என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 10 நவம்பர், 2011

கொ ட் டா வி












கொட்டாவி

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




”பட்டாபி, உன்னை எப்போது வேண்டுமானாலும் ஜீ.எம் (General Manager) கூப்பிடக்கூடும். தயாராக இருந்து கொள். உன்னைப்பற்றி நிறைய பேர்கள் ஏதேதோ அவரிடம் ஏத்தி விட்டுள்ளார்கள் என்று தெரிகிறது” என்று தன்னுடன் படித்தவனும், தற்போது ஜீ.எம் அவர்களுக்கு செகரட்டரியாக இருப்பவனுமாகிய கிச்சாமி எச்சரித்து விட்டுப்போனதும், நிதித்துறை குட்டி அதிகாரியான பட்டாபிக்கு அடிவயிற்றைக் கலக்கியது. 

இப்போது தான் சமீபத்தில் வட இந்தியாவிலிருந்து பணி மாற்றத்தில் [On Transfer] இங்கு வந்துள்ள ஜீ.எம் அவர்கள் மிகவும் கெடுபிடியானவர். எதற்கும் வளைந்து கொடுக்காதவர் [Straight Forward ஆன ஆசாமி]. கண்டிப்பும் கறாரும் மிகுந்தவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு உதாரண புருஷர். தயவு தாட்சிண்யமே பாராமல் தவறு செய்பவர்களை தண்டித்து விடுபவர் என்றெல்லாம் அலுவலகத்தில் ஒரே பேச்சாக உள்ளது.

பட்டாபியைப் பொருத்தவரை பெரிய தவறு ஏதும் செய்துவிடவில்லை தான். கடந்த ஒரே மாதத்தில் மட்டும், நாலு வெவ்வேறு பிரபல தமிழ் வார இதழ்களில், பட்டாபி எழுதிய சிறுகதைகள்,”கொட்டாவி” என்ற புனைப்பெயரில் பிரசுரமாகியுள்ளன. 

அந்த அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில், பரவலாக இதைப்பற்றியே பேச்சு. பலரும் பட்டாபியின் கற்பனைத் திறனையும், நல்ல எழுத்து நடையையும்,  கதையின் சுவாரஸ்யமான கருத்துக்களையும், மனதாரப் பாராட்டவே செய்தனர். 

ஒரு சிலருக்கு மட்டும் அவர் மீது ஏதோ கோபம். பொறாமை என்று கூடச் சொல்லலாம். ஆபீஸில் தாங்கள் மட்டும்தான், வாங்கும் சம்பளத்திற்கு விசுவாசமாக வேலை பார்ப்பதாகவும், ஆனால் இந்தப் பட்டாபி ஏதோ கதை எழுதுவதாகச்சொல்லி, எப்போதும் கதை பண்ணிக்கொண்டு திரிவதாகவும், ஒருவிதக் கடுப்பில் இருந்து வந்தனர்.  

அவர்களில் யாராவது இவரைப்பற்றி புது ஜீ.எம். அவர்களிடம் போட்டுக் கொடுத்திருக்கலாம் என்ற பயம், பட்டாபியைப் பற்றிக்கொண்டது.

ஜீ.எம். கூப்பிடுவதாகப் பட்டாபிக்கு அழைப்பு வந்தது. பட்டாபி அவசர அவசரமாக ஒன் பாத்ரூம் போய்விட்டு, முகத்தை நன்றாக அலம்பித் துடைத்து விட்டு, சட்டைப்பையிலிருந்த பொட்டலத்தைப் பிரித்து, நெற்றியில் சிறியதாக விபூதி பூசிக்கொண்டு, எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு, செகரட்டரி கிச்சாமியிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, ஜீ.எம். ரூமுக்குள் மெதுவாக பூனைபோல நுழைந்து, மிகவும் பெளவ்யமாக நின்றார்.


