About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, June 5, 2011

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!! [இறுதிப்பகுதி 3 of 3]


”நாளை காலை பத்து மணிக்கு என் குழந்தைகள் மாருதியும், அனுமந்துவும் வரும் சமயம் பிரஸாதம் கிடைப்பது போலச் செய்துகொடுங்க சாமீ” என்று சொல்லித் தன் சுருக்குப்பையிலிருந்த பணத்தையெல்லாம் ஒரு மூங்கில் தட்டில் கொட்டி, அவரை விட்டே மொத்தம் எவ்வளவு தேறும் என்று பார்க்கச்சொன்னாள், அந்தக்கிழவி.

எண்ணிப்பார்த்தவர் “இரண்டாயிரத்து முன்னூற்று மூன்று ரூபாய் உள்ளது” என்றார்.  

தான் யாரிடமும் யாசகம் ஏதும் கேட்காதபோதும், கோயிலுக்கு வரும் பெரும்புள்ளிகள் சிலர் தன் மேல் அன்பு காட்டி அவர்களாகவே மனமுவந்து அளித்துச்சென்ற தொகை, பல வருடங்களாக சேர்ந்து இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகியிருப்பது, கண்ணாம்பாவுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.  

“அதிலிருந்து வடைமாலைக்கும், அர்ச்சனைக்குமாக ரூபாய் முன்னூற்று மூன்றை எடுத்துக்கொள்ளுங்கள்; மீதி இரண்டாயிரத்தைத் தாங்களே என் கடைசிகாலச்செலவுக்கு வைத்துக்கொண்டு, அனாதையான எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, ’கோவிந்தாக்கொள்ளி’ போட்டு, என்னை நல்லபடியாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து விடுங்க” என்றாள் கண்ணாம்பா கிழவி.

“அதெல்லாம் ஒண்ணும் கவலையேபடாதே; பணத்தை வேண்டுமானால் நான் பத்திரமாக என்னிடம் வைத்துக்கொள்கிறேன்; எப்போதாவது செலவுக்குப்பணம் வேண்டுமானால் என்னிடம் தயங்காமல் கேட்டு வாங்கிக்கோ; பிள்ளையாருக்கும், அனுமாருக்கும் இவ்வளவு நாட்கள் இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்திருக்கும் நீ, நூறு வயசுவரை செளக்யமாய் இருப்பாய்; மனதை மட்டும் தளரவிடாமல் தைர்யமாய் வைத்துக்கொள்” என்றார் குருக்கள்.

மறுநாள் காலை பிள்ளையாருக்கு அர்ச்சனை, அனுமாருக்கு வடைமாலை எல்லாம் நல்லபடியாக முடிந்தது. மாருதியும், அனுமந்துவும் பூஜை வேளையில் கிழவியுடன் கலந்து கொண்டு, தேங்காய், பழங்கள், வடைகள் என ஆவலுடன் நிறையவே சாப்பிட்டுக்கொண்டிருந்தன. தான் பெற்ற குழந்தைகள் போல ரசித்து ருசித்து சாப்பிடும் அவற்றைப் பார்த்த கிழவிக்கு ஒரே மகிழ்ச்சி.

அப்போது குருக்களுக்கு தபால்காரர் கொடுத்துச்சென்ற பதிவுத்தபால் ஒன்றைப் பிரித்து, குருக்கள் உரக்கப்படிக்க, கிழவியும் அவர் அருகே நின்றபடி, அதிலிருந்த விஷயங்களைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

‘போக்குவரத்துக்கும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தற்சமயம் மிகவும் இடையூறாக முச்சந்தியில் உள்ள அந்தக்கோயில்கள், ஆக்கிரமிப்புப்பகுதியில் எந்தவித முன்அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டவை என்று, நகர முனிசிபல் கார்பரேஷன் முடிவு செய்து விட்டதாகவும், அடுத்த ஒரு வாரத்தில் அந்தக் கோயில்களைத் தரை மட்டமாக இடிக்க மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெற்று விட்டதாகவும், இடித்தபின் போக்குவரத்துக்கான பாதை அகலப்படுத்தும் வேலைகள் நடைபெறும் என்றும், இது ஒரு தகவலுக்காக அனுப்பப்பட்ட நோட்டீஸ் என்று அறியவும்’ என்று எழுதப்பட்டிருந்த விஷயம்,குருக்களால் வாசிக்கப்பட்டு, கண்ணாம்பாக்கிழவியால் காதில் வாங்கிக் கொள்ளப்பட்டது.

தனக்குத்தெரிந்தே, தன் பார்வையில், அந்த நாளில் கட்டப்பட்டதும், ஆதரவற்ற அனாதையான தனக்கு இன்று வரை ஒரு பாதுகாப்பு அளித்து வருவதுமான அந்தக்கோயில்கள், இடிக்கப்படப்போகின்றன என்ற செய்தி, அந்தக்கிழவிக்குத் தலையில் இடி விழுந்தது போல ஆனது. 

அப்படியே மனம் இடிந்துபோய் மயங்கிக்கீழே சரிந்து விட்டாள். அவள் உயிர் அப்போதே தெய்வ சந்நிதியில் பிரிந்து போனது.

கோயில் கதவுகள் சாத்தப்பட்டன. அன்றைய பூஜைகள் அத்துடன் நிறுத்தப்பட்டன. 

கிழவியின் இறுதி யாத்திரைக்கு அவள் விருப்பப்படியே அந்தக்குருக்கள் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.

கண்ணாம்பாக்கிழவியின் திடீர் மறைவுச்செய்தி காட்டுத் தீபோல அந்தப்பகுதி மக்களுக்குப்பரவியது.  

அருகில் இருந்த ஆரம்பப்பள்ளியில், கோயில் கிழவியின் மறைவுக்கு இரங்கல் கூட்டமொன்று நடைபெற்றது. அதன்பிறகு அன்று முழுவதும் பள்ளிக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. 

அந்தக்கிழவி அனாதை இல்லையென்பதுபோல அந்தப்பகுதி மக்களும், ஆரம்பப்பள்ளிக்குழந்தைகளும், திரளாகக்கூடியது மட்டுமின்றி, அனுமந்துவும் மாருதியும் மரத்திலிருந்த தங்கள் குரங்குப் பட்டாளத்தையே கூட்டி வந்து, கிழவியின் இறுதி ஊர்வலத்தில், சுடுகாடு வரை பின் தொடர்ந்து வந்தது, அந்தப்பகுதி மக்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.



-o-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-o-



[திருச்சியிலிருந்து மணச்சநல்லூர், துறையூர், குணசீலம், முசிறி, நாமக்கல், சேலம் போகும் பேருந்தில் செல்லும் போது, காவிரிப்பாலம் + கொள்ளிடம் பாலம் தாண்டியதும் நம்பர் 1 டோல்கேட் என்று வரும், இந்த இடத்தில் தான் மேற்படி ஊர்களுக்குச் செல்லும் வாகனங்கள் இடதுபுறமாகத் திரும்பும். 

பேருந்துகள் திரும்பும் அதே இடத்தில் வலதுபுறமாக சாலையின் ஓரமாக ”டோல்கேட் ஆஞ்சநேயர் கோயில்” என்று எனக்குத்தெரிந்தே ஒரு 50 வருடங்களுக்கும் மேலாக, மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் இருந்து வந்தது. இந்த இடத்தைக்கடக்கும் எல்லா வாகன ஓட்டுனர்களும், இந்த டோல்கேட் ஆஞ்சநேயரை வணங்கிவிட்டு தான் வண்டியை நகர்த்துவார்கள்.  அவ்வளவு ஒரு சக்தி வாய்ந்த பிரபலமான கோயில்.

இந்தக்கோயிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் மிகவும் பிரபலமான உத்தமர்கோயில் என்ற மும்மூர்த்தி ஸ்தலமும், பிக்ஷாண்டார்கோயில் என்ற அழகிய அமைதியான கிராமமும் அமைந்துள்ளது. 

சமீபத்தில் (2010 கடைசியில்) சாலை விஸ்தரிப்பு செய்யப்போவதாக, இந்த டோல்கேட் ஆஞ்சநேயர் கோவில் முற்றிலுமாக இடிக்கப்பட்டு விட்டது.  இதை நேரில் பார்த்த எனக்கு மிகவும் மனதுக்கு வேதனையாக இருந்தது. 

அந்த டோல்கேட் பகுதி வாழ் மக்களும், அருகே உள்ள உத்தமர்கோயில், பிக்ஷாண்டார்கோயில் கிராம மக்களும், இந்த ஆஞ்சநேயர் கோயில் மேல் எவ்வளவு ஒரு ஆழ்ந்த நம்பிக்கையுடனும், பிரியத்துடனும், பக்தி செலுத்தி வந்தனர் என்பதை, நான் ஒரு காலத்தில் அந்தப்பகுதிக்கு அடிக்கடி போய் வந்ததனால் நன்கு அறிவேன். 

சமீபத்தில் அங்கு போனபோது, அந்தக்கோயில் இடிக்கப்பட்ட சம்பவத்தால், அந்தப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள மன வருத்தத்தையும், வேதனைகளையும், மிகவும் கொந்தளிப்பான உணர்வுகளையும் என்னால் நன்கு அறிந்துகொள்ள முடிந்தது.

அதன் தாக்கமே என்னை இந்தக்கதையை எழுதத்தூண்டியது. ]        

47 comments:

  1. மிகவும் சோகமான முடிவு....

    ReplyDelete
  2. சோகமான முடிவு . உண்மை சம்பவத்தைப் பற்றி இங்கு பேசாமல் இருப்பதே நலம்

    ReplyDelete
  3. அந்தக்கோயில் இடிக்கப்பட்ட சம்பவத்தால், அந்தப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள மன வருத்தத்தையும், வேதனைகளையும், மிகவும் கொந்தளிப்பான உணர்வுகளையும் என்னால் நன்கு அறிந்துகொள்ள முடிந்தது.

    அதன் தாக்கமே என்னை இந்தக்கதையை எழுதத்தூண்டியது. ] //

    நேரே பார்த்து தாக்கம் ஏற்பட்ட உணர்வை ஊட்டியது. கதை என்ற நினைவே வராமல் நடை அழகு பாராட்டுகிறோம் ஐயா.

    ReplyDelete
  4. அனுமந்துவும் மாருதியும் மரத்திலிருந்த தங்கள் குரங்குப் பட்டாளத்தையே கூட்டி வந்து, //
    விலங்குகள் தெய்வ குணத்தைக் காட்டின.
    கோவிலை இடித்து தன் குணத்தை வெளிப்படுத்தியது மனித சமூகம்.

    ReplyDelete
  5. அப்படியே மனம் இடிந்துபோய் மயங்கிக்கீழே சரிந்து விட்டாள். அவள் உயிர் அப்போதே தெய்வ சந்நிதியில் பிரிந்து போனது.

    கோயில் கதவுகள் சாத்தப்பட்டன. அன்றைய பூஜைகள் அத்துடன் நிறுத்தப்பட்டன.

    நல்லவர்கள் தங்களின் மரணத்தைப் பற்றி முன்னமே அறிந்து கொள்கிறார்கள், என்பதை மறுபடியும் நிருபித்த கதை


    மாருதி தன் நண்பர்களுடன் கலந்து கொண்டதை படித்தபோது கண்களில் கண்ணீர் கசிந்ததை தடுக்க முடியவில்லை, நல்ல கதை ஐயா
    நன்றி

    ReplyDelete
  6. நெகிழ்வான கதை!

    ReplyDelete
  7. மனசை என்னமோ பிசையிற மாதிரி இருக்கு...!!

    ReplyDelete
  8. உண்மை நிகழ்வுகளே கற்பனைகளின் ஊற்று. நெகிழ்வான கதை, உணர்ந்து எழுதப்பட்ட கதை. பாராட்டுக்கள் கோபு சார்.

    ReplyDelete
  9. மனதை தொட்ட கதை.
    நான் 1995 முதல் 2008 வரை திருச்சி லால்குடி காட்டூரில் தான் இருந்தேன் , நீங்கள் குறிப்பிடும் கோயிலுக்கு , உத்தமர் கோயில் செல்லும் போது , ஓரிரு முறை சென்றிருக்கிறேன்.
    இடிக்கப்பட்ட தகவல் அதிர்ச்சியாக இருக்கிறது

    ReplyDelete
  10. கதை எழுதியிருக்கும் விதமும் அதனூடே தொடர்ந்த சோகமும் மனதை கனமாக்கின. உண்மை சம்பவத்திற்கு மெருகூட்டி புனைந்திருக்கும் விதம் அழகு! இனிய பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  11. பல முறை உத்தமர் கோவிலுக்குச் சென்றிருக்கிறோம். கோவிலைப் பார்த்த நினைவு தங்கள் கதையைப் படித்தவுடன் வந்தது.
    கோவிலின் நிலை வருத்தத்தை வரவழைக்கிறது.

    ReplyDelete
  12. காலத்தோடு ஒட்டிய நிஜக்கதை..

    முடிவு சோகம்தான் இருந்தாலும் சோகத்தில் மனிதாபிமானம் உள்ள மனிதர்களை கண்டெடுக்கமுடியும்...

    ReplyDelete
  13. //தான் பெற்ற குழந்தைகள் போல ரசித்து ருசித்து சாப்பிடும் அவற்றைப் பார்த்த கிழவிக்கு ஒரே மகிழ்ச்சி.
    .........................
    .........................
    தனக்குத்தெரிந்தே, தன் பார்வையில், அந்த நாளில் கட்டப்பட்டதும், ஆதரவற்ற அனாதையான தனக்கு இன்று வரை ஒரு பாதுகாப்பு அளித்து வருவதுமான அந்தக்கோயில்கள், இடிக்கப்படப்போகின்றன என்ற செய்தி, அந்தக்கிழவிக்குத் தலையில் இடி விழுந்தது போல ஆனது//.

    இன்பமும் துன்பமும் யாருக்கு வேண்டுமானாலும் எந்த நேரமும் எந்த ரூபத்திலும் வரக்கூடும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தக் கதை . சிறந்ததொரு படைப்பு . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. சோகமான முடிவு பார்த்து கஷ்டப்பட்டது மனம். பல வருடங்களாய் இருக்கும் பல கோவில்கள், கட்டிடங்கள் இதுபோல திருச்சி - முசிறி சாலையிலும் இடிக்கப்பட்டு இருக்கின்றன. கோவில்கள் மட்டுமின்றி வீடுகள் கூட தரைமட்டமாய் இடிக்கப்பட்டு பலர் வீடு வாசல் இன்றி தவிக்கின்ற நிலைமையும் இருக்கிறது.

    கதை பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  15. கண்ணாம்பா பாட்டியின் முடிவு எதிர்பார்த்தது தான்; ஆனால் சென்ற பகுதி படிக்கும் பொழுது வேறு மாதிரி முடிப்பீர்கள் என்று நினைத்தேன்.
    கண்ணாம்பா கிழவி சேர்த்து வைத்திருக்கும் சொற்ப பணத்தில் அவள் வேண்டுதல்களுக்கான ஏற்பாடுகள் செய்கையில் அவளின் முடிவு சம்பவிக்கும் என்று எதிர்பார்த்தேன்.

    குரங்குகளின் இறப்பின் பொழுதே கோயில் கட்டிய பொழுது, கண்ணம்பா பாட்டி போன்ற உத்தம மானுடரின் நினைவில் கோயில் உருவாகக் கூடாதா, என்ன?... பாட்டி நினைவில் ஒரு அம்பாள் சந்நிதிக்கும் வழியேற்பட, வைத்த தலைப்பிற்கும்
    வழி சொல்லியாச்சு.

    ஆனால், கதை வேறுவிதமாகப் போனது தான் எதிர்பாராதது என்றாலும் யதார்த்தமானதே. Well said.

    ReplyDelete
  16. சோகமான முடிவாய் இருந்தது. மாருதி தன் நண்பர்கள் புடை சூழ இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது மனதை கனக்க வைத்தது.
    பிக்ஷாண்டார் கோவிலில் தான் என் அப்பா வீடு கட்டி சிறிது காலம் இருந்தார். அழகான இடம். அங்கு இருந்த நாட்கள் மறக்க முடியாதவை.

    ReplyDelete
  17. நல்ல படைப்பு

    படித்து முடித்ததும் மனசு ஏதோ ஒரு மாதிரி இருக்கு

    மனசு ரெம்ப நெகிழ்ச்சியா இருக்கு.

    ReplyDelete
  18. டோல்கேட் ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்டு பல நாட்களாகியும் இன்னமும் அந்த இடிபாடுகள் கூட அகற்றப்படவில்லை..
    பாட்டியின் நல்ல மனசுக்கு இந்தக் கதை சரியான அஞ்சலி

    ReplyDelete
  19. இடிந்து விட்டது என் மனசு!
    இடித்து விட்டீர்கள் தங்கள் எழுத்தால்!!

    ReplyDelete
  20. மனதைப் பாதித்த சம்பவத்தை கதையாக எழுதி விட்டீர்கள். சுவையாக இருந்தது. சென்னை குரோம்பேட்டை அருகில் கூட சில வருடங்களுக்கு முன்னாள் இது போல ஒரு கோவில் சாலைப் போக்குவரத்துக்கு தடையாக உள்ளது என்று இடித்தார்கள். பக்தர்கள் சற்று தளளி மீண்டும் அதை ஏற்படுத்தி விட்டார்கள்.

    ReplyDelete
  21. சனிக் கிழமைக்குப் பின் என் இன்டர்நெட் பாதிக்கப் பட்டதால் வலையுலகம் பக்கம் வர முடியவில்லை.

    ReplyDelete
  22. சோகம் சூழ்ந்துவிட்டது.

    ReplyDelete
  23. மனதை தொட்ட கதை... நல்லா வரி வடிவம் குடுத்து இருக்கீங்க...

    ReplyDelete
  24. உணர்வுகளை புரிந்து எழுதப்பட்டக்கதை
    உயிரோட்டமாய்..

    ReplyDelete
  25. முதன்முறையாக உங்கள் வலை பக்கம் வந்திருக்கிறேன் .மூன்று பாகத்தையும் படித்தேன் .நெகிழ்ச்சியான நிகழ்வுகளை கொண்ட கதை .

    ReplyDelete
  26. யதார்த்தமான கதை
    எளிமையான நடை
    மனத்திற்குள் ஒரு
    நெருடலை ஏற்படுத்திப்போகும் முடிவு
    மொத்தத்தில் சூப்பர் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. முடிவு எதிர்பார்த்த ஒன்று... ஆனால் கதைக்கான பின்னனி ஒரு முதிர்ந்த எழுத்தாளனின் பார்வையாக உள்ளது... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. மனசை நெகிழ வைத்தது !

    ReplyDelete
  29. கதை எழுதியிருக்கும் விதமும் அதனூடே தொடர்ந்த சோகமும் மனதை கனமாக்கின. உண்மை சம்பவத்திற்கு மெருகூட்டி புனைந்திருக்கும் விதம் அழகு! இனிய பாராட்டுக்கள்!!கதை எழுதியிருக்கும் விதமும் அதனூடே தொடர்ந்த சோகமும் மனதை கனமாக்கின. உண்மை சம்பவத்திற்கு மெருகூட்டி புனைந்திருக்கும் விதம் அழகு! இனிய பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  30. இந்த இறுதிப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, கதையின் சோகமான முடிவுக்கு வருத்தங்கள் கூறி, பிறகு யதார்த்தமான போக்கையும் ஒத்துக்கொண்டு, மனதை நெகிழ்வித்த கதை என்று எனக்கு உற்சாகம் கொடுத்துப்பாராட்டி அரிய பெரிய கருத்துக்கள் கூறியுள்ள என் அருமை உடன்பிறப்புகளான

    திருவாளர்கள்:

    கலாநேசன்,
    எல்.கே,
    "என் ராஜபாட்டை"- ராஜா
    A.R.ராஜகோபாலன்
    MANO நாஞ்சில் மனோ
    G.M Balasubramaniam Sir
    சிவகுமாரன்
    # கவிதை வீதி # சௌந்தர்
    கணேஷ்
    வெங்கட் நாகராஜ்
    ஜீவி
    துஷ்யந்தனின் பக்கங்கள்
    ரிஷபன் அவர்கள்
    ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
    ஸ்ரீராம்
    Ramani Sir &
    மதுரை சரவணன்

    ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    என்றும் தங்கள் அன்புடன் vgk

    ReplyDelete
  31. இந்த இறுதிப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, கதையின் சோகமான முடிவுக்கு வருத்தங்கள் கூறி, பிறகு யதார்த்தமான போக்கையும் ஒத்துக்கொண்டு, மனதை நெகிழ்வித்த கதை என்று எனக்கு உற்சாகம் கொடுத்துப்பாராட்டி அரிய பெரிய கருத்துக்கள் கூறியுள்ள என் அருமை சகோதரிகளான

    திருமதிகள்:

    ’தெய்வீகப்புகழ்’ எழுத்தாளர்
    இராஜராஜேஸ்வரி அவ்ர்கள்

    middleclassmadhavi அவர்கள்

    பிரபல ’முத்தான’ எழுத்தாளர்
    மனோ சாமிநாதன் அவர்கள்

    கோவை2தில்லி அவர்கள்

    மாதேவி அவர்கள்

    பிரபல ’ஜில் ஜில்’ எழுத்தாளர்
    ’ஜில்லுனு’ புகழ்
    அப்பாவி தங்கமணி அவர்கள்

    பிரபல எழுத்தாளர்
    ‘கலைச்சாரல் & நீரோடை’ப்புகழ்
    அன்புடன் மலிக்கா அவர்கள்

    முதல் வருகை தந்துள்ள
    angelin அவர்கள்

    பிரபல மகளிர்
    ஸ்பெஷல் எழுத்தாளர்
    Geetha6 அவர்கள்

    பிறரின் பின்னூட்டத்தையே
    Cut & Paste
    செய்யும் Specialist
    மாலதி அவர்கள்

    அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த
    நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  32. இன்ட்லி & தமிழ்மணத்தில் எனக்கு ஆதரவாக வாக்குகள் அளித்த அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  33. உணர்வுகளை பிரதிபலிக்கும் கதை.
    அருமை சார்.

    ReplyDelete
  34. அங்கங்கே இம்மாதிரி கோயில்கள் இடிக்கப்படுவது நடந்து கொண்டேதான் இருக்கிரது. மன வெதும்பலில் நீங்கள் புனைந்த மாதிரி கதைகளும் உண்மையிலும் நடந்து கொண்டு இருந்தது.
    இக்காலத்தில் கோயில்களை இடிப்பதுடன் நில்லாமல் ,அங்குள்ளவர்களை துரத்துவதும் நடக்கிறது.
    உணர்வுகள் அருமையான கதையைப் படைக்க உதவியது உங்களுக்கு. ரொம்ப நல்ல கதை.பாராட்டுகள்.அன்புடன்

    ReplyDelete
  35. நிறையக் கோயில்கள் இடிக்கப்படுகின்றன. என்ன செய்வது! :(

    ReplyDelete
  36. கண்ணீர் வர வைத்த கதை.

    ReplyDelete
  37. கதையும் அது உருவாக காரணமும் மிக அருமை.
    கண்ணம்மா பாட்டியின் குழந்தைகள் அழுத போது நாமும் கலங்கி போகிறோம் என்பது உண்மை.

    ReplyDelete
  38. யாருமற்ற அனாதைகள் என்று உலகில் யாருமில்லை, ஆண்டவன் அவர்களுக்கு ஒரு வழி காட்டுவான் என்பதை அழுத்தமாகச் சொல்லிப் போகிறார் கதாசிரியர்.

    ReplyDelete
  39. நீங்க சிறந்த எழுத்தாளர் இல்லையா. அதான பாக்குற கேக்கற சம்பவங்களின் தாக்கம் கதை வடிவில எங்களுக்கு கிடைக்குது

    ReplyDelete
  40. அவங்க மறைவுக்கப்புறம் அந்தக்கோவிலை இடித்தார்களா, இல்லையா தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கு.

    அவங்க இறந்தது மனதுக்கு ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கு.

    கதை என்றும் மறந்து அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொண்டேன்.

    ReplyDelete
  41. அந்த கெளவியோட சாவுக்கு எத்தர உளங்க உருகி போயிருக்கு. அவ நல்ல உள்ளம்தான் கார்ண்ம் போல கீது. இதுபோல நட பாதயில எதுக்கு ஒரு க்கொவில கட்டோணும் கவர்மெண்டு ஏன் இடிக்கோணும். வெளங்கிக்கவே மிடியல.

    ReplyDelete
  42. கோவில் இடிபடப்போகும் செய்தியை கேட்டதுமே அவள் உயிர் பிரியணும் என்றால் எந்த அளவுக்கு ஆண்டவன் மேல் பக்தி நம்பிக்கை வச்சிருக்கணும அவள். படிப்பறிவில்லாத பாமர ஏழைப் பெண்மணிதான் தன் கடைசி செலவுக்கென்றுகூட பணம் கொடுக்கும் தாராள மனசு. முடிவு நெகிழ்ச்சி.

    ReplyDelete
  43. ஆண்டவனே உறவு...கோயிலே உறைவிடம்...கண்ணாம்பாளின் முடிவு..நெகிழ்வு...உண்மைச்சம்பவம் அளித்த உன்னதக் கதை...

    ReplyDelete
  44. பின்னணியில் உள்ள நிகழ்வும், கதையைப் படைத்த விதமும் மனதை நெகிழவைத்தன!

    ReplyDelete
  45. கோவில் கட்டி பூஜைகள் நடக்கும் வரை கவர்மெண்ட் கண்ணை மூடிகிட்டு இருந்திச்சா.. கண்ணாம்பா கிழவியால் அந்த கோவில் இடிக்கப்போற அதிர்ச்சிய தாங்க முடியாம உசிரையே விட்டுட்டாங்களே. சோகமான முடிவு..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      Delete