என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 4 மே, 2014

VGK 14 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - நீ .. முன்னாலே போனா .. நா .. பின்னாலே வாரேன் !





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 14 - ’ 'நீ .. முன்னாலே போனா .. 

நா .. பின்னாலே வாரேன் ! ’


இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-14.html


 

  

 

 


மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து


















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 









    




முதல் பரிசினை வென்றுள்ளவர்கள் 


மொத்தம் இருவர்.



அதில் ஒருவர் 


திருமதி:





ராதாபாலு


அவர்கள்


வலைத்தளங்கள்: 

” எண்ணத்தின் வண்ணங்கள் ”
http://radhabaloo.blogspot.com/


“அறுசுவைக் களஞ்சியம் ”
http://arusuvaikkalanjiyam.blogspot.com/


“ என் மன ஊஞ்சலில் “
http://enmanaoonjalil.blogspot.com/





முதல் பரிசினை வென்றுள்ள


திருமதி 


 ராதாபாலு  


அவர்களின்  விமர்சனம் இதோ :






மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.....இது அந்நாளைய பெரியோர் வாக்கு.

அந்த பெரிசு என்ன பேச்சு பேசுது பாரு...ரொம்ப திமிருதான்...இது இந்தக் கால இளசுகள் பேச்சு.


அப்படிப்பட்ட முதியோர்களையும், பல முதியோர்களின் வாழ்வில்  தம் கடைசி நாட்களைக் கழிக்க வலுக்கட்டாயமாக அனுப்பப்படும் முதியோர் இல்லங்களையும் மையமாகக் கொண்ட வாழ்வியல் தத்துவத்தை விளக்கும் அருமையான கதையை எழுதிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.



ஒரு தந்தையை, தன்னை பெற்று, வளர்த்து,ஆளாக்கி, நல்லவற்றை, தீயவற்றைச்  சொல்லிக் கொடுத்து, ஒரு நல்ல மனிதனாக உருவாக்கியவரை பாரமாக எண்ணி 'என் வீட்டில் இருக்காதே' என்று சொல்லாமல் சொல்லி முதியோர் இல்லத்தில் கொண்டு விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் செல்பவனையும், 'பார்த்து போப்பா' என்று சொல்லத்துடிக்கும் அந்தப் பித்தான தந்தையின் பாசத்தை கல்மனம் கொண்ட அந்தப் பிள்ளை எப்படி அறிவான்?



நாம் பஸ்ஸிலோ, ரயிலிலோ, மார்க்கெட்டிலோ பார்ப்பவர்களிடம் கூட அவர்கள் குடும்பம் பற்றிக் கேட்பதுண்டு! அந்த இல்லத்தில் நிரந்தரமாகத் தங்க வந்திருந்த அந்தப் புதிய முதியவரைப் பற்றி அறிய அத்தனை பேரும் ஆவலாய் இருந்ததில் வியப்பென்ன? அவர் கதையைக் கேட்ட அரட்டை  ராமசாமிக்கு மட்டுமல்ல, நமக்கும் அவர் சொன்ன விஷயங்கள் சற்று சுவாரசியத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன.


மூன்று குழந்தைகள், திருமணமான பேத்தி, எண்பதுக்குமேல் வயது, மனைவி இறந்து 15 நாட்களாவதற்குள் முதியோர் இல்லம்....அதுவும் மனைவியை அவரே கொன்று விட்டதாக குற்றச் சாட்டு.....இவை அந்த முதியவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆவலை நமக்கும் உண்டாக்கி விடுகின்றனவே! இந்த இடத்தில் ஆசிரியர் 'தொடரும்' போட்டு விட்டாரே?





"என்னங்க...தூங்கிட்டீங்களா? எப்படி இருக்கீங்க? இந்தப் பிள்ளைங்களை நெனைச்சாலே எனக்கு ரொம்ப கோபமா வருதுங்க. நான் போயி ஒரு  மாசம்கூட ஆகலியே? அதுக்குள்ளே உங்களை இங்க கொண்டுவந்து விட்டுட்டாங்களே? என்னை நீங்கதான் கொலை செய்துட்டதா வேற சொல்லிட்டாங்களே? என்னால தாங்க முடியலிங்க.


"அழாத கோமு! அவங்களுக்கு நம்ம அன்பும், பாசமும் புரியல. உன்னை எல்லா காரியமும் முறையா பண்ணி மேல அனுப்பினார்களே... இங்க எப்பிடி வந்த?'


"என்னங்க... இப்படி கேட்டிட்டீங்க? உங்களை விட்டு நான் எங்க போவேன்?"


"சரி... வருத்தப்படாம தூங்கு. நானும் இந்தப் புது இடத்துல தூங்க முயற்சி பண்றேன்."

-------------------------------------------------------------------
                                                                                    
ஒரு முதியோர் இல்லத்தின் அன்றாடக் காட்சிகளை மிக அழகாக நம் முன் காட்டுகிறார் கதாசிரியர்.  உயிரோட்டமான கதை நிகழ்வுகள் நாமும் அங்கு இருப்பதைப் போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. 


ன் சொந்த மனிதர்களால் ஒதுக்கப்பட்டு, அலட்சியப் படுத்தப்பட்டு இந்த இல்லங்களில் வாழ்வோர் தம் இறுதிக் காலத்தில், பெற்ற குழந்தைகளின் துணையின்றி, விதவிதமான நோய்களுடனும், அவற்றிற்கான மருந்து மாத்திரைகளின் துணையோடும் வாழ்வது எத்தனை கொடுமை? இந்த நிலை யாருக்குமே வரக்கூடாது.


அங்கிருந்த சர்க்கரை நோயாளி கம்பவுண்டர் வரத் தாமதமானதால் மயக்கமடைந்த போது, அந்த  முதியவர் மிக லாகவமாக மருந்தை  அளவாக ஏற்றி, வலியின்றி மென்மையாக ஒரு தேர்ந்த டாக்டரைப் போல ஊசி போட்டதை நேரில் பார்ப்பது போல எழுதியிருக்கும் ஆசிரியருக்கு பாராட்டு. அந்த நேரத்தில் கடவுள் போல அந்தப் பெரியவர் அனைவருக்கும் தோன்றியதில் வியப்பில்லை.

இனி அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இல்லத்தினர் காட்டிய ஆவல் நமக்கும் தொற்றிக் கொள்கிறது! அந்தப் பெரியவர் மருத்துவர் இல்லை என்பதும், தம் மனைவிக்கு இரண்டு வேளையும் வலி இல்லாமல் இடம் மாற்றி மாற்றி ஊசி போட்ட அனுபவமே இன்று கைகொடுத்ததாகவும் கூறியபோது, 'இவர் எப்படி தம் மனைவியைக் கொலை செய்ய முடியும்?' என்ற ஐயம் நமக்குள்ளும் ஏற்படுகிறது.

தான் கணவருக்கு முன்னால் மறைந்து கொடுத்து வைத்தவளாக கூறப்பட்டாலும், மனைவியை இழந்த கணவனின் பரிதவிப்பை 'எரியும் விளக்கில் திரி முந்தியோ...எண்ணெய் முந்தியோ... ஏதாவது ஒன்றுதானே மிஞ்சும்? இதுதானே உலக நியதி' என்று அந்தப் பெரியவர் பெருமூச்சுடன் சொல்வதை ஆசிரியர் கூறியிருப்பது உணர்வுபூர்வமான வார்த்தைகள்.

எத்தனையோ வசதியான வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் இந்த இல்லத்தின் சாப்பாடை அவர் குறை கூறாதது அவரின் நல்ல பண்பைக் காட்டுகிறது. அவர் சொல்வது போல் பல வீடுகளில் பெரியவர்களின் ஆசைகளை, விருப்பங்களைப் பற்றிக் கவலைப் படாது 'நான் கூப்பிடும்  நேரத்துக்கு வந்து போட்டதை சாப்பிடு. இந்த வயதுக்கு மேல் உனக்கு என்ன நாக்கு? இதை செய்து  போடுவதே அதிகம்' என்று மோசமாக நடந்து கொள்ளும் பிள்ளைகளுடன் வாழ்வதைவிட இந்த முதியோர் இல்லங்களில், நல்ல கவனிப்பில் வேளா  வேளைக்கு சாப்பாடு, தகுந்த நேரத்திற்கு மருத்துவப் பரிசோதனை, சக முதியவர்களுடன் எண்ணப்  பரிமாற்றம் ....இப்படி வாழ்வது சரிதான் என்று தோன்றுகிறது.

தன் வாழ்க்கையின் வசந்த காலமாகக் கூறும் அந்தப் பெரியவர், தன்  மனைவி கையால் செய்து போடும் சமையல் வகைகளைப் பற்றி விவரிக்கும்போது நமக்கே நாக்கில் நீர் ஊறுகிறது! கதாசிரியர் ரசனையாகச் சமைத்த உணவை சாப்பிடுவதில் விருப்பமுள்ளவர் என்று தெரிகிறது. 

சாதாரணமாக ஆண்களின் விருப்பமே வீடுகளில் மேலோங்கியிருக்கும். அவர்களுக்குப் பிடித்த சமையல்கள் மட்டுமே செய்யும் வீடுகள் உண்டு. திருமணத்திற்குப் பின்பு தன்  ருசியையே மறந்து, தன் கணவன் வீட்டு சமையல்களை  மட்டுமே சாப்பிடும் நிலை இன்றும் பல பெண்களுக்கு உண்டு. இந்தப் பெரியவரின் மனைவிக்கு பிடித்த விதவிதமான பழங்கள், இனிப்புகள், ஐஸ்க்ரீம் என்று அவள் கேட்டவைகளை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதுடன், தன் மனைவியின் விருப்பங்களை மதித்து நடந்தவர் என்பதையும் அறிய முடிகிறது. 

இத்தனை அற்புதமாக தாம்பத்தியம் நடத்தியவர் தன் னைவியைக் கொலை செய்வதா? நெவர்! இதில் ஏதோ மர்மம் இருக்கிறதே!


"என்னங்க...மதிய சாப்பாடு நல்லா இருந்ததா? உங்களுக்கு ஒரு கறி, கூட்டு, பொரித்த அப்பளம்  எல்லாம் வேணுமே? கட்டித் தயிர் இல்லாம சாப்பிட மாட்டீங்களே? என்னமோ உங்க முகமே நல்லா இல்லியே?"

"அதெல்லாம் இல்ல கோமு. நீ செய்து போட்ட வித விதமான சமையல் எல்லாம் இன்னும் என் நாக்குலே இருக்கும்மா. அதை நினைச்சே நான் மீதி காலத்தைக் கடத்திடுவேன். நீ கவலைப் படாத. இன்னிக்கு சாயந்திரம் உனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தரேன். போய் ரெஸ்ட் எடும்மா."


-------------------------------------------------------------------

                                                               

ன் மனைவியின் காலில் ஏற்பட்ட சிறிய புண் ஆறாத ரணமாகி சர்க்கரை நோயாக மாறியதை விபரமாக விளக்கிய பெரியவர், அதுவரை மிக ருசியாக, விதவிதமாக,சர்க்கரை, நெய், எண்ணெய் என்று இஷ்டப்படி சாப்பிட்ட நபருக்கு திடீரென்று சர்க்கரை இல்லாத காப்பியையும், சட்னி இல்லாத இட்லியையும் சாப்பிடுவது எவ்வளவு கடினமான செயல் என்பதைக் கூறுவது, அந்த நோயை ஒரு நாற்காலிக்கு உமானப் படுத்தி கூறிய கருத்துக்களும் மிக அருமை.

அதிக சர்க்கரையினால் மட்டுமே இந்த நோய் வருவதில்லை என்பதும், சர்க்கரையைக் குறைத்து விட்டால் குணமாகிவிடும் என்பதும் கிடையாது. இந்த நோய் யாருக்கு வரும் என்று இல்லாமல் சின்னக் குழந்தை உட்பட எல்லா வயதினருக்கும் வரும். இதில் 60 வயதுக்கு மேல் இந்நோய் வருபவர்கள் 'அப்பாடி...இவ்வளவு நாள் நம் விருப்பப்படி சாப்பிட்டாச்சு!' என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். நாம் சாப்பிடும் தினசரி உணவில் கூட சர்க்கரை சத்து உள்ளது என்பதையும், நாவுக்கினிய உணவை சாப்பிட முடியாதது எவ்வளவு சிரமம் என்பதையும் அந்தப் பெரியவர் மூலமாக  ஆசிரியர் நம் மனதில் நன்கு பதியும்படி சொல்லியிருப்பது மிக அருமையான விளக்கம்.

ன் மனைவி கையால் ருசியாக, சமைத்து சாப்பிட்ட பெரியவரும் தன் மனைவியை நினைத்து கண்ணீர் விட்டது நம் கண்ணிலும் நீரை வரவைக்கிறது.

பெண்கள் தம் குடும்பத்தினரை அரவணைத்து, அன்பு செலுத்தி, விட்டுக் கொடுத்து நடத்துவது போல ஆண்களால் முடியாது என்பதைப்  பெரியவர் மிகச் சரியாகக் கூறுகிறார். தான் கண்டித்து வளர்த்ததால் பிள்ளைகள் தன்னை விரும்புவதில்லை என்றும், எல்லாருக்கும் தன்  மனைவியே பிடித்தமானவள் என்பதையும் சொல்லும் அவரின் வார்த்தைகளில் வருத்தம் பிரதிபலிக்கிறது. அதனாலேயே தன்  பெண், பிள்ளைகள் தன்னை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. தன் மனைவியை மட்டுமே முழுதாக தன்னால் நேசிக்க முடிந்ததை ஒளிக்காமல் அவர் கூறியது, தன்  மனைவியிடம் அவர் கொண்ட அளவு கடந்த பாசத்தையும்,நேசத்தையும் புரிய வைக்கிறது.

"என்னங்க...எங்க கிளம்பிட்டீங்க? கொஞ்சம் மெதுவா நடங்க. என்னால உங்க வேகத்துக்கு நடக்க முடியல."

"நீ ஏம்மா கஷ்டப்படற? நான் அப்படியே கொஞ்சம் வாக்கிங் போயிட்டு வரேன்."

"என்னங்க...நம்ம பொண்ணுகிட்ட நீங்க எவ்வளவு பாசமா நடந்துக்கிட்டீங்க? அவ கூட உங்களை புரிஞ்சிக்கலையா? எல்லாருமா சேர்ந்து உங்களை இப்படி தவிக்க விட்டுட்டாங்களே."

"வருத்தப்படாத கோமு. நமக்கு என்ன கிடைக்கணும்னு இருக்கோ அதுதான் கிடைக்கும். இங்க ஒரு வேத பாடசாலை இருக்கு. அதைப் போய் பார்த்துட்டு வரேன்".


-------------------------------------------------------------------

                                                                              

வேதங்கள் மட்டுமே எக்காலமும் அழியாது வாழ்பவை. அவையே நாம் எப்படி வாழ வேண்டும், நாம் பிறந்த பயனை அடைவது எப்படி என்பது போன்ற இம்மைக்கும், மறுமைக்கும் தேவையான விஷயங்களை எடுத்துச் சொல்பவை. வேதபாடசாலைகள் நிறைய ஆரம்பிக்கப்பட்டு, வேதங்களை அழியாமல் காப்பாற்ற வேண்டும் என்பதே நம் ஜகத்குரு பரமாச்சாரியாரின் விருப்பம்.

இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும், கடவுள் பக்தியும் கொண்ட பெரியவருக்கு அங்கு நடைபெறப் போகும் சப்தாகம் பற்றிய விஷயம் மன மகிழ்ச்சியைக் கொடுத்ததில் வியப்பில்லை. அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன், அதனைப் பற்றிய அருமையான விளக்கமும் கொடுத்த முதியவர், நாம் இறக்கும் நாள் நமக்கு தெரியாது. ஆனால் பரீக்ஷித்திற்கோ ஏழு நாட்களே வாழ்க்கை என்பது அறியப்பட்டது. அந்த ஏழு நாட்களில் சுகமுனிவரால் சொல்லப்பட்ட ஸ்ரீன் நாராயணனின் பெருமைகளைக் கூறும்  ஸ்ரீ பாகவத சப்தாகம் கேட்பவர்க்கு நற்கதியை அடையச் செய்யும் என்பது சரித்திர உண்மை என்பதை விளக்கினார். 

பரீட்சித்தின் கதையை ஆசிரியர் தனக்கே உரிய பாணியில் மிக அற்புதமாக, இரண்டு விதமான கதைகளுடன் மிக அழகாக அருமையாகக் கூறியுள்ளார். 

இந்தக் கதை நமக்கு சொல்லும் நீதி...எது நடக்க வேண்டும் என்று  நியமிக்கப்பட்டுள்ளதோ அது நடந்தே தீரும். அதைத்தான் நாம் ஊழ்வினை என்றும், விதி என்றும் சொல்லுகிறோம். நாம் எவ்வளவு பாடுபட்டாலும் அந்த இறைவன் விதித்த விதியை மாற்ற முடியாது. இந்த பாகவத சகாப்தம் கேட்டால் நாம் இப்பொழுது செய்யும் தீவினைகளில் இருந்து விலகி நன்மை பெற்று இறைவனின் திருவடியை சிந்தை செய்தால் நம்  வினைகள் குறைய வாய்ப்புண்டு. அதனாலேயே இது போன்ற ஹரிகதா காலட்சேபங்களும், நாம சங்கீர்த்தனங்களும், ஸ்லோக பாராயணங்களும் பல இடங்களில் நடத்தப்படுகின்றன.

பெரியவரின் உற்சாகமும், ஆர்வமும் கண்ட அனைவரும் மாலை நேர உபன்யாசத்திற்கு தினமும் சென்று வந்தனர். ஆனால் அரட்டை ராமசாமிக்கு இது ரொம்ப வசதியாகப் போயிற்று.பெரியவரின் வாழ்க்கை மர்மத்தை அறிந்து கொள்ளும் ஆவல் உபன்யாசம் கேட்பதை விட அதிகமாக இருந்ததால் தவறு என்று தெரிந்தும் அவரது பெட்டியை அவர் இல்லாதபோது திருட்டுத் தனமாக குடைந்து பார்த்தும் அவர் மனைவியின் புகைப்படம் மட்டுமே கிடைத்ததுடன், அவரது  டைரியில் எழுதியிருந்த தகவல்களைப் படித்து உள்வாங்கிக் கொண்டார்.

"உபன்யாசகர் கதை ரொம்ப நல்லா இருந்தது. ஏங்க...நாளையோட கதை முடியுது இல்லையா? நீங்க அவங்களுக்கு புடவை வேட்டியும், சன்மானமும் நம்ம சார்பா கொடுத்துடுங்க."

"நான் நினைச்சதை நீயும் சொல்லிட்டே கோமு! எல்லாத்துக்கும் அவங்ககிட்ட ஏற்பாடு செய்யச் சொல்லிட்டேன். அந்த பகவான் என்னை எப்போ கூப்பிடுவாரோ?"

"நாளைக்கு சுவாமிக்கு பால்பாயசம் நைவேத்தியம் செய்வாங்களே? எனக்கு கொஞ்சம் கொடுக்கறீங்களா? நீங்க கடைசியா கொடுத்த போளி, பாயசம், ஐஸ்க்ரீம், ஜூஸ்  எல்லாம் இன்னும் என் நாக்கிலேயே இருக்குங்க. நாம பேசிக்கிட்டபடி என் கடைசி நேரத்தில எனக்கு பிடிச்சதெல்லாம் கொடுத்து என் ஆசையை நிறைவேத்தி வெச்சீங்களே?"

"அதைத்தான் கோமு நம்ம பசங்க நானே அதெல்லாம் கொடுத்து உன்னைக் கொன்னுட்டதா சொல்றாங்க. அந்தக் கோபத்தில்தான் என்னை இந்த இல்லத்துக்கு அனுப்பி வெச்சுட்டாங்க. நான் அவங்களுக்காகத்தானே உயிரைக் கொடுத்து உழைச்சேன்? ஆனா என்னை யாரும் புரிஞ்சிக்கலையே? உன்கிட்டதான எல்லாரும் பாசமா இருந்தாங்க?"

"அதெல்லாம் இல்லீங்க. நம்ம அன்யோன்யம் அவங்களுக்கு தெரியாது; புரியவும்  புரியாது. எப்படியோ அவங்க நல்லா இருக்கட்டும்."



"சரிம்மா...நாளைக்கு உபன்யாசம் முடிவு நாள். நிறைய வேலை இருக்கு. நான் தூங்கப் போறேன்."

"சரிங்க..நானும் கிளம்பறேன்."


-------------------------------------------------------------------

                                                                   

மறுநாள் மூல பாராயணமும், உபன்யாசமும் மிக அருமையாக நடந்து முடிந்தது. பெரியவரின் சார்பில் புடவை, வேட்டி, சன்மானம் கொடுக்கப்பட்டதுடன் வந்திருந்த அனைவருக்கும் அருமையான விருந்து பரிமாறப் பட்டது. இதன் மூலம் அவரது பக்தியையும், தாராள குணத்தையும் ஆசிரியர் கூறியுள்ளார். 

தன் மனைவிக்கு பிடித்தமான பால் பாயசத்தை தான் மட்டும் அருந்த மனமில்லாத பெரியவர், தன மனைவிக்கும் கொடுக்க எடுத்து வந்ததாக  ஆசிரியர் கூறுவது சற்று அர்த்தமில்லாததாக இருப்பினும், அவரது அன்யோன்ய அன்பும், பாசமுமே அவரை அந்த நிலைக்கு அழைத்துச் சென்றது எனலாம். மனைவியின் லேமினேட் செய்த படத்திற்கு பாயசம் ஊட்டியது அவருக்கு மனநோய் ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், ஒரு சொம்பு பாயசத்தையும் (சர்க்கரை நோயாளியான பெரியவர்) குடித்து படுத்து தான் இனி வாழ விரும்பவில்லை என்பதையே சுட்டிக்காட்டுவதாக ஆசிரியர் சித்தரிக்கிறார். அதுவே அவருக்கு மாரடைப்பு வரக் காரணமாயிற்று.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர், தன்  கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அந்த நோய் பற்றிய ஆராய்ச்சிக்காக கொடுத்தது, அவர் தானும், தன் மனைவியும் கஷ்டப் பட்டதுபோல் வேறு யாரும் படக் கூடாது என்பதை விரும்புவதாக ஆசிரியர் எழுதியுள்ளார். நல்ல நோக்கம்!

பெரியவரின் டைரியில் அவர் மனைவி பற்றியும், அவருக்கு இறுதி நாளில் தான் இனிப்புகளை வாங்கிக் கொடுத்து அவளது ஆசைகளை நிறைவேற்றியது பற்றியும், அவளைத் தான் கொன்று விட்டதாகக் குழந்தைகள் தன்னை வெளியேற்றியது பற்றியும் அரட்டை ராமசாமி படித்ததைக் கேட்ட பெரியவர், இதுநாள்வரை தனக்கும், தன் மனைவிக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் வெளியில் தெரிந்து விட்டதால் தான் இனியும் தனிமையில் வாழ விரும்பாமலே, ஆக்சிஜன் குழாய்களைத் தானே பிடுங்கி எறிந்து உயிரை விட்டார் என்பதை ஆசிரியர் மிக நாசூக்காக எழுதியுள்ளார். சில நாட்களே அந்த இல்லத்து மக்களுடன் வாழ்ந்தாலும் அவர்களுடன் ஒன்றி விட்டதை ராமசாமி மூன்று நாள் மௌன விரதம் இருந்ததைக் குறிப்பிட்ட  ஆசிரியர் சில நொடிகள் நம் கண்களையும் கலங்கச் செய்து விட்டார்.


"கோமு... நீயில்லாம என்னால் தனியா  இருக்க முடியாமதான் நான் வந்துட்டேன். இனி  உன்கூட எப்பொழுதும் இருப்பேன்."

"வாங்க...வாங்க...சில நாள் உங்க கூட இருந்த இந்த இல்லத்து மக்கள் புரிஞ்சுகிட்ட அளவு கூட நம்ம குழந்தைகள் உங்களைப் புரிஞ்சுக்காதது வருத்தம்தான். இனி நிச்சயம் புரிஞ்சுப்பாங்க. நம்ம கடமை இந்த பூமியில் முடிஞ்சாச்சு. மேல போகலாம் வாங்க." 


-------------------------------------------------------------------

                                                                            


சுமைதாங்கியாகிய மனைவி மறைந்தபின் சுமையாகிய கணவன் தனியாக வாழ்வது கடினம் என்பதை இந்தக் கதை அழகாகக் கூறுகிறது. 

'என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ' என்ற பாடல் வரிகளின்படி அந்தப் பெரியவர் தன் ஆசை மனைவியுடன் இணையச் சென்றுவிட்டார்.


காந்தியின் 'சத்திய சோதனை'யில் அவர் மனைவி கஸ்தூரிபா மரணப் படுக்கையில் இருந்த சமயம் அவருக்குக் கொடுக்கப்போகும் மருந்து  மிருகக் கொழுப்பில்  தயாரானதால் அதை அவருக்குக் கொடுக்க வேண்டாம் என்று காந்தி தடுத்துவிட்டதாகப் படித்திருக்கிறேன். அது உயிர் காக்கும் மருந்தாக இருப்பினும், கஸ்தூரிபாவிற்கு விருப்பமில்லாத காரியத்தை செய்யக்கூடாது என்றாராம் காந்தி.


அதைப் போன்றே வாழ்க்கையின் இறுதியில் இருப்பவர்களின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டியது உடனிருப்போர் கடமை என்பதற்கிணங்க இந்தப் பெரியவர் அவர் மனைவியைக் கவனித்துக் கொண்டதும் தவறல்ல. 

ராதாபாலு



 





மனம் நிறைந்த பாராட்டுக்கள் !


அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!



    




முதல் பரிசினைப் 


பகிர்ந்து கொண்டுள்ள 


மற்றொருவர் யார் ? 






தொடர்ச்சியாக அடுத்தடுத்து 



எட்டாம் முறையாக  


வெற்றிவாகை சூடியுள்ள

நம் அன்புக்குரிய சாதனை நாயகி




 ’கீத மஞ்சரி ’ 


திருமதி



 கீதா மதிவாணன்  



அவர்களே தான் ! ;)





முதல் பரிசினை வென்றுள்ள 


விமர்சன வித்தகி 


திருமதி. 


கீதா மதிவாணன் 


அவர்களின் விமர்சனம் இதோ
“உங்க பேர் சொல்லுங்க.”

“என் பேர் அரட்டை ராமசாமிங்க.”

“அரட்டை ராமசாமிங்கற உங்க பேர்க்கு என்ன அர்த்தம்? அதிகமா அரட்டை அடிப்பீங்களோ?”

“அதெல்லாம் இல்லீங்க… அரட்டை அரங்கத்தில் ஒருமுறை கலந்துகொள்ள பெரும் ஆர்வத்தோடு போயும் தேர்வாகவில்லை. அதிலிருந்து அரட்டை என்கிற பட்டம் என் பெயரோடு ஒட்டிக்கொண்டுவிட்டது.”

“அப்படியா? சரி இப்போ இந்த அரங்கத்தில் நீங்க என்ன சொல்லப்போறீங்க?”

“வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுடைய தளத்தில் ‘நீ முன்னாலே போனா.. நான் பின்னாலே வாரேன்’ என்கிற கதைக்கான என் விமர்சனத்தை இங்கே சொல்லலாம்னு வந்திருக்கேன்.”

“அந்தக்கதையில் நீங்களும் ஒரு கதாபாத்திரமாச்சே… நீங்க எப்படி…”

“அதனால் என்னங்க ஐயா? என் கதாபாத்திரத்தையும் சேர்த்தே விமர்சிச்சிடுறேன்.”

“ஓ.. ரொம்ப நல்லது. சொல்லுங்க.”

“அதாவது, பெரியவர் தன் மனைவிபால் கொண்ட அதீதமான அன்பைக் காட்டுவது போல் தோன்றினாலும் கதையின் அடிநாதமாய் இழையோடுவது ஒரு சராசரி மனித மனத்தின் சுபாவமான சுயநலம் என்றுதான் எனக்கு ஆரம்பத்தில் புலப்பட்டதுஅதனால்தான் அவர் மனைவி இறக்கும் தருவாயில் இனிப்புகளை ஊட்டிவிட்டு அவர்களைக் கொலை செய்திருக்கிறார் என்ற பழியையும் பெற்றிருக்கிறார் என்று தோன்றியது. உயிரின் மதிப்பை அறியாதவரா என்ற ஆற்றாமையும் எழுந்தது. ஆனால் முதியோர் இல்லத்தில் ஒரு நீரிழிவு நோயாளியை தகுந்த நேரத்தில் இன்சுலின் ஊசி போட்டுக் காப்பாற்றியதில் அவருடைய மனிதநேயம் புரிந்தது. ஆனாலும் அவர் மனைவியின் இறுதிநாட்களில்  நடந்துகொண்ட முறை அவர் பிள்ளைகளை வேதனைப்படுத்தியிருக்கும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.”

“அப்படியானால் அந்த முதியவரைக் கொண்டுவந்து முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகள் பேரில் தப்பே இல்லைன்னு சொல்றீங்க, அப்படித்தானே அரட்டை ராமசாமி?”

“அந்த அளவுக்குப் பிள்ளைகளுக்கு அவங்களுடைய அப்பாவின் மேல் காழ்ப்புணர்வு இருக்கிறதாகத்தான் கதையில் காட்டப்படுகிறது. எண்பத்துமூன்றுவயது தந்தையைக் கொண்டுவந்து முதியோர் இல்லத்தில் விடவேண்டுமென்றால் எந்த அளவுக்கு அவர் மேல் காழ்ப்புணர்ச்சி இருக்கவேண்டும் பிள்ளைகளுக்குஅல்லது எந்த அளவுக்கு தங்கள் தாயின்மீது பற்றுதல் இருந்திருக்க வேண்டும்? சிறுவயதிலிருந்தே கண்டிப்பும் கறாருமாய் வளர்த்த அப்பாவை விடவும், பாசமும் பரிவும் கொண்ட அம்மா மேல் குழந்தைகள் அதீதப் பிடிப்புடன் இருப்பது இயற்கைதானே… அப்படிப்பட்ட அம்மாவை இழக்க இவர் ஒரு முக்கியக்காரணம் என்பதாலும் இவர்மேல் இருந்த வெறுப்பு அதிகமாகி வீட்டை விட்டே துரத்தும் நிலைமைக்கு அவங்களைக் கொண்டுவந்திருக்கலாம்.”

“என்னதான் தகப்பன் தவறு செய்திருந்தாலும் அதற்காக வீட்டை விட்டு வெளியேற்றி முதியோர் இல்லத்தில் சேர்ப்பது முறையாகுமா?”

“இப்படி யோசித்துப் பாருங்களேன்… இன்று தன் மனைவி மேல் உள்ள அதீத அன்பினால் அவர்களுக்கு ஒவ்வாதவற்றைத் தர முன்வந்த அவர்நாளை தன் பேரப்பிள்ளைகளிடமும் அப்படியே நடந்துகொண்டால் என்னாவது என்ற பயமும் காரணமாக இருக்கலாம் அல்லவா? குழந்தை தீபத்தின் ஒளியில் கவரப்பட்டு அருகில் விளையாடச் சென்றால், போனால் போகிறது, ஆசைப்படுகிறது என்று அனுமதிப்போமா? ஆனால் ஒவ்வாதென்று தெரிந்தும் மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றுகிறேன் பேர்வழி என்று பிள்ளைகளுக்குத் தெரியாமல் அவர்கள் உண்ணக்கூடாதவற்றைக் கொடுத்து இப்படிப் பிள்ளைகளின் வெறுப்புக்கும் கொலைப்பழிக்கும் ஆளாகிவிட்டாரே…”

“மனைவியின் ஆசையை நிறைவேற்றியது தவறா? பெரியவர் பிறகு என்னதான் செய்திருக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள்?”

“இந்தக் கதைப்படி, முதியோர் இல்லத்தில் விடப்படும் முதியவருக்கு வயது 83. பத்துவருடங்களுக்கு முன்பு அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அப்படியானால் 73 வயதில்! கிட்டத்தட்ட ஒரு இந்திய ஆண்மகனின் சராசரி ஆயுட்காலத்தைவிடவும் அதிகப்படியான வயது… இந்த வயதில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கூட உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டியது அவசியம்.

முதுமையில் உடலுறுப்புகள் தங்கள் செயல்திறனைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்துக்கொண்டு வரும்வேளையில் சீரணத்திறனும் குறையக்கூடும். உணவில் உப்பு போதவில்லை, காரம் பத்தவில்லை என்று பெரியவர்கள் உணவைக் குறை கூறுவதை நாம் அறிவோம். பதிலுக்கு நாமும் சொல்வோம், ‘வயசாயிடுச்சில்லே… அதான் நாக்கு செத்துப்போச்சு.’ இது மிகவும் உண்மை. முதுமை காரணமாக நம் நாவில் உள்ள சுவைமொட்டுக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மடிந்துபோகின்றன, சுவையை அறியமுடியாமல் போகின்றது.

அப்படிப்பட்ட முதுமைப் பிராயத்தில் இருக்கும் இவர்களோ இளமையில் உண்டது போலவே முதுமையிலும் உண்ணமுடியவில்லையே என்று ஏங்குகிறார்கள். இளமையில்… ஏன் தங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது என்று அறியப்படும் வரையிலும்கூட அமோகமாகத்தான் உணவு உண்டிருக்கிறார்கள் என்று பெரியவர் அவர் வாயாலேயே பட்டியலிட்டுச் சொல்கிறார். அதன்பிறகுதான் மருத்துவர் ஆலோசனைப்படி… உணவுக்கட்டுப்பாடு..

இந்த இடத்தில் கதையின் போக்கை மாற்றாவண்ணம் கதையோடு கதையாக நீரிழிவு நோய் பற்றியும் அதற்கான உணவுக்கட்டுப்பாடு பற்றியும் மருத்துவர் வாய்மொழியாக சிறு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை இடைச்சொருகியுள்ளதை நான் பாராட்டுகிறேன். நாற்காலியின் நான்கு கால்கள் போன்ற நீரிழிவு நோய் பற்றி கவனத்தில் வைக்கவேண்டிய முக்கியமான நான்கு விஷயங்களைக் குறிப்பிட்டிருப்பது இந்நோய் பற்றிய அறியாமையை நீக்கும் நல்லதொரு விஷயம். ஏழு வயது குழந்தைக்குக் கூட நீரிழிவு நோய் வரலாம் என்று அவரே சொல்கிறார். அப்படியாயின் அக்குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் அல்லவா இனிப்பை நினைத்தும் பார்க்கமுடியாத வாழ்க்கையை வாழவேண்டியிருக்கும்!

மருத்துவரின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தப்படும்போதுதானே நோயின் தன்மை தீவிரமாகும். உயிரே போய்விட்டால் கூட பரவாயில்லை. ஆனால்.. கண், சிறுநீரகம், இதயம் போன்ற உடலுறுப்புகள் பாதிக்கப்படுவது, கால்களை இழப்பது போன்ற உபாதைகளை நினைத்துப்பாருங்கள். முதுமையில் கால்களை இழந்து மற்றவர் துணையுடன் வாழ நேரிடும் வாழ்க்கையை எவர்தான் விரும்புவார்கள்?

இளமையில் ஓரளவு நல்லமுறையில் வாழ்ந்து விட்டோம் என்ற மனத்திருப்தியுடன் முதுமையில் புலனடக்கத்துடன் வாழ்வதுதானே சிறப்பான வாழ்க்கையின் லட்சணம்? வாழ்ந்து முடித்த நிலையில் தங்கள் வாழ்க்கையை பிறருக்குப் பயனுள்ளதாய் ஆக்கிக்கொள்ளவேண்டியது மூத்தோரின் கடமை அல்லவா? இங்கே பற்றை விடவேண்டிய வயதிலும் அதீதப்பற்று வைத்து தங்கள் வாழ்க்கையைத் தாங்களே முடித்துக்கொள்ள விரும்பும் சராசரி மனங்களின் பிரதிபலிப்பைத்தான் காண்கிறேன், அந்தப் பெரியவரின் பார்வையில்.

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்

என்னும் குறளை அறிந்திருக்கிறீர்களா? ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாம். ஆசை இருந்தாலோ, எல்லாத் துன்பங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்குமாம். தங்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டதால் தாங்கள் இழந்துவிட்ட உணவைப் பற்றி மற்றவர்களிடத்தில் இப்போது சொல்லும்போது கூட பெரியவருடைய பேச்சில் எவ்வளவு ஆதங்கம்? எவ்வளவு சுயபச்சாத்தாபம்?”

“அப்படியானால் என்ன சொல்லவருகிறீர்கள்? பெரியவருடைய வாழ்க்கை யாருக்கும் பிரயோசனம் இல்லாத வாழ்க்கை என்றா?”

“அப்படி எப்படி ஐயா சொல்லமுடியும்? தன் இறுதிக்காலத்தில் தன் சொத்து முழுவதையும் நீரிழிவுநோய் பற்றிய ஆராய்ச்சிக்கென்றே எழுதிவைத்துள்ள அந்தப் பரந்த மனத்தை நம்மால் பாராட்டாமல் இருக்கமுடியுமா?”

“அதனால்தான் அவர் இறந்த பிறகு சில நாட்களுக்கு நீங்கள் எவரோடும் பேசாமல் மௌனம் அனுஷ்டித்தீர்களா?”

“உண்மைதான்… பெரியவர், தன்னுடைய உள்ளத்தைத் திறந்துகாட்டத் தயங்கிய வேளையில் அவர் இல்லாத நேரத்தில் அவர் அறியாமல் அவருடைய பெட்டியைத் திறந்து அவருடைய அந்தரங்கப் பொக்கிஷங்களைப் பார்வையிட்டது நான் செய்த தவறு. அவர் தன் மனைவியிடம் எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதை, லாமினேட் செய்யப்பட்ட அவர் மனைவியின் படத்திற்குப் பால் பாயசம் ஊட்டியதைக் கண்கூடாகப் பார்த்து அதிர்ந்திருந்தேன். அவருடைய மரணம் என்னைப் பாதித்ததில் என்ன வியப்பு!”

“பாகவதப் புராணம் கேட்ட ஏழாம் நாளில், பரீக்ஷீத்து மகாராஜாவைப் போல்பெரியவர் தானும் பரலோகப் பிராப்தி அடைந்த விஷயத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“அதைப்பற்றி நான் என்ன சொல்வது? அது அவரே எதிர்பார்த்திராத ஒரு அற்புத நிகழ்வு. மனைவியின் ஆசையை நிறைவேற்றுகையில், கையும் களவுமாகப் பிள்ளைகளிடத்தில் பிடிபடுவோம் என்றோ, முதியோர் இல்லத்துக்கு வருவோம் என்றோ, அங்கு பாகவத உபன்யாசம் கேட்போம் என்றோ எதையும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் நடப்பது அனைத்தையும் ஒருவித எதிர்பார்ப்புடனேயே ஏற்றுக்கொள்கிறார். அதனால்தான் பாகவதப் புராணம் முடியும் நாளில் அவருடைய உயிர் அவரைப் பிரியத் துடிக்கிறது. பிராணவாயுக் குழாய்களைப் பிடுங்கியெறிந்து அதற்கும் அவரே வழிவகுத்துக் கொடுக்கிறார்.”

“ஒருவேளை.. அவரும் அவர் மனைவியும் உணவுக்கட்டுப்பாட்டுடன் இருந்திருந்தால்… இவ்வளவு பிரச்சனைகளுக்கும் இடமிருந்திருக்காது என்று நினைக்கிறீர்களா?”

“யோசித்துப்பார்க்கிறேன். அப்படி இருந்திருந்தால்… இருவரும் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருக்கலாம்.. ஆனால் இப்படியொரு உயில் எழுதும் எண்ணம் அவருக்கு வாய்த்திருக்குமா என்பது சந்தேகமே. எனவே எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ.. அதுவும் நன்றாகவே நடக்கும் என்ற கீதோபதேசத்தோடு என் பேச்சை நிறைவுசெய்கிறேன்


நன்றி, வணக்கம்.”








மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.


 




    

  


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.




நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

முதல்  பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.



-oOo-


போட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள் 

பற்றிய விபரங்கள்  தனித்தனிப்

பதிவுகளாக பல மணி நேர இடைவெளிகளில்

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. 

காணத்தவறாதீர்கள் !



oooooOooooo



இதுவரை முதல் பதினான்கு கதைகளுக்கான 

விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள் 


முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.

  [[
சிறுகதை விமர்சனதாரர்களா  ..... கொக்கா ! 



இதுவரை ஹாட்-ட்ரிக்

வெற்றியாளர்கள் 


பட்டியலில் உள்ளோர் :




1)  சாதனைப் பெண்மணி   




விமர்சன வித்தகி  



 கீதமஞ்சரி  



திருமதி


  
      
 கீதா மதிவாணன்    


அவர்கள்

[VGK-07 To VGK-14] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து  

எட்டு முறைகள் வெற்றி

 

 2) திரு.    ர ம ணி   அவர்கள் 


[VGK-01 To VGK-04]


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


நான்கு முறைகள் வெற்றி

  


3] களம்பூர் திரு.



பெருமாள் செட்டியார் * 


அவர்கள்.


[VGK-11 To VGK-14]


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


நான்கு முறைகள் வெற்றி.




Hat-Trick Award amount will be fixed later according to his 

further continuous success in VGK-15 and VGK-16.

For further details please refer:


 

4) திருமதி. 



இராஜராஜேஸ்வரி         



அவர்கள் 


[VGK-04 To VGK-06] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


மூன்று முறைகள் வெற்றி

 

5] திருமதி. 



இராஜராஜேஸ்வரி 



அவர்கள் 


[VGK-08 To VGK-10] 


மீண்டும்  மீண்டும் 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


மூன்று முறைகள் வெற்றி

 


6] திருமதி. 



 இராஜராஜேஸ்வரி  ** 



அவர்கள் 


[VGK-12 To VGK-14] 


மீண்டும்  மீண்டும்  மீண்டும் 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


மூன்று முறைகள் வெற்றி





** 


Hat-Trick Award amount will be fixed later according to her 

further continuous success in VGK-15, VGK-16 and VGK-17.



 


7] திரு. 



 E.S. சேஷாத்ரி   



(காரஞ்சன் - சேஷ்) அவர்கள்


[ VGK-10 To VGK-12 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


மூன்று முறைகள் வெற்றி

 

8] திருமதி



 ராதாபாலு  



அவர்கள்


[ VGK-10 To VGK-12 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


மூன்று முறைகள் வெற்றி


 

இந்தப்பட்டியலில் அடுத்தது யார் ?


இதைப்படித்துக்கொண்டிருக்கும்


நீங்களாகவும் இருக்கலாம் !



oooooOooooo




ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் 

பட்டியலில் இம்முறை

மேலும் முன்னேற்றத்துடன் 

வெற்றி பெற்றுள்ள 


களம்பூர்

திரு. G. பெருமாள் செட்டியார் 

அவர்களுக்கு


நம் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + 


நல்வாழ்த்துகள்.

 
ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் 

பட்டியலில் இம்முறை

மீண்டும் மீண்டும் மீண்டும்

மும்முறையாகக் காட்சியளிக்கும் 

திருமதி.


 இராஜராஜேஸ்வரி  


அவர்களுக்கு


நம் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + 


நல்வாழ்த்துகள்.

 


oooooOooooo



அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 




இணைப்பு: 
கதையின் தலைப்பு:


VGK-16



” ஜா தி ப் பூ  ” 



விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


08.05.2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.






என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்





22 கருத்துகள்:

  1. முதல் பரிசுக்கு என் விமரிசனத்தைத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும், ஆசிரியர் அவர்களுக்கும் மிக்க நன்றி.

    என்னுடன் பரிசைப் பகிர்ந்து கொண்ட தோழி கீதாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. முதல் பரிசு பெற்ற திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கும் ,
    திருமதி ராதாபாலு அவர்களுக்கும்
    மனம் நிறைந்த பாராட்டுக்கள் , இனிய நல்வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  3. முதல் பரிசுக்குரியதாய் மறுபடியும் தேர்வாகியிருப்பதில் சொல்லொணா மகிழ்ச்சி. எழுத வாய்ப்பளித்த கோபு சார் அவர்களுக்கும் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் பல. என்னோடு பரிசினைப் பகிர்ந்துகொள்ளும் திருமதி ராதாபாலு அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். கணவன் மனைவியின் சம்பாஷணையை ஊடே புகுத்திய புதிய பாணியிலான விமர்சனத்திற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. முதல் பரிசு பெற்ற சகோதரியர் கீதமஞ்சரி அவர்களுக்கும் ,
    திருமதி ராதாபாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்! தொடருங்கள்!!

    பதிலளிநீக்கு
  5. திருமதி ராதாபாலு அவர்களுக்கும், சகோதரி திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. எட்டுமுறை தொடர்வெற்றி கண்ட சாதனையாளர்
    திருமதி . கீதா மதிவாணன் அவர்களுக்கும்,

    முதல் பரிசினை சாதனையாளருடன் பகிர்ந்துகொண்ட
    திருமதி. ராதா பாலு அவர்களுக்கும்,
    பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  7. http://enmanaoonjalil.blogspot.com/2014/05/blog-post.html
    திருமதி ராதாபாலு அவர்கள்.

    இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  8. முதல் பரிசு பெற்றவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்......

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொரு முறையும் வித்தியாசமாகச் சிந்தித்து விமரிசனம் எழுதித் தொடர்ந்து வென்று வரும் ராதாபாலுவுக்கும், கீத மஞ்சரிக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. முதல் பரிசினை பகிர்ந்து கொண்ட
    சகோதரி ராதாபாலு அவர்களுக்கும்
    சகோதரி கீத மஞ்சரி அவர்களுக்கும்
    எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. முதல் பரிசினை வென்ற
    திருமதி. ராதா பாலு, திருமதி. கீதமஞ்சரி
    இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. பரிசு பெறும் மூன்று விமர்சனங்களும்
    மிக மிக அற்புதம்
    பரிசு பெற்ற திருமதி ராதா பாலு
    கீதமஞ்சரி மற்றும் கீதாமதிவாணன் அவர்களுக்கு
    எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S May 14, 2014 at 6:45 AM

      வாங்கோ, திரு. ரமணி ஸார், வணக்கம்.

      //பரிசு பெறும் மூன்று விமர்சனங்களும் மிக மிக அற்புதம்//

      மூன்று அல்ல ... இரண்டே இரண்டு மட்டுமே !

      //பரிசு பெற்ற திருமதி ராதா பாலு
      கீதமஞ்சரி மற்றும் கீதாமதிவாணன் அவர்களுக்கு
      எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//

      [1] திருமதி ராதாபாலு அவர்கள் ..... OK

      திருமதி கீதாமதிவாணன் அவர்களின் வலைத்தளத்தின் பெயர் தான் ‘கீதமஞ்சரி’. அதனால்

      [2] ’கீதமஞ்சரி’ என்ற வலைத்தளத்தின் பதிவர் திருமதி கீதா மதிவாணன் அவர்கள் மற்றொருவர்.

      ஆகமொத்தம் இருவர் மட்டுமே. மூவர் அல்ல. ;)))))

      தங்களுக்குத்தெரியாதது அல்ல. ஏதோ ஒரு அவசரத்தில் இருவர் மூவராகத் தங்களுக்குக் காட்சியளித்துள்ளார்கள்.

      தங்கள் அன்பான வருகைக்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  13. சகோதரி ராதாபாலு அவர்களுக்கும், சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மென்மேலும் இதுபோல் கிடைத்திட வாழ்த்துக்கள்...
    அன்புடன் Killergee
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  14. முதல் பரிசை வென்று ராதா பாலு மற்றும் கீதமஞ்சரி ஆகிய இருவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  15. பரிசு வென்ற ராதாபாலு மற்றும் கீதமஞ்சரிக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. பரிசுகளாக வாங்கி குமித்துக் கொண்டிருக்கும் திருமதி ராதா பாலு அவர்களுக்கும், திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 29, 2015 at 3:07 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //பரிசுகளாக வாங்கி குமித்துக் கொண்டிருக்கும் திருமதி ராதா பாலு அவர்களுக்கும், திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

      வரிசையாக ஒரேயடியாக தினமும் பின்னூட்டங்களாக எழுதிக் குவித்துக்கொண்டிருக்கும் ஜெயாவுக்கு முதலில் என் நல்வாழ்த்துகள்.

      தங்களின் அன்பான வருகைக்கும் தொடர்ச்சியான அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  17. பரிசு வென்ற திருமதி ராதாபாலு திருமதி கீதாமதிவாணனவங்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. திருமதி ராதாபாலு திருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள் மூத்தோர்சொல்மிக்க மந்திரமில்லை அந்தக்கால பார்வை இந்த பெரிசு இன்னா பேச்சு பேசுது இந்தக்கால பார்வை என்று கலகலப்பாக ஒரவர் சொல்றாங்க மற்றவரோ அரட்டை ராமசாமியயே விமரிசனத்துக்கு கூப்பிடறாங்க.

    பதிலளிநீக்கு
  19. பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு