About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, February 7, 2014

VGK 04 ] கா த ல் வ ங் கி !



இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 13.02.2014 
வியாழக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 
[ V A L A M B A L  @  G M A I L . C O M  ]

REFERENCE NUMBER:  VGK 04

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:





'காதல் வங்கி '

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo- 

ஜானகி அந்தப்பிரபல வங்கியின் காசாளர். பணம் கட்டவோ வாங்கவோ அங்கு பல கெளண்டர்கள் இருப்பினும், வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் விரும்புவது ஜானகியின் சேவையை மட்டும்தான்.  

மிகவும் அழகான இளம் வயதுப்பெண் என்பதால் மட்டுமல்ல. தேனீ போன்ற சுறுசுறுப்பு. வாடிக்கையாளர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பாதவள். தன் சேவையை நாடி வரும் அனைவருக்குமே சிரித்த முகத்துடன், சிறப்பான ஒரு வித வாஞ்சையுடன் கூடிய உபசரிப்பும், வரவேற்பும் அளிப்பவள். அனைவருடனும் மிகுந்த வாத்ஸல்யத்துடன் பழகுபவள்.

அடடா ! ........... இவள் எவ்வளவு கட்டிச் சமத்தாக இருக்கிறாள் ! தங்களுக்கு இதுபோன்ற தன்மையான, மென்மையான, அமைதியான, புத்திசாலியான, அழகான, பழகிட நல்ல கலகலப்பான பெண் ஒருத்தி பிறக்கவில்லையே என்றும் அல்லது மருமகள் ஒருத்தி அமையவில்லையே என்றும் ஏங்குவார்கள் அங்கு வரும், சற்றே வயதான வாடிக்கையாளர்கள்.

கெளண்டருக்கு வரும் இளம் வயது வாலிபர்களைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். யாரைப் பார்த்தாலும், இளைஞர்களின் கற்பனையே ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

மொத்தத்தில் வங்கிக்கு வரும் அனைவரையுமே, ஏதோ ஒரு விதத்தில், மகுடிக்கு மயங்கும் நாகம் போல, வசீகரிக்கும் அல்லது சுண்டியிழுக்கும் தனித்தன்மை வாய்ந்தவள் தான் அந்த ஜானகி.

இப்போது ரகுராமனும் அந்த வங்கியில் ஒரு வாடிக்கையாளர் தான். வங்கியின் சேவைகள், செயல்பாடுகள் பற்றியெல்லாம் எதுவும் அறியாமல் இருந்த ஆசாமி தான், ரகுராமன்.

மற்ற குழந்தைகள் போல பள்ளியில் சேர்ந்து படித்தவர் அல்ல ரகுராமன்.அவரைப்பொருத்தவரை வங்கி என்றால் ஜானகிஜானகி என்றால் வங்கி. வேறு எதுவும் வங்கியைப்பற்றித் தெரியாதவர். 

எல்லோருக்கும் எல்லாவற்றையும் பற்றி தெரிய வேண்டும் என்ற நியாயமோ அவசியமோ இல்லையே !




ரகுராமனுக்கு சிறு வயதிலேயே பூணூல் போடப்பட்டு, அழகாக சிகை (குடுமி) வைக்கப்பட்டு, வேதம் படிக்க வேண்டி திருவிடைமருதூர் பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர் அவரது பெற்றோர்கள். பரம்பரையாக வேத அத்யயனம் செய்து வரும் வைதீகக் குடும்பம் அது.

ரகுராமனும் வெகு சிரத்தையாக குருகுலமாகிய வேத பாடசாலையில் வேதம், சாஸ்திரம், சம்ஸ்கிருதம், கிரந்தம் முதலியன நன்கு பயின்று முடித்தவர். 

அது தவிர ஓரளவுக்கு கணித பாடமும், பேச படிக்க எழுதக்கூடிய அளவுக்கு தமிழும் ஆங்கிலமும் கற்றுத்தேர்ந்தவர் தான். வேத சாஸ்திரங்களில் கரை கண்ட அளவுக்கு, லோக விஷயங்களில் அவருக்கு அதிக ஆர்வமோ ருசியோ இல்லை தான்.

இருப்பினும் தான் படித்த வேத சாஸ்திரங்களை அனுசரித்து, நம் முன்னோர்கள் வாழ்ந்த, ஆச்சாரமான எளிமையான வாழ்க்கை வாழ்ந்தால், தற்சமயம் கலியுகத்தில் ஜனங்கள் பட்டு வரும், பல்வேறு சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் ஒரு வடிகாலாக அமையும் என்பதால், தான் செல்லும் இடங்களிலெல்லாம், சந்திக்கும் மக்களுக்கெல்லாம், வேத சாஸ்திர வழிமுறைகளையும், அவற்றை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும், தனக்கே உரித்தான அழகிய பிரவசனங்கள் [ஆன்மீகச் சொற்பொழிவுகள்] மூலம் மக்கள் மனதில் நன்கு பதிய வைத்து வந்தார்.




