About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, January 3, 2014

104 ] சின்னங்கள்

2
ஸ்ரீராமஜயம்




நாம் இந்த மதத்தைச் சேர்ந்தவன் என்றால் அதற்கு சில வெளி அடையாளங்கள், சின்னங்கள் உண்டு. ஸ்கெளட் [சாரணர்] களுக்குத் தனி உடுப்பு இல்லையா?

ஆர்மி [தரைப்படை] மற்றும் நேவி [கப்பற்படை] ஆகியவற்றில் ஒவ்வொன்றில் இருப்பவர்களுக்கும் வேறு வேறு வெளி அடையாளங்கள் இருக்கின்றன. போலீஸிலேயே பல பிரிவுகளுக்கு பல தினுஸான அடையாளங்கள் இருக்கின்றன.

இவர்கள் டிரெஸ்ஸையும், பாட்ஜ் முதலானவற்றையும் மாற்றிக் கொள்வதனால் இவர்கள் செய்கிற காரியம் ஒன்றும் மாறிவிடாது. இருந்தாலும் அப்படி மாற்றிக் கொள்ளக் கூடாது என்று கட்டாயமாக விதி இருக்கிறது.

போலீஸ்காரன் தொப்பியை நேவிக்காரன் வைத்துக்கொள்ளக்கூடாது. அப்படியே இவன் தொப்பியை அவன் வைத்துக்கொள்ளக்க்கூடாது. 

எதிலும் கட்டுப்பாடு ஒழுங்கு [Discipline, Orderliness] இருக்க வேண்டும். 

இந்த  டிஸிப்ளின் + ஆர்டர் மதத்துக்கும் வேண்டுமல்லவா?

அதனால்தான் பல்வேறு ஜாதிக்காரர்கள், வெவ்வேறு ஆசிரமக்காரர்கள் ஆகிய ஒவ்வொருத்தருக்கும் வித்யாஸமான சின்னங்கள், காரியங்களைக் கொடுத்திருக்கிறது.

இப்படி வேஷ்டி கட்டிக்கொள்ளு, இப்படி புடவை கட்டிக்கொள்ளு, இந்த மாதிரி நெற்றிக்கு இட்டுக்கொள்ளு என்றெல்லாம் ரூல்களை தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

இது வெறும் ஸமூகக் கட்டுப்பாட்டுக்காக மட்டும் சொன்னதல்ல.

இவை ஒவ்வொன்றிலும் ஜீவனை பரிசுத்தி பண்ணுகிற சூக்ஷ்மமான அம்சமும் உண்டு. 

கச்சேரியில் ஸேவகனாயிருப்பவனுக்கு டவாலி உண்டு. அதிகாரிக்கு அது கிடையாது. ஏன் இப்படி என்று நாம் கேட்பது இல்லை. ஆனால் சாஸ்திரத்தில் அவரவர் தொழிலுக்கும், குலாச்சாரத்திக்கும் ஏற்றதாக வேறு வேறு அடையாளங்களைச் சொன்னால் மட்டும் ஆட்சேபிக்கிறோம். ஸமத்வம் [EQUALTY]  என்று சத்தம் போடுகிறோம். 

ஸமஸ்த ஜன ஸமூகத்தின் க்ஷேமத்துக்காக, காரியத்தில் பலவாகப் பிரிந்திருந்த போதிலும், ஹிருதயத்தில் ஒன்றாகச்  சேர்ந்திருந்த நம்முடைய ஸமுதாய அமைப்பில் ஆசார அநுஷ்டானங்களையும், அடையாளங்களையும் பிரித்துக் கொடுத்து, அவரவரது குண-கர்மாக்களுக்கு அனுகூலம் பண்ணுவதற்காகத்தான் என்பதை மறந்து, இதிலே வாஸ்தவத்தில் இல்லாத உயர்வு தாழ்வுகளை கல்பித்துக்கொண்டு சண்டை போடுகிறோம்.

இப்போது கடைசியில் ஒருத்தருக்கும் ஒரு மதச்சின்னமும் இல்லை என்று ஆக்கிக்கொண்டிருக்கிறோம்.

எல்லாம் ஸுபர்ஸ்டிஷன் என்கிறோம். சீர்திருத்தம் என்று ஆரம்பிக்கிறோம். இப்படிச்சொல்லிக்கொண்டே சீர்திருத்தக்காரர்கள் என்று அடையாளம் தெரிவதற்காக ஒரு குல்லா போட்டுக்கொள்கிறோம் அல்லது ஏதாவது ஒரு கலரில் சட்டை துண்டு போட்டுக்கொள்கிறோம். இவற்றிற்கு தெய்வத்திற்கு மேலான முக்கியத்தைத் தருகிறோம்.


oooooOooooo

[ 1 ]

ஸ்ரீ மஹாபெரியவாளுக்கு 

வீணை வாசிக்கத்தெரியுமா என்ன?


[சமீபத்தில் திருவண்ணாமலை சென்ற போது சந்தித்த ஒரு பெரியவர் சொன்னது. இந்த சம்பவம் அவர் நேரில் கண்டது. ஒரு பெயர் மட்டும் வேண்டுமென்று மறைக்கப்பட்டு இருக்கிறது. ]

சதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார். முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும். 

பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார். சென்னையில் அப்போது இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர்.

பெரியவா வழக்கம் போல தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இவர் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார். 

வந்திருந்த பொதுமக்களும் பிரபல வீணை வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள். வித்வான் வாசிக்க ஆரம்பித்தார். சுமார் 15 நிமிஷங்கள் வாசித்தார். கேட்டவர்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர். வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட்டார். 

திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச் சொன்னார்.


யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. 'அப்புறம் நான் அதை வாசிக்கலாமா?', என்று பெரியவா கேட்டார். 


 

எல்லாருக்கும் திகைப்பு! பெரியவாளுக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன? 

வீணையில் ஸ்ருதி கூட்டி பின் மீண்டும் வித்வானிடம் காட்டினார். 'இன்ன ராகத்துக்கு ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு.' 


'சரியா இருக்கு!'. 

பின் பெரியவா வீணை வாசிக்க ஆரம்பித்தார். சில நிமிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது. வீணை வித்வான் அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்று போட்டுக்கொண்டார். 


விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். 'க்ஷமிக்கணும் க்ஷமிக்கணும்' என்று கதறினார். அடுத்த பத்து நிமிடங்களில் ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார். 

கண்ணீரோ ஆறாக ஓடியது. 'தப்பு பண்ணிட்டேன், க்ஷமிக்கணும்' என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார். 

வாசித்து முடித்த பின் பெரியவா வீணையை திருப்பிக் கொடுத்தார். 'வித்யா கர்வம் ஏற்படக் கூடாது. கவனமாக இரு', என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு, திரையைப் போட்டுக்கொண்டார்!"


வீணை வித்துவான் ஏன் அழுதார்? காரணம் இதோ:

ராவணனின் ஸாம கானம் வந்த போது, அவருக்கு அந்த வரிகள் நினைவுக்கு வரவில்லை. யோசித்து, 'யாருக்கு இது தெரியப் போகிறது?', என்று நினைத்து, வேறு எதையோ அதன் இடத்தில் வாசித்து நிறைவு செய்துவிட்டார். 

பெரியவா வீணையை வாங்கி வாசித்தது அதே பாடலைத்தான். மாற்றிய வரிகளின் இடத்தில் எவை வர வேண்டுமோ, அவற்றையே சரியாக வாசித்துக் காட்டினார். இதைப் புரிந்து கொண்டார் என்று அறிந்த வீணை வித்வான் வேறு என்ன செய்வார்? 

'யாருக்குத் தெரியப் போறது? ன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர். அவருக்கு தெரியும்ன்னு தோணாமப் போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன்!', என்று நண்பரிடம் சொல்லி அழுதார் வித்வான்.


[Thanks to Amritha Vahini 21.09.2013]

oooooOooooo

[ 2 ]

 பர்மாவைச் சேர்ந்த கோடீஸ்வருருக்கு 
புத்தராகக் காட்சியளித்த மஹாபெரியவா

1907 இல் பெரியவா பீடாதிபத்தியம் ஏற்ற போதிலும் காஞ்சியிலுள்ள ஸ்ரீ மடத்தில் முதல் வ்யாஸபூஜை செய்தது 1953 இல்தான் . அதனை சேர்ந்து வந்த சாதுர்மாஸ்ய மாதத்தின் போதும் அது முடிந்த பிற்பாடும்கூட பல மாதங்கள் மௌனம் பூண்டிருந்தார் . அதில் பெரும்பாகம் காஷ்ட மௌனம்.அதாவது சிறிய அசைவும் இல்லாமல் கட்டையை போல் சமைந்திருப்பார். 
இச் சமயம் பார்த்து பர்மாவைச் சேர்ந்த ஒரு கோடிஸ்வரர் தரிஸனத்திற்கு வந்தார். பௌத்த மதத்தில் தீவிர அனுஷ்டானமுள்ள அவருக்கு ஆன்மிக விஷயமாக ஒரு சந்தேகம். அது பெரியவாளாலேயே தீரும் என்று சமிக்ஞை பெற்று தான் காஞ்சிக்கு வந்திருக்கிறார். பெரியவாளானால் கண் கொட்டாமல், மூச்சு விடுகிறாரா என்று கூட தெரியாமல், சிலையாக இருக்கிறார்.
பர்மியர் கூறியதை அவர் காதில் வாங்கியதாகவே குறிப்பு காணோம்.
பர்மியரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். 
அந்நாள் ஸ்ரீமடத்தின் மேனேஜர் C.S. விஸ்வநாத ஐயர் ... அவர் வெள்ளை மனதுடன் சொல்லுவார் : ” என்னால் தான் பொறுத்து கொள்ள முடியவில்லை. விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அந்த பர்மாகாரன் எத்தனை ஏக்கமும் துக்கமுமாயிருக்கிறான் என்று ஒரு பக்கம். இன்னொரு பக்கம், கோடீஸ்வரனாய் இருக்கிறானே, வந்த காரியம் அனுகூலமானால் நம்ம கஜானாவை ரொப்பி விடுவானே. இந்த எஜமானரானால் இப்படி பண்ணுகிறாரே என்று எத்தனையோ முட்டி கொண்டு பார்த்தேன். ஒன்றும் அந்த காஷ்டத்திடம் பலிக்கவில்லை !”
தவியாய்த் தவித்துப்போய், வேண்டிய சந்தேக நிவாரணத்தைப் பெறாமலேயே பர்மியர் ஊருக்கு திரும்ப வேண்டிய நேரமும் வந்தது. 

பெரியவாள் சந்நிதியில் இருந்த அளவும் தம்மை அவர் கவனித்ததாகத் தெரியாவிட்டாலும், அந்த சாநித்யமே தமக்கு ஒரு பெரும் சாந்தியூட்டியதாக ஸ்ரீ மடத்தினரிடம் அந்த பர்மியர் கூறிக்கடைசியாக ஒரு தரிஸனம் செய்யச் சென்றார்  – மடத்தின் கஜானாவையும் ஓரளவு நிரப்பிவிட்டு .
பெரியவாள் நேராக அவரை நோக்கினார். பல காலமாகப் புறப்பொருள் எதையும் உற்று நோக்காதிருந்த திருநயனங்களில் சூரியனின் ஒளியும் சந்திரனின் குளுமையும் கலந்து நர்த்தனமிட்டன .
பர்மியர் பரவசமானார். அழுதார் , சிரித்தார் ! ஆடினார் , பாடினார் ! பன்முறை பணிந்தெழுந்தார் .
சரேலென பெரியவாளை மிகவும் சமீபித்து, அவருடைய காதோடு காதாக ஏதோ விம்மி விம்மிக் கூறினார்.
பல காலமாக நெகிழாதிருந்த திரு அதரங்கள் தாமரை மலர்வதைப்போலத் திருநகை புரிந்தன .
பூமியில் கால் பாவாமலே பர்மியர் ஆனந்தமாக அகன்றார். அவருடைய இதய கஜானா நிரம்பிவிட்ட இறுமாப்பு இது !
மாதங்கள் கடந்து பெரியவாள் பேச்சுலகுக்குத் திரும்பினார்.
ஸ்வாதீன பக்தர்கள் சிலர் அன்று பர்மியர் அழுது சிரித்து ஆடி பாடும் படி என்ன நேர்ந்தது என்று அவர் சொல்லித்தானாக வேண்டுமென்று அடம் பிடித்தனர் .
அவரும் அதற்கும் மேல் அடம் பிடித்தார். அது பற்றி சொல்லவதில்லை என்று.
“அவனுக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு எப்படித் தெரியும் ? அவனையே போய் கேட்டுக்கோங்கோ !” என்றார்.
”சரி, பெரியவா காதுலே அவர் என்னமோ சொல்லி, பெரியவா அதை அங்கீகாரம் பண்ணிண்டு சிரிச்சேளே ! அதுவாவது என்னன்னு பெரியவா சொல்லலாமே !” என்றார் அவர்களில் ஓர் அதி ஸ்வாதீன அடியார்.
”அதுவா?” என்று பெரியவாள் சட்டென்று விஷயத்தைக் கொட்டி விட்டார். குறும்பு கொப்பளிக்க ”பொழுது விடிஞ்சு பொழுது போனா நான் யாரைக் கண்டனம் பண்றேனோ அந்த புத்தரைச் சொல்லி “அவர் நீதான்!” ன்னுட்டுப் போய்ட்டான் !”


 
சங்கர மடத்தின் ஜகத்குருவாக இருந்து கொண்டு எவரைக் கண்டித்திருக்கிறாரோ அவராகவே தரிசனமும் உள் அனுபவமும் தருகிறார் ஒரு தனி ஜீவனுக்கு குருவாகும்போது.

[ “அமுதசுரபி புத்தகத்திலிருந்து ” –  ஸ்ரீ ரா.கணபதி  ]
 [Thanks to Sage of Kanchi 15.11.2013 ]

oooooOooooo

[ 3 ]

உபாசனா தெய்வம் 
ஒன்னோட பேசும். 
என்ன? புரிஞ்சுதா? 



பெரியவாளுடைய இந்த அறிவுரை நம் எல்லோருக்கும் ஒரு சம்மட்டி அடி !


சிமிழி பிரஹ்மஸ்ரீ வெங்கட்ராம சாஸ்த்ரிகள் பெரியவாளுடைய அன்புக்கும் அபிமானத்துக்கும் ரொம்ப அருகதை உடையவர். அப்படியொரு அனுஷ்டானம் ! பெரியவாளிடம் பக்தி!

அவர் மறைந்ததும், அவருடைய பிள்ளைக்கு பால்யத்திலேயே ரெண்டு சன்யாசிகள் மூலமாக தேவி உபாசனை உபதேசிக்கப்பட்டது. பல ஆண்டுகள் உபாசித்தும் “உபாசனையில் வாக்கு, சரீரம் ரெண்டும் ஈடுபடர அளவு, மனஸ் ஈடுபட மாட்டேங்கறது. அதனால மனசுக்கு சாந்தி கெடைக்கவேயில்லை” என்ற இந்த உண்மையான எண்ணம் ரொம்ப வலுத்துக் கொண்டே போனது. பல வழிகளை கையாண்டும் ஒன்றும் பிரயோஜனமில்லை. பெரியவா மட்டுமே இதற்கு வழி காட்டமுடியும் என்ற நம்பிக்கையில் பெரியவாளிடம் வந்தார்.

கார்வேட் நகரில் ஒரு குளக்கரையில் அழகாக வேய்ந்திருந்த ஒரு சிறு கொட்டகையின் வாசலில் அமர்ந்திருந்தார். எத்தனைதான் அறிமுகம் இருந்தாலும், பூர்வர்கள் யார் யார் என்பதெல்லாம் தெரியாதது மாதிரி கேட்டுக் கொள்வார். நாம் இன்னாரது வம்சத்தில் வந்திருக்கிறோம் என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதை அவர் மிகவும் விரும்புவதாக இருக்கும். இந்த உபாசகரும் தான் சிமிழி சாஸ்த்ரிகள் பிள்ளை என்று சொல்லிவிட்டு, தன் மனஸ் படும் கஷ்டத்தை சொல்லி, வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினார். அப்போது நடந்த சம்பாஷணை………..

“தேவி உபாசனை பல வர்ஷங்களா பண்ணிண்டு இருக்கேன். ஆனா, மனஸ் துளிகூட ஈடுபடலை. ரொம்ப உறுத்தறது. எனக்கு ஒரு வழி காட்டணும் பெரியவா”

என்ன சொல்றே? அதனால என்ன தப்பு?”

“மனஸ் தனி வஸ்துவா இருக்கறதால, பூஜை முழுமையாகாத மாதிரி இருக்கு”

“அதுக்கு நா என்ன பண்ணறது?”

“மனஸ் ஈடுபட ஒரு வழி காட்டணும்”

“என்ன படிச்சிருக்கே?”

…………சொன்னார்.

“இத்தனை படிச்சும், ஒனக்கு விவேகமில்லே! ஒன் மனஸை நா திருத்த முடியாது”

“என்னாலேயே என்னை திருத்திக்க முடியலை. அதான் பெரியவாட்ட வந்தேன்”

“என்னை என்ன செய்ய சொல்றே?”

“மனஸ் சாந்தி அடையணும்”

நீ என்ன பூஜை பண்றே?”

“அம்பாளை படத்துலேயும், விக்ரஹத்துலேயும், யந்த்ரத்துலேயும் பூஜை பண்ணறேன்”

“ரொம்ப சரி. படத்ல அம்பாள் இருக்கறதா நெனச்சுதான பூஜை பண்றே?”

“ஆமாம்”

“அப்போ…….இந்த கொறையைக் கூட அவகிட்டயே சொல்லியிருக்கலாமே? நெறைய படிச்சிருக்கே. படம், விக்ரஹம், யந்த்ரம்….ன்னு எல்லா எடத்துலேயும் அவ இருக்கறதா பூஜையும் பண்றே. ஆனா, ஒண்ணுலயும் ஒனக்கு பிடிப்போ, நம்பிக்கையோ இல்லை. அம்பாள் ஓங்காத்துலேயே, ஒன் பக்கத்துலேயே இருக்கறச்சே, ஒன் கொறையை அவட்ட சொல்லி அழத் தெரியலையே! இனிமே அவகிட்டயே சொல்லி அழு! இங்க வராதே. நான் என்ன பண்ண முடியும்?”

மிகவும் சூடாக பதில் வந்ததும், உபாசகர் விக்கித்து நின்றார். மனஸ் இந்த பேரிடியை தாங்கமாட்டாமல், கண்களில் ஜலம் முட்டி நின்றது. நமஸ்காரம் பண்ணிவிட்டு உத்தரவு வாங்கிக் கொள்ள யத்தனித்தார். அம்பாள் மனஸ் இறங்கினாள்………..

“ரொம்ப கோவிச்சுண்டுட்டேனா ! நீயே ரொம்ப ஆசையா அம்பாளை உபாசனை பண்றே! மனஸ் ஈடுபடலை..ன்னு ஒனக்கே தெரியறது. உபாசனை…ன்னா சமீபத்ல இருக்கறதுன்னு அர்த்தம். ஒனக்கு எப்பவுமே பக்கத்ல இருக்கறவள் கிட்டே ஒன்னோட கொறையை சொல்லாம, நீட்டி மொழக்கிண்டு எங்கிட்ட வந்தியே!…ங்கறதாலதான் கொஞ்சம் அப்பிடி ஒரைக்கறா மாதிரி சொன்னேன்.

இனிமே………. என்ன கொறையானாலும், எதுக்கும் அவளைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது ! நீ பூஜை பண்ற தெய்வத்துகிட்ட, அது அம்பாளோ, சிவனோ, விஷ்ணுவோ, பிள்ளையாரோ…. யாரா இருந்தாலும் சரி, அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும். உன் உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?…….. நம்பிக்கைதான் எல்லாம். அவளோட அனுக்கிரகம் ஒனக்கு நிச்சயமா உண்டு! கவலைப்படாதே….. க்ஷேமமா இரு!” என்று அபயஹஸ்தம் “கொடுத்தாள்” !

இனி ?…………. எனக்கென்ன மனக்கவலை? என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை.


Thanks to Varagooran Narayanan and to 
Mr M.J.Raman [Manakkal] 
for sharing this on 21.12.2013

oooooOooooo

[ 4 ]


வெள்ளரிப்பழ முக்தி.


மாயையை விட்டு ஞானி விலகுகிறான் என்று இல்லாமல் ஞானியை விட்டே மாயை விலகுகிறது. 

இந்த விஷயம் த்ரயம்பக மந்திரத்திலும் சொல்லப் பட்டிருக்கிறது. 


பந்தத்திலிருந்து உர்வாருகம் மாதிரி விடுபட வேணும் என்று முக்கண்ணனான பரமேச்வரனைப் பிரார்த்திக்கும் மந்த்ரம் அது. 


பந்தம் என்பது ஸம்ஸார மாயை. 

அதுதான் த்வைத இந்திர ஜாலம். 

உர்வாருகம் என்பது வெள்ளரி.



வெள்ளரிப் பழம் மாதிரி விடுபட வேண்டும் என்றால் என்ன? 

அந்தப் பழம் முற்றிக் கனிந்த பிறகும் மற்ற பழங்கள் மரத்திலிருந்து விழுவதுபோல் விழுவதில்லை. ஏனென்றால் அது பழுப்பது, காய்ப்பது எல்லாமே மரத்தில் இல்லை கொடியில்தான். வெள்ளரி என்பது கொடியே தவிர செடியோ மரமோ இல்லை. அந்தக் கொடியையும் பந்தல் போட்டு படர விடும் வழக்கம் கிடையாது. 



முழுக்க பூ ஸ்பரிசம் இருந்தால்தான் அந்தக் கொடியின் வளர்ச்சிக்கு நல்லது என்பதால் நிலத்திலேயேதான் படர விடுவது வழக்கம். 

அதனால், ஒரு வெள்ளரிக்காய் நன்றாகக் கனிவதும் நிலமட்டத்தில்தான். 

இப்படி பழம் முற்றி கனிந்தவுடன் காம்பு, தானே இற்றுப் போய்விடும். 

ஆனாலும் பழம் இருந்த இடத்திலேயேதான் இருக்கும். 

ஏனென்றால் அதுதான் விழ முடியாமல் நில மட்டத்திலேயே இருக்கிறதே! 

கொடி படர்ந்து கொண்டே இருக்கும். 

அப்போது பழம் எந்த இலைப்பாகத்தோடும் காம்போடும் ஒட்டிக் கொண்டிருந்ததோ அவையும் சற்று தள்ளி நகர்ந்து போய்விடும். 

அதாவது, காம்புதான் இதை விட்டு விலகிற்றே தவிர, இது விலகுவது, விடுபடுவது என்பது இல்லையே.



இதே போலத்தான், ஞானி சம்ஸார பந்தத்திலிருந்து விடுபடுவது என்பது. 

அது ஒரு விருட்சம் மாதிரியும், இவன் அதில் முற்றிப் பழுத்து விழுவது மாதிரியும் இல்லை. ஞானத்தில் அவன் பழுத்த பழமான பின்னும், அவன் இருந்தபடியேதான் இருப்பான். வெளியிலே அவன் செயலாற்றினாலும் உள்ளே சலனமே இல்லாமல்தான் இருப்பான். ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு அப்புறம் மோட்சம் என்று எங்கேயோ ஓர் உலகத்துக்குப் போவது என்பதே அவனுக்கு இல்லை.



துவைதிகள்தான் அப்படி எங்கேயோ உள்ள ஒரு மோட்சத்துக்குப் போவது. 

அத்வைத ஞானி இங்கேயே, இந்த லோகத்திலேயே, சரீரத்திலே இருப்பதாகத் தெரியும்போதே, ஆத்ம சாட்சாத்காரம் பெற்றவன். அதுதான் விடுபட்ட நிலையான மோட்சம் என்பது. 

விடுபட்ட என்றாலும், இவன் ஒன்றும் விடுபடும் காரியம் பண்ணவில்லை. 

இவன் பண்ணியது ஆத்மாவே குறியாக விசாரம் செய்ததுதான். 

அதனால் சாட்சாத்காரம் வந்து, தான் ஆத்மாவே என்று தெரிந்து கொண்டு அதுவாகவே இருப்பான். 

அப்போது பந்தம், சம்ஸார மாயை என்பது அதுவே கத்தரித்துப் போய்விடும்.



துவைதம் நகர்ந்து ஓடிப் போய்விடும். 

வெள்ளரிப்பழம் பூமியிலே இருப்பதுபோல இவனும் லோகத்தில் முன்பு எங்கே இருந்தானோ அங்கேயே ஜீவன்முக்தன் என்ற பெயரில் தொடர்ந்தும் இருந்து கொண்டிருப்பதாகத் தெரியும். 

ஆனாலும் லோகத்தில் தனி ஜீவ மனஸின் வாழ்க்கை என்று வேரோடிப் படர்ந்திருந்த ஒரு கொடியோடு இவனுக்கு முன்பு இருந்த பிணைப்பு இப்போது கத்தரித்துப் போயிருக்கும். 

இவனாக விடுபடாமலே, இவனை விடுவித்துவிட்டு, அது ஓடிப் போயிருக்கும். இதுதான் வெள்ளரிப்பழ முக்தி.


- காஞ்சி ஸ்ரீ மகாபெரியவர்


[Thanks a Lot to Sri Mayavaram Guru and  
our beloved Mr. RISHABAN Srinivasan Sir, 
for sharing this with me on 30.12.2013]



ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


oooooooooooooooooooooooooooooooooo


  




 

சிறுகதை விமர்சனப் போட்டி !


ஆண்டு முழுவதும் பரிசுகள் !

அள்ளிச்செல்ல அன்புடன் வாருங்கள் !!

மொத்த பரிசுத்தொகை  
Minimum: Rs.12,000 
Maximum: Unlimited *
[*Variable according to the number of Participants ]

   

வெற்றிபெற அட்வான்ஸ் 
நல்வாழ்த்துகள் !!!

மேலும் முழு விபரங்களுக்கு

http://gopu1949.blogspot.in/2014/01/blog-post.html



என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்



48 comments:

  1. இல்லாத உயர்வு தாழ்வுகளை கல்பித்துக்கொண்டு சண்டை போடுகிறோம்.

    உண்மைதான். இல்லாததுதான் பொல்லாததாக இந்த உலகின் அமைதியை கெடுத்துக் கொண்டிருக்கிறது

    வித்யா கர்வம் ஏற்படக் கூடாது. கவனமாக இரு',

    வித்தைக்கு மட்டுமல்ல. எதைக் குறித்தும் கர்வம் கொள்ளக் கூடாது.கொண்டால் நமக்குள்ளிருக்கும் கண்ணன் நம் கண்ணை குத்திவிடுவான் என்பதே பாகவதம் தெளிவாகக் காட்டுகிறது.

    பர்மாவைச் சேர்ந்த கோடீஸ்வருருக்கு
    புத்தராகக் காட்சியளித்த மஹாபெரியவா

    அவரவருக்கு உகந்த வகையிலும் பலருக்கு காட்சி தந்துள்ளார்

    உபாசனா தெய்வம்
    ஒன்னோட பேசும்.

    அந்த அனுபவம் இவனுக்கு நிறையவே உண்டு. ஆனால் இந்த மூடன் என்றும் அதை புரிந்து கொண்டது கிடையாது.அதனாலே இவன் பட்ட துன்பங்களும் இழப்புகளும் எண்ணற்றவை. இருந்தாலும் இவனை அவன் கைவிட்டதில்லை
    31 ஆம் தேதி நடந்த இந்த சம்பவமே இதற்க்கு சாட்சி.

    வெள்ளரிப்பழ முக்தி.

    அருமையான விளக்கம்

    அருமையான பதிவு. நன்றி vgk

    ReplyDelete
  2. கர்வம் ஏற்படக் கூடாது - அதற்கான காரணமும், வெள்ளரிப்பழ முக்தி விளக்கமும், மற்ற அனைத்தும் மிகவும் அருமை ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வித்தைக்கு மட்டுமல்ல. எதைக் குறித்தும் கர்வம் கொள்ளக் கூடாது
    நன்றி ஐயா

    ReplyDelete
  4. ஸ்ரீ மஹாபெரியவாளின் திருவடிகளைப் போற்றி, தாங்கள் செய்து வரும் சேவை போற்றத் தகுந்தது.. வாழ்த்துவதை விடவும் வணங்குவதே முறையானது என்று தோன்றுகிறது. வணங்குகிறேன் ஐயா!

    ReplyDelete
  5. //சீர்திருத்தம் என்று ஆரம்பிக்கிறோம். இப்படிச்சொல்லிக்கொண்டே சீர்திருத்தக்காரர்கள் என்று அடையாளம் தெரிவதற்காக ஒரு குல்லா போட்டுக்கொள்கிறோம் அல்லது ஏதாவது ஒரு கலரில் சட்டை துண்டு போட்டுக்கொள்கிறோம். இவற்றிற்கு தெய்வத்திற்கு மேலான முக்கியத்தைத் தருகிறோம்//

    அதானே, அழகாகச் சொல்லியிருக்கிறார் பெரியவர்.

    சம்பவங்கள் மனதைத் தொட்டன. வெள்ளரிப்பழ முக்தி விளக்கம் அருமை.

    ReplyDelete
  6. அன்பின் வை.கோ. சார்,

    அருமையான பதிவு. 'வித்யா கர்வம் ஏற்படக் கூடாது. கவனமாக இரு', மெய் சிலிர்க்கச் செய்த அனுபவம்!!

    மீண்டும், மீண்டும் வாசிக்கத் தூண்டும் அனுபவங்கள்! வாழ்த்துகள் சார்.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  7. எத்தனை எத்தனை சம்பவங்கள்..... ஒவ்வொன்றும் சிறப்பான அறிவுரையை நமக்குத் தரும் சம்பவங்கள்.

    உங்களுக்குத் தெரிந்தவற்றை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டு வருவதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete

  8. ஞானத்திற்கும்,கானதிர்க்கும் உரியவள் சரஸ்வதி
    "சந்திரசேகர சரஸ்வதிக்கு"-வீணை வாசிக்க சொல்லியா தரவேண்டும்?
    பர்மாகாரருக்கு 'புத்தராக தெரிந்தார்:வைஷ்ணவருக்கு 'விஷ்ணுவை'காட்டினார்.
    பெரியவாளை வம்புக்கு இழுத்து,வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்த
    ஒரு கிருஸ்துவ பாதிரியாரை பற்றி,ஒரு சம்பவத்தை எப்போதோ படித்தது என்
    நினைவுக்கு வந்தது..மனசில் கவிதை போல ஒன்று உருவானது..இதோ அது:
    பிடிச்சிருக்கா ????
    வேற்று சமயம் சார்ந்த
    வேதியர் ஒருவர்
    தாம் சார்ந்திருக்கும்
    சமயத்தின் கொள்கைகளே
    உலகில் உயர்ந்ததென
    உயர்த்தி கொடிபிடிக்க
    வேண்டுமென்ற நினைப்போடு
    மாற்று குறையா நம்
    மஹாபெரியவா முன்நின்று
    வாது செய்து இவரை
    வென்று வாகை சூட வேண்டுமென்w
    சூது மனத்தில் கொண்டு
    கரன்யாசாம் செய்வது போல்
    கூட்டல் கூறிதானுமிட்டு
    "அன்பே பிரதானம்"எனும்
    கொள்கையே எங்கள்
    உயிர் மூச்சு..உலகில்
    வேறெங்கும் இதுபோன்ற
    சமயநெறி உண்டோ?
    உண்டானால் உணர்த்துங்கள்...
    அடக்கத்தை பறக்கவிட்டு
    அடாவடியாய் கேட்ட அந்த
    வேற்றுமதகாரருக்கு வேதமே
    வடிவாய் வந்த வேதநாயகன்
    சற்றே சிரித்துப் பின்
    சாந்தமாய் பதிலுரைத்தார்...
    "அன்பேசிவம்"என்போம்
    நாங்கள்..அன்னயின்
    அன்புக்கு ஈடில்லை
    அதனால்தான்...சிவ
    வைணவ நெறி இரண்டிலுமே
    அம்பாள்,தாயார்
    அடிதொழல் முதலில், மேலும்
    திருமூலர்என்ற சித்தர்ஒருவர்
    'அன்பை பற்றி"நம்மீதே உள்ள
    'அன்பினால் பற்றி'
    இருபது பாடல் இயற்றினார் தானே
    இருபதில் ஒன்றை
    சொல்கிறேன் கேட்பீர்...
    "அன்பு சிவன் இரண்டு என்பர் அறிவிலார்
    அன்பே சிவாமாவததை யாரும் அறிகிலார்
    அன்பே சிவம் ஆவதை அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே"
    எல்லா சமய கொள்கைகளுக்கும்
    தாய்தான் எங்கள்
    சனாதன தர்மம்
    அதனடிப் பற்றி
    கிளைத்தது தானே
    உலகில் உள்ள
    எல்லா சமயமும்..
    "துஷ்டன் ஆயினும்
    துர்மார்க்கன் ஆயினும்
    கஷ்டம் நஷ்டம்
    அனைத்தயும் தாங்கி
    இஷ்டமுடனே இன்முகதோடே
    என்றும் ஏற்பவள்
    நம் அன்னை அன்றோ..
    அதைதான் சொன்னேன்
    "அம்பாள் தாயார்
    அடித்தொழல் எங்கள்
    தனிச் சிறப்பென்று.
    ஞாலத்தில் உள்ள
    எல்லா சமயமும்
    தோன்றியதெப்படி
    தொல்வரலாற்றினை
    தேதிப்படியே திறம்பட
    உரைத்திட தோன்றிய
    வரலாற்று அறிஞருமுண்டு
    ஆனால் இதுவரை
    இம்மதம் எப்படி
    தோன்றியதென்பதை
    துல்லியமாக சொல்பவர் இல்லை
    தோராயமாக சொல்பவர் கூட
    பல லட்சம் ஆண்டுக்கு
    முன்னால் என்பர்
    காலமனைத்தயும் கடந்து நிற்பதால்
    ஞாலத்தில் இதுவே முதலிது
    என்பதை உணர்வீர்..
    இன்னும் இனிப்பாய்
    ஒன்றை சொல்கிறேன்
    கசப்பை மறந்து
    காதை கொடுப்பீர்..
    உங்கள் மதத்து
    கடவுள் தன்னை
    "கர்த்தர்" என்றே
    காதலால் அழைப்பீர்
    அதற்கும் முன்பே
    இவ்வன்டம் தோன்ற
    காரணமான பரிபூரனன் தன்னை
    "கரணம் காரணம்
    கர்த்தா விகர்த்தா" என
    விஷ்ணு சகஸ்ரநாமத்திலே உண்டு
    'வின்டு வின்டு'சொன்ன
    இந்த விடயை கேட்டபின்னாலே
    நண்டு வலயிலே
    காலை நுழைய்திட்ட
    உண்டு கொழுத்த நரி
    விழித்த கதை போல
    பேந்த விழித்த பாதிரியார்
    தனை நோக்கி
    சாந்த முகத்தோடு
    நோக்கி அதன் பின்னர்
    பாந்தமாக பழங்களையும்
    கொடுத்து விட்டு
    "சென்று வாருங்கள்"
    என விilயும் தந்தார்...
    தளர்ந்த நடையோடு சில
    தப்படிகள் நடந்த பின்னர்
    திரும்பிப் பார்க்கயீலே
    "பெரியவா அங்கில்லை "
    கருணை பொழிகின்ற
    கண்களோடு ஆங்கே
    "கர்த்தர்"தாமே
    இருப்பதைக் கண்டார்.

    ReplyDelete
  9. யாருக்குத் தெரியப் போறது? ன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர். அவருக்கு தெரியும்ன்னு தோணாமப் போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன்!', என்று நண்பரிடம் சொல்லி அழுதார் வித்வான்.//
    வித்வானுக்கு புரிய வைக்க அழகாய் வாசித்து புரிய வைத்த மாஹனுக்கு தெரியாமல் போகுமா!

    பர்மியர்அனுபவம் அருமை.

    ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும்.//
    நம்பிக்கையைப் பற்றி அழகாய் சொல்கிறார். மிக அருமை.

    வெள்ளரிப்பழ முக்திவிளக்கம் மிக அருமை.
    நல்ல பகிர்வுக்கு மிக நன்றி.
    வாழ்த்துக்கள்.


    ReplyDelete
  10. வித்யா காவம் ஏற்படுதல் மிக அருவருப்பானது.
    வரைமுறைக் கோடு - ஓழுங்குமுறை என்பவை எவ்வளவு முக்கியம் என்பது மதம் மூலம்
    எடுத்தாளப்பட்டது. அருமை . மிக்க நன்றி.
    இனிய பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. வெள்ளைப்பழ முக்தி கிடைக்கப் பிரார்த்திக்கலாம். கட்டுப்பாடு குறித்த பெரியவரின் விளக்கம் இந்தக்கால இளைஞர்கள் அறிய வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  12. அம்பாள் அருகிலிருப்பதைக் கூட உணரமுடியாத அளவுக்கு இருந்திருக்கிறார். :( ஆசாரியரின் பதில் அருமை. நம்முள்ளேயே கடவுள் இருக்கையிலே எதுக்கு வெளியே தேடணும்?

    ReplyDelete
  13. அவரவர் மத சின்னங்களை கண்டிப்பாக அணியவேண்டும்.நீரில்லாநெற்றி பாழ் .புத்தன் ,ஏசு,சிவன்,விஷ்ணு,அனைத்துமாக அவரவர் மனசுக்குள் தோன்றி அருளிய பெரியவாள்திருவடிகள்போற்றி.வித்யாகர்வம் எப்பவுமே கூடாது. உபாஸனை செய்யும் தெய்வத்திடம் நாம் மனமுருகினால் மனசுக்கு அமைதி , சிக்கலுக்கு வழி பிறக்கும்.சத்தியமானவாக்கு.உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்‌ஷீய மாம்ருதாத்,விளக்கம் தெரிந்துகொண்டேன்.மிக்க நன்றி

    ReplyDelete
  14. அன்பின் வை.கோ

    சின்னங்கள் அருமை -மதச்சின்னம் பற்றிய விளக்கமும் - அதனைப் பயன்படுத்த வேண்டிய அவசியமும் விவரைக்கப்ப்ட்டிருப்பது அருமை. அனைவருக்கும் தெரிந்ததே ! இருப்பினும் பல்வேறு காரணக்களுக்காக - கடைப் பிடிக்கப் படவில்லை. - நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும், நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  15. அன்பின் வை.கோ - வித்யா கர்வம் ஏற்படக் கூடாதென்பதை விளக்கும் வண்ணம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா வீணையை வாசித்து வித்வானுக்கு விளக்குகிறார். வித்வானும் திருந்துகிறார். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  16. அன்பின் வை.கோ - பெரியவா பீடாதிபதி ஆகி 46 ஆண்டுகள் கழித்துத்தான் காஞ்சி மடத்தில் வ்யாஸ பூஜை செய்கிறார். அதன் பின் ப்ல மாதங்கள் காஷ்ட மௌனத்தில் இருக்கிறார். இச்சமயம் அவரைத் தரிசிக்க பர்மாவில் இருந்து ஒரு கோடீஸ்வரர் ஆன்மீகம் பற்றிய ஒரு ஐயம் தீர்க்க வருகிறார்.

    ஆனால் பெரியவாளோ மௌன விரதத்தி ல் இருப்பதால் அவருக்கு ஐயம் தீர வில்லை.

    பெரியவாள் சந்நிதியில் இருந்த அளவும் தம்மை அவர் கவனித்ததாகத் தெரியாவிட்டாலும், அந்த சாநித்யமே தமக்கு ஒரு பெரும் சாந்தியூட்டியதாக ஸ்ரீ மடத்தினரிடம் அந்த பர்மியர் கூறிக்கடைசியாக ஒரு தரிஸனம் செய்யச் சென்றார்


    அப்பொழுது பெரியவாளின் காதில்பர்மியர் ஏதோ கூறிச் சென்றார்.

    அது என்ன வென்று மடத்தில் இருந்தவர்கள் எல்லாம் கேட்ட போது பெரியவா - பொழுது விடிஞ்சு பொழுது போனா நான் யாரைக் கண்டனம் பண்றேனோ அந்த புத்தரைச் சொல்லி “அவர் நீதான்!” ன்னுட்டுப் போய்ட்டான் !”

    அவர்தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா - சங்கர மடத்தின் ஜகத்குருவாக இருந்து கொண்டு எவரைக் கண்டித்திருக்கிறாரோ அவராகவே தரிசனமும் உள் அனுபவமும் தருகிறார் ஒரு தனி ஜீவனுக்கு குருவாகும்போது. மகாப் பெரியவா மகாப் பெரியவா தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா


    ReplyDelete
  17. இது வெறும் ஸமூகக் கட்டுப்பாட்டுக்காக மட்டும் சொன்னதல்ல.

    இவை ஒவ்வொன்றிலும் ஜீவனை பரிசுத்தி பண்ணுகிற சூக்ஷ்மமான அம்சமும் உண்டு.


    தர்ம சாஸ்திரங்கள் சொல்லும் கட்டுப்பாடுகளின் உயர்வை அருமையாக விளக்கிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  18. நெறைய படிச்சிருக்கே. படம், விக்ரஹம், யந்த்ரம்….ன்னு எல்லா எடத்துலேயும் அவ இருக்கறதா பூஜையும் பண்றே. ஆனா, ஒண்ணுலயும் ஒனக்கு பிடிப்போ, நம்பிக்கையோ இல்லை. அம்பாள் ஓங்காத்துலேயே, ஒன் பக்கத்துலேயே இருக்கறச்சே, ஒன் கொறையை அவட்ட சொல்லி அழத் தெரியலையே! இனிமே அவகிட்டயே சொல்லி அழு! இங்க வராதே. நான் என்ன பண்ண முடியும்?”

    இருக்கும் இடத்தை விட்டு
    இல்லாத இடம் தேடி எங்கெங்கோ
    அலையும் மனதை கடிவாளமிட்டுத்திருப்பும்
    உன்னத வழிகாட்டியாக சிறப்பான பகிர்வுகள்..!

    ReplyDelete
  19. இவனாக விடுபடாமலே, இவனை விடுவித்துவிட்டு, அது ஓடிப் போயிருக்கும். இதுதான் வெள்ளரிப்பழ முக்தி.

    அருமையான விளக்கம் ..

    ReplyDelete
  20. சங்கர மடத்தின் ஜகத்குருவாக இருந்து கொண்டு எவரைக் கண்டித்திருக்கிறாரோ அவராகவே தரிசனமும் உள் அனுபவமும் தருகிறார் ஒரு தனி ஜீவனுக்கு குருவாகும்போது.

    ஆத்மார்த்தமான வழிகாட்டி ..!

    ReplyDelete
  21. வாசித்து முடித்த பின் பெரியவா வீணையை திருப்பிக் கொடுத்தார். 'வித்யா கர்வம் ஏற்படக் கூடாது. கவனமாக இரு', என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு, திரையைப் போட்டுக்கொண்டார்!"

    சர்வக்ஞரின் முன் கர்வம் தவிடுபொடியாகிய சம்பவம் சிந்திக்கத்தகது..!

    ReplyDelete
  22. வித்யா கர்வம் எத்தனை மோசமானது என்பதை நொடி நேரத்தில் புரிய வைத்து விட்டாரே மகா பெரியவர். வேண்டுவோர்க்கு வேண்டியபடி காட்சி கொடுத்திருக்காரே பர்மாகாரருக்கு .
    நம் அருகிலேயே இருக்கும் கடவுளிடம் நம் கோரிக்கைகளை சொல்லலாமீ என்பது எவ்வளவு பெரிய உபதேசம்.வாழ்த்துக்கள் கோபு சார்.

    ReplyDelete
  23. கர்வம் எந்த விதமாகவும் கூடாது. வித்யா கர்வமும் அதற்கு விலக்கல்ல. வீணையை எங்கு பயின்றார்? யோசிக்க வைக்கிறது.
    நாம் வணங்கும் தெய்வத்திடமே கோரிக்கை நியாயமான முறையில் வைத்தால் போதும். யாருடைய ரெகமடேஷனும் வேண்டாம். இது மிகவும் முக்கியமானது. பர்மாகாரருக்கு புத்தராகவே காட்சி கொடுத்தது எல்லாவற்றையும் விட மேல்.
    உயர்வும் தாழ்வும் ஏது. மனித உலகில் பிறந்த குணம்தானிது.
    எல்லாம்ஸரி. நடைமுறைப்படுத்த மஹா பெரியவாதான் துணை செய்யணும். அன்புடன்

    ReplyDelete
  24. அன்பின் வை.கோ

    //
    உபாசனா தெய்வம் - ஒன்னோட பேசும்.- என்ன? புரிஞ்சுதா?
    //

    அருமையான வரிகள் - நன்று நன்று

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  25. அன்பின் வை.கோ

    வெள்ளரிப்பழ முக்தி. - பதிவு அருமை

    //
    மாயையை விட்டு ஞானி விலகுகிறான் என்று இல்லாமல் ஞானியை விட்டே மாயை விலகுகிறது.
    //

    சிந்தனை அருமை - நன்று நன்று

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  26. அன்பின் வை.கோ

    சிறுகதை - விமர்சனப் போட்டி - அருமை அருமை

    டும்டும்டும்டும் - படித்து விடுகிறேன்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  27. வித்யா கர்வம் கூடாது என்ற சம்பவம், வெள்ளரிப்பழ முக்தி என அனைத்தும் சிறப்பானவை..

    ReplyDelete
  28. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! இந்த பதிவில் சில விஷயங்களை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. நேரம் இருக்கும் போது மீண்டும் படிக்க வேண்டும்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  29. இப்படி பழம் முற்றி கனிந்தவுடன் காம்பு, தானே இற்றுப் போய்விடும்.
    ஆனாலும் பழம் இருந்த இடத்திலேயேதான் இருக்கும்.
    ஏனென்றால் அதுதான் விழ முடியாமல் நில மட்டத்திலேயே இருக்கிறதே!
    கொடி படர்ந்து கொண்டே இருக்கும்.அப்போது பழம் எந்த இலைப்பாகத்தோடும் காம்போடும் ஒட்டிக் கொண்டிருந்ததோ
    அவையும் சற்று தள்ளி நகர்ந்து போய்விடும். அதாவது, காம்புதான் இதை விட்டு விலகிற்றே தவிர, இது விலகுவது, விடுபடுவது என்பது இல்லையே.
    இதே போலத்தான், ஞானி சம்ஸார பந்தத்திலிருந்து விடுபடுவது என்பது. //என்ன ஒரு எளிமையான விளக்கம்!
    //வாசித்து முடித்த பின் பெரியவா வீணையை திருப்பிக் கொடுத்தார். 'வித்யா கர்வம் ஏற்படக் கூடாது. கவனமாக இரு', என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு, திரையைப் போட்டுக்கொண்டார்!"// பெரியவா ஸர்வக்ஞர். அவரிடம் இஅப்படிச் செய்யலாமா? அருமையான பதிவுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  30. சின்னங்கள்

    சின்னங்களை அணிந்து கொண்டால் மட்டும் போதாது

    அந்த சின்னங்களுக்குள்
    ஒளிந்துகொண்டிருக்கும் உண்மைகளை அறிந்து கொள்ள வெண்டும்

    நம்மை சிறுமைப்படுத்தும் சின்னத்தனமான செயல்களை விடவேண்டும்.

    சின்னங்களுக்கு ஆதாரமான் தெய்வங்களை சிந்தனை செய்யவேண்டும்.

    அப்போதுதான் சின்னங்களை அணிவதற்கு அர்த்தம் உள்ளது

    ReplyDelete
  31. பெரியவாளின் சிறப்பு பற்றி வெவ்வேறு சம்பவங்கள் மூலம் அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள்!!
    சின்னம் குறித்துக் கூறியுள்ளது இக்காலத்துக்கும் எவ்வளவு பொருந்துகிறது?!!

    ReplyDelete
  32. வீணை வித்வானின் கர்வ பங்கம் எல்லோரையும் சிந்திக்க வைக்கும். யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். கடவுளை?
    பர்மியருக்கு புத்தராகவே காட்சி அளித்த விந்தையை என்ன சொல்ல?
    மதச் சின்னங்கள் குறித்து சொன்னது எக்காலத்திற்கும் பொருந்தும்.

    ReplyDelete
  33. உபாசனா தெய்வம்! கண்ணீர் வரவழைத்தது! வித்யா கர்வம் கூடாது என்ற படிப்பினையை தந்த அனுபவம் அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  34. "கர்வம் ஏற்படக் கூடாது " அதற்கான காரணமும், வெள்ளரிப்பழ முக்தி விளக்கமும், மிகவும் அருமை.

    ReplyDelete
  35. Aha, Ambalin arkamaipttri Periyava sonathu, evvallu osathi. Enakku enakku than intha upadesham.
    Nandri Sir.

    ReplyDelete
  36. "ஓம் த்ரயம்பகம் யஜாமஹேசுகந்திம் புஷ்டி வர்த்தனம்

    உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீயமா ம்ருதாத்…’‘

    பழுத்த வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல் யத்தினமில்லாமல் நான் (ஆத்மா) இந்த உடலிலிருந்து விடுபடவேண்டும். என்ன பேராசை?

    ReplyDelete
  37. பழனி. கந்தசாமி May 20, 2015 at 12:45 PM

    வாங்கோ, வணக்கம் ஐயா.

    "ஓம் த்ரயம்பகம் யஜாமஹேசுகந்திம் புஷ்டி வர்த்தனம்
    உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீயமா ம்ருதாத்…’‘

    //பழுத்த வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல் யத்தினமில்லாமல் நான் (ஆத்மா) இந்த உடலிலிருந்து விடுபடவேண்டும். என்ன பேராசை?//

    2011, 2012, 2013 ஆகிய மூன்றாண்டுகளில் அடியேன் கொடுத்துள்ள {200+116+142} 458 பதிவுகளுக்கும் தொடர்ச்சியாகப் பின்னூட்டங்கள் கொடுத்துவிட்டு, 2014 புத்தாண்டில் முதலடி எடுத்து வைத்திருக்கும் தங்களுக்கு என் வணக்கங்களும், வரவேற்புகளும் சொல்லிக்கொள்கிறேன்.

    இறுதிவரை {31.03.2015 வரையுள்ள அனைத்துப்பதிவுகளுக்கும்} வருகை தந்து புதுப்போட்டியினில் வெற்றிபெற்று பரிசினைப்பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  38. தொடர்ந்து உங்க பதிவுகளை படித்து ரசித்து எனக்கு தெரிந்த வரை சுமாராக பின்னூட்டங்களும் போட்டு வருகிறேன் என் பின்னூட்டங்கள் சின்ன குழந்தையின் கிறுக்கல் மாதிரி மழலையாதான் இருக்கும் அதையும் பெரிய மனதுடன் ஏற்றுக்கொண்டு பதில் கொடுத்து வருகிறீர்கள் சந்தோஷமா இருக்கு. கூடவே தெரியாத பல விஷயங்களும் தெரிஞ்சுக்க முடியறது..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் August 25, 2015 at 9:41 AM

      வாங்கோ .... பூந்தளிர், வணக்கம்மா.

      //தொடர்ந்து உங்க பதிவுகளை படித்து ரசித்து எனக்கு தெரிந்த வரை சுமாராக பின்னூட்டங்களும் போட்டு வருகிறேன்.//

      மிக்க மகிழ்ச்சிம்மா.

      //என் பின்னூட்டங்கள் சின்ன குழந்தையின் கிறுக்கல் மாதிரி மழலையாதான் இருக்கும். அதையும் பெரிய மனதுடன் ஏற்றுக்கொண்டு பதில் கொடுத்து வருகிறீர்கள். சந்தோஷமா இருக்கு.//

      சின்னக்குழந்தைகளின் மழலையான கிறுக்கல்கள் மட்டுமே இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த ஓவியமாக நினைத்து மகிழ்பவன் நான். என் வீட்டுச் சுவர்களில் வந்து பாருங்கோ ... தெரியும்.

      சின்னக்குழந்தைகளான என் பேரன்கள் + பேத்தி, பல காலக்கட்டங்களில் கிறுக்கியுள்ள விலைமதிப்பில்லாத பொக்கிஷமான பல ஓவியங்களைக்காணலாம்.

      அவ்வப்போது அவற்றை போட்டோ பிடித்து பொக்கிஷமாக நான் சேகரித்து வைத்துக்கொள்வதும் உண்டு.

      அதுபோல பள்ளிப்படிப்பில் தமிழே படிக்காத தங்களின் தமிழ்ப் பின்னூட்டங்களும் நான் மிகவும் ரஸித்துவரும் பொக்கிஷங்கள் மட்டுமே என தெரிவித்துக்கொள்கிறேன்.

      //கூடவே தெரியாத பல விஷயங்களும் தெரிஞ்சுக்க முடியறது.. //

      :))))) மிகவும் சந்தோஷம் ..... பூந்தளிர்.

      மிக்க நன்றிம்மா. :)))))

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      Delete
  39. //இப்போது கடைசியில் ஒருத்தருக்கும் ஒரு மதச்சின்னமும் இல்லை என்று ஆக்கிக்கொண்டிருக்கிறோம்.//

    இதையெல்லாம் நிலை நிறுத்த பெண்கள்தான் முயற்சிக்கணும். முதல்ல கொசுப்பொட்டை கொஞ்சம் பெரிசாக்கலாம். என்ன... முதல்ல பொட்டு வெச்சுக்க சொல்லுங்கறேளா அதுவும் சரிதான்.

    // 'யாருக்குத் தெரியப் போறது? ன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர். அவருக்கு தெரியும்ன்னு தோணாமப் போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன்!', என்று நண்பரிடம் சொல்லி அழுதார் வித்வான்.//

    கர்வ பங்கம்.

    ReplyDelete
  40. // சங்கர மடத்தின் ஜகத்குருவாக இருந்து கொண்டு எவரைக் கண்டித்திருக்கிறாரோ அவராகவே தரிசனமும் உள் அனுபவமும் தருகிறார் ஒரு தனி ஜீவனுக்கு குருவாகும்போது.//

    குருவே சரணம்.

    //என்ன கொறையானாலும், எதுக்கும் அவளைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது ! நீ பூஜை பண்ற தெய்வத்துகிட்ட, அது அம்பாளோ, சிவனோ, விஷ்ணுவோ, பிள்ளையாரோ…. யாரா இருந்தாலும் சரி, அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும்//

    அப்புறம் குறையொன்றும் இல்லைன்னு பாட வேண்டியதுதான்.

    //இந்த விஷயம் த்ரயம்பக மந்திரத்திலும் சொல்லப் பட்டிருக்கிறது. //

    தினமும் கார்த்தால வசந்த் தொலைகாட்சியில் காலை 605க்கு த்ரயம்பக மந்திரம் கேட்பேன். ஆனால் இன்றுதான் அதன் அர்த்தம் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 25, 2015 at 10:54 PM / 11.01 PM

      வாங்கோ ஜெயா வணக்கம்மா.

      தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான ஆத்மார்த்தமான, த்ரயம்பக மந்திர அர்த்தம் போன்ற பல கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  41. அந்த குஞ்சு பயபுள்ள படம் இன்னா ஜோராகீது.ரூவா நோட்டெல்லா அளகா அடுக்கி அலங்காரமா வச்சிருக்கீங்கோ. ஆரு தட்டிகிட்டு போக போறாங்களோ.

    ReplyDelete
  42. வெள்ளரிப்பழ முக்தி யாருக்கு கிடைக்கும் எந்த ஊரில் எந்த நாட்டில் வசிப்பவராயினும் பாரபட்சமில்லாமல் அருள் செய்வதே பெரியவாளின் பெருந்தன்மை. முழுமையா அவாளை நம்பினா எல்லாம் சுகமே.

    ReplyDelete
  43. பெரியவர் சரஸ்வதியின் அம்சமும்கூட என்று காட்டிவிட்டார்...

    ReplyDelete
  44. :)
    //
    என்ன கொறையானாலும், எதுக்கும் அவளைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது ! நீ பூஜை பண்ற தெய்வத்துகிட்ட, அது அம்பாளோ, சிவனோ, விஷ்ணுவோ, பிள்ளையாரோ…. யாரா இருந்தாலும் சரி, அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும். உன் உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?…….. நம்பிக்கைதான் எல்லாம். அவளோட அனுக்கிரகம் ஒனக்கு நிச்சயமா உண்டு! கவலைப்படாதே….. க்ஷேமமா இரு!” என்று அபயஹஸ்தம் “கொடுத்தாள்” !//
    மெய்சிலிர்க்க வைத்த வரிகள்! நன்றி!

    ReplyDelete
  45. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (28.09.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://www.facebook.com/groups/396189224217111/


    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete

  46. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (19.03.2020) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=864917450677617


    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete