என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 15 செப்டம்பர், 2011

அ ழை ப் பு *[சிறுகதை - நிறைவுப்பகுதி 2 of 2 ]*







அழைப்பு

[சிறுகதை - இறுதிப்பகுதி 2 of 2 ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




முன் கதை முடிந்த இடம்:

”வெகு சுவாரஸ்யமாக தொலைகாட்சிப் பெட்டியிலேயே தங்கள் கவனத்தை முழுவதுமாக வைத்துக்கொண்டு, ஏதாவது சீரியல்களிலோ, வேறு ஏதாவது நிகழ்ச்சிகளிலோ அல்லது கிரிக்கெட் மேட்ச்சிலோ மூழ்கி இருப்பவர்கள் தான் பலரும் உண்டு. இடையே வரும் வர்த்தக விளம்பர நேரத்திற்குள் நம்முடன் சுருக்கமாகப்பேசி நம்மை அனுப்பிவிட அவர்கள் துடிப்பதை நாமும் நன்றாகவே உணர முடியும்” என்று இன்று அவர் ஒரு பெரிய பிரசங்கமே நிகழ்த்தியது எனக்கு மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது.

===========================

”நல்ல தூக்கத்திலிருந்து எழுந்து வந்து, தூக்கமும் கலையாமல், போதை ஏற்றியவர் போல, அரைத்தூக்கத்தில் தள்ளாடியவாறே, நம்மைப்பார்த்து தலையை மட்டும் ஆட்டி வரவேற்பவர்களும் உண்டு. இவர்களின் இந்தச் செயல் எதற்காக இங்கு அனாவஸ்யமாக இப்போது, வேகாத வெய்யிலில் நீங்களும் தூங்காமல், எங்களையும் தூங்க விடாமல், வந்துள்ளீர்கள்? என்று நம்மிடம் கேட்காமல் கேட்பது போல நமக்குத் தோன்றும்; 

காலிங் பெல்லை அழுத்தியும், கதவிடுக்கு வழியே வந்து எட்டிப்பார்த்து கதவைத் திறக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கவே கால் மணி நேரமாவது ஆக்குபவர்களே அதிகம். என்ன செய்வது? அவரவருக்கு ஆயிரம் பிரச்சனைகள்; கசப்பான அனுபவங்கள்; கொலை, கொள்ளை, தீவிரவாதம் என பல்வேறு செய்திகள் வேறு;


அப்படித்தான் நேற்று ஒருவர் வீட்டுக்குச்சென்றிருந்தேன். நான் பார்க்க வேண்டிய நபரே நல்லவேளையாக வீட்டில் சும்மாத்தான் அமர்ந்திருந்தார். ”வாங்க சார்! ஏது இவ்வளவு தூரம்” என்று சொல்லி சிரித்தபடியே அமரச்சொன்னார். எனக்கு ஒரே மகிழ்ச்சி;


அவர் ஒரு காலத்தில் என்னிடம் கடைநிலை ஊழியராகச் சேர்ந்தவர் தான்.  பிறகு பல சைடு பிஸினஸ்களில் இறங்கி, அதிர்ஷ்டக்காற்று அவர் பக்கம் தொடர்ந்து அடித்ததில், அந்த எங்கள் அலுவலக வேலையையே ராஜிநாமா செய்துவிட்டு, இன்று பெரிய தொழிலதிபராகி பலருக்கும் தானே வேலைவாய்ப்பு அளிக்கும் பாக்யம் பெற்றவராகவும், ஊரில் முக்கியப்புள்ளியாகவும் உள்ளார்; 


சந்தோஷமாக பேச ஆரம்பித்தேன். ஒரிரு வார்த்தைகள் நான் பேசுவதற்குள், அவர் மேஜை மேல் இருந்த 4 கைபேசிகளும், 2 லேண்ட்லைன் போன்களும் மாற்றி மாற்றி அடிக்க ஆரம்பிக்க, அவரும் யார் யாருடனோ என்னென்னவோ பிஸினஸ் விஷயமாகப் பேச ஆரம்பித்து விட்டார். 


நான் ஒருவன் அவரைப்பார்த்துப் பேச நேரில் வந்திருக்கிறேன் என்பதையே அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏதோ கோவில் கும்பாபிஷேகத்திற்கு டொனேஷன் கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்து விட்டாரோ என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது;


பொறுமை இழந்த நான், கடைசியில் பத்திரிகையை அவர் கையில் ஒருவழியாகத் திணித்து விட்டு புறப்படத்தயாரானேன்.  அவரும் போனில் பேசுவதை சற்றும் நிறுத்தாமல், தலையை மட்டும் ஒரே ஆட்டாக ஆட்டி டாட்டா சொல்லி அனுப்பி விட்டார்;


நான் கொடுத்த பத்திரிகையின் மேல், சூட்டோடு சூடாக அவர், ஏதேதோ போனில் வரும் தகவல்களைக் கிறுக்கவும் ஆரம்பித்தது தான், என்னை என்னவோ மிகவும் சங்கடப்படுத்தியது; 


அன்று அப்படித்தான், ஒரு பத்து பேர்களை சந்திக்கச் சென்றதில் நான்கு வீடுகள் பூட்டியிருந்தன. ஒருவர் வீட்டில் வேலைக்காரர்கள் மட்டுமே. மற்றொருவர் வீட்டில் தோட்டக்காரர் மட்டுமே. வேறொருவர் வீட்டில் முன்பின் பார்த்த ஞாபகமே இல்லாத யாரோ ஒருத்தி மட்டும், சற்றே மாநிறமாகத் தென் பட்டாள்; 


அந்த வீட்டில் இருக்க வேண்டிய, நான் தேடி வந்த நபர் ஒரு முருக பக்தர். சற்றே வில்லங்கமான ஆசாமி தான். அவருக்கு வள்ளி தெய்வானை போல இரண்டு மனைவிகள்; அதுவும் ஒரே வீட்டில் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். மூத்த சம்சாரம் சற்று குண்டாகவும் கருப்பாகவும், இளைய சம்சாரம் நல்ல ஒல்லியாகவும் சிகப்பாகவும் இருப்பார்கள்; 