”அதிகாரிகளுக்கு முன்னும், கழுதைக்குப் பின்னும் நிற்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் உதைபட நேரிடும்” என்று எப்போதோ யாரோ சொல்லிக்கொடுத்த அறிவுரைகள் நினைவுக்கு வந்தது, பட்டாபிக்கு. 

ஃபைல்களில் மூழ்கியிருந்த ஜீ.எம். தன் தலையை சற்றே நிமிர்த்திப் பார்த்ததும், இரு கைகளையும் கூப்பி “நமஸ்காரம் ஸார்” என்று சொல்லி ஒரு பெரிய கும்பிடு போட்டார், பட்டாபி.

“வாங்க ... நீங்க தான் பட்டாபியா, உட்காருங்கோ” என்றார் ஜீ.எம்.

“தேங்க்ஸ் ஸார்” என்று சொல்லியபடியே ஜீ.எம். இருக்கைக்கு முன்புள்ள டேபிள் அருகே இருந்த மிகப்பெரிய குஷன் சேர்களில் ஒன்றின் நுனியில் மட்டும், பட்டும் படாததுமாக பதட்டத்துடன் அமர்ந்தார், பட்டாபி.

“நீங்க ஏதேதோ கதையெல்லாம் எழுதறேளாமே; எல்லோருமே சொல்றா. அதைப்பற்றி என்னவென்று விசாரித்து விட்டு, உங்களை டிரான்ஸ்பர் செய்யலாம்னு இருக்கேன்” என்றார் ஜீ.எம்.

“சார், சார் ... ப்ளீஸ்.... அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஏதாவது செஞ்சுடாதீங்கோ. நான் பிள்ளைகுட்டிக்காரன். வயசான அம்மா, அப்பா இருக்கா. நான் அவாளுக்கு ஒரே பிள்ளை. எனக்கும் என் மனைவிக்கும் சுகர், ப்ரஷர் எல்லாமே இருக்கு. என் மூணு குழந்தைகளும் முறையே எட்டாவது, ஆறாவது, நாலாவது படிக்கிறார்கள்; 


ஏதோ உள்ளூரிலேயே வேலையாய் இருப்பதால் ஒரு மாதிரியாக என் லைஃப் ஓடிண்டு இருக்கு. எங்கக் கூட்டுக் குடும்பம் என்கிற குருவிக்கூட்டை தயவுசெய்து கலைச்சுடாதீங்கோ. உங்களுக்குப் புண்ணியமாப்போகும்; 


நான் வேணும்னா இனிமே இந்த நிமிஷத்திலிருந்து கதை எழுதுவதையே விட்டுடறேன். தயவுசெய்து இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சு விட்டுங்கோ” என்று கண் கலங்கியபடி மன்றாடினார் பட்டாபி.


”நோ...  நோ... மிஸ்டர் பட்டாபி, நீங்க இந்த டிரான்ஸ்ஃபரிலிருந்து தப்பிக்கவே முடியாது. நான் ஒரு முடிவு எடுத்தேன் என்றால் எடுத்தது தான்” என்று ஜீ.எம். சொல்லும்போதே அதை ஆமோதிப்பது போல டெலிபோன் மணி அடித்தது. 


ரிஸீவரைக் கையில் எடுத்து, “யெஸ்; கனெக்ட் தி கால்” என்றவர் யாருடனோ என்னென்னவோ வெகுநேரம் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், உத்தரவுகள் பிறப்பித்த வண்ணமும், இருந்தார். 


பட்டாபிக்கு மனது பக்பக்கென்று அடித்துக்கொண்டு ப்ளட் பிரஷர் எகிறியது. எந்த பாஷை தெரியாத ஊரோ அல்லது தண்ணியில்லாத காடோ என சோகத்தில் ஆழ்ந்திருந்தார் பட்டாபி. அந்த ஏ.ஸீ. ரூம் குளிரிலும் இவருக்கு மட்டும் வியர்த்துக் கொட்டியது.       


டெலிபோன் உரையாடல் முடிந்ததும் ஜீ.எம். இவரை நோக்கினார்.


“பயப்படாதீங்க மிஸ்டர் பட்டாபி. பத்திரிக்கை துறையுடன் பல்லாண்டு தொடர்பு வைத்துக் கொண்டுள்ள தங்களைப் பிரமோட் செய்து நம் விளம்பரத்துறைக்கு மேனேஜராகப் போடப் போகிறேன்;


நீங்கள் தற்போது வேலை பார்க்கும் அக்கவுண்ட்ஸ் பிரிவிலிருந்து வணிக விளம்பரப்பிரிவுக்குத்தான் லோக்கல் டிரான்ஸ்ஃபர்; அதுவும் மேனேஜர் ப்ரமோஷனுடன்; அட்வான்ஸ் கன்கிராஜுலேஷன்ஸ்; 


பை-த-பை நீங்க இதுவரை எழுதின கதைகள் எல்லாம் எனக்கு ஒரு செட் கம்ப்ளீட்டாக வேணும். ரொம்ப நாட்கள் டெல்லியிலேயே இருந்து விட்டதால், தமிழில் கதைகள் படிக்க செளகர்யப்படாமல் போய் விட்டது. எனக்கும் என் மனைவிக்கும் தமிழில் சிறுகதை படிக்க மிகவும் ஆர்வமுண்டு;


நீங்க தொடர்ச்சியா தமிழ் பத்திரிகைகளுக்கு கதை எழுதி அனுப்பிக்கொண்டே இருக்கணும். பட்டாபின்னு .... ஸாரி .... கொட்டாவின்னு ஒரு பிரபல எழுத்தாளர் இவ்வளவு பெரிய நம் கம்பெனியில் வேலை பார்க்கிறார் என்றால் அது நம் நிறுவனத்திற்கே ஒரு பெருமை இல்லையா! என்று மனம் திறந்து பாராட்டிவிட்டு, தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்ற ஜீ.எம். பட்டாபியின் கரங்களைப் பிடித்து குலுக்கி விட்டு “ஆல்-தி-பெஸ்ட்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.


நன்றி கூறி விடை பெற்ற பட்டாபிக்கு புதிய ஜீ.எம். ஒரு தங்கமானவர் என்பதை உரசிப் பார்த்த பிறகே உணர முடிந்தது.


-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-








16. விசாகம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்:

அருள்மிகு முத்துக்குமாரசுவாமி 
திருக்கோயில் [மலைக்கோயில்] 

இருப்பிடம் : மதுரையில் இருந்து 
155 கி.மீ., தொலைவிலுள்ள 
செங்கோட்டை சென்று, 
ங்கிருந்து 7 கி.மீ., 
தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை 
பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். 
இவ்வூரைச் சுற்றி பிரபல 
ஐயப்ப ஸ்தலங்களான 
ஆரியங்காவு, அச்சன் கோவில், 
குளத்துப்புழை ஆகியவை உள்ளன.








16/27

44 கருத்துகள்:

  1. 'கொட்டாவி' வரவழைக்காத கதை! நல்ல ட்விஸ்ட். ஒன் அஃப் யுவர் பெஸ்ட்!

    பதிலளிநீக்கு
  2. சிறுகதை இலக்கணங்களை அப்படியே மனப்பாடம் பண்ணியிருக்கீங்க மாதிரி தெரியுது.

    பதிலளிநீக்கு
  3. கடைசியில் எதிர்பாராத ட்விஸ்ட் அருமை.

    பதிலளிநீக்கு
  4. மீண்டும் படித்தாலும் பிடித்த கதைதான்

    பதிலளிநீக்கு
  5. நல்ல தொடக்கம் .. முடிவு இனிப்பு ..

    பதிலளிநீக்கு
  6. எழுத்துக்களுக்குத்தான் எத்தனை மகிமை!

    பதிலளிநீக்கு
  7. அசத்தல் சிறுகதைங்க...

