என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 12 நவம்பர், 2011

சூ ழ் நி லை



சூ ழ் நி லை



[சிறுகதை]



By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

காலை 10 மணி. பிஸினஸ் விஷயமாக சென்னைக்கு வந்திருந்த மஹாலிங்கத்தின் செல்போன் சிணுங்கியது.

”குட்மார்னிங் ... ஜெயா... சொல்லு” என்றார் டெல்லியிலிருந்து பேசும் தன் ஒரே அன்பு மகளிடம்.

ஜெயாவுக்கு குரல் தடுமாறியது. அவள் அழுது கொண்டே பேசுவது இவருக்குப் புரிந்தது.

“அப்பா... தாத்தா சென்னையில் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டாராம். இப்போது தான் போன் வந்தது. அவரின் உடல் ‘ஜி.ஹெச்’ இல் உள்ளதாம். அம்மா ரொம்பவும் அழுது புலம்பிண்டு இருக்கா. ஈவினிங் ஃப்ளைட்டில் அம்மாவை ஏற்றி அனுப்பட்டுமா?” என்றாள்.

மஹாலிங்கம் சற்று பலமாகச் சிரித்துக் கொண்டே, “அப்படியாம்மா, ரொம்ப சந்தோஷம். நான் அவசியம் போய்ப் பார்த்துட்டு, அப்புறம் உனக்கு போன் செய்கிறேன்” என்றார், சற்றும் தன் முகபாவணையில் வருத்தமோ அதிர்ச்சியோ ஏதும் இல்லாமல்.

தன் அப்பாவின் இத்தகைய பேச்சு ஜெயாவுக்கு அதிர்ச்சியை அளித்தது. தன் தாயாரிடம் இந்த டெலிபோன் உரையாடலைப் பக்குவமாக எடுத்துச் சொன்னாள்.

இதைக் கேள்விபட்ட மஹாலிங்கத்தின் மனைவி ஈஸ்வரிக்கு தன் கணவன் மீது கோபமாக வந்தது.

“கோடீஸ்வரரான இவருக்கு எப்போதுமே எங்க பிறந்த வீட்டுக் காரங்களைக் கண்டாலே ஒரு வித இளக்காரம் தான். மாமனாரின் திடீர் மரணத்தைக் கேள்விப்பட்ட பிறகாவது ஒரு மனிதாபிமானத்துடன் பேச மாட்டாரோ! அவ்வளவு பணத்திமிரு. இருக்கட்டும் நேரில் போய் பேசிக் கொள்கிறேன்” என்று தன் மகளிடம் கூறிவிட்டு, விமான டிக்கெட் பதிவு செய்ய ஏற்பாடுகளைக் கவனிக்கலானாள்.

மாமனாரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட மஹாலிங்கம், தன் தந்தை இறந்த துகத்தில் மூழ்கியிருக்கும் ஈஸ்வரியுடன் அதிகமாக மனம் விட்டு பேச முடியாமல் போனது. அகால மரணம் ஒன்று எதிர்பாராமல் நடந்து விட்ட அந்த வீடு இருக்கும் சூழ்நிலையிலும், பெரியவரின் மறைவால் அந்த வீட்டில் குழுமியிருக்கும் மனிதர்களின் துக்கமான மன நிலையிலும், எப்படி அவர்கள் மனம் விட்டு பேச முடியும்.

ஈஸ்வரி ஒரு மூன்று வாரங்களாவது இங்கேயே (பிறந்த வீட்டிலேயே) இருந்து விட்டு, பிறகு டெல்லிக்கு புறப்பட்டு வரட்டும் என்று தன் மாமியாருக்கும் மனைவிக்கும் பொதுவாக காதில் விழுமாறு சொல்லி விட்டு, தான் மட்டும் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

பெரிய பிஸினஸ் மேனாக இருப்பதால் அவரால் எந்த வீட்டிலும், எந்த ஊரிலும், எந்த நாட்டிலும், ரொம்ப நேரம் தங்க முடியாது. துக்க வீட்டுக்கு வந்து விட்டு ’போயிட்டு வருகிறேன்’ என்று சொல்லிக்கொள்ளக் கூடாது. அதனால் டக்கென்று புறப்பட்டு விட்டார். அவர் எப்போதுமே இப்படித்தான் என்று தெரிந்த ஈஸ்வரியும் அவர் மேல் இப்போது உள்ள கோபத்தில், அவருடன் முகம் கொடுத்தே பேசவில்லை.

