என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 5 மே, 2011

எங்கெங்கும் எப்போதும் என்னோடு [ பகுதி 1 of 3 ]


நேற்றுடன் அறுபது வயது முடிந்து இன்று முதல் மூத்த குடிமகன் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளேன்.  என்னுடைய உடல் எடை மிகவும் அதிகம் என்பது எனக்கே நன்றாகத் தெரியும். என்ன செய்வது; சூதுவாது இல்லாதவன் நான். யாரையும் வருத்தப்பட வைக்க மாட்டேன்.  நானும் என் உடம்பை எதற்கும் வருத்திக்கொள்ள மாட்டேன். ரொம்பவும் மசமசப்பான பேர்வழி நான் என்று என் காது படவே என் மனைவி முதல் மாமனார் மாமியார் வரை எல்லோருமே சொல்லி வந்தது எனக்கும் தெரியாதது அல்ல.

நான் அதிகமாக வாரி வளைத்து சாப்பிடக்கூடியவனும் கிடையாது. காய்கறிகளில் பலவற்றைப் பிடிக்காது என்று தவிர்த்து விடுபவன்.  திரும்பத் திரும்ப  சாம்பார் சாதம், குழம்பு சாதம், ரஸம் சாதம், மோர் சாதம் என்று கை நனைத்து பிசைந்து சாப்பிட சோம்பலாகி விடுகிறது எனக்கு.  


கையில் ஒட்டாத டிபன் அயிட்டங்களான காரசாரமான அடை, முறுகலான தோசை, பூப்போன்ற மிருதுவான இட்லி, பூரி மஸால், ஒட்டலுடன் கூடிய காரசாரமான குழம்புமாவு உப்புமா, மோர்மிளகாய் போட்டுச் செய்த அல்வா போன்ற மோர்களி, சேவைநாழியில் கையால் பிழிந்த சேவை (இடியாப்பம்) முதலியன என்றால் ஒரு பிடி பிடித்து விடுவதுண்டு.  


வடை, பஜ்ஜி, போண்டா, வெங்காய பக்கோடா, சிப்ஸ், தட்டை (எள்ளடை), முறுக்கு என்றால் ஒரு பிரியமும், அவற்றுடன் ஒரு தனி ஆவர்த்தனமும் செய்வது உண்டு.  படுக்கை பக்கத்தில் எப்போதும் ஸ்டாக் வைத்துக்கொண்டு, நேரம் காலம் இல்லாமல் இத்தைகைய நொறுக்குத் தீனிகளுடன் கரமுராவென்று உரையாடி, உறவாடி வருவேன். 

உடலின் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆவலில் டாக்டர் ஒருவரை சந்தித்தேன்.  என் உயரம் மற்றும் வயதுக்கு ஒரு 75 கிலோ வரை இருக்கலாம் என்றும், ஆனால் நான் 98 கிலோ இருப்பதாகவும், 23 கிலோ குறைக்க வேண்டும் என்றும், தினமும் நாய் ஒன்று துரத்தி வருவதாக நினைத்துக்கொண்டு, எங்கும் நில்லாமல், ஓட்டமும் நடையுமாக தொடர்ச்சியாக 40 நிமிடங்களுக்கு வேகமாக வாக்கிங் செல்ல வேண்டும் என்றும் உறுதியாகச் சொல்லி, ஏதோ மருந்துகளும் எழுதிக் கொடுத்து விட்டார். 

வீட்டை விட்டுச் சென்றால் நாய் துரத்தக்கூடும் என்ற கவலையில் தான், நான் வீட்டை விட்டு வெளியே எங்கும் அதிகமாக நடந்து செல்வது இல்லை.  ஒரு கிலோ மீட்டர் தூரம் போகணும் என்றாலும் ஆட்டோவில் தான் போய் வருவேன்.  


அடுக்குமாடி கட்டடத்தின்  இரண்டாவது தளத்தில் உள்ள என் வீட்டிலிருந்து புறப்பட்டு லிஃப்ட் மூலம் இறங்கி, தெருவில் சற்று தூரம் நடந்து ஆட்டோவில் ஏறி அமர்வதற்குள் கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்கி பெருமூச்சு விடும் ஆள் நான்.  என் உடல்வாகு அப்படி.  என் தாத்தா, அப்பா என்று பரம்பரை ஜீன்ஸ் அப்படி.  அது புரியாமல் அந்த டாக்டர், என்னைப் போய் நடக்கச் சொல்கிறார்.  நடக்கற ......... காரியமா அது!

இருந்தாலும் எடை குறையும் ஆசையில் வாக்கிங் செல்ல முடிவெடுத்து இன்று முதன் முதலாக கிளம்பி விட்டேன்.  ஒரு அரை கிலோ மீட்டர் போவதற்குள் எனக்கு நாக்கு தள்ளிப் போச்சு.  அங்கிருந்த கடையில் பன்னீர் சோடா ஜில்லென்று ஒன்று க்கு இரண்டாக வாங்கிக் குடித்து விட்டு, அங்கிருந்த டீக்கடை பெஞ்ச் ஒன்றில் ஒரு கால் மணி நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, மீண்டும் பல்லைக் கடித்துக் கொண்டு, என் நடை பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டேன், ஒரு நடைப் பிணம் போல.

மேலும் ஒரு கால் கிலோ மீட்டர் தன் சென்றிருப்பேன்.  ஒரேயடியாக கால் விண்விண்ணென்று கெஞ்சுகிறது.  ஏந்தினாற்போல உட்கார ஒரு இடமும் இல்லை.  முட்டிக்கால் சுளிக்கிக் கொண்டது போன்ற ஒரு உணர்வு.   சுற்றும் முற்றும் பார்த்தேன்.  ரோட்டோரமாக சூடாக வடை, பஜ்ஜி போட்டு விற்கும் கைவண்டிக்கடை கண்ணில் பட்டது.  பையில் எப்போதும் பணம் நிறையவே வைத்திருப்பேன்.  ஆமை வேகத்தில் நடந்து, அந்தக்கடையை நெருங்கினேன்.   ஆமவடை வாசனை மூக்கைத் துளைத்தது.  ஆறஅமர உட்கார்ந்து ஆமவடை சாப்பிட அவ்விடம் வசதியில்லாதது எனக்குப் பெருங்குறையாக இருந்தது. 

இருப்பினும் வீட்டை விட்டுக் கிளம்பி நடந்தே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வந்ததால், உடலுக்கும் உள்ளத்திற்கும் தெம்பு ஏற்பட 4 வடைகளும், 4 பஜ்ஜிகளும் மட்டும் சூடாக வாங்கி உள்ளே தள்ளினேன்.  உணவுக் கட்டுப்பாடு விஷயமாக டாக்டர் எச்சரித்திருந்ததால், சுவையாக இருப்பினும் அதற்கு மேல் வாங்கி சாப்பிட என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.  

மீண்டும் தள்ளாடியவாறு என் நடைபயணத்தை மேற்கொண்டேன். அந்த மலையைச் சுற்றியுள்ள 4 வீதிகளில் நான் நடந்தாலே போதும், மொத்தம் 40 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடும், என் நடையின் வேகத்திற்கு. 

பெளர்ணமியன்று இதே மலையை அரை மணி நேரத்தில் 3 சுற்று சுற்றி வருபவர்களும் உண்டு.  நான் என்ன செய்வது?  அவ்வாறு வேகவேகமாகச் சுற்றி வருபவர்களைப் பார்த்தாலே எனக்கு கால் வலிப்பது போலத் தோன்றும்.



தொடரும்

53 கருத்துகள்:

  1. எழுச்சியான துவக்கம்...
    நகைச்சுவையான நடை...
    தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
  2. ஹ்ம்ம் சுவையான துவக்கம்.. தொடருங்கள்.. உடல் எடையை குறைக்க பஜ்ஜி தவிர்க்கணும் உங்க கதாநாயகனுக்கு இது தெரியலையே

    பதிலளிநீக்கு
  3. என்னைப் போய் நடக்கச் சொல்கிறார். நடக்கற ......... காரியமா அது!//
    அதுதானே! வெறுமனே வெட்டிவாக்கிங் என்றால் வெறுப்பு வரத்தானே செய்யும்!!
    அருகில் உள்ள கோவிலில் இயன்ற பிரதட்சினம் என்றால் மனம் உடன்படும்.

    பதிலளிநீக்கு
  4. நகைச்சுவை உணர்வுடன் சொல்லியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  5. உங்களது பழைய பதிவுகளில் வந்த சில விஷயங்கள் இருந்தாலும், அருமையான நடை!

    பதிலளிநீக்கு
  6. உங்கள் எழுத்து நல்ல நடை - கதையின் நாயகன் போல உட்கார்ந்து, எழுந்து நடக்காமல் விறுவிறுவென பருப்பு வடை வாயின் உள்ளே போவது போல போகிறது. தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  7. காலங்காத்தால நடக்கச்சொன்னா, நடக்கற காரியமா அது :-))

    பதிலளிநீக்கு
  8. போகிற போக்கில் கொஞ்சம் கை நனைத்து
    போகிற போக்கைப் பார்த்தால்
    நடையால் எடைக்குறைப்பு
    நடக்கிற சாத்தியமாகப் படவில்லை
    ஆனாலும் உங்கள் எழுத்து நடை
    எங்களை நன்றாக ரசித்து சிரிக்க வைப்பதால்
    எங்கள் எடை(மனச்சுமை)நிச்சயம்
    குறைந்துவிடும் என நினைக்கிறேன்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. சார்! வடை, பஜ்ஜி சாப்பிடும் ஆசையை கிளப்பி விட்டு விட்டீர்களே! நியாயமா இது! தொடருங்கள்.

    சென்றவாரம் எங்கள் வீட்டில் எலியார் வந்து விரட்டிய போது ’எலிஸபெத் டவர்ஸ்’ தான் ஞாபகம் வந்தது.

    பதிலளிநீக்கு
  10. வடையில்லாமல் பஜ்ஜியில்லாமல் ஒரு வாக்கிங்கா? உங்க ஹீரோ ஜமாய்க்கறார் சார் உங்க கதைல.

    என்ன அந்த வடை பஜ்ஜியை ஒரு கை பார்த்துவிட்டு விறுவிறுவென்று நாலு கிலோ மீட்டர் நடந்தால் இன்னும் நாலு வடை-பஜ்ஜி உண்டு என்று டாக்டரை விட்டு ஆஃபர் தரச் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ஐயா உங்களின் எழுத்து நடை பரட்டுகளுக்குரியது உங்களின் அறுபதாவது அகவை நீண்டு பலநூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என எண்ணுகிறேன் நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் வாழ்த்துதலும் இயலாது காரணம் இளைய அகவை நான் உங்களின் எழுத்து எல்லோருக்கும் பயனுண்டகாட்டும் நல்ல ஆசன பயிற்சிகளை செய்யலாம் ? மச மச ன்னு கொஞ்சம் இருக்காதீர்கள் பாருங்க உங்க காதுபடவே சொல்லு கிறார்கள் . இந்த சூது வாது இல்லாதவர்களே இப்படிதான் ... உங்களின் இடுகை பாராட்டுக்குரியன....

    பதிலளிநீக்கு
  12. மதி நிறை ஐயா
    உங்களின்
    சஷ்டியப்த பூர்த்திக்கும்
    சம்பூர்ண சந்தோஷத்திற்கும்
    நிலையான செல்வத்திற்கும்
    ஆண்டவனை வேண்டுகிறேன்

    நடை பயிற்சியை விட
    அடை சுழற்சியும்
    வடையின் சுவையும்
    கதையின் சுவையும் அருமை ......

    பதிலளிநீக்கு
  13. நடை பயணம் சென்று எடை குறைந்தோர் சிலரே, காரணம் இப்போது புரிகிறது சார். கடை இருக்கும் வீதியில் நடை கொண்டு எடை குறைப்பது இயலாத காரியம். எனக்கென்னவோ ரூட் இதற்காகவே போடப்பட்டதாய் தோன்றுகிறது. நகைச்சுவை இழையோடும் எழுத்து நடை எடை கூடிவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  14. நடை பயணம் சென்று எடை குறைந்தோர் சிலரே, காரணம் இப்போது புரிகிறது சார். கடை இருக்கும் வீதியில் நடை கொண்டு எடை குறைப்பது இயலாத காரியம். எனக்கென்னவோ ரூட் இதற்காகவே போடப்பட்டதாய் தோன்றுகிறது. நகைச்சுவை இழையோடும் எழுத்து நடை எடை கூடிவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  15. பிறந்தநாள் வாழ்த்துகள் சார்.
    பதிவின் ஆரம்பத்தை படித்தவுடனே இப்பவே சாப்பிடனும் போல இருக்கு.
    பிடித்ததை சாப்பிடனும்,அது தனி சந்தோஷம்தான்

    தொடருகிறேன்

    பதிலளிநீக்கு
  16. பிறந்தநாள் வாழ்த்துகள் சார்.
    But you are look like 80+ person (highly matured!!!)

    (may be photographer (camera) mistake.

    Labels: சிறுகதை.....confucing

    பதிலளிநீக்கு
  17. உங்கள் கதநாயகன் மாதிரி ஒரு மாசமாவது வாழனும்ன்னு ஆசைவருது. ஆனால் இந்த யோகசனம், ப்ரணயாமம் இப்பிடியெல்லாம் பழகி,கூடவே டாக்டர் நண்பர்களையும் சமாளித்து இதெல்லாம் நடக்குமா? நாளைக்கே மாற்றி வேறுவித பின்னூட்டம் போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. 2 வது பகுதிக்குத் தயாரகிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  18. இந்தக்கதையில் வரும் கதாபாத்திரம் வேறு. கதை எழுதியுள்ள கதாசிரியரான நான் வேறு.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு பின்னூட்டம் அளித்துள்ள ஒரு சிலருக்கு இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தோன்றுவதால் இந்த விளக்கம் கொடுத்துள்ளேன்.

    இந்த சிறுகதைத்தொடரின் அடுத்த பகுதி நாளை வெள்ளிக்கிழமை 06.05.2011 இரவு வெளியிடப்படும்.

    பதிலளிநீக்கு
  19. இந்தச்சிறுகதைத்தொடரின் முதல் பகுதிக்கு வருகை தந்து, கருத்துக்கள்கூறி, பாராட்டி உற்சாகப்படுத்தியுள்ள அனைத்து உடன்பிறப்புகளுக்கும், இன்ட்லி & தமிழ்மணத்தில் வோட்டளித்துள்ள அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    மீண்டும் இதன் அடுத்த பகுதியில் நாளை இரவு சந்திப்போம்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  20. இருப்பினும் வீட்டை விட்டுக் கிளம்பி நடந்தே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வந்ததால், உடலுக்கும் உள்ளத்திற்கும் தெம்பு ஏற்பட 4 வடைகளும், 4 பஜ்ஜிகளும் மட்டும் சூடாக வாங்கி உள்ளே தள்ளினேன். உணவுக் கட்டுப்பாடு விஷயமாக டாக்டர் எச்சரித்திருந்ததால், சுவையாக இருப்பினும் அதற்கு மேல் வாங்கி சாப்பிட என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.


    ......ஹா,ஹா,ஹா,ஹா..... சிரிச்சு முடியல... நாலு வடை - நாலு பஜ்ஜி - இன்னும் நாலு போண்டா தான் பாக்கி....

    பதிலளிநீக்கு
  21. உங்க‌ளை மாதிரியே, இந்த‌ கேர‌க்ட‌ரும் சாப்பாட்டு ர‌சிக‌ர இருந்த‌தால் வ‌ந்த‌ குழப்ப‌மாய் இருக்க‌லாம். ஆனாலும் ஆமை ந‌டையில் ஆமை வ‌டை நோக்கிய‌ அந்த‌ ந‌டை சூப்ப‌ர் ந‌டை,
    நான் சொன்ன‌து உங்க‌ள் எழுத்து ந‌டையை.

    பதிலளிநீக்கு
  22. Chitra said...
    இருப்பினும் வீட்டை விட்டுக் கிளம்பி நடந்தே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வந்ததால், உடலுக்கும் உள்ளத்திற்கும் தெம்பு ஏற்பட 4 வடைகளும், 4 பஜ்ஜிகளும் மட்டும் சூடாக வாங்கி உள்ளே தள்ளினேன். உணவுக் கட்டுப்பாடு விஷயமாக டாக்டர் எச்சரித்திருந்ததால், சுவையாக இருப்பினும் அதற்கு மேல் வாங்கி சாப்பிட என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.

    //......ஹா,ஹா,ஹா,ஹா..... சிரிச்சு முடியல... நாலு வடை - நாலு பஜ்ஜி - இன்னும் நாலு போண்டா தான் பாக்கி....//

    நீண்ட இடைவெளிக்குப்பின் சித்ரா பெளர்ணமி நிலவு உதித்து, பின்னூட்டம் அளித்துள்ளது, அந்த பாக்கி நாலு வெங்காய் உருளைக்கிழங்கு போண்டாவை சூடாக சுவையாக தின்றதுபோன்ற திருப்தி அளிக்கிறது.

    நன்றி சித்ரா. WELCOME TO YOU !
    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  23. vasan said...
    //உங்க‌ளை மாதிரியே, இந்த‌ கேர‌க்ட‌ரும் சாப்பாட்டு ர‌சிக‌ர இருந்த‌தால் வ‌ந்த‌ குழப்ப‌மாய் இருக்க‌லாம். ஆனாலும் ஆமை ந‌டையில் ஆமை வ‌டை நோக்கிய‌ அந்த‌ ந‌டை சூப்ப‌ர் ந‌டை, நான் சொன்ன‌து உங்க‌ள் எழுத்து ந‌டையை.//

    வாங்க சார், வருக வருக! குழப்பத்திற்கு காரணம் நீங்கள் சொல்லுவதும் சரியே! ஆமை நடை + ஆம வ்டை + எழுத்து நடை பற்றிய பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. தங்கள் உணவப்பழக்கம் பிடித்திருக்கிறது அனால் நான் கண்டபடி தின்னும் ஆளுங்க...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

    பதிலளிநீக்கு
  25. \\\டாக்டர், என்னைப் போய் நடக்கச் சொல்கிறார். நடக்கற ......... காரியமா அது!

    நடை பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டேன், ஒரு நடைப் பிணம் போல.

    ஆமை வேகத்தில் நடந்து, அந்தக்கடையை நெருங்கினேன். ஆமவடை வாசனை மூக்கைத் துளைத்தது.////

    நல்ல நடை. ( உங்க நடைப்பயிற்சியை சொல்லலை சார் )

    பதிலளிநீக்கு
  26. எதுவும் சாப்பிடாமல் 10 வருடமாக தினம் வாக்கிங் போகிறவங்க கூட இந்த கதையை படித்த பிறகு மனம் மாறி விடுவார்கள்.
    தினம் பஜ்ஜி வடைதான். ஆஹா !

    பதிலளிநீக்கு
  27. ♔ம.தி.சுதா♔ / சிவகுமாரன் / கணேஷ்

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  28. கே. பி. ஜனா... said...
    //பிறந்தநாள் வாழ்த்துகள்//

    வாங்க திரு கே.பி.ஜனா சார்!

    இந்தக்கதையில் வரும் கதாபாத்திரம் வேறு. கதை எழுதியுள்ள கதாசிரியரான நான் வேறு.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு பின்னூட்டம் அளித்துள்ள ஒரு சிலருக்கு இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தோன்றுவதால் இந்த விளக்கம் கொடுத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  29. மாதேவி said...
    //தொடர்கிறேன்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  30. \\வீட்டை விட்டுச் சென்றால் நாய் துரத்தக்கூடும் என்ற கவலையில் தான், நான் வீட்டை விட்டு வெளியே எங்கும் அதிகமாக நடந்து செல்வது இல்லை. ஒரு கிலோ மீட்டர் தூரம் போகணும் என்றாலும் ஆட்டோவில் தான் போய் வருவேன்.//

    படித்துவிட்டு வெகுநேரம் வரை சிரித்துக் கொண்டிருந்தேன் சார்.

    ஆரம்பமே அசத்தலாக வடை, பஜ்ஜி என் போய்க்கொண்டிருக்கிறது.

    அருமை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. nunmadhi October 16, 2011 at 10:31 AM
      **வீட்டை விட்டுச் சென்றால் நாய் துரத்தக்கூடும் என்ற கவலையில் தான், நான் வீட்டை விட்டு வெளியே எங்கும் அதிகமாக நடந்து செல்வது இல்லை. ஒரு கிலோ மீட்டர் தூரம் போகணும் என்றாலும் ஆட்டோவில் தான் போய் வருவேன்.**

      //படித்துவிட்டு வெகுநேரம் வரை சிரித்துக் கொண்டிருந்தேன் சார்.
      ஆரம்பமே அசத்தலாக வடை, பஜ்ஜி என் போய்க்கொண்டிருக்கிறது.
      அருமை சார்.//

      அன்புள்ள நுண்மதி, வணக்கம். நல்லா இருக்கீங்களாம்மா?

      தங்களின் இந்தப்பின்னூட்டத்தை 1-1/4 வருடம் கழித்து, இன்று தான் பார்க்க நேர்ந்துள்ளது. கோச்சுக்காதீங்கோ ப்ளீஸ்..

      என் மகிழ்ச்சி + நன்றி.

      [இன்னும் கூட சிரித்துக்கொண்டே இருக்கீங்களோ என்னவோ? ;)) ]

      நீக்கு
  31. வைகோ சார்,

    என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.என்னை விட என் கணவர் அதிகம் ரசித்தார் , உங்கள் பதிவை.அதுவும் நாலு வடை,பஜ்ஜி, போண்டா வகையறாக்கள்.........கண்ணில் நீர் வரவழைத்தது.
    உங்கள் பதிவைப் படித்தாலே மனம் லேசாகி விட்ட மாதிரி இருக்கிறது.

    நன்றி.
    வணக்கத்துடன்,
    ராஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //rajalakshmi paramasivam January 30, 2013 at 1:08 AM

      வைகோ சார்,

      என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.என்னை விட என் கணவர் அதிகம் ரசித்தார், உங்கள் பதிவை.

      அதுவும் நாலு வடை,பஜ்ஜி, போண்டா வகையறாக்கள்.........கண்ணில் நீர் வரவழைத்தது. உங்கள் பதிவைப் படித்தாலே மனம் லேசாகி விட்ட மாதிரி இருக்கிறது.

      நன்றி.
      வணக்கத்துடன்,
      ராஜி//

      வாங்கோ தம்பதியினரே, வணக்கம்.

      //சிரிப்பை அடக்க முடியவில்லை.//

      அடக்காதீங்கோ. என் பெரும்பாலான பதிவுகளில் நகைச்சுவைக்கே முதலிடம் தந்துள்ளேன்.

      //உங்கள் பதிவைப் படித்தாலே மனம் லேசாகி விட்ட மாதிரி இருக்கிறது.//

      இதைக்கேட்க எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா?

      என்னுடைய மிக நல்ல பதிவுகளாகத் தேர்ந்தெடுத்து என் அன்புத் தங்கை மஞ்சு வலைச்சரத்தில் 02.10.2012 அன்று INDEX போல ஆக்கி இணைப்புகளுடன் கொடுத்திருக்கிறாங்க.

      அதன் இணைப்பு இதோ. இதை எங்காவது தனியாக SAVE பண்ணி வைத்துக்கொள்ளுங்கள். ஒழிந்த போது ஒவ்வொன்றாகப் படித்து மகிழுங்கள். முடிந்தால் கருத்தும் கூறுங்கள்.

      http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

      எப்போதும் நீங்கள் இருவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக செளக்யமாக, சகல செளபாக்யங்களுடன் இருங்கோ.! ஆசிகள்.;)

      அன்புடன் VGK

      நீக்கு
  32. very very funny and good start. Thinking that the dog is chasing is really very funny, may be I can think something like that and start working out...
    Thank youvery much sir...

    பதிலளிநீக்கு
  33. Priya Anandakumar July 25, 2013 at 1:00 AM

    வாங்கோ, வணக்கம்.

    //very very funny and good start. Thinking that the dog is chasing is really very funny, may be I can think something like that and start working out... Thank you very much sir...//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம். தொடர்ந்து படியுங்கோ, ப்ளீஸ்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு

  34. 2011 இல் நிலைமை இப்படி

    நாய் துரத்துவதாக நினைத்து
    மருத்துவர் ஓடச் சொன்னார்
    என்று ஓடத் தொடங்கிவிடாதீர்.
    நாய் கடித்து கொதறிவிடும்
    தைரியமாக எதிர்த்து நின்று
    அதைப் பார்த்து நீங்கள்
    குரைத்தால் அது ஓடிவிடும். .

    2013இல் நிலைமை எப்படியோ?
    என் கருத்துகள் இதோ.

    எனக்கு வடை கிடைத்தால் போதும் ! ;))))).

    விடையெல்லாம் கண்டுபிடித்து என்ன செய்யப்போகிறோம்?


    சரியாக
    கண்டுபிடித்துவிட்டீர்கள்

    அதுதான் VGK

    அதுதான் அனைத்து
    முட்டி வலிக்கும் காரணம் .
    மூக்கு முட்ட சுடச் சுட
    உள்ளே போகும் வடைகளின்
    எண்ணிக்கையையும்
    அதில் சேர்க்கப்படும் உப்பின் அளவையும்
    குறைத்துக்கொண்டால் போதும்
    முட்டி வலி குறைந்துவிடும்.

    மேலும் வடைகளை உள்ளே தள்ளிவிட்டு
    உட்கார்ந்து கொண்டு ஊர்வம்பு பேசுவதை விடுத்து
    தினம் 5 கிலோமீட்டர் நடந்தால்
    முட்டி வலி காணாமல் போய்விடும்.

    பதிலளிநீக்கு
  35. 2011 இல் நிலைமை இப்படி

    நாய் துரத்துவதாக நினைத்து மருத்துவர் ஓடச் சொன்னார் என்று ஓடத் தொடங்கிவிடாதீர். நாய் கடித்து கொதறிவிடும் தைரியமாக எதிர்த்து நின்று அதைப் பார்த்து நீங்கள் குரைத்தால் அது ஓடிவிடும். .
    2013இல் நிலைமை எப்படியோ?
    என் கருத்துகள் இதோ.

    பதிலளிநீக்கு
  36. Pattabi Raman August 21, 2013 at 4:07 AM

    வாங்கோ அண்ணா, வணக்கம். நமஸ்காரம்.

    //2011 இல் நிலைமை இப்படி. நாய் துரத்துவதாக நினைத்து மருத்துவர் ஓடச் சொன்னார் என்று ஓடத் தொடங்கிவிடாதீர். நாய் கடித்து கொதறிவிடும் தைரியமாக எதிர்த்து நின்று அதைப் பார்த்து நீங்கள்
    குரைத்தால் அது ஓடிவிடும். . //

    இது, அதாவது உங்கள் ஆலோசனையான நாயைப் பார்த்து தைர்யமாக எதிர்த்து நின்று நாம் குரைப்பது என்பது, என் இந்தப்பதிவினைப் படிப்பவர்களுக்கும், தினசரி வாக்கிங் போவோருக்கும் மிகவும் பயன்படும்.

    //2013இல் நிலைமை எப்படியோ?//

    எனக்கு எப்போதுமே ஒரே நிலைமை தான்.

    வீட்டைவிட்டு, என் சீட்டை விட்டு, அநாவஸ்யமான நான் எங்கும் நகரவே விரும்ப மாட்டேன்.. அவ்வளவு ஒரு சோம்பேறி ;)))))

    பதிலளிநீக்கு
  37. சோம்பேறி என்ற பெயர் வாங்காதே என்ற நாடோடி மன்னன் பாடல் பாடலை மறந்தீரோ?
    சோம்பலை விட்டுவிட்டு யோக நரசிங்கப் பெருமாள் மற்றும் யோக ஆஞ்சநேயர் உறையும் சோளிங்கர் மலை ஏறி விட்டு வாருங்கள். முட்டி வலி எல்லாம் பறந்துவிடும். முக்தி அடையும் மார்க்கமும் புலப்படும்.

    இல்லாவிடில் உச்சி பிள்ளையார் கோயில் மலையேறி விட்டு வாரும் பிள்ளையார் உச்சியும் குளிர்ந்துவிடும் உங்கள் உடம்பும் குச்சிபோல் இளைத்துவிடும் தினமும் மலையேறினால்.

    பதிலளிநீக்கு
  38. சோம்பேறி என்ற பெயர் வாங்காதே என்ற நாடோடி மன்னன் பாடல் பாடலை மறந்தீரோ?
    சோம்பலை விட்டுவிட்டு யோக நரசிங்கப் பெருமாள் மற்றும் யோக ஆஞ்சநேயர் உறையும் சோளிங்கர் மலை ஏறி விட்டு வாருங்கள். முட்டி வலி எல்லாம் பறந்துவிடும். முக்தி அடையும் மார்க்கமும் புலப்படும்.

    இல்லாவிடில் உச்சி பிள்ளையார் கோயில் மலையேறி விட்டு வாரும் பிள்ளையார் உச்சியும் குளிர்ந்துவிடும் உங்கள் உடம்பும் குச்சிபோல் இளைத்துவிடும் தினமும் மலையேறினால்.

    பதிலளிநீக்கு
  39. //Pattabi Raman August 21, 2013 at 5:53 AM

    வாங்கோ அண்ணா, மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

    //சோம்பேறி என்ற பெயர் வாங்காதே என்ற நாடோடி மன்னன் பாடல் பாடலை மறந்தீரோ? //

    வாத்யார் படத்து சூப்பர் பாட்டாச்சே மறக்க முடியுமா? அதெல்லாம் ஊருக்கு [சிறியோர்களுக்கு] நாம் செய்யும் உபதேசத்திற்கு மட்டுமே.

    //சோம்பலை விட்டுவிட்டு யோக நரசிங்கப் பெருமாள் மற்றும் யோக ஆஞ்சநேயர் உறையும் சோளிங்கர் மலை ஏறி விட்டு வாருங்கள். முட்டி வலி எல்லாம் பறந்துவிடும். முக்தி அடையும் மார்க்கமும் புலப்படும். //

    தாங்கள் சொல்லும் இரண்டு மலைகளுக்கும் ஒரே நாளில் அடுத்தடுத்து ஏறி இறங்கியுள்ளேன், ஸ்வாமீ. சமீபத்தில் ஓர் 7-8 ஆண்டுகளுக்கு முன்பு. படிக்குப் பத்து குரங்குகள் வீதம் [1400+700=2100 படிகளில்] 21000 குரங்குகள் இருந்தன. ஒரு தடிக்குச்சியால் தட்டிக்கொண்டே சென்றோம். மிகச்சிறந்த அனுபவமாக அது எங்களுக்கு அமைந்தது.

    அதன்பிறகு தான் எங்கேயும் போகக்கூடாது என்ற முடிவுக்கே வந்தேன்.
    அதாவது வலியெல்லாம் போய் முக்தியடையும் மார்க்கம் புலப்படவில்லை.

    இதுபோலெல்லாம் ரிஸ்க் எடுத்து ஏறக்கூடாது என்ற படிப்பிணை மட்டும் கிடைத்தது. நாங்கள் சமவயதில் மூவரும், என் சின்னப்பிள்ளை [அப்போது அவனுக்கு 23 வயது] யும் சென்று வந்தோம்.

    என்னுடன் கூடவே வந்த நாகராஜன் என்பவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இத்தனைக்கும் அவர் எங்களை ஒப்பிடும்போது மிகவும் ஒல்லியானவர் தான்.

    //இல்லாவிடில் உச்சி பிள்ளையார் கோயில் மலையேறி விட்டு வாரும் பிள்ளையார் உச்சியும் குளிர்ந்துவிடும் உங்கள் உடம்பும் குச்சிபோல் இளைத்துவிடும் தினமும் மலையேறினால்.//

    இங்கேயேயும் பலமுறை ஏறி இறங்கியாச்சு. இப்போத்தான் 4-5 வருடமாக மலைமேலே ஏறவில்லை. படிவாசல் மாணிக்க விநாயகர் தரிஸனத்தோடு சரி. உச்சிப்பிள்ளையார் தரிஸனம் ஆத்து ஜன்னல் மூலமாகவே தினமும் காண்பதோடு சரி. அவரே அதாவது உச்சிப்பிள்ளையார் அவர்களே இதற்கு OK சொல்லிவிட்டார். ;)))))

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  40. கடப்பாரையை விழுங்கிவிட்டு சுக்குக் கஷாயம் சாப்பிட்டால் ஜீரணமாகுமா? பத்து நாளைக்கு வெறும் வடிச்ச கஞ்சி மட்டும் குடிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  41. வாக்கிங் போக ஆரம்பிக்கறவங்க மன நிலையை அழகா வெளிப்படுத்தி இருக்கிங்க. 4 வடை, 4பஜ்ஜி சாப்பிட்டு வாக் பண்ணினா எப்படி எடை குறையும்?

    பதிலளிநீக்கு
  42. நானும்தான் இவரை கார்த்தால எழுந்திருங்கோ, ரெண்டு பேரும் வாக்கிங் போகலாம், என்னதான் கோபு அண்ணா மாதிரி ரெட்டை நாடி சரீரம் இல்லாட்டாலும் அந்த முந்திரிக் கொட்டை மாதிரி எட்டிப் பார்க்கும் தொப்பையைக் கொஞ்சம் குறைச்சா சூப்பரா இருப்பேள். என்னை விட சின்னவரா தெரிவேள்ன்னு ஐஸ் எல்லாம் வெச்சு பார்த்துட்டேன். மனுஷன் அசைஞ்சா தானே.

    பஜ்ஜி, வடை ஆசை இல்லாட்டாலும் வாக்கிங் போயிட்டு வந்ததும் சூடா மல்லிகைப் பூ இட்லி, மிளகாய் பொடி, சாம்பார், சட்னி, டிகிரி காபி இதெல்லாம் கொடுப்பேனே.

    அதுக்கு முன்னாடி முதல்ல உங்க கதைகள படிக்கச் சொல்லணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya May 18, 2015 at 12:41 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம். கிடுகிடுன்னு ஏப்ரில் வரை முழுவதும் முடிச்சுட்டு, சுறுசுறுப்பா ‘மே’ யில் காலடி எடுத்து வெச்சுட்டேளே .... மிக்க மகிழ்ச்சிம்மா.

      //நானும்தான் இவரை கார்த்தால எழுந்திருங்கோ, ரெண்டு பேரும் வாக்கிங் போகலாம், என்னதான் கோபு அண்ணா மாதிரி ரெட்டை நாடி சரீரம் இல்லாட்டாலும் அந்த முந்திரிக் கொட்டை மாதிரி எட்டிப் பார்க்கும் தொப்பையைக் கொஞ்சம் குறைச்சா சூப்பரா இருப்பேள். என்னை விட சின்னவரா தெரிவேள்ன்னு ஐஸ் எல்லாம் வெச்சு பார்த்துட்டேன். மனுஷன் அசைஞ்சா தானே.

      பஜ்ஜி, வடை ஆசை இல்லாட்டாலும் வாக்கிங் போயிட்டு வந்ததும் சூடா மல்லிகைப் பூ இட்லி, மிளகாய் பொடி, சாம்பார், சட்னி, டிகிரி காபி இதெல்லாம் கொடுப்பேனே.

      அதுக்கு முன்னாடி முதல்ல உங்க கதைகள படிக்கச் சொல்லணும்.//

      காற்றடித்தால் வானில் பறக்கும் பட்டம் போல சரீரம் உள்ள, மஹா சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் பேச்சினில் குறும்புகளும் நிறைந்த, ஜெயா போல .... பஞ்சுபோல .... எப்போதுமே சரீரம் ‘போ லா க’ இருக்கணும் என்றுதான் எனக்கும் ஆசை. நினைத்ததெல்லாம் ..... நடந்துவிடுமா என்ன ? எல்லாவற்றிற்கும் ஓர் கொடுப்பினை வேண்டுமே ஜெயா ! :)

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  43. நாயி தொரத்துராப்ல நெனச்சுகிட்டே ஆட்டோவுல வாக்கிங் போனிகளா பத்தாதுக்கு 4--ஆமவட பஜ்ஜி போண்டான்னு ஃபுல் கட்டு கட்டினிங்க. பொரவால எப்பூடி எட கொறயுமாம்.

    பதிலளிநீக்கு
  44. முதமுதலா வாக்கிங்க் போறப்போ கொஞ்சம் கஷ்டமாதான் தோணும். பழகிட்டா ஈசி ஆகும். ஆனா குதிரைக்கு கண்ணுக்கு போடராப்ல ஒரு " கண்மூடி" போட்டுண்டு போகணும்... பஜ்ஜி போண்டா மசால்வடை கடைகள்லாம் கண்ணுலயே பட்டுடக்கூடாது.

    பதிலளிநீக்கு
  45. //என் உடல்வாகு அப்படி. என் தாத்தா, அப்பா என்று பரம்பரை ஜீன்ஸ் அப்படி. அது புரியாமல் அந்த டாக்டர், என்னைப் போய் நடக்கச் சொல்கிறார். நடக்கற ......... காரியமா அது!// ஆரம்பிக்கிறதுக்கு முன்னால வரக்கூடிய யதார்த்தமான அங்கலாய்ப்புதான்...தொப்பய குறைகிறேன் பேர்வழின்னு போய் ரொப்பிக்கினுவந்த கதயாக்கீதே...

    பதிலளிநீக்கு
  46. //பெளர்ணமியன்று இதே மலையை அரை மணி நேரத்தில் 3 சுற்று சுற்றி வருபவர்களும் உண்டு. நான் என்ன செய்வது? அவ்வாறு வேகவேகமாகச் சுற்றி வருபவர்களைப் பார்த்தாலே எனக்கு கால் வலிப்பது போலத் தோன்றும்//
    ச(சு)ற்றுப் பெருத்ததால் வந்த விளைவு! நகைச்சுவை அருமை! சுற்றிவருகிறேன்!

    பதிலளிநீக்கு
  47. இனிமேல வாக்கிங்க் போகும்போது பஜ்ஜி போண்டா கடைகள் இல்லாத ரோடு வழியாக போகவும். அரை கிலோ மீட்டர் நடந்து விட்டு நாலு பஜ்ஜி...போண்டா சாப்பிட்டா எப்படி எடை குறைக்க முடியும்.. உணவு கட்டுப்பாட்டில்தான் எடை குறைக்க முடியுமே தவிர வாக்கிங்க் போவதில் உடலும் மனமும் ஃப்ரெஷாகவும் புத்துணர்ச்சியாகவும் மட்டுமே இருக்கும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... July 30, 2016 at 11:12 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இனிமேல வாக்கிங்க் போகும்போது பஜ்ஜி போண்டா கடைகள் இல்லாத ரோடு வழியாக போகவும். அரை கிலோ மீட்டர் நடந்து விட்டு நாலு பஜ்ஜி...போண்டா சாப்பிட்டா எப்படி எடை குறைக்க முடியும்.. உணவு கட்டுப்பாட்டில்தான் எடை குறைக்க முடியுமே தவிர வாக்கிங்க் போவதில் உடலும் மனமும் ஃப்ரெஷாகவும் புத்துணர்ச்சியாகவும் மட்டுமே இருக்கும்....//

      :))))) ஆஹா, மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)))))

      நீக்கு