என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
சிறுகதைத்தொடர் - பகுதி 1 of 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதைத்தொடர் - பகுதி 1 of 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 செப்டம்பர், 2011

அ ழை ப் பு [சிறுகதை - பகுதி 1 of 2 ]






அழைப்பு

[சிறுகதை - பகுதி 1 of 2 ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

இந்த காலத்தில் பணம் மட்டும் கையில் இருந்தால், கல்யாணம் செய்வது அவ்வளவு ஒன்றும் கஷ்டமில்லை என்று தான் சொல்ல வேண்டும். பெண்ணைப் பெற்றவரோ, பிள்ளையைப் பெற்றவரோ, யாராக இருந்தாலும் எல்லாவற்றிற்குமே காண்ட்ராக்ட்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு விடுவதால், யாருக்கும் அந்தக்காலம் போல அதிக சிரமம் இல்லாமல் எல்லாம் நல்லபடியாகவே முடிந்து விடுகிறது. 


இருப்பினும் கல்யாண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவற்றை விநியோகிப்பது என்பது மட்டும், இன்றும் சற்று சிரமமான காரியமாகவே இருப்பதாகத் தெரிகிறது.  இது சம்பந்தமாக என் நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவக் கதையை இப்போது பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


என்னுடைய அருமை நண்பரான அவர் அறுபதைத் தாண்டியவர். சமீபத்தில் பணி ஓய்வு பெற்றவர். எதையுமே அழகாக திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் என்று விரும்புபவர். சமீபத்திய உடல் உபாதைகளால், உட்கார்ந்த நிலையில் திட்டமிட மட்டுமே முடிகிறதே தவிர, முன்பு போல சுறுசுறுப்பாக செயலாற்ற முடிவதில்லை, என்று கோயிலில் தினமும் என்னை சந்திக்கும் போது கூறுவார்.

பணம் செலவழிப்பதைப்பற்றி அதிகம் கவலையில்லையாம் அவருக்கு. எதுவும் நிறைவாக விரைவாக, மனதில் கற்பனை செய்தபடி, நல்லமுறையில் நிறைவேற வேண்டுமாம்.

அவர் மகனுக்கு இன்னும் நான்கே மாதங்களில் திருமணம் என்று நிச்சயமாகி விட்டதாம். அவரால் அழகாக அழைப்பிதழ்கள் எழுதப்பட்டு, மாதிரி அச்சாகிவந்து, அவரால் அது பலமுறை சரிபார்க்கப்பட்டு, ஒருசில பிழைகள் திருத்தப்பட்டு, ஓரிரு மாதங்கள் முன்பாகவே வெகு அழகாகத் தயாராகி, ஓரங்களில் ஈர மஞ்சள்தூள் தீட்டப்பட்ட உறைகளில் திணிக்கப்பட்டு, அவரால் தயார் நிலையில் பூஜை அறையில் வைக்கப்பட்டு விட்டனவாம்.

வெளியூரிலுள்ள உறவினர் மற்றும் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களின் தபால் விலாசங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றை உறையின் மீது அழகாக எழுதி, நேரில் வந்து அழைத்ததாக பாவித்துக் கொள்ளுமாறு அச்சிடப்பட்ட ஒரு துண்டுக்கடிதம் இணைத்து, தபால் தலைகள் ஒட்டி, தபால் பெட்டியில் அவ்வப்போது சேர்த்துவிட்டு, அனுப்பிய தேதியை சிவப்பு மையால் குறித்தும் வருவதாகச் சொன்னார்.

வெளியூர்காரர்களுக்கு மட்டும் சரியாக ஒண்ணரை மாதம் முன்பே தபாலில் அவரால் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டனவாம். அப்போது தான் அவர்கள் கல்யாணத்திற்கு வந்து போக திட்டமிடவும், ரயில் பயண முன்பதிவுகள் செய்து கொள்ளவும், செளகர்யமாக இருக்கும் என்பதையும், நன்கு திட்டமிட்டே என்னிடம் விளக்கமாக எடுத்துக்கூறினார்.