ஒரே வீட்டில் அதுவும் இரண்டு சம்சாரங்களுடன் என்பதில் எனக்குப் பல நாட்களாக ஒரே வியப்பாகவே இருந்து வந்தது. அவரிடமே இதுபற்றி ஒருமுறை கேட்டு விட்டேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே “எல்லாம் அந்த முருகன் செயல், சாமி; அவன் ஆட்டுவித்தலுக்கு தகுந்தபடி நாம் ஆடுகிறோம்” என்று சொல்லி மழுப்பி விட்டார்.  நன்கு அறிமுகம் உள்ள அந்த வீட்டுக்காரர் எங்கே? என்று நான் கேட்டதும் வெளியூர் பயணம் சென்றிருப்பதாகச் சொல்லி, இந்த மாநிறமாக உள்ள புதிய பெண்மணி என்னிடம் ஏதோ சமாளிப்பதை என்னால் நன்கு உணர முடிந்தது; 


வீட்டில் உள்ள இவள் அவரின் மூத்த சம்சாரமோ அல்லது இளைய சம்சாரமோ இல்லை என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. அப்படியென்றால் புதுமுகமான இவள் யார்? ஆசை நாயகியா, கொழுந்தியாளா, அல்லது வீட்டுக்கு விருந்தாளியாக வந்துள்ள ஏதாவது உறவினரா என ஒன்றுமே புரியாமல், கேட்கவும் முடியாமல், நான் விடை பெற்று வரவேண்டியதானது;

நான்கு மணி நேரம் செலவழித்து, ஆட்டோவுக்கு சுளையாக ஐநூறு ரூபாய் தந்தது தான் மிச்சம். வெட்டி அலைச்சல். பேசாமல் தொலைபேசி மூலம் பேசி, விலாசம் வாங்கி, அஞ்சலில் அனுப்பியிருந்தால் கூட நூறு ரூபாய் செலவுடன் முடிந்திருக்கும்; 


என்ன செய்வது, மகன் கல்யாணம் என்பது, நீண்ட நாட்களுக்குப்பின் எனக்கு ஏற்படும் சந்தோஷமான ’முதல் அனுபவம்’ அல்லவா” என்று சொல்லி அவரின் ’அழைப்பு’ அனுபவங்கள் அத்தனையும், என்னுடன் கோயிலில் அன்றாடம் பகிர்ந்து கொண்டு மிகவும் ஜாலியாக உற்சாகமாகவே இருந்து வந்தார். 


கடந்த ஒரு மாதமாக இதுபோல அவரின் சுவையுடன் கூடிய அன்றாட அனுபவச் சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டியே, நான் அந்தக் கோயிலின், தனிமைப் பகுதியில் உள்ள சிறிய திண்ணைக்கு முன்கூட்டியே சென்று அவருக்கும் சேர்த்து இடம் போட்டு விடுவதுண்டு.  

அழைப்பிதழ் கொடுப்பதில் இவ்வளவு தொல்லைகள் இருப்பினும் நேரில் சென்று பலரையும் சந்தித்து, நேரில் அழைப்பிதழ் கொடுப்பது போல வருமா? என்று நினைத்துக் கொண்டவர், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாக தொடர்ந்து பயணப்பட்டு, பலருக்கும் அழைப்பிதழ்கள் வைக்க ஆவலுடன் சென்று வரலானார். 


தன்னுடன் வேலை பார்த்து தன்னைப்போலவே பணி ஓய்வு பெற்ற சக வயது நண்பர்களைச் சந்திப்பதிலும், அவர்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்வதிலும், அவருக்கு ஒரு தனி மகிழ்ச்சி இருக்கும் தானே!

திருமண நாளும் வந்தது. என்னை முதல் நாள் சாயங்காலமே நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை அழைப்பு முதலியவற்றிற்கே வந்து விடச் சொல்லியிருந்தார். முதல் நாள், வேறு ஒரு திருமண வைபவத்தில் நான் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், மறுநாள் காலையில், இவர் அழைத்தத் திருமண மண்டபத்தில் ஆஜராகி விட்டேன்.

திருமண மண்டபத்தில் ஒரே கூட்டம். அழைப்பிதழ் கிடைக்கப்பெற்ற அனைவரும் வந்திருந்தனர். வரவேற்பாளர்கள் நீட்டிய கல்கண்டு, சந்தனம், சர்க்கரை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். நானும் நுழைந்தேன். உள்ளே நுழையுமிடத்தில் பன்னீர் தெளித்ததோடு அல்லாமல், அருமையான ரோஜாப்பூக்கள் நறுமணத்துடன் கூடிய, சுகந்தமான காற்று நம் மீது சுழன்று அடிப்பதுபோல, செண்ட் ஸ்ப்ரேயர் அமைந்திருந்தது என் மனதை மயக்கியது.


உள்ளே மண்டபம் முழுவதுமே குளிர் சாதன வசதிகள் செய்யப்பட்டிருந்தது.   இருப்பினும் அங்கு கூடியுள்ள கும்பலால் மின்விசிறிக் காற்றும் தேவைபட்டது. என்னுடன் வந்தவர்கள் பலரும் சற்று நேரம் சுழலும் மின் விசிறிகளுக்குக் கீழே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்தனர். நானும் அமர்ந்தேன். 

பிறகு பலரும் விருந்து பரிமாறப்படுவது எங்கே எனக்கேட்டு அங்கு போய் வந்து கொண்டிருந்தனர். விருந்துண்டவர்களில் சிலர், தாங்கள் வந்த காரியம் அத்துடன் முடிந்து விட்டதாக நினைத்து, அவர்களுக்குள்ள அடுத்த அவசரக் காரியங்கள் காரணமாக மேடை ஏறினர். போட்டோ வீடியோக்களில் தங்களின் வரவைப் பதிவு செய்து கொண்டனர். ஏதேதோ அன்பளிப்புகள், மொய்ப்பணங்கள் என்று சிலர், புதுமண ஜோடியை சந்தித்து கொடுத்தால் நேரமாகிவிடும் என்று கணக்குப்போட்டு, வேறு யாரிடமோ பொறுப்பாக ஒப்படைத்துக் கொண்டிருந்தனர். 

புதுமணத் தம்பதியையோ, மற்ற உறவினர்களையோ வந்தவர்களுக்கு அதிக அறிமுகம் இல்லை. அவர்களுக்குள்ளேயே சிறுசிறு கும்பலாக அமர்ந்துகொண்டு, ஏதேதோ சிரித்துக்கொண்டும், ஊர் வம்புகள், அரசியல் முதலியன பேசிக்கொண்டும் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். 


பெரும்பாலான பெண்களின் பேச்சுக்கள் பொதுவாக அவர்களின் பட்டுப்புடவைகள், மேட்ச் ப்ளெளஸ், மின்னும் வைரத்தோடு மூக்குத்திகள், மற்ற நகைகள், நெக்லஸ்,  மற்றும் டி.வி. சீரியல்கள் பற்றியே இருந்து வந்தன. 


என்னை ஏதோ மிகவும் தெரிந்தது போல புதிதாக வருகை புரியும் ஒருசிலர், வணக்கம் கூறிச்சென்று கொண்டிருந்தனர்.  நானும் பதில் வணக்கம் தெரிவித்துக் கொண்டிருந்தேன். 

இருப்பினும், ஒரு மரியாதை நிமித்தமாக, பத்திரிகை அளித்து அழைத்த, அந்தப்பெரியவரை சந்திக்கவும், கை குலுக்கவும், “கல்யாணம் நல்லபடியாக முடிந்ததா? புதுமருமகள் வந்தாளா?” என விசாரித்து விட்டுக் கிளம்பவும் பெரும்பாலான ஆண்களின் கண்கள் அந்தப் பெரியவரையே தேடிக்கொண்டிருந்தன.

நானும் வந்ததிலிருந்து அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆளைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. மேடையில் இருப்பார் என்று பார்த்தேன். சம்பந்திகள் அறைகளில் இருப்பார் என்று பார்த்தேன். விருந்து உபசாரம் செய்யும் இடத்தில் இருப்பார் என்று பார்த்தேன். பாத்ரூம் பக்கம் எங்காவது போய் இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் இதுவரை அவர் என் கண்ணிலேயே படாதது எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது.


பொறுமை இழந்த நான் மெதுவாக மேடைக்குச்சென்று, என் நண்பரின் மனைவியிடம் போய், ”சார் எங்கே” என்றேன்.


”வாங்கோ, வாங்கோ, நல்ல நேரத்தில் தான் வந்திருக்கிறீங்க! இங்கே  மேடைக்குப்பின்னால் உள்ள மணமகன் அறையில் தான் இருக்கிறார். எங்க பிறந்தாத்து மனுஷ்யாளைக் கண்டாலே, உங்க சாருக்கு ரொம்பவும் இளக்காரமாகத்தான் உள்ளது; 


எனக்கு பிறந்தாத்து (பிறந்தாத்து = பிறந்தவீட்டு)  மனுஷான்னு இன்னித்தேதியிலே இருப்பது கருவேப்பிலை கொத்து போல ஒரே ஒரு அண்ணா, மன்னி (மன்னி = அண்ணி).  இருவருமே எங்க ஆத்துக்காரரை விட வயதில் பெரியவர்கள். ஊர் பூராவும் போய் அழைத்தாரே மனுஷன். எங்க அண்ணா மன்னியை நேரில் போய் அழைக்கணும்னு தோனலையே, இந்த மனுஷனுக்கு;


’எட்டாக்கையிலே இருக்கா, அதுனாலே தபாலிலே அழைப்பிதழ் அனுப்பி வைக்கிறேன், நீயும் நானும் போன் செய்து பேசிவிடுவோம்னு’ சொன்னார்;


எங்க அண்ணாவுக்கும் இவருக்கும் எப்போதுமே, எதிலேயுமே ஒத்துப்போகாது என்பதனால் நானும் சரியென்று தலையை ஆட்டிவிட்டேன். இப்போ எங்க அண்ணா நேரில் புறப்பட்டு வந்து கத்தோ கத்துன்னு கத்தறான்.


இரண்டு பேருக்கும் விடியற்காலையிலிருந்து ஒரே வாக்கு வாதம். தயவுசெய்து நீங்க போய் கொஞ்சம் சமாதானப்படுத்திக் கூட்டிண்டு வாங்கோ சீக்கரமா. எனக்கு இங்கே மேடையிலே பல காரியங்கள் அடுத்தடுத்து இருக்கு. சாஸ்திரிகள் வேறு காசி யாத்திரைக்கு நேரம் ஆச்சுன்னு பறக்க அடிக்கிறார், ஊஞ்சலுக்கு பச்சப்பொடி சுத்தணும், பாலும் பழமும் கொடுக்கணும், அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நான் பார்க்கணும். எனக்கு இப்போக் கையும் ஓடலே காலும் ஓடலே”  என்றாள் அந்த அம்மா.


நேராக நான் மணமகன் வீட்டாருக்கென்று ஒதுக்கப்பட்ட அந்த மேடை அருகே இருந்த ரூமுக்குள் போனேன். 


”என்ன ஸ்வாமி உம்மை எங்கேயுமே காணுமேன்னு தேடிண்டு இருக்கேன். இங்க என்ன பண்றேள்? ஆமாம் இந்த ஸார் யாரு?” என்றேன்.


”இந்த ஸார் தான், என் மச்சினர். மும்பையிலிருந்து என்னுடன் சண்டை போட மட்டுமே, ப்ளேன் பிடித்து வந்திருக்கிறார்; 


நீரே நியாயத்தைச் சொல்லும்;  நானும், இவர் தங்கையும் இப்போது இருக்கும் உடம்பு நிலையில், மும்பைக்கு நேரில் இவர் வீட்டுக்குப்போய் பத்திரிகை கொடுத்து அழைத்து வர முடியுமா?  


சொன்னால் புரிந்து கொள்ளாமல் மிகவும் கோபமாக இருக்கிறார். சுபகார்யங்கள் நல்லபடியாக அடுத்தடுத்து நடக்கணுமேன்னு எனக்கு ஒரே கவலையா இருக்கு” என்றார்.


அவரின் மச்சினர் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு சுவற்றைப் பார்த்தபடி, எங்கள் பக்கம் முதுகைக் காட்டியபடி அமர்ந்திருந்தார். கோபத்தின் உச்சக்கட்டம் போலிருக்கு. அதுவும் நன்மைக்கே என்று நினைத்த நான், என் நண்பரைப் பார்த்து, கண்ணடித்து விட்டு பேசலானேன்.


“என்ன இருந்தாலும் சொந்த மச்சினர். மனைவியோடு கூடப்பிறந்த அண்ணா. உம்ம பையனுக்கு, ஊஞ்சலுக்கு மாலை எடுத்துத் தரவேண்டிய சொந்தத் தாய் மாமா; அவர் சொல்வதில் என்ன தப்பு இருக்கு? 


இங்கே இருக்கிற மும்பைக்குப் போய் நேரில் அழைக்காமல் விட்டது நீர் செய்த மிகவும் பெரிய தப்பு ஸ்வாமி. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீரும். நீர் செய்தது மிகவும் அயோக்யத்தனம்; 


மனசு இருந்தால் நீங்களும் மாமியும் ப்ளேன் பிடித்துப்போய் ஒரே நாளில் அழைத்து விட்டுத் திரும்பியிருக்கலாம். மும்பை என்ன, வெளிநாடா! பாஸ்போர்ட் விசா எல்லாம் வாங்கணுமேன்னு கவலைப்படுவதற்கு. ப்ளேன் ஏறினால் இங்கிருந்து ஒரு மணி நேரப்பயணம். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நானே உங்களுடன் மும்பை வரை துணைக்கு கூட வந்திருப்பேன்; 


நான் மட்டும் உங்கள் மச்சினராக, இந்த ஸாரோட நிலைமையில் இருந்திருந்தால், நடக்கிறதே வேறு;  நேரில் வந்து அழைக்காத இந்தக் கல்யாணத்திற்கு வந்திருக்கவே மாட்டேன்;   ஏதோ இருந்து இருந்து இருப்பதே ஒரே ஒரு மறுமான் (மறுமான்=சகோதரியின் பிள்ளை) அவனுக்குக் கல்யாணம்; நாம் போய் கலந்து கொள்ளாவிட்டால் நன்றாக இருக்காது, என்று பெரிய மனசு பண்ணி, ஸார் வந்திருக்கிறார், தெரியுமா?” என்று சற்றே உரத்த குரலில் கூறினேன்.


இதைக்கேட்டதும், சுவற்றைப்பார்த்து உட்கார்ந்திருந்தவர் எழுந்து என்னை நோக்கினார். என்னிடம் வந்து என் கையைப் பிடித்துக் குலுக்கினார்.


உடனே நான் அவரிடம் “ஸார், உங்கள் தங்கைக்கும், இவருக்கும் முன்பு போல உடல்நிலை தெம்பாக இல்லை. டாக்டர் ஃபுல் ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்லியிருக்கிறார். மற்றபடி நேரில் வந்து “அழைப்பு” தரக்கூடாது என்ற எண்ணமெல்லாம் இவர்களுக்கு இல்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அவர்களை எனக்காகவாவது மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து விட்டேன்.  இதுபோன்ற நெருக்கடிகளில், டோட்டல் சரணாகதி ஒன்றுதான் கைகொடுக்கும் என்பது என்னுடைய அனுபவம்.


மனிதன் உடனே கோபம் தணிந்து, மனமிறங்கிப் போய் என்னை அப்படியே தூக்கி நிறுத்தி கட்டித் தழுவிக் கொண்டார். சரணாகதி அடைந்த விபீஷணனை ஸ்ரீராமர் கட்டித்தழுவிக்கொண்டார் என்பார்களே, அது போலத்தான் இதுவும். 


“போயும் போயும் இந்த என் தங்கை வீட்டுக்காரருக்கு நீங்கள் நண்பராக இருப்பினும், நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க! எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சுருக்கு ஸார்; அவருக்காக இல்லாவிட்டாலும், உங்களுக்காக மட்டுமே, நான் என்னை நேரில் வந்து அழைக்காததை, இந்த நிமிஷத்திலிருந்து பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. நான் இப்போது என்ன செய்யணும்னு சொல்லுங்கோ?” என்றார். 


”காசியாத்திரைக்கு கிளம்பப் பையனுக்கு பஞ்சக்கச்சம் கட்டிக்கொண்டு இருக்கார் சாஸ்திரிகள். சீக்கரம் வாங்கோ, தாய்மாமாவாகிய நீங்கள் தான் மாப்பிள்ளைப் பையனுக்கு, உங்கள் கையால் முதல் மாலைபோட்டு ஜம்முனு அலங்காரமெல்லாம் செய்து, குடை, தடி, விசிறி, புஸ்தக ஸஹிதம் அவனைக் கிளப்பிக் கூட்டிண்டு போய், அவன் நேராக காசிக்கே போய் விடாமல் தடுத்துக் கூட்டிவந்து, மாப்பிள்ளையும் பெண்ணும் மாலை மாற்றிக்கொள்ள மாலை எடுத்துக்கொடுத்து, பிறகு உங்கள் தோள் மேல் அவனை உட்கார வைத்துக் கொண்டு, குதித்து கும்மாளம் அடிக்கணும் ஸ்வாமி, உடனே என்னுடன் புறப்பட்டு வாரும்” என்றேன். 


இதைக்கேட்ட, என் நண்பரும், அவர் மச்சினரும் சிரித்த முகத்துடன், பசுவும் கன்றும் போல துள்ளிக்குதித்து,  ரூமை விட்டு,  என்னுடன் உடனே வெளியேறினர்.  இதைப்பார்த்த என் நண்பரின் மனைவிக்கு ஒரே சந்தோஷம். எனக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார்கள்.


கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. தன் மறுமானையும், அவன் பொண்டாட்டியையும், தேன் நிலவுக்கு மும்பைக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தார், என் நண்பரின் மைத்துனர். 


”அவர்கள் மட்டுமா நாங்களும் வருவோம்” என்றார் என் நண்பர். 


”அவசியம் வாங்கோ, ஆனா இப்போ வேண்டாம்; சின்னச்சிறுசுகள் தனியே தேன் நிலவுக்கு இப்போது வந்துட்டுப் போகட்டும்;


நீங்க ரெண்டு பேரும் ஒரு ஆறு மாதம் கழித்து வளைகாப்பு - ஸீமந்தம்ன்னு அழைப்பு கொடுக்க பத்திரிகையுடன் நேரிலே வாங்கோ, வரும்போது மறக்காம உங்க நண்பரையும் கூட்டிக்கொண்டு வாங்கோ” என்றார். 


எது எப்படியோ மீண்டும் என் நண்பருக்கு “அழைப்பு” என்ற பிரச்சனை தொடரத்தான் போகிறது என்று நினைத்து என் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். அவரின் ‘அழைப்பு’ தொடர்ந்தால் தானே எனக்கும் சுவாரஸ்யமான அனுபவக்கதைகள் கேட்க முடியும். 


நான் ஏதோ நடுவில் புகுந்து பஞ்சாயத்து பண்ணப்போய், மனஸ்தாபங்களை வளர்த்துக்கொண்டிருந்த இரு குடும்பங்களை சேர்த்து வைக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.




-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-

43 கருத்துகள்:

  1. //அவரின் ‘அழைப்பு’ தொடர்ந்தால் தானே எனக்கும் சுவாரஸ்யமான அனுபவக்கதைகள் கேட்க முடியும்.//

    எங்களுக்கும் அப்பொழுதுதானே இதைபோன்ற சுவாரஸ்யமான அனுபவக்கதைகளை உங்கள் எழுத்துக்களில் வாசிக்க முடியும் .அழைப்பு மிகவும் அருமையாக இருந்தது .

    பதிலளிநீக்கு
  2. கை கொடுங்கோ சார்.எப்பேர்ப்பட்ட உசந்த வேலை பண்ணி இருக்கீங்க.ஒரு குடும்பத்தை ஒண்ணு சேக்கறாப்பல உசத்தியான விஷம் வேறென்ன வேணும்?
    கலாட்டா கல்யாணமா ஆகிடாம கலகல கல்யாணமா மாத்தி எல்லாருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கீங்க.

    அந்த அனுபவத்தை நாங்களும் படிச்சு சந்தோஷப் பட்றாப்பல இதை பதிவாக்கித் தந்த உங்களுக்கு நன்றிகள்.
    இதைப் போல இன்னும் நண்பர் வீட்டு
    சீமந்த அழைப்பை பற்றியும் பதிவு போட்டு எங்களுக்கு சுவாரசியமான வாசிப்பைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. கன ஜோரா முடிச்சிட்டேள் போங்கோ?
    (அய்யர் பாஷை நேக்கும் தெரியுமாக்கும்.)
    சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான, சுவாரஸ்யமான அனுபவக் குறிப்பு. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. நண்பர் உங்களைப் பாராட்டியிருப்பார். ஆனாலும் மும்பைக்கு நேரில் சென்று அழைக்க வேண்டும் என்பது கொஞ்சம் பேராசைதான்!

    பதிலளிநீக்கு
  5. வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப்பார் -என்று சும்மாவா சொன்னார்கள்? பத்திரிகை அனுப்புகிற விதத்திற்கே, காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க நேரிடுகிற அளவுக்கு பிரச்சினைகள் எழுவது ஒரு புறமென்றால், முறைப்படி பத்திரிகை வைத்தும் அலட்சியம் செய்கிறவர்கள் மறுபுறம்! இந்த உலகத்தில்தான் எத்தனை முரண்பாடுகள்?

    அருமையாக ஆரம்பித்து, கோர்வையாகச் சொல்லி, முழுமையுடன் நிறைவு செய்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. எப்படியோ சமாதானம் பண்ணி ஒரு கல்யாணத்தையே நடத்திடீங்களே!!

    //அவரின் ‘அழைப்பு’ தொடர்ந்தால் தானே எனக்கும் சுவாரஸ்யமான அனுபவக்கதைகள் கேட்க முடியும்.//

    எங்களுக்கும் சுவரசியாமான கதைகள் படிக்க கிடைக்கும்.
    அருமையான கதை.நன்றி ஐயா பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  7. அவரின் அழைப்பு தொடர்ந்தால் உங்களுக்கும் எங்களுக்கும் நல்லது...

    டோட்டல் சரணாகதி.... சரியான விஷயம்....

    நல்ல அனுபவம் வைத்து நல்லதோர் சிறுகதை.....

    பதிலளிநீக்கு
  8. நேரில் அழைக்க மும்பைக்கு வரலைன்னு கோபமா?ஹா..ஹா...
    நல்லபடியா கோபத்தை தனித்து உறவுகளை சேர்த்துவிட்டீர்கள்.பேசி தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்லை.சுவாரஸ்யமாக இருந்தது.சுவையான கதைகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  9. சந்தர்ப்பத்தை நன்றாகக் கையாண்டிருக்கிறீர்கள்.

    இரண்டு குடும்பங்களும், புதுக் கல்யாண ஜோடியும் தங்களை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. உங்களுக்கு கிடைத்த அனுபவத்தால் எங்களுக்கும் நல்ல கதை படிக்க கிடைச்சுதே.

    பதிலளிநீக்கு
  11. Do such incidents - like the brother-in-law making a scene at the wedding hall - happen even in these modern days? I thought we have crossed those ages. Anyway, this is only a story - may not reflect the current trends, I guess. I must say the story is an entertaining read.

    பதிலளிநீக்கு
  12. தொலைதூரத்தில் முக்கியமான உறவுகள் இருப்பதன் சிக்கலை அருமையாக விவரித்துள்ளீர்கள் சார். எங்களுடைய உறவினர்கள் (நாத்தனார், கொழுந்தனார்) மும்பைவாசிகள்தான். இங்கே ஏதாவது விசேசம் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலிருந்துதான் வேலையே ஆரம்பிக்கும். இருந்தாலும் சில சமயங்களில் சரிவர கலந்து கொள்ளமுடியாமல் சிக்கலில் மாட்டிக் கொள்வோம்(அதுவும் இந்த தாய்மாமன் சிக்கல் இருக்கிறதே....) . கதையை உணர்வுபூர்வமாக என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. அருமையான கதை சார்.

    பதிலளிநீக்கு
  13. இதைக்கேட்டதும், சுவற்றைப்பார்த்து உட்கார்ந்திருந்தவர் எழுந்து என்னை நோக்கினார். என்னிடம் வந்து என் கையைப் பிடித்துக் குலுக்கினார்./

    அப்பா ... சந்தோஷம்..வந்ததே. வசந்தம் வந்து வாழ்த்துவதுபோல்...

    பதிலளிநீக்கு
  14. சுவற்றைப்பார்த்து உட்கார்ந்திருந்தவர் எழுந்து என்னை நோக்கினார். என்னிடம் வந்து என் கையைப் பிடித்துக் குலுக்கினார்.


    எத்தனை கோபத்தையும் சாந்தமாக்கும் சாமர்த்தியத்திற்கு தங்களுக்கு இணை வேறுயார்????

    பதிலளிநீக்கு
  15. நான் ஏதோ நடுவில் புகுந்து பஞ்சாயத்து பண்ணப்போய், மனஸ்தாபங்களை வளர்த்துக்கொண்டிருந்த இரு குடும்பங்களை சேர்த்து வைக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.


    பஞ்சாயத்துத் தலைவருக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  16. அழைப்பு’ தொடர்ந்தால் தானே எனக்கும் சுவாரஸ்யமான அனுபவக்கதைகள் கேட்க முடியும்.

    அழைப்பு தொடரவேண்டும் என்றென்றும்

    வாழ்க.வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. இரண்டு குடும்பங்களை நல்லவிதமாக பேசி சமாதானம் செய்து நல்ல காரியம் செய்துள்ளீர்கள்.

    இதனை எங்களுக்கும் ஒரு சுவையான கதையாக பகிர்ந்தமைக்கு நன்றி சார்.
    அடுத்து சீமந்த கதை தான்!!!!

    த.ம.8 இண்ட்லி 13.

    பதிலளிநீக்கு
  18. சுமூகமாக முடித்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  19. அந்த முசுடை சமாளித்த விதம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  20. மிக மிக அருமையான முடிவு சார்..ரசித்துப் படிச்சேன்.

    பதிலளிநீக்கு
  21. ஏதோ சம்பந்தி சண்டைதான் வரப் போறதுன்னு, சீட்டு நுனியில வந்து உட்கார்ந்த என்னை இப்படி ஏமாத்தி விட்டேளே, ஸார் இப்படி?

    பதிலளிநீக்கு
  22. தென்றல் போல தழுவிச் சென்ற
    மன்றல் வரைச் சென்று
    மகிழ முடிந்தது
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  23. நாடகமே உலகம்...நல்ல முடிவு..
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  24. முடிவு அருமை... நல்ல அனுபவத்தை கதையாக பகிர்ந்தமைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  25. என்னை ஏதோ மிகவும் தெரிந்தது போல புதிதாக வருகை புரியும் ஒருசிலர், வணக்கம் கூறிச்சென்று கொண்டிருந்தனர். நானும் பதில் வணக்கம் தெரிவித்துக் கொண்டிருந்தேன்

    அருமையான பதிவு.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  26. மற்றவர்களின் சந்தோஷத்திற்காக தன் சுய கெளரவத்தை விட்டுக்கொடுக்கும் மனது எத்தனை பேருக்கு சாத்தியப்படும்?

    அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  27. இந்த ’அழைப்பு’ சிறுகதையின் இரண்டாம் பகுதி வெளியீடு பற்றி என் நெருங்கிய நண்பர்களுக்குமே கூட, நான் வழக்கமாக அனுப்பிவைக்கும் மெயில் எதுவும் அனுப்பாமல் இருந்தும் கூட, தாங்களாகவே முன்வந்து கருத்துரைகள் கூறியுள்ள 27 பேர்களும் 27 நட்சத்திரங்களாக என் கண்களுக்கு ஜொலிக்கின்றீர்கள்.

    அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி, தொடர்ந்து உற்சாகம் கொடுத்து வரும் உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  28. சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.
    கல்யாணம் பண்ணிப் பார். உண்மையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் April 4, 2013 at 7:40 PM

      வாங்கோ, வணக்கம், நமஸ்காரம்.

      //சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.
      கல்யாணம் பண்ணிப் பார். உண்மையே.//

      மிக்க மகிழ்ச்சி மேடம். தங்களின் அன்பான வருகைக்கும், உண்மையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      “பொக்கிஷம்” தொடரின் பகுதி-6 வெளியிடப்பட்டுள்ளது. முதல் 5 பகுதிகளுக்கும் வருகை தந்து மகிழ்வளித்து உற்சாகப்படுத்தியுள்ளீர்கள்.

      ஆறாம் பகுதிக்கும் அவசியம் வாங்கோ. இணைப்பு இதோ:
      http://gopu1949.blogspot.in/2013/04/6.html

      அன்புடன்
      கோபு

      நீக்கு
  29. மாமனையும், மச்சானையும் ஒண்ணு கூட வெச்சிட்டீங்க. கல்யாணத்தையும் நல்ல படியா முடிக்க உதவி பண்ணிட்டீங்க. எப்பேர்ப்பட்ட உதவி.

    இப்பல்லாம் பரவாயில்லை. முக்கால்வாசி கல்யாணங்களும் FLAWLESS ஆ நடந்துடறது. நல்ல விஷயம் தானே.

    சில கல்யாணங்களிலதான் அங்க ஒண்ணு, இங்க ஒண்ணுன்னு சின்னச் சின்ன சண்டையெல்லாம் வருது.

    சுவாரசியம் குறையாத அருமையான சிறுகதை.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. உங்கவூட்டு நிக்கவுல யாரு எதுக்காக கோவப்படுவாங்கன்னே வெளங்கிகிட ஏலலியே.

    பதிலளிநீக்கு
  31. கல்யாண வீடுகளில் கலாட்டா பண்ணவே சிலர் தயாராக வருவார்கள்போல. உப்பு பெறாத விஷயங்களை ஊதி பெரிசு பண்ணிடுவாங்க. அதில் என்னதான் திருப்தியோ அவங்களுக்கு. வாஷிங்கடன் திருமணம் கதையில் சாவி அவர்களின் எழுத்துக்களைப்படிப்பது போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  32. ///நீங்க ரெண்டு பேரும் ஒரு ஆறு மாதம் கழித்து வளைகாப்பு - ஸீமந்தம்ன்னு அழைப்பு கொடுக்க பத்திரிகையுடன் நேரிலே வாங்கோ, வரும்போது மறக்காம உங்க நண்பரையும் கூட்டிக்கொண்டு வாங்கோ” என்றார். ///பஞ்சாயத்து தலைவராகவே ஆக்கிட்டாங்களா? உண்மை நட்புக்கு அடையாளாமாகவும் ஒரு காரக்டர்...அருமை.

    பதிலளிநீக்கு
  33. அழைப்பு கதை இரண்டு பகுதியையும் படித்தேன்.

    யாரை சமாதானப்படுத்தவேண்டுமோ, எப்படி நடந்தால் காரியம் நடக்குமோ அப்படி அந்த நண்பர் நடந்துகொண்டுள்ளார்.

    கதையின் நடை ஆற்றொழுக்குபோல இருந்தது. நெருடாமல் இருந்தது. இந்தக் கதையில் சுப முடிவுதான் சரியாக இருக்கும். வருத்த முடிவு நன்றாக இருக்காது. சண்டை/கோபம் எல்லாமே அந்த சுப நிகழ்வு நடந்தபின்பு தனியாக நடந்தால் தவறில்லை. சுப நிகழ்வின்போதே அதன் இனிமையைக் குலைப்பவர்கள் செய்தது எத்தனை நியாயமாக இருந்தாலும் அது இனிமை தராது, தீராத களங்கத்தை கோபம் காண்பித்தவர் ஏற்றுவிடுவார். நன்றாக எழுதியிருக்கீங்க. (அதே சமயம் என்னவிதமான சோக முடிவை நீங்கள் கொண்டுவந்திருப்பீர்கள் என்றும் யோசிக்கிறேன். ஒருவேளை, மணமகனே வந்து, 'மாமா இப்படி படுத்தறதுக்கு நீங்க வந்திருக்கவே வேண்டாம்' என்று சொல்லியிருப்பானோ? (சொல்லியிருந்தால் தப்பில்லை)

    பத்திரிகை - நேரில் அழைப்பது - இது எப்படி சாத்தியமாகும்? மிகுந்த கடினமான வேலை. ஒவ்வொருத்தரிடமும் போன் செய்து, அப்பாயின்ட்மென்ட் வாங்கி, அலைந்து திரிந்து இதனைச் செய்யவேண்டும். மிகுந்த கஷ்டம் கொடுக்கும்வேலை. அந்தக் காலம் என்றால், தகவல் தெரிவிப்பதற்காக நேரில் சென்று சொல்லவேண்டியிருந்தது, அதுவும் எல்லோரும் ஒரே அல்லது அருகருகே அமைந்த கிராமத்தில் வாழ்ந்ததால் சாத்தியப்பட்டது. இப்போதும் நேரில் பத்திரிகை கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது, திருமணத்துக்கு முன்னாலேயே, பெற்றோருக்கு தண்டனை கொடுப்பதுபோல் ஆகிவிடும்.

    இன்னொன்று, இப்போதைய காலத்தில், யாரேனும் வீட்டுக்கு வருவதே, இடைஞ்சலாக எல்லோரும் கருதும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு ஷெடியூல், வேலைகள், ரெஸ்ட் எடுக்கும் சமயம். முன் காலத்தைப் போல், உறவினர்கள்தான் முக்கியம், அவங்கள்ட பேசறதுதான் முக்கியம் என்று கருதும் வழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. எல்லோருக்கும், பார்க்கும் சீரியல், திரைப்பட நடிக/நடிகைகளின் பிரச்சனையைக் கண்டு வருந்தும் பாவப்படும் அளவு, உறவினர்களிடம் நட்பு இல்லை. காலத்தின் கோலம்தான்.

    "உங்கள் தோள் மேல் அவனை உட்கார வைத்துக் கொண்டு," - இன்று வேறு ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இடும்போது இதுவும் ஞாபகத்துக்கு வந்தது. பழைய வழக்கத்தை நாம் மாற்ற முயற்சிக்கவேண்டும் (சமுதாயப் பெரியவர்கள். 5 வயதில் அதாவது கன்னிகா தானம் என்பதை எப்படி மாற்றமுடிந்ததோ அதேபோல்). மாமன், வளர்ந்த கல்யாணப் பையனைத் தோளில் சுமந்துவிட்டு, நேராக ஆஸ்பத்திரிக்கு போகவேண்டியதுதான். நிறைய இடங்களில் பெண், பாவப்பட்ட தந்தை மடியில் இருந்து திருமணம் செய்யும்போது, தந்தை படும் அவதியையும் பார்க்கிறேன். "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் June 28, 2017 at 1:48 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அழைப்பு கதை இரண்டு பகுதியையும் படித்தேன். //

      மிக்க மகிழ்ச்சி.

      //யாரை சமாதானப்படுத்தவேண்டுமோ, எப்படி நடந்தால் காரியம் நடக்குமோ அப்படி அந்த நண்பர் நடந்துகொண்டுள்ளார். //

      சந்தோஷம்.

      //கதையின் நடை ஆற்றொழுக்குபோல இருந்தது. நெருடாமல் இருந்தது.//

      வெரி குட். மிக்க மகிழ்ச்சி.

      //இந்தக் கதையில் சுப முடிவுதான் சரியாக இருக்கும். வருத்த முடிவு நன்றாக இருக்காது. //

      நான் எழுதிய ஒரிஜினல் கதை சோகமான முடிவுடன் கூடியது. அந்த சோகமான முடிவுடனேயே, நான் வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்பு நூலிலும், அந்தக்குறிப்பிட்ட கதை அப்படியே பிரசுரம் ஆகியுள்ளது.

      //சண்டை/கோபம் எல்லாமே அந்த சுப நிகழ்வு நடந்தபின்பு தனியாக நடந்தால் தவறில்லை. சுப நிகழ்வின்போதே அதன் இனிமையைக் குலைப்பவர்கள் செய்தது எத்தனை நியாயமாக இருந்தாலும் அது இனிமை தராது, தீராத களங்கத்தை கோபம் காண்பித்தவர் ஏற்றுவிடுவார். நன்றாக எழுதியிருக்கீங்க. (அதே சமயம் என்னவிதமான சோக முடிவை நீங்கள் கொண்டுவந்திருப்பீர்கள் என்றும் யோசிக்கிறேன். ஒருவேளை, மணமகனே வந்து, 'மாமா இப்படி படுத்தறதுக்கு நீங்க வந்திருக்கவே வேண்டாம்' என்று சொல்லியிருப்பானோ? (சொல்லியிருந்தால் தப்பில்லை)//

      இல்லை. நான் குறிப்பிட்டிருந்த சோகம் அதுபோலெல்லாம் இல்லை. அதில் அந்த மாமாவின் வருகையோ படுத்தல்களோ எதுவுமே சுத்தமாகக் கிடையாது. முடிந்தால் உங்களுக்கு அதனைத் தேடிப்பிடித்து தனியாக அனுப்பி வைக்கிறேன்.

      //பத்திரிகை - நேரில் அழைப்பது - இது எப்படி சாத்தியமாகும்? மிகுந்த கடினமான வேலை. ஒவ்வொருத்தரிடமும் போன் செய்து, அப்பாயின்ட்மென்ட் வாங்கி, அலைந்து திரிந்து இதனைச் செய்யவேண்டும். மிகுந்த கஷ்டம் கொடுக்கும்வேலை. அந்தக் காலம் என்றால், தகவல் தெரிவிப்பதற்காக நேரில் சென்று சொல்லவேண்டியிருந்தது, அதுவும் எல்லோரும் ஒரே அல்லது அருகருகே அமைந்த கிராமத்தில் வாழ்ந்ததால் சாத்தியப்பட்டது. இப்போதும் நேரில் பத்திரிகை கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது, திருமணத்துக்கு முன்னாலேயே, பெற்றோருக்கு தண்டனை கொடுப்பதுபோல் ஆகிவிடும்.

      இன்னொன்று, இப்போதைய காலத்தில், யாரேனும் வீட்டுக்கு வருவதே, இடைஞ்சலாக எல்லோரும் கருதும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு ஷெடியூல், வேலைகள், ரெஸ்ட் எடுக்கும் சமயம். முன் காலத்தைப் போல், உறவினர்கள்தான் முக்கியம், அவங்கள்ட பேசறதுதான் முக்கியம் என்று கருதும் வழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. எல்லோருக்கும், பார்க்கும் சீரியல், திரைப்பட நடிக/நடிகைகளின் பிரச்சனையைக் கண்டு வருந்தும் பாவப்படும் அளவு, உறவினர்களிடம் நட்பு இல்லை. காலத்தின் கோலம்தான்.//

      அந்தக்கால வழக்கம் + எதிர்பார்ப்புகளுடன், இந்தக்கால நடைமுறைகள் + தவிர்ப்புகள் + உள்ளங்களின் தவிப்புகள் பற்றி நீங்களும் அருமையாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.

      //"உங்கள் தோள் மேல் அவனை உட்கார வைத்துக் கொண்டு," - இன்று வேறு ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இடும்போது இதுவும் ஞாபகத்துக்கு வந்தது. பழைய வழக்கத்தை நாம் மாற்ற முயற்சிக்கவேண்டும் (சமுதாயப் பெரியவர்கள். 5 வயதில் அதாவது கன்னிகா தானம் என்பதை எப்படி மாற்றமுடிந்ததோ அதேபோல்). மாமன், வளர்ந்த கல்யாணப் பையனைத் தோளில் சுமந்துவிட்டு, நேராக ஆஸ்பத்திரிக்கு போகவேண்டியதுதான்.//

      நான் இதுவரை என் இரு அக்கா குழந்தைகளான மொத்தம் 12 பேர்களில் 11 பேர்களை தோளில் தூக்கியுள்ளேன். (ஒருவனுக்கு 40+ வயது ஆகியும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை).

      எனக்கு பால்ய வயதாக இருந்தபோது, முதலில் திருமணம் ஆன 5-6 பேர்களைத் தூக்க எனக்கு சிரமமாக இல்லை. ஒண்டியாகவே தூக்கியுள்ளேன். அதன்பின் சற்றே என் உடல் தளர்ச்சியாலும், ஒரு வேளை (பட்டாடைகள்) என் தோளில் வழுக்கிக் கீழே போட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தாலும், என் அக்கா பிள்ளைகள் + என் பிள்ளைகள் என ஒரு சிலரை என் அருகில், எனக்கு ஹெல்ப் செய்ய நான் ஏற்பாடு செய்து வைத்துக்கொண்டதும் உண்டு.

      //நிறைய இடங்களில் பெண், பாவப்பட்ட தந்தை மடியில் இருந்து திருமணம் செய்யும்போது, தந்தை படும் அவதியையும் பார்க்கிறேன்.//

      இதை நானும் பார்த்துள்ளேன். அதுவும் தந்தை ’கதிர்’ போல ஒல்லியாகவும், பெண் ’குதிர்’ போல குண்டாகவும் இருந்தால் போச்சு.

      ‘ஐயா கதிரு .... அம்மா குதிரு’ என வேடிக்கையாகச் சிலர் சொல்வதும் உண்டு.

      //"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" அல்லவா?//

      இன்றைய சூழ்நிலைக்குத் தகுந்தபடி நாமும் சிலவற்றை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். அதுதான் நல்லது.

      தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு