மனசுக்குள் மத்தாப்பூ
சிறுகதை [ பகுதி 3 of 4 ]
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
பகுதி 1 of 4 படிக்க: http://gopu1949.blogspot.com/2011/10/1-of-4.html
பகுதி 2 of 4 படிக்க: http://gopu1949.blogspot.com/2011/10/2-of-4.html
முன்கதை முடிந்த இடம்:
அனுவின் இடுப்பு மடிப்புகளில் பனித்துளிகள் படர்வதையும், சிறிய பட்டாம்பூச்சியொன்று அவளின் முதுகுப்புறம் தேன் தேடி மேய்வதையும், மிகுந்த ஆர்வத்துடன் பைனாக்குலரில் ரசித்து மகிழ்ந்தான் மனோ.
அந்த மிகச்சிறிய அழகிய பட்டாம்பூச்சிக்கு அனுவை நெருங்கி முத்தமிடக் கிடைத்துள்ள வாய்ப்பு தனக்குக் கிடைக்க வில்லையே என்று, அதன் மேல் பொறாமை ஏற்பட்டது, மனோவுக்கு.
============================
அழகிய அந்த முழுநிலவுக்குள் இப்படியொரு களங்கமா? மனோவுக்கு மனதை நெருடியது. இறைவனின் படைப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கே அனைத்துத் திறமைகளும் அபரிமிதமாக அளிக்கப்பட்டிருக்கும் என்பதை அவளின் கோலப் படைப்புக்களில் காட்டப்படும் தனித்திறமையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது என நினைத்துக்கொண்டான்.
இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டதிலிருந்து, அனு மேல் அவனுக்கு ஏற்கனவே இருந்து வந்த ஈடுபாடு சற்றும் குறையாமல், அதிகரிக்கவே செய்தது. அவளைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்த மனோவுக்கு, தன் அறையின் வெளியே யாரோ அழைப்பு மணி அடிப்பது கேட்டது. ஓடிச்சென்று கதவைத் திறந்தான் மனோ. அறையின் வெளியே, வீட்டின் சொந்தக்காரரான அனுவின் அம்மா தான் நின்று கொண்டிருந்தார்கள்.
“வாங்கம்மா! என்ன இவ்வளவு தூரம், மாடி ஏறி நீங்களே வந்துட்டீங்க! ஒரு குரல் கூப்பிட்டிருந்தால் நானே வாடகைப் பணத்துடன் கீழே ஓடி வந்திருப்பேனே” என்று சொல்லி அங்கிருந்த நாற்காலியை மின் விசிறிக்குக்கீழே போட்டு, அவர்களை அமரச்சொல்லி, மின் விசிறியையும் சுழலவிட்டான், மனோ.
”தம்பி, நான் வாடகைப்பணம் வசூல் செய்ய வரவில்லை. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே, நீங்க டூடிக்குப்போக வேண்டியிருக்குமா அல்லது விடுமுறையா எனக் கேட்டுட்டுப் போகலாம்னு தான் நான் வந்தேன்” என்றாள்.
“டூட்டிக்குப் போகணும்னு கட்டாயம் ஏதும் இல்லை. பொழுது போக்கா இருக்கட்டுமே என்று நானாகத்தான் ஞாயிற்றுக்கிழமைகளில் போய் வருவது வழக்கம். சொல்லுங்கம்மா, நான் ஏதாவது உங்களுக்கு உதவி செய்யணுமா?” மனோ மிகுந்த ஆவலுடன் கேட்டான். அவனின் அன்புக்குரிய அனுவின் அம்மா அல்லவா அவர்கள்!
“ஆமாம் தம்பி, நம்ம வீட்டுப்பொண்ணு அனுவை பொண்ணு பார்க்க பட்டணத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருகிறாங்க. எங்க வீட்டுக்காரர் போய்ச் சேர்ந்ததிலிருந்து, ஆம்பளைத்துணை இல்லாத வீடாப்போச்சு. நீங்க கொஞ்சம் அவங்க வந்து போற சமயம் மட்டும், நாளை காலை பத்து மணி சுமாருக்கு நம்ம வீட்டுக்கு வந்து கூடமாட பேச்சுத்துணையா இருந்துட்டுப்போனீங்கன்னா, எங்களுக்கும் கொஞ்சம் தைர்யமா இருக்கும்” என்றாள்.
இதைக்கேட்ட மனோவுக்கு ஒரு பக்கம் ஆச்சர்யமாகவும், மறுபக்கம் ஒருவித அதிர்ச்சியாகவும் இருந்தது.
“ரொம்ப சந்தோஷமான சமாசாரம் தான் அம்மா. மாப்பிள்ளைப் பையன் என்ன செய்கிறார்? நம் அனுவைப்பற்றி எல்லாம் விபரமாகச் சொல்லி விட்டீர்களா?” மனோ மிகுந்த அக்கறையுடன் வினவினான்.
“சென்னையில் ஏதோ பிஸினஸ் பண்ணுகிறாராம். பணம் காசுக்கு ஒண்ணும் பஞ்சமில்லையாம். கல்யாணத் தரகர் ஒருவர் மூலம் தான் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது;
நீங்க தான் தம்பி நேரில் வந்து பேசி முழு விபரம் கேட்டு, நல்லது கெட்டது பற்றி விசாரித்துச் சொல்லணும். நல்லபடியா முடிஞ்சு, நல்ல இடமாக இருக்கணுமேன்னு ஒரே விசாரமாக இருக்கிறது” என்றாள்.
”சரிம்மா, நீங்க கவலைப்படாம போங்க. நான் நாளைக்கு காலையிலேயே சரியா பத்து மணிக்கு முன்னாடியே வந்துடறேன்” என்று சொல்லி டார்ச் அடித்து கீழே கடைசிபடி வரை சென்று வழியனுப்பி வைத்தான், மனோ.
மனோ ஓட்டலுக்குச் சென்று வழக்கம்போல் இரவு உணவருந்தி விட்டு தன் அறைக்கு திரும்ப வந்து படுத்தும், தூக்கமே வரவில்லை. நெடுநேரம் புத்தகங்கள் படித்தும் எதுவுமே மனதில் பதியவில்லை. பிறகு நள்ளிரவுக்கு மேல் ஒரு வழியாகத் தூங்கிப்போனான்.
அதிகாலையில் வழக்கம்போல் தன் பைனாக்குலரில் அனுவையும், அவள் போடும் கோலத்தையும் தரிஸிக்க ரெடியாகி விட்டான். இன்று அவனால் எப்போதும் போல இயல்பாக அனுவையும், அவள் போடும் கோலத்தையும் ரசிக்க முடியவில்லை.
அனுவைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எத்தனை நாட்களுக்கோ? விரைவில் கல்யாணம் ஆகிச் சென்று விடப்போகிறவள். மெளன மொழி பேசும் அவளுக்கு, அவள் மனதைப்புரிந்து கொள்ளும் கலகலப்பான கணவன் அமைந்து, அவளையும் கலகலப்பாக சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும், என மனதிற்குள் பிரார்த்தித்தான்.
தன்னை இன்று பெண் பார்க்க வருகிறார்கள் என்ற சந்தோஷத்தில், குனிந்த நிலையில் பூமித்தாயைக் குளிப்பாட்டி, மேக்-அப் செய்வது போல், அழகிய தன் கையின் பிஞ்சு விரல்களால் பொட்டு வைத்து, கோலமிட்டு, கலர் கலரான ஆடைகள் அணிவித்து, பறங்கிப்பூக்களை சூடி மகிழ்கின்றாள் அனு. தன் வீட்டுப் பக்கத்திலிருந்து, நடு ரோட்டுப்பக்கம் போய் அமர்ந்து ஆங்காங்கே [ பூமித்தாயின் உடலில் ] கோலத்தில் டச்-அப் வேறு செய்கிறாள்.
அவள் வீட்டுக்கு நேர் எதிர்புறம் உள்ள செடி கொடிகள் மண்டிக்கிடக்கும் பகுதியிலிருந்து சுமார் ஐந்தடி நீளமுள்ள கருநாகப்பாம்பு ஒன்று வேகமாக அவளின் முதுகுப்புறம் நோக்கி சரசரவென்று வந்து கொண்டிருப்பதை மனோ தன் பைனாக்குலர் மூலம் பார்த்து விட்டான்.
அவளின் முதுகுப்புறம் வந்த அந்த பாம்பு அவளைத் தீண்டாமலும், கோலத்தைத்தாண்டாமலும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல படம் எடுத்து ஆட ஆரம்பித்தது.
இதைப்பார்த்து விட்ட மனோவுக்கு பதட்டம் அதிகரித்து, தன் பைனாகுலரை வீசிவிட்டு, வேகமாக மாடியிலிருந்து கீழே ஓடோடி வருகிறான்.
அனுவின் பக்க வாட்டில் நெருங்கிய அவன், அவளை அப்படியே அலாக்காகத்தூக்கிச் சென்று, அவள் வீட்டு வாசல் பக்கம் நின்று அவளை அப்படியே திருப்பி, படமெடுக்கும் அந்தப் பாம்பைப் பார்க்கச் செய்கிறான்.
திடீரென்று ஒரு வாலிபன் தன்னைக் கட்டிப்பிடித்து தூக்கி விட்டதையும், எதிரில் தன்னை ஒரு கருநாகம் தீண்ட இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்த அனு, வாழ்க்கையில் முதன் முதலாக தன் வாய் திறந்து “அம்மா” என்று அலறிக் கத்திவிட்டாள்.
அவளை அது சமயம் வாய் திறந்து பேச உதவிய அந்தப் பாம்பும், தான் வந்த வேலை முடிந்து விட்டது என்பது போல தான் வந்த வழியே திரும்பிச்சென்று, எதிர்புறம் இருந்த செடி கொடிகளுடனான புதர் பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டது.
டாக்டர் மனோவுக்கு அந்தக் கடிக்க வந்த பாம்பை விட, இதுவரை வாய் பேசாத அனு, தன் வாய் திறந்து ”அம்மா” என்று அலறியதில் அதிர்ச்சியாகி அவனும் “அ..ய்..ய்..ய்..யோ” என அவளைப் பார்த்து கத்திவிட்டான்.
காலை வேளையில் இவர்கள் எழுப்பிய சத்தத்தில் ஊரே கூடி நின்று விட்டது.
நம்ம ஊரு வயசுப்பொண்ணு ஒருத்தியை, அதுவும் வாய் பேசமுடியாத ஒரு அப்பாவிப் பெண்ணை, எங்கிருந்தோ வந்த இவன் கட்டிப்பிடித்துத் தூக்கி விட்டான். இந்த அயோக்யனை சும்மா விடக்கூடாது. கட்டிப்போட்டு உதைக்க வேண்டும் என அந்த ஊர்ப் பஞ்சாயத்தில் முடிவு ஆனது.
மனோவுக்கு மிகவும் அவமானமாகி விட்டது. அழுகையாக வந்தது. கீழ் வீட்டு, அனுவின் அம்மா, மனோவைப் பார்த்த பார்வையே, அவனை அப்படியே சுட்டெரிப்பது போல இருந்தது.
தொடரும்