உள்ளூர்காரர்களுக்கு நேரில் சென்று அழைக்க வேண்டிய அழைப்பிதழ்களை எட்டு திசைகள் வாரியாக தனித்தனியே பட்டியலிட்டு தயார் நிலையில் வைத்துக்கொண்டாராம். தினமும் ஓர் திசையில் ஆட்டோவில் சென்று முடிந்தவரை ஒரு பத்து பேர்களுக்காவது அழைப்பிதழ் கொடுத்து, நேரில் அழைத்து விட்டு வரணும் என்பது அவரின் விருப்பமாம்.


பளபளக்கும் பட்டுப்புடவையுடன், கைகளிலும் கழுத்திலும் நிறைய நகைகள் அணிந்து, சீவி முடித்து சிங்காரித்து, கொண்டையைச்சுற்றி பூச்சூடி,வெள்ளிக் குங்குமச்சிமிழைக் கையிலேந்தி, தன்னுடன் தன் மனைவியையும், பல உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சூறாவளிச் சுற்றுப்பயணமாக அழைத்துப்போகணும் என்பது தான் அவரின் ஆசை என்று சொன்னார்.


ஆனால் அடிக்கும் வெய்யில், அசந்து போயிருக்கும் தன் மனைவியின் உடல்நிலை, அவள் உள்ளத்தில் அவ்வப்போது ஏற்பட்டு மறையும் உற்சாகம் மற்றும் அலுப்பு, அன்றைய தொலைக் காட்சித்தொடர் நாடகங்களின் விறுவிறுப்பான போக்கு முதலியவற்றை ஆராய்ந்து, அன்றைய சிற்றுண்டி, சாப்பாடு, காஃபி, முதலியவற்றை ஓரளவு முடித்துக்கொண்டு, ’அத்திப்பூக்கள்’ முடிந்த கையோடு இவர் தார்க்குச்சி போட ஆரம்பித்தால், எப்படியும் ஒரு வழியாகப்புறப்பட மூணு மணிக்கு மேல் நாலு மணி கூட ஆகிவிடுகிறது, என்று சொல்லி அலுத்துக்கொண்டார்.    


ஆட்டோவில் ஏறி அமர்ந்து, ஒரு நாலு வீடுகள் அழைப்பதற்குள் நாக்குத் தள்ளிப் போய்விடுகிறதாம். ஆட்டோக்காரரின் அவசரம், போக்குவரத்து நெரிசலில் ஆமை அல்லது நத்தை வேகத்தில் நகரும் வண்டிகள், டிராஃபிக் ஜாம் ஆகி சுத்தமாக நகரவே முடியாத வண்டிகள், ஒன்வே ட்ராஃபிக், சிக்னலில் நிற்பது என்னும் பல தொல்லைகள் மட்டுமல்ல. போகும் இடத்திலெல்லாம் அடுக்கு மாடிக்குடியிருப்புக்கள். முதல் மாடி, இரண்டாவது மாடி, மூன்றாவது மாடி என்ற படுத்தல்கள். லிஃப்ட் உள்ள இடங்கள், லிஃப்ட் இல்லாத இடங்கள், லிஃப்ட் இருந்தாலும் மின்வெட்டு மற்றும் இதர ரிப்பேர்களால் இயங்காது என்ற அறிவிப்பு போன்ற நிலைமைகள், பற்றி மிகவும் நகைச்சுவையாகத் தெரிவிப்பார்.


”ஒரே பெயரில் பல அடுக்கு மாடிக்குடியிருப்புக்கள். உதாரணமாக “பாரத் வில்லா”,  ”பாரத் எம்பயர்”, ”பாரத் வெஸ்ட் அவென்யூ”, ”பாரத் ஈஸ்ட் அவென்யூ”, “பாரத் கார்டன்ஸ்” என்று பலவிதமான கட்டடப் பெயர்களால் வந்திடும் குழப்பங்கள்; 


சுப்ரமணியன் என்றாலோ பாலசுப்ரமணியன் என்றாலோ எல்லா அடுக்கு மாடிகளிலும் யாராவது ஒருத்தர் அதே பெயரில் ஆனால் ஆள் மாறாட்டமாக இருந்து வரும் துரதிஷ்டம்; 


ஆங்காங்கே உள்ள வாட்ச்மேன்களின் கெடுபிடிகள், நாய்த்தொல்லைகள், பூட்டியிருக்கும் வீடுகள், திறந்திருந்தாலும் உள்ளே தாளிட்டு லேசில் வந்து கதவைத் திறக்காத நபர்கள், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றோ அல்லது ஷாப்பிங் போயோ வீடு திரும்பாமல் இருத்தல் என பல்வேறு சோதனைகள்;

முட்டிக்கால் வலியுடன், ஆயிண்மெண்ட் தடவியபடியே, மகன் கல்யாணம் என்ற மன மகிழ்ச்சியிலும், உடலுக்கு ஒரு தேகப்பயிற்சி தானே என்ற சமாதானத்துடனும், மூச்சு வாங்கியபடி, மாடி மாடியாக ஏறி இறங்கியதில் தினமும் முட்டி வலியும் முழங்கால் வலியும் அதிகமாகி, வீக்கம் கண்டது தான் மிச்சம்” என்றும் நேற்று என்னிடம் கூறினார்.


”வேலை மெனக்கட்டு, பத்திரிக்கை அடித்து, வீடு தேடி வந்து அதை உரியவரிடம் சேர்த்தாலும், மங்கள அக்ஷதைகள் தரையில் சிந்தி யார் கால்களிலாவது குத்தி விடக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையில், முதல் வேலையாக நமக்குத்தெரியாமல் அதனை, நேராகச்சென்று, டஸ்ட் பின்னில் போட்டுவிட்டு,  பத்திரிக்கையை கவரிலிருந்து வெளியே எடுக்காமலேயே, ஓர் ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, யாருக்குக் கல்யாணம்? தங்கள் பெண்ணுக்கா அல்லது பிள்ளைக்கா? எந்த இடத்தில் கல்யாணம்? எத்தனாம் தேதி? என்ன கிழமை? எந்த மண்டபம்? எத்தனை மணிக்கு முஹூர்த்தம்? சம்பந்தி யாரு? எந்த ஊரு? எப்படி இந்த இடம் அமைந்தது? எனக்கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்தெடுப்பவர்களும் உண்டு;


பிறகு வீட்டில் வைத்த பத்திரிகையை பல இடங்களில் தேடியும் அது கிடைத்தால் அதைப்படிக்க மூக்குக்கண்ணாடி கிடைக்காமலும், மூக்குக்கண்ணாடி கிடைத்தால் பத்திரிகை கிடைக்காமலும், அலுத்துப்போய், முஹூர்த்த தேதியையும் மறந்து விட்டு, பேசாமல் விட்டு விடுபவர்களும் உண்டு;


’தன் திருமணமாகாத பெண் அல்லது பிள்ளைக்கு பொருத்தமான இடமாக ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ’ என ஜாதகத்தை ஒரு பிரதி எடுத்துத் தருபவர்களும் உண்டு. ஆட்டோ வெயிட்டிங் என்று சொன்ன பிறகு தான், அரை மனதுடன் ஆளை விடுபவர்கள், இந்த மகானுபாவர்கள்;


வீடு தேடி வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று, “வாங்க! உட்காருங்க!! ஜில்லுனு தண்ணீர் குடியுங்க!!! என்று சொல்லி மின்விசிறியை சுழலவிட்டு, டிபன், காஃபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட், பால், ஜூஸ் எல்லாமே உள்ளது, எது சாப்பிடுவீங்க? என்ன கொண்டு வரலாம்? என்று அன்புடன் கேட்டு உபசரிப்பவர்கள், ஒரு ஐந்து சதவீதம் மட்டுமே;   


வெகு சுவாரஸ்யமாக தொலைகாட்சிப் பெட்டியிலேயே தங்கள் கவனத்தை முழுவதுமாக வைத்துக்கொண்டு, ஏதாவது சீரியல்களிலோ, வேறு ஏதாவது நிகழ்ச்சிகளிலோ அல்லது கிரிக்கெட் மேட்ச்சிலோ மூழ்கி இருப்பவர்கள் தான் பலரும் உண்டு; 


இடையே வரும் வர்த்தக விளம்பர நேரத்திற்குள் நம்முடன் சுருக்கமாகப்பேசி நம்மை அனுப்பிவிட அவர்கள் துடிப்பதை நாமும் நன்றாகவே உணர முடியும்” என்று இன்று அவர் ஒரு பெரிய பிரசங்கமே நிகழ்த்தியது எனக்கு மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது.



அழைப்பு 
அனுபவம் 
தொடரும் ...






[இந்தச் சிறுகதையின் நிறைவுப்பகுதி வரும் 15.09.2011 வியாழன் அன்று வெளியிடப்படும்.]

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

உண்மை சற்றே வெண்மை ! [சிறுகதை - பகுதி 1 of 2]











உண்மை சற்றே வெண்மை

[சிறுகதை - பகுதி 1 of 2]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


என் வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள மாட்டுத்தொழுவத்தில் எப்போதும் குறைந்தபக்ஷம் ஒரு பசு மாடாவது கன்றுக்குட்டியுடன் இருந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பசுக்களும், இரண்டு மூன்று கன்றுக்குட்டிகளும் கூட இருப்பதுண்டு.

என் அப்பாவும், அம்மாவும் பசு மாட்டை தினமும் நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி, அதன் நெற்றியிலும், முதுகுப்பகுதியிலும், வால் பகுதியிலும் மஞ்சள் குங்குமம் இட்டு, தெய்வமாக அவற்றைச் சுற்றி வந்து கும்பிடுவார்கள். 

மாட்டுத்தொழுவத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து வருவார்கள்.  அகத்திக்கீரை, தவிடு, கடலைப்புண்ணாக்கு, வைக்கோல், அரிசி களைந்த கழுநீர், பருத்திக்கொட்டை, மாட்டுத்தீவனங்கள் என அரோக்கியமான சத்துணவுகள் அளித்து, போஷாக்காக வளர்த்து வருவார்கள். 

வெள்ளிக்கிழமை தோறும் மாலை வேளையில் மாட்டுக்கொட்டகையில் சாம்பிராணி புகை மணம் கமழும். பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் கோமாதாக்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.  

கன்றுக்குட்டிகளுக்கு போக மீதி எஞ்சும் பசும்பால் தான் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பசு மாட்டு சாணத்தில் தயாராகும் விராட்டி என அனைத்துப் பொருட்களும், எங்கள் குடும்பத் தேவைக்குப்போக விற்பனையும் செய்வதுண்டு.

என் பெற்றோருக்கு, மிகவும் அழகு தேவதையாகப் பிறந்துள்ள ஒரே பெண்ணான என்னை, நன்கு செல்லமாக வளர்த்து படிக்கவும் வைத்து விட்டனர். பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்கு அடியெடுத்து வைக்க இருந்த எனக்கு சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளையும் பார்க்க ஆரம்பித்தனர்.  




கல்லூரிப் படிப்பு முடிந்து வந்த எனக்கு இதுவரை மாப்பிள்ளை மட்டும் சரிவர அமையவில்லை. இதற்கிடையில், ஓரிரு பசுக்களே இருந்த என் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் பல பசுமாடுகள் புதியதாக வந்து, சுமார் நாலு மாடுகளுக்கு பிரஸவங்கள் நிகழ்ந்து இன்று ஆறு பசுக்களும், எட்டு கன்றுக்குட்டிகளுமாக ஆகியுள்ளன.

இப்போது மாடுகளையும் கன்றுகளையும் பராமரிக்கவே தனியாக ஒரு ஆள் போட்டு, பால் வியாபாரமும் சக்கைபோடு போட்டு வருகிறது. எனக்கு இன்னும் மாப்பிள்ளை தான் சரியாக அமையவில்லை.

