என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 8 ஜூன், 2011

வ டி கா ல் [ பகுதி 1 of 4 ]


அந்த மனிதருடன் எனக்கு அதிகமாகப் பழக்கமோ அறிமுகமோ இல்லை. ஆனால் நான் அவரை அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். எழுத்தாளனாகிய நான் இரவு வெகு நேரம் விழித்திருந்து அமைதியாக எதையாவது பற்றி சிந்தித்து, மனதில் தோன்றுவதை கணினியில் பதிவு செய்துகொண்டோ அல்லது ஏதாவது நூல்களைப்படித்துக்கொண்டோ இருப்பது வழக்கம். 

அன்றும் அப்படித்தான். இரவு 11 மணிக்கு மேல் இருக்கும். நான் என் கம்ப்யூட்டரில்.  கதவின் வெளிப்புறம் யாரோ நிற்பதுபோல மூடியிருந்த ஜன்னல் கண்ணாடிகளில் நிழல் தெரிந்தது. பிறகு அழைப்பு மணியும் ஒலித்தது. கதவைத்திறந்தேன். அதே மனிதர். நல்ல உயரம். சிவந்த நிறம். வயது ஒரு 80 இருக்கலாம். முகத்தில் பல்வேறு அனுபவச்சுருக்கங்கள். வெள்ளை வேட்டி, வெள்ளையில் முழுக்கை கதர் சட்டை. கை கூப்பி வணக்கம் தெரிவித்தார்.

“வாங்கோ சார்” அமர இருக்கை அளித்தேன். குடிக்க ஃப்ளாஸ்கிலிருந்து மிதமான சூட்டில் சுடுதண்ணீர் அளித்தேன். நன்றியுடன் கூடிய ஒருவித அசட்டுச்சிரிப்பில் வாங்கிக் குடித்தார்.

“கம்ப்யூட்டரில் பிஸியாக ஏதோ வேலை பார்க்கிறீர்கள் போலிருக்கு; தொந்தரவு செய்கிறேனா?” என்றார்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை; சொல்லுங்கோ சார்” என்றேன்.

“உங்கள் சிறுகதைத்தொகுப்பு நூல்களைப்படித்தேன். நன்றாக இருந்தன. அதுதான் நேரில் பார்த்து சொல்லிவிட்டுப்போகலாம் என்று வந்தேன்” என்றார்.

“நான் எழுதிய கதைகளையா? எங்கு படித்தீர்கள்?”

“சிறுகதைத்தொகுப்புகளாக நீங்கள் வெளியிட்ட இரண்டு புத்தகங்கள் என் மாப்பிள்ளையிடம் கொடுத்திருந்தீர்களே!” என்றார். 

இவர் யார் என்றோ, இவர் மாப்பிள்ளை யார் என்றோ எனக்கு ஒன்றுமே புரியவில்லை. புரியாதபடி அவரை ஒரு மாதிரியாகப்பார்த்தேன்.

“கனரா பேங்க் கணபதியோட மாமனார் சார், நான்; சிண்டிகேட் பேங்க் சிங்காரி என்னோட பொண்ணு தான்” என்றார்.

அந்தக்கனரா பேங்க் கணபதியும், சிண்டிகேட் பேங்க் சிங்காரியும் யாராக இருக்கும்? என்று தொடர்ந்து குழம்பினேன் நான்.

என்னைப் பரிதாபமாகப் பார்த்த அவர்.”3C - மூன்றாவது மாடி, மூன்றாவது வீடு” என்றார்.

“ஓஹோ, அப்படியா, ரொம்ப சந்தோஷம்” என்றேன் நான் ஏதோ மிகவும் தெரிந்தது போல.

எங்கள் அடுக்குமாடிக்குடியிருப்பில் மொத்தம் 4 மாடிகள். ஒவ்வொரு தளத்துக்கு 12 வீடுகள் வீதம் மொத்தம் 48 வீடுகள்.  எனக்கு என் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கணவன், மனைவி, 2 குழந்தைகள் என, நான்கு பேர்களின் முகங்கள் என் மனதிற்குப்பதியவே நான்கு வருடங்கள் ஆனது. 
இன்றும் அவர்களில் யாருடைய பெயர்களும் எனக்குத்தெரியாது. 

ஒருமுறை அந்தப்பக்கத்து வீட்டுக்கு வந்த தபால் தவறுதலாக எங்கள் வீட்டில் போடப்பட்டிருந்தது. அதில் வெங்கடேசனோ, வெங்கடராமனோ, வெங்கடரமணியோ, வெங்கடசுப்ரமனியனோ, வெங்கட்ராகவனோ ஏதோ ஒன்று போட்டிருந்ததாக ஞாபகம். 

எங்களுடைய சொந்தக்காரர்களின் பெயர்களே எனக்கு அடிக்கடி குழம்பிப்போகும். என்னுடைய மனைவியை அவள் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் பலவித செல்லப்பெயர்களில் ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாக அழைக்கின்றனர். 

ஸ்கூல் சர்டிபிகேட்டில் முற்றிலும் வேறு ஒரு பெயர் அவளுக்கு. அக்கம்பக்கத்தவர் அழைப்பது “ராமு அம்மா” என்ற பெயரில். என் வீட்டுப்பால்காரர் அழைப்பது “கோடி வீட்டு அம்மா” என்ற பெயரில். [கோடீஸ்வரி அம்மா இல்லை, என் வீடு அமைந்திருப்பது அடுக்குமாடி 2 வது தளத்தில் ஒரு கடைசி வீடு, அதனால் கோடி வீடு]. 

நான் அவளை ஆசையாக அழைப்பது ஒரு தனி செல்லமான பெயரில்; கோபம் வரும்போது ஒரு கோணலான பெயரில்; அதெல்லாம் எதற்காக அனாவசியமாக வெளியே சொல்ல வேண்டும்? விட்டு விடலாம்.

இவர் சொல்லும் கணபதியோ அல்லது சிங்காரியோ என் வீட்டுக்காரிக்கோ அல்லது என் பையன்களுக்கோ ஒருவேளை தெரிந்திருக்கலாம். அவர்கள் எல்லோரும் தற்சமயம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். அவர்களில் யாரையாவது எழுப்பி அவர்களையும் குழப்ப எனக்கு மனம் இடம் தரவில்லை. அவர்களில் யாராவது ஒருவர் தான், நான் எழுதி சமீபத்தில் வெளியிட்ட அந்தக்கதை புத்தகங்களை மூணாவது மாடி மூணாவது வீட்டுக்கு படிப்பதற்காகக் கொடுத்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

மூன்றாவது மாடியில் ஒரு கணவன் மனைவி இருவரும் ஏதோ பேங்கில் வேலை பார்ப்பதாக யாரோ சொன்னது போல எனக்குள்ளும் ஒரு சொப்பன ஞாபகம். அவர்களைத்தேடி வந்த வெளிநபர்கள் யாராவது கூட, என்னிடம் அதுபோல ஒரு வேளை, என்றைக்காவது விசாரித்திருக்கலாம். நான் வழக்கம் போல, ”எனக்குத் தெரியவில்லை; வேறு யாரிடமாவது, வேறு எந்த வீட்டிலாவது விசாரித்துப்பாருங்கள்” என்று கூட சொல்லியிருக்கலாம். 

என்னைப்பொருத்தவரை நேற்று என்ன சாப்பிட்டோம் என்பது இன்று ஞாபகம் வருவது இல்லை. எனக்கு சம்பந்தம் இல்லாத தேவையில்லாத விஷயங்கள் எல்லாவற்றிலும், நான் இப்படித்தான். 

ஆனால் என் நண்பர்களில் சிலர், நான் லைட் நீலக்கலர் ஃபுல் ஹேண்ட் ஷர்ட்டை, டார்க் ப்ரெளன் கலர் பேண்டில் டக் செய்துகொண்டு, பூட்ஸ் காலுடன், மஞ்சள்கலர் ஹேண்ட் பேக்கை தோளில் மாட்டியபடி, ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மணிக்கு, ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் 27B பஸ்ஸில் ஓடிவந்து ஏறியதாக, செவ்வாய்க்கிழமை மதியம் மூன்று மணிக்கு, ஆபீஸில் எங்கேயாவது என்னைச் சந்திக்கும்போது கரெக்டாகச் சொல்லி விசாரிப்பார்கள்.

எனக்கே எங்கே போனேன், எதற்குப்போனேன், என்றைக்குப்போனேன், என்ன டிரஸ்ஸில் போனேன் என்பது சுத்தமாக மறந்திருக்கும்.

சரி...சரி, அதையெல்லாம் விட்டுவிட்டு, இப்போது இந்தப்பெரியவரின் கதைக்குப் போவோமா?


தொடரும்

40 கருத்துகள்:

  1. ஆரம்பமே எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் இருக்கிறது ,தொடர்கிறேன் .

    பதிலளிநீக்கு
  2. எங்கள் அடுக்குமாடிக்குடியிருப்பில் மொத்தம் 4 மாடிகள். ஒவ்வொரு தளத்துக்கு 12 வீடுகள் வீதம் மொத்தம் 48 வீடுகள். எனக்கு என் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கணவன், மனைவி, 2 குழந்தைகள் என, நான்கு பேர்களின் முகங்கள் என் மனதிற்குப்பதியவே நான்கு வருடங்கள் ஆனது.
    இன்றும் அவர்களில் யாருடைய பெயர்களும் எனக்குத்தெரியாது.

    மிக உண்மையான செய்தி ஐயா , எனக்கும் கூட அப்படித்தான் , ஆனால் எங்கள் ஊரில் அப்படி இல்லை ஆளைப்பார்த்தாலே அவனின் குடும்பா ஜாதகத்தையே சொல்லி விடுவார்கள்,, இந்த அவசர நகர வாழ்க்கையில் இதற்கல்லாம் நான் இடம் கொடுப்பதில்லை.

    நிகழ்கால வாழ்க்கை முறையாய் அப்படியே சொல்லி உள்ளீர்கள் ஐயா
    நன்றி தொடருங்கள் ஆவலாய் இருக்கிறேன் தொடர

    பதிலளிநீக்கு
  3. யார் அவர்! எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ளீர்களே ஐயா ..தொடருகிறேன் ...

    பதிலளிநீக்கு
  4. நிதர்சனமான கதை,
    நடைமுறை வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிறது :)

    பதிலளிநீக்கு
  5. எனக்கே எங்கே போனேன், எதற்குப்போனேன், என்றைக்குப்போனேன், என்ன டிரஸ்ஸில் போனேன் என்பது சுத்தமாக மறந்திருக்கும்.

    நமக்கே ஞாபகம் இல்லாததை அடுத்தவர்கள் நினைவு வைத்து கேட்கும்போது வரும் குழப்பத்தை தெளிவாகக் காட்டி இருக்கிறீர்கள்.. குழப்பமே இல்லாமல் கதை ஆரம்பம்..

    பதிலளிநீக்கு
  6. கனவு ஞாபகம்
    அவர்களையும் எழுப்பி குழப்ப விரும்பவில்லை
    எங்கோ பார்த்ததை அங்க அடையாளங்களுடன் விசாரிப்பதை
    சொல்லிச்செல்லும் விதம்
    ஆங்காங்கே இயல்பாக நகைச் சுவை இழையோட எழுதியுள்ளதை
    திரும்பத் திரும்ப வாசித்தேன்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. என்னைப்பொருத்தவரை நேற்று என்ன சாப்பிட்டோம் என்பது இன்று ஞாபகம் வருவது இல்லை. எனக்கு சம்பந்தம் இல்லாத தேவையில்லாத விஷயங்கள் எல்லாவற்றிலும், நான் இப்படித்தான்.//

    நிதர்சனமாக உணர்வதை நிதானமான
    நினைவுடன் நிகழ்சிகளை அருமையாக
    நிலைபெறும் வண்ணம்
    நிரவிய கதைக்குப் பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. நகரங்களில் இருக்கும் நடைமுறை விவரங்களை அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அந்தக்கனரா பேங்க் கணபதியும், சிண்டிகேட் பேங்க் சிங்காரியும் யாராக இருக்கும்? என்று தொடர்ந்து குழம்பினேன் நான்.//

    அழகான எதுகை மோனையுடன் பெயர்கள்.

    பதிலளிநீக்கு
  10. நான் அவளை ஆசையாக அழைப்பது ஒரு தனி செல்லமான பெயரில்; கோபம் வரும்போது ஒரு கோணலான பெயரில்; அதெல்லாம் எதற்காக அனாவசியமாக வெளியே சொல்ல வேண்டும்? விட்டு விடலாம்.//

    பெயருக்கே தனி அதிகாரம் செய்யலாம் போல இருகிறதே!

    பதிலளிநீக்கு
  11. நல்ல ஆரம்பம்... எதிர்பார்ப்புகளைத் தூண்டுகிறது 80 வயது பெரியவரின் அறிமுகம். என்ன சொல்ல்ப் போகிறார் என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு.

    நகர வாழ்க்கையில் அடுத்த வீட்டில் இருக்கும் நபர்கள் யார் என்ற விவரமே தெரியாமல் தான் இருக்கிறோம் என்ற நிதர்சனமான உண்மையை அழகாய் சொல்லி இருக்கீங்க...

    பதிலளிநீக்கு
  12. >., சிண்டிகேட் பேங்க் சிங்காரி

    ஹா ஹா என்னே அழகிய சொல்லாடல்

    பதிலளிநீக்கு
  13. ரொம்ப நல்லா இருக்கு .உங்களுக்கு
    மெயில் அனுப்பினேன் பார்த்தேளா

    பதிலளிநீக்கு
  14. நடு ராத்திரி 11 மணிக்குக் கதவைத் தட்டியதிலிருந்து கதை கன வேகத்தில் கிளம்பி உங்களின் வாடிக்கையான பீடிகை ஜமாவோடு நிற்கிறது.

    கதாசிரியரா அல்லது 80 வயது வாசகரா யார் கதையை நகர்த்தப் போகிறார்கள்?

    வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது பவர்கட் ஆனது போல் ஒரு தகிப்போடு காத்திருப்பது உங்கள் இடுகைகளுக்கு வாடிக்கையாகிப் போனது கோபு சார்.

    பதிலளிநீக்கு
  15. ஏங்கப்பா.... எவ்ளோ டீட்டெயில் குடுக்குறீங்க....
    சரி ... அந்தப் பெரியவர் ஆரு?
    அட்டகாசமான விஸ்தரிப்பு சார்! மறந்துடுவேன்னு சொல்ற ஆள் கஜினியா? ;-))))

    அதெப்படி அவருக்கு வெங்கடசுப்ரமணியனை மறந்து போனது? ;-))

    பதிலளிநீக்கு
  16. ஏற்கனவே பார்த்திருந்தால்கூட மறந்திருப்போம். கடைசிவரைக்கும் தெரியவில்லை என்று காட்டிக்கொள்ளமலே கட்த்திவிடுவோம். சமயத்தில் நம்மை யார் என்று நினைவு படுத்திக்கொள்ளாதவர்முன் வேற்று கிரகவாசி போல் நின்றிருப்போம். நகைச்சுவையுடன் நீங்கள் விவரிக்கும் அழகில், நான் அசடு வழிந்த கதைகள் எல்லாம் நினைவிற்கு வந்துவிட்டன சார். தொடர்ந்து வருகிறேன் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  17. இரவு 11 மணிக்கு ஒரு ரசிகரா? ருசிகரமான துவக்கம்.

    பதிலளிநீக்கு
  18. ஆரம்பமே சுவாரசியமாக இருக்கிறது சார். நகர வாழ்க்கையில் அடுத்துள்ள வீடுகளில் உள்ளவர்களின் விவரங்கள் தெரியாதது உண்மையே. அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. எழுச்சியான துவக்கம். உங்கள் கதைகளில் மிக வித்தியாசமான கதாப் பாத்திரங்களைச் சந்திக்கிறேன். மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  20. புதிய கதை..
    புதிய கருவுடன்....
    ரசித்தேன் தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  21. ராத்திரி பதினோரு மணிக்கு கதவைத் தட்டி விசாரிக்கிறதா...அடப் பாவமே....தொடருங்கள்...அப்புறம் என்னாச்சுன்னு பார்ப்போம்.(கதர்ல முழுக்கை சட்டையை விட அரைக்கை பெட்டர் இல்லை...அதுவும் ராத்திரி வேளையில்...!!)

    பதிலளிநீக்கு
  22. தொட‌க்க‌மே சுவார‌ஸ்ய‌மாக‌ இருக்கிற‌து. ஒரு சிறு பொறியை வைத்து அழ‌காக‌ விரிவாக்க‌ம் செய்திருக்கிறீர்க‌ள்.

    பதிலளிநீக்கு
  23. நல்லா இருக்குங்க சீனியரே..எம்மைப் போன்ற இளைய தலைமுறைக்கு உங்கள் தொழில் சார்ந்த கட்டுரைகள் பதிவில் போடவும்.உங்கள் அனுபவங்களையும்
    சேர்த்து. நாங்கள் பயனைடைவோம்.

    பதிலளிநீக்கு
  24. //இரவு 11 மணிக்கு மேல்--//

    //கதவின் வெளிப்புறம் யாரோ நிற்பது போல மூடியிருந்த ஜன்னல் கண்ணாடிகளில் நிழல் தெரிந்தது--//

    // வெள்ளையில் வேட்டி- சட்டை--//

    -- இவற்றையெல்லாம் வைத்து ஒரு முடிவுக்கு வரலாமென்றால்,

    அழைப்பு மணி வேறு ஒலிக்கிறதே!!

    -- ஒரு கால் அப்படி ஒலித்தது பிரமையோ?...

    பதிலளிநீக்கு
  25. தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் சார்!

    இந்தக்கதை ஒரு திகில் கதையா? தொடக்கமே அட்டகாசமா இருக்கு! அந்தப் பெரியவர் எதுக்கு நள்ளிரவில் உங்கள் வீட்டுக்கு வந்தார்! அவர் சொல்லிய அந்த பேங்கில் ஒர்க் பண்ணும் அந்த இருவரும் யார்? ஒரே குழப்பமா இருக்கு!!!!! \

    அடுத்த பகுதிக்காக ஆவலுடன் வெயிட்டிங்!

    பதிலளிநீக்கு
  26. இந்தப்புதிய தொடரின் முதல் பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, பல்வேறு அரிய பெரிய கருத்துக்கள் கூறி, தொடரைப்பெரிதும் உற்சாகத்துடன் வரவேற்று பாராட்டியுள்ள, அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    தொடர்ந்து வாருங்கள்.

    உற்சாகம் தாருங்கள்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  27. நீலக்கலர் சட்டைக்கும் பிரவுன் பேண்ட்டுக்கும் மேட்ச் ஆகாதே? அதை ஏன் போட்டுக்கொண்டு போனீர்கள்?

    பதிலளிநீக்கு
  28. ரொம்பவே சியா சொல்லி இருக்கீங்க. அடுத்த டோரில யார் இருக்காஙகன்னே தெரிஞ்சுக்க ஆர்வம் காட்றதில்லதான்

    பதிலளிநீக்கு
  29. அப்படியே யதார்த்தம்.

    நம்மைப்பற்றி நம்மை விட மற்றவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும். இந்த அனுபவம் எனக்கும் உண்டு. முகமே தெரியாதவர்கள் வந்து விசாரிப்பார்கள். ‘ஙே’ என்று விழித்த அனுபவம் எனக்கும் உண்டு.

    ஆனால் நம் அன்றாட வாழ்வில் நடப்பவைகளை, நடந்தவைகளை அப்படியே கண் முன்னே கொண்டு வர உங்களால்தான் முடியும்.

    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  30. எதுகாக ராவைக்கு 11--மணிக்கு வாராரு. பகல்ல வார கூடாதா?
    அப்பாலிக்கா எங்களுக்கெல்லா எப்படி நல்ல கத கெடைக்கும்ல?

    பதிலளிநீக்கு
  31. அடுக்குமாடி குடி இருப்பில் வசிப்பதில் எல்லாருமே தனித் தீவுபோல ஒதுங்கிதான் இருக்காங்க. அடுத்த டோரில் யாரு இருக்கானு கூட தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டறதில்லைதான். அந்த வயசானவர் எதுக்கு அர்த்த ராத்திரில வந்து கதவை தட்டறார்

    பதிலளிநீக்கு
  32. ஒரு எழுத்தாளருக்கு மிகச் சரியான நேரத்தில் துவங்குகிறது கதை...எழுத்தாளருக்கு வடிகால் நேரம் இதுதான்...அந்த நேரத்துக்கு இவரு ஏன் வராறு...பொறுத்துப்பாப்போம்..

    பதிலளிநீக்கு
  33. அடுத்த வீட்டில் யாரு இருக்காங்கன்னே தெரிந்து கொள்ள முடியாத ( விரும்பாத) வாழ்க்கை முறை. அப்படியும் அந்த 80--வயது பெரியவர் உங்களைத் தேடி வந்திருப்பது எங்களுக்கெல்லாம் சுவாரசியமான ஒரு கதை கிடைக்கத்தான். அடுக்கு மொழி பெயர்களை எங்கேந்துதான் ஸெலக்ட் பண்ணுறிங்களோ.. சுவாரசியமான ஆரம்பம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி...

      வாங்கோ ... வணக்கம்.

      //அடுத்த வீட்டில் யாரு இருக்காங்கன்னே தெரிந்து கொள்ள முடியாத (விரும்பாத) வாழ்க்கை முறை. அப்படியும் அந்த 80--வயது பெரியவர் உங்களைத் தேடி வந்திருப்பது எங்களுக்கெல்லாம் சுவாரசியமான ஒரு கதை கிடைக்கத்தான்.//

      மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம்.

      //அடுக்கு மொழி பெயர்களை எங்கேந்துதான் ஸெலக்ட் பண்ணுறிங்களோ.. சுவாரசியமான ஆரம்பம்....//

      :))))) தங்களின் அன்பான வருகைக்கும் அழகான சுவாரஸ்யமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். :)))))

      நீக்கு