இதற்கிடையில் தன் கணவன் இழந்த துக்கத்தையும் மறந்து, தன் பணக்கார மற்றும் மிகவும் பிஸியான மாப்பிள்ளையைப் பற்றி அடிக்கடி பெருமையாகப் பேசி பூரித்துப் போகும் தன் தாயிடமே கோபமாக வந்தது, ஈஸ்வரிக்கு.

அடுத்த ஒரு மாதமும் கோபத்தில், தன் கணவனுடன் தொலைபேசியில் கூட பேசுவதைத் தவிர்த்து விட்டாள் ஈஸ்வரி. அவ்வளவு கோபம் அவர் மீது.

ஒரு மாதம் கழித்து ஒரு வழியாக டெல்லிக்குத் திரும்பினாள் ஈஸ்வரி.

“வா, ஈஸ்வரி” என்று அன்புடன் தான் வரவேற்றார், தற்செயலாக அன்று வீட்டில் இருந்த மஹாலிங்கம். ஜெயாவும், தன் அன்புத் தந்தையை இழந்த துக்கத்துடன் திரும்பி வந்துள்ள தன் அம்மாவை ஓடிச்சென்று ஆறுதலாக பற்றிக்கொண்டாள்.

தன் வயது வந்த மகள் பக்கத்தில் இருக்கிறாளே என்றும் பாராமல் ஈஸ்வரி கோபமாக தன் கணவனிடம் வாய் சண்டையிட தயாராகி விட்டாள்.

“எங்கப்பா சாலை விபத்திலே செத்துப்போனது உங்களுக்கு ரொம்பவும் ஸந்தோஷமா? இது போல நீங்க ஜெயாவிடம் சொன்னது கொஞ்சமாவது நியாயமா? உங்களிடம் எவ்வளவு தான் பணமிருந்தாலும், எங்க அப்பாவை அந்தப் பணத்தால் திரும்ப வரவழைக்க முடியுமா? ” என சுடும் எண்ணெயில் போட்ட அப்பளமாகப் பொரிந்து தள்ளினாள்.

“வெரி... வெரி... ஸாரி ஈஸ்வரி, இது தான் உன் கோபத்திற்குக் காரணமா?

“சென்னைக்குப் போன இடத்தில் என் நண்பர் ஒருவர் மூலம், நம்ம ஜெயாவுக்கு எல்லா விதத்திலும் நல்ல ஒரு பொருத்தமான மாப்பிள்ளை பையன் பார்த்து, ஜாதகமும் பொருந்தி, மற்ற எல்லா விஷயங்களும் பேசி முடிக்கும் நேரம், நம் ஜெயாவிடமிருந்து, இந்த துக்கமான தகவல் வந்தது. நான் அங்கிருந்த சூழ்நிலையைச் சமாளிக்கவும், பிள்ளை வீட்டார் ஏதாவது அபசகுனமாக நினைக்காமல் இருக்கவும் தான், அவ்வாறு சொல்லும் படியும், சமாளிக்கும் படியும் ஆகி விட்டது.

என்னிடம் உள்ள பணத்தாலும், செல்வாக்காலும் அவரின் உயிரைத் திரும்ப கொண்டு வர முடியாவிட்டாலும், அவருடைய உடலையாவது வெகு சீக்கரமாக ”ஜி.ஹெச்” லிருந்து வீட்டுக்குக் கொண்டு வர முடிந்தது.

மேற்கொண்டு செய்ய வேண்டிய இறுதிச் சடங்களின் எல்லாச் செலவுகளுமே என்னுடையதாக இருக்கட்டும் என்று சொல்லி, உன் அம்மாவிடம் நிறைய பணம் கொடுத்து வர முடிந்தது.

இந்தப் பணம் கொடுத்த விஷயம் மட்டும் உன்னிடமோ, வேறு யாரிடமுமோ சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றும் அவர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

எனக்கும் என் மாமனாரின் இந்த திடீர் முடிவில் மிகவும் வருத்தம் தான். அவரின் விதி அது போல உள்ளபோது நம்மால் என்ன செய்ய முடியும்?

அமரரான உன் அப்பா ஆசீர்வாதத்தால் தான், இந்த ஒரு நல்ல இடம் கை கூடி வந்து, நம் ஜெயாவின் கல்யாணம் நல்லபடியாக முடியணும்!” என்று சொல்லி, தன் மனைவின் கைகளை ஆறுதலாகப் பற்றிக் கொண்டார் மஹாலிங்கம்.