    வாழ்த்துக்கள் தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  8. நல்ல முடிவு கொண்ட நல்ல கதை. பகிர்விற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  9. தமிழ்மண நட்சத்திர வாரத்தில் யாரும் கொட்டாவி விடாமல் இருக்கும்படியாக, அடுத்தடுத்து அசத்தலாய்ப் பதிவுகள் ஐயா! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  10. நல்ல முடிவு கொண்ட நல்ல கதை. பகிர்விற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  11. மிக அருமை சார். நிஜமாவே உங்க ப்லாக் வர முடியலை. அதுக்குன்னு கொட்டாவின்னு புனை பெயர்ல எல்லாம் கூப்பிட வேண்டாம்..:)

    விசாக நட்சத்திர விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
  12. அருமையான கதை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 7

    பதிலளிநீக்கு
  13. கதை ரொம்பவே நன்றாக இருக்கு ..உங்க பேரை இங்க உங்க அனுமதியின்றி இட்டுள்ளேன் இன்றைய நாளுக்காக பார்க்க
    http://shylajan.blogspot.com/2011/11/11.html

    பதிலளிநீக்கு
  14. ஜீ.எம். ஒரு தங்கமானவர் என்பதை உரசிப் பார்த்த பிறகே உணர முடிந்தது.

    அருமையான படமும் பகிர்வும். பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  15. 16. விசாகம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
    சென்று வழிபட வேண்டிய கோயில்:
    அருள்மிகு முத்துக்குமாரசுவாமி
    திருக்கோயில் [மலைக்கோயில்]

    பயனுள்ள தகவல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  16. நல்ல சிறுகதை... மீண்டும் படித்து ரசித்தேன்....

    பதிலளிநீக்கு
  17. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  18. You have come up to "Visagam" star - waiting for news about my "Kettai" star!

    பதிலளிநீக்கு
  19. நல்ல கதை சார்.

    கதை எழுதுவதால் கிடைத்த பதவி உயர்வு பரிசு அருமை.

    பதிலளிநீக்கு
  20. //அதிகாரிகளுக்கு முன்னும், கழுதைக்குப் பின்னும் நிற்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் உதைபட நேரிடும்//

    ஆஹா.. செம :-))

    கதை எழுதியே ப்ரமோஷனா.. ஜூப்பர். ரொம்ப நல்லாப்போகுது உங்க வாரம். வாழ்த்துகள் நட்சத்திரமே.

    பதிலளிநீக்கு
  21. பிடித்திருந்தது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ள அனைவருக்கும் தனித்தனியே நன்றிகூறி ஓர் தனிப்பதிவு வெளியிட்டுள்ளேன். இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html
      தலைப்பு: HAPPY இன்று முதல் HAPPY

      அன்புடன்
      VGK

      நீக்கு
  22. என் பெயரை வைத்தே காமடி பண்ணிவிட்டீர்களே
    நீங்கள் பெரிய ஆள்தான் சார் . படமும் வித்தியாசமான கற்பனை .பாராட்டுக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman December 22, 2012 11:37 PM

      வாருங்கள் திரு. பட்டாபி ராமன் சார். வணக்கம்.

      //என் பெயரை வைத்தே காமடி பண்ணிவிட்டீர்களே//

      அடடா, அதுபோலெல்லாம் இல்லை சார். தயவுசெய்து தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள் சார். தங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்தமான பெயர் தான்.

      //நீங்கள் பெரிய ஆள்தான் சார்.//

      இல்லை சார். நான் மிகவும் சாதாரணமானவன் தான்.

      //படமும் வித்தியாசமான கற்பனை .பாராட்டுக்கள் .//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ஓவியர் ஒருவரால் இன்று எனக்குக் கிடைத்துள்ள பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  23. என் பெயரை வைத்தே காமடி பண்ணிவிட்டீர்களே
    நீங்கள் பெரிய ஆள்தான் சார் . படமும் வித்தியாசமான கற்பனை .பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman December 22, 2012 at 11:37 PM

      வாங்கோ சார், வணக்கம்.

      //என் பெயரை வைத்தே காமடி பண்ணிவிட்டீர்களே //

      அடடா, அப்படியெல்லாம் இல்லை சார். ஏதோ அதுபோல அமைந்து விட்டது என்பதே உண்மை.

      என் வேறுசில படைப்புகளிலும் இதே பட்டாபி என்ற பெயரில் ஒருசில கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன..

      //நீங்கள் பெரிய ஆள்தான் சார்.//

      இல்லை. இல்லவே இல்லை. மிகச்சாதாரணமானவன் தான்.

      //படமும் வித்தியாசமான கற்பனை. பாராட்டுக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      நீக்கு
  24. கொட்டாவி விட்டு கொட்டுக்கொட்டென்று முழித்துக்கொண்டிராமல்
    சட்டென்று பிரமோசனும் வாங்கித்தந்த கதை எழுதும் திறமைக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  25. இராஜராஜேஸ்வரி March 3, 2013 at 6:24 PM

    வாங்கோ, வணக்கம், மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    //கொட்டாவி விட்டு கொட்டுக்கொட்டென்று முழித்துக்கொண்டு//

    என் இன்றைய நிலையை அழகாக எடுத்துச்சொல்லி விட்டீர்கள்.

    //முழித்துக்கொண்டிராமல் சட்டென்று பிரமோசனும் வாங்கித்தந்த கதை எழுதும் திறமைக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//

    தங்களின் அன்பான மேலும் ஒரு பின்னூட்டம் என்ற பிரமோஷன் கிடைத்ததில் தான் எனக்கு இன்று மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக்கும்.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகள் ஆகிய பிரமோஷன்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  26. அண்ணா இந்த கதையில் என்னை மிகவும் கவர்ந்தது பேனா முனையை கை கால்களாக்கி பட்டாபி ஒரு எழுத்தாளர் என்பதை கற்பனாசக்தியுடன் தாங்கள் வரைந்த ஓவியம் ,,வ வ ஸ்ரீக்கு:)))அடுத்து எனக்கு மிகவும் பிடித்த தங்களின் ஓவியம் .

    தங்கமாகவேயிருந்தாலும் கல்லில் உரசினால்தான் கண்டுபிடிக்க் முடியும் ..பட்டாபி மானஜரை புரிந்து கொண்டார்ர் ,மிக்க அருமையான சிறுகதை ..
    நீங்க ஒருமுறை நான் //இதற்கு மட்டும் பின்னூட்டமிடவில்லை ..வாசிக்கும்போது கொட்டாவி விட்டு தூங்கியிருப்பீங்க //என்று குறிப்பிட்டுரிந்தீங்க :))ஒவ்வோர் முறையும் இங்கே வரும் பொது அந்த பின்னூட்டமே நினைவுக்கு வந்து சிரித்துவிட்டு போய்விடுவேன் ,,அட்லாஸ்ட் :)இன்னிக்கு பின்னூட்டம் எழுதிவிட்டேன் ...கொட்டாவி விடாமல் :))

    பதிலளிநீக்கு
  27. angelin March 9, 2013 at 6:46 AM

    வாங்கோ நிர்மலா, வணக்கம்.

    //அண்ணா இந்த கதையில் என்னை மிகவும் கவர்ந்தது பேனா முனையை கை கால்களாக்கி பட்டாபி ஒரு எழுத்தாளர் என்பதை கற்பனாசக்தியுடன் தாங்கள் வரைந்த ஓவியம் ,,வ வ ஸ்ரீக்கு:)))அடுத்து எனக்கு மிகவும் பிடித்த தங்களின் ஓவியம் .//

    இதை தங்கள் வாயால் கேட்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    குவில்லிங் முதலிய கைவேலைகளில் தேர்ச்சிபெற்றுள்ள தங்களை இந்த இரு ஓவியங்களும் கவர்ந்துள்ளது என்பது கேட்க எனக்கு ஒரே மகிழ்ச்சியாக உள்ளது. ;)

    வ.வ.ஸ்ரீ. க்காக நான் வரைந்த ஓவியமும் + இந்த கொட்டாவிக்கான எழுத்தாளர் ஓவியமும் சாதாரணமாக எல்லோராலும் ரஸித்துப்பாராட்ட முடியாது என்பதே உண்மை.

    தங்களுக்கு என் மனமார்ந்த் ஸ்பெஷல் நன்றிகள்.

    //தங்கமாகவேயிருந்தாலும் கல்லில் உரசினால்தான் கண்டுபிடிக்க் முடியும் ..பட்டாபி மானஜரை புரிந்து கொண்டார்ர் ,மிக்க அருமையான சிறுகதை ..//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  28. கோபு >>>>> நிர்மலா [2]

    //நீங்க ஒருமுறை நான் //இதற்கு மட்டும் பின்னூட்டமிடவில்லை ..வாசிக்கும்போது கொட்டாவி விட்டு தூங்கியிருப்பீங்க //என்று குறிப்பிட்டுரிந்தீங்க :))ஒவ்வோர் முறையும் இங்கே வரும் பொது அந்த பின்னூட்டமே நினைவுக்கு வந்து சிரித்துவிட்டு போய்விடுவேன் ,,அட்லாஸ்ட் :)இன்னிக்கு பின்னூட்டம் எழுதிவிட்டேன் ...கொட்டாவி விடாமல் :))//

    ஆமாம் நிர்மலா. நான் அவ்வாறு எழுதியிருந்தது இதோ இந்தப்பதிவினில் உள்ளது.

    http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html

    தலைப்பு: HAPPY இன்று முதல் HAPPY !

    >>>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபு >>>>> நிர்மலா [3]

      http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html
      தலைப்பு: HAPPY இன்று முதல் HAPPY !

      மேற்படி பதிவுக்கு தாங்கள் கொடுத்திருந்த பின்னூட்டமும் அதற்கான என்னுடைய பதிலும் இதோ இங்கே:

      -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
      //angelin said...
      என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வார முழுதும் மிகவும் அருமையாக அசத்திட்டீங்க. இனிப்பு வகைகள் தந்து உபசரித்ததர்க்கும் மிக்க நன்றி.//

      மிகவும் சந்தோஷம் மேடம். எனது 16 ஆவது பதிவான “கொட்டாவி” தவிர அனைத்துப்பதிவுகளுக்கும் பின்னூட்டம் உடனுக்குடன் இட்டு உற்சாகப்படுத்தி இருந்தீர்கள்.

      [அது படிக்கலாம் என்று தாங்கள் நினைக்கும் போது தங்களுக்கே கொட்டாவி வந்து தூங்கி விட்டீர்களோ என்னவோ! ))))] மிக்க நன்றி.


      //உங்களை உற்சாகமூட்டி எழுத தூண்டிய அந்த நல்ல நட்பிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை கூறிகொள்கிறேன்//

      மிகவும் சந்தோஷம். அவர்கள் மிகவும் நல்லவர்கள். எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள். உற்சாக டானிக்கை அவ்வப்போது ஊற்றிக் கொடுத்துக்கொண்டே இருப்பவர்கள். அவர்களும் வாழ்க! அவர்களுக்கும் மறக்காமல் நன்றி கூறியுள்ள தாங்களும் வாழ்க!!
      vgk

      -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

      என்னை உற்சாகமூட்டி எழுத தூண்டிய அந்த நல்ல நட்பு நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தான் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா, நிர்மலா?

      நீங்களே யூகித்திருப்பீர்கள் தானே? ;)))))

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  29. சற்றுமுன் கிடைத்த ஓர் மகிழ்ச்சியான செய்தி:

    ’கொட்டாவி’ என்ற தலைப்பில் தமிழில் எழுதப்பட்டுள்ள இந்த என் சிறுகதை திருமதி. பாக்யம் ஷர்மா என்பவரால் ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து வெளியாகியுள்ள, DAINIK BHASKAR என்ற மிகப்பிரபலமான ஹிந்தி இதழில் இன்று 20.07.2014 என் பெயர் + புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இது ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ள என் இரண்டாம் கதை என்பது குறிப்பிடத்தக்கது. இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  30. ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ள தங்கள் இரண்டாம் கதைக்கு இனிய வாழ்த்துகள்..

    அனைத்து கதைகளும்
    அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்து
    சிறப்படைய சிறப்பு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  31. இராஜராஜேஸ்வரி July 22, 2014 at 6:58 PM

    வாங்கோ...... வணக்கம்.

    //ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ள தங்கள் இரண்டாம் கதைக்கு இனிய வாழ்த்துகள்..//

    மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி. ;)

    //அனைத்து கதைகளும் அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்து சிறப்படைய சிறப்பு வாழ்த்துகள்..!//

    கன்னடமும் தமிழும் தெரிந்த ஒரு எழுத்தாளரும், ஹிந்தியும் தமிழும் தெரிந்த ஒரு எழுத்தாளரும் ஏதோ அவர்களாகவே என் தொடர்பு எல்லைக்குள் வந்து அகஸ்மாத்தாக மாட்டியுள்ளார்கள்.

    மற்ற மொழி தெரிந்தவர்களுக்குத் தமிழும் தெரிந்து, அவர்கள் ஓர் எழுத்தாளராகவும் இருந்து, நமக்கும் நட்பாக அமைந்தால் மட்டுமே இது சாத்யமாகும்.

    மேலும் அவ்வாறு அமையக்கூடியவர்கள் தங்களைப்போல சுறுசுறுப்பாகவும், எழுத்தார்வமும் துடிப்பும் வேகமும் உள்ள வேங்கைகளாகவும் அமைய வேண்டும்.

    அதற்கெல்லாம் ப்ராப்தமும் இருக்க வேண்டும். பார்ப்போம்.

    தங்களின் சிறப்பு வாழ்த்துகள் பலிக்கட்டும். மகிழ்ச்சியே.

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  32. பட்டாபிக்கு( கொட்டாவெக்கு) பிடித்த துறையிலேயே ட்ரான்ஸ்பரா? குட் குட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 20, 2015 at 11:24 AM

      //பட்டாபிக்கு( கொட்டாவிக்கு) பிடித்த துறையிலேயே ட்ரான்ஸ்பரா? குட் குட்//

      வெரி குட் ...... மிக்க நன்றீங்க ! :)

      நீக்கு
  33. மீள் பதிவாக இருந்தாலும் மீண்டும் படித்தேன்.

    மீண்டும், மீண்டும் உங்கள் எழுத்துக்களைப் படித்தாலும் கொட்டாவி வருவதே இல்லை.

    பதிலளிநீக்கு
  34. பட்டாபி கொட்டாவி எங்கேந்துதா பேரெல்லா புடிச்சு போடுரீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 14, 2015 at 11:49 AM

      //பட்டாபி கொட்டாவி எங்கேந்துதா பேரெல்லா புடிச்சு போடுரீங்க.//

      நீங்க படிக்கும்போது கொட்டாவி விட்டுத் தூங்கி விடாமல் இருப்பதற்காகவே கஷ்டப்பட்டு, இதுபோன்ற பெயரெல்லாம் நான் புடிச்சு போடவேண்டியுள்ளது. :)

      நீக்கு
  35. கைகள் கால்களில் பேனாவை வரைந்திருக்கும் கோட்டோவியம் ரொம்ப நல்லா இருக்கு. பட்டாபி கதை படிச்சு கொட்டாவியாதானே வருது.

    பதிலளிநீக்கு
  36. எழுத்தாளனுக்கு ஒரு நல்ல அங்கீகாரம் தரும் கதை...மிகவும் ரசித்து ருசித்தேன்...

    பதிலளிநீக்கு