About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, September 12, 2011

அ ழை ப் பு [சிறுகதை - பகுதி 1 of 2 ]






அழைப்பு

[சிறுகதை - பகுதி 1 of 2 ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

இந்த காலத்தில் பணம் மட்டும் கையில் இருந்தால், கல்யாணம் செய்வது அவ்வளவு ஒன்றும் கஷ்டமில்லை என்று தான் சொல்ல வேண்டும். பெண்ணைப் பெற்றவரோ, பிள்ளையைப் பெற்றவரோ, யாராக இருந்தாலும் எல்லாவற்றிற்குமே காண்ட்ராக்ட்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு விடுவதால், யாருக்கும் அந்தக்காலம் போல அதிக சிரமம் இல்லாமல் எல்லாம் நல்லபடியாகவே முடிந்து விடுகிறது. 


இருப்பினும் கல்யாண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவற்றை விநியோகிப்பது என்பது மட்டும், இன்றும் சற்று சிரமமான காரியமாகவே இருப்பதாகத் தெரிகிறது.  இது சம்பந்தமாக என் நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவக் கதையை இப்போது பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


என்னுடைய அருமை நண்பரான அவர் அறுபதைத் தாண்டியவர். சமீபத்தில் பணி ஓய்வு பெற்றவர். எதையுமே அழகாக திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் என்று விரும்புபவர். சமீபத்திய உடல் உபாதைகளால், உட்கார்ந்த நிலையில் திட்டமிட மட்டுமே முடிகிறதே தவிர, முன்பு போல சுறுசுறுப்பாக செயலாற்ற முடிவதில்லை, என்று கோயிலில் தினமும் என்னை சந்திக்கும் போது கூறுவார்.

பணம் செலவழிப்பதைப்பற்றி அதிகம் கவலையில்லையாம் அவருக்கு. எதுவும் நிறைவாக விரைவாக, மனதில் கற்பனை செய்தபடி, நல்லமுறையில் நிறைவேற வேண்டுமாம்.

அவர் மகனுக்கு இன்னும் நான்கே மாதங்களில் திருமணம் என்று நிச்சயமாகி விட்டதாம். அவரால் அழகாக அழைப்பிதழ்கள் எழுதப்பட்டு, மாதிரி அச்சாகிவந்து, அவரால் அது பலமுறை சரிபார்க்கப்பட்டு, ஒருசில பிழைகள் திருத்தப்பட்டு, ஓரிரு மாதங்கள் முன்பாகவே வெகு அழகாகத் தயாராகி, ஓரங்களில் ஈர மஞ்சள்தூள் தீட்டப்பட்ட உறைகளில் திணிக்கப்பட்டு, அவரால் தயார் நிலையில் பூஜை அறையில் வைக்கப்பட்டு விட்டனவாம்.

வெளியூரிலுள்ள உறவினர் மற்றும் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களின் தபால் விலாசங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றை உறையின் மீது அழகாக எழுதி, நேரில் வந்து அழைத்ததாக பாவித்துக் கொள்ளுமாறு அச்சிடப்பட்ட ஒரு துண்டுக்கடிதம் இணைத்து, தபால் தலைகள் ஒட்டி, தபால் பெட்டியில் அவ்வப்போது சேர்த்துவிட்டு, அனுப்பிய தேதியை சிவப்பு மையால் குறித்தும் வருவதாகச் சொன்னார்.

வெளியூர்காரர்களுக்கு மட்டும் சரியாக ஒண்ணரை மாதம் முன்பே தபாலில் அவரால் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டனவாம். அப்போது தான் அவர்கள் கல்யாணத்திற்கு வந்து போக திட்டமிடவும், ரயில் பயண முன்பதிவுகள் செய்து கொள்ளவும், செளகர்யமாக இருக்கும் என்பதையும், நன்கு திட்டமிட்டே என்னிடம் விளக்கமாக எடுத்துக்கூறினார்.


உள்ளூர்காரர்களுக்கு நேரில் சென்று அழைக்க வேண்டிய அழைப்பிதழ்களை எட்டு திசைகள் வாரியாக தனித்தனியே பட்டியலிட்டு தயார் நிலையில் வைத்துக்கொண்டாராம். தினமும் ஓர் திசையில் ஆட்டோவில் சென்று முடிந்தவரை ஒரு பத்து பேர்களுக்காவது அழைப்பிதழ் கொடுத்து, நேரில் அழைத்து விட்டு வரணும் என்பது அவரின் விருப்பமாம்.


பளபளக்கும் பட்டுப்புடவையுடன், கைகளிலும் கழுத்திலும் நிறைய நகைகள் அணிந்து, சீவி முடித்து சிங்காரித்து, கொண்டையைச்சுற்றி பூச்சூடி,வெள்ளிக் குங்குமச்சிமிழைக் கையிலேந்தி, தன்னுடன் தன் மனைவியையும், பல உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சூறாவளிச் சுற்றுப்பயணமாக அழைத்துப்போகணும் என்பது தான் அவரின் ஆசை என்று சொன்னார்.


ஆனால் அடிக்கும் வெய்யில், அசந்து போயிருக்கும் தன் மனைவியின் உடல்நிலை, அவள் உள்ளத்தில் அவ்வப்போது ஏற்பட்டு மறையும் உற்சாகம் மற்றும் அலுப்பு, அன்றைய தொலைக் காட்சித்தொடர் நாடகங்களின் விறுவிறுப்பான போக்கு முதலியவற்றை ஆராய்ந்து, அன்றைய சிற்றுண்டி, சாப்பாடு, காஃபி, முதலியவற்றை ஓரளவு முடித்துக்கொண்டு, ’அத்திப்பூக்கள்’ முடிந்த கையோடு இவர் தார்க்குச்சி போட ஆரம்பித்தால், எப்படியும் ஒரு வழியாகப்புறப்பட மூணு மணிக்கு மேல் நாலு மணி கூட ஆகிவிடுகிறது, என்று சொல்லி அலுத்துக்கொண்டார்.    


ஆட்டோவில் ஏறி அமர்ந்து, ஒரு நாலு வீடுகள் அழைப்பதற்குள் நாக்குத் தள்ளிப் போய்விடுகிறதாம். ஆட்டோக்காரரின் அவசரம், போக்குவரத்து நெரிசலில் ஆமை அல்லது நத்தை வேகத்தில் நகரும் வண்டிகள், டிராஃபிக் ஜாம் ஆகி சுத்தமாக நகரவே முடியாத வண்டிகள், ஒன்வே ட்ராஃபிக், சிக்னலில் நிற்பது என்னும் பல தொல்லைகள் மட்டுமல்ல. போகும் இடத்திலெல்லாம் அடுக்கு மாடிக்குடியிருப்புக்கள். முதல் மாடி, இரண்டாவது மாடி, மூன்றாவது மாடி என்ற படுத்தல்கள். லிஃப்ட் உள்ள இடங்கள், லிஃப்ட் இல்லாத இடங்கள், லிஃப்ட் இருந்தாலும் மின்வெட்டு மற்றும் இதர ரிப்பேர்களால் இயங்காது என்ற அறிவிப்பு போன்ற நிலைமைகள், பற்றி மிகவும் நகைச்சுவையாகத் தெரிவிப்பார்.


”ஒரே பெயரில் பல அடுக்கு மாடிக்குடியிருப்புக்கள். உதாரணமாக “பாரத் வில்லா”,  ”பாரத் எம்பயர்”, ”பாரத் வெஸ்ட் அவென்யூ”, ”பாரத் ஈஸ்ட் அவென்யூ”, “பாரத் கார்டன்ஸ்” என்று பலவிதமான கட்டடப் பெயர்களால் வந்திடும் குழப்பங்கள்; 


சுப்ரமணியன் என்றாலோ பாலசுப்ரமணியன் என்றாலோ எல்லா அடுக்கு மாடிகளிலும் யாராவது ஒருத்தர் அதே பெயரில் ஆனால் ஆள் மாறாட்டமாக இருந்து வரும் துரதிஷ்டம்; 


ஆங்காங்கே உள்ள வாட்ச்மேன்களின் கெடுபிடிகள், நாய்த்தொல்லைகள், பூட்டியிருக்கும் வீடுகள், திறந்திருந்தாலும் உள்ளே தாளிட்டு லேசில் வந்து கதவைத் திறக்காத நபர்கள், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றோ அல்லது ஷாப்பிங் போயோ வீடு திரும்பாமல் இருத்தல் என பல்வேறு சோதனைகள்;

முட்டிக்கால் வலியுடன், ஆயிண்மெண்ட் தடவியபடியே, மகன் கல்யாணம் என்ற மன மகிழ்ச்சியிலும், உடலுக்கு ஒரு தேகப்பயிற்சி தானே என்ற சமாதானத்துடனும், மூச்சு வாங்கியபடி, மாடி மாடியாக ஏறி இறங்கியதில் தினமும் முட்டி வலியும் முழங்கால் வலியும் அதிகமாகி, வீக்கம் கண்டது தான் மிச்சம்” என்றும் நேற்று என்னிடம் கூறினார்.


”வேலை மெனக்கட்டு, பத்திரிக்கை அடித்து, வீடு தேடி வந்து அதை உரியவரிடம் சேர்த்தாலும், மங்கள அக்ஷதைகள் தரையில் சிந்தி யார் கால்களிலாவது குத்தி விடக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையில், முதல் வேலையாக நமக்குத்தெரியாமல் அதனை, நேராகச்சென்று, டஸ்ட் பின்னில் போட்டுவிட்டு,  பத்திரிக்கையை கவரிலிருந்து வெளியே எடுக்காமலேயே, ஓர் ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, யாருக்குக் கல்யாணம்? தங்கள் பெண்ணுக்கா அல்லது பிள்ளைக்கா? எந்த இடத்தில் கல்யாணம்? எத்தனாம் தேதி? என்ன கிழமை? எந்த மண்டபம்? எத்தனை மணிக்கு முஹூர்த்தம்? சம்பந்தி யாரு? எந்த ஊரு? எப்படி இந்த இடம் அமைந்தது? எனக்கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்தெடுப்பவர்களும் உண்டு;


பிறகு வீட்டில் வைத்த பத்திரிகையை பல இடங்களில் தேடியும் அது கிடைத்தால் அதைப்படிக்க மூக்குக்கண்ணாடி கிடைக்காமலும், மூக்குக்கண்ணாடி கிடைத்தால் பத்திரிகை கிடைக்காமலும், அலுத்துப்போய், முஹூர்த்த தேதியையும் மறந்து விட்டு, பேசாமல் விட்டு விடுபவர்களும் உண்டு;


’தன் திருமணமாகாத பெண் அல்லது பிள்ளைக்கு பொருத்தமான இடமாக ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ’ என ஜாதகத்தை ஒரு பிரதி எடுத்துத் தருபவர்களும் உண்டு. ஆட்டோ வெயிட்டிங் என்று சொன்ன பிறகு தான், அரை மனதுடன் ஆளை விடுபவர்கள், இந்த மகானுபாவர்கள்;


வீடு தேடி வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று, “வாங்க! உட்காருங்க!! ஜில்லுனு தண்ணீர் குடியுங்க!!! என்று சொல்லி மின்விசிறியை சுழலவிட்டு, டிபன், காஃபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட், பால், ஜூஸ் எல்லாமே உள்ளது, எது சாப்பிடுவீங்க? என்ன கொண்டு வரலாம்? என்று அன்புடன் கேட்டு உபசரிப்பவர்கள், ஒரு ஐந்து சதவீதம் மட்டுமே;   


வெகு சுவாரஸ்யமாக தொலைகாட்சிப் பெட்டியிலேயே தங்கள் கவனத்தை முழுவதுமாக வைத்துக்கொண்டு, ஏதாவது சீரியல்களிலோ, வேறு ஏதாவது நிகழ்ச்சிகளிலோ அல்லது கிரிக்கெட் மேட்ச்சிலோ மூழ்கி இருப்பவர்கள் தான் பலரும் உண்டு; 


இடையே வரும் வர்த்தக விளம்பர நேரத்திற்குள் நம்முடன் சுருக்கமாகப்பேசி நம்மை அனுப்பிவிட அவர்கள் துடிப்பதை நாமும் நன்றாகவே உணர முடியும்” என்று இன்று அவர் ஒரு பெரிய பிரசங்கமே நிகழ்த்தியது எனக்கு மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது.



அழைப்பு 
அனுபவம் 
தொடரும் ...






[இந்தச் சிறுகதையின் நிறைவுப்பகுதி வரும் 15.09.2011 வியாழன் அன்று வெளியிடப்படும்.]

50 comments:

  1. என்னுடைய அப்பா காலத்தில் நெருங்கிய உறவினர் வீட்டுக்கு காலையில் சென்றால், போனவுடன் காப்பி சாப்பிட்டு விட்டு, மதியம் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, பிறகு குடும்ப சமாசாரங்கள் எல்லாம் பேசி முடித்து, மாலை டிபன் காபி சாப்பிட்டுவிட்டு இரவுதான் வீட்டுக்கு வருவார்.

    இன்றைய சூழலில் நமக்கும் பொறுமையில்லை, உறவினர்களுக்கும் நேரம் இல்லை. ஒரு அரை மணி நேரம் நெருங்கிய சொந்தங்களின் வீட்டில் கூட இருக்க முடியாதபடி வாழ்க்கை முறை மாறிவிட்டது மிகவும் வருத்தத்திற்குரியது.

    ReplyDelete
  2. அனுபவங்கள் அருமையாகப் போகிறது. இதில் கூட சீரியல் முடிந்து கிளம்பனுமா என்ற எண்ணத்தை வரவேற்பாளர்களின் மனோ பாவம் பற்றிச் சொல்லும்போது ;படிக்கையில்,'அட உண்மைதானே' என்று தோன்றுகிறது. எத்தனை மனிதர்கள், எத்தனை ரகங்கள், எத்தனை அனுபவங்கள்...!

    ReplyDelete
  3. இவ்வளவு கஷ்டப்பட்டு நேரில போய் கூப்பிடனுமா? பேசம தபாலிலேயே அனுப்பிவிட்டு ஒரு போன் பண்ணி சொல்லி விடலாம்.

    ReplyDelete
  4. //அன்புடன் கேட்டு உபசரிப்பவர்கள், ஒரு ஐந்து சதவீதம் மட்டுமே;//

    மனதை மிகவும் நோகடிப்பது இதுவே ஐயா! பெரிய நகரங்களில் ரயில், பேருந்து, ஆட்டோ என்று அலைக்கழிந்து, மின்னுயர்த்தி இல்லாத கட்டிடங்களில் படியேறி மூச்சிரைக்கப் போகிறவர்களுக்கு, சிலர் குடிக்கத் தண்ணீர் கூட கேட்பதில்லை என்பதை அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

    பகிர்வு அருமை!

    ReplyDelete
  5. இருப்பினும் கல்யாண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவற்றை விநியோகிப்பது என்பது மட்டும், இன்றும் சற்று சிரமமான காரியமாகவே இருப்பதாகத் தெரிகிறது//


    ஆமாம் ஐயா. அதற்கு ஆள் போட முடியாதே!

    நாமே அழைக்கவேண்டியிருக்கிறதே!!

    ReplyDelete
  6. அழைப்பு
    அனுபவம்
    தொடரும் ..//

    ஒருநாளும் முடியாத
    தொடர் அழைப்பு.....

    ReplyDelete
  7. கவரிலிருந்து வெளியே எடுக்காமலேயே, ஓர் ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, யாருக்குக் கல்யாணம்? தங்கள் பெண்ணுக்கா அல்லது பிள்ளைக்கா? எந்த இடத்தில் கல்யாணம்? எத்தனாம் தேதி? என்ன கிழமை? எந்த மண்டபம்? எத்தனை மணிக்கு முஹூர்த்தம்? சம்பந்தி யாரு? எந்த ஊரு? எப்படி இந்த இடம் அமைந்தது? எனக்கேள்வி மேல் கேட்டு வறுத்தெடுப்பவர்களும் உண்டு;/

    என் அனுபவத்தில் அவர்கள்தான் அதிகம்.

    ReplyDelete
  8. கவரிலிருந்து வெளியே எடுக்காமலேயே, ஓர் ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, யாருக்குக் கல்யாணம்? தங்கள் பெண்ணுக்கா அல்லது பிள்ளைக்கா? எந்த இடத்தில் கல்யாணம்? எத்தனாம் தேதி? என்ன கிழமை? எந்த மண்டபம்? எத்தனை மணிக்கு முஹூர்த்தம்? சம்பந்தி யாரு? எந்த ஊரு? எப்படி இந்த இடம் அமைந்தது? எனக்கேள்வி மேல் கேட்டு வறுத்தெடுப்பவர்களும் உண்டு;/

    என் அனுபவத்தில் அவர்கள்தான் அதிகம்.

    ReplyDelete
  9. அன்பின் வை.கோ

    ஒரு சிறு செயல் - திருமணத்திற்கு நேரில் சென்று அழைப்பது. அதில் உள்ள அத்தனை சிரமங்களையும் - நுணுக்கமானது உட்பட - அத்தனையும் நினைவில் நிறுத்தி - ஒன்று விடாமல் எழுதி - ஒரு கதை அமைப்பதெனது பாராட்டுக்குரியது - போக்குவரத்து நெரிசல் - டிராஃபிக் ஜாம் - இரண்டும் வெவ்வேறா என்ன ? மிக மிக இரசித்தேன் வை.கோ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  10. We should move with the times, and use the technology for extending the invitations. We may email the scanned invitation to all our relatives and friends. In addition, we may also call each one of them over the phone requesting them to treat the emailed invitations as personal-visits. The invitees should also be broad-minded to accept such invitations, and grace the function. However, some exceptions might be made for personal visits to our very dear ones. Of late, I observe that some people while inviting their close ones also hand over the "return gifts" in advance. It saves a lot of time and tension at the time of wedding.

    ReplyDelete
  11. நீங்கள் சொல்லிச் செல்வது சுவாரஸ்யமாக வுள்ளது
    இப்போதெல்லாம் யாரையும் நேரடியாக செல்லிலேயே
    தொடர்புகொண்டுவிடுவதால் முன்புபோல
    விலாச நோட்டு யார் வீட்டிலும் இல்லை
    விலாசங்களை தேடிப் பிடித்து வாங்கி
    பின் பகுதிவாரியாகப் பிரித்து பெண்களைக் கிளப்பி
    போனவருடம்தான் இத்தனை அவஸ்தைகளையும்
    என் பெண் கல்யாண்த்திற்குப் நான்பட்டேன்
    என்வே நீங்கள் சொல்லிச் செல்வது எனக்கு
    எல்லோரையும் விட சுவாரஸ்யமாகப் படுகிறது
    அடுத்த ப்திவை ஆவலுடன் எதிர்பார்த்து.
    த.ம 5.

    ReplyDelete
  12. திருமணம் என்றால் அத்தனை அனுபவமும் வேண்டுமே. உறவுகளை பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிடுகிறது. அழைப்பு என்பதே தங்கள் கை வண்ணத்தில் மிகுந்த சுவராஸ்யமாக உள்ளது. தொடர்கிறேன் சார்.

    ReplyDelete
  13. ஒருகள்யாணம் என்றால் என்னென்ன ல்லாம் ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்குன்னு ரொம்ப யதார்த்தமாக சொல்லி இருக்கீங்க. அதிலும்னேரில்போய் அழைப்பதில் உள்ள சங்கடங்களையும் நலா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  14. இவர் தார்க்குச்சி போட ஆரம்பித்தால், எப்படியும் ஒரு வழியாகப்புறப்பட மூணு மணிக்கு மேல் நாலு மணி கூட ஆகிவிடுகிறது, என்று சொல்லி அலுத்துக்கொண்டார்.//

    தார்குச்சி, இது எல்லார் வீட்டிலும் உள்ளதுதான் போல, ஹா ஹா ஹா "தார்குச்சி" இந்த சொல்லாடல் எங்க ஊரில் ரொம்ப பிரபலம்...!!!

    ReplyDelete
  15. தமிழ்மணம் ஏழாவது ஓட்டு குத்தியாச்சி...

    ReplyDelete
  16. அருமையாகச் செல்கிறது
    அழைப்பிதழ் தொடர்
    தொடரட்டும்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. அருமையான பதிவு.
    நடைமுறை சிரமங்கள் தான். சில சிரமங்கள் படத்தான் வேண்டும்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  18. யதார்த்தத்தை சொல்கிறது கதை.
    இப்போதெல்லாம் யாராவது வீட்டுக்கு வந்தால் ”வாங்க ” என்று கூட அழைப்பது குறைந்து விட்டது. போனில் பேசினால் கூட ஊருக்கு வந்தால் வாங்க என்று கூட சொல்வதில்லை.

    ReplyDelete
  19. நேரில் போய் அழைக்கும் போதுதான், உறவுகள் சொந்த பந்தங்களை தெரிஞ்சுக்கவே முடியுது. இப்பவும் சில கிராமங்களில் வீட்ல வெச்சு சுப நிகழ்ச்சிகள் நடந்தா, அன்றைய ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டுக்கும்கூட நேர்ல போய் அழைச்சாத்தான் வர்றாங்க. நேர்ல அவங்க வீட்டுக்குப் போய் அழைக்கலைன்னா அது மரியாதையில் சேர்க்கப் படாது :-))

    உங்கள் நண்பரின் அனுபவங்களை படிக்கையில் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.. நம்ம காலம் வரச்சே எப்படியோ :-))))

    ReplyDelete
  20. பத்திரிக்கையை கவரிலிருந்து வெளியே எடுக்காமலேயே, ஓர் ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, யாருக்குக் கல்யாணம்? தங்கள் பெண்ணுக்கா அல்லது பிள்ளைக்கா? எந்த இடத்தில் கல்யாணம்? எத்தனாம் தேதி? என்ன கிழமை? எந்த மண்டபம்? எத்தனை மணிக்கு முஹூர்த்தம்? சம்பந்தி யாரு? எந்த ஊரு? எப்படி இந்த இடம் அமைந்தது? எனக்கேள்வி மேல் கேட்டு வறுத்தெடுப்பவர்களும் உண்டு;

    அப்படியே அனுபவபூர்வமான வார்த்தைகள்.
    உங்கள் பலமே அனுபவம் சார்ந்த எழுத்தாய் அமைவதுதான்.
    ரொம்ப காஸ்ட்லியாய் பத்திரிக்கை அடித்து வினியோகிப்பவர்களைக் கண்டால் எனக்கு ஆச்சர்யம் வரும்.
    ஏனென்றால் நீங்களே சொன்னது போல அதை குப்பைத்தொட்டியில் வீசி எறிபவர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு விரயம் தேவைதானா.. சிம்பிளாய் அழகாய் தகவல் சொல்லும் பத்திரிக்கை போதாதா.. அதற்கானஉபரி செலவை ஏதேனும் தர்மத்திற்கு செய்யலாமே என்று தோன்றும்.

    ReplyDelete
  21. சுவாரஸ்யமா போகுது அழைப்பு .திருமணம் என்றாலே பற்பல அனுபவங்கள் .எங்க மகள் கல்யாணத்தின் போது எப்படி இருக்குமோ தெரியல .

    ReplyDelete
  22. அவ்வளவு கடினப்படத் தேவையா? தபாலில் அனுப்பிவிட்டு போனில் கதைத்து விடலாம்தானே?. மற்றவர்களுடைய உடல் உபாதையைப் புரிந்து கொள்ளாதவர்கள் பெரிதாக என்ன வந்து வாழ்த்தப் போகின்றார்கள். ஆர்வமாக வாசிப்பதற்கு எற்றதுபோல் எழுதிக் கொண்டு செல்கின்றீர்கள் வாழ்த்துகள். தொடருங்கள்.

    ReplyDelete
  23. இப்போதெல்லாம் நிறைய பேர் இந்த மாதிரி வீடு சென்று அழைப்பதையே தவிர்த்து விடுகிறார்கள். தில்லியில் அடுத்த பேட்டையில் இருக்கும் நண்பர்களுக்குக் கூட கொரியரில் அனுப்பி விடுகிறார்கள்... கேட்டால், பல்க் கொரியர் - ஒரு இன்விடேஷன் அனுப்ப, 7 ரூபாய் தான்.. வீடுவீடா ஆட்டோ/கார்ல போய், ஏறி இறங்கி சென்றால் காசும் நிறைய ஆகும், உடம்புக்கு வலிக்கும்... அதை விட இந்த வழி சுலபமானது என்று சொல்கிறார்கள்.

    இப்ப தான், மொபைல், இ-மெயில் எல்லாம் இருக்கே.... அதிலே சொன்னா போச்சு... என்றும் சொல்கிறார்கள்...

    நல்ல சிறுகதை. விவரங்களுடன்....

    ReplyDelete
  24. ஒரு நல்ல அனுபவம்...
    இந்த மாதிரி ஒரு நல்ல நாளை நம்மில் யாராவது பிலாக்கில் பகிர்ந்து கொள்கிறார்களா? இன்னும் கொஞ்ச நாட்களில் மெகாத் தொடர் இல்லாத நாட்களில் தான் உறவுக் காரர்கள் வீட்டிற்கே போவோம் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  25. உங்கள் சிறுகதை யதார்த்தத்தை அப்படியே பிட்டு பிட்டு வைக்கிற‌து! தொலைக்காட்சி தொடரையோ அல்லது கிரிக்கெட் மாட்சையோ பார்த்துக்கொண்டே நம்முடன் அறைகுறையாய் பேசும் அனுபவம் பல ஆன்டுகளுக்கு முன்பே எங்களுக்குக் கிடைத்து விட்டது. அதிலிருந்து ஞாயிறன்றோ அல்லது சாதாரண நாட்களில் தொலைக்காட்சி சீரியல் ஆரம்பிக்கும் முன்பாகவோ மற்ற‌வர் வீட்டுக்குப் போவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்!

    ReplyDelete
  26. paththirikkai koduppathil sikkal , athil pahtthirikkai kodukka maranthuvittaal athai vida sikkal .. en thirumanaththirkku paththirikkai koduthta anupavaththai ninaivu paduththiyamaikkku vaalththukkal

    ReplyDelete
  27. cheena (சீனா) said...
    //அன்பின் வை.கோ

    ஒரு சிறு செயல் - திருமணத்திற்கு நேரில் சென்று அழைப்பது. அதில் உள்ள அத்தனை சிரமங்களையும் - நுணுக்கமானது உட்பட - அத்தனையும் நினைவில் நிறுத்தி - ஒன்று விடாமல் எழுதி - ஒரு கதை அமைப்பதென்பது பாராட்டுக்குரியது - போக்குவரத்து நெரிசல் - டிராஃபிக் ஜாம் - இரண்டும் வெவ்வேறா என்ன ? மிக மிக இரசித்தேன் வை.கோ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    வணக்கம், ஐயா.

    தங்கள் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், ரசிப்புத்தன்மைக்கும், பாராட்டுக்களுக்கும், நல்வாழ்த்துக்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    போக்குவரத்து நெரிசல் என்பது, தங்குதடையின்றி, வெகு வேகமாகச் செல்ல வேண்டிய வாகனங்கள், ஆமை வேகத்தில் நகர்வது; டிராஃபிக் ஜாம் என்பது, வாகனங்கள் சுத்தமாக நகரவே வழி இல்லாமல், எஞ்சினை off செய்துவிட்டு அப்படியே நீண்ட நேரம் ஸ்தம்பித்துப்போய் நிற்பது என்ற வெவ்வேறு பொருள்களில் நான் புரிந்து கொண்டுள்ளதால், அவ்வாறு எழுதிவிட்டேன்.

    தங்கள் கருத்துக்களைப் பின்னூட்டத்தில் பார்த்ததும், இந்த விளக்கத்தை, என் கதையிலும் அதே இடத்தில் இப்போது சுட்டிக்காட்டியும் விட்டேன். மிக்க நன்றி, ஐயா.

    இந்தக்கதையின் இரண்டாம் பாகத்தில் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களும், திடீர் திருப்பங்களும் வர இருப்பதால், அவசியமாக 15.09.2011 வியாழன் அன்று படித்துப்பார்த்துக் கருத்துக் கூறுங்கள், ஐயா.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  28. சிறப்பான கதை என்றாலும் அது பட்டறிவாக இருந்தாலும் அது பாராட்டுகளுக்கு உரியதாகிறது கரணம் இன்றைய சூழலை அப்படியே அழகாக படம் பிடிக்கிறது திருமணம் எனவந்துவிட்டாலே பலகடினமான வேலைகள் வந்துவிடும் இந்த சூழலில் உண்டாகும் சிரமங்களை சொல்கிறது பாராட்டுகள் தொடர்க ....

    ReplyDelete
  29. படிப்பவர்கள் அனைவருமே ,ஆமாம் நடைமுறையை அப்படியே எழுத்தாக்கியுள்ளார் என்றுதான் உணர்த்தும்.தொடருகிறேன்.

    ReplyDelete
  30. வீட்டுக்கு வர்றவங்கள வா'னு கூப்பிட ஆள் இல்லாம போய்டும் போல இருக்கே...ஹ்ம்ம்...

    ReplyDelete
  31. //இடையே வரும் வர்த்தக விளம்பர நேரத்திற்குள் நம்முடன் சுருக்கமாகப்பேசி நம்மை அனுப்பிவிட அவர்கள் துடிப்பதை நாமும் நன்றாகவே உணர முடியும்//

    உண்மைதான்.இது இன்று பல இடங்களிலும் நடப்பதுதான்.

    ஆனால் ஒரு பக்கம் இப்படி என்றால் இந்த விஷயத்திற்கு இன்னொரு பக்கமும் உள்ளது அது என்னவெனில்,
    "இவங்களை எல்லாம் எவன் பத்திரிக்கை வைக்கலைன்னு அழுதது?ரெண்டு பஸ் அப்பறம் ஆட்டோன்னு பிடிச்சு மண்டபத்துக்கு இந்த ட்ராஃபிக்ல வெய்யில்ல போறதுக்குள்ள தாவு தீந்து போகுது.இதுல பஸ் ஆட்டோ செலவு மொய் பணம்னு அது வேற" இப்படி புலம்பற நன்மக்களும் இப்பலாம் நிறைய உண்டு

    ReplyDelete
  32. அடுத்த அங்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்து....
    வேதாஇ இலங்காதிலகம்.

    ReplyDelete
  33. ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு கோபால் சார். அடுத்த பகுதியை சீக்கிரம் வெளியிடுங்கள்.:)

    ReplyDelete
  34. ஒரு கல்யாணம் நல்ல படியாக முடிப்பது என்பது இன்று பெரிய விசயமாக உள்ளது.

    ReplyDelete
  35. அனுபவங்களை கதையில் வடிவில் பகிர்ந்தமைக்கு நன்றி.. அடுத்த பாகத்துக்கு வைட்டிங்

    ReplyDelete
  36. என் பேரன்புக்கும் பெரும் மரியாதைக்கும் உரிய

    திரு. Dr.P.Kandaswamy PhD அவர்கள்
    திரு. ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்
    திரு. சேட்டைக்காரன் அவர்கள்
    திரு. Chandramouli அவர்கள்
    திரு. ரமணி சார் அவர்கள்
    திரு. MANO நாஞ்சில் அவர்கள்
    திரு. புலவர் சா.இராமாநுசம் அவர்கள்
    திரு. ரத்னவேல் அவர்கள்
    திரு. ரிஷபன் அவர்கள்
    திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்
    திரு. ஆரண்ய நிவாஸ் ஆர்.
    இராமமூர்த்தி அவர்கள்.
    திரு. மதுரை சரவணன் அவர்கள்
    திரு. கே.பி. ஜனா அவர்கள்
    திரு. தமிழ்வாசி - Prakash அவர்கள்

    திருமதி RAMVI அவர்கள்
    திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாள்
    அவர்கள்
    திருமதி சாகம்பரி அவர்கள்
    திருமதி லக்ஷ்மி அவர்கள்
    திருமதி கோவை2தில்லி அவர்கள்
    திருமதி அமைதிச்சாரல்
    திருமதி angelin அவர்கள்
    திருமதி சந்திரகெளரி அவர்கள்
    திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள்
    திருமதி மாலதி அவர்கள்
    திருமதி thirumathi bs sridhar
    அவர்கள்
    திருமதி அப்பாவி தங்கமணி அவர்கள்
    திருமதி ராஜி அவர்கள்
    திருமதி kovaikkavi அவர்கள்
    திருமதி தேனம்மை லெக்ஷ்மணன்
    அவர்கள்

    ஆகிய அனைவரின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், உற்சாக வரவேற்புக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாளை மீண்டும் இந்தச் சிறுகதையின் நிறைவுப்பகுதியில் சந்திப்போம் என்று கூறி அன்புடன் விடைபெறும் தங்கள் vgk.

    ReplyDelete
  37. சார்.உங்கள் சிந்தனை யாருக்கு வரும்.பத்திரிகையில் பெயர்கள் இடம்பெறுவது போலவே வரிசைப்படுத்திவிட்டிர்கள்.இது அநேகம் ரெக்கார்ட் ப்ரேக் பின்னுட்டமாக இருக்கலாம்.

    ReplyDelete
  38. thirumathi bs sridhar said...
    //சார்.உங்கள் சிந்தனை யாருக்கு வரும்.பத்திரிகையில் பெயர்கள் இடம்பெறுவது போலவே வரிசைப்படுத்திவிட்டிர்கள்.இது அநேகம் ரெக்கார்ட் ப்ரேக் பின்னுட்டமாக இருக்கலாம்.//

    மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி, மேடம்.

    ஏற்கனவே ஓரிரு முறைகள் இதுபோலத்தானே, பின்னூடங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளேன்.

    தாங்கள் இப்போது தான் முதன்முறையாக கவனிக்கிறீர்களோ, என்னவோ!

    OK அதனால் பரவாயில்லை.

    மீண்டும் இந்த “அழைப்பு” வேலைகள் அதிகம் இருப்பதால் இத்துடன் விடைபெறுகிறேன்.

    நாளைக்கு மறக்காமல் படித்து, பின்னூட்டம் எழுதுங்கள், மேடம்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  39. முதன் முறையாக இன்றுதான் பார்த்தேன்.ஓகே நாளை ஆஜர் ஆகிறேன்

    ReplyDelete
  40. பத்திரிக்கையை கவரிலிருந்து வெளியே எடுக்காமலேயே, ஓர் ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, யாருக்குக் கல்யாணம்? தங்கள் பெண்ணுக்கா அல்லது பிள்ளைக்கா? எந்த இடத்தில் கல்யாணம்? எத்தனாம் தேதி? என்ன கிழமை? எந்த மண்டபம்? எத்தனை மணிக்கு முஹூர்த்தம்? சம்பந்தி யாரு? எந்த ஊரு? எப்படி இந்த இடம் அமைந்தது? எனக்கேள்வி மேல் கேட்டு வறுத்தெடுப்பவர்களும் உண்டு;//
    இதுதான் நிஜம்.
    இப்பதான் ஈவைட் வந்து விட்டதே.

    வயது முதிர்ந்தோருக்கு மதிப்பு கொடுக்கத்தான் வேண்டும். பத்துவருடங்கள் முன்னால் நடந்த எங்கள் வீட்டு இரட்டைத் திருமணத்தில் பெரியவர்கள்(அப்போது நான் கொஞ்சம் இளையவளாக இருந்தேன்))) அவர்களுகு உண்டான புடவை வேஷ்டியையும் கொடுத்து அழைத்துவிட்டுத்தான் வந்தோம்.
    நல்லவேளை சீரியல் தொந்தரவு எனக்கு இல்லை.!
    மிக மிக அருமையான பதிவு .நிதர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. வல்லிசிம்ஹன் April 4, 2013 at 7:31 PM

      வாங்கோ வாங்கோ ... வணக்கம், நமஸ்காரம்.

      *****பத்திரிக்கையை கவரிலிருந்து வெளியே எடுக்காமலேயே, ஓர் ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, யாருக்குக் கல்யாணம்? தங்கள் பெண்ணுக்கா அல்லது பிள்ளைக்கா? எந்த இடத்தில் கல்யாணம்? எத்தனாம் தேதி? என்ன கிழமை? எந்த மண்டபம்? எத்தனை மணிக்கு முஹூர்த்தம்? சம்பந்தி யாரு? எந்த ஊரு? எப்படி இந்த இடம் அமைந்தது? எனக்கேள்வி மேல் கேட்டு வறுத்தெடுப்பவர்களும் உண்டு;*****

      //இதுதான் நிஜம்.//

      புரிதலுக்கு நன்றி.

      //இப்பதான் ஈவைட் வந்து விட்டதே.//

      ஆம். வந்து விட்டது. செளகர்யம் தான். இதன் இரண்டாவது பகுதியையும் படியுங்கோ.

      //வயது முதிர்ந்தோருக்கு மதிப்பு கொடுக்கத்தான் வேண்டும்.//

      அவர்கள் பழங்கால ஆசாமிகளாக இருப்பதால் அவர்களின் எதிர்பார்ப்புகளே மிகவும் வித்யாசமாக இருக்கும். இன்றைய இளம் தலைமுறையினருக்கு அதெல்லாம் எரிச்சல் ஊட்டும்.

      //பத்துவருடங்கள் முன்னால் நடந்த எங்கள் வீட்டு இரட்டைத் திருமணத்தில் பெரியவர்கள் (அப்போது நான் கொஞ்சம் இளையவளாக இருந்தேன்)))//

      இப்போதும்கூட நீங்கள் உங்கள் எழுத்துக்களில் மிகவும் இளையவர்களாகவே உள்ளீர்கள். ;))))) துடிப்புடன் அடிக்கடி ஏதாவது ஒரு பதிவு போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். ;)))))

      //அவர்களுக்கு உண்டான புடவை வேஷ்டியையும் கொடுத்து அழைத்து விட்டுத்தான் வந்தோம்.//

      சந்தோஷம். பல்ரும் இதுபோலத்தான் இப்போது செய்ய ஆரம்பித்துள்ளனர். கல்யாண அமர்களத்தில் இதற்கெல்லாம் நாம் நேரம் ஒதுக்குவதும் கஷ்டம்.

      மேலும் ஒருசிலருக்குக் கொடுத்துவிட்டு, ஒருசிலருக்குக் கொடுக்கமுடியாமல் நமக்கு தர்ம சங்கடங்கள் ஏற்படாமலும் தவிர்க்க இது நல்லதொரு வழியாகும்.

      //நல்லவேளை சீரியல் தொந்தரவு எனக்கு இல்லை.!//

      இப்போது தான் இதுவும் ஏற்பட்டு தொந்தரவு அளித்து வருகிறது.

      //மிக மிக அருமையான பதிவு .நிதர்சனம்.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  41. கல்யாணத்துக்கு பத்திரிகை அடித்து அதை விநியோகம் பண்ணுவதெல்லாம் இப்ப மெயில்லயே பண்ணிடுராங்க

    ReplyDelete

  42. இறைய காலம் பரவாயில்லை. மெயில் செய்து விடுங்கள் போதும் என்று சொல்பவர்களும் உண்டு.
    கல்யாணத்துக்கு அப்புறமும் எனக்கு ஏன் பத்திரிகை அனுப்பலைன்னு சண்டை பிடிப்பவர்களும் உண்டு.

    என்னதான் காண்ட்ராக்டர் கிட்ட விட்டாலும் நாம செய்ய வேண்டிய வேலைகள் என்னன்னு அழகா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  43. நிக்காவுக்கு வூடு வூடா போயி பத்திரிக்க வக்கணுமோ.

    ReplyDelete
  44. கொஞ்ச காலத்துக்கு முன்னெல்லாம் வீடீ வீடாகப் போயி பத்திரிகை கொடுத்து அழைப்பது தான் மரியாதையாக ஏற்யுக்கொண்டார்கள். நாளாக நாளாக வசதிகள் வாய்ப்புகள் பெருக பெருக மெயிலில் அனுப்புவது பழக்கமானது. வீடு வீடாக சென்று பத்திரிக்கை வைத்து அழைப்பதில் உள்ள சிரமங்களை நகைச்சுவை கலந்து கலக்கலாக சொல்லி இருக்கீங்க. நல்லா இருக்கு.

    ReplyDelete
  45. கல்யாணம் பண்ணிப்பார்...அதைவிட ...அழைப்பு கொ(வி)டுத்துப்பார்...என்ன டுவிஸ்ட் வருதுன்னு பாக்கலாம்...

    ReplyDelete
  46. திட்டமிடுதலின் அவசியத்தைத் தெளிவாக விளக்கும் கதை!

    ReplyDelete