வளவு ஒரு அப்பாவித்தனம். நல்ல மனுஷி.
    //

    ரொம்ப பிடித்த வரி......
    மனசு நிறையும் கதை...உலகில் எல்லாருக்கும் நல்ல காலமாகவே இருக்கட்டும் என்று பிரார்த்திக்கத் தோன்றுகிறது. spreading postive vibe...நன்று.

    பதிலளிநீக்கு
  7. சிக்கு சிடுக்குகள் இல்லாமல் அழகாக கதை சொல்லும் முறை அருமை கோபு சார்.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் உதவும் மங்களம் மாமி நன்றாக இருக்கட்டும். நல்ல கதை சார்.

    பதிலளிநீக்கு
  9. பாஸிட்டிவ் வகை படைப்பு.அருமை

    பதிலளிநீக்கு
  10. மிகவும் அருமையான கதை .தோல் ////வெல்லப்பாகில் போட்டு கலந்து சூட்டோடு இறக்கி, பருப்புத்தேங்காய்க் கூடுகளில் அடைக்க ஆரம்பித்தாள்///

    எந்த சம்பவத்தை எழுதினாலும் அங்கே இருப்பது போன்ற பிரமை .இப்ப அம்மாவின் சமையலறை ....

    பதிலளிநீக்கு
  11. "நல்ல காலம் பொறக்குது .... நல்ல காலம் பொறக்குது ..... வடக்கேந்து நல்ல சேதி வருகுது .... இந்த வூட்டு அம்மா எங்கேயே போகப்போகுது ... எட்டாக்கைப் பயணம் கைகூடப்போகுது ... நல்ல காலம் பொறக்குது ... நல்ல காலம் பொறக்குது” /

    Very nice..

    பதிலளிநீக்கு
  12. உத்திராடம்” நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
    சென்று வழிபட வேண்டிய கோயில்:-


    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர்
    திருக்கோயில்.
    [மீனாக்ஷி அம்மன்] /

    very use-full..

    பதிலளிநீக்கு
  13. சில நல்ல வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருந்தாலும்
    கேட்டுக் கொண்டிருந்தாலும் நிச்சயம்
    நல்லது நடக்கிறது இது நான் கண் கூடாகக் கண்ட
    உண்மையே.அதை மிக நேர்த்தியாகச் சொல்லிப் போகும்
    அழகை மிகவும் ரசித்தேன் அருமையான பதிவு
    த.ம 10

    பதிலளிநீக்கு
  14. நல்லது நினைக்க நல்லதே நடந்திருக்கிறது.... நல்ல விஷயத்தினை அழகாய்ச் சொல்லி இருக்கீங்க....

    இப்பல்லாம் இந்த குடுகுடுப்பைக் காரர்களை பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது...

    பதிலளிநீக்கு
  15. நல்லது நினைத்தால் என்றும் மங்களமே...

    நல்ல கதை... ரசித்துப் படித்தேன்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் November 17, 2012 7:00 PM
      //நல்லது நினைத்தால் என்றும் மங்களமே...
      நல்ல கதை... ரசித்துப் படித்தேன்...
      நன்றி ஐயா...//

      ஆஹா! [அன்புடன்] உடன் வருகை தந்து படித்து விட்டுக் கருத்தளித்துள்ளது மிகவும் சந்தோஷமாக உள்ளது, நண்பரே!

      என் மனமார்ந்த நன்றிகள். என்றும் அன்புடன் தங்கள் VGK

      நீக்கு
  16. கள்ளம் கபடமில்லாத மனிதர்களுக்கு ஆண்டவன் நன்றாகவே கருணை பாலிக்கிறான்.

    பதிலளிநீக்கு
  17. ஆரம்பத்துல கஷ்டப்பட்டாலும் வயசு காலத்தில் சவுகரியமான வாழ்க்கை அமைந்தது மங்களம் மாமிக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 20, 2015 at 6:09 PM

      //ஆரம்பத்துல கஷ்டப்பட்டாலும் வயசு காலத்தில் செளகர்யமான வாழ்க்கை அமைந்தது மங்களம் மாமிக்கு//

      கரெக்டா சொல்லிட்டேள். ஆரம்பத்திலேயே சுகப்படும் வாழ்க்கை அமைந்திருந்தால் இன்னும் நன்னாத்தான் இருந்திருக்கும். என்ன செய்ய? எல்லோருக்கும் எல்லாமும் சரியாக அமைந்துவிடுவது இல்லையே ! அது தானே வாழ்க்கையின் மிகப்பெரிய சுவாரஸ்யமாகவும் எதிர்பார்ப்பாகவும் அமைந்து விடுகிறது.

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றீங்க.

      நீக்கு
  18. யதார்த்தம்.

    இன்று நாட்டில் நடப்பது தானே.

    எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம். மங்களம் மாமி இப்படி அமெரிக்கா வரை போய் அமர்க்களமாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
  19. ஹாஹா அமெரிக்கா எங்க இருக்குது பஸ்ஸுல போவோணுமா ரயிலுல போவோணுமா.. என் வெள்ளந்தியான மனுசி.

    பதிலளிநீக்கு
  20. அந்த மாமியின் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லபடியே நடந்தது. யாரையும் அண்டி வாழாமல் தன் கையே தனக்குதவியாக வாழ்ந்த வெகுளியான மாமிதான்.

    பதிலளிநீக்கு
  21. ///எவரேனும் காலங்காத்தால நல்லகாலம் பொறக்குதுன்னு சொல்லுவாங்களா...இந்த குடுகுடுப்பைக்காரங்களைத் தவிர...அந்த பாஸிடிவ் எனர்ஜி குடுக்குறதுக்கே அவங்க கேக்கறதை தரலாம்/// வாத்யார் கதை மூலமா குடுகுடுப்பைக்காரங்களுக்கும் ஒரு அங்கீகாரம்...இப்பல்லாம் அவங்களக் கண்ல காண முடியுறதில்ல...

    பதிலளிநீக்கு
  22. நல்ல காலம் பொறக்குது, கொடியில் இருக்குற புடவையை எடுத்துப் போடுங்க,,,,,,,, ம்ம்,
    இதுவும் நல்லா இருக்கு, தாங்கள் சொல்லும் நடை ரொம்ப நல்லா இருக்கு ஐயா,

    நல்லதே நினைப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mageswari balachandran December 11, 2015 at 2:04 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நல்ல காலம் பொறக்குது, கொடியில் இருக்குற புடவையை எடுத்துப் போடுங்க,,,,,,,, ம்ம், இதுவும் நல்லா இருக்கு, தாங்கள் சொல்லும் நடை ரொம்ப நல்லா இருக்கு ஐயா, நல்லதே நினைப்போம்.//

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம் - VGK

      நீக்கு
  23. நல்ல சேதி சொன்ன கதை! சிந்திக்க வைக்கிறது! அருமை!

    பதிலளிநீக்கு