ஜானகி வீட்டில் நடைபெற்ற ஏதோவொரு சுப வைபவத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர் தான் இந்த ரகுராமன். 

ரகுராமன் அவர்களை முதன் முதலாகச் சந்தித்த ஜானகி, அவரின் அழகிற்கும், முகத்தில் தோன்றும் பிரும்ம தேஜஸுக்கும்,  அறிவு வாய்ந்த அவரின் பாண்டித்யத்திற்கும், நல்ல விஷயங்களை, நல்ல விதமாக, நன்கு மனதில் பதியுமாறு எடுத்துச்சொல்லும் நாவன்மைக்கும், லோகம் முழுவதும் உள்ள மனித சமுதாயம் மட்டுமின்றி, சகல ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற அவரின் பிரார்த்தனைகளுக்கும், வியந்து போய் தன் மனதையே அவரிடம் பறிகொடுத்து விட்டாள்.

அவருடன் தனக்கு ஏதாவது ஒரு தொடர்பு ஏற்பட வேண்டுமே என சிந்திக்கலானாள்.  தன் வீட்டு விழாவுக்கு வந்திருந்த பலரும், ரகுராமன் அவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவதைப் பார்த்தாள் ஜானகி

நேராகச் சென்று தானும் அவர் கால்களில் விழுந்து கும்பிட்டு வணங்கி எழுந்தாள், ஜானகி. தான் ஒரு வங்கியில் பணிபுரிவதாகச் சொன்ன ஜானகி, ”உங்களுக்கு எந்த வங்கியில் வரவு செலவு கணக்கு உள்ளது” என்றும் வினவினாள்.

வில்லை முறித்த ஸ்ரீ இராமபிரான் முதன் முதலாக வெற்றிப் புன்னகையுடன் ஸீதாதேவியை நோக்கிய அதே பரவசத்துடன், தன்னை விழுந்து வணங்கிய ஜானகியின் அழகிலும், அடக்கத்திலும், இனிய குரலிலும் மயங்கி, தன்னை மீறி தன் உடம்பில் ஒருவித மின்சாரம் பாய்வதை உணந்தார், நம் ரகுராமன்.
   
இருவர் உள்ளத்திலும் ஒருவர் மேல் ஒருவருக்கு ஏதோ ஒருவித காந்தம் போன்ற கவர்ச்சியும், காதலும் கசிந்துருக ஆரம்பித்திருந்தது.

உண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது. 

காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது. திடீரென இப்படிப் பார்த்த மாத்திரத்திலேயே ஒருவருக்கொருவர் பரவசம் ஏற்படுத்துவதே உண்மையான காதலாகுமோ என்னவோ !

அன்றே, அப்போதே, அங்கேயே ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று ஜானகியிடம் தொடங்கப்பட்டு விட்டது.  புதிய வங்கிக் கணக்கைத் தொடங்க ஜானகியே எல்லா உதவிகளையும் வேக வேகமாகச் செய்து உதவினாள்.




அன்று இரவே, ஜானகியின் அம்மா, தன் மகளின் மனதில் பூத்துள்ள புதுப்புஷ்பத்தின் சுகந்தத்தை அறிந்து கொண்டு, உண்மையிலேயே தன் மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாலும், அவளை சற்றே சீண்டிப்பார்த்தாள்.

“ஜானகி, நல்லா யோசனை செய்து பார்த்து நீ எடுத்த முடிவா இது?” என்றாள்.

“இதில் யோசிக்க என்ன இருக்கிறது?” என்றாள் ஜானகி.

“இல்லை, நீ நிறைய படிச்ச பொண்ணு, வேலைக்கும் போகிறாய், கை நிறைய சம்பாதிக்கிறாய். நவ நாகரீகமாக வாழ்க்கைப்பட்டு ஜாலியாக உன் இஷ்டப்படி இருக்க ஆசைப்படலாம்; 

இவரோ வேதம், சாஸ்திரம், புராணம்,  ஆச்சாரம், அனுஷ்டானம், அது இதுன்னு யாருக்குமே லேசில் புரியாத விஷயங்களை, பழைய பஞ்சாங்கம் போல பிரச்சாரம் செய்பவராக இருக்கிறார் ...... அதனால் கேட்டேன்” என்று லேசாக ஊதிவிட்டாள்.

“நான் படிச்ச படிப்பெல்லாம் ஒரு படிப்பா அம்மா? ஏதோ சும்மாதானே வீட்டில் இருக்கிறோம்ன்னு ஒரு பொழுதுபோக்குக்காக இந்த வேலையை ஒத்துக் கொண்டேன். கை நிறைய சம்பளம் யார் தான் இன்று வாங்கவில்லை? நவ நாகரீக வாழ்க்கை என்பதெல்லாம் எத்தனை நாளைக்கு அம்மா வாழமுடியும்? எதுவுமே கொஞ்ச நாளில் சலிப்பு ஏற்படுத்தித்தானே விடும்!; 


அதுவும் கல்யாணம் என்ற ஒன்று ஒருவருடன் எனக்கு ஆகிவிட்டால், என் இஷ்டப்படி எப்படி என்னால் வாழமுடியும்? 

இப்போ உன்னையே எடுத்துக்கொள்ளேன், நீ உன் இஷ்டப்படியா வாழ முடிகிறது அல்லது ஏதாவது முக்கிய முடிவுகளாவது உன் இஷடப்படித்தான் எடுக்க முடிகிறதா? எல்லாமே அப்பா இஷ்டப்படித்தானே நடக்கிறது ! நீயும் அதைத்தானே மகிழ்வுடன் எப்போதும் ஏற்றுக்கொண்டு வருகிறாய்; அதுபோல நானும் இருந்துவிட்டுப்போகிறேனே !! ;

உனக்கு மாப்பிள்ளையா வரப்போகும் இவர் தான் அம்மா, உண்மையில் மனுஷ்யனாகப் பிறந்தவன் என்ன படிக்கணுமோ அதையெல்லாம் படித்துள்ளார்; எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளணுமோ, அவற்றையெல்லாம் தெரிந்து வைத்துள்ளார்;  

நம் தாத்தா பாட்டி, ஏன் நம் பரம்பரையே ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்து, நித்யப்படி பூஜை புனஷ்காரங்கள் செய்து ஆனந்தமாக வாழ்ந்தவர்கள் தானே! அதனால் தானே நாம இன்னிக்கு சந்தோஷமா செளக்யமா இருக்க முடிகிறது?” என்றாள் ஜானகி.

தன் பெண்ணின் தீர்க்கமான முடிவை எண்ணி வியந்த அவளின் தாயார் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்று விட்டிருந்தாலும், அவளை மேற்கொண்டு சீண்டுவதிலும் சற்றே ஆசைப்பட்டாள். 




அருமை மகளும் ஆருயிர்த்தோழியும் ஒன்றல்லவா ! இதுவரை தாயாக இருந்து பேசியவள் இப்போது தோழியாக மாறிப் பேசலானாள்:

”உன் ஆத்துக்காரர் பேண்ட், சட்டை கோட்டு சூட்டுப் போட்டு டைகட்டி டிப்-டாப்பாக உனக்கு இருக்க வேண்டாமா? கட்டுக்குடுமியுடன், கல்யாணம் ஆனதும் பஞ்சக்கச்சம் கட்டிண்டு, காதிலே கடுக்கண்கள் போட்டுண்டு இருந்தால் நோக்குப்பரவாயில்லையா ? “ என்றாள்.

“அம்மா, இந்த டிப்-டாப் ஆசாமிகளைப் பற்றியெல்லாம் நோக்குத்தெரியாதும்மா. கோட்டுச் சூட்டுப்போட்டு வெளியிலே டை கட்டியவன் எல்லாம் உள்ளுக்குள்ளே வேறொருவனுக்கு கைகட்டித்தான் வேலைப்பார்க்கணும்; 

அதிலும் பாதிபேர் குடிச்சுட்டு வராங்க, தம்மடிக்கிறாங்க, ஊரெல்லாம் கடன் வாங்கறாங்க, ஆபீஸுலே எல்லா லோனும் போடுறாங்க, எதை எதையோ தேவையில்லாததை எல்லாம் தேடி அலையறாங்க. கெட்டபழக்கம் ஒண்ணு பாக்கியில்லாம பழகிக்கிறாங்க;

எந்தவொரு ஆச்சார அனுஷ்டானமும் இல்லாமல் கண்ட எடத்துல கண்டதையும் திங்கறாங்க. கடைசியிலே ஆரம்பத்திலே இருக்குற நிம்மதியைப்பறி கொடுத்துட்டு, நடைபிணமாத் திரியறாங்க! 

இலவச இணைப்பா வியாதியை சம்பாதித்து வந்து பெண்டாட்டி, பிள்ளைகளுக்கும் பரப்பிடறாங்க. உலகத்துல இன்னிக்கு என்னென்ன அநியாயங்கள் நடக்குதுன்னு நாட்டு நடப்பே தெரியாம, நீ ஒரு அப்பாவியா இங்கே இருக்கே;

உனக்கு மாப்பிள்ளையா வரப்போற பத்தரை மாத்துத் தங்கத்தையும், கவரிங் நகைபோன்று நாளடைவில் பளபளப்பிழந்து பல்லைக்காட்டக்கூடிய, இந்தப் படாடோபப் பேர்வழிகளான டிப்-டாப் ஆசாமிகளையும், நீ ஒப்பிட்டுப்பேசறதே எனக்குப்பிடிக்கலை; 

வேத சாஸ்திரங்கள் படித்தவர்கள் எப்போதுமே தவறான குறுக்கு வழிகளுக்குப் போகவே தயங்குவாங்க! அவங்க மனசாட்சி அதுபோல தப்பெல்லாம் செய்ய ஒரு நாளும் அவர்களை அனுமதிக்காது; 

குடுமி என்னம்மா குடுமி !  ”வெச்சா குடுமி--சரச்சா மொட்டை” ன்னு, அப்பாவும் நீயும் தான் பழமொழி சொல்லுவீங்களே! 

அந்தக்ககாலத்துல நம் முன்னோர்களெல்லாம் இதே குடுமிதானே வெச்சிண்டிருந்தா, இப்போ நாகரீகம் பேஷன்னு அடிக்கடி தலை முடியை மட்டும் மாத்திக்கிறா; 

பொம்மனாட்டிகளும் மாறிண்டே வரா; பாவாடை சட்டை தாவணியெல்லாம் போய், மிடி, நைட்டி, சுடிதார், ஜீன்ஸ் பேண்ட், டீ-ஷர்ட்டுனு ஏதேதோ போட ஆரம்பிச்சுட்டா.சுதந்திரம் வேணும்னு சிலபேர் காத்தாட சுதந்திரமாவே உடை அணிய ஆரம்பிசுட்டா. ஆம்பளைகள் மாதிரி தலையையும் பாப் கட்டிங் பண்ணிக்க ஆரம்பிச்சுட்டா; 


ஆம்பளைகளும் அடியோட பொம்மனாட்டி மாதிரி மாறிண்டே வரா; ஸ்கூட்டர் பைக் ஓட்டிப்போவது ஆம்பளையா, பொம்பளையான்னே இப்போ டக்குன்னு கண்டு பிடிக்க முடியலே!;

அதுவும் லேட்டஸ்ட் பேஷன் படி இந்தக்கால பையன்களெல்லாம் பொம்மணாட்டியாட்டம் தலைமுடியை வளர்த்து, அள்ளி முடிஞ்சு ரப்பர் பேண்ட் போட்டுக்க ஆரம்பிச்சாச்சு, காதுலேயும் தோடு போல, கம்மல் போல ஏதேதோ வளையம் போட ஆரம்பிச்சுட்டா. 


பழங்கால வழக்கப்படி ஒரு நாள் குடுமியே திரும்ப பேஷன்னு வந்தாலும் வந்துடும், பேஷன்னெல்லாம் எதுவுமே நிரந்தரமானது இல்லையேம்மா;

பேஷன் அடிக்கடி மாறும்மா; ஆனா உனக்கு மாப்பிள்ளையா வரப்போறவர் எப்போதுமே மாறாம அப்படியே நம் சாஸ்திர சம்ப்ரதாயப்படி நல்லவிதமாக நடந்துகொண்டு, அந்த ஸ்ரீராமாயணத்தில் வரும் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி மாதிரி “ஒரு சொல்” “ஒரு வில்” “ஒரு இல்” என்று ஏகபத்னி விரதனாத்தானம்மா இருப்பார். அது தானேம்மா நமக்கு ரொம்பவும் முக்கியம்” என்று பெரிய பிரசங்கமே செய்ய ஆரம்பித்து விட்டாள், ஜானகி.

ஜானகியின் கன்னங்கள் இரண்டையும் தன் இருகைகளாலும் வழித்து, தன் தலையில் விரல்களை வைத்து சொடுக்கியபடி, அவளின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாள், ஜானகியின் தாயார். 

”எப்படிடீ உனக்கு அவர் இப்படி ஒரு சொக்குப்பொடி போட்டார்?” என்றாள் மேலும் கொஞ்சம் அவளின் அழகான பேச்சுக்களைத் தொடர்ந்து கேட்டு மகிழ.

”அம்மா, அவர் சொற்பொழிவுகள் அடங்கிய CD ஒன்று தேடிப்பிடித்து இன்று தான் கடையில் வாங்கி வந்து கேட்டு மகிழ்ந்தேன். ஒவ்வொரு விஷயத்தையும் எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார், தெரியுமா!;

நாம் எவ்வளவோ பிறவி தாண்டித்தான் இந்த மகத்துவம் வாய்ந்த மனுஷ்யப்பிறவியை அடைகிறோமாம். மனுஷ்யாளாப் பிறப்பதே அரிது என்கிறார்.   பிறவிப்பெருங்கடலைத் தாண்ட மனுஷ்ய ஜன்மா மட்டுமே சுலபமாக வழிவகுக்குமாம்; 


மனுஷ்யாளால் தான் பகவன் நாமாக்கள் சொல்லி வழிபட முடியுமாம். பகவன் நாமா ஒன்று தான் மோட்சத்திற்கு வழிவகுக்குமாம். 

எவ்வளவு அழகாக மனதில் பதியுமாறு மோட்சத்திற்கான வழிகளைச் சொல்கிறார் தெரியுமா! அவருடைய அபூர்வ விஷயஞானம் மட்டும் தானம்மா அவர் எனக்கு போட்ட ஒரே சொக்குப்பொடி” என்றாள் ஜானகி, தன் முகம் பூராவும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போட்டது போன்ற ஓர் பொலுவுடனும், பூரிப்புடனும்.

பருவ வயதில் தன் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்னவென்று பெற்ற தாயாருக்குப் புரியாதா என்ன? 

சிரித்தபடியே ஜானகியை அள்ளிப் பருகி, அவள் நெற்றியில் முத்தமிட்டு, தலையைக் கோதிக்கொடுத்து, அவளை அப்படியே கட்டியணைத்துத் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டாள், ஜானகியின் தாயார்.




தினமும் அந்த வங்கியின் வாசலில் ரகுராமன் தனது காரில் வந்து இறங்குவதும், அவர் உள்ளே நுழையும் முன்பே, வந்துவிடும் செல்போன் தகவலால், வழிமேல் விழி வைத்து ஜானகி ஆவலுடன் ஓடிவந்து, அவரை வரவேற்பதும், வாடிக்கையான நிகழ்ச்சியாக இருந்து வந்தது.

ஒரு ஹேண்ட்பேக் நிறைய வழிய வழிய ரூபாய் நோட்டுக்களாகவும், சில்லறை நாணயங்களாகவும் ரகுராமன் ஜானகியிடம் தருவார். ஜானகி கையால் ஒரு டம்ளர் ஜில் வாட்டர் மட்டும் வாங்கி அருந்துவார். முதல் நாள் அவளிடம் பணத்துடன் ஒப்படைத்துச் சென்ற காலிசெய்யப்பட்ட ஹேண்ட்பேக்கை ஞாபகமாக திரும்ப வாங்கிச் செல்வார். 

இவ்வாறு இவர்களின் காதல் சந்திப்புக்களும், வங்கிக்கணக்கும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்ந்தும் வளர்ந்தும் வந்தன.

ரகுராமனின் வங்கிக்கணக்கில் ஜானகியின் கைராசியால் இன்று பல லக்ஷங்கள் சேர்ந்து விட்டன. அவர்கள் இருவரின் ஆசைப்படி, வங்கிக்கணக்கில் ஒரு அரை கோடி ரூபாய் சேர்ந்த பிறகு, ஊரறிய சிறப்பாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதுபோல அவர்கள் மனதுக்குள் ஓர் ஒப்பந்த நிச்சயதார்த்தம் ஏற்கனவே நடந்துள்ளது. அந்த அரைக்கோடி ரூபாய் சேமிப்பை எட்டப்போகும் நல்ல நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. 





வங்கியில் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் தவிர, வங்கிக்கு வந்து போகும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், கடந்த ஒரு மாதமாக ஜானகி தன் திருமண அழைப்பிதழ்களை, தன் வெட்கம் கலந்த புன்னகை முகத்துடன் விநியோகித்து வருகிறாள்.

இரு வீட்டாருக்கும் அறிந்த தெரிந்த சொந்தங்களும், நண்பர்களுமாக அனைவரும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தி மகிழ, ஜாம் ஜாம் என்று ரகுராமன் ஜானகியின் விவாஹம், சாஸ்திர சம்ப்ரதாய முறைப்படி, நான்கு நாட்கள், இரு வேளைகளும் ஒளபாஸன ஹோமங்களுடன், இனிதே நடைபெற்று முடிந்தது.

ரகுராமன் விருப்பப்படியே ஜானகி தொடர்ந்து தன் வங்கிப்பணிக்குச் சென்று வரலானாள்.




தன் கணவரின் வேத சாஸ்திர நம்பிக்கைக்கு ஏற்றபடி, தினமும் மடிசார் புடவையுடன், இரண்டு மூக்குகளிலும் வைர மூக்குத்திகள் ஜொலிக்க, காதுகள் இரண்டிலும் வைரத்தோடுகள் மின்ன, காலில் மெட்டிகள் அணிந்து, கைகள் இரண்டிலும் நிறைய தங்க வளையல்கள் அடுக்கிக்கொண்டு, தன் நீண்ட கூந்தலை ஒற்றைச்சடையாக குஞ்சலம் வைத்து பின்னிக்கொண்டு, உள்ளங்கைகளிலும், விரல்களிலும் பட்டுப்போல மருதாணி சிவக்க, முகத்திற்கு பசு மஞ்சள் பூசி, நெற்றியிலும், நடு வகிட்டிலும் குங்குமம இட்டுக்கொண்டு, தலை நிறைய புஷ்பங்கள் சூடி, வாயில் தாம்பூலம் தரித்து, கழுத்தில் புதிய மஞ்சள் கயிற்றுடன் திருமாங்கல்யம் தொங்க, கோயிலிலிருந்து புறப்பட்ட அம்மன் போல காட்சியளித்த ஜானகி, வங்கியின் கேஷ் கெளண்டரில் எப்போதும் போல சுறுசுறுப்பாகப் பணியாற்றி வந்தாள்.

மிகவும் லக்ஷ்மிகரமாகத் தோற்றம் அளிப்பதாக ஒரு சிலர் வாய் விட்டுப் பாராட்டும் போது, கொடி மின்னலென ஒரு புன்னகையுடன் அதனை ஏற்றுக்கொள்வாள் ஜானகி.

அவள் கையால் கொடுக்கும் பணத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு, அந்த தனலக்ஷ்மி அம்பாளே நேரில் வந்து தந்ததாக நினைத்துக்கொண்டனர், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள்.

வழக்கமான தோற்றத்தில் இல்லாமல் புதுமையாகத் தோன்றிய ஜானகியைப் பார்ப்பவர்களுக்கு, அது சற்றே அதிசயமாக இருப்பினும், அவளைக் கையெடுத்துக் கும்பிட்டுப் போகணும் என்ற நல்லெண்ணத்தையே ஏற்படுத்தியது.




    
oooooOooooo



கடந்த ஒருவாரமாக 
சக்கைப்போடு போட்டுவந்த 
சுடிதார் வியாபாரக்கடை 
நேற்று இரவு மிகச்சரியாக 
எட்டு மணிக்கு 
மூடப்பட்டுவிட்டது. ;)))))




மேற்படி "சுடிதார் வாங்கப் போறேன்” என்ற 

’சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,


 பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளார்கள். ;)



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 



தங்கள் விமர்சனங்களுக்கு என்னிடமிருந்து 

STANDARD ACKNOWLEDGEMENT

கிடைத்துள்ளதா என்பதை தயவுசெய்து 

உறுதி செய்து கொள்ளவும்.



விமர்சனங்கள் யாவும் தற்சமயம்

 நடுவர் அவர்களின் தீவிர 

பரிசீலனையில் உள்ளன.



பரிசு பெற்றோர் பற்றிய முடிவுகள் 


விரைவில் அறிவிக்கப்படும்.


போட்டியில் பங்குகொண்ட அனைவருக்குமே 


ஓர் இன்ப அதிர்ச்சி கிடைக்க உள்ளது.




அன்புடன்

VGK



38 comments:

  1. “அம்மா, இந்த டிப்-டாப் ஆசாமிகளைப் பற்றியெல்லாம் நோக்குத்தெரியாதும்மா. கோட்டுச் சூட்டுப்போட்டு வெளியிலே டை கட்டியவன் எல்லாம் உள்ளுக்குள்ளே வேறொருவனுக்கு கைகட்டித்தான் வேலைப்பார்க்கணும்; //

    டை கட்டி வாழ்வோரே வாழ்வார் - மற்றையோர்
    கைகட்டி பின் செல்வோரே

    என்கிற புது மொழிப்படி அல்லாமல் புத்திசாலித்தனமாக
    கைநிறைய சம்பாதிக்கும் சாஸ்திரம் அறிந்தவரைத்
    தேர்ந்தெடுத்த கதையின் நாயகி புத்திசாலிதான் ..!

    ReplyDelete
  2. நான் கண்கூடாகவே நகைக்கடைகளிலும் , பாங்குகளிலும் இந்தமாதிரி ரகுராமன் போன்றவ்ர்களும் அவர்களின் குடும்பத்தார்களும் பை நிறைய பணம் கொண்டுவந்து கைநிறைய நகைகள் வாங்கிக்கொண்டும் , வங்கி கணக்குகளை நிர்வகிப்பதையும் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்..!

    ReplyDelete
  3. ரகுராமன் -ஜானகி பெயர்ப் பொருத்தமே அற்புதம் தான் ..!

    ReplyDelete
  4. அருமையான கதை.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. அன்பின் வை.கோ - கதை அருமை - ஜானகியும் ரகுராமனும் - நீண்டதொரு கதை - படித்து விட்டேன் - விமர்சனம் எழுதுகிறேன் - இன்று காலை வைகை எக்ஸ்பிரஸில்சென்னை செல்கிறேன் - 09.02.2014 ஞாயிறன்று காலை தான் மதுரை வருகிறேன் - வந்த பின்னர் எழுதுகிறேன் - கடும் கடும் கடும் பணிச்சுமை - எதிர் பாராத செயல்கள் - அனைவரும் அழைக்கின்றனர் - யாருக்கென நேரம் ஒதுக்குவது ? நிச்சயம் எழுதுகிறேன் - சென்னையில் இருந்தோ அல்லது மதுரைக்கு வந்த பின்னரோ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. விமர்சனம் அனுப்புகிறேன் ஐயா... (விதிமுறைகளின் படி)

    ReplyDelete
  7. அருமையான சிறுகதை. போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. Mail Message from one Mr. R. Rajagopal, PA to GM/Finance, BHEL:-

    Dear Shri Gopu Sir,

    Well & wish to hear the same from you. I think your eyes are recovering to normal with the blessings of Sri Maha Periyavaa.

    I have read your 3 short stories - Jangiri, Chudidar and Love Bank. They are all very interesting to all of our family members including my aged mother in law.

    All your stories are like seeing real life, especially in Chudidar story it is like as if you are telling your own episode.

    During your service in office I have not come across any of your writing. Now only I start reading your writing from your website.

    From the beginning of reading itself of all your writing, one cannot stop reading in the middle, that much interesting, you are telling the matters very casually without artificially (ie. yadhartham).

    Shri Maha Periyavaa will give you enough health and strength for writing a lot of things about practical life of door to door.

    Thanking you and with kind regards,

    R.RAJAGOPAL

    -=-=-=-=-=-

    WELCOME to you Shri. Rajagopal

    Thank you very much for your Very First & Best Comments to my Stories.

    With very kind regards,

    அன்புடன் கோபு

    ReplyDelete
  9. மனம்போல மாங்கல்யமே. வாய்த்த பேர்க்கு வாழ்வெல்லாம் பேரின்ப வைபோகமே. அருமை. அன்புடன்

    ReplyDelete
  10. அருமையான கதை. விமரிசனம் தனியாக.....

    ReplyDelete
  11. arumaiyaana kathai .eluthiyavarukku paaraddukkalum vaazhthukkalum .panguperavirukkum anaivarukkum ungalukkum en iniya vaalthukkal aiyaa .

    ReplyDelete
  12. சூடிதார் கதைக்கு விமரிசனம் எழுத நினைத்திருந்தேன். ஹ்ம்.
    ஜானகி பத்தி இத்தனை அழகா விவரம் எழுதிட்டு கடைசியிலே இந்தப் படம் தானா கிடைச்சுது? :).

    ReplyDelete
  13. கதை என்னமோ சட்டுனு முடிஞ்சாப்போல் இருக்கே! :)))

    @அப்பாதுரை, ஶ்ரீதேவியைப் பிடிக்காதா உங்களுக்கு?? :)))))) சரியாப் போச்சு போங்க. வைகோ சார், விசாகா ஹரி படத்தைப் போட்டிருக்கணுமோ?

    ReplyDelete
  14. அருமையான சிறுகதை. போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. அருமையான சிறுகதை. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. அருமையான சிறுகதைமுன்பே படித்து இருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. அருமையான கதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://swamysmusings.blogspot.com/2014/09/blog-post_22.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  19. இந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் [அவர்களின் விமர்சனம் போட்டியின் நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வாகாமல் இருந்தும்கூட] அவர்களின் விமர்சனத்தைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்.

    இணைப்பு: http://muhilneel.blogspot.com/2014/02/blog-post_23.html

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    ReplyDelete
  20. காதல் வங்கி கதையின் போக்கு தெளிந்த நீரோடை போன்று அழகாக ஓடுகிறது.

    ReplyDelete
  21. கதை நல்லா இருக்கு.முன்பே ஒருமுறை படித்த நினைவு.. இப்பவும் புதுசா படிக்கற மாதிரி சுவாரசியமா இருக்கு.

    ReplyDelete
  22. கதை முன்பே படித்திருக்கிறேன். ஆனால் உங்கள் கதைகள் எல்லாமே படிக்கப் படிக்க படித்துக் கொண்டே இருக்கணும் போல இருக்கும்.

    காதல் வங்கி கதைக்காக பரிசு பெறப்போகும் அதிர்ஷ்ட சாலி விமர்சகர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 27, 2015 at 6:59 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //கதை முன்பே படித்திருக்கிறேன். ஆனால் உங்கள் கதைகள் எல்லாமே படிக்கப் படிக்க படித்துக் கொண்டே இருக்கணும் போல இருக்கும்.//

      ஆஹா, இதைக் கேட்கவே காதுக்குக் குளிர்ச்சியாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஜெ.

      //காதல் வங்கி கதைக்காக பரிசு பெறப்போகும் அதிர்ஷ்ட சாலி விமர்சகர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      :)

      Delete
  23. கதபோட்டில கலந்துகிடுரவங்களுக்கல்லாருக்கும் வாழ்த்துகள். பொஸ்ட் ஆஃப லக்.

    ReplyDelete
  24. ஏற்கனவே படித்த கதைகள் என்றாலும் விமரிசன போட்டிக்காக மறுபடி உலா வருகிறது. தெளிவான கதை திடீர் திருப்பங்கள் இல்லாத லேசான கதை.

    ReplyDelete
    Replies
    1. சரணாகதி. December 1, 2015 at 1:16 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஏற்கனவே படித்த கதைகள் என்றாலும் விமரிசன போட்டிக்காக மறுபடி உலா வருகிறது.//

      தாங்கள் ஏற்கனவே படித்துள்ள கதைகள்தான் என்றாலும், போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள ஒருசில கதைகளில், ஆங்காங்கே பலவித மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சற்றே மெருகூட்டப்பட்டுள்ளன. ADDITIONS / DELETIONS / EDITING போன்றவைகளும் உண்டு.

      //தெளிவான கதை திடீர் திருப்பங்கள் இல்லாத லேசான கதை.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      அன்புடன் VGK

      Delete
  25. நல்ல கதை. மிஸ் பண்ணிட்டேனே!!

    ReplyDelete
  26. தெய்வ சொர்க்க நிச்சயம்தான் திருமணமாய்க் கூடும்! குலமகளாய்க் கிடைப்பதற்கு ரகுராமன் கொடுத்துவைத்தவர்தான். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தானே! பாத்திரப் படைப்பின் மூலம் பல நல்ல கருத்துகளை மனதில் பதிய வைத்த கதாசிரியருக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்!

    ReplyDelete
    Replies
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  27. இந்த கதை படத்துவிட்டேன்.... நல்ல முடிவு....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. May 27, 2016 at 9:44 AM

      //இந்த கதை படித்துவிட்டேன்....//

      வாங்கோ, வணக்கம். சந்தோஷம்.

      //நல்ல முடிவு....//

      அனைத்துப் பெண்களுக்குமே, இந்தக்கதையில் Mind Maturity அதிகமாக உள்ள ஜானகிக்கு ஏற்படுவது போலவே, மூளை மிகக் கூர்மையாக அனைத்து நல்லது கெட்டதுகளையும் எடைபோட்டு ஆராய்ந்து பார்த்து, நல்ல முடிவாக எடுக்க வைத்து, அவரவர் விருப்பப்படி மணாளன் அமையும் பிராப்தம் கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும்.

      Delete
  28. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில் வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 115

    அதற்கான இணைப்பு:

    https://gopu1949.blogspot.in/2011/11/blog-post_30.html

    ReplyDelete
  29. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/02/vgk-04-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/02/vgk-04-03-03-third-prize-winner.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    ReplyDelete
  30. COMMENTS FROM Mr. V. NATANA SABAPATHI Sir in my WhatsApp STATUS page on 23.08.2018 :-

    -=-=-=-=-=-

    தங்களின் ‘ காதல் வங்கி ‘ சிறுகதையைப் படித்தேன்.

    “உண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது.” என்ற தங்களின் வைர வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை.

    கண்டவுடன் காதல் என்று சொல்லி வெறுமனே கைமயக்கம் (Infatuation) கொள்வோர் மத்தியில், ரகுராமனின் அழகிலும், அவரது முகத்தில் தோன்றிய பிரும்ம தேஜஸிலும், அறிவு வாய்ந்த அவரின் பாண்டித்யத்திலும், நல்ல விஷயங்களை, நல்ல விதமாக, நன்கு மனதில் பதியுமாறு எடுத்துச்சொல்லும் நாவன்மையிலும், உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயம் மட்டுமின்றி, சகல ஜீவராசிகளும் நலமாக இருக்க வேண்டும் என்ற அவரின் பிரார்த்தனைகளிலும், ஜானகி வியந்து போய் தன் மனதையே அவரிடம் பறிகொடுத்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

    ‘அன்றே, அப்போதே, அங்கேயே ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று ஜானகியிடம் தொடங்கப்பட்டு விட்டது.’ என்ற வரிகள் மூலம் ஒரு காதல் கதையை சுருக்கமாகவும் பொருள் பொதிந்ததாகவும் சொல்லமுடியும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    -=-=-=-=-=-

    கதையை மிகவும் ரஸித்துப்படித்து, விரிவாகவும், அழகாகவும் அருமையாகவும், பொறுமையாகவும் பின்னூட்டம் அளித்துள்ள திரு. வே. நடன சபாபதி ஐயா அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  31. திருமதி. விஜயலக்ஷ்மி நாராயண மூர்த்தி அவர்கள் இந்தக்கதைக்கான தனது கருத்துக்களை WHATS APP VOICE MESSAGE மூலம் பகிர்ந்துகொண்டு பாராட்டியுள்ளார்கள்.

    விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு
    22.09.2018

    ReplyDelete
  32. The character of janaki was very good. The store is also very interesting

    ReplyDelete