என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 4 / 8 ]


முன்கதை......................... பகுதி - 1

மாலை மணி 5.35 ; கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், பல்வேறு மூட்டை முடிச்சுக்களுடன், மூச்சு வாங்க ரயிலின் வால் பகுதியிலிருந்து தலைப்பகுதி வரை தட்டுத்தடுமாறி ஓடி, தேடி முன்பதிவு செய்த தங்கள் இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியை கண்டுபிடித்து ஏறவும், வண்டி மெதுவாக நகரத் தொடங்கவும் மிகச் சரியாக இருந்தது.

தன்னுடைய சூட்கேஸ் மற்றும் இதர சாமான்கள் மொத்தம் பன்னிரண்டு உருப்படிகள் சரியாக உள்ளனவா என்று ஒரு முறை எண்ணிப் பார்த்துவிட்டு, இருக்கையின் கீழ்புறம் குனிந்து அவற்றைக் காலில் இடறாதவாறு ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தார், பட்டாபி.


“அஸ்திக்கலசம் உள்ள அட்டைப் பெட்டி ஜாக்கிரதை. அதை உடையாமல் ஒரு ஓரமாக உள்ளடங்கி வைச்சுடுங்கோ. ஊர் போய்ச் சேரும் வரை அதை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சாப்பாடுக்கூடை; தயிர் சாத தூக்கு; டவரா, தம்ளர், வாட்டர் கேன், பிளாஸ்க் வைத்திருக்கும் ஒயர் கூடை; நொறுக்குத்தீனி வைத்துள்ள பிக் ஷாப்பர் பை முதலியன அடிக்கடி எடுக்கும் படியாக இருக்கும். அதையெல்லாம் டக்டக்குனு எடுக்க வசதியா முன்னாடி வைச்சிருங்கோ. பணப்பை ஜாக்கிரதையாக இருக்கட்டும். ரயில் டிக்கெட்களை சைடு ஜிப்பிலே வைச்சுடுங்கோ” மனைவி பங்கஜம் தொடர்ச்சியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வந்த வண்ணம் இருந்தாள்.


பொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்து சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.


எதிர்புற லோயர் பெர்த் ஜன்னல் ஓரமாக யாரோ தன் பொருட்களை வைத்து விட்டு எங்கோ சென்றிருப்பார் போலும்.


வண்டியில் ஏறியதும் அவசரமாக கழிவறைக்குப் போன விமலாவை இன்னும் காணோமே என்று விசாரப் பட்டாள் பங்கஜம்.


குனிந்து நிமிர்ந்து பொருட்களை அடுக்கியதில் வியர்த்துக் கொட்டிய முகத்தை, டர்க்கி டவலால் அழுத்தித் துடைத்து, ஃபேன் ஸ்விட்ச்களைத் தட்டி விட்டார் பட்டாபி.


“ஒரு ஜன்னல் தான் நமக்கு. நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி உட்காரணும். சண்டை போடக் கூடாது. சமத்தாய் இருக்கணும்” என்று ரவியையும் கமலாவையும் சமாதானப் படுத்தினாள் பங்கஜம்.
கழிவறையிலிருந்து கலவரத்துடன் ஓட்டமாக ஓடி வந்த விமலா, பயத்தில் தன் தாயாரை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.

”என்னடி ஆச்சு ..... வயதுக்கு வந்த பெண், இப்படிப் பதறி அடித்து ஓடி வரலாமா? நான் சொல்லிக் கொடுத்ததெல்லாம் மறந்துட்டாயா? என்று பதறினாள் பங்கஜம்.


தான் கழிவறையிலிருந்து வெளிவரும் போது எதிர்புற கழிவறையிலிருந்து அந்தப் பயங்கரமான உருவம் வெளிப் பட்டதையும், தன்னை முறைத்துப் பார்த்ததையும், அதைப் பார்த்த தான் ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டதையும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எடுத்துரைத்தாள், விமலா.


புதிதாக வயதுக்கு வந்த [13 வயது] தன் பெண் எதையோ பார்த்து பயந்து போய் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, “இனிமேல் கழிவறைக்குத் தனியாகப் போகாதே; நானும் உன்னுடன் துணைக்கு வந்து கதவருகில் நிற்கிறேன்” என்று சமாதானப் படுத்தி, அவளை அமரச் செய்து ஃபிளாஸ்கிலிருந்து சூடாகக் காஃபியை ஊற்றி தம்ளரை நீட்டினாள், பங்கஜம்.

ஒரு வாய் காஃபியை ருசிப்பதற்குள், அந்த உருவம் இவர்கள் பக்கமே நடந்து வந்து, தாண்டிக் குதித்து, ஜன்னல் ஓரம் இருந்த தன் சாமான்களை சற்று ஒதுக்கி கீழே வைத்து விட்டு, தானும் அங்கு அமர்ந்தது.

விமலா மீண்டும் பயம் வந்தவளாக தன் தாயின் புடவைத் தலைப்பில் புகுந்து கொண்டாள்.


“என்ன நீங்களெல்லாம் காசிக்குப் போறேளா! கங்கா ஸ்நானமா! பித்ரு கார்யமா! பில்டர் காஃபியா ... கும்முனு வாசனை மூக்கைத் துளைக்குதே” என்று கேட்டது அந்த உருவம்.

எல்லாவற்றிற்கும் மொத்தமாகத் தலையை ஆட்டி வைத்தாள் பங்கஜம்.
“நானும் காசிக்குத்தான் போறேன்” என்றது அது, யாரும் கேட்காமலேயே.

“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர், பங்கஜமும் பட்டாபியும்.


முன்கதை....................... பகுதி 2
முன்கதை ....................... பகுதி 3


”சூடான இட்லி, தோசை, வடை, காஃபி, டீ, சாயா” என்ற குரலுடன் இங்குமங்கும் ஒரு சில பணியாளர்கள் போய் வந்த வண்ணம் இருந்தனர்.

வண்டியின் வேகம் குறைந்து ஒரு குலுங்கலுடன் நிற்கத் தொடங்கியது. வெளியே ஏதோ ஒரு ஸ்டேஷன் வந்துள்ளது.

ஆசாமி கண்ணைத் திறந்து ரவியின் தலைக்கு மேல் தன் தாடையை உரசியவாறு குனிந்து வெளியே பார்த்தார். “கூடூர்” என்று கூறிக் கொண்டு, தன் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்து, எட்டாகப் பத்து நிமிடம் உள்ளது, என்றும் சொல்லிக் கொண்டார்.

வெளியே விற்கப்படும் கோன் ஐஸ் க்ரீம், ரவியின் பார்வையில் பட்டு விட்டது. தன் அப்பாவையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தான் ரவி. அவர்கள் அவனிடம் கோபமாக இருப்பதாகத் தோன்றியது.

“கமலா, கமலா..... கோன் ஐஸ் விக்குதுடி” ஆவலுடன் கூறினான்.

ஆசாமி தன் இடுப்பிலிருந்த சுருக்குப்பையை அவிழ்த்துப் பிரித்து பணத்தை எடுத்து “மூன்று கோன் ஐஸ் கொடு” என்று சொல்லி கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டினார்.

ரவிக்கு நாக்கில் எச்சில் ஊறி உடம்பெல்லாம் ஜில்லிட்டுப் போனது போல ஒரே குஷியானது.

அவர் நீட்டிய கோன் ஐஸை வாங்கி ரவி உடனே கிடுகிடுவென சுவைக்க ஆரம்பித்து விட்டான். கமலா தயங்கியவாறே வாங்கி கையில் வைத்துக் கொண்டு, தன் அம்மாவையும் அப்பாவையும் பயத்துடன் ஒரு பார்வை பார்த்தாள். விமலா ”தனக்கு வேண்டாம் ” என்று உறுதியாக மறுத்து விட்டாள்.

“ஐயா, உங்களைத் தயவுசெய்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம். இது போல எதுவும் வாங்கித் தராதீர்கள். எட்டாக்கைப் பயணம். குழந்தைகளுக்கு ஏதும் உடம்புக்கு வந்து விட்டால் நாங்கள் தான் கஷ்டப் படணும்” என்று மாற்றி மாற்றி கண்டிப்புடன் சொல்லி விட்டனர், பெற்றோர்கள் இருவரும்.

“வெய்யில் காலம், குழந்தைகள் ஏதோ ஆசைப்படுது. ஒரே ஒரு ஐஸ் தானே, உடம்புக்கு ஒண்ணும் வந்து விடாது. அப்படியே ஏதாவது காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் என்றாலும் என்னிடம் எல்லா மருந்துகளும் உள்ளன. கவலையே படாதீங்கோ” என்று சொல்லி விட்டு, தன் கையில் மீதியிருந்த ஒரு கோன் ஐஸையும் , ரவியின் மற்றொரு கையில் திணித்தார். ரவியின் சந்தோஷம் இப்போது இரட்டிப்பானது.

மிகவும் பொறுமையாக பல்லைக் கடித்துக்கொண்டு, ரவியை முறைத்துப் பார்த்தனர் பங்கஜமும், பட்டாபியும். விவரம் புரியாத அவனை தனியே கூட்டிப் போய் நாலு சாத்து சாத்தணும் போலத் தோன்றியது அவர்களுக்கு.

வண்டி மிகப்பெரியதொரு சத்தத்துடன் நகரத் தொடங்கியது.

"சாப்பாடு மூட்டையைப் பிரிச்சுடலாமா?" பட்டாபியிடம் வினவினாள் பங்கஜம்.

“அது ஒண்ணுதான் இப்போ குறைச்சல். எனக்கு ஒண்ணுமே வாய்க்குப் பிடிக்காது போல உள்ளது. குமட்டிக் கொண்டு வாந்தி வரும் போல உள்ளது” என்றார் மிகுந்த எரிச்சலுடன், சற்று உரக்கவே, அந்த ஆசாமிக்கு காதில் விழட்டும் என்று.

ஆசாமி, தன் ஏதோ ஒரு பையில் கையை விட்டு, எதையோ எடுத்து, “இ ந் தா ங் கோ.... ஸார் ..... ‘ஹா ஜ் மோ லா’ ஆயுர்வேத மருந்து. இரண்டு வில்லைகள் வாயில் போட்டுச் சப்பினால் போதும். குமட்டல் போய் நல்ல பசியைக் கிளப்பிவிடும்” என்றார் அந்த ஆசாமி.

இதைக் கேட்டதும், பட்டாபிக்கு பசிக்குப் பதிலாக கடுங் கோபத்தைக் கிளம்பி விட்டது, அவரின் பேச்சு.

பட்டாபி மிகுந்த கோபத்துடன் அவரிடம் என்னவெல்லாம் பேசினார் தெரியுமா?



இப்போது பகுதி 4


”யோவ் .. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. என் தகப்பனார் செத்துப்போய் பதினைந்து நாட்கள் தான் ஆகிறது. அவரின் கடைசி ஆசைப்படி கர்மா செய்ய காசிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அது முடியும் வரை வெளி மனுஷ்யாள் யாரிடமும் பேசக்கூடாது. கண்டதைச் சாப்பிடக் கூடாது.

நிம்மதியா எங்களைக் கொஞ்சம் தனியா இருக்க விடுங்கோ. எங்கள் பொறுமையை ரொம்பவும் சோதிக்காதீங்க; ஏண்டா இந்த ரயிலில், இந்தப் பெட்டியில், முன்பதிவு செய்தோம்னு ரொம்பவும் வேதனைப் படறோம்.

வேறு எங்காவது ஒத்தை சீட்டு இருந்தா, நீர், டீ.டீ.ஆர். இடம் சொல்லி மாத்திண்டு போய்ட்டாக் கூட உமக்குப் புண்ணியமாப் போகும்” என்று பட்டாஸ் கட்டைப் பற்ற வைத்தது போல வெடிக்க ஆரம்பித்தார், பட்டாபி.


இதுபோன்ற எவ்வளவோ பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் இதுவரை பலமுறை சந்தித்த அந்த ஆசாமிக்கு, மனதிற்குள் சற்றே வருத்தமாக இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், கழிவறைக்குப் போவது போல வெளியேறி, அருகிலிருந்த கம்பார்ட்மெண்ட்கள் சிலவற்றிற்குச் சென்று, இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தார். உடம்புத் தோலில் மட்டுமல்லாமல் அவர் மனதும் ரணமாகிப் போய் இருக்குமோ என்னவோ .... பாவம்.

வெகு நேரம் ஆகியும், அந்த ஆசாமியைக் காணாததால், சற்று நிம்மதி அடைந்திருந்தனர், பட்டாபியின் குடும்பத்தினர்.

“ஒரு வேளை நீங்க போட்ட சத்தத்தில், அந்த மனுஷன் ஓடும் ரயிலிலிருந்து குதித்திருப்பாரோ?” பங்கஜம் தன் கணவனிடம் சிரித்துக் கொண்டே மெதுவாகக் கேட்டாள்.

“அப்படியெல்லாம் இருக்காது; அவனைப் பார்த்தால், நீ சொல்வது போல ஓடும் ரயிலிலிருந்து குதித்து உயிரை விடும் அளவுக்கு மானஸ்தனாகத் தெரியவில்லை. பரதேசிப்பயல் ... இங்கு எங்காவது தான் கழிவறைக்குப் போய் இருப்பான். வந்துடுவான்” என்றார் பட்டாபி.

“இப்போது சாப்பாட்டு மூட்டையைப் அவிழ்த்தால், உடனே அவன் வந்து, அது என்ன? இது என்ன? என்று கேட்டுக் கேட்டே கழுத்தை அறுத்து நம்மைச் சாப்பிட விடாமல் சங்கடப் படுத்தி விடுவான். என்ன பண்ணித் தொலைப்பது என்றே தெரியவில்லை. இவ்வளவு விகாரமாயிருப்பவன் ஏன் ரயிலில் நம்முடன் வந்து தொலைந்தானோ? நாம் பண்ணின பாபம் நம்மைக் காசி வரை துரத்தி வருகிறது” பங்கஜம் மேலும் தூபம் போட்டாள்.

சற்று நேரத்தில் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் அவுட்டர் சிக்னல் கிடைக்காமல், நிற்க ஆயத்தமாகி, இஞ்ஜின் பெருமூச்சு வாங்குவது போல சத்தம் கேட்டது.

அந்த ஆசாமி மெதுவாக இவர்கள் இருக்குமிடம் வந்தார். ஏதோ ஒரு பையில் கையை விட்டு ஒரு பொட்டலத்தை வெளியில் எடுத்து அதை ஒரு கையிலும், குடிநீர் பாட்டிலை மறு கையிலும் வைத்துக்கொண்டு, ”தான் இங்கு அமர்ந்து சாப்பிடலாமா” என்பது போல, இவர்களை ஒரு பார்வை பார்த்தார். அவர்கள் அவரைக் கொஞ்சமும் கவனிக்காதது போலவும், வேறு எங்கோ பார்ப்பது போலவும், முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு பாசாங்கு செய்தனர்.

ஆசாமி ரவியைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்து விட்டு, “தம்பீ .... நான் சப்பாத்தி சாப்பிடப் போகிறேன், சாப்பிடலாமா?” என்றார். கணவனும் மனைவியும் மீண்டும் ரவியைப் பார்த்து முறைக்க, “சப்பாத்தி எனக்குப் பிடிக்காது, எனக்கு வேண்டாம், நீங்களே சாப்பிடுங்க” எனப் பட்டென்றுச் சொல்லி விட்டான், ரவி.

நான்கு சப்பாத்திகளை கொத்துமல்லித் துவையலுடன் சாப்பிட்டு விட்டு, குடிநீர் பாட்டிலையும் காலி செய்தார். சூடான பால் ஒரு கப் வாங்கிக் குடித்தார். பெரிய சைஸ் பச்சை மோரிஸ் பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு, எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார்.

பிறகு அவர் அந்தப் பொடியன் ரவியைப் பார்த்து, “ரவி, நீங்களெல்லாம் ஒரே குடும்பம். ஜாலியாக ரயில் பயணத்தை அனுபவியுங்கள். நீ எனக்கான லோயர் பெர்த்தில் படுத்துக்கோ; நான் உனக்கான அப்பர் பெர்த்தில் போய் படுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லி விட்டு, தன்னுடைய எல்லா சாமான்களுடனும், குடிபெயர்ந்து மேலே ஏறி விட்டார் அந்த ஆசாமி.

கீழே லோயர் பெர்த்தில் படுத்து பயணிக்க வேண்டிய உரிமையுடன் ரிஸர்வேஷன் டிக்கெட் வாங்கியுள்ள அந்த வயதான மூத்த குடிமகன், தங்களுக்காக கஷ்டப்பட்டு அப்பர் பெர்த்துக்கு, போகிறாரே என்ற ஒரு எண்ணமோ, பச்சாதாபமோ இல்லாமல் இருந்தனர் பட்டாபி கோஷ்டியினர்.

இதுதான் நல்ல சமயம் என்று சோத்து மூட்டையைப் பிரித்து, இரவு சாப்பாட்டை திருப்தியுடன் முடித்துக் கொண்டது, பட்டாபி கோஷ்டி.

“நாளைய ஒரு நாள் முழுவதும், நாம் ரயிலிலேயே கழித்தாக வேண்டும். அது கீழே இறங்காமல், மேலேயே படுத்துக் கொண்டு விட்டால் தேவலாம்” என்று இவர்களுக்குள் நினைத்துக் கொண்டனர்.


ரயில் பயணம் தொடரும்

30 கருத்துகள்:

  1. தன்னுடைய கடுமையான சொற்களால் அவரை புண்படுத்தியாயிற்று - நல்ல சாப்பாடு சாப்பிட்டாயிற்று! ம்....

    தொடரட்டும் ரயில் பயணம்....

    பதிலளிநீக்கு
  2. நன்றாக போய் கொண்டிருக்கிறது சார் ”கங்கா காவேரி எக்ஸ்பிரஸூம்” இந்த கதையும்.

    பதிலளிநீக்கு
  3. அடுத்தவரை புண்படுத்திவிட்டு காசிக்கா ??

    பதிலளிநீக்கு
  4. ரயில் சூழல் நன்றாக மனதில் பதிந்துவிட்டது
    நானும் உங்களுடன்தான் வருகிறார்போல உள்ளது
    என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. பல விதமான உணர்வுகள் கொன்ட மனிதர்களைத் தாங்கிய ரயில் பயணம் சுகமாகச் சென்று கொன்டிருக்கிறது....அவர்களுடனும் நாமும் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். பயணம் முடியும்போது மனித மனங்களின் அற்ப குணங்களும் விகாரங்களும்கூட மறைந்து விடுமென நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அந்த உப்புச் சீடை மனிதர் பாவம், உடல் தான் இப்படி என்றால், மனமும் இந்த மாதிரி மனிதர்களால் சல்லடை ஓட்டைகளாய்..

    பதிலளிநீக்கு
  7. ஒருவரின் மனதை புண்படுத்திய பாவத்தை
    காசி சென்று கரைத்து விட முடியுமா?
    மனிதர்களின் மன அழுக்குகளும் வயதான மனிதரின் வலியும்
    நன்றாக கதையில் வெளிப்பட்டுள்ளது

    பதிலளிநீக்கு
  8. பேரன்புடன் என்னுடன் ’கங்கா காவேரி எக்ஸ்பிரஸ்’ ரயிலில், தொடர்ந்து பயணம் செய்து வருவதுடன், அவ்வப்போது தங்களின் மேலான கருத்துக்கள் மூலம் எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்து வரும்

    திரு.வெங்கட்,திரு. எல்.கே., திரு. ரமணி சார்;
    திருமதி கோவை2தில்லி, திருமதி ராஜி, திருமதி மனோ சுவாமிநாதன் & திருமதி. மி கி மாதவி அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    அடுத்த பகுதி வெளியிடும் முன் குட்டிக்கதை ஒன்று வெளியிட எனக்கு மிகவும் “ஆசை” யாக உள்ளது
    .
    கதையின் தலைப்பும் “ஆசை” தான்.

    இன்று இரவே நீங்களும் படிக்க “ஆசை” ப்படலாம்.

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. முகம், நெற்றி, தலை, கை, கால்கள், விரல்கள் என எல்லா இடங்களிலும் சிறியதும், பெரியதுமான கொப்புளங்கள். உப்புச்சீடை, வெல்லச்சீடை போல முண்டும் முடிச்சுமாக பார்க்கவே அருவருப்பான தோற்றம்.//
    இப்படி ஒரு பெரும் பணக்காரரை நான் நேரில் பார்த்த அனுபத்தை ஞாபகப் படுத்தியது.

    பதிலளிநீக்கு
  11. இராஜராஜேஸ்வரி said...
    //முகம், நெற்றி, தலை, கை, கால்கள், விரல்கள் என எல்லா இடங்களிலும் சிறியதும், பெரியதுமான கொப்புளங்கள். உப்புச்சீடை, வெல்லச்சீடை போல முண்டும் முடிச்சுமாக பார்க்கவே அருவருப்பான தோற்றம்.//
    இப்படி ஒரு பெரும் பணக்காரரை நான் நேரில் பார்த்த அனுபவத்தை ஞாபகப் படுத்தியது.//

    நானும் இது போன்ற ஒருவரைப் பார்த்ததனால் தான் இந்தக் கதையை எழுத அதுவே காரணமானது. ஆங்காங்கே ஒரு சிலர் இது போல ... பாவம்.

    பதிலளிநீக்கு
  12. இப்படியும் மனிதர்கள் மனிதாபிமானமில்லாமல் இருக்கிறார்களே என நினைக்கும்போது,இவர்கள் எத்தனை தரம் காசிக்குப்போனாலும், பாவம் தொலையாது.

    //இதுபோன்ற எவ்வளவோ பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் இதுவரை பலமுறை சந்தித்த அந்த ஆசாமிக்கு, மனதிற்குள் சற்றே வருத்தமாக இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், கழிவறைக்குப் போவது போல வெளியேறி, அருகிலிருந்த கம்பார்ட்மெண்ட்கள் சிலவற்றிற்குச் சென்று, இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தார். உடம்புத் தோலில் மட்டுமல்லாமல் அவர் மனதும் ரணமாகிப் போய் இருக்குமோ என்னவோ .... பாவம்.//என் மனதும்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்முலு, செளக்யமா இருக்கீங்களா! அடடா, உங்களின் இந்தக்கருத்துக்களை, அண்ணா கவனிக்கவே இல்லை. இப்போது தான் பார்க்கிறான். ஏதோ விட்டுப்போய் விட்டது. ஒருவேளை மின் தடை காரணமாகக்கூட இருக்கலாம். பிறகு மின்சாரம் வந்தவுடன், சம்சாரம் கூப்பிட்டு இருக்கும். அண்ணா சுத்தமாகவே மறந்தும் போயிருக்கலாம். கோச்சுக்காதீங்க தங்கச்சி.

      //இப்படியும் மனிதர்கள் மனிதாபிமானமில்லாமல் இருக்கிறார்களே என நினைக்கும்போது,இவர்கள் எத்தனை தரம் காசிக்குப்போனாலும், பாவம் தொலையாது.//

      கரெக்டா பொட்டுலே அடிச்சாப்போல சொல்லிட்டீங்க.

      ****.... இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தார். உடம்புத் தோலில் மட்டுமல்லாமல் அவர் மனதும் ரணமாகிப் போய் இருக்குமோ என்னவோ .... பாவம்.****

      //என் மனதும்தான்//

      சூப்பர் அண்ணாவின் அன்புத்தங்கை என்றால் சும்மாவா பின்னே! அம்முலுவின் மனதும் மிகவும் இளகியது, மிருதுவானது, மென்மையானது, மேன்மையானது. மிக்க மகிழ்ச்சி.... அம்முலு.

      அன்புடன்
      கோபு அண்ணா

      நீக்கு
  13. மனித நேயம் எங்கே போயிற்று??

    தகப்பனார் வயதுள்ள மனிதரை இப்படி புண்படுத்தும் வார்த்தைகளால் குதறுவது எந்தவிதத்தில் நியாயம்?? பட்டாபியும் பங்கஜமும் இப்படி நடந்துக்கிட்டால் அவர்களைப்பார்த்து குழந்தைகளும் இதே போல் செய்யாதோ??

    முன்னேர் போற வழி தானே பின்னேர்?

    அந்த மனிதர் இது ஒன்னும் எனக்கு புதிதில்லை என்பது போல் இவருடைய வார்த்தைகளையெல்லாம் மனசுல வருத்தம் இருந்தாலும் வெளிக்காட்டிக்காமல் ஒரு வார்த்தைக்கூட திருப்பி பேசாம அவரும் கஷ்டப்பட்டு முன்பதிவு செய்த இடத்தை விட்டு தூரமா போயிட்டாரே...

    கஷ்டமா இருக்கு :(

    தன் அப்பா இறந்தப்பின் இப்படி ஒரு மனிதரைப்பார்க்கும்போது பட்டாபிக்கு ஏன் தன் தந்தை நினைவு வரலை??

    தந்தையின் ஆத்மா இவர்களை மன்னிக்குமா??

    அவரை கஷ்டப்படுத்திட்டு இவர்கள் மட்டும் நல்லா வயிறு நிறைய சாப்பிட்டது படிக்கிறவங்களுக்கு இவர்களை பார்த்தால் தான் குமட்டிக்கிட்டு வரும்... இப்படி ஒரு செயலைச்செய்தால் பிள்ளைகள் கூட பெற்றோரை மதிக்காது...

    ஒன்னு மட்டும் புரிஞ்சுடுத்து.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது தான்...

    இவர்களின் முதுமைக்காலத்தில் இப்படி எதுனா ஒரு வியாதி வந்துட்டால்.... பிள்ளைகள் இவர்களை ஒதுக்கி தான் வைக்கும்...

    ஏன்னா நல்லது சொல்லி தானும் வளரலை பிள்ளைகளையும் நல்லபடி வளர்க்க பிரியப்படலை...

    இனி என்னாகுமோ :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மனித நேயம் எங்கே போயிற்று??//

      அது குவைத்துக்குப் பயணம் ஆகி என் மஞ்சுவின் மனதினில் போய் ஒளிந்து கொண்டுள்ளதுன்னு நினைக்கிறேன்.

      //முன்னேர் போற வழி தானே பின்னேர்?//

      அதே அதே .... சபாபதே! ;)

      //அந்த மனிதர் இது ஒன்னும் எனக்கு புதிதில்லை என்பது போல் இவருடைய வார்த்தைகளையெல்லாம் மனசுல வருத்தம் இருந்தாலும் வெளிக்காட்டிக்காமல் ஒரு வார்த்தைக்கூட திருப்பி பேசாம அவரும் கஷ்டப்பட்டு முன்பதிவு செய்த இடத்தை விட்டு தூரமா போயிட்டாரே...

      கஷ்டமா இருக்கு :( //

      மஞ்சுவின் மனஸு பஞ்சு ... பஞ்சு மெத்தை போன்று மென்மையானது + மேன்மையானது என்பதை இவ்விடம் என்னால் உணர முடிகிறது.

      கதை என்று படிக்காமல் அத்துடன் அப்படியே ஒன்றிப்போயல்லவா கருத்துக்கூறி கஷ்டப்படுகிறீர்கள்?

      You are so Great & Very Nice character Manju !
      I am so Happy for having you as my own child ;)))))

      தொடரும் ....


      நீக்கு
    2. //ஒன்னு மட்டும் புரிஞ்சுடுத்து.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது தான்...//

      அதே அதே ......

      //இவர்களின் முதுமைக்காலத்தில் இப்படி எதுனா ஒரு வியாதி வந்துட்டால்.... பிள்ளைகள் இவர்களை ஒதுக்கி தான் வைக்கும்...//

      வியாதி வராவிட்டாலுமே கூட ஒதுக்கி தான் வைக்கப்போகிறார்கள்.

      //ஏன்னா நல்லது சொல்லி தானும் வளரலை பிள்ளைகளையும் நல்லபடி வளர்க்க பிரியப்படலை...//

      நல்லதுக்கே காலம் இல்லை என்று சொல்லிட்டாங்க எங்க மஞ்சு. நல்லது. அதே அதே ....

      //இனி என்னாகுமோ :(//

      மேற்கொண்டு படித்தால் தான் தெரியும்.

      பிரியமுள்ள,
      கோபு அண்ணா

      நீக்கு
  14. அடுத்த பகுதி படிக்க தான் போய்க்கிட்டு இருக்கேன் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மஞ்சுபாஷிணி October 22, 2012 6:28 AM
      அடுத்த பகுதி படிக்க தான் போய்க்கிட்டு இருக்கேன் அண்ணா..//

      சந்தோஷம் மஞ்சு ... எங்கே போனாலும் ஜாக்கிரதையாக கவனமாகப் போய்ட்டு வரணும்மா .. சொல்லிட்டேன்.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  15. கோபம் வந்தா மனுஷாளுக்கு என்ன பேசறோம்ன்னே தெரியாதோ?

    பாவம் அந்த மனுஷர். சரி, கொபு அண்ணா அடுத்த பகுதிகள்ல அவர பெரிய மனுஷனா காட்டுவார் பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANI February 4, 2013 at 1:02 AM
      //கோபம் வந்தா மனுஷாளுக்கு என்ன பேசறோம்ன்னே தெரியாதோ?

      பாவம் அந்த மனுஷர். சரி, கோபு அண்ணா அடுத்த பகுதிகள்ல அவர பெரிய மனுஷனா காட்டுவார் பாருங்களேன்.//

      அடடா, இப்படியெல்லாம் ஒரு எதிர்பார்ப்பா? அடுத்த பகுதிகளில் நான் என்ன செய்திருக்கேனோ? .... ஆண்டாவா! நீ தான் என்னைக் காப்பாத்தணும்.

      நீக்கு
  16. மனிதனுக்கு உலகத்திலுள்ள அனைத்தும் இறைவனுடைய படைப்புகளே என்று உணராத வரை இப்படிப்பட்ட உணர்ச்சிப் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கும்.

    பதிலளிநீக்கு
  17. காசிக்கு கர்மா பண்ண சிரத்தையுடன் போறவங்க சக பயணியுடன் சுமுகமா பழகணும்னு நினைக்க மாட்டறாளே. இதமா பழகாட்டி கூட பரவால்லை அவரை புண் படுத்தாமலாவது எருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  18. சேச்சே... என்ன மனிதர்களப்பா... ஒரு பெரியவரிடம் மரியாதையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதை செய்யலாமோ? விகாரமாயிருப்பது அவர் தவறா? நாம் என்றைக்கும் இதேபோல் இருந்துவிடுவோமா? எதையும் யோசித்துப் பார்க்கவேண்டாமோ? பாவம் அந்தப் பெரியவர்...

    பதிலளிநீக்கு
  19. அஸ்தி கலசமுனா இன்னா? வெளங்கலியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 9, 2015 at 6:24 PM

      //அஸ்தி கலசமுனா இன்னா? வெளங்கலியே.//

      ஹிந்து மதத்தில், பெரும்பாலும் இறந்தவர்களின் உடலைப் புதைக்காமல் எரிப்பது மட்டுமே வழக்கம். அவ்வாறு எரிக்கப்பட்ட அவரின் உடலில் இருந்து, மறுநாள் போய், அந்த எலும்புகளை சாம்பலுடன் சேர்த்து பொறுக்கி ஒரு புதிய மண் சட்டியில் சேகரித்து, அதன் பின் அவற்றில் பால் ஊற்றி, புண்ணிய நதிகளில் கரைப்பார்கள். அந்த மண் சட்டியையும் பிறகு உடைத்து விடுவார்கள். இறந்தவரின் எலும்பும் சாம்பலும் சேகரித்து வைக்கப்படும் மண் பாத்திரத்தின் பெயரே அஸ்தி கலசம் என்று அழைக்கப்படுகிறது.

      நீக்கு
  20. அவர்கள ஒரு நல்லகாரியத்தின் நிமித்தமாக காசி போறதெல்லாம் சரிதான். அந்த பெரியவர் பாட்டுக்கு தேமேன்னுதானே உக்காந்திருந்தார் அவரிடம் ஏன் இப்படி வெறுப்பா பீசணும்.

    பதிலளிநீக்கு
  21. தன் குடும்பமாக நினைத்து விட்டுக் கொடுக்கும் முதிய வயதிற்குரிய பெரியவரின் மன முதிர்ச்சி, பட்டாபியின் சுயநலம், ஏதோ சுவாரசியமாக நடக்கப் போகுது....தொடர்வோம்...

    பதிலளிநீக்கு
  22. //கீழே லோயர் பெர்த்தில் படுத்து பயணிக்க வேண்டிய உரிமையுடன் ரிஸர்வேஷன் டிக்கெட் வாங்கியுள்ள அந்த வயதான மூத்த குடிமகன், தங்களுக்காக கஷ்டப்பட்டு அப்பர் பெர்த்துக்கு, போகிறாரே என்ற ஒரு எண்ணமோ, பச்சாதாபமோ இல்லாமல் இருந்தனர் பட்டாபி கோஷ்டியினர்.//
    நியாயமா? தொடர்வோம்!

    பதிலளிநீக்கு
  23. கதை பின்னூட்டங்கள் எல்லாம் படித்தாச்சி. காசிக்கு போயி கர்மா பண்ண போறவங்க மனசையும் சுத்தமா வச்சிருக்கலாம். அவரின் உருவத்தைக்கண்டு வெறுப்படைந்து அதை அவரிடமே கடினமான வார்த்தைகளைச்சொல்லி கஷ்டப்படுத்தி இருக்க கூடாது. அந்த பெரியவரும் பலரிடமும் இதுபோல வெறுப்பை சந்தித்து இருந்தாலும் அந்த நேர வலியை எப்படி தாங்க முடியும். அப்படியும் அவர் எதையுமே வெளிப்படுத்திக்கொள்ளாமல் அவர்களிடம் சுமுகமாகவே பேசுகிறார். இது போன்ற தருணங்களில் அவரவர் இடத்தில் நம்மை இருத்திப் பார்த்தால்தான் அவர்கள் மன நிலை புரிஞ்சுக்க முடியும். கதையில் எல்லா உணர்வுகளும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுத்து வீரியம் மிக்கதாக இருக்கு. படிக்கிற எல்லாருக்குமே அந்த தம்பதிகள் பெரியவரிடம் நடந்து கொள்ளும் விதம் பார்த்து கோபப்படுகிறார்கள் என்றால் இந்தக்கதையை எவ்வளவு ஆர்வமுடன் படிக்கிறார்கள் என்று புரிய முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... February 10, 2016 at 1:10 PM

      வாங்கோ, வணக்கம்.

      //கதை பின்னூட்டங்கள் எல்லாம் படித்தாச்சி.//

      ஆஹா, மிகவும் சந்தோஷம். கதையைப் போலவே பலரின் பின்னூட்டங்களும் சுவாரஸ்யமாகவே இருக்கும் என்பதை என்னைப்போலவே அறிந்துள்ளவர்தான் நீங்களும். :)

      //காசிக்கு போயி கர்மா பண்ண போறவங்க மனசையும் சுத்தமா வச்சிருக்கலாம். அவரின் உருவத்தைக்கண்டு வெறுப்படைந்து அதை அவரிடமே கடினமான வார்த்தைகளைச்சொல்லி கஷ்டப்படுத்தி இருக்க கூடாது. அந்த பெரியவரும் பலரிடமும் இதுபோல வெறுப்பை சந்தித்து இருந்தாலும் அந்த நேர வலியை எப்படி தாங்க முடியும். அப்படியும் அவர் எதையுமே வெளிப்படுத்திக்கொள்ளாமல் அவர்களிடம் சுமுகமாகவே பேசுகிறார்.//

      பொதுவாக மக்கள் பலரின் இயல்பான மனநிலையும், ஸாது (யோகி) ஒருவரின் மனநிலையும் இவ்வாறு வேறுபட்டு இருக்கக்கூடும்.

      //இது போன்ற தருணங்களில் அவரவர் இடத்தில் நம்மை இருத்திப் பார்த்தால்தான் அவர்கள் மன நிலை புரிஞ்சுக்க முடியும்.//

      கரெக்ட். அதையெல்லாம் பொதுவாக யாரும் சிந்திக்க மாட்டோம் என்பதே யதார்த்தம்.

      //கதையில் எல்லா உணர்வுகளும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுத்து வீரியம் மிக்கதாக இருக்கு.//

      தங்களுடையதும் எப்போதும் வீரியம் மிக்க பின்னூட்ட எழுத்துக்களாகவே இருக்கு. :) மிக்க மகிழ்ச்சி !

      //படிக்கிற எல்லாருக்குமே அந்த தம்பதிகள் பெரியவரிடம் நடந்து கொள்ளும் விதம் பார்த்து கோபப்படுகிறார்கள் என்றால் இந்தக்கதையை எவ்வளவு ஆர்வமுடன் படிக்கிறார்கள் என்று புரிய முடிகிறது.//

      என் எழுத்துக்களை ஆர்வமுடன் படிப்பவர்கள் எண்ணிக்கை அன்று (ஆரம்ப கட்டமான 2011 பிப்ரவரியில்) மிகக்குறைவாக இருந்ததால், இதே கதையினை பிறகு இருமுறை (2011 நவம்பர் + 2014 பிப்ரவரி) வெவ்வேறு காரணங்களுக்காக மீள் பதிவாக வெளியிட நேரிட்டது.

      அப்போது மேலும் பலர் ஆர்வமாக வாசிக்க வாய்ப்பாக அவை அமைந்தன. இந்தக்கதை ஒரு எழுத்துகூட EDIT செய்யப்படாமல், மங்கையர் மலரில் வெளியாகியுள்ளது.

      அதுமட்டுமல்ல .... வேற்று மொழியான கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு, அங்குள்ள பிரபல மாத இதழிலும் வெளியாகியுள்ளது.

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான மிக விரிவான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

      நீக்கு