தன் கணவனின் வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அவரின் சமயோஜிதச் செயலையும், தனக்கே கூடத் தெரியாமல் தன் குடும்பத்திற்கு, அவர் தக்க நேரத்தில் செய்துள்ள பல்வேறு உதவிகளையும் நினைத்து மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள் ஈஸ்வரி.

அவரின் சூழ்நிலை தெரியாமல் அவசரப்பட்டு ஏதேதோ வார்த்தைகளைக் கொட்டி விட்டோமே என வருந்தி, அவர் மீது சாய்ந்த வண்ணம் கண்ணீர் சிந்தினாள், ஈஸ்வரி.

தாத்தாவின் திடீர் மரணம், ஒரு விதத்தில் இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதை எண்ணி மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள், மணப்பெண் ஜெயா.




-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-




24. ”சதயம்” நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்:-  

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் 
திருக்கோயில்.

இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், 
நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் 
செல்லும் வழியில் 10 கி.மீ., 
தொலைவில் திருப்புகலூர் 
ன்னும் ஊரில் உள்ளது.



24/27

26 கருத்துகள்:

  1. “சென்னைக்குப் போன இடத்தில் என் நண்பர் ஒருவர் மூலம், நம்ம ஜெயாவுக்கு எல்லா விதத்திலும் நல்ல ஒரு பொருத்தமான மாப்பிள்ளை பையன் பார்த்து, ஜாதகமும் பொருந்தி, மற்ற எல்லா விஷயங்களும் பேசி முடிக்கும் நேரம், நம் ஜெயாவிடமிருந்து, இந்த துக்கமான தகவல் வந்தது. நான் அங்கிருந்த சூழ்நிலையைச் சமாளிக்கவும், பிள்ளை வீட்டார் ஏதாவது அபசகுனமாக நினைக்காமல் இருக்கவும் தான், அவ்வாறு சொல்லும் படியும், சமாளிக்கும் படியும் ஆகி விட்டது.//

    சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவர் நடந்து கொண்டது சரியே.

    ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள நேரம் வரவேண்டும் போலும்.

    கதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. சமயோசிதம் இது மிகவும் தேவையானதுதான். நல்ல கதை சார்..

    பதிலளிநீக்கு
  3. கணவன் மனைவிக்கும் நல்ல புரிந்து கொள்ளல் எப்பவுமே வானும் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  4. பதிவுலகில் நான் அதிகம் விரும்பிப்படிக்கும் சிறுகதைகளில் உங்கள் கதைகளும் அடங்கும்....

    அந்தவரிசையில் ஓரு சிறந்த கதை இது அருமை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. சூழ்நிலை புரிந்து நடந்து கொண்டாலே பல மனக்கசப்புகள் தீரும். வராமலும் போகும்.

    பதிலளிநீக்கு
  6. சூப்பர் கதை! ஒருத்தொருக்கொருத்தர் புரிந்து கொள்வதற்காக, தாத்தாவை சாகடித்திருக்க வேண்டாம்!ஹூம்..என்ன சொல்ல..கதையின் ஜீவனே அங்கு தானே இருக்கிறது?

    பதிலளிநீக்கு
  7. நல்ல கதை படித்த திருப்தி. உண்மையான அன்பு என்பது வாழ்ந்தவர்கள் வாழவேண்டியவர்களை வாழ விடுவதுதான். கதைசொன்னவிதம் இலகுவாக இருந்தது. நல்ல ஓட்டம். உங்களின் பதிவுகளில் எல்லாக்கதைகளையும் தொடர்ந்து படிக்கிறேன். நேரமின்மையே கருத்துக்களை உரைப்பதில் தடையாகிவிடுகிறது. இடைவெளிகளில் வாய்ப்பு அமையும்போது வருவேன். நல்ல எதார்த்தமான உலகியலைத் தெளிவுறுத்தும் கதை.

    பதிலளிநீக்கு
  8. சில பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் மனதுக்கு இதம் தரும்.அதுபோல் சில கதைகள் எத்தனை முறை படித்தாலும் ரசிக்கும் படியாகவே இருக்கும்.அந்த வகையில் இந்த கதையும் ஒன்று

    பதிலளிநீக்கு
  9. தன் கணவனின் வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அவரின் சமயோஜிதச் செயலையும், தனக்கே கூடத் தெரியாமல் தன் குடும்பத்திற்கு, அவர் தக்க நேரத்தில் செய்துள்ள பல்வேறு உதவிகளையும் நினைத்து மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள் ஈஸ்வரி.//

    சமயோசிதம் சூப்பர்

    பதிலளிநீக்கு
  10. ”சதயம்” நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
    சென்று வழிபட வேண்டிய கோயில்:-

    அருள்மிகு அக்னிபுரீஸ்வரர்
    திருக்கோயில்.//

    very use full. Thank you for sharing..

    பதிலளிநீக்கு
  11. இடம் பொருள் அறிந்து சமயோசிதமாக செயல்பட்டிருக்கிறார் .மிகவும் நன்றாக இருந்தது .அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்ட கூடாது ஆராய்ந்து யோசித்து பேச வேண்டும் என்பதை வலியுறுத்தும் நல்ல கதை

    பதிலளிநீக்கு
  12. நல்ல கதை. அந்த நேரத்தில் அப்படி பேசியிருக்கக்கூடாது என்றாலும், அவரின் செயலிலும் காரணம் இருப்பதை அழகாய்ச் சொல்லி விட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
  13. யாரையும் எளிதில் தவறாக கணித்திட சந்தர்ப்ப சூநிலைகளே சில சமயம் காரணமாகிவிடுகிறது. கதை நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  14. த.ம் 6

    ராஜி சொன்னதை ரிப்பீட் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. அவரால என்ன பண்ணெ இருக்க முடியுமோ அதை நன்றாகவே நிறைவேற்றி உள்ளார் அவரைக குறை கூருவதில் அர்த்தமே இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 20, 2015 at 6:26 PM

      //அவரால என்ன பண்ணி இருக்க முடியுமோ அதை நன்றாகவே நிறைவேற்றி உள்ளார். அவரைக் குறை கூறுவதில் அர்த்தமே இல்லை.//

      இவரின் நிலைமையினை நன்கு படித்து, இவரின் சந்தர்ப்ப சூழ்நிலைகளை நன்கு புரிந்துகொண்டு, புரிதலுடன் எழுதியுள்ள, அவருக்கு ஆதரவான கருத்துக்களுக்கு மிக்க நன்றீம்மா.

      நீக்கு
  16. மனிதர்கள் அனைவருமே சூழ்நிலைக் கைதிகள் தான்.

    பொறுமையும், புரிதலும் மனிதனுக்கு நிச்சயம் தேவை.

    பதிலளிநீக்கு
  17. மத்தவங்க சந்தர்பம் சூள்நெல தெரிஞ்சுக்காம வாய விட்டுடபடாது.

    பதிலளிநீக்கு
  18. கணவனோ மனைவியோ புரிந்துணர்விடன் இருக்கணும் அந்த நேரம் அவரின் சந்தர்ப்ப சூழல் எப்படியோன்னு யோசிச்சிருக்கணும். அவர் செய்ய வேண்டியதை சரியாதானே செய்திருக்கார்.

    பதிலளிநீக்கு
  19. அவரின் சூழ்நிலை தெரியாமல் அவசரப்பட்டு ஏதேதோ வார்த்தைகளைக் கொட்டி விட்டோமே என வருந்தி, அவர் மீது சாய்ந்த வண்ணம் கண்ணீர் சிந்தினாள், ஈஸ்வரி.// சூழ்நிலையை ஹாண்டில் செய்த ஹீரோவும் புரிந்துகொண்ட மனைவியும்...இறுதியில் இதம்...

    பதிலளிநீக்கு
  20. இவ்வளவு நல்ல மருமகப்பிள்ளையும்,,,,, ம்ம்,

    கதைகளில் தான் படிக்கனும்,,

    எப்படியோ, நல்ல விடயங்கள் சொன்னால் சரி,, நல்ல கதை தான் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mageswari balachandran December 11, 2015 at 1:48 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இவ்வளவு நல்ல மருமகப்பிள்ளையும்,,,,, ம்ம்,
      கதைகளில் தான் படிக்கனும்,,//

      என்ன இப்படி சொல்லிட்டீங்கோ. :) கதைகளில் மட்டுமல்லாமல் நேரிலும்கூட இருக்கிறார்கள் ..... என்னைப்போலவே ஆங்காங்கே சிலரும் :)

      //எப்படியோ, நல்ல விடயங்கள் சொன்னால் சரி,, நல்ல கதை தான் ஐயா//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றீங்க - VGK

      நீக்கு