என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

VGK 05 ] காதலாவது கத்திரிக்காயாவது !



இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 20.02.2014 
வியாழக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 
[ V A L A M B A L @ G M A I L . C O M ]

REFERENCE NUMBER:  VGK 05

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:

 



”காதலாவது ..... 
கத்திரிக்காயாவது ”

சிறுகதை

By வை.கோபாலகிருஷ்ணன்

-oOo-



’காதலாவது  .... கத்திரிக்காயாவது’
என்று நினைத்து இந்தக் கதையைப் 
படிக்காமல் இருந்து விடாதீர்கள்.



காய்கறி விற்கும் காமாட்சியைக் காண வேண்டும் என தன் கண்கள் இரண்டும் துடிப்பதையும், கால்கள் இரண்டும் அந்தச் சின்ன மார்க்கெட்டை நோக்கி காந்தம் போல இழுக்கப் படுவதையும் கொஞ்ச நாட்களாகவே உணரத் தொடங்கியிருந்தான் பரமு.


நிறம் சுமாராகவே இருந்தும், இருபது வயதே ஆன காமாட்சி நல்ல ஒரு அழகி. 


பளிச்சென்ற தீர்க்கமான முகம். நல்ல உயரம். சகல சாமுத்ரிகா லக்ஷணங்களுடன் கூடிய உடல்வாகு கொண்டு பூத்துக்குலுங்கும் பருவ வயதுப்பெண். 

அவளைப் பார்ப்பவர்களுக்கெல்லாம், உற்சாக பானம் ஏதும் அருந்தாமலேயே, அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு வித ‘கிக்’ ஏற்படுவதும் உண்டு.


கை தேர்ந்த சிற்பி ஒருவரால், செதுக்கப்பட்ட பொற்சிலை போலத் தோன்றுகிறாளே ! இன்னும் சற்று கலராக மட்டும் இவள் இருந்திருந்தால், யாராவது சினிமாவில் புதுமுகக் கதாநாயகியாக்க கூட்டிப் போயிருப்பார்களோ என தனக்குள் நினைத்துக் கொண்டான் பரமு.


சிறு வயதிலேயே தாயை இழந்தவன் பரமு. அவனுக்கு உடன் பிறப்புகள் யாருமில்லை. கல்லூரிப் படிப்பை முடித்து ரிசல்ட் வரும் முன்பே ஒரே ஆதரவாக இருந்த தந்தையும் போய்ச் சேர்ந்து விட்டார். 



பெண்களுடன் கொஞ்சமேனும் பேசிப் பழகிப் பழக்கமில்லாத பரமுவுக்கு, இந்தக் காய்கறிகள் விற்கும் காமாட்சியிடம் மட்டும் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதற்கு காரணமே, அந்த ஊரில் இருந்த மிகப் பெரியதொரு காய்கறி மார்க்கெட் மட்டுமே.


தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள பரமு அவ்வப்போது தமிழில் வெளியாகும் வார இதழ், மாத இத்ழ் முதலியவற்றிற்கு சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள் என அனுப்பி அதில் வரும் சன்மானத் தொகையிலும், தற்சமயம் மாணவர்கள் தங்கிப் படித்து வரும் விடுதியின் மெஸ் ஒன்றில் தற்காலிகமாக வேலை பார்த்து, அதில் கிடைக்கும் சொற்ப சம்பளத்திலும் காலம் தள்ளி வருபவன். மேலும் தன் படிப்புக்கு ஏற்ற நல்லதொரு வேலை கிடைக்க மனுக்கள் போட்டுக் காத்திருப்பவன். அந்த மெஸ்ஸிலேயே தங்கிக்கொண்டு, தானும் மாணவர்களுடன் அங்கேயே சாப்பிட்டும் வந்தான்.


தினமும் மெஸ்ஸுக்கு வேண்டிய காய்கறிகள், வாங்க மொபெட் ஒன்றில் விடியற்காலமே பெரிய மார்க்கெட்டுக்குச் சென்றிடுவான். 


சின்ன மார்க்கெட்டில் காய்கறிக் கடை போட்டிருக்கும் காமாட்சியும், பெரிய மார்க்கெட்டுக்கு, மொத்த விலையில் காய்கறிகள் கொள்முதல் செய்ய வந்திடுவாள்.


ஆரம்பத்தில் சாதாரணமாக இது போன்ற சந்திப்புக்கள் பரமுவுக்கும் காமாட்சிக்கும் பெரிய மார்க்கெட்டில் ஏற்பட்டு வந்தன.


பெண்களுடன் பேசவே மிகவும் கூச்சப்படும் பரமுவுடன், காமாட்சிதான் இழுத்துப் பிடித்து பேசி வந்தாள். நாளடைவில் பரமுவுக்கு காமாட்சி மேல், அவனையும் அறியாமல் ஏதோ ஒரு வித பாசமும், நேசமும் மலரத் தொடங்கியது. 


அனாதை போன்ற தன்னிடமும் அன்பு காட்டி பேச ஒருத்தி, அதுவும் பூத்துக்குலுங்கும் இளம் வயதுப் பருவப் பெண். கனவுலகில் மிதக்க ஆரம்பித்தான் பரமு.


நாளடைவில் காமாட்சியின் காய்கறிக் கூடைகளையும், சாக்கு மூட்டைகளையும், பெரிய பெரிய பைகளையும் முடிந்த வரை பரமுவே, தன் மொபெட் வண்டியில் சுமந்து கொண்டு வருவதும், மீதியை அவள், பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு வருவதுமாக, அவர்களின் நட்பு தொடர ஆரம்பித்தது.


இப்போதெல்லாம் காமாட்சி பெரிய மார்க்கெட் பக்கம் வருவதில்லை. எல்லாமே பரமு பாடு என்று விட்டுவிட்டாள். இதனால் இருவருக்குமே லாபமாகவே இருந்தது. பஸ் சார்ஜ், லக்கேஜ் சார்ஜ் எனத் தனித்தனியே செலவு இல்லாமல், காய்கறிகளுக்கான கொள்முதல் விலைகளுடன், பரமுவின் வண்டிக்கு ஆகும் பெட்ரோல் செலவுக்கு மட்டும், தன் பங்கைக் கணக்கிட்டுப் பகிர்ந்து கொண்டாள், காமாட்சி.


சின்ன மார்க்கெட்டில் காமாட்சியின் காய்கறி வியாபாரம் நாளுக்கு நாள் நன்றாகவே நடைபெற்று வந்தது. காரணம், பரமு வாங்கிவரும் பச்சைப்பசேல் என்று பளிச்சென்று உள்ள தரமான காய்கறிகள், நியாயமான விலை, சரியான எடை, வாடிக்கையாளர்களை வளைத்துப் பிடித்து, சுண்டியிழுக்கும் காமாட்சியின் கனிவான பேச்சு முதலியன. 



எட்டாவது வரை மட்டும் படித்துள்ள போதும், கணக்கு வழக்கில் புலியான காமாட்சியை யாரும் எளிதில் ஏமாற்றி விட முடியாது.


இருந்தும் அன்றாடம் மிரட்டி, உருட்டி பணம் பறித்து வரும் பேட்டை ரெளடிகள், முனிசிபாலிடி பேரைச் சொல்லி ரசீது கொடுக்காமல் தண்டல் வசூலிப்பவன். ஓஸியில் காய்கறிகளை அள்ளிச்செல்லும் காக்கிச் சட்டைக்காரர்கள், கடனில் காய்கறி வாங்கிச் சென்று, கடனைத் திருப்பித் தராத அடாவடிகள் போன்றவர்களைச் சமாளிக்க இளம் வயதுப் பெண்ணான காமாட்சிக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது.



தன் பக்கத்து நியாயத்திற்கு ஆதரவாக இந்த சமூக விரோதிகளைத் தட்டிக் கேட்க, தனக்கென்று ஒரு துணை இல்லையே என்று மனதில் வேதனைப்பட்டு வந்தாள்.


அதிகாலையில் எழுந்து குளித்து, சாமி கும்பிட்டு விட்டு, தூய்மையான மிகவும் எளிமையான உடையுடன் கடையை விரித்து அமர்ந்தால், மதியம் பன்னிரெண்டு மணி வரையிலும், பிறகு மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும், அந்தச் சின்ன மார்க்கெட்டில், இவள் கடையில், காய்கறி வியாபாரம் சக்கை போடு போடும்.



“தள தளன்னு இருக்கே தக்காளி .... யாழ்ப்பாணம் சைஸுக்கு தேங்காய்கள் இருக்கே .... ரேட்டு எவ்வளவு?” இவள் மேனியில் தன் கண்களை மேயவிட்டவாறே, ஒரு கேலிச் சிரிப்புடன், அன்றொருநாள் அந்த நடுத்தர வயதுக்காரன், கிண்டலாகக் கேட்டபோது, காமாட்சி பத்ரகாளியாகவே மாறி விட்டாள். 


அவள் தன் கையில் வைத்திருந்த தராசுத் தட்டை சுழட்டி அவன் மேல் அடிக்க எழுந்த போது, அந்த சின்ன மார்க்கெட்டே அதிர்ந்து போனது. 


வந்திருந்த ஜொள்ளுப் பார்ட்டியும், அவளிடம் வாங்கிய ஒரே அடியில் போதை தெளிந்தவனாக, மேலும் அங்கு நின்றால் தனக்கு விழக்கூடும் தர்ம அடிகளிலிருந்து தப்பிக்கத் தலைதெறிக்க ஓடிவிட்டான். 


இந்த சம்பவம் நடந்த நாளிலிருந்து காமாட்சியிடம் யாரும் எந்த வம்புக்கும் செல்வதில்லை.


அன்று நடந்த இந்த விஷயத்தை, தைர்யமாக காமாட்சி வாயாலேயே சொல்லிக் கேட்ட பரமுவுக்கும் அவளிடம் ஒரு வித பயம் ஏற்பட்டது. 


தன்னுடைய வாலிப வயதுக்கேற்ற ஆசைகளை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, ’நமக்காவது .... காதலாவது .... கத்திரிக்காயாவது ....’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, பெரிய மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்திருந்த கத்திரிக்காய் மூட்டையை காமாட்சியிடம் ஒப்படைத்து விட்டு புறப்படலானான். 


ஆனால் அவன் மனம் மட்டும் காமாட்சியையே சுற்றிச்சுற்றி வந்து, ஒரு தலைக் காதல் செய்து வந்தது.


படித்த பக்குவமான பண்புள்ள இளைஞனான பரமு மேல் காமாட்சிக்கும் உள்ளூர பாசமும், நேசமும் அதிகம் உண்டு. 


இருவரும் சந்தித்து உரையாடும் போது, அவரவர் கஷ்டங்களையும், வாழ்க்கையில் இதுவரை நிறைவேறாத சின்னச் சின்ன ஆசைகளையும் பகிர்ந்து கொள்வதுண்டு.


பரமுவின் நட்பினால், காமாட்சிக்கு பெரிய மார்க்கெட் செல்லும் வேலை இல்லாமல், வியாபாரத்திலேயே முழு கவனமும் செலுத்த முடிந்தது. 


பரமுவுக்கு மட்டும், அவன் படித்த படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைத்து விட்டால், காமாட்சியை பிரிந்து செல்ல நேரிடும். அது போல ஒரு பிரிவு ஏற்பட்டு விட்டால் ! நினைத்துப் பார்க்கவே இருவருக்கும் மனதுக்குள் மிகவும் சங்கடமாகவே இருந்தது.


குடிசை வீட்டில் சிம்னி விளக்குடன் குடியிருந்த காமாட்சி, ஜன்னல் உள்ள ஓட்டு வீட்டில் மின்சார விளக்கு, ஃபேனுடன், வாடகைக்கு குடி போகும் அளவுக்கு, அவளின் காய்கறி வியாபாரம் கை கொடுத்து உதவியது.


இருப்பினும் சிறு வயதில் பட்டுப்பாவாடை கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட காமாட்சிக்கு, அது நிறைவேறாமலேயே போய் விட்டது. அவள் பூப்பெய்தின போது கூட, அவள் அம்மா பல இடங்களில் பணம் புரட்டி, சாதாரண சீட்டிப்பாவாடை, சட்டை, தாவணி வாங்கிக் கொடுத்தது, காமாட்சிக்கு இன்றைக்கும் பசுமையாக நினைவிருக்கிறது.


அவள் அம்மாவும் என்ன செய்வாள் பாவம்? கணவனை ஒரு சாலை விபத்தில் பறிகொடுத்து, இளம் விதவையான அவள், கடைசியில் தன் தள்ளாத வயது வரை, காய்கறிக்கூடை ஒன்றை தலையிலும், இடுப்பிலும் சுமந்தபடி வீடு வீடாகச் சென்று காய்கறி விற்றுப் பிழைத்து வந்தவளே.


காமாட்சியின் தாயாரும் ஒரு நாள் மிகவும் உடம்பு முடியாமல் படுத்து, மறுநாளே, எட்டாவது வகுப்பு முழுப்பரீட்சை எழுதி முடித்து விட்டு வந்த  காமாட்சிக்கும் அதிக சிரமம் கொடுக்காமல் போய்ச் சேர்ந்ததில், காமாட்சி ஒரு அனாதை போல ஆகிவிட்டாள். 


படிப்பைத் தொடர முடியாமல் அம்மா செய்து வந்த காய்கறி வியாபாரத்தையே தானும் செய்ய அன்று ஆரம்பித்தவள் தான். சுமார் ஏழு வருடங்கள் விளையாட்டு போல ஓடிவிட்டன.


பட்டுப்பாவாடைக்கு ஆசைப்பட்ட அவளின் சிறுவயது ஆசை அலைகள் இன்றும் ஓயாமல் காமாட்சியை துரத்தி வருகின்றன. எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் நியாயமான ஆசைதான் காமாட்சிக்கும்.


இடுப்பில் கட்டிகொள்ள ஒரு பட்டுப்புடவையும், கழுத்தில் போட்டுக்கொள்ள இரண்டு பவுனில் ஒரு தங்கச் சங்கலியும் வாங்க வேண்டும் என்பதே அவளின் இன்றைய ஆசை. அதற்கான தொகையையும் சிறுகச்சிறுக சேமிக்கத் தொடங்கி விட்டாள்.


காமாட்சியின் அன்றாட லாபமும் சேமிப்பும் உயர உயர, தங்கம் விலையும் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து வந்ததில் அவள் ஆசை இதுவரை நிறைவேறாமலேயே உள்ளது. சாண் ஏறினால் முழம் சறுக்குது.


தன்னுடைய இந்தச் சின்னச் சின்ன ஆசைகளையெல்லாம் பரமுவிடம் அவ்வப்போது சொல்லிக் கொள்வாள். 

பரமுவும் தான் படித்த படிப்புக்கேற்ற நல்லதொரு வேலை இதுவரை கிடைக்காமல் இருப்பதையும், பல இடங்களுக்கு மனுப் போட்டும், எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு என்று சென்று வருவதையும் காமாட்சியிடம் சொல்லி வருத்தப் பட்டுக் கொள்வான்.


அன்றொரு நாள் அதிகாலையில் வழக்கம் போல காய்கறி மூட்டைகளையும் பெரிய பெரிய பைகளையும் தனது மொபெட்டில் ஏற்றியபடி வேகமாக வந்த பரமு, சின்ன மார்க்கெட்டில் உள்ள காமாட்சியின் கடை அருகே, பிரேக் அடித்து சமாளித்து நிறுத்துவதற்குள், பின்னால் வேகமாக துரத்தி வந்த ஆட்டோ ஒன்று, கவனக்குறைவால், பரமுவின் வண்டி மேல் மோதிவிட, பரமு மொபெட்டிலிருந்து சரிந்து கீழே விழ, காய்கறிகள் யாவும் ஆங்காங்கே சிதறி, அங்கு ஒரு பெரிய கும்பலே கூடி விட்டது. 


இதைப் பார்த்து ஓடி வந்த காமாட்சியும், மோதிய ஆட்டோக்காரருமாக, காலில் காயம் பட்டிருந்த பரமுவை அதே ஆட்டோவில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவ மனைக்குக் கூட்டிச் சென்றனர்.


இடது முழங்கால் பகுதியில் நல்ல அடிபட்டு வீங்கிப் போய், ஒரு வாரமாக படுத்த படுக்கையாகி விட்டான் பரமு. வலது உள்ளங்காலையும் ஊன முடியாமல் வலி உள்ளது. 


எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் நல்ல வேளையாக எலும்பு முறிவு ஏதும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.


காமாட்சி தான், மூன்று வேளையும் தன் கைப்பட சமைத்த உணவினை எடுத்துப்போய், மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுத்து, ஆஸ்பத்தரிச் செலவுகளையும் சமாளித்து வருகிறாள்.


பட்டுப்புடவை மற்றும் தங்கச் சங்கிலிக்கான சேமிப்பு தான், ஆபத்திற்கு இப்போது கை கொடுத்து உதவுகிறது. 


பரமுவின் உதவி இல்லாததால், காய்கறி கொள்முதல் செய்ய பெரிய மார்க்கெட்டுக்கு இவளே போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. நிழலின் அருமை வெயிலில் சென்றால் தான் தெரியும் என்பது போல, பரமுவின் அருமையை இப்போது நன்றாகவே உணர முடிந்தது காமாட்சியால்.


இன்னும் இரண்டு நாட்களில் பரமு பழையபடி வலியில்லாமல் நடக்க ஆரம்பிக்க முடியும் என்றார், பரமுவுக்கு பிஸியோதெரபி பயிற்சி அளிப்பவர். 


சீக்கிரமாகவே பரமு குணமாகி வரவேண்டி, காமாட்சியும் வேண்டாத தெய்வம் இல்லை.


மறுநாள் பரமுவுக்கு வந்ததாகச் சொல்லி மெஸ்ஸில் தங்கியுள்ள ஒரு பையன் கொடுத்த இரண்டு கடிதங்களை எடுத்துக்கொண்டு, சாப்பாட்டுத் தூக்குடன் ஆஸ்பத்தரிக்குப் போனாள், காமாட்சி.


போகும் வழியில், ஆஸ்பத்தரிக்கு மிக அருகில் உள்ள அரச மரத்துப் பிள்ளையார் கோவிலில் அபிஷேக அலங்காரங்கள் முடித்து, சூடான சர்க்கரைப் பொங்கல் விநியோகம் நடந்து கொண்டிருந்தது. 

பிள்ளையாரை வேண்டிக்கொண்ட காமாட்சி, ஒரு தொன்னையில் பிரசாதப் பொங்கலையும் வாங்கிக்கொண்டு போய் பரமுவிடம் நீட்டினாள்.


“வா, காமாட்சி! என்ன விஷயம்! இனிப்புடன் வந்துள்ளாய்?” பரமு கேட்டான்.


”ஒரு விசேஷமும் இல்லை. பிள்ளையார் கோவிலில் பிரஸாதமாகக் கொடுத்தார்கள்” என்றாள், பரமுவுக்கு வந்த இரண்டு கடிதங்களையும் நீட்டியபடி.


முதல் கவரைப் பிரித்துப் பார்த்த பரமு, “ஆஹா, மிகவும் இனிமையான செய்தி தான்; சர்க்கரைப் பொங்கல் விசேஷமாகத் தான் கொண்டு வந்துள்ளாய்; நான், அந்த வாரப்பத்திரிக்கை நடத்திய ஒரு சிறுகதைப் போட்டிக்கு “காதலுக்கு உதவிய காய்கறிகள்” என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி அனுப்பியிருந்தேன்; அது முதல் பரிசுத் தொகையான ஐயாயிரம் ரூபாய்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம். உடனடியாக புகைப்படம் ஒன்றும், சுய விபரக் குறிப்பு ஒன்றும் அனுப்பி வைக்க வேண்டுமாம்” என்றான்.


காமாட்சி புன்னகையுடன், கண்களை அகலமாக விரித்து, அவனை நோக்கினாள்.


இரண்டாவது கவரையும் அவசரமாகப் பிரித்தான், பரமு. அவன் முகத்தில் இப்போது கோடி சூரிய பிரகாஸம். அரசுடமையாக்கப் பட்ட வங்கியொன்றில் நிரந்தர வேலைக்கு நியமனமாகியுள்ளதாகத் தகவல். மருத்துவப் பரிசோதனைக்கு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரச் சொல்லி உத்தரவு வந்துள்ளது.


கால் வலி மறந்து போய் துள்ளிக்குதிக்கிறான் பரமு. தபாலைக் கொண்டு வந்து கொடுத்த காமாட்சியின் கைகள் இரண்டையும் பிடித்துத் தன் கண்கள் இரண்டிலும் ஒத்திக் கொள்கிறான்.


பரமுவை இவ்வளவு மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் காமாட்சி இதுவரை பார்த்ததே இல்லை. அவளுக்கும், பரமுவுக்கு நல்ல வேலையொன்று நிரந்தரமாகக் கிடைத்ததில் ரொம்பவும் சந்தோஷமாகவே இருந்தது.


“எந்த ஊருக்குப் போய் வேலையில் சேரும்படி இருக்கும்?” என்று அவள் கேட்கும் போதே, அவளின் கண்களில் நீர் தளும்ப, ஏதோ தூசி கண்ணில் விழுந்து விட்டது போல, தன் புடவைத் தலைப்பால், துடைத்துக் கொள்கிறாள்.


“திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் வேலைக்குக் காலியிடம் இருப்பதாகவும், ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் படியும் சொல்லியிருந்தார்கள். நான் நம்ம உள்ளூராகிய திருச்சி மாவட்டத்தைத் தான் தேர்ந்தெடுத்திருந்தேன்” என்றான்.

[அதுவும் உனக்காகவே தான் என்று மனதுக்குள் கூறிக்கொண்டான் ]



“ஒரு வேளை வெளியூரில் வேலை கிடைத்திருந்தால் என்னை அம்போ என்று விட்டு விட்டுப்போய் விடுவாய் தானே?” என்றாள், காமாட்சி.


[என்னையும் உன் கூட கூட்டிக் கொண்டு போக மாட்டாயா?   என மனதுக்குள் ஏக்கத்துடன் கூறிக் கொண்டாள் ]



[” நீ என்னுடன் வருவாய் என்றால் வெளியூர் என்ன, வெளிநாடு என்ன, அந்த சந்திர மண்டலத்துக்கே கூட கூட்டிப் போகத் தயாராக இருக்கிறேன்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு ]



“நீ கடந்த ஒரு வாரமாகச் செய்துள்ள உதவிகளுக்கு, உன்னை அம்போ என்று என்னால் எப்படி விட முடியும்?” என்று சொல்லியபடியே, காமாட்சியை வைத்த கண் வாங்காமல், புன்னகையுடனும், நன்றியுடனும் நோக்கினான், பரமு.



“அது சரி, முதல் மாத சம்பளம் வாங்கி என்னய்யா செய்யப் போறே?” காமாட்சி வினவினாள்.


“எனக்குப் பிடித்த காமாட்சி அம்மனுக்கு, பட்டுப் புடவையும், கால்களுக்கு கொலுசும் வாங்கி சாத்தப் போறேன்” என்றான் பரமு.



“அப்புறம்” என்றாள், காமாட்சி.



“அப்புறம், ஒரு ஆறு மாத சம்பளத்தைச் சேர்த்து, காமாட்சி அம்மன் கழுத்துக்கு இரண்டு பவுனில் ஒரு தங்கச் செயினும், ஒவ்வொரு கைக்கும் ஒரு ஜோடி வீதம் தங்க வளையலும், காதுக்குத் தங்கத் தோடும், மூக்குக்கு தங்க மூக்குத்தியும் வாங்கிப் போடுவேன்” என்றான்.


“அப்புறம்” என்றாள் காமாட்சி.



“அப்புறம் என்ன, என் மனசுக்குப் புடிச்சவளாகப் பார்த்து கல்யாணம் கட்டிக் கொள்வேன்” என்றான் பரமு.



“உன் மனசுக்குப் பிடித்தவளுக்கு உன்னைப் பிடிக்க வேண்டாமாய்யா ?” என்றாள் காமாட்சி.



“அதற்கும் அந்தக் காமாட்சி அம்மன் கருணை வைத்தால் தான் முடியும்” என்றான் பரமு.



“என்னய்யா நீ, எதற்கு எடுத்தாலும், காமாட்சி அம்மன்னே சொல்லிக்கிட்டு இருக்கே; எங்கேய்யா இருக்கா அந்தக் காமாட்சி அம்மன்?” என்று பொறுமை இழந்து கேட்டாள் காமாட்சி.



“அவள் எங்கும் நிறைந்தவள். எப்போதும் என் மனதில் குடி கொண்டு இருப்பவள்; எனக்குப் பக்கத்திலேயே எப்போதும் .... ஏன் இப்போது கூட நிற்பவள்; என் கண்களுக்குத் தெரிகிறாள்; உனக்குத் தெரியலையா? புரியலையா? .... அல்லது புரிந்தும் புரியாதது போல நடிக்கிறாயா?” என்றான் பரமு.



வெட்கத்தால் காமாட்சியின் முகம் சிவந்தது. கீழே குனிந்த வண்ணம் கால் விரல்களால் தரையில் கோலம் போடுகிறாள்,
 பரமுவுடன் தன் திருமணக் கோலத்தை மனதில் எண்ணியபடி.


“முதல் பரிசு வாங்கும் அளவுக்கு அப்படி என்னய்யா அந்தச் சிறுகதையில் எழுதியுள்ளாய்?” காமாட்சி, தலை நிமிர்ந்து ஆர்வமுடன் கேட்கிறாள்.


“அதில் வரும் கதாநாயகனுக்கு, கதாநாயகி மேல் தீராத காதல். அந்தக் காதலைக் கசக்கிப் பிழிந்து, ஜூஸ் ஆக்கி, படிக்கும் வாசகர்கள் அனைவரும் விரும்பிக் குடிக்கும் விதமாக அணு அணுவாக நான் அனுபவித்து வந்த உணர்வுகளை அப்படியே எழுதியுள்ளேன்; கதை வெளி வந்ததும் நீயே படித்துப் பார் தெரியும்” என்றான் பரமு.

 

இவ்வளவு ஆசையை மனதில் போட்டுப் பூட்டி வைத்து எப்படிய்யா வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைக்க முடிந்தது உன்னால்? அதைக் கொஞ்சமாவது என்னிடமும் வெளிப்படுத்தியிருந்தால்,என் மனசும் சந்தோஷப்பட்டிருக்கும் தானே? ஏனய்யா என்னிடம் எப்போதும் பட்டும் படாததுமாகவே பழகி வந்தாய்?” என்று கேட்டாள் காமாட்சி.


“எல்லாம் ஒரு வித பயம் தான் காமாட்சி. அன்னிக்கு உன்னிடம் வம்பு செய்த அந்த ஆளை, தராசுத்தட்டைச் சுழட்டி ஓங்கி அடித்தேன் என்று நீ தானே என்னிடம் சொன்னாய் ! அது போல என்னையும் நீ தாக்கினால் நான் என்ன செய்வது என்ற பயம் தான்” என்றான் பரமு.


இதைக் கேட்டதும், கடகடவென்று கன்னத்தில் குழி விழச் சிரித்த காமாட்சி, பரமுவின் கன்னம் இரண்டையும் தன் இரு கை விரல்களாலும் செல்லமாகக் கிள்ளி விட்டாள்.


அவள் இவ்வாறு  
பச்சைக்கொடி காட்டியதும், பயம் தெளிந்த பரமு மட்டும் சும்மா இருப்பானா என்ன !


ஆஸ்பத்தரியின் அறை என்றும் பார்க்காமல் காமாட்சியை அப்படியே அலாக்காகத் தூக்கி தட்டாமாலை சுற்ற ஆரம்பித்து விட்டான்.


இவர்களின் ஜாலி மூடைப் பார்த்ததும் 'கெளலி' அடித்தபடி இரண்டு பல்லிகள் ஒன்றை ஒன்று துரத்தியபடியே, குஷியாக அந்த அறையின் சுவற்றில் இங்குமங்கும் ஓட ஆரம்பித்தன.


oooooOooooo



 


 Today is Friday, 
the 14th February ! 
Full Moon Day too ;)





அனைவருக்கும்
ஆனந்தம் ஏற்பட
அன்பான 
நல்வாழ்த்துகள் !

 




oooooOooooo




நேற்று வரை திறந்திருந்த

’காதல் வங்கி ‘ 

பாதுகாப்பு காரணங்கள் கருதி 
நேற்று இரவு மிகச்சரியாக 
எட்டு மணிக்கு மூடப்பட்டுள்ளது.

’காதல் வங்கி’யில் 
அன்புடன் தங்கள் விமர்சனங்களை 
கணிசமான எண்ணிக்கைகளில் 
அழகாகவும், புத்திசாலித்தனமாகவும்
 டெபாஸிட் செய்துள்ள வாடிக்கையாளர்கள்
அனைவருக்கும் என் மனம் நிறைந்த 
  இனிய அன்பு நன்றிகள்.

தங்கள் அனைவரின் டெபாஸிட் 
விபரங்கள் யாவும் 
'நடுவர்' அவர்களின் தீவிரமான 
தணிக்கையில் 
தற்போது உள்ளன.

நடுவர் அவர்களின் நியாயமான 
தீர்ப்புக்களை விரைவில் எதிர்பார்ப்போம்.

’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் 
தொடர்ந்து உற்சாகத்துடன் பங்கேற்று 
சிறப்பித்து வரும் அனைவருக்கும் என் நன்றிகள்.

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


60 கருத்துகள்:

  1. விரைவில் விமர்சனம் அனுப்புகிறேன் ஐயா...

    அன்பு தினம் என்றும் வேண்டும்...
    தினம் என்றும் அன்பாக வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அடடா, கதையும் அருமை. அருமையான படங்களுடன் தூள் கிளப்பிவிட்டீர்கள். வாழ்த்துகள் சகோதரரே.

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நித்திலம்-சிப்பிக்குள் முத்து February 14, 2014 at 6:43 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அடடா, கதையும் அருமை. அருமையான படங்களுடன் தூள் கிளப்பிவிட்டீர்கள். வாழ்த்துகள் சகோதரரே.

      அன்புடன்
      பவள சங்கரி//

      அப்படியா சொல்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. இதை வல்லமை மிக்கத் தாங்கள் சொல்லிக் கேட்க தன்யனானேன். அன்பான இனிய நன்றிகள் மேடம்.

      அன்புள்ள கோபு

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா.

    சிறுகதையை படித்தபோது.... காமச்சி.பரமு ஆகிய இரு கதாபாத்திரங்களை வைத்து கதை பின்னிய விதம் மிக சிறப்பு... அதிலும் அவள் காய்கறி வியாபாரம் செய்யும் போது ..
    .///தள தளன்னு இருக்கே தக்காளி .... யாழ்ப்பாணம் சைஸுக்கு தேங்காய்கள் இருக்கே .... ரேட்டு எவ்வளவு///
    அவளை கேலி செய்த ஒருவனுக்கு ...தரசு தட்டினால் அடிக்க எழுந்தால்....
    அவளின் உடம்பை ஒரு ஊரின் பெயருக்கு உவமித் விதம் சிறப்பு...ஐயா..
    எப்படி இருந்தலும் .. காதல் என்ற ஒன்று வந்தால் எல்லாம் அடிபணியும் ..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. வந்திருந்த ஜொள்ளுப் பார்ட்டியும், அவளிடம் வாங்கிய ஒரே அடியில் போதை தெளிந்தவனாக, மேலும் அங்கு நின்றால் தனக்கு விழக்கூடும் தர்ம அடிகளிலிருந்து தப்பிக்கத் தலைதெரிக்க ஓடிவிட்டான்.


    இந்த சம்பவம் நடந்த நாளிலிருந்து காமாட்சியிடம் யாரும் எந்த வம்புக்கும் செல்வதில்லை.

    தைரியம் புருஷலட்சணம் மட்டுமல்ல ..
    புதுமைப்பெண்களுக்கும் அதுவே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி February 14, 2014 at 8:46 AM

      //தைரியம் புருஷலட்சணம் மட்டுமல்ல ..
      புதுமைப்பெண்களுக்கும் அதுவே//

      நீங்க சொன்னாச் ’சரி’ங்க மேடம். வருகை+கருத்துக்கு நன்றீங்க, மேடம். - vgk

      நீக்கு
  5. கதையும் முடிஞ்சது; கத்திரிக்காயும் காய்ச்சது! காதலர் தினத்துக்கு ஏற்ற கதை.

    பதிலளிநீக்கு
  6. Mail message from Shri R. Rajagopal, PA to GM/F of BHEL

    Dear Sri Gopu Sir,

    Namaskarams. I have read and enjoyed your story this morning.

    On reading the nature and character and background of Paramu and Kamakshi, their images are appearing in front of me like cinema.

    You are attaching very good real pictures relating to the story. In real love,
    no one would give importance to their personal needs, when any untoward
    incident happens to their near and dear, mutually they give their
    possible help and get help mutually.

    You are telling the story very beatifully about the clean, inner mind of the lowest category.

    I am happy that Paramu and Kamakshi decide to marry.

    with kind regards,
    R.RAJAGOPAL

    -=-=-=-=-=-=-

    Thank you Mr. Rajagopal for your kind visit to my blog & offering valuable and very sweet comments. - With Love & Affection ....... Gopu ;)

    பதிலளிநீக்கு
  7. காதலர் தினத்திற்கேற்ற கதை. வர்ணனைகள் அபாரம். வாரம் ஒருகதை படிக்கக் கிடைப்பதில் மிக்க ஸந்தோஷம். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi February 14, 2014 at 11:02 AM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //காதலர் தினத்திற்கேற்ற கதை. வர்ணனைகள் அபாரம். வாரம் ஒருகதை படிக்கக் கிடைப்பதில் மிக்க ஸந்தோஷம். அன்புடன்//

      வாராவாரம் வெள்ளிக்கிழமை வருகை தந்து கருத்துச் சொல்லுங்கோ. மிக்க நன்றி. - அன்புடன் கோபு

      நீக்கு
  8. நல்ல கட்டுக்கோப்பான சிறுகதை சார்.. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா. உண்மைக் காதல் மாறிப் போகுமா.. என சிந்திக்க வைத்தது. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan February 14, 2014 at 11:04 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //நல்ல கட்டுக்கோப்பான சிறுகதை சார்.. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா. உண்மைக் காதல் மாறிப் போகுமா.. என சிந்திக்க வைத்தது. :)//

      தங்களின் திடீர் வருகை எனக்குக் கட்டுக்கோப்பு இல்லாத பெரும் சந்தோஷத்தை அளிக்குதே ! ;))))) அன்புடன் கோபு.

      நீக்கு
  9. ''..ஆஸ்பத்தரியின் அறை என்றும் பார்க்காமல் காமாட்சியை அப்படியே அலாக்காகத் தூக்கி தட்டாமாலை சுற்ற ஆரம்பித்து விட்டான்...'' மிக அருமையாக கதை நகர்த்திய விதம் அருமை.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kovaikkavi February 14, 2014 at 12:06 PM

      //''..ஆஸ்பத்தரியின் அறை என்றும் பார்க்காமல் காமாட்சியை அப்படியே அலாக்காகத் தூக்கி தட்டாமாலை சுற்ற ஆரம்பித்து விட்டான்...'' மிக அருமையாக கதை நகர்த்திய விதம் அருமை. இனிய வாழ்த்து.
      வேதா. இலங்காதிலகம்.//

      அழகானதோர் முக்கிய இடத்தைச் சுட்டிக்காட்டி என்னையும் மகிழ்ச்சியில் அப்படியே தட்டாமாலை சுற்ற வைத்து விட்டீர்களே ! ;) மிக்க நன்றி, மேடம் !!

      நீக்கு
  10. இளமை துள்ளும் தங்களின் கற்பனை "துள்ளாத மனமும் துள்ளும்" என்று பாட வைக்கிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  11. இளமை துள்ளும் தங்களின் கற்பனை "துள்ளாத மனமும் துள்ளும்" என்று பாட வைக்கிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Rukmani Seshasayee February 14, 2014 at 1:58 PM

      வாங்கோ ... நமஸ்காரங்கள்.

      //இளமை துள்ளும் தங்களின் கற்பனை "துள்ளாத மனமும் துள்ளும்" என்று பாட வைக்கிறது. பாராட்டுகள்.//

      ஆஹா அருமையான கருத்துக்கள் .... இனிமையான பாடல் வரிகளுடன் .... மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  12. சுவையான திருப்பங்களுடன் அருமையாக சென்றது கதை! காதல் ஜோடிகள் சேர்ந்ததில் மகிழ்ச்சிதான்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. ஆஹா ...அருமையான காதல் கதை கதையை வாசித்து முடிந்ததும் ஒரு தமிழ் சினிமா பார்த்தது போல் உணர்வு நெஞ்சுக்குள் பூத்துக் குலுங்கியது ! வாழ்த்துக்கள் ஐயா காதல் (அன்பு ) திரு நாள் வாழ்த்துக்கள் .இனிமையான இந்த மனம் என்றென்றும் மகிழ்ந்திருக்கட்டும் .

    பதிலளிநீக்கு
  14. கதையை காட்சியாகச் சொல்ல உங்களால் தான் முடியும் சார். வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனது கச்சிதமாய்ப் படிந்துள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திரகௌரி February 15, 2014 at 2:42 PM

      வாங்கோ, செளக்யமா? தங்களைப் பார்த்து வெகு நாட்களாச்சு, மேடம்.

      //கதையை காட்சியாகச் சொல்ல உங்களால் தான் முடியும் சார். வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனது கச்சிதமாய்ப் படிந்துள்ளது//

      மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான, ஆழமான, மனதுக்குக் கச்சிதமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  15. பரமு காமாக்ஷி காதலர் தின சிறப்புக்கதைஅருமையான ரசனையுடன் படிக்க விருவிருப்பாக இருந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sundaresan Gangadharan February 15, 2014 at 2:58 PM

      My Dear Sundar, Welcome to you !

      //பரமு காமாக்ஷி காதலர் தின சிறப்புக்கதை அருமையான ரசனையுடன் படிக்க விருவிருப்பாக இருந்தது..//

      வி று வி று ப் பா க இருந்ததாகச்சொல்லும் கதையை மிகுந்த ரசனையுடன் படித்துவிட்டு சு று சு று ப் பா க க் கருத்துக்கூறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி.

      அன்புடன் கோபு

      நீக்கு
  16. உற்சாகம் துள்ளும் கதை!

    நல்ல மனங்கள் வாழ்க;
    என்றும் மகிழ்வோடு வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் February 15, 2014 at 11:17 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம்.

      //உற்சாகம் துள்ளும் கதை! நல்ல மனங்கள் வாழ்க; என்றும் மகிழ்வோடு வாழ்க!//

      தங்களின் உற்சாகம் + துள்ளலுடன் கூடிய கருத்துக்களுக்கு மிக்க நன்றி, ஐயா. அனைவரும் அன்போடு வாழ்க !

      - அன்புடன் VGK

      நீக்கு
  17. அருமையான காதல் கதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. அன்பு தினம் என்றும் வேண்டும்...
    தினம் என்றும் அன்பாக வேண்டும்...

    பதிலளிநீக்கு
  19. அருமையான கதை. முன்பே படித்திருந்தாலும் மீண்டும் சுவைத்தது. போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. துள்ள‌லான கதை! சுறுசுறுப்பான காட்சி அமைப்பு! யார் இந்த கதைக்கு பரிசு வாங்கப்போகிறார்கள் என்பதையறிய ஆவலாக உள்ளது! இனிய பாராட்டுக்கள்! அன்பு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் February 19, 2014 at 7:44 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //துள்ள‌லான கதை! சுறுசுறுப்பான காட்சி அமைப்பு! //

      ஆஹா, இந்தத்தங்களின் கருத்தினைப்படித்ததும் நான் சுறுசுறுப்பாக எழுந்து துள்ளிக்குதித்தேனாக்கும் ! ;)))))

      //யார் இந்த கதைக்கு பரிசு வாங்கப்போகிறார்கள் என்பதையறிய ஆவலாக உள்ளது! //

      தாங்களே போட்டியில் கலந்துகொண்டு வாங்கியிருந்தால் எனக்கு மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்குமே ! ;)))))

      நானும் தங்களைப்போல அதே ஆவலில் தான் உள்ளேன்.

      பரிசுப் போட்டியின் முடிவுகள் வெகு விரைவில் வெளியாக ஆரம்பிக்கும் .... வரும் சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று நாட்களுக்குள்.

      //இனிய பாராட்டுக்கள்! அன்பு வாழ்த்துக்கள்!!//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆழமான துள்ளலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  21. ஏழையாக இருந்தாலும் மனம் வைராக்கியமாக இருந்தால் இந்த உலகில் பிழைக்க முடியும் என்பதற்கு உதாரணமாக காமாட்சியும்...

    வேலை இல்லாமல் சும்மா சுற்றித்திரிவதை விட இப்படி ஒத்தாசையாக பல பணிகள் செய்து உழைப்பின் மேன்மையை உணர்த்திய பரமுவும்....

    இருவர் மனதிலும் ஒருவர் மேல் ஒருவருக்கு ஸ்நேகம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்ததற்கு இருவருக்குமே போதுமான காரணங்கள் இருப்பதை மிக அருமையாக சொல்லி இருக்கீங்க அண்ணா..

    காதலுக்கும் கத்திரிக்காய்க்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும்? என்று எல்லோரும் தலையை பிச்சுக்கொள்வது போல் நான் பிச்சுக்கமாட்டேன். இதெல்லாம் ஒரு ரைமிங்குக்காக சொல்வது தான் என்றாலும் இல்லை அப்படி எல்லாம் இல்லவே இல்லை காதலுக்கும் கத்திரிக்காய்க்கும் தொடர்பு இருக்கு என்று சொல்லி மிக அருமையான ஒரு கதையை படைத்துவிட்டீர்கள் அண்ணா.

    கதாப்பாத்திரங்கள் அதிகம் இல்லாமல் இவர்கள் இருவரை மட்டுமே வைத்து பின்னப்பட்ட மிக அருமையான உணர்வுப்பூர்வமான கதை இது.


    அன்பு வாழ்த்துகள் அண்ணா..

    இருவரையும் ஒன்று சேர்த்து வைத்து காதல் ஒன்னும் கத்திரிக்காய் இல்லை மலிவான விலையில் சந்தையில் கேட்டு வாங்க என்பது போல் நச்னு சொல்லிட்டீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Manjubashini Sampathkumar February 20, 2014 at 11:55 AM

      வாங்கோ மஞ்சூஊஊஊஊஊஊஊஊ ... வணக்கம் ;)))))

      ஏழையாக இருந்தாலும் மனம் வைராக்கியமாக இருந்தால் இந்த உலகில் பிழைக்க முடியும் என்பதற்கு உதாரணமாக காமாட்சியும்...

      வேலை இல்லாமல் சும்மா சுற்றித்திரிவதை விட இப்படி ஒத்தாசையாக பல பணிகள் செய்து உழைப்பின் மேன்மையை உணர்த்திய பரமுவும்....

      இருவர் மனதிலும் ஒருவர் மேல் ஒருவருக்கு ஸ்நேகம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்ததற்கு இருவருக்குமே போதுமான காரணங்கள் இருப்பதை மிக அருமையாக சொல்லி இருக்கீங்க அண்ணா..//

      மஞ்சு எனக்கு ஓர் சந்தேகம் வந்தது. நம் மஞ்சுவிடமிருந்து அதிசயமாக வந்துள்ளதே ... இது பின்னூட்டமா அல்லது விமர்சனமா என்று .... கொஞ்சம் நேரம் தான் குழப்பியது என்னை..... அப்புறம் என் போதையும் தெளிந்தது.

      >>>>>


      நீக்கு
    2. கோபு >>>> மஞ்சு [2]

      காதலுக்கும் கத்திரிக்காய்க்கும் தொடர்பு இருக்கு என்று சொல்லி மிக அருமையான ஒரு கதையை படைத்துவிட்டீர்கள் அண்ணா.

      கதாப்பாத்திரங்கள் அதிகம் இல்லாமல் இவர்கள் இருவரை மட்டுமே வைத்து பின்னப்பட்ட மிக அருமையான உணர்வுப்பூர்வமான கதை இது.

      இருவரையும் ஒன்று சேர்த்து வைத்து காதல் ஒன்னும் கத்திரிக்காய் இல்லை மலிவான விலையில் சந்தையில் கேட்டு வாங்க என்பது போல் நச்னு சொல்லிட்டீங்க.

      அன்பு வாழ்த்துகள் அண்ணா..//

      மஞ்சு, தங்களின் அன்பான வருகை + அழகான நீண்ட கருத்துக்கள் .... அதுவும் நீண்ட நாட்களுக்குப்பின் ..... கிடைத்ததில் கோபு அண்ணாவுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  22. போட்டியில் பங்குபெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. காதலர் தினத்துக்கு ஏற்ற கதை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  24. நான் இன்றுதான் கதையைப் படித்தேன்.
    காமாட்சி,பரமுவின் காதல் கதை ஜோர்!காதலிப்பவர்களைப் பார்த்து அவர்களின் பெற்றோர் கேட்கும் கேள்வி 'காதலாவது கத்தரிக்காயாவது.நான் பார்த்த பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோ!'என்பது!

    கதையைப் படிக்கும் முன்பு காதலுக்கும்,க.காய்க்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்த எனக்கு,கத்தரிக்காய் விற்பவளுக்கும் காதல் வரும் என்பது புரியாமல் போயிற்றே!

    அவளையும் ஒரு படித்த,பண்புள்ள மனிதன் காதலிப்பான் என்றும் புரிந்தது!

    தன்னிடம் ஜொள்ளு விட்டவனைத் தாக்கிய காமாட்சியின் வீரம் பரமுவுக்கு புதுசு. கத்தரிக்காய் விற்பவள் என்று சாதாரணமாக அவளை எண்ண முடியாதவன் அவள் மேல் காதல் வந்தாலும் சொல்ல முடியவில்லை.

    கடைசியில் ஒரு விபத்தும்,மருத்துவமனை வாசமும்,காமாட்சி செய்த பணிவிடையும் சுபமான முடிவுக்கு காரணமாகியது!அழகான காதல் கதை! பல்லிகளும் காதலிக்கின்றனவே உங்கள் கதையில்!

    பதிலளிநீக்கு
  25. நான் இன்றுதான் கதையைப் படித்தேன்.
    காமாட்சி,பரமுவின் காதல் கதை ஜோர்!காதலிப்பவர்களைப் பார்த்து அவர்களின் பெற்றோர் கேட்கும் கேள்வி 'காதலாவது கத்தரிக்காயாவது.நான் பார்த்த பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோ!'என்பது!

    கதையைப் படிக்கும் முன்பு காதலுக்கும்,க.காய்க்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்த எனக்கு,கத்தரிக்காய் விற்பவளுக்கும் காதல் வரும் என்பது புரியாமல் போயிற்றே!

    அவளையும் ஒரு படித்த,பண்புள்ள மனிதன் காதலிப்பான் என்றும் புரிந்தது!

    தன்னிடம் ஜொள்ளு விட்டவனைத் தாக்கிய காமாட்சியின் வீரம் பரமுவுக்கு புதுசு. கத்தரிக்காய் விற்பவள் என்று சாதாரணமாக அவளை எண்ண முடியாதவன் அவள் மேல் காதல் வந்தாலும் சொல்ல முடியவில்லை.

    கடைசியில் ஒரு விபத்தும்,மருத்துவமனை வாசமும்,காமாட்சி செய்த பணிவிடையும் சுபமான முடிவுக்கு காரணமாகியது!அழகான காதல் கதை! பல்லிகளும் காதலிக்கின்றனவே உங்கள் கதையில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Radha Balu February 27, 2014 at 3:31 PM

      வாங்கோ, வணக்கம். தங்களின் முதல் வருகையும், தாங்களும் திருச்சி தான் என்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றன. WELCOME to you, Madam.

      பொதுவாக எனக்குப்பின்னூட்டமிட்டவர்கள் ஒவ்வொருவருக்கும், தனித்தனியே விரிவாக பதில் அளிப்பது என் வழக்கமாக இருந்தது ... ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு வரையிலும் கூட.

      என் வித்யாசமான பதிலுக்காகவே பலரும் என் பதிவுகளுக்கு ஆவலுடன் வருகை தந்து பின்னூட்டம் கொடுத்துக்கொண்டிருந்தனர். பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை 100 .... 150 .... 200 என்றெல்லாம் என் பல பதிவுகளில் இருக்கும். நீங்களே போய்ப் பார்க்கலாம்.

      இப்போது பல்வேறு காரணங்களால் நான் எல்லோருக்கும் பதில் தருவதை நிறுத்தியுள்ளேன். மேலும் ‘சிறுகதை விமர்சனப்போட்டி’ என்று அறிவித்துள்ளதால் ஒருசில விஷயங்களை வெளிப்படையாக என்னால் முன்புபோல எழுதவும் இயலவில்லை என்பதே உண்மை.

      //நான் இன்றுதான் கதையைப் படித்தேன்.//

      தெரியும். இந்தக்கதையை நான் வெளியிடும் சமயம் தாங்கள் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டுப் பயணத்தில் அல்லவா இருந்தீர்கள்.

      //காமாட்சி, பரமுவின் காதல் கதை ஜோர்!//

      அதனால் மட்டுமே தங்களை நானும் படிக்கச்சொன்னேன்.

      //காதலிப்பவர்களைப் பார்த்து அவர்களின் பெற்றோர் கேட்கும் கேள்வி 'காதலாவது கத்தரிக்காயாவது. நான் பார்த்த பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோ!' என்பது!//

      ஆம். உண்மையே.

      //கதையைப் படிக்கும் முன்பு காதலுக்கும், க.காய்க்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்த எனக்கு, கத்தரிக்காய் விற்பவளுக்கும் காதல் வரும் என்பது புரியாமல் போயிற்றே!//

      அவளும் ஒரு பெண் அல்லவா ! வரத்தான் செய்யும் !!

      //அவளையும் ஒரு படித்த, பண்புள்ள மனிதன் காதலிப்பான் என்றும் புரிந்தது!//

      ஆஹா, எப்படியோ தாங்கள் இதைப் புரிந்துகொண்டதில் எனக்கும் மகிழ்ச்சியே !

      //தன்னிடம் ஜொள்ளு விட்டவனைத் தாக்கிய காமாட்சியின் வீரம் பரமுவுக்கு புதுசு.//

      அதுவே, கேள்விப்பட்ட அவனை நடுங்க வைத்து விட்டது.;)

      //கத்தரிக்காய் விற்பவள் என்று சாதாரணமாக அவளை எண்ண முடியாதவன் அவள் மேல் காதல் வந்தாலும் சொல்ல முடியவில்லை.//

      ஆமாம். பாவம் .... அவன் !

      //கடைசியில் ஒரு விபத்தும், மருத்துவமனை வாசமும், காமாட்சி செய்த பணிவிடையும் சுபமான முடிவுக்கு காரணமாகியது! அழகான காதல் கதை! //

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      //பல்லிகளும் காதலிக்கின்றனவே உங்கள் கதையில்!//

      ;))))) அதுவும் பள்ளி சென்று காதல் ஏதும் படிக்காத பல்லிகள் ..... அவற்றை ஒரு சுப சகுனமாகக் காட்டலாம் என கடைசி வரிகள் எழுதும் போது எனக்குள் திடீரெனத் தோன்றியது. காரணம் என் வீட்டு சுவற்றில் அப்போது என் கண் எதிரே இரண்டு பல்லிகள் ஒன்றையொன்று துரத்திச் சென்றதாக ஞாபகம். உடனே கதையில் அவற்றையும் சேர்த்து விட்டேன். ;)))))

      நீக்கு
  26. இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://swamysmusings.blogspot.com/2014/09/blog-post_30.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ooooooooooooooooooooooooooo

    பதிலளிநீக்கு
  27. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

    ’VGK-05 காதலாவது கத்திரிக்காயாவது’

    இந்த சிறுகதைக்கு திருமதி. ஞா. கலையரசி அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த, முதல் பரிசுக்கு முதன் முதலாகத் தேர்வான விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் வலைத்தளப் பதிவினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://unjal.blogspot.in/2014/11/blog-post.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி ஞா. கலையரசி அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் கோபு [VGK]

    ooooooooooooooooooooooooooo

    பதிலளிநீக்கு
  28. கத்தரிக்காயில் கொத்ஸு செய்யலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே ஒரு கல்யாணமே செய்து விட்டார் வைகோ.

    பதிலளிநீக்கு
  29. ரசனையான காதல் கதை. நல்ல கற்பனை வளம். ஆமா உங்க வயசு 60+ ஆஆஆஆஆ 20+ஆஆஆஆஆ?????????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 25, 2015 at 11:29 AM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

      //ரசனையான காதல் கதை. நல்ல கற்பனை வளம். //

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      //ஆமா உங்க வயசு 60+ ஆஆஆஆஆ 20+ஆஆஆஆஆ????????? //

      இரண்டுமே இல்லை .... என்றுமே ஸ்வீட் சிக்ஸ்டீன் மட்டுமே .... [மனதளவில் :))))) ]

      நீக்கு
  30. எத்தனை வயசானா என்ன? சூப்பரா ஒரு காதல் கதை எழுதி (வழக்கம் போல) அசத்திட்டீங்க.

    பரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 27, 2015 at 7:07 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //எத்தனை வயசானா என்ன? சூப்பரா ஒரு காதல் கதை எழுதி (வழக்கம் போல) அசத்திட்டீங்க.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      //பரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு வாழ்த்துக்கள்.//

      :)

      நீக்கு
  31. படங்க கத நல்ஸாருக்குது. அதுஏனுங்கோ காதலயும் கத்திரிக்காவும் சேத்து சொல்லுறாங்கோ.

    பதிலளிநீக்கு
  32. எனக்கு முன்பு இருக்கும் பின்னூட்டம் படித்ததுமே சிரிப்பு வந்தது. உங்க பரம சிஷ்யைதான் எழுதியிருக்கா. படங்கள் இணைப்பில் பசுமையான காய்களைபார்க்கவே ஃப்ரெஷா இருக்கு. கதையும் ஃபரெஷா இளமையா இருக்கு.

    பதிலளிநீக்கு
  33. கத்தரிக்காய் வியாபாரியே காதலில் விழுந்த கதைதான். காதலாவது கத்திரிக்காயாவது ! காமாட்சியோட காரக்டரப்பாத்து லவ்வ சொல்ல டர்-ரானவன்,அவளே பச்சைக்கொடி காட்டியதும் விர்ர்-ஆன கதை. யதார்த்தமான காதல் - இயல்பான நடையில். இதை ரசிக்க நான் இந்த கறிகாய் கடையில்..போட்டியே முடிஞ்சபிறகு இன்னும் ஏன் இடையில்??

    பதிலளிநீக்கு
  34. //கண்ணில் படுபவைகள் கதைகளாக உருவெடுக்கின்றன. வாழ்வில் பார்வையில் காணும் மாந்தர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், கதை வடிவம் பெறுகின்றன. இந்தச் சம்பவ வெளிப்பாடுகள் மாந்தர்க்கு வழிகாட்டிகளாகின்றன. வைப்பதில் கோவானவர் பாலனம் செய்வதில் கண்ணபெருமானுக்குச் சளைத்தவர் அல்ல என்பது அவரின் ஒவ்வொரு கதையிலும் தெளிவாகின்றது. கொடுப்பதெல்லாம் முத்துக்களே! சொத்தைகள் ஏதுமில்லை! கதைக்கும்திறன் தந்த இறைவனுக்கு நன்றி! நீங்கள் சமைப்பதும் அருமை! பரிமாறுவதும் சுவைஞர்களுக்கு மகிழ்வளிப்பது. அறுசுவை உண்டி தோற்கும், ஒண்பான்சுவை படைப்புகள் தொடர்க! சுவைஞர்கள் மிகுக! விசிறிகள் உங்களுக்குக் குளிர் தென்றலாக அமைக! இந்தக் கதைப்பூ மணக்கிறது! தேன் பிலிற்றுகின்றது! வாடாததாக நீடுகின்றது! இது என்றும் புக்ழ் மகுடம் சூட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  35. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு 2011-இல், என் வலைத்தள ஆரம்ப நாட்களில், நான் என் வலைத்தளத்தினில் வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 28

    அதற்கான இணைப்பு:

    https://gopu1949.blogspot.in/2011/02/blog-post_11.html

    பதிலளிநீக்கு
  36. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-03-03-third-prize-winner.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு
  37. COMMENTS FROM Mr. V. NATANA SABAPATHI Sir in my WhatsApp STATUS page on 24.08.2018 :-

    -=-=-=-=-=-

    தங்களது ‘காதலாவது ....கத்தரிக்காயாவது’ என்ற கதையைப் படித்தேன். முதலில் கதையின் தலைப்பே என்னை ஈர்த்தது.

    காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு என யோசித்தபோது, கத்தரிக்காய் காய்த்தால் கடைக்கு வந்துவிடும். காதலும் அப்படித்தான். காதல் முற்றினால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் தான் அந்த வழக்கு சொல் வந்துவிட்டதோ என நினைக்கத்தோன்றுகிறது.

    எதற்காக இந்த தலைப்பை வைத்திருக்கிறீர்கள் என்ற ஆர்வத்தோடு கதையில் மூழ்கினேன்.

    காய்கறி விற்கும் அழகிய அபலைப் பெண் காமாட்சிக்கும், தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அவ்வப்போது வார,மாத இதழ்களுக்கு கதைகள் துணுக்குகள் எழுதிக்கொண்டு தற்காலிகமாக வேலை பார்த்து, அதில் கிடைக்கும் சொற்ப சம்பளத்திலும் காலம் தள்ளிக்கொண்டு தன் படிப்புக்கு ஏற்ற நல்லதொரு வேலை கிடைக்க மனுக்கள் போட்டுக் கொண்டு இருக்கும் பரமுக்கும் ஏற்பட்ட அந்த காதலை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

    காமாட்சிக்கு காய்கறி வாங்க உதவி, அவளது அன்பைப்பெற்ற பரமுக்காக தான் ஆசைப்பட்ட பட்டுபுடவைக்கும் தங்கச்சங்கிலிக்கும் என சேர்த்து வைத்த பணத்தை அவனது மருத்துவமனை செலவுக்கு பயன்படுத்திய நிகழ்வே அவளது காதலின் ஆழத்தை சொல்லிவிட்டது.

    களங்கமில்லா காதலர்களுக்கு இடையே நடக்கும் அன்புப் பரிமாறலை இயல்பான, எளிய சுவையான உரையாடல்கள் மூலம் காட்டியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    கதைக்கேற்ற தலைப்புதான், வாழ்த்துகள். ,

    -=-=-=-=-=-

    கதையை மிகவும் ரஸித்துப்படித்து, விரிவாகவும், அழகாகவும் அருமையாகவும், பொறுமையாகவும் பின்னூட்டம் அளித்துள்ள திரு. வே. நடன சபாபதி ஐயா அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  38. Mr. G. MURALI of M/s. High Energy Batteries Limited, Tiruchi
    appreciated this story through Whats App message on 24.08.2018

    -=-=-=-=-
    24/08 04:43] Murali G. HEB: காதலாவது கத்திரிக்காயாவது கதை - 👏😃🤔✍🤷‍♂👌🏼
    -=-=-=-=-

    Thanks a Lot ..... My Dear Murali.

    அன்புடன் கோபு மாமா珞

    பதிலளிநீக்கு
  39. திருமதி. விஜயலக்ஷ்மி நாராயண மூர்த்தி அவர்கள் இந்தக்கதைக்கான தனது கருத்துக்களை WHATS APP VOICE MESSAGE மூலம் பகிர்ந்துகொண்டு பாராட்டியுள்ளார்கள்.

    விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு
    22.09.2018

    பதிலளிநீக்கு
  40. WHATS-APP COMMENT RECEIVED ON 02.05.2019 FOR VGK-05

    பாசிடிவாக கதையை கொண்டு போய் முடித்தது மிக நன்றாக இருந்தது. தொடரட்டும் உங்கள் இனிய கதைகள்.

    இப்படிக்கு,
    மணக்கால் மணி

    பதிலளிநீக்கு
  41. Paramu and Kamatchi. What a real characters. I enjoyed it

    பதிலளிநீக்கு