பார்க்க லக்ஷணமாக இருந்தும் எனக்கும் ஒரு சில குறைகள் என் ஜாதகத்திலும் கூட. ”ஒரு சிறிய பசுமாட்டுப் பண்ணை நடத்துபவரின் பெண் தானே! பெரியதாக என்ன சீர் செலுத்தி செய்து விடப்போகிறார்கள்!” என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம் என் திருமணம் தடைபடுவதற்கு.

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது முடிக்கணும் என்பார்கள். அதில் எனக்கோ என் பெற்றோருக்கோ கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆயிரம் தடவையானாலும் திரும்பத்திரும்ப உண்மைகளைத்தான் சொல்ல ஆவலாக இருக்கிறோம். ஆனால், இந்தக்காலத்தில், உண்மையைச் சொன்னால் யாரும் உண்மையில் நம்புவதில்லையே!

இப்போதெல்லாம் ஒருசில பசுக்கள் இரவில் ஒரு மாதிரியாகக் கத்தும் போது, என் பெற்றோருக்கு, என்னைப்பற்றிய கவலை மிகவும் அதிகரிக்கிறது. நல்ல வரனாக இவளுக்கு சீக்கரம் அமையாமல் உள்ளதே என மிகவும் சங்கப்பட்டு வருகின்றனர்.

சொல்லப்போனால் வாயில்லாப் பிராணிகள் எனப்படும், அந்தப் பசுக்களைப்போல (என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டி) எனக்கு வாய் இருந்தும் நான் ஒன்றும் கத்துவதில்லை.

என்னவோ தெரியவில்லை, நான் சிறுமியாக இருந்தபோது, என்னிடம் மிகவும் பிரியமாக இருந்த என் பெற்றோர்கள், இப்போதெல்லாம் என்னிடமிருந்து மிகவும் விலகிச்செல்வதாகவே, எனக்குத் தோன்றுகிறது.

அன்று ஒரு நாள், இரவெல்லாம் ஒரு மாதிரியாகக் கத்திக்கொண்டிருந்த, ஒரு பசுவை காலையில் என் தந்தை எங்கோ ஓட்டிப்போகச்சொல்ல, மாட்டுக்கொட்டகையில் வேலை பார்த்து வந்த ஆளும், என் தந்தையிடம் ஏதோ பணம் வாங்கிக் கொண்டு அதை ஓட்டிச்செல்வதை கவனித்தேன்.


தொடரும்






[இதன் தொடர்ச்சி வரும் வெள்ளிக்கிழமை 09.09.2011 அன்று வெளியாகும்]

சனி, 3 செப்டம்பர், 2011

முதிர்ந்த பார்வை [சிறுகதை பகுதி 1 of 2]





முதிர்ந்த பார்வை

[சிறுகதை - பகுதி 1 of 2]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




அந்த முதியோர் இல்லத்தில் தன் தாய் தந்தையரை ஒப்படைத்து விட்டு வெளியே வந்த மணிகண்டனுக்கு கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோடியது. அவன் மனைவி கல்யாணி அவனை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள்.

“என்னங்க இது. நடுரோட்டில் இப்படி ஒரு ஆம்பளை அழலாமா? கண்ணைத் துடையுங்க முன்னாடி” என்று டவலை நீட்டினாள்.

மீண்டும் மீண்டும் அவனுக்குத் தன் மனைவி மீதுதான் ஒரு சந்தேகம். தான் ஆபீஸுக்குப் போனபின், தன் பெற்றோர்கள் மனம் புண்படும்படி ஏதாவது பேசி, தவறாக அவர்களுக்கு ஏதாவது மன வருத்தம் ஏற்படும்படி நடந்து கொண்டிருப்பாளோ! பலமுறை அது விஷயமாக அவளிடமே கேட்டும் அவளிடமிருந்து, எந்த ஒரு உண்மையையும் அவனால் வரவழைக்க முடியவில்லை.  

