என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 6 மே, 2011

எங்கெங்கும் எப்போதும் என்னோடு [ பகுதி 2 of 3 ]


அந்தக் காலத்தில் மனிதாபிமானம் மிக்கவர்கள், அவரவர் வீடு கட்டும்போது, வாசலில் பெரிய பெரிய திண்ணைகள் திண்டுடன் கட்டி வைப்பார்கள். வழிப்போக்கர்களும், ஊர் விட்டு ஊர் செல்வோரும், ஆங்காங்கே சற்று நேரம் இத்திண்ணைகளில் அமர்ந்து ஓய்வு எடுத்துச் செல்ல வசதியாக இருந்தது.  

ஆனால் நான் நடந்து செல்லும் இந்த நகரத்தின் மலையைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில், மனிதன் நடந்து செல்வதே மிகவும் கஷ்டமாக உள்ளது. கொஞ்சம் அசந்தால் நம் முழங்கையை ஒரு சைக்கிள்காரர் பெயர்த்துச் சென்று விடுவார்.  சற்று நம் நடையில் வேகம் காட்டினால் போச்சு - காலின் மேல் ஆட்டோவின் பின் சக்கரத்தை ஏற்றி விடுவார் ஒரு ஆட்டோக்காரர்.  இவர்களுக்காக சற்றே ஒதுங்கினால் நம் கால், ஆங்காங்கே தெருவில் வெட்டப்பட்டு, மூடப்படாமல் உள்ள சாக்கடைக் குழிக்குள் நம்மை இறக்கிவிடும்.  

இந்த லட்சணத்தில் கால் வீசி வேக வேகமாக நடக்க நான் என்ன ஒட்டடைக்குச்சியோ அல்லது ஓமக்குச்சியோ போல ஒல்லியானவனா என்ன! 

எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு கொஞ்ச தூரம் தான் சென்றிருப்பேன்.  மெயின் ரோட்டுக்கு குறுக்கே ஒரு சிறிய சந்து.  சந்து பொந்துகளுக்கெல்லாம் பஞ்சமில்லாத ஊரு எங்களுடையது.  சிறிய அந்த சந்தின் வலது பக்க முதல் வீடு பூட்டப்பட்டிருந்தது.  வாசலுக்கு இருபுறமும் இரண்டு மிகச்சிறிய தாழ்வான திண்ணைகள்.  என்னைப்போல உருவம் உள்ளவர்கள் திண்ணைக்கு ஒருவர் வீதம் மொத்தம் இருவர் மட்டும் மிகவும் கஷ்டப்பட்டு அமரலாம்.  

சந்துக்கு உள்ளடங்கிய திண்ணையில் என் உருவத்தில் முக்கால் வாசியானவரும் சற்றே குள்ளமான கறுப்பான ஒரு பெரியவர், கையில் செய்தித்தளுடன், அருகே ஒரு கைத்தடியை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.  கால் கடுத்துப் போன நான் அவர் அருகில் உள்ள மற்றொரு திண்ணையில் கஷ்டப்பட்டு குனிந்து உட்காரலாமா என யோசித்து என் கைக்குட்டையால் ஒரு தட்டுத் தட்டினேன். 

“வாங்கய்யா!  வணக்கம்.  உட்காருங்க!” என்றார் மிகுந்த உற்சாகத்துடன். 

“ஐயாவுக்கு எந்த ஊரு?  வீடு எங்கே?”  கனிவுடன் விசாரித்தார் அந்தப் பெரியவர்.   ஒருவருக்கொருவர் பரஸ்பர அறிமுகம் செய்து கொண்டோம்.

“நீங்கள் பிராமணர் தானே?” என்றார் மிகச்சரியாக என்னைப் பார்த்த மாத்திரத்தில்.

“ஜாதிகள் இல்லையடிப் பாப்பா” என்று முண்டாசுக் கவிஞர் சொன்னதை நினைவூட்டினேன்.  

“முண்டாசுக் கவிஞர் அந்தக் காலத்தில் சொன்னதை யாரு இப்போ பின்பற்றுகிறார்கள்?  நம் முண்டாசுப் பிரதமர் தான் ஜாதி அடிப்படையில் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு செய்யணும் என்று சொல்லி விட்டாரே” என்றார்.

