என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 17 நவம்பர், 2011

அழகு நிலையம்


அழகு நிலையம்

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

நீண்ட நாட்களாக வடக்கேயே வேலை பார்த்து வந்த நமச்சிவாயத்திற்கு, ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளரான பதவி உயர்வுடன், சொந்த ஊருக்கே மாற்றலும் ஆகிவிட்டது.

சுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கே வந்துள்ள அவருக்கு, ஊரில் ஏற்பட்டுள்ள பலவித மாற்றங்கள் அதிசயமாக இருந்தன. புதிய பலமாடிக்கட்டடங்கள், வணிக வளாகங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், போக்குவரத்து நெருக்கடிகள், புதிய பேருந்து நிலையங்கள், மக்கட்தொகைக்குப் போட்டிபோட்டு பெருகியுள்ள வாகனங்கள். மொத்தத்தில் அமைதியாகவும் சற்றே சோம்பேறித்தனமாகவும் இருந்த அந்த ஊர், ஆரவாரமாகவும் சுறுசுறுப்பாகவும் மாறியுள்ளது.

அவர் அந்தக்காலத்தில் வழக்கமாக சம்மர் க்ராப் அடித்துக்கொள்ளச் செல்லும் “அழகு நிலையம்” என்ற முடி திருத்தும் கடை மட்டும் அப்படியே கொஞ்சம் கூட மாறாமல் அதே மங்கிய போர்டுடன் ”அழகு நிலையம் - உரிமையாளர்: ‘பங்காரு” எனக் காட்சியளித்தது.











சுழலும் நாற்காலிகளில் நால்வர் அமர்ந்திருக்க, இவர் மட்டும் வெயிட்டிங் லிஸ்ட் நம்பர் ஒன்றாக, அங்கிருந்த சற்றே ஆடும் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து செய்தித்தாள்களைப் புரட்டிக்கொண்டிருந்தார்.


கட்டிங் + ஷேவிங் முடிந்த ஒருவர் நல்ல சுகமான தூக்கத்தில் இருந்தார். அவர் முகத்தில் தண்ணீரால் ஸ்ப்ரே செய்யப்பட்டு, டர்க்கி டவலால் முகம் ஒத்தப்பட்டு, பிறகு ஸ்நோவும் பவுடரும் அடிக்கப்பட்டு எழுப்பி விடப்பட்டதால் மிகவும் கஷ்டப்பட்டு எழுந்திருந்தார். 


[பார்பர் ஷாப்பில், நம்முடைய நல்ல சுகமான தூக்கத்தைக் கலைக்காமல் அந்த நாவிதர் ஏதாவது நம் தலையிலும் முகத்திலும் மாற்றி மாற்றி, சீப்பு, கத்தி, கத்தரியால் ஏதாவது கைவேலைகள் மணிக்கணக்காகச் செய்து கொண்டே இருந்தால் தேவலாமே;  அந்த சுகமே தனி தானே; அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாதே;  அதற்கு எவ்வளவு ஆயிரககணக்கில் பணம் கேட்டாலும் கூட கொடுத்து விடலாமே என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வது உண்டு. அந்த சுகம் பற்றி அனுபவித்தவர்களுக்கே புரியும்; அனைவருக்கும் தெரிய நியாயமில்லை;அதனால் கதைக்குத் திரும்புவோம்] 


தலைக்கு மேல் இருந்த தலையாய வேலை முடிந்து எழுந்து சென்றவர் அமர்ந்திருந்த சுழல் நாற்காலியை கைத்துண்டால் நாலு தட்டு தட்டிவிட்டு, “சார் நீங்க வரலாம்” என்று அழைத்த அந்த முடிதிருத்தும் தொழிலாளியை உற்றுப் பார்த்த நமச்சிவாயத்திற்கு, அவரை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்துப் பழகிய முகம் போலத் தோன்றியது. 


”சார், கட்டிங்கா, ஷேவிங்கா அல்லது இரண்டுமா” என்று கேட்டவாறே நமச்சிவாயத்தைச் சுழல் நாற்காலியில் அமர வைத்து, மடித்து வைத்திருந்த ஒரு வெள்ளைத்துணியை உதறி,  பொன்னாடை போல அவருக்குப் போர்த்தி, கழுத்தில் சற்றே இடைவெளி கொடுத்து சொருகி விட்டான், அந்தத் தொழிலாளி.


”கட்டிங் + ஷேவிங் இரண்டுமே தான்” என்றார் நமச்சிவாயம்.


வெகு அழகாக முடி வெட்டப்பட்டு, மையாக அரைத்த பருப்புத்தொகையல் போல, பளிச்சென்று வழுவழுப்பாக ஷேவிங் செய்யப்பட்ட முகத்துடன், நமச்சிவாயம் ஒரு பத்து வயது குறைந்தது போலக் காணப்பட்டார். 


அங்கிருந்த கட்டண விபர அட்டைப்படி கட்டிங்+ஷேவிங் ஐம்பது ரூபாய் என்று போட்டிருந்தும், வடக்கே உள்ள ஊர்களைவிட இது மிகவும் மலிவு என்று எண்ணிய நமச்சிவாயம், பத்து ரூபாய் டிப்ஸ் சேர்த்து சலவை நோட்டுக்களாக ஆறு பத்து ரூபாய் நோட்டுக்களை அவனிடம் கொடுத்தார்.


“ரொம்ப தாங்க்ஸ் சார்” என்று ஒரு கும்பிடு போட்டு வாங்கிக்கொண்டவன், ”நீங்க இந்த ஊருக்குப் புதுசா, சார்?  உங்களை இதற்கு முன்பு நான் எங்கேயோ பார்த்தாற்போல உள்ளது, சார்” என்றான், அந்த முடி திருத்தும் தொழிலாளி.


”எனக்கும் உன்னைப் பார்த்ததும் அது போலத்தானப்பா தோன்றியது. இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன் தான் நான். முப்பது வருடங்களுக்கு முன்பு இதே ஊரில் தான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு சென்னைக்குச் சென்று கல்லூரிப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு உத்யோக விஷயமாக வடக்கே பல ஊர்களில் பணியாற்றிவிட்டு , இப்போது திரும்ப இந்த ஊருக்கே, பணிமாற்றமாகி வந்துள்ளேன்” என்றார்.


’எந்த ஸ்கூலில் படித்தீர்கள் சார்” என்றதும் நமச்சிவாயம் தான் பதினோராவது வகுப்பு படித்த பள்ளியின் பெயரைச்சொல்லி, படித்து முடித்த வருஷத்தையும் சொன்னதும், “அப்போ உங்க பெயர் நமச்சிவாயம் தானே?” என்று கேட்டு தன் வலது முழங்கையைத் திருப்பிக்காட்டினான், அந்தத் தொழிலாளி.  ஆழமாகப் பல் பதிந்திருந்த தழும்பு ஒன்று அங்கு காணப்பட்டது. 


”டேய் அப்போ நீ ராஜப்பாவாடா?; ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி ஆகிவிட்டாயேடா; என்று சொல்லி அவனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டு விட்டார் நமச்சிவாயம். 


பள்ளியில் படிக்கும் போது நமச்சிவாயத்தை விட ராஜப்பா அதிக மதிப்பெண்கள் பெற்று வகுப்பிலேயே முதல் மாணவனாகத் திகழ்ந்தவன். அவனுடைய கெயெழுத்து மணிமணியாக அழகாக இருக்கும். அழகாக ஓவியம் வரையும் திறமையும் அவனுக்கு உண்டு. விஞ்ஞான பாடத்தில் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும் என்றால் மிக அழகாக வரைந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றிடுவான். 


எந்த ஒரு வேலையையும் முழுமையாகத் தெளிவாகத் தப்பேதும் இல்லாமல், அழகாக நேர்த்தியாக விரைவாகச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவன். ஆசிரியர்கள் அனைவருக்குமே அவனை மிகவும் பிடிக்கும். நமச்சிவாயத்திற்கு அந்த நாட்களில் முதன் முதலாக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்த குருநாதரும் இதே ராஜப்பா தான்.


ராஜப்பாவும் நமச்சிவாயமும் ஆறாம் வகுப்பிலிருந்து பதினோறாம் வகுப்பு வரை, ஒரே வகுப்பறையில் ஒன்றாகவே பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்து படித்த ஆருயிர் நண்பர்கள்.


ஆறாவது படிக்கும் போது ஏதோ அவர்களுக்குள் ஏற்பட்ட விளையாட்டுச் சண்டையில், நமச்சிவாயம் ராஜப்பாவின் முழங்கைப்பக்கம்,தன் பல் பதியுமாறு நன்றாகக் கடித்து விட்டார்.


ஒருவருக்கொருவர் பழைய மலரும் நினைவுகளில் மூழ்கி, கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்து கொண்டு, பிறகு அந்த அழகு நிலையத்தில் அனைவரும் தங்களையே பார்க்கின்றனர் என்பதை அறிந்து இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள்.


”நீ என்னடா இந்தத் தொழிலுக்கு வந்து விட்டாய்? மேற்கொண்டு படித்து வேறு ஏதாவது நல்ல வேலைக்குப் போய் இருப்பாய் என்றல்லவா நினைத்தேன்” என்று பரிவுடன் கேட்டார் நமச்சிவாயம்.


ராஜப்பா ஸ்கூல் படிப்பு முடிந்ததும் தனக்கு ஏற்பட்ட, தன் தந்தையின் திடீர் மறைவையும், குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டிய நிர்பந்தங்களையும், மிகவும் கஷ்டமான பொருளாதார சூழ்நிலைகளையும் எடுத்துக்கூறினான்.


மேற்கொண்டு படிப்பைத்தொடர முடியாமல் போய் விட்டதையும் விளக்கினான். தானும் பலவிதமான வேலை வாய்ப்புக்களுக்கு முயற்சித்து, எதுவும் பலனின்றி, கடைசியில் தங்கள் பரம்பரையின் குலத்தொழிலாகிய இந்த முடி வெட்டும் தொழிலில் இறங்கியதில், அதுதான் இன்றுவரை ஏதோ தன் வயிற்றுப் பிழைப்புக்கு வழிகாட்டி வருவதாகச் சொன்னான்.


இப்போது நோய் வாய்ப்பட்டுள்ள இந்தக் கடையின் முதலாளி பங்காரு அவர்களும், இந்தக் கடையை யாரிடமாவது விற்றுவிட முடிவு செய்து, முயற்சித்து வருவதாகவும், அவ்வாறு அவர் ஒருவேளை செய்து விட்டால், தான் பார்த்துவரும் இந்தத் தொழிலுக்கும் ஆபத்து வரலாம் என்றும் அது தான் தனக்கு இப்போதுள்ள மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது என்று, தன் வருத்தத்தை ராஜப்பா நமச்சிவாயத்திடம் பகிர்ந்து கொண்டான்.


அந்தக்கால பள்ளித் தோழன். பால்ய வயதில் தன் ஆருயிர் நண்பன். தனக்கு சைக்கிள் கற்றுக்கொடுத்த குரு, இவ்வாறு தன் கஷ்ட நிலைமையை எடுத்துக்கூறியதும், நமச்சிவாயம் அவன் மேல் இரக்கம் கொண்டு ஏதாவது அவனுக்கு உதவி செய்திட விரும்பினார். 


மறுநாள் தன்னை தன் அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு கூறி, தன் விசிடிங் கார்டு ஒன்றை அவனிடம் கொடுத்து விட்டு, விடைபெற்றுச் சென்றார்.


மறுநாள் அந்த குளுகுளு ஏ.ஸீ. அறைக்குள் நுழைந்த ராஜப்பா பிரமித்துப்போய் விட்டான். 


ஜி. நமச்சிவாயம், சீஃப் மேனேஜர் என்று அழகிய பெயர் பலகை; சிம்மாசனம் போன்ற இருக்கை. படுத்துப் புரளலாம் போல ஒரு மிகப்பெரிய மேஜை; காலிங்பெல் பட்டனை அழுத்தினால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நிற்கும் எடுபிடி ஆட்கள்;  கால்வாசி மேஜைக்கு மேல் பல வண்ணங்களில், புத்தம் புது மாடல்களில் நிறைய தொலைபேசி இணைப்புகள்; அழகிய பூப்போட்ட வண்ணத்திரை சீலைகள்; கண்ணுக்கு ரம்யமான பல பூந்தொட்டிகள், கலர் கலராக மிதந்து வரும் அழகான மீன்களுடன் கூடிய மீன் தொட்டிகள்.  தன்னுடன் ஒரே வகுப்பில் படித்த தன் நண்பர் நமச்சிவாயத்தின் இன்றைய நிலைமையையும்,உயர்ந்த மரியாதைக்குரிய சமூக அந்தஸ்தையும் நினைத்து மிகவும் பெருமைப்பட்டான், ராஜப்பா.


தயங்கி நின்ற அவனை, தானே தன் சீட்டிலிருந்து எழுந்து போய், கைகுலுக்கி வரவேற்று, அங்கிருந்த கும்மென்ற பந்தாவான சோபாவில் அமரச்செய்து, தானும் அவனுடன் மிக நெருக்கமாக அமர்ந்துகொண்டு, இரண்டு ஆப்பிள் ஜூஸ் கொண்டுவருமாறு ஆர்டர் செய்தார், நமச்சிவாயம்.


நமச்சிவாயம் அளித்த வங்கிக்கடன் உதவி மூலம், அந்த அழகு நிலையம் ராஜாப்பாவுக்கே சொந்தமாக்கப்பட்டது. அந்தக்கடை மிகவும் நவீனப் படுத்தப்பட்டது. விஸ்தரிக்கப்பட்டது. குளிர் சாதன வசதிகள் செய்யப்பட்டன. சுத்தம் மற்றும் சுகாதாரம் கடைபிடிக்கப்பட்டது. மேலும் ஒரு சில தொழில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அந்தக்கடையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. கலர் டீ.வி. பொருத்தப்பட்டது. தொலைபேசி இணைப்பும் வாங்கப்பட்டது. 


”முடி வெட்டிக்கொள்ள நினைப்போர் முன் பதிவு செய்து கொள்ளலாம் - தொடர்புக்கு தொலைபேசி எண்:  .............................. குறித்த நேரத்தில் காலதாமதமின்றி சேவை செய்து அனுப்பப்படும்”  என்று விளம்பரப் படுத்தப்பட்டது.


வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயத்தினால் கடையின் திறப்பு விழா நடைபெற்றது.


நமச்சிவாயத்தின் ஆருயிர் நண்பனான ராஜப்பா இப்போது அந்தக் கடையின் முழு உரிமையாளராக ஆக்கப்பட்டிருந்தார்.  நேர தாமதம் முற்றிலும் தவிர்க்கப்பட்டு, சிறந்த சேவை அளிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள்  அந்தக்கடைக்கே சென்று தங்கள் ஆதரவைத் தொடர்ந்து அளித்து வந்தனர். 








“செய்யும் தொழிலே தெய்வம் - அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்” என்று நினைத்து, உண்மையாக உழைத்து வந்த ராஜப்பாவை, தெய்வம் கை விடவே இல்லை. நமச்சிவாயம் என்ற நண்பர் ரூபத்தில் வந்து கை தூக்கி விட்டுள்ளது.


நேர்மை, நாணயம், நம்பிக்கை மற்றும் சேவை மனப்பான்மையுடன் துவங்கும் எந்தத்தொழிலும் மேன்மையுடன் விளங்கும் என்பதே உண்மை என்பதற்கு இந்த “அழகு நிலையம்” சாட்சியல்லவா!




-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-






இந்தச் சிறுக்தை ’வல்லமை’ மின் இதழில்
15.11.2011 அன்று வெளியிடப்பட்டுள்ளது
Ref: http://www.vallamai.com/archives/10415/



புதன், 16 நவம்பர், 2011

பகற்கொள்ளை




பகற்கொள்ளை

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-






கப்பல் போன்ற அந்த ஏ.ஸீ. கார், காட்டுப்பாதையில் தடுத்து நிறுத்தப்பட்டது. தெருவின் குறுக்கே மூன்று மோட்டார் பைக்குகள். காரைச் சுற்றிலும் முகமூடி அணிந்த ஆறு இளைஞர்கள்.


கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித நடமாட்டமோ, வீடுகளோ, வாகனப் போக்குவரத்துக்களோ ஏதுமின்றி சாலை முழுவதும் சுத்தமாக இருந்தது.


ஒருவன் டிரைவரின் கழுத்தருகே கத்தியை நெறுக்கிப்பிடிக்க, மேலும் இருவர், மாலையும் கழுத்துமாக வண்டியின் பின்புறம் அமர்ந்திருந்த புதுமணத் தம்பதியினரின் அனைத்து நகைகளையும் கழட்டச்சொல்லி, கைகளில் பளபளக்கும் கத்திகளுடன் மிரட்டிக் கொண்டிருந்தனர்.


விபரீதத்தின் விளைவை உணர்ந்ததும், மிரண்டு போய் ஒவ்வொன்றாக சுமார் நூறு பவுன் நகைகளையும் கழட்டிக்கொடுத்தனர். 


தாலியில் உள்ள தங்கத்தை மட்டும் தயவு செய்து விட்டுக்கொடுக்கும் படியும், தனக்கோ தன் கணவனுக்கோ எந்தவிதமான காயமும் ஏற்படுத்தாமல் விட்டு விடும்படியும், மன்றாடிக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள், அது புது மணப்பெண்.


இந்த மூன்று கொள்ளையர்களின் கூட்டாளிகளான மற்றொரு மூவர், மோட்டார் பைக்கில் ஏறி அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்து புறப்படத் தயார் நிலையில் இருந்தனர்.


பின்னால் சற்று தொலைவில் ஒரு லாரியும், ஜீப்பும் வருவதை அறிந்த, அந்தக்கும்பல், இதுவரை பறித்த நகைகளுடன், மோட்டார் பைக்குகளில் ஏறி, வெகு வேகமாகத் தப்பிச்சென்று விட்டது.


மிகுந்த பதட்டத்துடனும், மனக்கவலையுடனும், காரில் பயணத்தைத் தொடர்ந்து, கணவருடன் தன் புகுந்த வீட்டைச் சென்றடைந்தாள் அந்தப் புது மணப்பெண். 


அங்கு ஏற்கனவே நான்கு வேன்களிலிருந்து இறங்கி, பொண்ணு மாப்பிள்ளையாகிய இவர்களின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர், இரண்டு வீட்டு முக்கியஸ்தர்களும்.


பிரபல நகைக்கடையின் அதிபரும், மணப்பெண்ணின் தந்தையுமாகிய சதாசிவத்திடம், கண் கலங்கிய நிலையில், உடம்பில் ஒரு நகை கூட இல்லாமல், நடுவழியில் நடந்த கொள்ளையைப்பற்றிக் கூறினாள், அந்த புதுமணப்பெண்.


பயங்கரமான ஆயுதங்களுடன் நின்ற ஆறு கொள்ளையர்களை, தான் ஒருவனாக ஏதும் செய்யமுடியாமல் போனதை, மாப்பிள்ளையும் தன் மாமனாரிடம் வருத்தத்துடன் எடுத்துரைத்தார்.


“இது நான் எதிர்பார்த்தது தான் மாப்பிள்ளை! கடந்த ஆறு மாதங்களாகவே அந்தக் காட்டுப்பாதையில் இதுபோல அவ்வப்போது முகமூடிக்கொள்ளை நடப்பதாக செய்தித்தாளில் படித்து வருகிறேன். பகல் வேளை தானே, பயமில்லை என்று நினைத்து உங்களைத் தனியாக ஒரு காரில் அனுப்பி விட்டேன்; அதனால் பாவம் உங்களுக்கு இவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டுப் போய் விட்டது.









நல்லவேளையாக என் மகளின் திருமாங்கல்யம் தவிர அனைத்து நகைகளையும் கவரிங் நகைகளாகப் போட்டு அனுப்பி வைத்திருந்தேன். அவைகள் தான் இப்போது கொள்ளை போய் விட்டது. அதனால் கவலைப்படாதீர்கள். 


உங்கள் இருவரின் ஒரிஜினல் நகைகள் பூராவும், இந்தப்பெட்டியில் போட்டு தனியாக பத்திரமாக எடுத்து வந்துள்ளேன்” என்று கூறி, ஒரு பெரிய நகைப்பெட்டியை தன் பொண்ணு மாப்பிள்ளையிடம் ஒப்படைத்தார், அந்த பிரபல நகைக்கடையின் அதிபர்.




மிகவும் உஷார் பேர்வழியான சதாசிவத்தை அவரின் மகள் மட்டுமல்லாமல், சம்பந்தி வீட்டினர் அனைவருமே வெகுவாகப் பாராட்டினர்.





-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-



 இந்தச்சிறுகதை வல்லமை மின் இதழில் 
31.10.2011 அன்று வெளியிடப்பட்டது

ஞாயிறு, 13 நவம்பர், 2011

HAPPY இன்று முதல் HAPPY !










HAPPY  இன்று முதல் HAPPY


தமிழ்மண நட்சத்திரப் பதிவரின் 
நன்றி அறிவிப்பு











அன்புடையீர்,

வணக்கம்.

இந்த வாரம் 07.11.2011 திங்கள் முதல் 13.11.2011 ஞாயிறு வரை என்னை தமிழ்மணம் நட்சத்திரப்பதிவராக அறிவித்து கெளரவப்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்மண நிர்வாகிகளுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னால் முடிந்த வரை தினமும் ஒரு புதிய பதிவும், மூன்று மீள் பதிவுகளுமாக ஆகமொத்தம் 27 நட்சத்திரப்பதிவுகள் இந்த வாரத்தில் கொடுக்க முடிந்தது.

இந்த ஆண்டு (2011) ஜனவரி மாதம் ஆரம்பித்து, தொடர்ந்து என் வலைப்பூவில் எழுதிவரும் என்னை, முதன் முதலில் தமிழ்மணத்தோடு இணைப்பு ஏற்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுத்தவர் [கற்றலும் கேட்டலும்] திருமதி ராஜி அவர்கள் தான். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

அதன் பிறகு 2011 மார்ச் மாதத்தில், தாங்களாகவே முன்வந்து, எனக்கு தமிழ்மணம் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்து உதவியவர்கள் திருமதி Thirumathi bs Sridhar என்கிற திருமதி ஆச்சி அவர்களும், அவர்களுடைய நண்பர் திரு. K.R.P. செந்தில் குமார் அவர்களுமே. அவர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


தமிழ்மணத்தில் என் பதிவுகளை எப்படி இணைப்பது என்ற அடிப்படை கணினி அறிவு கூட இல்லாமல் பதிவுகள் எழுதி வந்த என்னை, இன்று தமிழ்மணத்தின் நட்சத்திரப்பதிவராகவே தேர்ந்தெடுத்துள்ளதை நினைத்து வியந்து போனேன். உண்மையிலேயே மிகவும் ஆச்சர்யமாகவே இருந்தது. அதே சமயம் சற்று அச்சமாகவும் இருந்தது. 

தமிழ்மணத்தின் நட்சத்திரப்பதிவர் என்ற அழைப்பு எனக்குக் கிடைத்ததும், அதை ஏற்கலாமா வேண்டாமா என்று ஓரிரு நாட்கள் நான் தயங்கினேன்.

எனக்கு தமிழ்மணத்திலிருந்து வந்திருந்த அழைப்பினை, என் சமீபகால ஆத்மார்த்த நட்புக்குரியவரும், அருமையான ஆலோசகரும், என் நலம் விரும்பியுமான ஒருவருக்கு அனுப்பி வைத்து ”ஏற்கலாமா? வேண்டாமா?” என்ற என் குழப்பத்தையும் எழுதி, அவர் கருத்தினையும் கேட்டிருந்தேன்.  

இதற்கிடையில் ஏற்கனவே சமீபத்தில் நட்சத்திரப் பதிவராக ஜொலித்த நம் நண்பர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரிடம் எனக்கிருந்த பல்வேறு சந்தேகங்களைக் கேட்கத்தொடங்கினேன்.அவை எல்லாவற்றிற்கும் மிகவும் பொறுமையாக பதில் அளித்து உற்சாகப் படுத்தியதோடு,   கிடைத்துள்ள இந்த வாய்ப்பை நழுவ விடாமல் தயவுசெய்து பயன் படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார். நண்பர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் நன்றிகள்.

இதற்கிடையில் இந்த விஷயம் வேறொருவர் மூலம், என் எழுத்துலக மானஸீக குருநாதரும், எனக்கு வலைப்பூவை உருவாக்கித் தந்தவருமான என் பேரன்புக்கும், மரியாதைக்கும் உரிய திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்கள் காதுக்கு எட்டிவிடவே, அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டியதுடன், அவசியம் இந்த அழைப்பை ஏற்கத்தான் வேண்டும் என்று உத்தரவே பிறப்பித்து விட்டார். குருநாதருக்கு என் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

அதே நேரம் என் சமீபகால ஆத்மார்த்த நட்புக்குரியவரும், அருமையான ஆலோசகரும், என் நலம் விரும்பியும் ஆனவரிடமிருந்து எனக்கு ஓர் மின்னஞ்சலில் பதிலும் வந்து விட்டது. அதில் இருந்த மிக அற்புதமான எழுத்துக்கள், சோர்ந்து போயிருந்த என்னைத் தட்டி எழுப்பியது. தளர்ந்து போயிருந்த எனக்கு பேரெழுச்சி ஏற்படுத்தியது. எதிலும் அதிக நாட்டமில்லாமல் இருந்த எனக்கு, தன்நம்பிக்கையை ஊட்டி உற்சாகத்தை தருவதாக இருந்தது. 


நம் குறைகளைக் கோயிலுக்குப்போய் ஸ்வாமியிடமும், அம்பாளிடமும் மனமுருகி அழுது வேண்டிக்கொண்டால், மனதுக்கு சற்றே அமைதியும், சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கும். ஆனால் ஸ்வாமியோ, அம்பாளோ நம்முடன் ஏதும் நேரிடையாகப் பேசுவதும் இல்லை; நம் கேள்விகளுக்கும், புலம்பல்களுக்கும் பதில் அளிப்பதும் இல்லை.  


”தெய்வம் மனுஷ்ய ரூபேனா” என்பார்கள். [அதாவது தெய்வம் மனித வடிவிலும் இருந்து உதவக்கூடும் என்பது பொருள்] அதற்கு ஓர் மிகச்சிறந்த உதாரணம் இந்த என் நட்பு என்று சொன்னால் அது மிகையாகாது. இத்தகையதொரு பாசம் மிகுந்த நட்பு அமைய நான் எந்த ஜன்மத்தில் என்ன தவம் செய்தேனோ என்று, அடிக்கடி நான் நினைத்து மகிழ்வதுண்டு.  


அவர்கள் அனுப்பிய அந்த ஆத்மார்த்தமான ஆறுதல் அளிக்கும் மின்னஞ்சலில் வந்த பதிலை, அன்று ஓர் இரவு மட்டும், ஒரு 108 தடவைகளாவது, நான் திரும்பத்திரும்ப படித்திருப்பேன்.  அதனையே அருள் வாக்காக எடுத்துக் கொண்டு, என் சம்மதக் கடிதத்தை தமிழ்மணத்துக்கு உடனடியாக அனுப்பி வைத்தேன். 


ஆத்மார்த்த அன்புடனும், நட்புடனும் அன்றாடம் பழகி, என் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மனதிற்கு இதமான தீர்வுகள் சொல்லிவரும், தெய்வாம்சம் பொருந்திய அவர்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.


மேற்படி நபரின் அருள் வாக்கு கிடைக்கப்பட்ட ஓரிரு நிமிடங்களிலேயே, என்னுடன் பணி புரிந்த நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சலுடன் 27 நட்சத்திரக்காரர்களும் சென்று வழிபட வேண்டிய கோயில்கள் பற்றிய படங்கள்+விளக்கங்கள், அகஸ்மாத்தாக நான் சற்றும் எதிர்பாராமல், எனக்கு அவரால் அனுப்பப்பட்டிருந்தன. 


நட்சத்திரப்பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த எனக்கு, அதுவே நல்ல சகுனம் போலத் தோன்றியது. வாசகர்களில் சிலருக்காவது பயன்படக்கூடுமே என்ற எண்ணத்தில், அவற்றையும் உபயோகப்படுத்தி மொத்தம் 27 பதிவுகளாக வெளியிட்டு விடலாமே என என் உள்மனது சொல்லியது.  அதன் படியே இறையருளும் சேர்ந்து, வெற்றிகரமாக இந்த ஒரு வாரத்தில் 27 பதிவுகள் என்னால் தர முடிந்தது.


நட்சத்திரப்பதிவர் என்று கேள்விப்பட்டதும், எனக்கு ஏராளமானவர்கள், மின்னஞ்சல் மூலமாகவும், சுட்டிகள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும், வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து, மிகவும் உற்சாகப்படுத்தினர். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.   


குறிப்பாக பதிவுலகப் பிரபலங்களில் ஒருவரான திருமதி சித்ரா சாலமன் அவர்களைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தானும் சென்ற ஆண்டு இதே காலக்கட்டத்தில் தமிழ்மண நட்சத்திரப்பதிவராக தேர்ந்தெடுக்கப் பட்டதாகவும் சொல்லி மகிழ்ந்தார்கள். அவர்களின் தற்போதைய சூழ்நிலைகளால் பதிவுகள் பக்கம் அதிகமாக வரமுடிவதில்லை என்பதையும் எடுத்துச் சொன்னார்கள். இருப்பினும் என்னிடம் அவர்களுக்குள்ள தனிப்பட்ட பிரியத்தினால், இந்த வாரம் வருகை தந்து ஒரு சில பின்னூட்டங்கள் மட்டும் அளித்துள்ளார்கள். [அன்புள்ள சித்ராவுக்கு கோபு மாமாவின் நன்றிகள். ]  


நட்சத்திரப் பதிவரான இந்த வாரத்தின் ஏழு நாட்களுக்குள் ஏழு புதிய பின்தொடர்பவர்கள் [Followers] என் வலைப்பூவில் தேன் அருந்தும் வண்டுகளாக வந்து சேர்ந்துள்ளனர். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


குடும்பத்திலும், அலுவலகத்திலும் மிகப்பெரிய பொறுப்புகள் வகிக்கும் என் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய திருமதி சாகம்பரி [மகிழம்பூச்சரம்] அவர்கள், தினமும் என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் [27 out of 27] அன்புடன் வருகை தந்து, அருமையாக பின்னூட்டங்கள் அளித்ததுடன், அவ்வப்போது தமிழ்மண Vote ஐ, மறக்காமல் கையோடு பதிவு செய்ததும், என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். 


தினமும் வருகை தந்தவர்களில் பலரும் தமிழ்மணத்தில் எனக்கு சாதகமாக [VOTE] வாக்களித்துச் சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


இவை எல்லாவற்றையும் விட இந்த வெற்றிக்கு முழுக் காரணம், என் அன்புக்குரிய பதிவர்கள் மற்றும் வாசகர்களாகிய தாங்கள் அனைவருமே, தங்களின் பொன்னான நேரத்தை எனக்காகச் சற்றே ஒதுக்கி, அவ்வப்போது வருகை தந்து பின்னூட்டங்கள் அளித்து என்னை உற்சாகப்படுத்தியது மட்டுமே தான் என்று நான் உறுதியாகச் சொல்வேன். 

இவ்வளவு மிகக்குறுகிய காலத்தில், நான் அதிகம் அறிவிப்பு ஏதும் செய்யாமலேயே [அதிகமான பேர்களுக்கு தகவல் ஏதும் கொடுக்காமலேயே ] இவ்வளவு நபர்கள் தொடர்ச்சியாக தினமும் வருகை தந்து ஆதரித்துள்ளது, என்னை மெய்சிலிர்க்க வைப்பதாக உள்ளது.      


இந்த ஒரு வாரத்தில், நேற்று வரை மட்டும் வருகை புரிந்துள்ள 


ஆண் பதிவர்களின் எண்ணிக்கை:::::::::   50   
பெண் பதிவர்களின் எண்ணிக்கை:::::::::: 29    


ஆக மொத்தம் வருகை 
புரிந்துள்ளோர் எண்ணிக்கை::::::::::::::::::: 79  


இன்று இரவு 8 மணி வரை வந்து குவிந்துள்ள 
பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை:       475

வருகை புரிந்துள்ள என் அன்புக்குரியவர்களின் பெயர் பட்டியல் இதோ:


திருமதிகள்:


01. புதுகைத்தென்றல்
02. இராஜராஜேஸ்வரி
03. மிடில் கிளாஸ் மாதவி
04. கீதா
05. லக்ஷ்மி
06. சித்ரா
07. சாகம்பரி
08. கெளசல்யா
09. ரமாரவி [RAMVI]
10. மனோ சுவாமிநாதன்
11. ராம லக்ஷ்மி
12. ஷைலஜா
13. ஏஞ்சலின்
14. ராஜி
15. கோமதி அரசு
16. அமைதிச்சாரல்
17. ஷக்திப்ப்ரபா ****
18. துளசி கோபால்
19. ஸாதிகா
20. வல்லி சிம்ஹன்
21. அப்பாவி தங்கமணி
22. மாதேவி
23. தேனம்மை லெக்ஷ்மணன்
24. நுண்மதி
25. பிரியா
26. வித்யா சுப்ரமணியம் அவர்கள்
27. thirumathi bs sridhar [ஆச்சி]
28. ஜலீலா கமல் 
29. கோவை2தில்லி

திருவாளர்கள்:


01. வெங்கட் நாகராஜ்
02. சேட்டைக்காரன்
03. பிலாஸபி பிரபாகரன்
04. ஜீவி ஐயா அவர்கள்
05. மோகன் குமார்
06. கே.எஸ்.எஸ்.ராஜ்
07. வேடந்தாங்கல்-கருன்
08. புலவர் சா. இராமநுசம் ஐயா அவர்கள்
09. கணேஷ்
10. ரமணி ஐயா அவர்கள்
11. D. சந்திரமெளலி
12. சூர்ய ஜீவா
13. சீனா ஐயா அவர்கள்
14. மகேந்திரன்
15. நம்பிக்கை பாண்டியன்
16. அப்பாதுரை
17. G M B Sir அவர்கள்
18. ரிஷபன்
19. வவ்வால்
20. விசரன்
21. தோழன் மபா தமிழன் வீதி
22. கவிதை வீதி .. செளந்தர்
23. ஸ்ரீராம்
24. பொதினியிலிருந்து ... பிரபாகரன்
25. Dr.P. Kandaswamy Ph.D., அவர்கள்
26. அமர பாரதி
27. அனந்து
28. சென்னை பித்தன்
29. ஜயராம் தினகரபாண்டியன்
30. என் ராஜபாட்டை .. ராஜா
31. A.R. ராஜகோபாலன்
32. விச்சு
33. தமிழ்வாசி - பிரகாஷ்
34. அவர்கள் உண்மைகள்
35. G சந்தானம் 1610
36. முனைவர் இரா. குணசீலன்
37. சிவகுமாரன்
38. ரத்னவேல் ஐயா அவர்கள்
39. துரை டேனியேல்
40. சுந்தர்ஜி அவர்கள்
41. யானைக்குட்டி@ஞானேந்திரன்
42. மயிலன்
43. கே.பி.ஜனா
44. அரசன்
45. மாய உலகம்
46. வஸிஷ்டன்
47. ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி
48. கலாநேசன்
49. ஹரணி ஐயா அவர்கள்
50. நிஜாமுதீன்




[**** புதிதாக வருகை தந்துள்ள Ms. ஷக்திபிரபா அவர்களின் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கூடிய வாசித்தலும், ஊன்றிப்படித்தல் என்ற தனித்தன்மையும், மிகச்சரியாக திறனாய்வு செய்து வெளிப்படுத்தும் கருத்துக்களும் என்னை மிகவும் கவர்வதாக உள்ளன. அவர்களுக்கு என்னுடைய கூடுதல் சிறப்பு நன்றிகளையும், பாராட்டுக்களையும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன் **** ]   


மிக அதிகமான பதிவுகளுக்கு வருகை தந்து சிறப்பித்து உதவியவர்களான திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள், திரு. ரமணி சார் அவர்கள், திரு. ரிஷபன் சார் அவர்கள், திருமதி ராஜி அவர்கள், திருமதி ஏஞ்சலின் அவர்கள், திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்,  திருமதி ஷக்தி பிரபா அவர்கள், திருமதி மிடில் கிளாஸ் மாதவி அவர்கள், திருமதி கோமதி அரசு அவர்கள், திருமதி ரமாரவி அவர்கள் மற்றும் திருமதி ஸாதிகா அவர்கள் ஆகிய 11 பேர்களுக்கும் என் கூடுதல் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 


அவ்வப்போது வந்து என்னைப் பாராட்டி ஆசீர்வதித்த திரு. GMB Sir அவர்கள், திரு ஜீவா சார் அவர்கள், புலவர் சா. இராமநுசம் ஐயா அவர்கள், திருமதி லக்ஷ்மி அம்மா அவர்கள் ஆகிய நால்வருக்கும் மனமார்ந்த நன்றிகளுடன் கூடிய என் நமஸ்காரங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.







அனைத்து அன்புள்ளங்களுக்கும் 
என் மனமார்ந்த நன்றிகளைக் 
கூறிக்கொண்டு விடைபெறுகிறேன். 

வணக்கம். 

நம் பதிவுலக நட்பு இன்று போல் என்றும் தொடரட்டும் !



என்றும் அன்புடன் தங்கள்,


வை. கோபாலகிருஷ்ணன்
















உங்களுக்குப் பிடித்தமானவற்றை 
நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.




WELCOME
Bye Bye !

உடம்பெல்லாம் உப்புச்சீடை







  

[நெடுங்கதை By வை. கோபாலகிருஷ்ணன்]


உடம்பெல்லாம் உப்புச்சீடை







[1]
மாலை மணி 5.35 ; கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், பல்வேறு மூட்டை முடிச்சுக்களுடன், மூச்சு வாங்க ரயிலின் வால் பகுதியிலிருந்து தலைப்பகுதி வரை தட்டுத்தடுமாறி ஓடி, தேடி முன்பதிவு செய்த தங்கள் இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியை கண்டுபிடித்து ஏறவும், வண்டி மெதுவாக நகரத் தொடங்கவும் மிகச் சரியாக இருந்தது. 



தன்னுடைய சூட்கேஸ் மற்றும் இதர சாமான்கள் மொத்தம் பன்னிரண்டு உருப்படிகள் சரியாக உள்ளனவா என்று ஒரு முறை எண்ணிப் பார்த்துவிட்டு, இருக்கையின் கீழ்புறம் குனிந்து அவற்றைக் காலில் இடறாதவாறு ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தார், பட்டாபி.



“அஸ்திக்கலசம் உள்ள அட்டைப் பெட்டி ஜாக்கிரதை. அதை உடையாமல் ஒரு ஓரமாக உள்ளடங்கி வைச்சுடுங்கோ. ஊர் போய்ச் சேரும் வரை அதை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சாப்பாடுக்கூடை; தயிர் சாத தூக்கு; டவரா, தம்ளர், வாட்டர் கேன், பிளாஸ்க் வைத்திருக்கும் ஒயர் கூடை; நொறுக்குத்தீனி வைத்துள்ள பிக் ஷாப்பர் பை முதலியன அடிக்கடி எடுக்கும் படியாக இருக்கும். அதையெல்லாம் டக்டக்குனு எடுக்க வசதியா முன்னாடி வைச்சிருங்கோ. பணப்பை ஜாக்கிரதையாக இருக்கட்டும். ரயில் டிக்கெட்களை சைடு ஜிப்பிலே வைச்சுடுங்கோ” மனைவி பங்கஜம் தொடர்ச்சியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வந்த வண்ணம் இருந்தாள்.



பொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்து சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். 



எதிர்புற லோயர் பெர்த் ஜன்னல் ஓரமாக யாரோ தன் பொருட்களை வைத்து விட்டு எங்கோ சென்றிருப்பார் போலும். 



வண்டியில் ஏறியதும் அவசரமாக கழிவறைக்குப் போன விமலாவை இன்னும் காணோமே என்று விசாரப் பட்டாள் பங்கஜம். 



குனிந்து நிமிர்ந்து பொருட்களை அடுக்கியதில் வியர்த்துக் கொட்டிய முகத்தை, டர்க்கி டவலால் அழுத்தித் துடைத்து, ஃபேன் ஸ்விட்ச்களைத் தட்டி விட்டார் பட்டாபி. 


“ஒரு ஜன்னல் தான் நமக்கு. நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி உட்காரணும். சண்டை போடக் கூடாது. சமத்தாய் இருக்கணும்” என்று ரவியையும் கமலாவையும் சமாதானப் படுத்தினாள் பங்கஜம்.

கழிவறையிலிருந்து கலவரத்துடன் ஓட்டமாக ஓடி வந்த விமலா, பயத்தில் தன் தாயாரை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள். 

”என்னடி ஆச்சு ..... வயதுக்கு வந்த பெண், இப்படிப் பதறி அடித்து ஓடி வரலாமா? நான் சொல்லிக் கொடுத்ததெல்லாம் மறந்துட்டாயா? என்று பதறினாள் பங்கஜம்.

தான் கழிவறையிலிருந்து வெளிவரும் போது எதிர்புற கழிவறையிலிருந்து அந்தப் பயங்கரமான உருவம் வெளிப் பட்டதையும், தன்னை முறைத்துப் பார்த்ததையும், அதைப் பார்த்த தான் ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டதையும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எடுத்துரைத்தாள், விமலா.

புதிதாக வயதுக்கு வந்த [13 வயது] தன் பெண் எதையோ பார்த்து பயந்து போய் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, “இனிமேல் கழிவறைக்குத் தனியாகப் போகாதே; நானும் உன்னுடன் துணைக்கு வந்து கதவருகில் நிற்கிறேன்” என்று சமாதானப் படுத்தி, அவளை அமரச் செய்து ஃபிளாஸ்கிலிருந்து சூடாகக் காஃபியை ஊற்றி தம்ளரை நீட்டினாள், பங்கஜம்.

ஒரு வாய் காஃபியை ருசிப்பதற்குள், அந்த உருவம் இவர்கள் பக்கமே நடந்து வந்து, தாண்டிக் குதித்து, ஜன்னல் ஓரம் இருந்த தன் சாமான்களை சற்று ஒதுக்கி கீழே வைத்து விட்டு, தானும் அங்கு அமர்ந்தது.

விமலா மீண்டும் பயம் வந்தவளாக தன் தாயின் புடவைத் தலைப்பில் புகுந்து கொண்டாள். 

“என்ன நீங்களெல்லாம் காசிக்குப் போறேளா! கங்கா ஸ்நானமா! பித்ரு கார்யமா! பில்டர் காஃபியா ... கும்முனு வாசனை மூக்கைத் துளைக்குதே” என்று கேட்டது அந்த உருவம்.

எல்லாவற்றிற்கும் மொத்தமாகத் தலையை ஆட்டி வைத்தாள் பங்கஜம்.

“நானும் காசிக்குத்தான் போறேன்” என்றது அது, யாரும் கேட்காமலேயே.

“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர், பங்கஜமும் பட்டாபியும். 





[2]
”சூடான இட்லி, தோசை, வடை, காஃபி, டீ, சாயா” என்ற குரலுடன் இங்குமங்கும் ஒரு சில பணியாளர்கள் போய் வந்த வண்ணம் இருந்தனர்.

வண்டியின் வேகம் குறைந்து ஒரு குலுங்கலுடன் நிற்கத் தொடங்கியது. வெளியே ஏதோ ஒரு ஸ்டேஷன் வந்துள்ளது.

ஆசாமி கண்ணைத் திறந்து ரவியின் தலைக்கு மேல் தன் தாடையை உரசியவாறு குனிந்து வெளியே பார்த்தார். “கூடூர்” என்று கூறிக் கொண்டு, தன் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்து, எட்டாகப் பத்து நிமிடம் உள்ளது, என்றும் சொல்லிக் கொண்டார்.

வெளியே விற்கப்படும் கோன் ஐஸ் க்ரீம், ரவியின் பார்வையில் பட்டு விட்டது. தன் அப்பாவையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தான் ரவி. அவர்கள் அவனிடம் கோபமாக இருப்பதாகத் தோன்றியது.

“கமலா, கமலா..... கோன் ஐஸ் விக்குதுடி” ஆவலுடன் கூறினான்.

ஆசாமி தன் இடுப்பிலிருந்த சுருக்குப்பையை அவிழ்த்துப் பிரித்து பணத்தை எடுத்து “மூன்று கோன் ஐஸ் கொடு” என்று சொல்லி கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டினார்.

ரவிக்கு நாக்கில் எச்சில் ஊறி உடம்பெல்லாம் ஜில்லிட்டுப் போனது போல ஒரே குஷியானது.

அவர் நீட்டிய கோன் ஐஸை வாங்கி ரவி உடனே கிடுகிடுவென சுவைக்க ஆரம்பித்து விட்டான். கமலா தயங்கியவாறே வாங்கி கையில் வைத்துக் கொண்டு, தன் அம்மாவையும் அப்பாவையும் பயத்துடன் ஒரு பார்வை பார்த்தாள். விமலா ”தனக்கு வேண்டாம் ” என்று உறுதியாக மறுத்து விட்டாள்.

“ஐயா, உங்களைத் தயவுசெய்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம். இது போல எதுவும் வாங்கித் தராதீர்கள். எட்டாக்கைப் பயணம். குழந்தைகளுக்கு ஏதும் உடம்புக்கு வந்து விட்டால் நாங்கள் தான் கஷ்டப் படணும்” என்று மாற்றி மாற்றி கண்டிப்புடன் சொல்லி விட்டனர், பெற்றோர்கள் இருவரும்.

“வெய்யில் காலம், குழந்தைகள் ஏதோ ஆசைப்படுது. ஒரே ஒரு ஐஸ் தானே, உடம்புக்கு ஒண்ணும் வந்து விடாது. அப்படியே ஏதாவது காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் என்றாலும் என்னிடம் எல்லா மருந்துகளும் உள்ளன. கவலையே படாதீங்கோ” என்று சொல்லி விட்டு, தன் கையில் மீதியிருந்த ஒரு கோன் ஐஸையும் , ரவியின் மற்றொரு கையில் திணித்தார். ரவியின் சந்தோஷம் இப்போது இரட்டிப்பானது.

மிகவும் பொறுமையாக பல்லைக் கடித்துக்கொண்டு, ரவியை முறைத்துப் பார்த்தனர் பங்கஜமும், பட்டாபியும். விவரம் புரியாத அவனை தனியே கூட்டிப் போய் நாலு சாத்து சாத்தணும் போலத் தோன்றியது அவர்களுக்கு.

வண்டி மிகப்பெரியதொரு சத்தத்துடன் நகரத் தொடங்கியது.

"சாப்பாடு மூட்டையைப் பிரிச்சுடலாமா?" பட்டாபியிடம் வினவினாள் பங்கஜம்.

“அது ஒண்ணுதான் இப்போ குறைச்சல். எனக்கு ஒண்ணுமே வாய்க்குப் பிடிக்காது போல உள்ளது. குமட்டிக் கொண்டு வாந்தி வரும் போல உள்ளது” என்றார் மிகுந்த எரிச்சலுடன், சற்று உரக்கவே, அந்த ஆசாமிக்கு காதில் விழட்டும் என்று.

ஆசாமி, தன் ஏதோ ஒரு பையில் கையை விட்டு, எதையோ எடுத்து, “இ ந் தா ங் கோ.... ஸார் ..... ‘ஹா ஜ் மோ லா’ ஆயுர்வேத மருந்து. இரண்டு வில்லைகள் வாயில் போட்டுச் சப்பினால் போதும். குமட்டல் போய் நல்ல பசியைக் கிளப்பிவிடும்” என்றார் அந்த ஆசாமி.

இதைக் கேட்டதும், பட்டாபிக்கு பசிக்குப் பதிலாக கடுங் கோபத்தைக் கிளம்பி விட்டது, அவரின் பேச்சு.

பட்டாபி மிகுந்த கோபத்துடன் அவரிடம் என்னவெல்லாம் பேசினார் தெரியுமா?



[4]

”யோவ் .. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. என் தகப்பனார் செத்துப்போய் பதினைந்து நாட்கள் தான் ஆகிறது. அவரின் கடைசி ஆசைப்படி கர்மா செய்ய காசிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அது முடியும் வரை வெளி மனுஷ்யாள் யாரிடமும் பேசக்கூடாது. கண்டதைச் சாப்பிடக் கூடாது.

நிம்மதியா எங்களைக் கொஞ்சம் தனியா இருக்க விடுங்கோ. எங்கள் பொறுமையை ரொம்பவும் சோதிக்காதீங்க; ஏண்டா இந்த ரயிலில், இந்தப் பெட்டியில், முன்பதிவு செய்தோம்னு ரொம்பவும் வேதனைப் படறோம்.

வேறு எங்காவது ஒத்தை சீட்டு இருந்தா, நீர், டீ.டீ.ஆர். இடம் சொல்லி மாத்திண்டு போய்ட்டாக் கூட உமக்குப் புண்ணியமாப் போகும்” என்று பட்டாஸ் கட்டைப் பற்ற வைத்தது போல வெடிக்க ஆரம்பித்தார், பட்டாபி.

இதுபோன்ற எவ்வளவோ பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் இதுவரை பலமுறை சந்தித்த அந்த ஆசாமிக்கு, மனதிற்குள் சற்றே வருத்தமாக இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், கழிவறைக்குப் போவது போல வெளியேறி, அருகிலிருந்த கம்பார்ட்மெண்ட்கள் சிலவற்றிற்குச் சென்று, இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தார். உடம்புத் தோலில் மட்டுமல்லாமல் அவர் மனதும் ரணமாகிப் போய் இருக்குமோ என்னவோ .... பாவம்.

வெகு நேரம் ஆகியும், அந்த ஆசாமியைக் காணாததால், சற்று நிம்மதி அடைந்திருந்தனர், பட்டாபியின் குடும்பத்தினர்.

“ஒரு வேளை நீங்க போட்ட சத்தத்தில், அந்த மனுஷன் ஓடும் ரயிலிலிருந்து குதித்திருப்பாரோ?” பங்கஜம் தன் கணவனிடம் சிரித்துக் கொண்டே மெதுவாகக் கேட்டாள்.

“அப்படியெல்லாம் இருக்காது; அவனைப் பார்த்தால், நீ சொல்வது போல ஓடும் ரயிலிலிருந்து குதித்து உயிரை விடும் அளவுக்கு மானஸ்தனாகத் தெரியவில்லை. பரதேசிப்பயல் ... இங்கு எங்காவது தான் கழிவறைக்குப் போய் இருப்பான். வந்துடுவான்” என்றார் பட்டாபி.

“இப்போது சாப்பாட்டு மூட்டையைப் அவிழ்த்தால், உடனே அவன் வந்து, அது என்ன? இது என்ன? என்று கேட்டுக் கேட்டே கழுத்தை அறுத்து நம்மைச் சாப்பிட விடாமல் சங்கடப் படுத்தி விடுவான். என்ன பண்ணித் தொலைப்பது என்றே தெரியவில்லை. இவ்வளவு விகாரமாயிருப்பவன் ஏன் ரயிலில் நம்முடன் வந்து தொலைந்தானோ? நாம் பண்ணின பாபம் நம்மைக் காசி வரை துரத்தி வருகிறது” பங்கஜம் மேலும் தூபம் போட்டாள்.

சற்று நேரத்தில் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் அவுட்டர் சிக்னல் கிடைக்காமல், நிற்க ஆயத்தமாகி, இஞ்ஜின் பெருமூச்சு வாங்குவது போல சத்தம் கேட்டது.

அந்த ஆசாமி மெதுவாக இவர்கள் இருக்குமிடம் வந்தார். ஏதோ ஒரு பையில் கையை விட்டு ஒரு பொட்டலத்தை வெளியில் எடுத்து அதை ஒரு கையிலும், குடிநீர் பாட்டிலை மறு கையிலும் வைத்துக்கொண்டு, ”தான் இங்கு அமர்ந்து சாப்பிடலாமா” என்பது போல, இவர்களை ஒரு பார்வை பார்த்தார். அவர்கள் அவரைக் கொஞ்சமும் கவனிக்காதது போலவும், வேறு எங்கோ பார்ப்பது போலவும், முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு பாசாங்கு செய்தனர்.

ஆசாமி ரவியைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்து விட்டு, “தம்பீ .... நான் சப்பாத்தி சாப்பிடப் போகிறேன், சாப்பிடலாமா?” என்றார். கணவனும் மனைவியும் மீண்டும் ரவியைப் பார்த்து முறைக்க, “சப்பாத்தி எனக்குப் பிடிக்காது, எனக்கு வேண்டாம், நீங்களே சாப்பிடுங்க” எனப் பட்டென்றுச் சொல்லி விட்டான், ரவி.

நான்கு சப்பாத்திகளை கொத்துமல்லித் துவையலுடன் சாப்பிட்டு விட்டு, குடிநீர் பாட்டிலையும் காலி செய்தார். சூடான பால் ஒரு கப் வாங்கிக் குடித்தார். பெரிய சைஸ் பச்சை மோரிஸ் பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு, எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார்.

பிறகு அவர் அந்தப் பொடியன் ரவியைப் பார்த்து, “ரவி, நீங்களெல்லாம் ஒரே குடும்பம். ஜாலியாக ரயில் பயணத்தை அனுபவியுங்கள். நீ எனக்கான லோயர் பெர்த்தில் படுத்துக்கோ; நான் உனக்கான அப்பர் பெர்த்தில் போய் படுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லி விட்டு, தன்னுடைய எல்லா சாமான்களுடனும், குடிபெயர்ந்து மேலே ஏறி விட்டார் அந்த ஆசாமி.

கீழே லோயர் பெர்த்தில் படுத்து பயணிக்க வேண்டிய உரிமையுடன் ரிஸர்வேஷன் டிக்கெட் வாங்கியுள்ள அந்த வயதான மூத்த குடிமகன், தங்களுக்காக கஷ்டப்பட்டு அப்பர் பெர்த்துக்கு, போகிறாரே என்ற ஒரு எண்ணமோ, பச்சாதாபமோ இல்லாமல் இருந்தனர் பட்டாபி கோஷ்டியினர்.

இதுதான் நல்ல சமயம் என்று சோத்து மூட்டையைப் பிரித்து, இரவு சாப்பாட்டை திருப்தியுடன் முடித்துக் கொண்டது, பட்டாபி கோஷ்டி.

“நாளைய ஒரு நாள் முழுவதும், நாம் ரயிலிலேயே கழித்தாக வேண்டும். அது கீழே இறங்காமல், மேலேயே படுத்துக் கொண்டு விட்டால் தேவலாம்” என்று இவர்களுக்குள் நினைத்துக் கொண்டனர்.


[5]

அதன்படியே மறுநாள் ‘பல்ஹர்ஷா’ வில் காலை டிபனும்; ‘நாக்பூர்’ இல் மதிய உணவும், ’இட்டார்ஸி’ யில் மாலை டிபனும், ‘ஜபல்பூர்’ இல் இரவு சாப்பாடும் என இவர்கள் நிம்மதியாக உண்டு களித்தனர். இடையிடையே தட்டை, முறுக்கு, கடலை உருண்டை, உருளைக்கிழங்கு சிப்ஸ் முதலிய கரமுராக்களும் கொறித்துக் கொண்டு வந்தனர்.

அந்த மனிதர் இவர்கள் பக்கமே வரவில்லை. வண்டி நிற்கும் ஸ்டேஷன்களில் மட்டும், மெதுவாக அப்பர் பெர்த்திலிருந்து இறங்கி, சோம்பல் முறித்துக் கொண்டு, காலாற நடந்து, கதவு வரை சென்று, எந்த ஊர் என்று தெரிந்து கொண்டு, கழிவறைக் காரியங்களையும் கையோடு முடித்துக் கொண்டு பரணையில் ஏறும் பூனை போல மெதுவாக ஏறிப் படுத்து வந்தார்.

நாக்பூரில் மட்டும், அப்பர் பெர்த்தில் அமர்ந்தபடியே அவர், மற்றொரு பொட்டலத்தைப் பிரித்து சப்பாத்தி சாப்பிட்டது போல, கொத்துமல்லித் துவையல் வாசனையை மோப்பம் பிடித்த பங்கஜம் தெரிந்து கொண்டாள்.

நிறைய பச்சை வாழைப்பழங்கள் போட்டுத் தொங்க விடப்பட்டிருந்த அவரின் ’கேரி பேக்’ ஒன்று இப்போது, மிகவும் சுருங்கி ஓரிரு பழங்களை மட்டுமே தன் வசம் வைத்துக் கொண்டு பரிதாபமாக காட்சியளித்தது.

அவர் இரண்டொரு முறை சூடாகப் பால் கேட்டு வாங்கி அருந்தியதை பட்டாபி கவனித்திருந்தார். மொத்தத்தில் பட்டாபி தம்பதிகளுக்கு நேற்றைய அளவு ரத்தக் கொதிப்பு இன்று இல்லை. அவர் தன் லோயர் பெர்த்தை விட்டுக் கொடுத்தது, என்னவோ இவர்களுக்கு, அவர் தன் வீடு வாசல், மாடு கண்ணு, சொத்து சுகம் அனைத்தையும் உயில் எழுதிக் கொடுத்தது போன்ற (அல்ப) சந்தோஷத்தை அளித்தது. அந்த ஆசாமியை மனதிற்குள் கொஞ்சம் பாராட்டவும் செய்தனர்.

இரவு மணி 10.45 க்கு, ‘கட்னி’ என்ற ஸ்டேஷன் வந்ததும் விளக்குகளை அணைத்து விட்டு, அனைவரும் படுக்கத் தொடங்கினர். அந்த ஆசாமி அதற்கு முன்பாகவே தூங்கி விட்டிருந்தார்.

பட்டாபி தான் கொண்டு வந்திருந்த அலாரத்தை [இப்போது போல செல்போன் பிரபலமாகாத காலம் அது] சரியாக அதிகாலை 4.30 மணிக்கு அடிக்குமாறு முடுக்கி விட்டார். பட்டாபி கோஷ்டி விடியற்காலம் 4.50 க்கு அலஹாபாத்தில் இறங்க வேண்டும்.






குழந்தையை ஆட்டிவிடும் தொட்டிலைப் போன்ற வண்டியின் அருமையான ஆட்டத்திலும், சீரான ஓட்டத்திலும், சுகமான காற்றிலும் அனைவரும் நிம்மதியாகத் தூங்கி விட்டனர். அவர்களை ஏற்றிச் சென்ற ரயில் மட்டும் தூங்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.

மறு நாள் அதிகாலை, அலாரம் அடித்ததும் அலறி எழுந்த பட்டாபி, அதை மேலும் தொடர்ந்து அடிக்க விடாமல், அதன் தலையில் ஒரு குட்டு குட்டி, அதை ஊமையாக்கினார்.

லைட்டைப் போட்டால் ஒருவேளை அந்த ஆசாமியும் தூக்கம் கலைந்து எழுந்து விடக்கூடும் என்ற பயத்திலும், காலை வேளையில் அதன் முகத்தில் மீண்டும் முழிக்க விருப்பமின்றியும், மங்கலான நைட் லாம்ப் வெளிச்சத்திலேயே, தன்னுடைய ஒவ்வொரு சாமான்களையும் விமலா+  பங்கஜம் உதவியுடன், ரயில் பெட்டியிலிருந்து இறங்க வேண்டிய கதவுப் பகுதி அருகில், அவர்கள் தாமதமின்றி உடனே இறங்குவதற்கு வசதியாக வைத்துக் கொண்டார். விமலாவை விட்டு ஒருமுறை சாமான்களை எண்ணச் சொல்லி பன்னிரண்டு உருப்படிகள் என்பதை உறுதி செய்து கொண்டார், பட்டாபி.

குழந்தைகள் ரவியையும், கமலாவையும் மெதுவாக எழுப்பி, அவர்கள் முகத்தை வாஷ் பேசினில் அலம்பித் துடைக்கவும், வண்டி அலஹாபாத்தில் நிற்கவும் சரியாக இருந்தது.

மூட்டை முடிச்சுக்களுடன் கீழே இறங்கிய அவர்களை டாக்ஸி வாலாக்களும், போர்ட்டர்களும் சூழ்ந்து நின்று வரவேற்றனர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி முதலியவற்றைக் குழைத்த ஒரு புது மொழியில் சங்கரமடம் செல்ல பேரம் பேசி முடித்து, ஒருவழியாக டாக்ஸியில் ஏறி அமர்ந்தது அந்தக் குடும்பம்.






[6]


சற்று நேரத்தில் கண் விழித்த அந்த ஆசாமி தனக்குக் கீழே உள்ள இருக்கைகள் யாவும் காலியாக இருப்பது கண்டு, மெதுவாக அப்பர் பெர்த்திலிருந்து கீழே இறங்கி, சுதந்திரமாகச் சோம்பல் முறித்து விட்டு, சோப்பு, பேஸ்ட், ப்ரஷ், துண்டு, விபூதி சம்புடம் முதலியனவற்றை கையில் எடுத்துக்கொண்டு, தன் ஜோடி செருப்புகளில் ஒன்று மட்டும் கண்ணுக்குப் புலப்பட, மற்றொன்றைத் தேடி எடுக்க கீழே குனிந்தார். வாராணசி வரை செல்ல வேண்டிய அந்த வண்டி அலஹாபாத்திலிருந்து புறப்பட இன்னும் ஏழு நிமிடங்களே இருந்தன.


சங்கர மடத்தை அடைந்த பட்டாபியின் குடும்பத்தை வரவேற்று, தங்குவதற்கு ரூம் கொடுத்து, பாத்ரூம் டாய்லெட் வசதிகளை விளக்கி விட்டு, “எல்லோரும் ஸ்நானம் செய்து விட்டு, ஆகாரம் முடித்து விட்டு, பயணக் களைப்பு தீர சற்று ஓய்வு எடுத்துக்கோங்கோ. மத்யானமா நான் வந்து, நாளைக்கு திரிவேணி சங்கமம் போய் என்னென்ன கர்மாக்கள் எப்படி எப்படி செய்யணும், கங்கா ஜலத்தை சின்னச் சின்ன சொம்புகளில் அடைத்து சீல் செய்து கொள்வது எப்படி; பிறகு மறுநாள் காசிக்குப் போய் தம்பதி பூஜை செய்வது, புனித கங்கையின் பல்வேறு ஸ்நான கட்டங்களில், படகில் சென்று பித்ருக்களுக்கு பிண்டம் போடுவது, காசி விஸ்வநாதர் + விசாலாக்ஷியைத் தரிசனம் செய்வது, காலபைரவர் கோவிலுக்குப் போய் மந்திரம் சொல்லி காசிக்கயிறு அணிவதுஅதற்கு மறுநாள் கயா போய், கயா ஸ்ரார்த்தம் செய்வது முதலியனவற்றைப் பற்றி விபரமாகச் சொல்லுகிறேன்” 


VARANASI  ஸ்நான கட்டம் - காசி கங்கைக்கரை


கங்கா யமுனா சரஸ்வதி நதிகள் கலக்கும் 
 திரிவேணி சங்கமம் அருகே - அலஹாபாத்


g


G H A Y A
கயா ஸ்ரார்த்தம் செய்து காசியாத்திரை முடிக்குமிடம்



ஸ்ரீ காசி விஸ்வநாதர். ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ விசாலாக்ஷி 


ஸ்ரீ காசி விஸ்வநாதர் - சிவலிங்கம்


காசி மாநகரைக்காக்கும் 
காவல் தெய்வம் காலபைரவர்.
கையில் ரக்ஷையாகக் கட்டும் காசிக்கயிறுகள் 
மந்திரம் சொல்லி கொடுக்கப்படும் கோயில்.



புனித கங்கா ஜலம் உள்ள 
கங்கைச்சொம்பு


காசி கங்கைக்கரையின் பல்வேறு ஸ்நான கட்டங்கள்



என்று சொல்லி விட்டு, நித்யப்படி பூஜை செய்ய தன் பூஜை ரூமுக்குள் புகுந்தார், சங்கரமடத்து சாஸ்திரிகள்.  



அவர் இவ்வாறு சுருக்கமாகச் சொல்லிவிட்டு தன் நித்தியப்படி பூஜை செய்யச் சென்றதும், பட்டாபிக்கு ஏதோ சுருக்கென்றது. ரத்தக் கொதிப்பு உச்சநிலைக்கு எகிறியது. ரயிலின் ஓரமாக உள்ளடங்கி வைத்த அஸ்திக் கலசத்துடன் கூடிய அட்டைப்பெட்டி, ரயிலிலிருந்து இவர்களுடன் கொண்டு வரப்படவில்லை.


சென்னையை விட்டுக் கிளம்பும் போது, தூக்கி வரமுடியாமல் மிகவும் கனமாக இருந்த ஒரு பெரிய பை, இப்போது ரயிலில் வரும் போது பங்கஜத்தால், எளிதில் தூக்க செளகர்யமாக வேறு ஒரு காலிப் பையின் உதவியினால், இரண்டாக மாற்றப்பட்டதால், மொத்த சாமான்களின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


சென்னையை விட்டுப் புறப்படும் போது மொத்தம் 12 பேக்கிங் ஆக இருந்தவை, ரயிலில் வரும் போது பங்கஜத்தால் 13 ஆக மாற்றப்பட்ட விபரம் யாருக்குமே தெரிய நியாயமில்லை. பங்கஜத்திற்கும் அது ஞாபகம் வராமல் போய் விட்டது.


அதிகாலை தூக்கக் கலக்கத்திலும், ரயிலை விட்டு இறங்க வேண்டும் என்ற அவசரத்திலும், அந்த ஆசாமி முகத்தில் மீண்டும் விழிக்கக் கூடாது என்ற எண்ணத்திலும், அஸ்திக் கலசம் வைத்துக் கட்டப்பட்ட அட்டைப் பெட்டி மட்டும், ரயிலில் உட்காரும் இடத்திற்கு கீழே மிகவும் உள்ளடங்கி ஒரு ஓரமாக இருந்ததால், ரயிலிலேயே மறந்து வைத்து விட்டு, மீதி சாமான்களை மட்டும் எண்ணி மொத்தம் 12 அயிட்டங்கள் மிகச் சரியாக உள்ளன என்ற திருப்தியில் அலஹாபாத் ஸ்டேஷன் வந்ததும், இறங்கி டாக்ஸி பிடித்து சங்கர மடத்துக்கு வந்து விட்டிருந்தனர்.


கொஞ்சம் கூட, பொறுப்போ கவனமோ இல்லை என, பங்கஜமும் பட்டாபியும் ஒருவர் மேல் ஒருவர் பழி போட்டுக் கொண்டிருந்தனர்.


குழந்தைகள் ரவியும் கமலாவும், சங்கர மடத்து வாசலில் புல்வெளியில் படுத்திருந்த பசுக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பசு ஒன்று தன் முதுகில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களையும், கொசுக்களையும் விரட்டி விரட்டி அடிக்க, தன் நீண்ட வாலைச் சுழட்டிச் சுழட்டி அடிப்பதையும், காதுகள் இரண்டையும் ஆட்டிக்கொண்டே இருப்பதையும் , அதன் கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள சிறிய மணி ஒன்று, அந்தப் பசுவின் அசைவுகளுக்கு ஏற்ப எழுப்பும் இனிய ஒலியையும், ஆராய்ச்சி செய்த வண்ணம் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர்.


பெரியவள் விமலா மட்டும், வந்த இடத்திலும், பட்டாபி, பங்கஜத்தின் வாய்ச் சண்டை முற்றி கைச் சண்டையாக மாறாதவாறு, அவர்களைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.


கை நிறையப் பணம் உள்ளது. போதாக்குறைக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட், ஏ.டி.எம். கார்டு எல்லாம் உள்ளது. ரயிலில் தவற விட்ட, தன் அன்புத் தந்தையின் அஸ்தியை இந்தப் பணத்தால் வாங்கிவிட முடியுமா? பார்ஸலில் வரவழைக்கத் தான் முடியுமா? பட்டாபி கண் கலங்கினார்.


இங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து, வாராணசி ஸ்டேஷன் வரை ரயிலைத் துரத்திப் பிடித்துப் பார்த்து விட்டு வரலாமா? அதற்குள் யாராவது அதை எடுத்துக் கொண்டு போய் இருப்பார்களோ? அதைப் பிரித்துப் பார்த்து ஏமாந்து போய் குப்பை என்று தூக்கிப் போட்டு ஒருவேளை உடைத்திருப்பார்களோ? பட்டாபிக்கு இவ்வாறு பலவித எண்ணங்கள் தோன்றி வந்தன.


எதற்காக காசிக்குப் புறப்பட்டு வந்தோமோ, அந்தக் காரியமே நடக்குமோ நடக்காதோ என்ற கவலையில் அடிவயிற்றைக் கலக்கிய பட்டாபிக்கு, ஸ்நானம் செய்யவோ, ஆகாரம் செய்யவோ எதுவும் தோன்றாமல் பித்துப் பிடித்தாற்போல ஆகி, தவியாய்த் தவிக்க ஆரம்பித்தார்.


எப்படியும் ஒரு டாக்ஸி பிடித்துப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து ரத்தக் கொதிப்பு மாத்திரை ஒன்றுக்கு இரண்டாகப் போட்டுக் கொண்டு , கிளம்பத் தயாராகி விட்டார்.“பூஜை அறையிலிருக்கும் சங்கர மடத்து சாஸ்திரிகள் வெளியே வரட்டும். அவரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போங்கோ” என்று பட்டாபியின் பதட்டத்துடன் கூடிய பயணத்தை சற்றே ஒத்தி வைத்தாள் பங்கஜம்.


[7]

தன் நித்யப்படி பூஜையை முடித்துக் கொண்டு வெளியே வந்த சங்கரமடத்து சாஸ்திரிகளிடம் விவரம் சொல்ல பட்டாபியும், பங்கஜமும் நெருங்கவும், மடத்து வாசலில் யாரோ ஆட்டோவில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.



சங்கர மடத்து வாசலில் புல்வெளிகளில் படுத்திருந்த பசுமாடுகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ரவி + கமலா வின், கவனம் தங்கள் அருகில், படபடவென்ற சப்தத்துடன் வந்து நின்ற ஆட்டோ பக்கம் திரும்பியது.


“கோன் ஐஸ் வாங்கித் தந்த, ‘உடம்பெல்லாம் உப்புச் சீடை’ த் தாத்தா இங்கேயும் வந்துட்டார்டீ” எனக் கத்திக்கொண்டே, ரவியும் கமலாவும், சங்கர மடத்தின் உள்பக்கம் இருந்த விமலாவிடம் சொல்ல வேகமாக ஓடி வந்தனர்.



“வாங்கோ, வாங்கோ, வரணும்! தங்கள் வரவு நல்வரவு ஆகணும்., உட்காருங்கோ! என நாற்காலியைப் போட்டு, மின் விசிறியைத் தட்டி விட்டு, தன் மேல் அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கொண்டு, மிகவும் பெளவ்யமாக, வந்தவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார், சங்கரமடத்து சாஸ்திரிகள்.



வந்தவர் வேறு யாருமில்லை. இவர்களுடன் கூடவே ரயிலில் வந்த பயணி (பிராணி) தான். அவர் கையில் அஸ்திக்கலசம் வைத்துக் கட்டப்பட்ட இவர்களின் அட்டைப்பெட்டி பார்ஸல், இருந்தது. 



இதைப் பார்த்த பட்டாபிக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. இருக்காதா பின்னே! அவருடைய தந்தையின் உயிர் அல்லவா அடங்கி ஒடுங்கி அதனுள் சாம்பலாக உள்ளது! 

அந்தப் பவித்ரமான வஸ்துவை இந்த அருவருப்பான மனுஷன் கையால் தூக்கி வரும்படி ஆகிவிட்டதே என்ற சிறு வருத்தமும் மனத்தின் ஆழத்தில் ஏற்பட்டது, பட்டாபிக்கு. 




“இந்த அட்டைப்பெட்டியை மறந்து போய் ரயிலிலேயே வைச்சுட்டு, நீங்கள் எல்லோரும் அலஹாபாத் ஸ்டேஷனில் இறங்கிட்டேள் போலிருக்கு. நான் என் பாத ரக்ஷைகளை (செருப்புகளை) எடுக்கக் குனிந்த போது தான் இது என் கண்ணில் பட்டது.






உங்களுடையாகத் தான் இருக்கும்; இங்கு எங்காவது தான் தங்கியிருப்பேள்னு யூகித்துக் கொண்டு வந்தேன்.



நான் வாராணசி வரை போக வேண்டியவன். ரயில் கிளம்பாததால், இந்த அட்டைப் பெட்டியை உத்தேசித்து, நானும் அலஹாபாத்திலேயே இறங்கி விட்டேன்.

நல்லவேளையாக உங்களையும் மறுபடியும் பார்த்து விட்டேன். இந்தாங்கோ ஜாக்கிரதை” என்று சொல்லி பட்டாபியிடம் நீட்டினார். 


கைகள் நடுங்க நன்றியுடன் வாங்கிக்கொண்டார் பட்டாபி. 


அட்டைப் பெட்டியில் உள்ள பொருள் அஸ்திக்கலசம் என்பதை சங்கர மடத்து சாஸ்திரிகள் மூலம் கேள்விப்பட்ட அந்தப் பெரியவர், அதைத் தான் தூக்கி வந்ததால் ஏற்பட்ட தீட்டுக்கழிய, சாஸ்திரப்படி ஸ்நானம் செய்ய மடத்தின் கொல்லைப்புறம் இருந்த கிணற்றடிக்கு விரைந்தார். 



அதற்குள், அந்தப் பெரியவரின் அருமை பெருமைகளை சங்கர மடத்து சாஸ்திரிகள், பட்டாபி தம்பதிக்கு விளக்க ஆரம்பித்தார். 


“நான்கு வேதங்களும், அனைத்து சாஸ்திரங்களும் கரைத்துக் குடித்தவர். நானே அவரிடம் வேதம் படித்தவன். என்னைப் போல எவ்வளவோ பல்லாயிரம் பேர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுத்த மஹான். எங்களுக்கெல்லாம் அவர் தான் குருநாதர்.


அவா விளையாட்டுக்குக்கூட பொய் பேசாதவா. எதற்கும் கோபமே படாத தங்கமான குழந்தை மனஸு அவாளுக்கு.



அவாளுக்கு சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி பக்கம், காவேரிக்கரை ஓரம் ஏதோ ஒரு கிராமம். ஏழு தலைமுறைகளா வேதம் படித்து வரும் குடும்பம். வேதத்தை ரக்ஷிக்கும் பரம்பரையில் வந்தவா !







சங்கர மடத்து ஆச்சார்யாள், ஜகத்குரு மஹாபெரியவா ஆக்ஞைப்படி, கடந்த பல வருஷங்களாக இந்தப் பக்கமே தங்கி விட்டார்கள். இந்த கங்கைக் கரைப் பக்கம், இவாளைத் தெரியாதவாளே கிடையாது. 




வேதம் படிச்சு முடிச்சவாளுக்கெல்லாம் “வித்வத் சதஸ்” ன்னு, ஒரு பெரிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பரீட்சை மாதிரி நடக்கும். அதில் இவா தான் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மாதிரி உட்கார்ந்து, தப்பாச் சொல்றவாளை டக்குனு பிடிச்சுத் திருத்திக் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு ரொம்ப பாண்டித்யம் உள்ளவா !



ஒரு ஈ எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்க மாட்டார்கள். லோகத்திலே உள்ள எல்லா ஜனங்களும் எல்லா ஜீவராசிகளும் க்ஷேமமாய் இருக்கணும்னு எப்போதுமே பிரார்த்திப்பவர்கள். 


இந்த மஹான் உங்களுடன் ஒரே ரயிலில், ஒரே கம்பார்ட்மெண்டில், பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் பயணம் செய்தது நீங்கள் செய்த ஒரு பெரிய பாக்யம்தான்னு சொல்லணும். நீங்களோ அல்லது உங்களின் அப்பாவோ செய்த புண்ணியம் தான், நீங்கள் ரயிலில் தவற விட்ட உங்க அப்பாவின் அஸ்திக்கலசத்தை, இந்த வேதவித்தாகிய ஒரு பெரிய மஹான், தன் கைப்படவே தூக்கி வரும்படி நேர்ந்துள்ளது. கங்கையில் அதைக் கரைப்பதற்கு முன்பு, இந்த ஒரு பெரிய மஹான் கைப்பட்டுள்ளதால், உங்கள் தகப்பனாருக்கு சொர்க்கம் தான் என்பது இப்போது உறுதியாகி விட்டது, பாருங்கோ !





அந்த அட்டைப்பெட்டியில் உள்ளே உள்ளது என்ன ஏது என்றே தெரியாமல், பத்திரமாக உங்களிடம் சேர்த்திருக்கிறா பாருங்கோ! ; எல்லாம் பகவத் சங்கல்ப்பம்.





நீங்கள் மிகவும் ஸ்ரத்தையாக காசிக்கு வந்து கங்கையில் உங்கள் தந்தையின் அஸ்தியைக் கரைக்கணும்னு வந்த காரியம் வீண் போகவில்லை, பாருங்கோ !



நான் அவாள்ட்ட வேதம் படிக்கும் போது, மிகவும் தேஜஸுடன் அழகாக மினுமினுப்பாக இருந்தவர் தான் இந்த என் குருநாதராகிய மஹான்” எனச் சொல்லி, தான் அவரிடம் பாடசாலையில் படிக்கும்போது எடுக்கப் பட்ட (கருப்பு வெள்ளை) க்ரூப் போட்டோ ஒன்றைக் காட்டினார்.



“ஏதோ ஒரு பூர்வ ஜன்ம பாவம்; கடந்த ரெண்டு வருஷமாத்தான் இதுபோல அவருடைய வெளித் தோற்றத்தை இப்படி ஆக்கியுள்ளது” என மிகவும் வருத்தத்துடன் சொல்லி முடித்தார்.



சங்கர மடத்து சாஸ்திரிகள் வாயால், ரயிலில் தன்னுடன் கூடவே பயணித்தவரின் மஹிமைகள் பற்றிச் சொல்லுவதை உன்னிப்பாகக் கேட்டதும், யாரோ ஒரு சாட்டையால் தன்னை சுழட்டிச் சுழட்டி அடிப்பது போல உணர்ந்தார், பட்டாபி. 





[8]

சமையல் கட்டுக்குள் நுழைந்த சங்கர மடத்து சாஸ்திரிகள், தன் தர்ம பத்னியிடம் “என் குருஜி - பாடசாலை வாத்யார் - பெரியவர் வந்திருக்கார். ஸ்நானம் பண்ண கொல்லைப்பக்கம் கிணற்றடிக்குப் போயிருக்கார். இப்போ வந்துடுவார்.



அவர் வந்ததும் சாப்பிட சூடா கோக்ஷீரம் (பசும்பால்) பனங்கல்கண்டு போட்டு,  வெள்ளி டவரா டம்ளரில் கொடுத்துடு.

பிறகு நம் ஆத்திலேயே சாப்பிடச்சொல்லி அவாளை நாம் வேண்டிக் கேட்டுக்கொள்வோம். பாயஸம் பச்சிடியோட சாப்பாடு தயார் செய்துடு. நுனி இலை நேத்திக்கு வாங்கி வந்ததே இருக்கும்னு நினைக்கிறேன்; முடிஞ்சாக் கொத்துமல்லித் தொகையல் கொஞ்சம் அரைச்சுடு. அதுனா அவா கொஞ்சம் இஷ்டமாச் சாப்பிடுவான்னு எனக்கு ஏற்கனவே நன்னாத் தெரியும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். 



ஸ்நானம் செய்துவிட்டு மடி வஸ்திரம் அணிந்து கொண்டு வந்து அமர்ந்த பெரியவரின் கைகளில் இருந்த கொப்புளத்தில் ஒன்றை மீண்டும் திருகி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான், ரவி. 


அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிக் கொண்டிருந்த, பட்டாபி பங்கஜம் தம்பதியின் கண்ணீர் அவரின் பாதங்களை நனைத்துக் கொண்டிருந்தது. 


“மாமா ... என்னை நீங்கள் தயவு செய்து க்ஷமித்துக் கொள்ளணும் (மன்னித்துக் கொள்ளணும்).


ரயிலிலே வரும்போது, தாங்கள் யார், தங்கள் மஹத்துவம் என்ன என்று தெரியாமல், அடியேன் ஏதேதோ வாய்க்கு வந்தபடி பேசி விட்டேன்.


பாவத்தைப் போக்க வந்த இடத்தில், பல்வேறு பாபங்களை மேலும் சம்பாதித்து விட்டேன். இப்பொது நான் மஹாபாவியாகி விட்டேன்.

தயவுசெய்து இந்த மிகச்சிறிய தொகையான இருபதாயிரம் ரூபாயை தங்களுக்கு நான் தரும் வித்வத் ஸம்பாவனையாக தாங்கள் ஏற்றுக்கொண்டு, எங்களை மனப்பூர்வமாக மன்னித்து ஆசீர்வதிக்கணும். அப்போது தான் குற்ற உணர்வு நீங்கி என் மனம் கொஞ்சமாவது சற்று ஸாந்தி அடையும். தயவு செய்து மறுக்காமல் ஏத்துக்கோங்கோ” என்று சொல்லி ஒரு தட்டில் வெற்றிலை பாக்குப் பழங்களுடன், அந்தப் பணம் ரூ. 20000 த்தையும் அவர் முன்பாக வைத்து சமர்ப்பித்து விட்டு, பிறகு தன் இரு கன்னங்களிலும், தன் கைகளால், நல்ல வலி ஏற்படும்படி பளார் பளாரென்று, அறைந்து கொண்டார், கண்ணீருடன் பட்டாபி. 


இதைக் கேட்ட அந்தப் பெரியவர் ஒரு குழந்தை போல சிரித்துக் கொண்டே பேசத் தொடங்கினார்:

“நீங்கள் எந்தத் தவறும் செய்ததாக நான் நினைக்கவே இல்லையே. நான் அவற்றையெல்லாம் அவ்வப்போதே மறந்தும் மன்னித்தும் விடுவது தான் என் வழக்கம்.

கோபதாபங்கள் என்பதெல்லாம், சாதாரணமாக எல்லா மனிதர்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டு வரும் இயற்கையான ஒரு செயல். ஞானம் ஏற்படும் வரை தான் கோபதாபங்கள் இருக்கும்.

ஞானம் வந்து விட்டால் இத்தகைய தேவையில்லாமல், நம்மை ஆட்டிப் படைக்கும் அல்ப விஷயங்களெல்லாம், நமக்கு மறந்தே போய் விடும்.
கோபங்களையெல்லாம் கட்டுப்படுத்தி, நடப்பது யாவும் நம் செயல் அல்ல, நமக்கெல்லாம் மேலே கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார்; அவர் பார்த்து அவ்வப்போது நமக்குத் தரும் சுக துக்கங்களை சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவம் ஒரு சிலருக்கு மட்டுமே, ஞானத்தால் ஏற்படும்.

அந்த ஞானம் என்பதும் பகவத் க்ருபை இருந்தால் மட்டுமே ஏற்படுவது. தொடர்ந்து பக்தி செய்யச்செய்ய அந்த மனப் பக்குவம் தங்களுக்கும் சீக்கரமாகவே ஏற்பட்டுவிடும்.

அடுத்த க்ஷணம் யாருக்கு என்ன நடக்கும் என்பது, நம் பூர்வ ஜன்மத்து பாவ புண்ணியச் செயல்களால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று.

அதனால் நீங்கள் என்னை ரயிலில் மரியாதைக் குறைவாகப் பேசியதாகச் சொல்லுவதோ, நான் அதற்காக வருத்தப்பட்டதாக தாங்கள் நினைத்துக்கொண்டு வருந்துவதோ முற்றிலும் தவறான ஒரு அபிப்ராயமே.

நடந்து முடிந்தது, இப்போது நடப்பது, இனி நடக்கப்போவது எல்லாமே அவன் செயல் தான்.

உங்களிடம் உண்மையாகவே கோபப்பட்டவனாக நான் இருந்திருந்தால், நீங்கள் மறந்து போய் ரயிலில் விட்டுச்சென்ற இந்தப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு மீண்டும் உங்களை சந்திக்க விரும்பியிருக்குமா என் மனஸு?

எது எது, எப்படி எப்படி, எப்போ எப்போ, யார் யார் மூலம் நடக்கணுமோ, அது அது, அப்படி அப்படியே, அப்போ அப்போ, அவரவர்கள் மூலம் அவனால் நடத்தி வைக்கப்படுகிறது என்ற உண்மையை எல்லோருமே உணர்ந்து கொண்டு விட்டால், இந்த லோகத்தில் சண்டை சச்சரவுகளுக்கே இடம் இருக்காது.

நமது வேத சாஸ்திரங்கள் படித்தவாளுக்குத் தான் இந்த உண்மைகள் ஓரளவுக்குத் தெரிந்து, அந்த மாதிரியான மனப் பக்குவம் ஏற்படும்.

அது போன்ற மனப் பக்குவம் வந்து விட்டால், எந்த வயதை எட்டினாலும், நாமும் தங்கள் குழந்தை ரவி போல, கள்ளங்கபட மில்லாத, எதற்கும் பயம் என்பதே இல்லாத, தெளிவான மன நிலையை அடைந்து, பிரகலாதன் போல மாறி, நடப்பதெல்லாம் அந்த நாராயணன் செயல் என்பதை சுலபமாக உணர்ந்து விட முடியும்.

நீங்கள் எனக்கு ஸம்பாவனையாகக் கொடுக்க நினைக்கும் இந்தப் பணம் எதுவும் எனக்குத் தேவையே இல்லை. அதை எடுத்து முதலில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கோ!

அதற்கு பதிலாக, ஒரு வேளை நீங்களும் விருப்பப் பட்டால், நான் சொல்லுவதைச் செய்யுங்கோ!

இங்கு பக்கத்திலேயே ஒரு வேத பாடசாலையில் சுமார் அறுபது வித்யார்த்திகள் (வேதம் பயின்று வரும் ஏழைக் குழந்தைகள்) படிக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் வஸ்திரமும் (நாலு முழம் வேஷ்டியும் துண்டும்), குளிருக்குப் போர்த்திக்கொள்ள ஒரு போர்வையும் வாங்கிக் கொடுத்துடுங்கோ;






தங்கள் குழந்தை ரவி கையால் அந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிட பிஸ்கட் பாக்கெட்டோ, சாக்லேட்களோ அல்லது பழங்களோ விநியோகம் செய்யச் சொல்லுங்கோ. நம் ரவிப்பயல் போலவே அந்தக் குழந்தைகளும் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

நாளைக்கு இங்குள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்தால், எல்லா பாபமும் விலகி விடும். உங்களுக்கு சகல க்ஷேமமும் ஏற்படும்” என மனதார வாழ்த்தி கை தூக்கி ஆசீர்வதித்தார், அந்த வேத வித்தான பெரியவர்.





அந்தப் பெரியவரை உற்று நோக்கினார் பட்டாபி. அவர் இருந்த இடத்தில் “நடமாடும் தெய்வமாய், கருணைக் கடலாய் இன்றும் நம்மில் பலரின் உணர்வுகளில் வாழும் ஜகத்குரு காஞ்சீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள், ஸ்ரீ மஹாபெரியவா அவர்கள்” 



ஒரு நிமிடம் தோன்றி மறைந்தது பட்டாபியை மெய்சிலிர்க்க வைத்தது.







அழகிய உடலோ
அருவருப்பான உடலோ

உயிர் என்ற ஒன்று பிரிந்தபின்
அழுகக்கூடிய, 
நாறக்கூடிய
அப்புறப் படுத்த வேண்டிய   
பொருளாகி விடுகிறது.

அதை எரிக்க வேண்டிய 
அவசரமும், அவசியமும், நிர்பந்தமும் 
ஏற்படுகிறது.

எரிந்த அதன் சாம்பலில்

அழகும் இல்லை
அருவருப்பும் இல்லை.

சாம்பல் கரைக்கப்படும் கங்கையோ
என்றுமே புனிதமாகப் போற்றப்படுகிறது!


பெரியவர் சொல்லாமல் சொல்வது போலத் தோன்றியது, பட்டாபிக்கு.



-oooooooooo-
முற்றும்   
-oooooooooo-


ஓர் முக்கிய அறிவிப்பு


இறுதிப்பதிவாக HAPPY இன்று முதல் HAPPY என்ற தலைப்பில்

நான் என்னுடைய மகிழ்ச்சிகளை உங்கள் எல்லோருடனும் 

பகிர்ந்து  கொள்ள இருக்கிறேன். 

அந்தப்பதிவு இன்று இரவு 9 மணிக்கு வெளியாகும்.


காணத்தவறாதீர்கள்.

அன்புடன்


vgk











27. ரேவதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்:- 
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் 
[கருணாகரவல்லி அம்மன்] 





இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி 
(40கி.மீசென்று, அங்கிருந்து வேறு 
பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை 
(21 கி.மீ.,செல்ல வேண்டும். 


இங்கிருந்து 5 கி.மீ., தூரத்திலுள்ள 
காருகுடி என்னும் இடத்தில் உள்ளது.


27/27






என்னை இந்த வாரம் 07.11.2011 திங்கள் முதல் 13.11.2011 ஞாயிறு வரை தமிழ்மணத்தில் நட்சத்திரப்பதிவராக அறிமுகப்படுத்தி கெளரவித்த, தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு, விடைபெறுகிறேன். 

எனக்கு இதில் ஊக்கம் கொடுத்து ஒத்துழைப்பு அளித்த மற்ற அனைவரையும் இன்று இரவு வெளியிட இருக்கும் என் அடுத்த பதிவினில் சந்திக்க இருக்கிறேன். அனைவருக்கும் நன்றிகள். வணக்கம். 




என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
vgk ]
gopu1949.blogspot.com


-o- சுபம் -o-