என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 26 ஜூன், 2011

மறக்க மனம் கூடுதில்லையே.... [பகுதி 4 of 4] இறுதிப்பகுதி


முன்கதை முடிந்த இடம்:


என்னை ஜன்ம ஜன்மமாக, ஆத்மார்த்த அன்புடன் தொடர்ந்து வந்துள்ள, ஏதோவொரு மிக நெருங்கிய உறவு, என்னை விட்டு இப்போது, எங்கோ, வெகுதூரம் விலகிச்செல்வதுபோல உணர்ந்தேன்.

அதன் பிறகு இன்று வரை நான் அவளை சந்திக்கவே இல்லை.


===============================

என் கற்பனைக்காதலியான அந்த பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் அசல் அச்சில் இருந்த இந்தப்பெண்ணை கடற்கரையில் கண்டு சிலையாகிப்போன என்னை, என் மகன் “என்னப்பா...ஏதோ யோசனையில் இருக்கிறீர்கள்! “மீட் மிஸ்டர் கோபிநாத், மிகப்பெரிய தொழிலதிபர், அவரின் ஒரே பெண் இவள்” என்றான்.

தொழிலதிபருடன் கை குலுக்கினேன். அந்த அழகு தேவதையைக் கைகூப்பி வணங்கினேன். அந்தப்பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் என் மனைவிக்குப் பிடித்துப்போய் விட்டது. 

சம்ப்ரதாயத்திற்காகவும், மேற்கொண்டு பேசி முடிவெடுக்க நாங்கள் காரில் ஏறி பெண் வீட்டுக்குப்போனோம். ஏற்கனவே என் பையனும் அந்தப்பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசி முடிவெடுத்துவிட்ட விஷயம் தான்.

அந்தப்பெண்ணின் வீட்டை அடைந்த நாங்கள், அவர்களின் செல்வச்செழிப்பைக்கண்டு வியந்து போனோம். பெண்ணின் தாயாரைப்பார்க்க வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தைத் தெரிவித்தோம்.

சற்றே தயங்கியவாறு அழைத்துச்சென்றனர். பெண்ணின் தாயாரைப்பார்த்த நானும் என் மனைவியும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.

ஒரு தனி அறையில் சங்கிலியால் கட்டிப்போட்டிருந்தனர். தலை முழுவதும் ஆங்காங்கே புண்ணுடன் கூடிய வீக்கங்கள். சம்மர் க்ராப் அடித்த தலைபோல முடிகள் ஆங்காங்கே வெட்டப்பட்டிருந்தன. 

எங்களைக்கண்டதும் ஒரு புன்சிரிப்பு, ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும். பிறகு கேவிக்கேவி அழுகை. எங்கேயோ வெறித்த ஓர் பார்வை. சற்று நேரத்தில் நைட்டியில் சுருண்டு படுத்துக்கொண்டாள். 

சிவந்த முகம் வெளிறிப்போய் இருந்தது. கைகளிலும் ஆங்காங்கே காயங்கள். ஒருசில வருடங்களாக ஏதோ ஒருவித மனோவியாதியாம். உடுத்தும் உடைகளையே உருவி விட்டெறிந்து விடுகிறாளாம்.

பணக்காரக்கணவர், எடுபிடியாக எக்கச்சக்க வேலையாட்கள், விலையுயர்ந்த கார்கள், அழகிய தோட்டங்களுடன் மிகப்பெரிய பங்களா வீடு, அழகு தேவதையாக ஒரே மகள். அனைத்து சுகங்கள் இருந்தும் அனுபவிக்கக்கொடுத்து வைக்காத ஜன்மம். என்ன கொடுமை இது. என் மனது மிகவும் நடுங்கியது.

எப்படி அழகாகவும், மிடுக்காகவும் இருந்த என் அன்றைய கற்பனைக் கதாநாயகி , அழகு தேவதை, தங்கப்பதுமை, தங்கச்சிலை, பைங்கிளி என்றெல்லாம் என்னால் வர்ணிக்கப்பட்டவள் இன்று இப்படி அலங்கோலமாக ஆகிவிட்டாளே! என நினைத்து என் மனம் கண்ணீர் வடித்தது. அங்கு நிற்கவோ அவளைத்தொடர்ந்து பார்க்கவோ என் மனம் சகிக்காமல், வேறு பக்கமாக என் பார்வையைத் திருப்பிக்கொண்டேன்.

இளமையும் அழகும் ஆரோக்கியமும் என்றும் நிரந்தரமல்ல என்பதை இந்த என் அனுபவத்தில் புரிந்து கொண்டேன். 

என் எண்ணங்களையும், உணர்வுகளையும், அந்த நாள் ஞாபகங்களையும் அங்கு யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத பரிதாப நிலையில் நான்.

ஈ என்று எப்போதும் என்னிடம் இளித்து வந்த அந்த ஈரோட்டுக்காரியையும், மனநலம் குன்றிய நிலையில் உள்ள இந்த மதராஸ்காரியையும் மாறிமாறி நினைத்துக்கொண்டே, என் மனைவியைத் திரும்பிப்பார்த்தேன். 

இந்த வயதிலும் அவள் மிகவும் அழகாக, லட்சணமாக, ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றியது. என் தாய் தந்தையர் பார்த்து, எனக்குப் பொருத்தமானவளாகத் தேர்ந்தெடுத்து, கட்டிவைத்து ஆசீர்வதிக்கப்பட்டவள் அல்லவா என் மனைவி என்று, என் பெற்றோர்களை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.

“எது எப்படியிருந்தாலும் நம் மகன் அந்தப்பெண்ணையும், அந்தப்பெண் நம் மகனையும் மனதாரக் காதலிப்பதாக வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்கள். பிறகு என்ன! கல்யாண ஏற்பாடுகளைச் செய்துவிடுவோம்” என்று ரகசியமாக என் மனைவியிடம் தெரிவித்தேன்.

என் மகன் என்னை நெருங்கி “அவளின் அம்மாவை மட்டும் மறந்து விட்டுப்பார்த்தால், இந்த சம்பந்தம் எல்லாவிதத்திலும் ஓ.கே. தானே அப்பா” என்றான்.

“அவளின் அம்மாவை ஏன் மறக்கணும்? அவர்களும் நன்றாக அழகாக இருந்தவர்கள் தானே ஒரு காலத்தில்! நடுவில் வந்துள்ள ஏதோ ஒரு சோதனை - கண் திருஷ்டிபோல இப்படி ஆகியுள்ளது - தகுந்த சிகிச்சை அளித்து வருவதால் கூடிய சீக்கரம் குணமாகி விடுவார்கள்” என்று அவனுக்கு சமாதானம் சொல்வதுபோல எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.


-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o- 






[இந்தக்கதை பத்திரிகை ஆசிரியர் அவர்களால் சற்றே சுருக்கப்பட்டு 
“காதலும் கல்யாணமும்” என்ற தலைப்பில் 
10.03.2010 தேதியிட்ட தேவி வார இதழில் வெளியிடப்பட்டது.]







வியாழன், 23 ஜூன், 2011

மறக்க மனம் கூடுதில்லையே.... [பகுதி 3 of 4]



முன்கதை முடிந்த இடம்:

ஓரிரு வருடங்கள் முன்பு திருச்சி மலைவாசல் கடைவீதியில், அந்த நாட்களில் ஓயாமல் என்னைச்சுற்றி வந்தவளை, நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. 

===========================
முதுமையால் தலையில் ஆங்காங்கே சற்றே வெள்ளி முடிகளுடன் காணப்பட்டாள். வறுமைத் தோற்றம் உடுத்தியிருந்த ஆடைகளில் பிரதிபலித்தது. சற்றே உடம்பு குண்டாகவும் ஆகியிருந்தாள்.

என்னைக்கண்டதும் முக மலர்ச்சியுடன் ஒரு சிரிப்பு. அதே சிரிப்பு. முத்துப்பற்களின் மேல் வரிசை வெளியே வந்து, "நான் தான், நானே தான், அன்று இளமையில் உன்னைச் சுற்றிச்சுற்றி வந்தவள்" என்று நினைவூட்டியது , அந்த அவளின் சிரிப்பு. 

என்னை உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை மிகவும் அதிசயமாக நோட்டமிட்டாள். ”பெரிய ஆபீஸர் ஆகி, கார், பங்களா எல்லாம் வாங்கியிருப்பாயே!” என்றாள்.

நடு ரோட்டில் நாங்கள் நின்று கொண்டிருந்ததாலும், போக்குவரத்து நெருக்கடிகள் அதிகம் உள்ள சாலை என்பதாலும் ”அருகில் இருந்த உணவு விடுதிக்குள் சென்று உட்கார்ந்து பேசலாமா” என்றேன் .

“ஆஹா...... நீயே அதிசயமாகவும், ஆசையாகவும், இவ்வளவு வருஷம் கழித்தாவது கூப்பிடுகிறாய்; வருவதற்கு என்ன, எனக்கு வலிக்குமா” என்று சொல்லி என்னுடன் உள்ளே வந்தாள். குளிரூட்டப்பட்ட தனிமைப்பிரிவுக்குச்சென்று, அமைதியான சூழலில் வசதியாக அமர்ந்து கொண்டோம்.

என்னிடமிருந்து உரிமையுடன் என் மணிபர்ஸ் மற்றும் பேனா இரண்டையும் என் சட்டைப்பையிலிருந்து அவளாகவே எடுத்து நோட்டமிட்டாள்.  அதில் கத்தை கத்தையாக இருந்த ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை ஆசையுடன் வெளியில் எடுத்து எண்ணிப்பார்க்க ஆரம்பித்தாள்.

 “இவற்றை எண்ணி முடிப்பதற்குள் என் விரல்களுக்கு வலி எடுத்துவிடும் போலிருக்கு” என்று சொல்லி என்னைப்பார்த்து சிரித்தபடியே, திரும்ப அவற்றை எண்ணி முடிக்காமலேயே என் பர்ஸுக்குள் திணித்தாள்.

அதிலிருந்த ஒரு புதுப்பத்து ரூபாய் சலவை நோட்டை மட்டும் எடுத்து பேனாவால் என் பெயரை அழகாக எழுதி, அன்றைய தேதியையும் குறிப்பிட்டு அதை முத்தமிட்டு தன் கண்களில் ஒத்திக்கொண்டு பர்ஸின் தனி அறையில் வைத்தாள். 

“இந்த ஒரே ஒரு நோட்டை மட்டும் செலவு செய்யாமல் என் ஞாபகார்த்தமாக பத்திரமாக வைத்துக்கொள்” என்றாள்.  

பர்ஸிலிருந்த என் விஸிட்டிங் கார்டுகளில், இரண்டே இரண்டு மட்டும் எடுத்துக்கொண்டு, அதைப்படித்துப்பார்த்து, வியப்பில் தன் புருவங்களை சற்றே உயர்த்தி, என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே, அவற்றை அவள் தன் முன்கழுத்துக்கு கீழ்ப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் பத்திரப்படுத்திக் கொண்டாள். 

“அந்த என் விஸிடிங் கார்டுகளை, பத்திரமாக வைத்துக்கொள்ள வேறு இடமே உனக்கு கிடைக்கவில்லையா? என்றேன்.

“எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் தான், நான் உன்னை பத்திரமாக வைத்திருக்கிறேன்; உனக்குத்தான் எப்போதுமே ஒரு எழவும் புரிய மாட்டேங்குது; சரி அதை விடு; இப்போ என்ன சாப்பிடலாம்? என்று சிரித்துக்கொண்டே பேச்சை மாற்றினாள்.

”நீ பார்த்து எது ஆர்டர் கொடுத்தாலும், எனக்கு ஓ.கே” என்றேன். 

ஸ்வீட் முதல் கூல்ட்ரிங்க்ஸ் ஐஸ்கிரீம் வரை அவளே அனைத்தையும் அழகாக ஆர்டர் செய்தாள். அந்த 40 நிமிடங்களுக்குள் கடந்த 40 வருட சமாசாரங்களையும் சரமாரியாக எடுத்துரைத்தாள்.   

ஏதேதோ தனது வருத்தங்களையும் பகிர்ந்து கொண்டாள். அவற்றை உன்னிப்பாகக் கேட்டு வந்த நான், அவ்வப்போது அவளுக்கு சற்றே ஆறுதல் வார்த்தைகளும் கூறி வந்தேன்.     

பல ஊர்கள் சுற்றி தற்சமயம் ஈரோட்டில் வசிப்பதாகவும், தனக்கு இரண்டே இரண்டு பெண்கள் மட்டுமே என்றும், இருவரும் காலேஜ் படிப்பதாகவும், தன்னைப்போல் இல்லாமல் நல்ல கலராகவும் அழகாகவும் இருப்பதாகவும் கூறியவாறே, மீண்டும் சிரித்தாள். 

இவளுடன் பேசிக்கொண்டே இருந்தால் நாமும் எல்லாக் கவலைகளையும் மறந்து எப்போதுமே சிரித்துக்கொண்டே இருக்கலாம் போல உள்ளதே, என்று நினைத்துக்கொண்டேன்.

“நிறைய அடர்த்தியான தலைமுடியுடன், அழகாக கர்லிங் ஹேர் நெற்றியில் விழும்படி ஜோராக இருப்பாயே! ஏன் இப்படி உன் பின்மண்டையில் கொஞ்சூண்டு ரெளண்டாக வழுக்கை விழுந்துள்ளது?” என்று கேட்டுச் சிரித்தாள்.

“வயதுக்கேற்ற வழுக்கை; என்ன செய்வது” என்றேன். 

“விக் வைத்துக்கொண்டு எப்போது இளமைத்தோற்றத்துடன் இரு” என்றாள்.

என்னைப்பற்றி அடிக்கடி நினைத்துக் கொள்வாளாம். தனக்கு ஒரு பிள்ளை பிறந்தால் என் பெயரையே சூட்ட வேண்டும் என்று நினைத்திருந்தாளாம்.

நல்ல வேளையாக நான் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளாததும் நல்லது தானாம். அவளின் துரதிஷ்டம் என்னையும் சுகப்பட வைக்காமல் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்குமாம். ஏதேதோ கற்பனைகள் செய்து பார்த்திருக்கிறாள்...பாவம்.

உருவத்தில் அவள் முழுப் பலாப்பழம் போலத்தோன்றினாலும், உள்ளத்தில் நல்ல இனிய பலாச்சுளை தான் என்று நினைத்துக் கொண்டேன். 

ஒருவருக்கொருவர் விடைபெறும் முன், என் பர்ஸிலிருந்து பணம் எடுத்து ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கித் தன் தலையில் சூடிக்கொண்டாள்.     எதிர்புற ரோட்டுக்கடையில் ஒரு ஜோடி லேடீஸ் செருப்பு வாங்கி அணிந்து பார்த்தாள். 

“நல்ல பெரிய செருப்புக்கடைக்குப்போய் நல்ல தரமானதாக, லேடீஸ் சப்பலாக வாங்கிக்கொள்ளலாமே” என்றேன்.

“இது போதும்; ஒரு ஆறு மாதம் உழைத்தால் போதும்; விலையும் மலிவு; அடிக்கடி அறுந்து போகும்; அல்லது தொலைந்து போகும்; பெரிய கடைக்கெல்லாம் போய் வாங்கினால் எனக்குக் கட்டுப்படியாகாது” என்று சொல்லி செருப்புக்கும் என் பர்ஸிலிருந்து பணம் எடுத்துக்கொடுத்தாள்.

என்னுடன் ஒரு மணி நேரம் இன்று மனம் விட்டுப்பேசி, உச்சி முதல் உள்ளங்கால் வரை [தலைக்கு மல்லிகைப்பூ, வயிற்றுக்கு ஆகாரம், கால்களுக்கு செருப்பு என ] திருப்தியாக அனைத்தையும் அனுபவத்ததில், தான் ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டதாகச்சொல்லி சிரித்தாள். 

அன்று முதல் இன்று வரை அவள் என் மீது பிரேமபக்தி கொண்டிருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

“உன் பர்ஸ் மிகவும் கனமாக உள்ளது. பத்திரமாக வைத்துக்கொள்” என்று சொல்லி, என்னிடம் திரும்ப ஒப்படைக்கப் பார்த்தாள். 

“நீயே அந்தப்பர்ஸில் உள்ள முழுப்பணத்தையும் எடுத்துக்கொள்;உன் அவசர அவசிய செலவுகளுக்கு வைத்துக்கொள்; கடவுள் புண்ணியத்தில் எனக்குப்பணத்துக்கு இப்போதெல்லாம் பஞ்சமே இருப்பதில்லை” என்று மிகவும் வற்புருத்திக்கூறினேன்.

ஒரே ஒரு நிமிடம் தயங்கினாள். ஏதோ பலமாக யோசித்தாள். ஆனாலும் பிறகு வாங்கிக்கொள்ள மறுத்து விட்டாள். பர்ஸை என்னிடம் ஒப்படைத்தபடியே, கண்ணில் ஏதோ தூசி விழுந்து விட்டதாகக்கூறி, தன் புடவைத்தலைப்பால் துடைத்துக்கொண்டாள். 

மீண்டும் தன் முத்துப்பற்களைக்காட்டி ஒரு சிரிப்பு சிரித்தபடியே என்னிடம் விடைபெற்றுச் சென்றாள்.  அவள் என் கண்பார்வையிலிருந்து மறையும் வரை அவள் நடந்து சென்ற பாதையையே நோக்கிக்கொண்டிருந்தேன்.

என்னை ஜன்ம ஜன்மமாக, ஆத்மார்த்த அன்புடன் தொடர்ந்து வந்துள்ள, ஏதோவொரு மிக நெருங்கிய உண்மையான உறவு, என்னை விட்டு இப்போது, எங்கோ, வெகுதூரம் விலகிச்செல்வதுபோல உணர்ந்தேன்.

அதன் பிறகு இன்று வரை நான் அவளை சந்திக்கவே இல்லை.

தொடரும்

செவ்வாய், 21 ஜூன், 2011

மறக்க மனம் கூடுதில்லையே.... [பகுதி 2 of 4]

முன்கதை முடிந்த இடம்


நான் உண்டு என் வேலையுண்டு என்று மிகவும் சங்கோஜியான என் வாழ்க்கையில் குறுக்கிட்டவர்கள் இரண்டு பெண்கள். ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருத்தி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள்.

=========================

என்னை விரும்பியவள் சராசரி அழகென்றோ, சுமாரான நிறமென்றோ கூட சொல்லமுடியாதவள். இருப்பினும் பருவ வயதிற்கேற்ற பதமான பக்குவத்தில் பளபளப்பாகவே தோற்றம் அளித்தவள்.  எப்போதும் சிரித்த முகம் அவளுக்கு.  அவள் சிரிக்கும் போது மேல் வரிசைப்பற்கள் அனைத்தும் சற்று தூக்கலாகத் தெரியும். எல்லோரிடமும் மிகவும் கலகலப்பாகப்பழகும் பெண் அவள்.  

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், வலுவில் வந்து பேசிப்பழகி, என் கூச்ச சுபாவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, எப்படிப்பழக வேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி மிடுக்காக இருக்க வேண்டும் என எனக்கு நாகரீகம் சொல்லிக் கொடுத்தவளும் கூட.. 

என் வாலிப வயதில், முதன்முதலாக என்னுடன் மிகவும் உரிமையுடன் பழக ஆரம்பித்தவள் என்பதால், அவளுடன் கடைசிவரை நல்லதொரு நட்புடன் பழகவே, நானும் ஆசைப்பட்டேன் என்பதையும் மறுப்பதற்கில்லை. 

அன்று ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்தவர்களுடன் ஆறு மாத குழந்தையொன்று கொழுகொழுவென்று வந்திருந்தது. நான் என் மடியில் வைத்து அதைக்கொஞ்சிக் கொண்டிருந்த போது, அவள் அதை என்னிடமிருந்து வெடுக்கென்று தூக்கிச்சென்று கொஞ்சுவதும், அதை என் எதிரிலேயே பலவிதமாக முத்தம் கொடுப்பதும், பிறகு அந்தக்குழந்தையை என்னிடம் திரும்பத்தருவது போல என்னையே உரசுவதுமாக ஏதேதோ கிளுகிளுப்பை ஏற்படுத்தி வந்தாள். 

நான் என் உணர்ச்சிகளை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டு, அவளிடம் மிகவும் உஷாராகவே பழகி வந்தேன். அவள் ஒரு வெகுளிப்பெண் என்று நினைத்து அவள் செயல்களை கண்டுகொள்ளாமலும், கண்டிக்காமலும் விட்டு வரலானேன்.

நான் என் கற்பனையில் விரும்பிய பெண் பக்கத்துத் தெருவிலிருந்து, என் பக்கத்து வீட்டுக்கு ஏதோ உறவென்று சொல்லி அவ்வப்போது வந்து செல்பவள். கால்களில் கொலுசுகளும், காதுகளில் ஜிமிக்கிகளுமாக வயது 16 அல்லது 17 இருக்கும் தேவதை. அழகோ அழகு. பளிச்சென்று வசீகரத் தோற்றம். பலாச்சுளை நிறம்.

அவளைப் பார்க்கும் யாருக்குமே பார்த்துக் கொண்டே இருக்கத்தோன்றும். ஆனால் அவள் யாரையும் லட்சியம் செய்து பார்க்கவோ, பேசவோ நேரமற்றவள் போல அலட்சியமாகத்தோன்றி மறைந்து விடுவாள். அவள் நன்றாக சைக்கிள் ஓட்டுவாள்.

ஒரு நாள் அவள் ஸ்கூட்டர் ஓட்டியும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக்கிட்டியது. மற்றொரு நாள் ‘L' போர்டு போட்ட ஹெரால்ட் காரை ரோட்டில் மிகவும் மெதுவாக ஓட்டிச்சென்று கொண்டிருந்தாள். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவே அவள் எனக்குக் காட்சி அளித்து வந்தாள். தினமும் ஒரு கார் வீதம் ஓட்டிப்பழகிய அவள், கார் புரோக்கர் ஒருவரின் மகள் என்று, பிறகு தான் நான் தெரிந்து கொண்டேன்.

இத்தகைய அழகான, அறிவாளியான, துணிச்சலான பெண் மனைவியாக அமைந்தால் எப்படி இருக்கும் என அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பேன். 

இந்தக்காலம் போல அவளிடம் நேரிடையாகவே பேசவோ அல்லது நண்பர்கள் உறவினர்கள் மூலம் முயற்சிசெய்து பார்க்கவோ, அன்று எனக்கு ஏதோ ஒருவிதத்தயக்கம்.  

எனக்கு மட்டுமல்ல, அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்த இளம் வயதினர் எல்லோருக்குமே அநேகமாக இப்படித்தான். சமூகக் கட்டுப்பாடுகள் அதிகம். நம் இஷ்டப்படியெல்லாம் சுதந்திரமாக செயல்பட்டு விட முடியாது. 

பெரும்பாலும் பெரியோர்களாகப் பார்த்து செய்து வைக்கும் Arranged Marriages மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. நம் விருப்பத்தைக் கேட்கவும் மாட்டார்கள். சொல்லவும் நமக்கு மிகவும் கூச்சமாக இருக்கும். 

ஒரு ஆணும் பெண்ணும் தனியாக சந்திப்பது, பேசுவது, நட்புடன் பழகுவது என்பதெல்லாம் நடக்காத காரியங்கள். அவை ஏதோ கொலைக்குற்றம் போல கருதப்பட்ட காலம் அது.

ஒரு நாள் தீபாவளிப்பண்டிகையன்று, கோயிலுக்குச்சென்று நான் திரும்பி வரும்போது, தெருவில் சிறுவர்கள், தொடர்ச்சியாக நிறைய பட்டாசுச்சரத்தை கொளுத்தியிருந்ததால், அங்கு அருகிலேயே கதவு திறந்திருந்த ஒரு வீட்டு வாசலில் சற்றே ஒதுங்கி நின்றேன்.  அந்த வீட்டின் உள்ளிருந்து, என்னை உள்ளே வரச்சொல்லி அழைப்பு வந்தது. உள்ளே போன பிறகு தான் தெரிந்தது, அது அந்த அழகுப்பதுமையின் [கொலுசு+ஜிமிக்கியின்] வீடு என்பது. என்னை உள்ளே அழைத்தது அவளின் அப்பாவும், அம்மாவும் தான். 

என் வீட்டுக்கு பக்கத்து வீட்டின் உறவினர் என்பதால் எனக்கு அவர்களையும், அவர்களுக்கு என்னையும் ஒருவரையொருவர் ஏற்கனவே பார்த்துள்ள அனுபவம் உண்டு. ஆனால் அதிகம் பேசிக்கொண்டது இல்லை.

உள்ளிருந்து எட்டிப்பார்த்த அழகுப்பதுமையிடம், அவள் அம்மா தன் கையை உருட்டி ஏதோ ஜாடை காட்ட, அந்த அழகுப்பதுமை காலில் கொலுசு ஒலிக்க, காதில் எனக்கு மிகவும் பிடித்த ஜிமிக்கி தொங்க, என்னிடம் நெருங்கி வந்து, ரவாலாடு ஒன்றை என் கையில் கொடுத்துப்போனது. இருகரங்களையும் ஒன்றாகக்குவித்து நீட்டி மிகவும் பெளவ்யமாக கோவில் பிரஸாதம் போல வாங்கிக்கொண்டேன்.

எப்போதும் அவளை பாவாடை, சட்டை, தாவணியில் மட்டுமே பார்த்திருந்த நான், இன்று தீபாவளிக்காக அணிந்திருக்கும் புத்தம் புதிய புடவையில் பார்க்க நேர்ந்தது.  கிளிப்பச்சைக்கலரில், உடலெங்கும் மின்னும் ஏதொவொரு புது டிசைனில், டிவிங்கிள் நைலான் என்ற பெயரில் அந்தக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புடவையில் ஜொலிக்கக்கண்டேன்.  பைங்கிளி ஒன்றை அதன் கூட்டுக்குள் நானும்  புகுந்து பார்த்தப் பரவசம் எனக்குள் ஏற்பட்டது. 

சுடச்சுட உருக்கிய நல்ல நெய்யில் அப்போதுதான் உருண்டை பிடித்திருக்கிறார்கள் என்பது, அதன் மிதமான சூடு, நெய் மணம், வெளியே சற்றே எட்டிப்பார்க்கும் முந்திரிப்பருப்பின் மூக்கு முதலியவற்றால் என்னால் உணர முடிந்தது. 

அவள் கைப்பட்ட அந்த ரவாலாடை, அவளின் பெற்றோர்களுக்கு எதிரில், அப்படியே முழுவதுமாக வாயில் போட்டு, அசைபோடுவது அநாகரீகமாக இருக்கும் என்று எனக்குப்பட்டது. எதையும் கையில் வைத்துக்கொண்டு, வாயால் கடித்து எச்சில் செய்து சாப்பிடும் பழக்கமும் எனக்குக் கிடையாது.  

துளித்துளியாகப்புட்டு, ரஸித்து, ருசித்து கீழே சிந்தாமல் சிதறாமல் டேஸ்ட் செய்ய வேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, அந்த அழகுச்சிலை மீண்டும் என்னருகில் வந்து ஒரு எவர்சில்வர் தட்டில் மிக்ஸரும், அருகேயிருந்த ஸ்டூலில் குடிக்கத் தண்ணீரும், வைத்து விட்டு நகர்ந்த போது, நான் “ரொம்ப தாங்க்ஸ்” என்று கூட்டிமுழுங்கி வார்த்தைகளை வெளிக்கொணர்ந்து, மென்மையாகச் சொன்னேன். 

நான் அவளுடன் முதன் முதலாகப்பேசிய “ரொம்ப தாங்க்ஸ்” என்ற இரண்டே இரண்டு வார்த்தைகள் அவள் காதில் விழுந்ததோ விழவில்லையோ என சந்தேகம் ஏற்படும்படி, வாசலில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட பயங்கர சப்தம் என்னை மிகவும் வெறுப்பேற்றியது. 

தின்ன ரவாலாடும் மிக்ஸரும், குடிக்கத்தண்ணீர் ஒரு மாம்பழச்சொம்பில் கொடுத்ததுடன், தன் கடமை முடிந்து விட்டதாக நினைத்த, அந்த தங்கப்பதுமை எங்கோ உள்ளே போய் மறைந்து விட்டது. 

என்னுடைய உத்யோகம், சம்பள விபரங்கள், ஆபீஸ் வேலைகள், வேலை நேரங்கள், கேண்டீன் வசதிகள், போக்குவரத்து பஸ் வசதிகள் முதலியனவற்றை பற்றிய பல கேள்விகளை எழுப்பி, அந்த அவளின் தாய் தந்தையர்கள் என்னிடம் ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தனர். எதற்காக இதெல்லாம் என்னிடம் இவர்கள் கேட்டுத்தெரிந்து கொள்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. 

ஒரு வேளை என் வீட்டுக்கு சம்பந்தம் பேச வரலாம் என்று நினைக்கிறார்களோ என்ற சபலமும் ஏற்பட்டது. என் மனதில் தோன்றும் இந்தச் சபலத்தையும், ஆவலையும்,  இனிய கனவுகளையும் தூள் தூளாக உடைப்பது போல வாசலில் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருந்தன.  

அன்று தீபாவளிப் பண்டிகையாகவும், நான் அணிந்திருப்பது புது பேண்ட், சட்டை என்பதாலும், வயதில் பெரியவர்களான அவர்களை நமஸ்கரித்தேன். (தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் இதுபோல பெரியோர்கள் காலில் விழுந்து கும்பிட்டு நமஸ்கரிப்பது அப்போதெல்லாம் மிகச்சாதாரண வழக்கம் தான்) 

“அதி சீக்ரமேவ விவாஹப்ப்ராப்திரஸ்து” (கூடிய சீக்கரத்தில் உனக்கு கல்யாணம் ஆகும்படியான சந்தர்ப்பம் அமையட்டும்) என்று அவரும், “அடுத்த தீபாவளி தலைதீபாவளியாக இருக்கட்டும்” என்று அந்த அம்மாவும் என்னை ஆசீர்வதித்தனர். 

இதைக்கேட்ட என் மனதில் மீண்டும் ஒரு ஜிலுஜிலுப்பும், பரவசமும் ஏற்பட்டது.  பதிலுக்கு நீயும் அவரிடம் “அதி சீக்கரமேவ நீங்களே எனக்கு மாமனார் மாமியாராகப் பிராப்திரஸ்து” என்று சொல்லச்சொல்லி என் உள்மனம் என்னை நச்சரித்தது.

அவர்களிடம் விடைபெற்று, ஒரு வழியாக  என் வீட்டுக்குப் புறப்படலானேன்.  நான் அவர்கள் வீட்டை விட்டுப் புறப்படும் வரை அந்த என் கற்பனைக் கதாநாயகி , கொஞ்சமும் காட்சி தரவே இல்லை.

அதன் பிறகும், பல மாதங்களுக்கு, அந்த தங்கச்சிலையை நான் அதிகமாகப் பார்க்கும் வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லை. அவள் கையால் அன்று என் கையில் கொடுத்த ரவாலாடு மட்டும் என் நினைவுகளில் எப்போதும் இருந்து வந்து, மனதுக்கு இதமான இனிமையைக் கொடுத்து வந்தது.

இதற்கிடையில், தூரத்துச் சொந்தம் என்று சொல்லி, எனக்குப் பெண் கொடுக்க பலரும் என் தந்தையை முற்றுகையிட்டு வந்தனர். எனக்கும் என் குடும்பத்திற்கும் ஏற்ற பெண்ணாகப் பார்த்து, எனக்கு 21 முடிந்து 22 வயதாகும் போதே அவசரமாக மணம் முடித்து வைத்தனர் என் பெற்றோர்கள். 

நாம் என்ன அழகில் பெரிய மன்மதனா! அல்லது செல்வச்செழுப்பில் தான் பெரிய குபேரனா! நம் இஷ்டம் போல பெண் தேட! என்று என் மனதை நானே சமாதானம் செய்து கொள்ள மட்டுமே முடிந்தது அன்று.  

”இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” என்ற பாடல் ஒலிக்கும் போதெல்லாம் என்னை அந்த வரிகள் என்னென்னவோ சிந்திக்க வைக்கும்.

எனக்கு மனைவியாக அமைந்தவள் என்னை விட சற்று கூடுதல் நிறம் என்றும், குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு என்றும், கை நிறைய காரியம், வாய் நிறையப் பாட்டு, தலை நிறைய நீண்ட முடி, கிராமத்தில் வளர்ந்த பெண், தூரத்து சொந்தம் வேறு என, என் வீட்டார் பாராட்டி மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இன்று வரை எந்தக்குறையுமின்றி, எங்கள் இல்வாழ்க்கையும் இன்பமாகவே ஓடி வருகிறது.

ஓரிரு வருடங்கள் முன்பு திருச்சி மலைவாசல் கடைவீதியில், அந்த நாட்களில் ஓயாமல் என்னைச் சுற்றிச்சுற்றி வந்தவளை, நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. 


தொடரும்   

ஞாயிறு, 19 ஜூன், 2011

மறக்க மனம் கூடுதில்லையே.... [பகுதி 1 of 4]



மெரினா கடற்கரை. நானும் என் மனைவியும் கடற்கரையில் காத்திருக்கிறோம். கடல் அலைகள் மிகுந்த ஆரவாரத்துடன் பாய்ந்து வந்து எங்கள் பாதங்களை ஜில்லென முத்தமிட்டு வெண்மையான நுரைகளுடன் திரும்புகின்றன. 

இன்பம் ஒருபுறமும், பயம் ஒருபுறமுமாக இருவரும் ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொள்கிறோம்,  அலை எங்களை அடித்துச் செல்லாது என்ற எண்ணத்திலோ, ஒருவேளை அடித்துச்சென்றாலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியக்கூடாது என்ற எண்ணத்திலோ.

தூரத்தில் மிகப்பெரிய கார் ஒன்று பார்க் செய்யப்பட்டு, ஒரு பெண்ணும் அவளின் தந்தையும் இறங்கி வருவது தெரிகிறது. அந்தக்காரைத்தொடர்ந்து எங்கள் காரிலிருந்து எங்கள் மகன் இறங்கி வருவதும் தெரிகிறது. காத்திருந்த நாங்கள் அவர்களை நோக்கிப் புறப்படுகிறோம். 

நெருக்கத்தில் அந்தப்பெண்ணைப்பார்த்ததும் நான் ஸ்தம்பித்துப்போய் நின்று விட்டேன். கடல் அலைகளை விட என் எண்ண அலைகள் ஆகாய விமான வேகத்தில் என்னை என் சொந்த ஊரான திருச்சிக்கு அழைத்துப்போகிறது. 40 ஆண்டுகளுக்கு முந்திய சொந்தக்கதை; இன்று நினைத்தாலும் உடலும் உள்ளமும் உவகை கொள்கிறது.

அப்போது எனக்கு அலைபாயும் 21 வயது. மணி, ராம்கி, மாது, ரத்தினம், சேகர், பாபு, வெங்கிட்டு என பல நண்பர்கள். தெரு விளக்கடியில் இரவு 10 மணிக்குமேல் கூடி பல்வேறு விஷயங்களை விவாதித்துவிட்டு பிறகே படுக்கச்செல்வோம். 

டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் என்ற எந்த விதமான குறுக்கீடுகளும் இல்லாத காலம். வாசக சாலையில் வாங்கி வரும் புத்தகங்கள், மைதானம் சென்று விளையாட்டு, ரேடியோ, சினிமா, சிலசமயம் சீட்டுக்கச்சேரி தவிர, இது போன்ற ஆருயிர் நண்பர்களின் நேருக்கு நேர் சந்திப்பு தான் மிகச்சிறந்த பொழுதுபோக்கு. 

அவரவர் வீட்டின் ஆயிரம் சமூக, பொருளாதார பிரச்சனைகள் பற்றி அலசுதல், நடிகர்திலகம் சிவாஜி, மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., படங்கள் பற்றிய விமர்சனங்கள், இடையிடையே கட்டிளம் காளை வயதில் தானே வந்துபோகும் எங்களின் ஏக்கங்களும், ஒரு சிலரின் காதல் அனுபவங்களும் எனப்பேசப்பேச நள்ளிரவு வெகு நேரம் ஆகி பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்று அவரவர் கூட்டை அடைவோம். 
.
எல்லோருமே படித்து, ஏதோ ஒரு கிடைத்த வேலையில் இருந்துகொண்டு, நிரந்தர வருவாய்க்கான வேலை வாய்ப்பைத்தேடி அலைந்த நேரம் அது. எல்லோருமே வறுமைக்கோட்டுக்கு கீழேயுமில்லாமல், மேலேயும் இல்லாமல் கோட்டை ஒட்டியேயுள்ள, ஓட்டு வீடுகளில் ஒண்டிக்குடித்தனமாக இருந்த நேரம் அது. 

எங்கள் குடியிருப்பில் மிகச்சிறியதாக சுமார் ஐம்பது ஓட்டு வீடுகள். அவ்வாறான குடியிருப்புப் பகுதிகள் ஸ்டோர் என்று அழைக்கப்படும். எங்கள் வீட்டின் உட்புறத்தை விட அதிகமான புழங்கும் இடங்கள் எங்கள் வீடுகளைச்சுற்றி இருக்கும்.

நிம்மதியாகப் படிக்கவும், படுக்கவும், குளிக்கவும் பிரைவசி இல்லாத அந்தக்குடியிருப்பில் காதலில் கசிந்துருக வாய்ப்புகள் மிகவும் குறைவு. பள்ளிக்கூடம், கடைத்தெரு, கோயில்கள், பொதுக்குழாயடி, பொதுக்கிணற்றடி, பொதுக்கழிப்பிடம் செல்லும் பாதை என பொதுவான இடங்களிலே தான், ஒருவரை ஒருவர் மின்னல் போல் பார்த்து மறைவோம்.

அதற்குள் பல பொதுமக்களின் கழுகுப்பார்வைகள் எங்களை நோட்டமிடும். இருப்பினும் அதில் ஒரு நொடிப்பொழுது, மின் அதிர்வுபோல ஒருவித சுகானுபவமும் ஏற்படுவது உண்டு. 

பலர் வீடுகளில் மின் விளக்கே கிடையாது. கேஸ் அடுப்பும் வராத காலம் அது. சிம்னி, அரிக்கேன் லைட், திரி ஸ்டவ்,  பம்ப் ஸ்டவ், கரி அடுப்பு, விறகு அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு என்று அவரவர் ஏதேதோ உபயோகிப்பார்கள்.

ஒரு பழைய பாடாவதி சைக்கிளோ, ஒரு கயிற்றுக்கட்டிலோ, ஒரு மர பீரோவோ இவற்றில் ஏதாவது ஒன்று வைத்திருப்பவர் அந்தக்குடியிருப்பில் சற்று வசதியானவர் என்பதை வெளிப்படுத்தும் அளவுகோலாக இருந்தது.

அந்த ஸ்டோரில் இறைக்க இறைக்க நீர் ஊறக்கூடிய, என்றுமே வற்றாத ஒரு பெரிய பொதுக்கிணறு. அந்தக்கிணற்றைசுற்றி பாறாங்கற்கள் பதிக்கப்பட்ட ஜில்லென்ற சமதரை. இரவுப்பொழிதில் கிணற்றடியிலும், கிணற்றைச்சுற்றியுள்ள சிமெண்ட் தரையிலுமாக, நிறைய ஆண்கள் கையில் ஒரு விசிறியுடன், துண்டை விரித்துப்படுத்திருப்பார்கள். 

இவ்வாறு படுத்திருப்பவர் பலரின் இருமல், தும்மல், ஏப்பம், கொட்டாவி, குறட்டை முதலியவற்றால், அந்தக்குடியிருப்பில் திருட்டு பயமே கிடையாது. திருடிச்செல்லும் அளவுக்கு விலை உயர்ந்த பொருட்கள் என்று எதுவும் யாரிடமும் கிடையாது. நிம்மதியான வாழ்க்கை. 

இரவு நேரத்தில் கடும் குளிரோ, மழையோ வந்தால் மட்டுமே வீட்டுலுள்ள பெண்களுடன் ஆண்களும் கோழிக்குஞ்சுகள் போல அட்ஜஸ்ட் செய்து தங்கும்படியாக நேரிடும்.

இவ்வாறு கிணற்றடி போன்ற பொது இடங்களில் படுப்பவர்கள், விடிவதற்கு முன்பாக அனைவரும் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து விடுவார்கள். அவர்களில் பலரும், அதிகாலையில் கிணற்று நீரில் குளித்துவிட்டு அவரவர்கள் பிழைப்புக்குச் செல்ல வேண்டும்.

பால்காரர்கள் வருகையும், கீரை, காய்கறிகள், மண் சட்டிகளில் தயிர் என விற்பவர்கள் வருகையும், வாசல் தெளித்துக்கோலம் போடும் பெண்களுமாக அந்த மிகப்பெரிய குடியிருப்பே குதூகலமாகத் துவங்கும்.

மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள வீதியாகையால் கோயில் மணி சப்தங்களும், தேவாரம், திருவாசகம் என ஒலிபரப்பப்படும் மங்கல ஒலிகளும் அனைவர் உள்ளத்தையுமே உற்சாகப்படுத்தும். 

இன்று அந்தக்கலகலப்பான, நாட்டு ஓடுகள் வேய்ந்த, ஏழைகளின் குடியிருப்பையே அங்கு காணோம். அந்த மிகப்பெரிய கிணற்றையும் காணோம். அடுக்குமாடிக் குடியிருப்பாக மாறிவிட்டது. யார் யாரோ புதுமுகங்கள் பயத்துடன் கதவைச் சாத்திக்கொண்டு, இன்று அங்கு வாழ்ந்து வருகின்றனர். 

ஓட்டு வீடுகளில் அன்று ஒண்டிக்குடுத்தனம் செய்தவர்கள் இன்று எந்த எந்த வெளியூர்களிலும், வெளி நாடுகளிலும் இருக்கிறார்களோ, எப்படி எப்படி வாழ்கிறார்களோ? அந்த உச்சிப்பிள்ளையாருக்கே வெளிச்சம். சரி என் கதைக்கு வருவோம்.

பள்ளிப்படிப்பை முடித்த என் நண்பர்களில் எனக்கே வெறும் ஐந்தாண்டுகளுக்குள் ஒரு நிரந்தர வேலை உள்ளூரிலேயே கிடைத்தது. மாதச்சம்பளம் வெறும் முன்னூறு ரூபாய்க்குள் தான். இன்றைய முப்பதாயிரம் ரூபாய்க்குச்சமம். ஒரு பவுன் தங்கம் விலை ரூபாய் 200க்குள் விற்ற காலம் அது.

நான் உண்டு என் வேலையுண்டு என்று மிகவும் சங்கோஜியான என் வாழ்க்கையில் குறுக்கிட்டவர்கள் இரண்டு பெண்கள். ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருத்தி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள்.

தொடரும்









வெள்ளி, 17 ஜூன், 2011

மடிசார் புடவை [பகுதி 2 of 2] இறுதிப்பகுதி


முன் கதை முடிந்த இடம்:

அம்மாவும், அப்பாவும் தாங்கள் எடுத்துள்ள பட்டுப்புடவைக்கு மேட்ச் ஆக ரவிக்கைத்துணி எடுக்க அந்தக்கடையின் வேறு பகுதிக்குச் சென்றார்கள். நான் மட்டும் சற்று நேரம் அங்கேயே உட்கார்ந்து கொண்டேன்.


இறுதிப்பகுதி ........  இப்போது ஆரம்பம்:


அதே கடையில் வேறு ஒரு பக்கம் இருந்த புடவைகளை ஒருசில மாமிகள் புரட்டிக்கொண்டிருப்பதை கவனித்த நான், அவ்விடம் சென்றேன்.

அங்கே ஒரு மடிசார்புடவை மாமி மற்றொரு மாமியிடம்,”வரவர இந்தப்பட்டுப் புடவைகளைக் கண்டாலே பத்தி[பற்றி]க்கொண்டு வருகிறது; வெய்யில் காலத்தில் ஒரேயடியாக வியர்வை வழிந்து, கசகசன்னு ஆகி, எப்படா அவிழ்த்துவிட்டு வேறு சாதா புடவை கட்டுவோம்னு ஆகி விடுகிறது; சுலபமாக பாத் ரூம் கூட போய் வரமுடிவதில்லை; விலையும் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு; ஒரு தடவைக்கட்டி அவிழ்த்தால் கசங்கிப்போய் இஸ்திரி போட வேண்டியதுள்ளது. வருஷத்துல நாலு நாள் கூட கட்டிக்க மாட்டோம். சுளையா எட்டாயிரம், பத்தாயிரம்னு கொடுக்க வேண்டியிருக்கு” என்று புலம்பிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. 

அந்த அம்மா என் அத்தை-கம்-மாமியார் வயதை ஒத்த மாமியாக இருந்ததால் அவர்கள் அருகில் சென்றேன். சில்க் காட்டான் என்று கூறப்பட்ட நாலு புடவைகளைப் புரட்டிப்புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

அந்தப்புடவைகள் எல்லாம் மிகவும் நன்றாகவே இருந்தன. வழவழப்பாகவும், பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும், அதிக கனமில்லாமல் லைட்-வெயிட் ஆகவும், அடக்கமாகவும், அழகாகவும் இருந்தன.    விலையும் கிட்டத்தட்ட பட்டுப்புடவை போலவே இருந்தன.

”இவை லேட்டஸ்ட் ரன்னிங் ப்ளெளஸ் என்ற பெயரில் புடவையின் உள்பக்கமாக, மேட்ச் ரவிக்கைத்துணியுடன் கூடிய ஒன்பது கெஜப்புடவைகள். ப்ளெளஸ் பிட் புடவைத்தலைப்பில் இல்லாமல் உள்பக்கமாக இருப்பதில் ஒரு செளகர்யம்; 

சாதாரண தேகவாகு உள்ளவர்கள், அதைத்தனியே கிழித்து ரவிக்கையாகத் தைத்துக்கொள்ளலாம். சற்றே ரெட்டைநாடியாக, வஞ்சகமின்றி வளர்ந்த, வாளிப்பான தேகம் உடையவர்கள், ரன்னிங் ப்ளெளஸ் துணியை கிழிக்காமல் அப்படியே தாராளமாக புடவையாகக் கட்டிக்கொள்ளலாம்;  

அத்தகைய பெரிய பேர்வழிகள் மட்டும், ரவிக்கைக்கு தனியே துணியெடுத்து தைத்துக்கொள்ளலாம்” என்று அந்தக்கடையின் விற்பனையாளர் அந்த மாமியிடம் விளக்கிக்கொண்டிருந்தார்.  

என்னைப்பார்த்த அந்த மாமி “அம்மாடி, இந்த நாலு புடவைகளில் என் உடம்புக்கு எது நன்றாக இருக்கும்னு நீ சொல்லேன்” என்றார்கள். 

”எல்லாமே சூப்பராகத்தான் இருக்கு மாமி, இந்தப்பொடிக்கலர் புடவை உங்கள் சிவத்த உடம்புக் கலருக்கு எடுப்பாக இருக்கும் போல எனக்குத் தோன்றுகிறது” என்று சொன்னேன். 

அவர்களும்,”நீ நல்லா இருப்பேடிக்கண்ணு, எனக்கு எதை எடுப்பதுன்னு ஒரே குழப்பமாக இருந்தது, நல்ல சமயத்தில் வந்து பளிச்சுன்னு தெளிவாகச் சொல்லிவிட்டாய்” என்று சந்தோஷமாகச் சொல்லிவிட்டு,அதையே எடுத்துக்கொண்டு பில் போடப்போனார்கள்.

மீதி மூன்று புடவைகளில் வெந்தயக்கலரில், ஆங்காங்கே உடம்பெல்லாம் புட்டாபோட்டு, அரக்குகலரில் பார்டரும் ஜரிகையுமாக, தகதகன்னு மின்னிய வண்ணம், அருமையாக இருந்த ஒன்றை நான் எனக்கு பில் போடச்சொன்னேன். 

அம்மா, அப்பா எடுத்த பட்டுப்புடவையுடன், இதையும் தனியே வாங்கிக்கொண்டு கடையை விட்டுப்புறப்பட்டோம்.

வீட்டுக்குப்போகும் வழியில், என் அத்தையும் வருங்கால மாமியாருமான அவர்கள் வீட்டில் புடவையைக் காட்டிவிட்டுப்போய் விடலாம் என்று, என் அம்மா, அங்கிருந்த பிள்ளையாரை வேண்டிக்கொண்டே சொன்னாள். 

அதன்படியே சரி என்று சம்மதித்த நாங்கள் அதற்கடுத்த ஆயத்த வேலைகளில் இறங்கினோம். அதாவது சம்பந்தியம்மாளைப் பார்க்கப் போகும்போது வெறும் கையுடன் போகமுடியுமா என்ன! 

அங்கிருந்த பழக்கடைக்குப்போய் ஆப்பிள், ஆரஞ்சு, செவ்வாழைப்பழம், மாம்பழம் முதலியவற்றை வாங்கிக்கொண்டு, கொஞ்சம் தள்ளியிருந்த பூக்கடைக்குப்போய் குண்டு மல்லிகைச்சரம் ஒரு பந்து பார்ஸல் வாங்கிக் கொண்டு, எனக்கும் அம்மாவுக்கும் முல்லைப்பூ வாங்கி தலையில் சூடிக்கொண்டோம். 

ஜில்லுனு ஆளுக்கு ஒரு ஐஸ் கிரீம் சாப்பிட்டுவிட்டுப் போகலாமே என்று,  அம்மாவையும் அப்பாவையும் அருகில் இருந்த ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்தேன்,

அப்பா, அம்மாவைப்பார்த்தார். அம்மா என்னைப்பார்த்தாள். பிறகு சொன்னாள் “நீயும் அப்பாவும் வேண்டுமானால் போய் ஐஸ் கிரீம் சாப்பிடுங்கோ, நான் இப்போ வரக்கூடிய மனநிலையில் இல்லை” என்றாள். 

அம்மாவின் ஒரே கவலை இந்தப்புடவையை என் அத்தை நிராகரிக்காமல் பிடிச்சுருக்கு என்று சொல்லணும், அதுவே ஐஸ்கிரீம் சாப்பிட்டது போல அவளுக்கு.  

”சரி அம்மா, இப்போ முதலில் நாம் நேராக அத்தை வீட்டுக்குப் போவோம், பிறகு நம் வீட்டுக்குப்போகும் போது நாம் எல்லோருமே சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவோம், ஓ.கே.யா?“ என்றேன்.  சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள் அம்மா.   

நேராக அத்தை வீட்டுக்கு ஆட்டோவில் பயணம் ஆனோம். அத்தை வீட்டில் நுழைந்ததும், ஹால் சோபாவில் அமர்ந்தபடியே எங்களை வரவேற்ற,  அத்தையின் காலடியில் தரையில் என் அம்மா அமர்ந்து கொண்டாள்.  

என் அம்மா நாத்தனாருக்கு சமமாக சோபாவில் அமர மாட்டாள். அவ்வளவு பயம் கலந்த மரியாதை. அப்படியே ஆரம்பத்திலிருந்து தன்னைப் பழக்கப் படுத்திக்கொண்டு விட்டவள். இனி மாற்றுவது கஷ்டம். கேட்டால் ’ஜில்லுனு தரையிலே உட்காரத்தான் எனக்குப்பிடிச்சிருக்கு’ என்பாள்.  

மெதுவாக பட்டுப்புடவையை எடுத்து, அத்தையிடம் அம்மா பெளவ்யமாகக் நீட்டினாள் -  காட்டினாள்.

அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே தண்ணீர் குடிக்கச்செல்வது போல சமையல் ரூமுக்குள் நான் போய் விட்டேன். கதவு இடுக்கு வழியாக அவர்கள் பேசிக்கொள்வதை நான் கேட்டுக்கொண்டு நின்றேன். 

என் அத்தை அந்தப்பட்டுப்புடவை விஷயமாக என்ன அபிப்ராயம் சொல்லுவார்களோ, என என் அம்மாவின் நெஞ்சு, மரத்திலிருந்து கீழே விழுந்த அணில்குட்டி போல,  என்னமாய்த் துடித்துக் கொண்டிருக்கும் என்பதைக் கற்பனை செய்துகொண்டு, உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.

”நன்னா இருக்கே”  என்று சொல்லிக்கொண்டே புடவையைக்கையில் வாங்கிக்கொண்டு, அதில் போட்டிருந்த விலையை முதலில் நோட்டமிட்டார்கள் என் அத்தை.

“எனக்கு எதற்கு இவ்வளவு விலைபோட்டு பட்டுப்புடவை வாங்கணும்? ஏதோ சில்க் காட்டன்னு இப்போ சொல்றாளே!, அது போதாதோ?; என் பிள்ளையாண்டானும் தனியா அவன் வீதத்துக்கு ஒரு பட்டுப்புடவையே எடுத்திருக்கிறான்;

ஆனா ஒன்னு, நீ வாங்கியிருக்கும் இது, நான் இதுவரை கட்டிக்காத கலராயிருக்கு. சில்க் காட்டன் வாங்கிக்கட்டணும்னு தான் ஒரு ஆசை. பரவாயில்லை. வாங்கினது வாங்கிட்டேள். திரும்பப்போய் மாத்திண்டு வர வேண்டாம் “ என்றார்கள்.  

அவர்கள் எல்லோருக்கும் ஜில் வாட்டர் எடுத்துக்கொண்டு, என் அத்தை முன் ஆஜரானேன்.

நான் வாங்கிவந்த சில்க் காட்டன் புடவையை பையிலிருந்து வெளியே எடுத்து என் அத்தையிடம் கொடுத்தேன்.

“இது ஏதுடீ இன்னொரு புடவை?” என்று என் அம்மா என்னைப்பார்த்து ஆச்சர்யமாகக் கேட்டாள். நான் ஏற்கனவே சொல்லிக்கொடுத்தபடி சரியாகவே என் அம்மா நடித்து விட்டதில் எனக்கும் சந்தோஷம் தான்.

“அத்தை உடம்புக்கு கட்டிண்டா ரொம்ப நன்னா இருக்கும் என்று நான் தான் தனியாக ஒன்று எடுத்து வந்தேன்” என்றேன்.
  
பிரித்துப்பார்த்த என் அத்தைக்கு வாயெல்லாம் பல்லாக ஒரே சந்தோஷம். “இதை......இதை.....இதைத்தான் நான் எதிர்பார்த்தேன், ஆசைப்பட்டேன்” என்றார்கள்.

உங்களுக்கு இது ரொம்பப்பிடிக்கும்னு நான் எதிர்பார்த்தேன், அத்தை; அதனால்தான் இந்தக்குறிப்பிட்ட புடவையை நான் செலெக்ட் பண்ணிண்டு வந்தேன். என் டேஸ்ட்டும், உங்க டேஸ்டும் ஒன்னாவே இருக்கு பாருங்கோ” என்றேன்.

இதைக்கேட்டதும் நிஜமாலுமே சந்தோஷப்பட்ட என் அத்தை  “ஆனால், எனக்கு ஏதாவது ஒரு புடவை மட்டும் போதுமே” என்றார்கள்.

“உங்கள் பிள்ளை எடுத்துக்கொடுத்ததை கல்யாணத்தின் போது கட்டிக்கோங்கோ; அம்மா எடுத்த இந்தப்புடவையை முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பின் போது கட்டிக்கோங்கோ; நான் எடுத்த இந்த சில்க் காட்டனை நலங்கு நடக்கும்போது சாயங்காலமாக கட்டிக்கோங்கோ” என்று சொல்லிவிட்டு, அத்தையை நமஸ்காரம் செய்தேன்.

நான் இவ்வாறு சொன்னதில் அத்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முகத்தில் எந்தவிதக்கோபமும் இல்லாமல்”நன்னா இரு மகராசியா” என்று வாழ்த்திவிட்டு, “இருந்து எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டுத்தான் போகணும்” என்று எங்கள் மூவருக்கும் உத்தரவு போட்டுவிட்டு, சமையல் அறை நோக்கி துள்ளிச்சென்றார்கள். 

நானும் என் தாயைப்பார்த்து புன்னகை செய்தபடி கண் சிமிட்டிவிட்டு, கூடமாட அத்தைக்கு உபகாரம் செய்ய சமையல்கட்டுக்குள் நுழைந்தேன்.

என் தாயும் தந்தையும் “இவள் இனி பிழைத்துக்கொள்வாள்; நாம் இவளைப்பற்றிய கவலையில்லாமல் இருக்கலாம்” என்ற நினைப்புடன் ஒருவித அர்தபுஷ்டியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்து கொண்டதை என்னால் நன்றாகவே உணர முடிந்தது.

சற்று நேரத்தில் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் மணத்துடன் கேசரி கிளறும் வாசனை எங்கள் எல்லோருடைய மனதையும் ரம்யமானதொரு சூழலுக்கு கொண்டு சென்றது.  

என் அத்தையைப்போல ஒரு நல்லவங்க இந்த உலகில் வேறு யாரும் இருப்பாங்களா? என்று நானே எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.என்னயிருந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே!  அவர்களை விட்டுக்கொடுப்பேனா என்ன? 


-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-





[ இந்தச்சிறுகதை ‘புடவை’ என்ற தலைப்பில் 
29.07.2009 தேதியிட்ட “தேவி” வார இதழில் வெளியிடப்பட்டது ]