கல்யாணியும் மிகவும் நல்லவள் தான். கல்யாணம் ஆகி வந்த கடந்த நாலு வருடங்களில், மாமியார், மாமனார் இருவரையும் தன் சொந்தத் தாய் தந்தையைப் போலவே மிகவும் அன்புடனும், அனுசரணையாகவும், மரியாதையாகவும் தான் கவனித்துக்கொண்டு வருகிறாள் என்பதும் மணிகண்டனுக்குத் தெரியாதது அல்ல.

வீட்டுக்கு அன்று ஒரு நாள், ஜோஸ்யம் சொல்ல கேரள மந்திரவாதி போல ஒருவன் வந்தானாம். ”கூட்டுக் குடும்பமாக இருந்தால் உங்கள் இருவருக்குமே மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது. எவ்வளவு சீக்கரம் பிரிந்து செல்லுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது”, என்று சொன்னானாம்.

ஜோஸ்யன் வந்து போன சமயம் மணிகண்டனும் வீட்டில் இல்லை. ரேஷன் கடைக்குப்போய் கும்பலில் நின்று பொருட்கள் வாங்கி வந்த அவன் மனைவி கல்யாணியும் வீட்டில் இருக்க முடியாமல் போய் விட்டது.

அந்த ஜோஸ்யன் எவனோ சொன்னதை வேத வாக்காக எடுத்துக்கொண்ட, தன் பெற்றொர்கள் இப்படிப் பிடிவாதமாக வீட்டை விட்டு, முதியோர் இல்லத்தில் தங்களைச் சேர்க்கச் சொல்லி வற்புறுத்துவார்கள், என்று கனவிலும் நினைக்காத மணிகண்டனுக்கு, வேறு எந்த வழியும் தெரியவில்லை.

பெற்றோருக்கு அவன் ஒரே பிள்ளையாகப் பிறந்து விட்டதால், அவனை விட்டு அவர்களை வேறு எங்கு தான் அனுப்ப முடியும் அவனால். மற்ற இந்தக்கால பிள்ளைகள் போலன்றி, மணிகண்டன் தன் தாய் தந்தை மேல் அளவுக்கதிகமான பாசம் வைத்துள்ளவன்.

அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வதிலோ, வசதிகள் செய்து கொடுப்பதிலோ மிகவும் கவனமாக அவர்கள் மனது கோணாமல் இருந்து வருபவன்.

“இவனைப் பெற்றெடுக்க இவன் தந்தை என்ன நோன்பு நோற்றானோ” என மற்றவர்கள் பொறாமை கொள்வது போல நேற்று வரை போய்க்கொண்டிருந்த கூட்டுக்குடும்பம் அது. அவனுக்கு வாய்த்த மனைவி கல்யாணியும் நேற்று வரை அவ்வாறே மிகவும் நல்லவளாக எல்லோரையும் அனுசரித்துத்தான் இருந்து வந்திருக்கிறாள். இப்போது யார் கண்ணு பட்டதோ, இந்த தேவையில்லாத பிரிவு.

மணிகண்டன் தன் வருமானத்திற்குத் தகுந்தபடி அழகாகத் திட்டமிட்டு செலவுகள் செய்து, யாருக்கும் எந்த ஒரு குறையும் இன்றி குடும்பம் நடத்தி வருபவன். தன்னுடைய சிறுசேமிப்புக்களுடன், வங்கியொன்றில் லோன் வாங்கி சிறியதாக ஒரு வீடும் கட்டி, சிறப்பாக வாழ்ந்து வருபவன். 

தன் தந்தையின் சொற்ப ஓய்வூதியத்தையும் கூட, அவர் பெயரிலேயே வங்கியில் மாதாந்திர சேமிப்பாக இருக்கட்டும்; ஏதாவது எதிர்பாராத செலவுகள் வந்தால் எடுத்துக்கொள்ளலாம் என்று விட்டு வைத்திருப்பவன்.   

அழகிய வாட்டர் ஹீட்டருடன் கூடிய, வெஸ்டேர்ன் பாத்ரூம் அட்டாச்சிடு சிங்கிள் பெட்ரூமில், இரண்டு கட்டில்கள் போட்டு, ஏ.ஸீ. வசதிகள் செய்து கொடுத்து, பொழுதுபோக்குக்கு டீ.வி, பக்திப்பாடல் கேஸட்டுக்கள் செய்தித்தாள்கள், வார மாத இதழ்கள் எல்லாமே கொடுத்து, வெய்யிலோ, மழையோ, பனியோ, காற்றோ எந்தப்பருவ காலங்களிலும், தன் தாய் தந்தையர் உடல் நிலைக்கு எந்தப் பாதிப்பும் வராமல் கவனமாகப் பார்த்துக்கொண்டவன் தான்.


ஜோஸ்யர் யாரோ ஒருவர் வந்து திருஷ்டிப்பட்டது போல ஏதேதோ சொல்லி குருவிக்கூட்டைக் கலைத்து விட்டதில், மணிகண்டனுக்கு மிகவும் வருத்தம்.


யார் அந்த ஜோஸ்யர், அவர் பெயர் என்ன, அவருக்கு வீடு எங்கே உள்ளது, அவரின் விலாசம் என்ன என்று கேட்டால் வயதான இவர்கள் இருவருக்கும் சொல்லத்தெரியவில்லை. அவர் ஏதோ கேரளாவிலிருந்து புறப்பட்டு ஊர் ஊராகச் செல்பவர் என்றும், குருவாயூரப்பன் சொப்பனத்தில் வந்து சொன்னபடி நம் வீடு தேடி வந்து, வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டு, நமக்கு நல்லது தான் செய்து விட்டுப்போய் இருக்கிறார், என்றும் திருப்பித்திருப்பி சொல்லி வருகின்றனர்.


இன்னும் ஒரு வருடத்திற்கு குருப்பெயர்ச்சி முடியும் வரை தான் இந்தப் பிரச்சனையாம். பிறகு பழையபடி கூட்டுக் குடும்பமாகவே வாழலாம் என்றும் அந்த ஜோஸ்யர் சொல்லியிருப்பதாகச் சொன்னதனால், மனது சற்றே சமாதானம் ஆனது மணிகண்டனுக்கு.


நடந்த கதைகளையெல்லாம் கேள்விப்பட்ட கல்யாணியின் பெற்றோர்களுக்கும், கல்யாணி மேல் ரொம்பவும் கோபமாக வந்தது. வயதான காலத்தில், நல்ல நடமாட்டத்துடன், தங்களால் முடிந்த சரீர ஒத்தாசைகள் செய்துகொண்டு, தன் மகளுக்கும் ஒரு நல்ல பாதுகாப்பாக இருந்து வந்த தம்பதியை, சின்னஞ்சிறுசாகிய தன் மகள், இவ்வாறு முதியோர் இல்லத்திற்கு அனுப்பியுள்ளதை கேள்விப்பட்ட அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. 


கல்யாணி இங்கு நடந்த விஷயங்களைத் தனக்குத் தெரிந்தவரை விபரமாக எடுத்துக்கூறியும், தான் எந்தத்தவறும் செய்யவில்லை என்று சமாதானம் சொல்லியும், சம்பந்தி மேல் உள்ள அன்பினாலும், அவர்கள் இது நாள் வரை தங்களிடம் நடந்து கொண்ட பண்பினாலும், தங்கள் மகள் கல்யாணி சொல்வது எதையுமே நம்பாமலும், ஏற்றுக்கொள்ளாமலும் மறுத்து விட்டனர்.    


மேலும் “இனி உன் மாமியார், மாமனார் இருவரும் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்பி எப்போது திரும்பி வருகிறார்களோ, அப்போது தான் உன்னைப் பார்க்க நாங்கள் உங்கள் வீட்டுக்கு வருவோம்” என்றும் சொல்லி விட்டனர்.








தொடரும்