அவரை அப்படியே கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் போல இருந்தது எனக்கு.  உலகச் செய்திகள், நாட்டுநடப்பு எல்லாவற்றையும் செய்தித்தாள் படிப்பதன் மூலம் விரல் நுனியில் வைத்திருந்தார் அந்தப் பெரியவர்.  85 வயதிலும் தெளிவான அனுபவம் மிக்க அறிவு பூர்வமான அவரின் பேச்சு என்னைக் கவர்ந்தது.

“நீங்கள் பிராமணர் தானே”  என்றார் மீண்டும் மறக்காமல்.

“அப்படித்தான் எல்லோரும் சொல்லுகிறார்கள்” என்றேன்.

“அப்போ நீங்க பிராமணர் ஜாதி இல்லீங்களா?”  என்றார்.

“ஜெயா டி.வி.  யில் “எங்கே பிராமணன்” பார்த்து வந்ததால் எனக்கே இதில் இப்போது ஒரு பெரிய சந்தேகம் ” என்றேன். 

புரிந்து கொண்டவர் சிரித்துக்கொண்டே தன்னுடைய ஜாதியைக் கூறினார், நான் கேட்காமலேயே.   பிரபல ஜவுளிக்கடைகளில் விற்பனையாளராக இருந்தவர்.   ஒரே பெண், அவளின் கணவருக்கும் ஜவுளிக்கடையில் தான் வேலையாம்.  ஒரு பேத்தி, ஒரு பேரன்.  வாடகை வீடு.  அதே சின்ன சந்தின் கடைசிக்குப் போய் வலது பக்கம் திரும்பினால் ஒரு பத்தடி தூரத்தில் அவரின் வீடு.   பெண், மாப்பிள்ளை பேரன் பேத்தியுடன் சேர்ந்தே இருக்கிறார். 

அவருக்கும் முழங்காலில் முட்டி வலியாம்.  குச்சி ஊன்றி நடப்பதாக தன் கைத்தடியை எடுத்துக் காண்பித்துச் சொன்னார்.    அந்தக் கைத்தடி பளபளவென்று அழகாக உறுதியாக நல்ல வேலைப்பாடுகளுடன் புதியதாக வாங்கப்பட்டதாகத் தெரிந்தது.  61 வயதாகும் முன்பே நடக்கக் கஷ்டப்படும் நான், 85 வயதாகும் அவரை எண்ணி வியந்து போனேன்.

மாலை வெய்யில் குறையும் நேரமாக இருந்தது.  அருகில் சைக்கிளைத் தள்ளியபடியே,  கையில் அரிவாளுடன் ஒருவரைக் கண்டேன்.  அவரின் சைக்கிள் கம்பிகளில் நிறைய இளநீர் தொங்கிக்கொண்டிருந்தன.  எனக்கும் அந்தப் பெரியவருக்கும் இரண்டு இளநீர், நல்ல வழுக்கையாக, பெரியதாக, சுவையான நீர் நிறைந்ததாகச் சீவச் சொன்னேன்.    இளநீர் குடித்துப் புத்துணர்ச்சி அடைந்த அந்தப் பெரியவர் என்னை ஒருவித வாஞ்சையுடன் பார்த்து கண்களால் நன்றி கூறினார்.

7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடனும், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுடனும் பொறுமையாகப் பேச்சுக்கொடுத்துப் பேசினால், நமக்கு நிறைய புதுப்புது விஷயங்கள் கிடைக்கும்.   அவர்கள் இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வை புதுமையானது, வித்யாசமானது, புதுப்புது அனுபவங்களை எடுத்துச் சொல்லக்கூடியது.    நான் இன்று இந்தப் பெரியவரை சந்தித்து நட்புடன் உறவாடி உரையாடியதில் அவருக்கும் சந்தோஷம் எனக்கும் ஏதோவொரு மனத் திருப்தி கிடைத்தது.

“உங்களை இன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி; அடிக்கடி இந்தப் பக்கம் வரும் போதெல்லாம் நான் இந்தத் திண்ணையில் இருக்கிறேனா என்று பார்த்து விட்டு, கொஞ்சம் நேரம் பேசிவிட்டுப் போங்க” என்றார்.

அவரிடம் பிரியா விடை பெற்று நான் எழுந்துகொள்ள முயன்றேன்.

தொடரும்

35 கருத்துகள்:

  1. பெயரில்லா6 மே, 2011 அன்று PM 8:45

    ///அந்தக் காலத்தில் மனிதாபிமானம் மிக்கவர்கள், அவரவர் வீடு கட்டும்போது, வாசலில் பெரிய பெரிய திண்ணைகள் திண்டுடன் கட்டி வைப்பார்கள். வழிப்போக்கர்களும், ஊர் விட்டு ஊர் செல்வோரும், ஆங்காங்கே சற்று நேரம் இத்திண்ணைகளில் அமர்ந்து ஓய்வு எடுத்துச் செல்ல வசதியாக இருந்தது. /// உண்மை தான் திண்ணைகள் கட்டி ஓலையாலே வேய்ந்திருப்பார்கள் அந்த வழியால் செல்வர்களுக்கு இளைப்பாற மிக குளிர்ச்சியாக இருக்கும் ஆனால் இப்போது அதெல்லாம் காண முடிவதில்லை. அத்தோடு நம்ம ஊர்களிலே தெருக்களில் தொட்டிகள் கட்டி நீர் நிரப்பியிருப்பார்கள் அந்த வழியால் செல்லும் கால்நடைகள் தாகத்தை தீர்ப்பதற்காக ஆனால் அதெல்லாம் இப்போ பார்க்க முடிவதில்லை..

    பதிலளிநீக்கு
  2. அவர் என்ன சொன்னார் அப்படி

    பதிலளிநீக்கு
  3. சரளமாய் கதை சொல்லும் ஆற்றல் உங்களுக்கு..
    கூடவே ரசனையுடன் பயணிக்கும் சுகம் எங்களுக்கு!

    பதிலளிநீக்கு
  4. 7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடனும், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுடனும் பொறுமையாகப் பேச்சுக்கொடுத்துப் பேசினால், நமக்கு நிறைய புதுப்புது விஷயங்கள் கிடைக்கும்.


    ...absolutely true. கதை சொல்வது மட்டும் அல்ல - நகைச்சுவையும் வாழ்க்கை குறித்த பார்வையும் அருமையாக இணைந்து வந்து இருப்பது, ரசிக்க வைக்கிறது. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  5. மிக மிகப் பிரமாதம் ஸார்..கதை ஜோர்ரா செல்கிறது...

    பதிலளிநீக்கு
  6. திண்ணை வைத்த வீடு, இதமான காற்று, குடிக்க கொஞ்சம் இளநீர், சுவைக்க கொஞ்சமாய் தின்பண்டங்கள், பேச நல்ல நட்பு.. இருந்துவிட்டால் சந்தோஷம் தானே… திண்ணையில் இருந்து எழுந்த பின் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்…

    பதிலளிநீக்கு
  7. Oru guess - ithu irandu varudaththukku munnadi ezhuthi prasuram aana ungal kathaiyaa?!! (kathaanayagarin vayadhai vaiththu) :-))

    பதிலளிநீக்கு
  8. நானும் உங்கள் கூடத்தான் நடந்து வருகிறேன்
    நன்றாகத்தான் இருக்கிறது
    "பொடி"மூன்றாவது பதிவில்தான்
    இருக்கு போல இருக்கு
    உங்கள் சரக்கும் முறுக்கு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. //7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடனும், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுடனும் பொறுமையாகப் பேச்சுக்கொடுத்துப் பேசினால், நமக்கு நிறைய புதுப்புது விஷயங்கள் கிடைக்கும். அவர்கள் இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வை புதுமையானது, வித்யாசமானது, புதுப்புது அனுபவங்களை எடுத்துச் சொல்லக்கூடியது.///


    சத்தியமான வார்த்தைகள்....

    பதிலளிநீக்கு
  10. அருமையான பதிவு, அசத்துங்க அசத்துங்க.....

    பதிலளிநீக்கு
  11. நடைமுறை அனுபவம் பகிர்தல், பெரியவர்களோடு பழகும் பண்பு, நல்ல அனுபவம், எங்களுக்கு இது பாடம்....

    பதிலளிநீக்கு
  12. இந்த கதையின் முதல் பதிவில் நான்,நான் என்று குறிப்பிட்டபடியால் நீங்கள்தான் என்று நினைத்து உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினோம்,

    இந்த பதிவிலும் நாயகனின் பெயரை காணுமே?
    சஸ்பென்சாக இருக்கே,

    இந்த பதிவில் நாயகன் போறபோக்கில் நிறைய விசியங்களை உணரவைத்துள்ளார்

    பதிலளிநீக்கு
  13. \\7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடனும், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுடனும் பொறுமையாகப் பேச்சுக்கொடுத்துப் பேசினால், நமக்கு நிறைய புதுப்புது விஷயங்கள் கிடைக்கும்.//

    ரொம்ப சரி.
    குழந்தைகள் உலகம் நாம் தவற விட்டது.
    70 வயது உலகம் நமக்கு கிடைக்காதது.
    ( கிடைச்சாலும் வேண்டாம்பா) .

    பதிலளிநீக்கு
  14. ///7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடனும், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுடனும் பொறுமையாகப் பேச்சுக்கொடுத்துப் பேசினால், நமக்கு நிறைய புதுப்புது விஷயங்கள் கிடைக்கும்///

    எங்களைப் போல வெளி நாட்டில் வசிப்பவர்களுக்கு பேச ஆள் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக உங்களைப் போன்ற பெரியவர்கள்( ரமணி சார், சாகம்பரி,நீங்கள்) எழுதும் பதிவை படித்தாலே நிறைய புது புது விஷயங்கள் கிடைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  15. கதை நன்றாக போகிறது...என்ன பேசினார்கள்??

    பதிலளிநீக்கு
  16. திண்ணைப் பேச்சு கூட எமது கலாச்சாரத்தின் ஒரு பகுதிதானே! அதில் இருந்து பேசுவது எவ்வளவு சுகமானது! அந்த நினைவுகளை மீட்டித் தந்த உங்களுக்கு நன்றிகள்!!!

    பதிலளிநீக்கு
  17. யே கலக் கலக்! யே கலக் கலக் குனு கலக்கறீங்க கோபு சார். உங்க எழுத்தப்படிக்காம ஒருநாள் டெய்லி ஷீட் காலண்டரைக் கிழிக்க மனம் நோவுது. ஃபீல் பண்ண வெக்காம தெனம் எதுனாச்சும் எழுதுங்க ப்ளீஸ்.

    பதிலளிநீக்கு
  18. அந்த‌ முண்டாசு க‌விஞனும்,
    இந்த‌ முண்டாசு த‌லைவ‌னும்
    முற்றிலும் வேறு வேறான‌வ‌ர்க‌ள் தான்.
    அவ‌ர் அடிமை கண்டு பொங்கினார்.
    இவ‌ர் அடிமை சாஸன‌ம் த‌ருகிறார்.
    அவ‌ர் சிறுமை க‌ண்டு சீறினார்,
    இவ‌ர் சிறுபான்மை க‌ண்டு சுருங்கினார்.

    பதிலளிநீக்கு
  19. உலகச் செய்திகள், நாட்டுநடப்பு எல்லாவற்றையும் செய்தித்தாள் படிப்பதன் மூலம் விரல் நுனியில் வைத்திருந்தார் அந்தப் பெரியவர். 85 வயதிலும் தெளிவான அனுபவம் மிக்க அறிவு பூர்வமான அவரின் பேச்சு என்னைக் கவர்ந்தது.//
    நடமாடும் பல்கலைக் கழகம்???

    பதிலளிநீக்கு
  20. நல்ல விறு விருப்பான நடையில் நடை பயணம் .

    பதிலளிநீக்கு
  21. அன்புடன் வருகை தந்து, மதிப்புவாய்ந்த கருத்துக்கள் கூறி, பாராட்டி உற்சாகப்படுத்தியுள்ள அருமை உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    இந்தச்சிறுகதைத்தொடரின் இறுதிப்பகுதி நாளை 08.05.2011 ஞாயிறு வெளியிடப்படும்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  22. Both age group members in my home. My Father is on 70's My daughter is on 2... They are playing each together and Teaching Me, and Wife & Mother More and more.

    Finally You Say the T R U T H.
    Thank you a lot

    பதிலளிநீக்கு
  23. Vadamally said...
    //Both age group members in my home. My Father is on 70's My daughter is on 2... They are playing each together and Teaching Me, and Wife & Mother More and more.

    Finally You Say the T R U T H.
    Thank you a lot//

    புதிதாக வருகை தந்துள்ள [என்றும் வாடாத மல்லியாகிய] வாடாமல்லியாகிய தங்களை வருக வருக வருக என வரவேற்கிறேன். நீங்களும் திருச்சிக்காரர் என்று அறிந்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். 70 வயது தந்தையும், 2 வயது மகளும் இருப்பதாகச்சொல்லியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. அவர்கள் இருவருக்கும் நன்கு ஒத்துப்போகும். அவர்கள் இருவரும் சேர்ந்து விளையாடினாலும், பேசினாலும் தாங்கள் குறிப்பிட்டது போல, மற்ற உங்கள் மூவருக்கும், ஏராளமான பாடங்கள் கற்றுக்கொள்ள ஏதுவாகும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. “முண்டாசுக் கவிஞர் அந்தக் காலத்தில் சொன்னதை யாரு இப்போ பின்பற்றுகிறார்கள்? நம் முண்டாசுப் பிரதமர் தான் ஜாதி அடிப்படையில் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு செய்யணும் என்று சொல்லி விட்டாரே” என்றார்.


    நெத்தியடி நிகழ்கால வாக்கியம்

    நிறைவாய் உங்களின் அந்த உணவு வகை வர்ணிக்கும் பாங்கே ஒரு தனி சுவைதான் ஐயா
    அற்புதமான கதவு திறந்த பதிவு

    பதிலளிநீக்கு
  25. A.R.RAJAGOPALAN said...
    “முண்டாசுக் கவிஞர் அந்தக் காலத்தில் சொன்னதை யாரு இப்போ பின்பற்றுகிறார்கள்? நம் முண்டாசுப் பிரதமர் தான் ஜாதி அடிப்படையில் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு செய்யணும் என்று சொல்லி விட்டாரே” என்றார்.


    //நெத்தியடி நிகழ்கால வாக்கியம்

    நிறைவாய் உங்களின் அந்த உணவு வகை வர்ணிக்கும் பாங்கே ஒரு தனி சுவைதான் ஐயா
    அற்புதமான கதவு திறந்த பதிவு//

    வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  26. //7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடனும், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுடனும் பொறுமையாகப் பேச்சுக்கொடுத்துப் பேசினால், நமக்கு நிறைய புதுப்புது விஷயங்கள் கிடைக்கும். அவர்கள் இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வை புதுமையானது, வித்யாசமானது, புதுப்புது அனுபவங்களை எடுத்துச் சொல்லக்கூடியது. //

    அருமையான வரிகள் சார். இதுவரை அறிந்திராத புது விஷயமாக இருக்கிறது.

    உண்மைதான், அணுகி நுணுகிப் பார்த்தால்தான் தெரிகிறது. அவர்கள் இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வை புதுமையானது,வித்யாசமானது, புதுப்புது அனுபவங்களை எடுத்துச் சொல்லக்கூடியது.

    பதிலளிநீக்கு
  27. இப்போதெல்லாம் யார் கைத்தடி வைத்துக் கொள்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  28. இது போல காலை வாக் போவதில் நல்ல நட்புகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    பதிலளிநீக்கு
  29. //வழிப்போக்கர்களும், ஊர் விட்டு ஊர் செல்வோரும், ஆங்காங்கே சற்று நேரம் இத்திண்ணைகளில் அமர்ந்து ஓய்வு எடுத்துச் செல்ல வசதியாக இருந்தது. //

    அது சரி. திண்ணை இல்லாத போதே திருடர்களின் தொல்லை தாங்க முடியல. இதுல திண்ணை வெச்சு வீடு கட்டினா அவ்வளவுதான்.
    //“உங்களை இன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி; //

    எங்களுக்கும் உங்கள் பதிவுகளைப் படிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    //7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடனும், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுடனும் பொறுமையாகப் பேச்சுக்கொடுத்துப் பேசினால், நமக்கு நிறைய புதுப்புது விஷயங்கள் கிடைக்கும். //

    ஆமாமாம். ஆனால் சில சமயத்துல அம்மாடி. ஒரு நாள் முழுக்க பாட்டி ‘சும்ம கேசன’ ஸ்லோகம் சொல்லுன்னு கேட்டுண்டே இருந்தா. என்ன கேக்கறான்னு புரிவவே இல்லை. மறு நாள் கார்த்தால பிள்ளையாருக்கு ‘ஸுமுகஸ்சைகதந்தஸ்ச கபிலோ கஜ கர்ண’ ந்னு ஆரம்பிச்ச உடனே எங்கிருந்தோ ஓடி வந்து இது தான் ’சும்ம கேசன’, இதைத்தான் பாட்டி கேட்டேன். நீ மறந்து போயிட்டயான்னு கேட்டா. விழுந்து விழுந்து சிரித்தேன்.









    -

    பதிலளிநீக்கு
  30. இப்பத்த வூடுகள்ல எங்க திண்ணைலா கீது. வெவரமா விசாரிக்குர
    ஆளுகளும் எங்கன இருக்காக.

    பதிலளிநீக்கு
  31. 7-வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமும் 70-வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களிடமும் பேச்சுக் கொடுத்தால் நிறைய விஷயங்கள் கிடைக்கும் என்பது உண்மைதான். அந்த பெரியவர் மூலமா என்ன விஷயம் தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  32. புது பாத்திரம்...சுவாரசியம்...//
    அவரிடம் பிரியா விடை பெற்று நான் எழுந்துகொள்ள முயன்றேன்.// ஏஏன்...

    பதிலளிநீக்கு
  33. //7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடனும், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுடனும் பொறுமையாகப் பேச்சுக்கொடுத்துப் பேசினால், நமக்கு நிறைய புதுப்புது விஷயங்கள் கிடைக்கும். அவர்கள் இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வை புதுமையானது, வித்யாசமானது, புதுப்புது அனுபவங்களை எடுத்துச் சொல்லக்கூடியது. நான் இன்று இந்தப் பெரியவரை சந்தித்து நட்புடன் உறவாடி உரையாடியதில் அவருக்கும் சந்தோஷம் எனக்கும் ஏதோவொரு மனத் திருப்தி கிடைத்தது.//
    உண்மைதான்!

    பதிலளிநீக்கு
  34. திண்ணையில் வைத்தவீடுகளை கதைகளில்தான் தெரிந்து கொள்ள முடியும் போல இருக்கே... வயசானவங்களுக்கு பேச்சு துணைக்கு ஆள் கிடைத்தால் என்ன சரளமாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள்..எழுத தாராளமா விஷயம் தானம் கிடைக்கும். கூடவே இளநீர் இருக்கு. இளநீரைப்போல இனிப்பான அனுபவங்கள் எங்களுக்கு கிடைக்கபோகுது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... July 30, 2016 at 8:06 PM

      வாங்கோ, வணக்கம்.

      //திண்ணை வைத்தவீடுகளை கதைகளில்தான் தெரிந்து கொள்ள முடியும் போல இருக்கே...//

      ஆமாம். இப்போ திண்ணைகளைப் பார்ப்பதே மிகவும் அபூர்வமாகத்தான் உள்ளது.

      //வயசானவங்களுக்கு பேச்சு துணைக்கு ஆள் கிடைத்தால் என்ன சரளமாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள்..எழுத தாராளமா விஷயம் தானம் கிடைக்கும்.//

      ஆமாம். தாங்கள் சொல்வது மிகவும் சரியே.

      //கூடவே இளநீர் இருக்கு. இளநீரைப்போல இனிப்பான அனுபவங்கள் எங்களுக்கு கிடைக்கபோகுது....//

      நல்லதொரு எதிர்பார்ப்புக்கு நன்றிகள்.

      தங்களின் அன்பான தொடர் வருகையும், அழகான கருத்துக்களும் மகிழ்ச்சியளிக்கின்றன. மிக்க நன்றி.

      நீக்கு