என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 10 டிசம்பர், 2011

என் உயிர்த்தோழி


என் உயிர்த்தோழி

[படக்கதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-



01.10.2006 தேதியிட்ட தினமலர் வாரமலரில் பக்கம் எண் 29 இல் மேலே உள்ள படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப்படத்திற்கு தகுந்தபடி ஒரு சிறுகதை எழுதி அனுப்ப வேண்டும் என்பது “படக்கதைப்போட்டி” யின் அறிவிப்பு.

போட்டியின் நிபந்தனைகள்: 

உங்கள் கற்பனைக்கு ஒரு சவால்

கொடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு தகுந்த சிறுகதை ஒன்றை எழுதி அனுப்புங்கள்

படத்தில் உள்ள காட்சி சிறுகதையின் மையக்கருவாக இருக்க வேண்டும்

சிறுகதை A4 அளவுள்ள தாளில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும். 

தாளின் பின்புறம் உங்களின் பெயர் மற்றும் முகவரியைக் குறிப்பிடுதல் அவசியம்.

படத்தில் உள்ள நட்சத்திரங்களின் பெயரையே கதாபாத்திரங்கள் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

கதைகள் வரும் 05.10.2006 வியாழக்கிழமைக்குள் எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்பி வையுங்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதை வாரமலர் இதழில் பிரசுரமாகும். 

பரிசு ரூ.1000 [ஒருவருக்கு மட்டுமே]

அனுப்ப வேண்டிய முகவரி: 

படக்கதைப் போட்டி, தினமலர்-வாரமலர், த.பெ.எண்: 7225 சென்னை - 600 008

மேற்படி படக்கதைப் போட்டியில் கலந்து கொண்டதில் என் சிறுகதைக்கு பரிசளிக்கப்பட்டது:

அந்தக்கதை இதோ உங்கள் பார்வைக்கு:

என் உயிர்த்தோழி


கல்யாணம் ஆகி கணவருடன் சிங்கப்பூர் சென்ற உஷா, ஒரு வருடம் சென்ற பின் இப்போது தான், கிராமத்திலுள்ள தன் பாட்டி வீட்டிற்கு வந்திருக்கிறாள். உள்ளே நுழைந்ததும் அவள் கண்கள் எதையோ பரபரப்பாகத் தேடியது. 

வருடக்கணக்காகக் காத்திருந்தும் கிட்டே நெருங்கி விட்ட சந்தோஷத்தில் ஒரு நொடியைக்கூட மேலும் தாங்கிக்கொள்ள முடியாமல் மனம் தவித்தது.

நேராக சமையலறைக்குள் நுழைந்தாள். அங்கே யாரும் இல்லை. பாத் ரூம் கதவு திறந்து கிடந்தது. கொல்லைப்புறத்துக்கு ஓடினாள். அங்கே கிணற்றடியில் பாட்டி குனிந்து எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.  சத்தம் போடாமல் பின்புறமாக பூனை போல் பதுங்கிச்சென்று, பாட்டியைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். 

முதலில் திடுக்கிட்டாலும், ஒரு நொடிக்குள் யாரென்று யூகித்து விட்டாள் பாட்டி. ஐந்து நிமிடங்களுக்கு எதுவும் பேசாமல் அப்படியே அணைத்துக் கொண்டாள். பிரிவின் சோகம் பெரு மூச்சாய் வெளிப்பட்டது.

உஷாவுக்கு தன் அப்பா வழிப்பாட்டி என்றால் ரொம்பப்பிரியம். பாட்டி ரொம்பவும் கெட்டிக்காரி. யார் மனசையும் நோகவிட மாட்டா. சுருக்குன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டா. தவிர தன் பேத்தி உஷா மேல் கட்டுக்கடங்காத பாசம். 

பாட்டிக்கு வயசாகிவிட்டதே தவிர வீட்டில் ஓய்வு ஒழிச்சல் கிடையாது. தாத்தா காலையிலே எழுந்து, ஸ்நானம் பண்ணி, பஞ்சக்கச்சம் கட்டி பூஜை முடித்து, பலகாரம் சாப்பிட்டு, கட்டிலில் போய் காலை நீட்டிப்படுக்கும் வரை, பாட்டி அந்த வீட்டினுள் குறுக்கும் நெடுக்குமாக ஓடித்திரிவாள். பார்த்துப்பார்த்து பணிவிடைகள் செய்வாள். 

பாட்டியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படியொரு அழகு. பறங்கிப்பழச்சிவப்பில் கட்டையா குட்டையா மடிசார் புடவையில் ஜொலிப்பாள். 

தாத்தாவின் பூஜை முடியும் முன் நான் பாட்டி அருகே போனால் “எம்மேலே பட்டுடாதேடீ; போய் ஸ்நானம் பண்ணிட்டு வாடீ” என்று தாத்தா காதுக்கு கேட்கும்படி பலமாக உரக்கக் கத்துவாள்.

பிறகு பூனை மாதிரி பாத்ரூம் பக்கம் வந்து, ரகசியமாக “மூஞ்சியை மட்டும் பளிச்சுனு அலம்பிண்டு வாடீ; ரொம்பக் குளிருது; உடம்புக்கு ஏதும் வந்துடப்போகுது; அப்புறமா நல்ல வெய்யில் வந்ததும் வெந்நீர் போட்டுக் குளிச்சுக்கலாம்” என்பாள் மிகவும் கரிசனத்துடன்.


தாத்தா பாட்டியின் இளமைப்பருவம், அவர்களின் கல்யாணம், தாம்பத்யம், அவர்கள் அந்தக்காலத்தில் பார்த்த சினிமா, டிராமாக்கள், கிராமத்துப் பெரிய வீட்டில் தன் மாமியார், மாமனார், கொழுந்தன்கள், நாத்தனார்கள் மட்டுமின்றி கொல்லைப்புறத்தில் அடிக்கடி வந்து போகும் குரங்குகள், காக்கைகள் தொந்தரவுடன் கோட்டை அடுப்பில் தேங்காய் மட்டைகளை வைத்து எரித்து தான் சமையல் செய்தது என தன் அனுபவங்கள் எல்லாவற்றையும் கதைபோல வெகுஅழகாகச் சொல்லுவாள்.  


அடிக்கடி அந்தக்காலத்தையும் இந்தக்காலத்தையும் ஒப்பிட்டுப் பேசுவாள். உஷாவுக்கு பாட்டியின் நகைச்சுவையான பேச்சுக்களைக் கேட்டாலே உற்சாகம் பொங்கும்.


உஷாவின் சின்ன வயதில், மொட்டை மாடியில் பாட்டி வடாம் பிழிந்து கொண்டிருந்த போது, காக்கை வந்து கொத்தாமல் உஷாவைக் காவலுக்கு வைத்துவிட்டு, பாட்டி கீழே இறங்கி பாத் ரூம் போய்விட்டு வருவதற்குள், உஷா காரசாரமான வடாத்து மாவை விரல்களால் எடுத்து, நக்கித் தின்பதைப் பார்த்துவிட்ட பாட்டிக்கு வந்ததே கோபம்! காக்கையை விரட்ட வைத்திருந்த குச்சியை எடுத்து உஷாவைப் பாட்டி துரத்தி அடிக்க வர, உஷா இங்குமங்கும் ஓடி கடைசியில் பிழிந்திருந்த வடாத்திலேயே காலை வைத்து வழிக்கிவிழ, பாட்டி கண்கலங்கிப்போனாளே! தன்னைத்தூக்கிப்போய் நன்றாகத் தேய்த்து வடாத்துமாவு போகக் குளிப்பாட்டினாளே!! அது நினைவுக்கு வரும்போதெல்லாம் உஷாவுக்கு இன்றும் சிரிப்புத்தான் வருகிறது.  


சிங்கப்பூரிலிருந்து திடீர்னு வந்து தன்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும், பேத்தியின் அன்பில் திக்கு முக்காடிப் போய்விட்டாள், பாட்டி.


பாட்டி இப்போது ரொம்பத்தான் மாறிப்போய் இருந்தாள். தாத்தாவுக்கு மிகவும் வயதாகி முடியாத்தனம் வந்து விட்டதால், பூஜை ஏதும் செய்கிறேன் என்று தன்னைத்தானே படுத்திக்கொண்டு பாட்டியையும் படுத்தாமல், எப்போதும் கட்டிலே கதி என்று ஓய்வெடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்.   பாட்டியும் மடி ஆசாரம் என்று எதுவும் இப்போது தன்னைத்தானே வருத்திக்கொள்வது இல்லையாம்.


தன் இஷ்டப்படி ஏதோ புடவையைச் சுற்றிக்கொண்டு சதா டீ.வி.யைப் பார்த்துக்கொண்டு, ரிமோட்டும் கையுமாகவே இருக்கிறாள், பாட்டி இப்போது.


வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பேரன் பேத்திகளுடன் செல் போனில் பேசுவதும், வெய்யிலுக்கு கூலிங் க்ளாஸ், ஏ.ஸி. ரூம் என்று ஜாலியாகவே பொழுதைப்போக்கி வருகிறாள்.


பாவம், இளமை காலத்தில் குடும்பத்திற்காகப் பாடுபட்டவள். முதுமையிலாவது சுகப்பட கொடுத்து வைத்திருக்கிறாள். உஷாவுக்குப் பாட்டியை இப்போது பார்க்கும் போதும், பழையவற்றையெல்லாம் நினைக்கும் போதும் மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது.


“என்ன பாட்டி, உன் மடிசார் புடவையெல்லாம் என்ன ஆச்சு? எங்கே போச்சு?” பாட்டியைச் சீண்டினாள் உஷா.


“போதும்டீ, அதையெல்லாம் நனைச்சு, அலசி, பிழிஞ்சு, ஒனத்தி (உலர்த்தி) காயவச்சு, மடிச்சு (மடித்து) கட்டறதுக்குள் (உடம்பில் அணிவதற்குள்) பிராணன் போயிடுது போ; 


அவசரமா பாத்ரூம் போய் வருவதற்குள்ள தலைப்புக் கச்சமெல்லாம் கசங்கி, அவிழ்ந்து, தரையெல்லாம் பெருக்கிண்டு வருதுடீ” என்று சொல்லி பாட்டி அலுத்துக்கொண்டதைக் கேட்டதும் உஷாவுக்குச் சிரிப்பு தாங்க முடியலே.


பாட்டிக்குன்னு ஆசையாத் தான் வாங்கி வந்த இரண்டு ஜோடி வளையல்களை, பாட்டி கையில் போட்டுவிட்டு அழகு பார்த்தாள்.  புது நைட்டி ஒன்றை எடுத்து பாட்டிக்கு மாட்டி விட்டாள். பாட்டியின் முகம் வெட்கத்திலும் சந்தோஷத்திலும் சிவந்து போனது.


நாற்காலியில் பாட்டியை உட்கார வைத்து தன் கேமராவால் விதவிதமான போட்டோக்களாக எடுத்துத்தள்ளினாள்.      


”தாத்தாவைக் கூட்டிவந்து காட்டட்டுமா?” என்று உஷா கேட்க பாட்டியின் முகம் வெட்கத்தில் சிவந்து நெளிந்தபோதும், கொள்ளை அழகாகவே தோன்றினாள்.


“சிங்கப்பூரில் உள்ள எல்லாப் பாட்டிகளும் இதுபோலத்தான் காத்தாட, அவரவர் விருப்பப்படி டிரஸ் போட்டுண்டு, காரில் ஏறி ஊரைச் சுற்றி வராங்க பாட்டி” என்றாள் உஷா.


“சட்டுப்புட்டுனு, நீயும் புள்ளையாண்டு இருக்கேன்னு நல்ல சேதி சொல்லுடீ. எனக்கும் தாத்தாவுக்கும் பாஸ்போர்ட் விசா எல்லாம் இப்போதே ஏற்பாடு பண்ணுடீ. நானும் தாத்தாவும் சிங்கப்பூருக்கு வந்துடறோம். உனக்கு பிரஸவ டயத்துலே கூடமாட ஒத்தாசையா இருந்துட்டு, அப்படியே சிங்கப்பூரையும் சுத்திப்பார்த்துட்டா போதும்டீ, அதன் பிறகு நானும் உன் தாத்தாவும் சேர்ந்தே டிக்கெட் வாங்கிண்டு இந்த உலகத்தை விட்டே கிளம்பிடுவோம்” என்றாள் பாட்டி. 


இதுபோல அவ்வப்போது சொல்லிச்சொல்லியே இதுவரை பதினாறு முறை கொள்ளுப்பேரன் பேத்தி என ஆசைதீரப் பார்த்து விட்டவள்.


இந்தத்தள்ளாத வயதிலும் பாட்டியின் பேச்சினில் இருக்கும் உற்சாகமும், ஆசையும், தைர்யமும் உஷாவை வியப்படைய வைத்தன.


பாட்டியின் பேச்சை ரசித்துக்கொண்டிருந்த உஷா, பாட்டி நீட்டிய காலை தன் கைகளால் மெதுவாகப் பிடித்து அமுக்கி விட்டுக்கொண்டிருந்தாள்.


பாட்டி தன்னை மறந்து, சந்தோஷ மிகுதியால் வாய் ஓயாமல் உஷாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.






-o-o-o-o-o-o-
முற்றும்
  -o-o-o-o-o-o-      



[இந்தச் சிறுகதை வெளியான இதழின் அட்டைப்படம்]


 இந்தச்சிறுகதை தினமலர் வாரமலர் நடத்திய
 “படக்கதைப்போட்டி” யில் 
கலந்து கொண்டு பரிசு பெற்றது..

22.10.2006 அன்று தினமலர் வாரமலரில் 
பக்கம் எண் 30+31 இல் வெளியானது..










அன்புடன் 
vgk

வியாழன், 8 டிசம்பர், 2011

தா யு மா ன வ ள் [இறுதிப்பகுதி 3 of 3 ]



தாயுமானவள்

சிறுகதை
[இறுதிப்பகுதி 3 of 3 ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-





[மேலே கொடுத்துள்ள படங்கள் இரண்டும், சிறுகதை வெளியான 
பத்திரிகை அலுவலக ஓவியரால் வரையப்பட்டவை.]

முன்கதை முடிந்த இடம்:



குழந்தை கண் அசந்து தூங்கத்தொடங்கியது. ஆனால் அதன் பிஞ்சு விரல்கள் மட்டும் முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தது.  அதன் மற்றொரு கையில் வைத்திருந்த மிகப்பெரிய பலூன் கைநழுவி அந்த மிகப்பெரிய கோயில் மண்டபத்தினுள் அடித்த காற்றில், இங்குமங்கும் பறந்து தனக்குத்தானே விளையாடிக் கொண்டிருந்தது. முனியாண்டியும் உட்கார்ந்திருந்த நிலையிலேயே கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்திருந்தான். 


அடுத்த நிறைவுப்பகுதி தொடர்கிறது ...................

குழந்தையின் அருகே உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக்கொண்டிருந்த முனியாண்டியை, ஐந்து மணி சுமாருக்கு பக்தர் ஒருவர் உடைத்த சதிர் தேங்காய்த்துண்டு ஒன்று தட்டி எழுப்பியது. அங்கிருந்த குழாய் நீரில் தன் முகத்தைக்கழுவிய முனியாண்டி, குழந்தையுடன் படிவாசல் பிள்ளையாராகிய மாணிக்க விநாயகரை வணங்கி விட்டு, தெப்பக்குளத்தையும் வலமாகச் சுற்றி வந்து, அப்போது தான் தேரில் நிலைக்கு வந்து சேர்ந்துள்ள வாணப்பட்டரை மாரியம்மனை மிக அருகில் சென்று வணங்கி விட்டு, தன் வீடு நோக்கிப்புறப்பட்டான்.

தெப்பக்குள ரோட்டு ஓரக்கடை ஒன்றில், பேரம் பேசி குழந்தைக்கு மாற்று உடையாக கவுன் ஒன்று வாங்கிக்கொண்டு, தன் அரண்மனையாகிய குடிசைக்குள், குழந்தையுடன் நுழைந்தான்.

சூடாக தோசை சுட்டுக்கொண்டிருந்த மரகதம், குழந்தை ஒன்றுடன் வந்துள்ளத் தன் கணவனை, தன் இரு புருவங்களையும் உயர்த்தி ஒரு பார்வை பார்க்கும் போதே, குழந்தை விஜியோ “அ..ய்..ய்..யா.....தோசை ! மம்மி .... மம்மி ....  ஸாரி ... ஸாரி ... ஆண்ட்டீ ... ஆண்ட்டீ ... எனக்கு ஒரு தோசை வேணும் .... தருவீங்களா?”  எனச்சொல்லி வெட்கம் கலந்த ஆசையுடன், தன் பிஞ்சு விரல்களைக் குவித்தபடி தன்கையை நீட்டியது.    

குழந்தையை ஒருவித வாஞ்சையுடன் தன் மடியில் அமர்த்திக்கொண்ட மரகதம், தோசையை அதற்கு ஊட்டிக்கொண்டே, அதன் கதை முழுவதையும் முனியாண்டி சொல்லச்சொல்ல கவனத்துடன் கேட்டுக்கொண்டாள்.


ஆசையுடன் தோசை சாப்பிட்டு முடித்த குழந்தையை பாய் ஒன்றைத் தட்டிப்போட்டு படுக்க வைத்தபின், மேற்கொண்டு இந்தக்குழந்தையை நாம் என்ன செய்வது என இருவரும் நெடுநேரம் யோசித்து, தங்களுக்குள் விவாதித்துப் பேசிக்கொண்டிருந்ததில், நள்ளிரவு வெகுநேரம் ஆகிவிட்டது.

காலையில் எழுந்த குழந்தைக்கு உடல் அனலாகக் கொதித்தது. பயத்தில் கை கால்கள் நடுங்கின. அழ ஆரம்பித்தது. முனியாண்டியும், மரகதமும் என்னவெல்லாமோ சொல்லி சமாதானம் செய்ய முயன்றனர்.

“காஃபி, டீ ... ஏதாவது வாங்கி வரட்டா? உனக்கு என்னடாக் கண்ணு வேணும்? ஏன் அழுவறே? என்று பரிவுடன் பரிதவித்துப்போய்க் கேட்டனர். 

”எனக்கு ஒண்ணும் வேணாம். என்னயத்தான் போலீஸ் ஸ்டேஷன்லே கொண்டுபோய் விடப்போறீங்களே! நேத்து ராத்திரி நீங்க பேசிட்டு இருந்தீங்களே! நான் உங்க கூடவே இருக்கேனே .... ப்ளீஸ் ... என்னய நீங்க எங்கேயும் கொண்டுபோய் விட்டுடாதீங்க .... ப்ளீஸ் ... ப்ளீஸ்” எனக்கெஞ்ச ஆரம்பித்தக் குழந்தையின் மேனியும் நடுங்கிக்கொண்டிருந்தது.

குழந்தையை கட்டிப்பிடித்துத் தூக்கிக்கொண்ட மரகதம், “சரி, சரி, நீ எங்களோடேயே இருக்கலாம்டா கண்ணு, உன்னய எங்கேயும் கொண்டுபோய் விடமாட்டோம்டா, நீ சமத்துப்பாப்பா இல்லையா? அழக்கூடாது” என்று சொல்லி தன் புடவைத்தலைப்பால் குழந்தையின் கண்களைத் துடைத்து விட்டு, அள்ளி அணைத்து முத்தமிட்டாள், மரகதம்.

திருவிழாவில் பலூன் விற்ற பணத்தை எண்ணி முடித்த முனியாண்டி, ”செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்ய, அந்த டாக்டரம்மா நம்மிடம் கேட்டிருந்த மூவாயிரம் ரூபாயும் சேர்ந்து விட்டது தாயீ!” என மரகதத்திடம் சொல்லிவிட்டு, எப்போது நாம் டாக்டர் அம்மாவைப் பார்க்கப்போகலாம்?” என வினவினான்.

”இதோ பாருய்யா, மச்சான்! அந்த வாணப்பட்டரை மகமாயீ, மாரியாத்தாளே இந்தப்பச்சப்புள்ளைய, நமக்கே நமக்குத்தான் சொந்தம்னு இந்தத் தேர் திருவிழாவிலே கொடுத்திருக்கும் போது, நமக்கு இப்போ இன்னொரு குழந்தை எதுக்குய்யா வேணும்?; 


இந்தப்புள்ளைய நல்லபடியா வளர்த்து ஆளாக்கினா அதுவே போதுமய்யா! அந்தப்பணத்தை அப்படியே எடுத்துட்டுப் போயீ, பக்கத்துல உள்ள இஸ்கூலிலே, இதை சேர்த்துப்பாங்களான்னு, விசாரித்துட்டு வாய்யா” என்றாள் மரகதம்.

திருச்சி மலைக்கோட்டைத் ”தாயுமானவர்” அருளால், ஒரே நாளில் “தாயுமானவள்” (தாயும்+ஆனவள்) ஆன தன் மனைவியை அள்ளி அணைக்கச் சென்ற முனியாண்டியைப் பார்த்து, வெட்கத்துடன் சிரித்தது, குழந்தை விஜி.  


-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-


[இந்தச் சிறுகதை சுனாமிக்குப்பிறகு 2005 ஆம் ஆண்டு எழுதப்பட்டது]



இது தான் என் வாழ்க்கையில் நான் எழுதிய முதல் சிறுகதை.

தினமலர் நிறுவனர் அமரர் டி.வி.ஆர் நினைவுச்சிறுகதைப் 
போட்டியில் கலந்து கொண்டு பரிசினை வென்ற கதையும் ஆகும்.











தினமலர்-வாரமலரில் 6.11.2005 அன்று என் புகைப்படம் மற்றும் சுயவிபரக்குறிப்புகளுடன் வெளியிடப்பட்ட கதை.






 இந்தச்சிறுகதை வெளியான 
6.11.2005 தினமலர் வாரமலர் அட்டைப்படம்.




[கதாசிரியர் பற்றி வெளியிடப்பட்ட சிறுகுறிப்பு]



போட்டியில் பங்குகொண்ட மொத்த கதைகள்: 2981 
இறுதிக்கட்டத் தேர்வில் வடிகட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு 
பரிசளிக்கப்பட்ட கதைகள் வெறும் 13 மட்டுமே.
அதற்கான ஆதாரம் இதோ இங்கே:












அந்தப் பதிமூன்றில் இதுவும் ஒன்று என்பதும்
நான் முதன்முதலாக எழுதிய கதை என்பதும் 
இதற்குக் கிடைத்த பரிசு + பாராட்டுக்களால் 
என்னை மேலும் மேலும் எழுத 
உற்சாகப்படுத்திய கதை என்பதும் 
இதன் தனிச்சிறப்பாகும்.

முதல் சந்திப்பு, முதல் பார்வை, முதல் நட்பு, முதல் உரையாடல்,  முதல் காதல், முதல் முத்தம், முதல் இரவு, முதல் உறவு, முதல் குழந்தை போன்றவற்றில் தானே ஒரு Thrilling ஆன அனுபவமும், சுகமும், பேரானந்தமும் இருக்க முடியும்?

அதுபோலவேதான் இந்த என் முதல் கதையும்; அது முதன் முதலாக ஒரு பத்திரிகையில் அச்சேறி, பிரசுரம் ஆனபோது, எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியையும், பரிசுத்தொகையையும், என்னுடன் அன்று மிகப்பெரிய தொழிற்சாலையில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களின் ஆத்மார்த்தமான பாராட்டுக்களையும், புதிய எழுத்துலக நண்பர்களையும் பெற்றுத்தந்தது என்பதே, இந்த என் சிறுகதையின் மூலம் நான் பெற்ற மிகச்சிறப்பான, மகிழ்ச்சிகரமானதோர் அனுபவம்.  


அந்த என் முதல் அனுபவம் மிகவும் 
THRILLING ! THRILLING !! THRILLING !!!  
தான்!  


நான் சொல்லும் இதனை, என்னைப்போலவே நன்கு அனுபவித்து, அதை மனதில் அப்படியே என்றும் நிலைநிறுத்தி, அவ்வப்போது நினைத்துப்பார்த்து, மனதால் மகிழ்வுடன் அசைபோடத் தெரிந்தவர்களால் மட்டுமே, இந்த சுகானுபவத்தை முற்றிலுமாகப் புரிந்து கொள்ள முடியும்.

பிறகு இதுபோல, ஏன் ...  இதையும்விட இன்னும் மேலாகவே, எவ்வளவோ பரிசுகளும், பாராட்டுக்களும், விருதுகளும் என்னைத் தேடி அவைகளாகவே வந்திருந்த போதிலும், இந்த என் முதல் அனுபவத்தை மட்டும் என்னால் எப்போதுமே மறக்க முடியாமல் உள்ளது என்பதை இங்கு தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 






இந்த ”தாயுமானவள்” என்ற தலைப்பிலேயே 
என் முதல் சிறுகதைத் தொகுப்பு நூலும், 
மிகப்பிரபலமான வானதி பதிப்பகம் மூலம் 
2009 ஆண்டு வெளியிடப்பட்டது. 


அந்தச்சிறுகதைத் தொகுப்பு நூலின், முன் அட்டைப்படமே 
தங்கள் பார்வைக்காக மேலே கொடுக்கப்பட்டுள்ளது.




மிகவும் பழமை வாய்ந்ததும், உலகப்புகழ் பெற்றதுமான வானதி பதிப்பகத்தின் மூலம் தன் நூல் ஒன்றை ஒரு எழுத்தாளர் வெளியிடுவது என்பது அவ்வளவு சாதாரணமானதொரு விஷயமல்ல என்பது பிரபல தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டுமே தெரிந்ததொரு இரகசியம். 

இந்த தேவ இரகசியம் ஏதும் தெரியாமலேயே, புது எழுத்தாளனாகிய நான், முதன்முதாலாக என் சிறுகதைகளை ஒரு தொகுப்பு நூலாக வெளியிட வேண்டி கோரிக்கை வைத்து,அவர்களுக்கு அனுப்பப்போய், முதலில் நான் சந்தித்த சோதனைகளும், வேதனைகளும், மிகவும் அதிகம். ஆனாலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நடந்த அதிசயமான ஆச்சர்யமான சம்பவங்களும் [MIRACLE] அனுபவங்களும் பற்றி, ஒரு தனிப்பதிவாகவே நான் பிறகு ஒரு நாள் எழுதி வெளியிட நினைக்கிறேன்.

இறுதியாக தெய்வானுக்கிரஹத்தினால் மட்டுமே, என் முதல் சிறுகதைத்தொகுப்பு நூலான இந்தத் “தாயுமானவள்” பிரபல வானதி பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டதும் எனக்கு மிகவும் பெருமை சேர்த்த விஷயமே என்பதையும் பெருமையுடன், இங்குத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில்,  பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். 

-o-o-o-o-o-

மேற்படி முதல் சிறுகதைத்தொகுப்பு நூலில் 
இடம்பெற்றுள்ள மொத்தக்கதைகள்: 13

01. தாயுமானவள் 
http://gopu1949.blogspot.com/2011/12/1-of-3.html


02. என் உயிர்த்தோழி


03. உடம்பெல்லாம் உப்புச்சீடை 
http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_2406.html


04. பொடி விஷயம் 
[வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ - புதிய கட்சி ”மூ.பொ.போ.மு.க” உதயம்]
http://gopu1949.blogspot.com/2011/04/1-1-of-6.html


06. தேடி வந்த தேவதை


08. ’எலி’ஸபத் டவர்ஸ்
http://gopu1949.blogspot.com/2011/02/1-8.html


09. ஏமாறாதே, ஏமாற்றாதே!
http://gopu1949.blogspot.com/2011/09/blog-post_22.html


10. நன்றே செய், அதையும் இன்றே செய் !
http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_9317.html


12. சுடிதார் வாங்கப்போறேன்!
http://gopu1949.blogspot.com/2011/04/1-of-3.html

13. நீ முன்னாலே போனா .. நான் பின்னாலே வாரேன்! 
http://gopu1949.blogspot.com/2011/10/15.html

இதில் No. 2 "என் உயிர்த்தோழி” மற்றும் No. 6 "தேடி வந்த தேவதை” ஆகிய இரண்டும் அநேகமாக இந்த மாதமே எனது அடுத்தடுத்த வலைப்பதிவு வெளியீடுகளாக இருக்கும்.   

மீதி 11 கதைகளும் ஏற்கனவே என் வலைப்பதிவில் வெளியிட்டுவிட்டேன் என்பது உங்களில் பலருக்கும் நினைவிருக்கும். இதுவரை படிக்காதவர்கள் விரும்பினால் போய்ப் படிக்க இணைப்புகளும் கொடுத்துள்ளேன்.

-oOo-


மேற்படி வானதி பதிப்பக வெளியீடான “தாயுமானவள்” சிறுகதைத்தொகுப்பு நூலுக்கு நான் எழுதியுள்ள “முன்னுரை” இதோ இங்கே ...... உங்கள் பார்வைக்கு:


முன்னுரை


அடியேன், இளமையில் வறுமையை நன்கு அனுபவித்து வளர்ந்தவன். ஏழை எளிய மக்களின் வாழ்வினில் ஏற்படும் சுகங்களும் சோகங்களும், அன்றாட வாழ்க்கைப் பயணத்திற்கு, அவர்கள் படும் அவஸ்தைகளும், பல்வேறு பொருளாதார கஷ்டங்களிலிருந்து விடுபட அவர்கள் மேற்கொள்ளும் கடின உழைப்பும், சிந்தும் வியர்வைத் துளிகளும், என் இளமைக்காலங்களிலேயே, எனக்கு சமுதாய சிந்தனையை ஏற்படுத்த வழிவகுத்து உதவின.

எப்போதாவது ஒருசில சமயங்களில், ஏழைகளின் சிரிப்பில் நான் இறைவனைக் கண்டதும் உண்டு. இவ்வாறு எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவங்களையும், ஒருசில சமூக அவலங்களையும், நான் சந்தித்து உறவாடி, உரையாடி பழக நேர்ந்த ஒருசில வேடிக்கை மனிதர்களையும், என் கதைகளில் ஆங்காங்கே இட்டுச்செல்வதால், அவை உயிரூட்டமுள்ளதாக அமைந்து வெற்றி பெறும் வாய்ப்பைப் பெறுவதாக நம்புகிறேன்.

என்னுடைய இந்த முதல் சிறுகதைத்தொகுப்பு நூல் வெளிவர ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து உதவிய என் அருமை நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், இதில் உள்ள பல கதைகளை ஏற்கனவே பிரசுரித்து வெளியிட்ட வார, மாத இதழ்களுக்கும், இந்தத் தொகுப்பிதழை பிரசுரித்து வெளியிடும் “வானதி” பதிப்பகத்தாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன்,
வை. கோபாலகிருஷ்ணன் 

-oOo-

இந்தத் “தாயுமானவள்” என்ற என் முதல் சிறுகதைத்தொகுப்பு நூலுக்கு ”வாழ்த்துரை” வழங்கிச் சிறப்பித்தவர் என் அருமை நண்பரும், பிரபலமான எழுத்தாளரும், எழுத்துலகில் என் மானஸீக குருநாதருமான திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்கள். அவர்களின் வாழ்த்துரை தங்கள் பார்வைக்காக இதோ இங்கே :

வாழ்த்துரை

சிறுகதைகள் போல படிப்பு ருசி தருவதற்கு வேறு எதுவும் இருக்கிறதா? குண்டு குண்டாய்ப் புத்தகங்கள், பெரிய பெரிய நாவல்கள் இருக்கும். முதல் அத்யாயம் படித்து விட்டு அடுத்த அத்யாயம் போகும்போது ‘வசந்தி’ யார், இப்போது குறிப்பிடும் ‘சுகந்தி’ யார் என்கிற குழப்பத்தோடு மீண்டும் முதல் அத்யாயம் வாசிக்கும் பலரை நான் அறிவேன்.

சிறுகதைகளின் முதல் சுகமே அது அப்போதே முடிந்துவிடும். அது மட்டுமல்ல, நல்ல சிறுகதை வாசித்து முடித்ததும் கிடைக்கும் சுகம், அந்தக்கதை மூலம் பெறப்படும் படிப்பினை, மிகக் குறைவான கதாபாத்திரங்களில் ரசமான சம்பாஷணைகள், சம்பவங்கள், இப்படி சிறுகதைகளின் பெருமையினை அடுக்கிக்கொண்டே போகலாம். 

“படைப்பிலக்கியங்களில் நான் சிறுகதையாய் இருக்கிறேன்” என்று கீதையில் கிருஷ்ணன் சொல்லியிருப்பார், அர்ஜுனன் கேட்டிருந்தால்!

திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் கதை சொல்லும் திறன், நகைச்சுவை மிளிரக் கதை நகர்த்திச் செல்லும் தனித்துவம், சம்பவங்களில் வாசகன் தன்னையே பொருத்திப் பார்க்கத் தூண்டும் அளவு யதார்த்தம், உரையாடல்களில் காணப்படும் நேர்த்தி .... அவர் பேனா அழகாகக் கதை சொல்கிறது ... அழ வைக்கிறது ... சிரிக்க வைக்கிறது ... மொத்தத்தில் எல்லாமே உணர்ச்சிப் பிரவாகம். ஒவ்வொரு கதையும் அழுத்தம் ஆழம் என்று கனமாய் மனதில் இறங்கிவிடுகிறது.

இது அவரின் முதல் தொகுப்பு. அவர் இன்னும் பல தொகுப்புகளுக்குச் சொந்தக்காரராகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதற்குக் கட்டியம் கூறி, வாசிப்பு அனுபவம் வேண்டும் வாசகர்களுக்கு நல்விருந்தாய் அமைந்திருக்கிறது இந்தத்தொகுப்பு.

வாசகர்களுக்கும் படைப்புக்களுக்கும் இடையே இனி நான் எதற்கு?

அன்புடன்
ரிஷபன் 
   
-oOo-


You may also like to go through the pictures in these Links:


http://gopu1949.blogspot.com/2011/07/4.html

http://gopu1949.blogspot.com/2011/07/3.html

http://gopu1949.blogspot.com/2011/07/6.html






என்றும் அன்புடன் தங்கள்




     

  வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-








ஓர் முக்கிய அறிவிப்பு
என் அடுத்த பதிவான 
“என் உயிர்த்தோழி” 
என்ற சிறுகதை 
வரும் ஞாயிறு 11.12.2011 
அன்று வெளியிடப்படும். 
காணத்தவறாதீர்கள். 
அன்புடன் 
vgk 

செவ்வாய், 6 டிசம்பர், 2011

தா யு மா ன வ ள் [ பகுதி 2 of 3 ]


தாயுமானவள்

சிறுகதை [பகுதி 2 of 3]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-



முன்கதை முடிந்த இடம்:



பெரிய பலூன் ஒன்றை ஊதி அந்தப்பெண்குழந்தையின் கையில் கொடுத்தான் முனியாண்டி. சிறிய புன்னகையுடன் “தாங்க்யூ அங்கிள்” என்று சொன்ன அந்தக்குழந்தை, ”ரொம்பவும் பசிக்குது அங்கிள்” என்றது.


அடுத்த பகுதி தொடர்கிறது ...................


”கொஞ்சம் பொறுத்துக்கும்மா, இப்போ அப்பா வந்துடுவாரு” என்றான் முனியாண்டி.


”அப்பாவும் அம்மாவும் தான் செத்துப்போய்ட்டாங்களாமே! எப்படி இப்போ வருவாங்க? என்றது அந்தப்பெண்குழந்தை.


அதைக்கேட்ட முனியாண்டிக்குத் தலை சுற்றியது.


”உங்க வீடு எங்கம்மா இருக்கு” என்றான்.


”நாகப்பத்திணம். (நாகைப்பட்டிணம் என்பதை மழலையில் சொல்கிறது) நான் ஸ்கூல் விட்டு ஆட்டோவில் திரும்ப வீட்டுக்கு வருவதற்குள் அப்பாவையும் அம்மாவையும் சுனாமின்னு ஒரு Sea Water [கடல் தண்ணீ ] வந்து அடிச்சுட்டுப் போய்ட்டதாச் சொன்னாங்க” குழந்தை கண்கலங்கியவாறு சொல்லியது.


”இப்போது கூட்டியாந்த மாமா யாரும்மா” முனியாண்டி அவள் கண்களை தன் வேட்டித் தலைப்பால் துடைத்து விட்டு, பரிவுடன் வினவினான்.


”அவரு யாருன்னு எனக்குத்தெரியாது அங்கிள்; அவரு தான் எங்க ஊர்லேந்து என்னை பஸ்ஸிலே கூட்டியாந்து இங்கே உங்கள்ட்டே விட்டுட்டுப் போய்ட்டாரு. ராத்திரி பஸ்ஸிலே வரும்போதே பசிக்குதுன்னு சொன்னேன். சாப்பிட எதுவுமே வாங்கித்தராம பயமுறுத்திக்கிட்டே வந்தாரு. அவரு வெரி வெரி பேடு [BAD] அங்கிள்” என்றது அந்தப்பெண் குழந்தை.


சுமார் மூன்று வயதுக்குழந்தை பசியால் அழுதது முனியாண்டியின் வயிற்றைப் பிசைந்தது. 


தேர் நின்றுகொண்டிருந்த முச்சந்தியில் இருந்த “ராமா கஃபே” என்ற ஹோட்டலுக்குக் குழந்தையைக் கூட்டிச்சென்றான்.


சுற்றிமுற்றிப்பார்த்தும், அந்தத் தேர்த்திருவிழாக் கும்பலில் அந்தக் கைலிக்காரனை முனியாண்டியால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.


சூடான சுவையான இரண்டு இட்லிகளை மட்டும் சாம்பார் சட்னியில் தோய்த்து சாப்பிட்டுத் தண்ணீர் குடித்த குழந்தையின் முகத்தில் ஓர் புதுப்பொலிவு.


“பலூன் அங்கிள்! யூ ஆர் வெரி குட் ஸ்வீட் அங்கிள்!! தாங்க்யூ வெரி மச்; ஐ லவ் யூ சோ மச்” என்று கூறி அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.


முனியாண்டிக்கு இது ஒரு இனம் புரியாத பேரின்பத்தையும், அதே நேரம் இந்தக் குழந்தையை நான் என்ன செய்வது? என்ற கவலையையும் அளித்தது.


அம்மனின் தேர் அந்த முச்சந்தியையும், அந்த ”ராமா கஃபே” ஹோட்டலையும் தாண்டி நகரத்தொடங்கியதில், அந்தப்பகுதியில் சற்றே கூட்டம் குறைந்திருந்தது.


குழந்தையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, தேர் சென்ற திக்கிலேயே, தேரின் பின்புறமாகச் சற்று தள்ளி, தன் வியாபாரத்தையும் கவனித்துக்கொண்டு, அந்தக் கைலிக்காரனையும் தன் கண்களால் தேடிக்கொண்டு, கிரிவலமாகப் புறப்பட்டான் முனியாண்டி.








தன் வயிற்றுப்பசிக்கு, ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இலவச தண்ணீர்ப் பந்தல்களில் கிடைத்த நீர்மோர், கஞ்சி, குடிநீர் போன்ற ஏதோவொன்றை வாங்கிக்குடித்து வந்தான் முனியாண்டி. 


ஆசையுடன் தன் கையில் பெரிய பலூன் ஒன்றை இறுக்கிப்பிடித்து நடந்து வந்த குழந்தைக்கு, நல்லதொரு ஸ்வீட்டான ”பலூன்அங்கிள்’ கிடைத்து விட்டதில் மட்டில்லா மகிழ்ச்சி.


ஊரு பேரு நாகப்பட்டிணம். தன் பெயரு விஜி, அப்பா பெயரு கோபால், அம்மா பெயரு ராஜி, தாங்க்யூ வெரி மச், வெரி குட், வெரி பேட், ஐ லவ் யூ சோ மச், வெரி ஸ்வீட் முதலியவை தவிர வேறு எந்தத் தகவலும் சொல்லத்தெரியாத மழலையாக இருந்தது அந்தக்குழந்தை.


மதியம் மூன்று மணி. உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கிறது. அம்மன் தேர், உச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலைத் தாண்டி,  “சாரதாஸ்” ஜவுளிக்கடலுக்கும், “மங்கள் மங்கள்”  நகைக்கடலுக்கும் இடையே, ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கிறது.


உச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலில் புகுந்து, குழந்தையுடன் மாணிக்க விநாயகர் சந்நதியை அடைந்தான், முனியாண்டி.


மாணிக்க விநாயகர் சந்நதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள பெரிய மண்டப நிழலில் சந்தோஷி மாதா படத்தருகே சற்றே அமர்ந்தான். வெளியே அடிக்கும் வெய்யிலுக்கு அந்த இடம் குளிரூட்டப்பட்ட அறை போல மிகக்குளுமையாகவே இருந்தது.


அங்குள்ள குருக்கள் ஐயா ஒருவர் சர்க்கரைப்பொங்கல் விநியோகம் செய்து கொண்டிருந்தார். தானும் வாங்கிக்கொண்டு, அந்தக்குழந்தைக்கும் வாங்கிக் கொடுத்தான். பலூன்கள் அனைத்தும் அநேகமாக விற்றுத்தீர்ந்திருந்தன. 


தன் தலைப்பாகைத் துண்டை உதறி விரித்து, குழந்தையை ஒரு தூண் ஓரமாகப்படுக்க வைத்தான். தானும் தன் வியாபாரப்பொருட்களை ஒரு ஓரமாக வைத்து விட்டு அந்தக் குழந்தையின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.  


குழந்தை கண் அசந்து தூங்கத்தொடங்கியது. ஆனால் அதன் பிஞ்சு விரல்கள் மட்டும் முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தது.  அதன் மற்றொரு கையில் வைத்திருந்த மிகப்பெரிய பலூன் கைநழுவி அந்த மிகப்பெரிய கோயில் மண்டபத்தினுள் அடித்த காற்றில், இங்குமங்கும் பறந்து, தனக்குத்தானே விளையாடிக் கொண்டிருந்தது. முனியாண்டியும் உட்கார்ந்திருந்த நிலையிலேயே கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்திருந்தான். 


தொடரும்


[இந்தச் சிறுகதையின் இறுதிப்பகுதி 09.12.2011 
வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்படும்]





[ இந்தச் சிறுகதை சுனாமி என்ற இயற்கைப் பேரிடர் 
தமிழகத்துக்கு வந்து மனித சமுதாயத்தையே 
உலுக்கிவிட்டுச்சென்ற பின்பு 
2005 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்டது.


இந்தக்கதை பற்றிய மேலும் சுவையான விபரங்கள் சிலவற்றை 
இதன் அடுத்த பகுதியில் விரிவாகத்தந்துள்ளேன் ]


காணத்தவறாதீர்கள்


அன்புடன் 
vgk

சனி, 3 டிசம்பர், 2011

தா யு மா ன வ ள் [ பகுதி 1 of 3 ]



தாயுமானவள்


சிறுகதை [பகுதி 1 of 3]
By
வை. கோபாலகிருஷ்ணன்
-ooOoo-






திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத்தெரு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மலையைச்சுற்றியுள்ள நான்கு பெரிய வீதிகளிலும், மழை பெய்ததுபோல, வாடகைக்கு எடுத்த முனிசிபல் லாரிகள் மூலம் காவிரி நீர் பீச்சப்பட்டு, கலர் கலராகக் கோலங்கள் போடப்பட்டுள்ளன.   


ஆங்காங்கே மாவிலைத் தோரணங்களுடன் தண்ணீர் பந்தல்கள். பானகம், நீர்மோர், உப்புடன் பாசிப்பருப்பு கலந்த வெள்ளரிப் பிஞ்சுக்கலவை என ஏதேதோ பக்தர்களுக்கும், பசித்துக்களைத்து வருபவர்களுக்கும் இலவச விநியோகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

வடக்கு ஆண்டார் தெருவின் மேற்கு மூலையில், தெருவோரமாக உள்ள பிள்ளையார் கோயில் வாசலில், பெரிய பெரிய அண்டாக்களிலும், குண்டான்களிலும், கஞ்சி காய்ச்சப்பட்டு ஏழைபாழைகளுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

வேப்பிலைக்கொத்துடன் தீச்சட்டிகளைக் கையில் ஏந்தி, மஞ்சள் நிற ஆடையணிந்து மாலையணிந்த மங்கையர்க் கூட்டத்துடன், மேள தாளங்கள்,கரகாட்டம், காவடியாட்டம், வாண வேடிக்கைகள் என அந்தப்பகுதியே கோலாகலமாக உள்ளது. எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக! 

முனியாண்டி தன் தொழிலில் மும்முரமாக இருக்கும் நேரம். அவனைச்சுற்றி ஒரே மழலைக்கூட்டம். கையில் நீண்ட மூங்கில் பட்டைக் கிளைகளுடன், கூடிய பெரியதொரு குச்சி. அதில் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டுள்ள கலர் கலர் பலூன்கள். கூலிங் க்ளாஸ் கண்ணாடிகள், விசில்கள், நீர் நிரம்பிய பலூன் பந்துகள், ஊதினால் மகுடிபோல் ஆகி குழந்தை அழுவதுபோல சப்தமெழுப்பி பிறகு ஓயும் பலூன்கள், ஆப்பிள், பறங்கி, பூசணி, புடலங்காய் போன்ற பல்வேறு வடிவங்களில் பலவிதமான கலர்களில் பலூன்கள் பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் விதமாக. அவனைச் சுற்றி நின்ற குழந்தைகளுக்கோ ஒரே குதூகலம்.

முனியாண்டியின் உள்ளத்தில் ஓர் உவகை.    இன்று எப்படியும் மாரியம்மன் அருளால் முன்னூறு ரூபாய் சம்பாதித்தே ஆக வேண்டும். டாக்டர் சொன்ன தொகை மூவாயிரத்துக்கு இந்த முன்னூறு மட்டுமே பாக்கி. கடந்த மூன்று வருடங்களாக நினைத்து ஏங்கிய ஒரு காரியம் நிறைவேறப்போகிறது. மனைவி மரகதத்தை எப்படியும் மகிழ்விக்க வேண்டியது அவன் கடமை.


காலையிலிருந்து நாஸ்தா செய்யக்கூட நேரமில்லை முனியாண்டிக்கு. நாக்கு வரண்டு விட்டது.  நீர் மோரை ஒரு தகரக்குவளையில் வாங்கி ஒரே மடக்காகக் குடித்துவிட்டு, பலூன்களை ஊதுவதும், ஊதியவற்றைக்கயிறு போட்டுக்கட்டுவதும், கேட்பவர்களுக்குக் கேட்பவற்றை எடுத்துக்கொடுத்து வியாபாரம் செய்வதும், காசை வாங்கி ஜோல்னாப்பையில் போடுவதும் என அவனின் பத்து விரல்களும் பத்துவிதமான பணிகள் செய்து வந்தன.


இத்தகைய தேர்திருவிழாக்களில்,முனியாண்டியைச்ச்சுற்றி எப்போதும் குழந்தைகளின் கூட்டம்.  ஆனாலும் தனக்கென இதுவரை ஒரு வாரிசு உருவாகவில்லையே என்ற ஏக்கம் உண்டு முனியாண்டிக்கு. திருமணம் ஆகி விளையாட்டுப்போல ஏழு ஆண்டுகள் உருண்டோடிப்போய் விட்டன.


மரகதமும் தன்னால் முடிந்த கூலி வேலைகளுக்குப்போய், சம்பாதித்து வரும் அன்பான அனுசரணையான மனைவி தான்.  முனியாண்டியும் மரகதமும் மனம் ஒத்த மகிழ்வான தம்பதிகளே. கஞ்சியோ கூழோ இன்பமாகப் பகிர்ந்துண்டு, கடன் ஏதும் இல்லாமல் காலம் தள்ளிவரும் ஜோடிகளே. காவிரிக்கரையோரம் ரயில்வே லைனை ஒட்டிய ஒரு சற்றே பெரிய குடிசை வீடு, அதுவே அவர்கள் இன்பமுடன் இல்லறம் நடத்தி வரும் அரண்மனை.  


திடீரென்று அடுத்தடுத்து பெரிய வேட்டுச்சத்தங்கள். குழந்தைகள் அனைவரும், தங்கள் காதைப்பொத்திக்கொண்டு, பலூன்களைக் கையில் பிடித்துக்கொண்டு, இங்கும் அங்கும் ஓடுகிறார்கள்.


போலீஸ்காரர்கள் கையில் தடியுடன் நடுரோட்டில் யாரும் நிற்காதபடி கூட்டத்தை ஒழுங்கு படுத்தி வருகின்றனர். முனியாண்டியும் ரோட்டின் ஒரு ஓரத்திற்குத் தள்ளப்படுகிறான். கூட்ட நெரிசலில் இரண்டு மூன்று பலூன்கள் பட்பட்டென வெடித்துச் சிதறுகின்றன. 


தேரில் அம்மன் தெருமுனைக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஆண்களும் பெண்களும் போட்டிபோட்டுக்கொண்டு தேர் வடத்தை எப்படியாவது தொட்டுக்கும்பிட முண்டியடித்து வருகின்றனர். 


அர்ச்சனை சாமான்களுடன் அலைமோதும் பக்தர்கள் முன்னுரிமை எடுத்துக்கொண்டு தேரின் நடுவே நெருங்க, கையில் அதை அப்படியே வாங்கி தேங்காயை மட்டும் தன் கை அரிவாளால் ஒரே போடு போட்டு குருக்கள் அவர்களிடம் எம்பியபடி அனுப்பி வைக்க ஒருசிலர் தேரில் தொங்கியபடியே.  கட்டிக்கட்டியாக சூடம் அம்மனுக்குக் கொளுத்திய வண்ணமாக. மிக முக்கியமான தெரு முனையானதால் தேர் நகரவே மிகவும் தாமதம் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே. 


வியர்த்துக்கொட்டும் மேனியுடன் தேர் இழுக்கும் ஆட்களில் சிலர், கும்பலாக வீடுகளுக்குள் புகுந்து, தண்ணீர் வாங்கியும், ஆங்காங்கே உள்ள ஒரு சில கிணறுகளில் தண்ணீர் இழுத்து மொண்டும், தங்கள் தலைகளில் ஊற்றிக்கொண்டு, வெளிச்சூட்டைத் தணித்துக்கொள்கின்றனர். வறுமைப்பிடியிலுள்ள கடும் உழைப்பாளிகளான அவர்களின் மனதில் உள்ள உள்சூடு எப்போது தான் தணியுமோ? அது அந்த அம்மனுக்கே வெளிச்சம்.  

”பலூன்காரரே! இந்தப்பாப்பாவைக்கொஞ்சம் பார்த்துக்கோ! பத்தே நிமிடத்தில் தேரிலுள்ள அம்மனைச்சற்று அருகில் சென்று கும்பிட்டுவிட்டு ஓடியாறேன்” என்று மின்னல் வேகத்தில் சொல்லிச்சென்ற கைலிக்காரனின் முகம் கூட மனதில் சரியாகப்பதியவில்லை முனியாண்டிக்கு.

குழந்தை முகம் மட்டும் பளிச்சென்று, அந்த அம்மனே தேரிலிருந்து இறங்கி நேரில் வந்தது போல இருந்தது.

நல்ல அழுக்கேறிய பாவாடை சட்டை. கையில் மட்டும் ஒருசில ரப்பர் வளைகள். காதுகளிலிருந்து தொங்கட்டான்கள் கழட்டப்பட்டதற்கு அடையாளம் போல வெறும் ஓட்டைகள். காலில் மிகவும் அழுக்கேறிய செருப்புகள். கொலுசுகள் முன்பு ஒரு நாள் போடப்பட்டிருக்கும் என்பதை யூகம் செய்ய ஒருசில சுவடுகள். சிடுக்கும் சிக்குமாக பலநாட்களாக எண்ணெயே பார்த்திராத தலைமுடி. இரட்டைப்பின்னல் இட்டதற்கான அறிகுறிகள்.

பெரிய பலூன் ஒன்றை ஊதி அந்தப்பெண் குழந்தையின் கையில் கொடுத்தான் முனியாண்டி. சிறிய புன்னகையுடன் “தாங்க்யூ அங்கிள்” என்று சொன்ன அந்தக்குழந்தை, ”ரொம்பவும் பசிக்குது அங்கிள்” என்றது.

தொடரும்





இந்தச் சிறுகதையின் தொடர்ச்சி 06.12.2011 
செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்படும் 
vgk

வியாழன், 1 டிசம்பர், 2011

காதல் வங்கி







காதல் வங்கி

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo- 

ஜானகி அந்தப்பிரபல வங்கியின் காசாளர். பணம் கட்டவோ வாங்கவோ அங்கு பல கெளண்டர்கள் இருப்பினும், வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் விரும்புவது ஜானகியின் சேவையை மட்டும்தான்.  

மிகவும் அழகான இளம் வயதுப்பெண் என்பதால் மட்டுமல்ல. தேனீ போன்ற சுறுசுறுப்பு. வாடிக்கையாளர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பாதவள். தன்னை நாடி வரும் அனைவருக்குமே சிரித்த முகத்துடன், சிறப்பான ஒரு வித வாஞ்சையுடன் கூடிய உபசரிப்பும் வரவேற்பும் அளிப்பவள். அனைவருடனும் மிகுந்த வாத்ஸல்யத்துடன் பழகுபவள்.

அடடா! ........... இவள் எவ்வளவு கட்டிச்சமத்தாக இருக்கிறாள்! தங்களுக்கு இதுபோன்ற தன்மையான, மென்மையான, அமைதியான, புத்திசாலியான, அழகான, பழகிட நல்ல கலகலப்பான பெண் ஒருத்தி பிறக்கவில்லையே என்றும் அல்லது மருமகள் ஒருத்தி அமையவில்லையே என்றும் ஏங்குவார்கள் அங்கு வரும், சற்றே வயதான வாடிக்கையாளர்கள்.

கவுண்டருக்கு வரும் இளம் வயது வாலிபர்களைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். யாரைப் பார்த்தாலும், இளைஞர்களின் கற்பனையே ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

மொத்தத்தில் வங்கிக்கு வரும் அனைவரையுமே, ஏதோ ஒரு விதத்தில், மகுடிக்கு மயங்கும் நாகம் போல, வசீகரிக்கும் அல்லது சுண்டியிழுக்கும் தனித்தன்மை வாய்ந்தவள் தான் அந்த ஜானகி.

இப்போது ரகுராமனும் அந்த வங்கியில் ஒரு வாடிக்கையாளர் தான். வங்கியின் சேவைகள், செயல்பாடுகள் பற்றியெல்லாம் எதுவும் அறியாமல் இருந்த ஆசாமி தான், ரகுராமன்.

மற்ற குழந்தைகள் போல பள்ளியில் சேர்ந்து படித்தவர் அல்ல ரகுராமன். அவரைப்பொருத்த வரை வங்கி என்றால் ஜானகிஜானகி என்றால் வங்கி. வேறு எதுவும் வங்கியைப்பற்றித் தெரியாதவர். எல்லோருக்கும் எல்லாவற்றையும் பற்றி தெரிய வேண்டும் என்ற நியாயமோ அவசியமோ இல்லையே!

ரகுராமனுக்கு சிறு வயதிலேயே பூணூல் போடப்பட்டு, அழகாக சிகை (குடுமி) வைக்கப்பட்டு, வேதம் படிக்க வேண்டி திருவிடைமருதூர் பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர் அவரது பெற்றோர்கள். பரம்பரையாக வேத அத்யயனம் செய்து வரும் வைதீகக் குடும்பம் அது.

ரகுராமனும் வெகு சிரத்தையாக குருகுலமாகிய வேத பாடசாலையில் வேதம், சாஸ்திரம், சம்ஸ்கிருதம், கிரந்தம் முதலியன நன்கு பயின்று முடித்தவர். 

அது தவிர ஓரளவுக்கு கணித பாடமும், பேச படிக்க எழுதக்கூடிய அளவுக்கு தமிழும் ஆங்கிலமும் கற்றுத்தேர்ந்தவர் தான். வேத சாஸ்திரங்களில் கரை கண்ட அளவுக்கு, லோக விஷயங்களில் அவருக்கு அதிக ஆர்வமோ ருசியோ இல்லை தான்.

இருப்பினும் தான் படித்த வேத சாஸ்திரங்களை அனுசரித்து, நம் முன்னோர்கள் வாழ்ந்த, ஆச்சாரமான எளிமையான வாழ்க்கை வாழ்ந்தால், தற்சமயம் கலியுகத்தில் ஜனங்கள் பட்டு வரும், பல்வேறு சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் ஒரு வடிகாலாக அமையும் என்பதால், தான் செல்லும் இடங்களிலெல்லாம், சந்திக்கும் மக்களுக்கெல்லாம், வேத சாஸ்திர வழிமுறைகளையும், அவற்றை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும், தனக்கே உரித்தான அழகிய பிரவசனங்கள் [ஆன்மீகச் சொற்பொழிவுகள்] மூலம் மக்கள் மனதில் நன்கு பதிய வைத்து வந்தார்.

ஜானகி வீட்டில் நடைபெற்ற ஏதோவொரு சுப வைபவத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர் தான் இந்த ரகுராமன். ரகுராமன் அவர்களை முதன் முதலாகச் சந்தித்த ஜானகி, அவரின் அழகிற்கும், முகத்தில் தோன்றும் பிரும்ம தேஜஸுக்கும்,  அறிவு வாய்ந்த அவரின் பாண்டித்யத்திற்கும், நல்ல விஷயங்களை, நல்ல விதமாக, நன்கு மனதில் பதியுமாறு எடுத்துச்சொல்லும் நாவன்மைக்கும், லோகம் முழுவதும் உள்ள மனித சமுதாயம் மட்டுமின்றி, சகல ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற அவரின் பிரார்த்தனைகளுக்கும், வியந்து போய் தன் மனதையே அவரிடம் பறிகொடுத்து விட்டாள்.

அவருடன் தனக்கு ஏதாவது ஒரு தொடர்பு ஏற்பட வேண்டுமே என சிந்திக்கலானாள்.  தன் வீட்டு விழாவுக்கு வந்திருந்த பலரும், ரகுராமன் அவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவதைப் பார்த்தாள் ஜானகி

நேராகச் சென்று தானும் அவர் கால்களில் விழுந்து கும்பிட்டு வணங்கி எழுந்தாள், ஜானகி. தான் ஒரு வங்கியில் பணிபுரிவதாகச் சொன்ன ஜானகி, ”உங்களுக்கு எந்த வங்கியில் வரவு செலவு கணக்கு உள்ளது” என்றும் வினவினாள்.

வில்லை முறித்த ஸ்ரீ இராமபிரான் முதன் முதலாக வெற்றிப்புன்னகையுடன் ஸீதாதேவியை நோக்கிய அதே பரவசத்துடன், தன்னை விழுந்து வணங்கிய ஜானகியின் அழகிலும், அடக்கத்திலும், இனிய குரலிலும் மயங்கி, தன்னை மீறி தன் உடம்பில் ஒருவித மின்சாரம் பாய்வதை உணந்தார், நம் ரகுராமன்.

   
இருவர் உள்ளத்திலும் ஒருவர் மேல் ஒருவருக்கு ஏதோ ஒருவித காந்தம் போன்ற கவர்ச்சியும், காதலும் கசிந்துருக ஆரம்பித்திருந்தது.

உண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது. 

காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது. திடீரென இப்படிப் பார்த்த மாத்திரத்திலேயே ஒருவருக்கொருவர் பரவசம் ஏற்படுத்துவதே உண்மையான காதலாகுமோ என்னவோ!

அன்றே, அப்போதே, அங்கேயே ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று ஜானகியிடம் தொடங்கப்பட்டு விட்டது.  புதிய வங்கிக் கணக்கைத் தொடங்க ஜானகியே எல்லா உதவிகளையும் வேக வேகமாகச் செய்து உதவினாள்.


அன்று இரவே, ஜானகியின் அம்மா, தன் மகளின் மனதில் பூத்துள்ள புதுப்புஷ்பத்தின் சுகந்தத்தை அறிந்து கொண்டு,  உண்மையிலேயே தன் மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாலும், அவளை சற்றே சீண்டிப்பார்த்தாள்.


“ஜானகி, நல்லா யோசனை செய்து பார்த்து நீ எடுத்த முடிவா இது?” என்றாள்.


“இதில் யோசிக்க என்ன இருக்கிறது?” என்றாள் ஜானகி.


“இல்லை, நீ நிறைய படிச்ச பொண்ணு, வேலைக்கும் போகிறாய், கை நிறைய சம்பாதிக்கிறாய். நவ நாகரீகமாக வாழ்க்கைப்பட்டு ஜாலியாக உன் இஷ்டப்படி இருக்க ஆசைப்படலாம்; 


இவரோ வேதம், சாஸ்திரம், புராணம்,  ஆச்சாரம், அனுஷ்டானம், அது இதுன்னு யாருக்குமே லேசில் புரியாத விஷயங்களை, பழைய பஞ்சாங்கம் போல பிரச்சாரம் செய்பவராக இருக்கிறார் ...... அதனால் கேட்டேன்” என்று லேசாக ஊதிவிட்டாள்.


“நான் படிச்ச படிப்பெல்லாம் ஒரு படிப்பாமா? ஏதோ சும்மாதானே வீட்டில் இருக்கிறோம்ன்னு ஒரு பொழுதுபோக்குக்காக இந்த வேலையை ஒத்துக் கொண்டேன். கை நிறைய சம்பளம் யார் தான் இன்று வாங்கவில்லை? நவ நாகரீக வாழ்க்கை என்பதெல்லாம் எத்தனை நாளைக்கு அம்மா வாழமுடியும்? எதுவுமே கொஞ்ச நாளில் சலிப்பு ஏற்படுத்தித்தானே விடும்!; 


அதுவும் கல்யாணம் என்ற ஒன்று ஒருவருடன் எனக்கு ஆகிவிட்டால், என் இஷ்டப்படி எப்படி என்னால் வாழமுடியும்? இப்போ உன்னையே எடுத்துக்கொள்ளேன், நீ உன் இஷ்டப்படியா வாழ முடிகிறது அல்லது ஏதாவது முக்கிய முடிவுகளாவது உன் இஷடப்படித்தான் எடுக்க முடிகிறதா? எல்லாமே அப்பா இஷ்டப்படித்தானே நடக்கிறது! நீயும் அதைத்தானே மகிழ்வுடன் எப்போதும் ஏற்றுக்கொண்டு வருகிறாய்; அதுபோல நானும் இருந்துவிட்டுப்போகிறேனே!! ;


உனக்கு மாப்பிள்ளையா வரப்போகும் இவர் தான் அம்மா, உண்மையில் மனுஷ்யனாகப் பிறந்தவன் என்ன படிக்கணுமோ, அதையெல்லாம் படித்துள்ளார்; எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளணுமோ, அவற்றையெல்லாம் தெரிந்து வைத்துள்ளார்;  


நம் தாத்தா பாட்டி, ஏன் நம் பரம்பரையே ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்து, நித்யப்படி பூஜை புனஷ்காரங்கள் செய்து ஆனந்தமாக வாழ்ந்தவர்கள் தானே! அதனால் தானே நாம இன்னிக்கு சந்தோஷமா செளக்யமா இருக்க முடிகிறது?” என்றாள் ஜானகி.


தன் பெண்ணின் தீர்க்கமான முடிவை எண்ணி வியந்த அவளின் தாயார் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்று விட்டிருந்தாலும், அவளை மேற்கொண்டு சீண்டுவதிலும் சற்றே ஆசைப்பட்டாள். அருமை மகளும் ஆருயிர்தோழியும் ஒன்றல்லவா! இதுவரை தாயாக இருந்து பேசியவள் இப்போது தோழியாக மாறிப் பேசலானாள்:


”உன் ஆத்துக்காரர் பேண்ட், சட்டை கோட்டு சூட்டுப் போட்டு டைகட்டி டிப்-டாப்பாக உனக்கு இருக்க வேண்டாமா? கட்டுக்குடுமியுடன், கல்யாணம் ஆனதும் பஞ்சக்கச்சம் கட்டிண்டு, காதிலே கடுக்கண்கள் போட்டுண்டு இருந்தால் நோக்குப்பரவாயில்லையா ? “ என்றாள்.


“அம்மா, இந்த டிப்-டாப் ஆசாமிகளைப் பற்றியெல்லாம் நோக்குத்தெரியாதும்மா. கோட்டுச் சூட்டுப்போட்டு வெளியிலே டை கட்டியவன் எல்லாம் உள்ளுக்குள்ளே வேறொருவனுக்கு கைகட்டித்தான் வேலைப்பாக்கணும்; அதிலும் பாதிபேர் குடிச்சுட்டு வராங்க, தம்மடிக்கிறாங்க, ஊரெல்லாம் கடன் வாங்கறாங்க, ஆபீஸுலே எல்லா லோனும் போடுறாங்க, எதை எதையோ தேவையில்லாததை எல்லாம் தேடி அலையறாங்க. கெட்டபழக்கம் ஒண்ணு பாக்கியில்லாம பழகிக்கிறாங்க;


எந்தவொரு ஆச்சார அனுஷ்டானமும் இல்லாமல் கண்ட எடத்துல கண்டதையும் திங்கறாங்க. கடைசியிலே ஆரம்பத்திலே இருக்குற நிம்மதியைப்பறி கொடுத்துட்டு, நடைபிணமாத் திரியறாங்க! இலவச இணைப்பா வியாதியை சம்பாதித்து வந்து பெண்டாட்டி, பிள்ளைகளுக்கும் பரப்பிடறாங்க. உலகத்துல இன்னிக்கு என்னென்ன அநியாயங்கள் நடக்குதுன்னு நாட்டு நடப்பே தெரியாம, நீ ஒரு அப்பாவியா இங்கே இருக்க;

உனக்கு மாப்பிள்ளையா வரப்போற பத்தரை மாத்துத் தங்கத்தையும், கவரிங் நகைபோன்று நாளடைவில் பளபளப்பிழந்து பல்லைக்காட்டக்கூடிய, இந்தப் படாடோபப் பேர்வழிகளான டிப்-டாப் ஆசாமிகளையும், நீ ஒப்பிட்டுப்பேசறதே எனக்குப்பிடிக்கலை; 


வேத சாஸ்திரங்கள் படித்தவர்கள் எப்போதுமே தவறான குறுக்கு வழிகளுக்குப் போகவே தயங்குவாங்க! அவங்க மனசாட்சி அதுபோல தப்பெல்லாம் செய்ய ஒரு நாளும் அவர்களை அனுமதிக்காது; 


குடுமி என்னம்மா குடுமி!  ”வெச்சா குடுமி--சரச்சா மொட்டை” ன்னு, அப்பாவும் நீயும் தான் பழமொழி சொல்லுவீங்களே!    அந்தக்ககாலத்துல நம் முன்னோர்களெல்லாம் இதே குடுமிதானே வெச்சிண்டிருந்தா, இப்போ நாகரீகம் பேஷன்னு அடிக்கடி தலை முடியை மட்டும் மாத்திக்கிறா; 


பொம்மனாட்டிகளும் மாறிண்டே வரா; பாவாடை சட்டை தாவணியெல்லாம் போய், மிடி, நைட்டி, சுடிதார், ஜீன்ஸ் பேண்ட், டீ-ஷர்ட்டுனு ஏதேதோ போட ஆரம்பிச்சுட்டா.சுதந்திரம் வேணும்னு சிலபேர் காத்தாட சுதந்திரமாவே உடை அணிய ஆரம்பிசுட்டா. ஆம்பளைகள் மாதிரி தலையையும் பாப் கட்டிங் பண்ணிக்க ஆரம்பிச்சுட்டா; 


ஆம்பளைகளும் அடியோட பொம்மனாட்டி மாதிரி மாறிண்டே வரா; ஸ்கூட்டர் பைக் ஓட்டிப்போவது ஆம்பளையா, பொம்பளையான்னே இப்போ டக்குன்னு கண்டு பிடிக்க முடியலே!;


அதுவும் லேட்டஸ்ட் பேஷன் படி இந்தக்கால பையன்களெல்லாம் பொம்மணாட்டியாட்டம் தலைமுடியை வளர்த்து, அள்ளி முடிஞ்சு ரப்பர் பேண்ட் போட்டுக்க ஆரம்பிச்சாச்சு, காதுலேயும் தோடு போல, கம்மல் போல ஏதேதோ வளையம் போட ஆரம்பிச்சுட்டா.  பழங்கால வழக்கப்படி ஒரு நாள் குடுமியே திரும்ப பேஷன்னு வந்தாலும் வந்துடும், பேஷன்னெல்லாம் எதுவுமே நிரந்தரமானது இல்லையேம்மா;


பேஷன் அடிக்கடி மாறும்மா; ஆனா உனக்கு மாப்பிள்ளையா வரப்போறவர் எப்போதுமே மாறாம அப்படியே நம் சாஸ்திர சம்ப்ரதாயப்படி நல்லவிதமாக நடந்துகொண்டு, அந்த ஸ்ரீராமாயணத்தில் வரும் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி மாதிரி “ஒரு சொல்” “ஒரு வில்” “ஒரு இல்” என்று ஏகபத்னி விரதனாத்தானம்மா இருப்பார். அது தானேம்மா நமக்கு ரொம்பவும் முக்கியம்” என்று பெரிய பிரசங்கமே செய்ய ஆரம்பித்து விட்டாள், ஜானகி.


ஜானகியின் கன்னங்கள் இரண்டையும் தன் இருகைகளாலும் வழித்து, தன் தலையில் விரல்களை வைத்து சொடுக்கியபடி, அவளின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாள், ஜானகியின் தாயார். 


”எப்படிடீ உனக்கு அவர் இப்படி ஒரு சொக்குப்பொடி போட்டார்?” என்றாள் மேலும் கொஞ்சம் அவளின் அழகான பேச்சுக்களைத் தொடர்ந்து கேட்டு மகிழ.


”அம்மா, அவர் சொற்பொழிவுகள் அடங்கிய CD ஒன்று தேடிப்பிடித்து இன்று தான் கடையில் வாங்கி வந்து கேட்டு மகிழ்ந்தேன். ஒவ்வொரு விஷயத்தையும் எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார், தெரியுமா!;


நாம் எவ்வளவோ பிறவி தாண்டித்தான் இந்த மகத்துவம் வாய்ந்த மனுஷ்யப்பிறவியை அடைகிறோமாம். மனுஷ்யாளாப் பிறப்பதே அரிது என்கிறார்.   பிறவிப்பெருங்கடலைத் தாண்ட மனுஷ்ய ஜன்மா மட்டுமே சுலபமாக வழிவகுக்குமாம்; 


மனுஷ்யாளால் தான் பகவன் நாமாக்கள் சொல்லி வழிபட முடியுமாம். பகவன் நாமா ஒன்று தான் மோட்சத்திற்கு வழிவகுக்குமாம். எவ்வளவு அழகாக மனதில் பதியுமாறு மோட்சத்திற்கான வழிகளைச் சொல்கிறார் தெரியுமா! அவருடைய அபூர்வ விஷயஞானம் மட்டும் தானம்மா அவர் எனக்கு போட்ட ஒரே சொக்குப்பொடி” என்றாள் ஜானகி, தன் முகம் பூராவும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போட்டது போன்ற ஓர் பொலிவுடனும், பூரிப்புடனும்.


பருவ வயதில் தன் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்னவென்று பெற்ற தாயாருக்குப் புரியாதா என்ன? சிரித்தபடியே ஜானகியை அள்ளிப் பருகி அவள் நெற்றியில் முத்தமிட்டு, தலையைக் கோதிக்கொடுத்து, அவளை அப்படியே கட்டியணைத்துத் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டாள், ஜானகியின் தாயார்.

தினமும் அந்த வங்கியின் வாசலில் ரகுராமன் தனது காரில் வந்து இறங்குவதும், அவர் உள்ளே நுழையும் முன்பே, வந்துவிடும் செல்போன் தகவலால், வழிமேல் விழி வைத்து ஜானகி ஆவலுடன் ஓடிவந்து, அவரை வரவேற்பதும், வாடிக்கையான நிகழ்ச்சியாக இருந்து வந்தது.


ஒரு ஹேண்ட்பேக் நிறைய வழிய வழிய ரூபாய் நோட்டுக்களாகவும், சில்லறை நாணயங்களாகவும் ரகுராமன் ஜானகியிடம் தருவார். ஜானகி கையால் ஒரு டம்ளர் ஜில் வாட்டர் மட்டும் வாங்கி அருந்துவார். முதல் நாள் அவளிடம் பணத்துடன் ஒப்படைத்துச் சென்ற காலிசெய்யப்பட்ட ஹேண்ட்பேக்கை ஞாபகமாக திரும்ப வாங்கிச் செல்வார். இவ்வாறு இவர்களின் காதல் சந்திப்புக்களும், வங்கிக்கணக்கும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்ந்தும் வளர்ந்தும் வந்தன.


ரகுராமனின் வங்கிக்கணக்கில் ஜானகியின் கைராசியால் இன்று பல லக்ஷங்கள் சேர்ந்து விட்டன. அவர்கள் இருவரின் ஆசைப்படி, வங்கிக்கணக்கில் ஒரு அரை கோடி ரூபாய் சேர்ந்த பிறகு, ஊரறிய சிறப்பாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதுபோல அவர்கள் மனதுக்குள் ஓர் ஒப்பந்த நிச்சயதார்த்தம் ஏற்கனவே நடந்துள்ளது. அந்த அரைக்கோடி ரூபாய் சேமிப்பை எட்டப்போகும் நல்ல நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. 


வங்கியில் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் தவிர, வங்கிக்கு வந்து போகும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், கடந்த ஒரு மாதமாக ஜானகி தன் திருமண அழைப்பிதழ்களை, தன் வெட்கம் கலந்த புன்னகை முகத்துடன் விநியோகித்து வருகிறாள்.


இரு வீட்டாருக்கும் அறிந்த தெரிந்த சொந்தங்களும், நண்பர்களுமாக அனைவரும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தி மகிழ, ஜாம் ஜாம் என்று ரகுராமன் ஜானகியின் விவாஹம், சாஸ்திர சம்ப்ரதாய முறைப்படி, நான்கு நாட்கள், இரு வேளைகளும் ஒளபாஸன ஹோமங்களுடன், இனிதே நடைபெற்று முடிந்தது.


ரகுராமன் விருப்பப்படியே ஜானகி தொடர்ந்து தன் வங்கிப்பணிக்குச் சென்று வரலானாள்.


தன் கணவரின் வேத சாஸ்திர நம்பிக்கைக்கு ஏற்றபடி, தினமும் மடிசார் புடவையுடன், இரண்டு மூக்குகளிலும் வைர மூக்குத்திகள் ஜொலிக்க, காதுகள் இரண்டிலும் வைரத்தோடுகள் மின்ன, காலில் மெட்டிகள் அணிந்து, கைகள் இரண்டிலும் நிறைய தங்க வளையல்கள் அடுக்கிக்கொண்டு, தன் நீண்ட கூந்தலை ஒற்றைச்சடையாக குஞ்சலம் வைத்து பின்னிக்கொண்டு, உள்ளங்கைகளிலும், விரல்களிலும் பட்டுப்போல மருதாணி சிவக்க, முகத்திற்கு பசு மஞ்சள் பூசி, நெற்றியிலும், நடு வகிட்டிலும் குங்குமம இட்டுக்கொண்டு, தலை நிறைய புஷ்பங்கள் சூடி, வாயில் தாம்பூலம் தரித்து, கழுத்தில் புதிய மஞ்சள் கயிற்றுடன் திருமாங்கல்யம் தொங்க, கோயிலிலிருந்து புறப்பட்ட அம்மன் போல காட்சியளித்த ஜானகி, வங்கியின் கேஷ் கெளண்டரில் எப்போதும் போல சுறுசுறுப்பாகப் பணியாற்றி வந்தாள்.


மிகவும் லக்ஷ்மிகரமாகத் தோற்றம் அளிப்பதாக ஒரு சிலர் வாய் விட்டுப் பாராட்டும் போது, கொடி மின்னலென ஒரு புன்னகையுடன் அதனை ஏற்றுக்கொள்வாள் ஜானகி.




அவள் கையால் கொடுக்கும் பணத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு, அந்த தனலக்ஷ்மி அம்பாளே நேரில் வந்து தந்ததாக நினைத்துக்கொண்டனர், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள்.



வழக்கமான தோற்றத்தில் இல்லாமல் புதுமையாகத் தோன்றிய ஜானகியைப் பார்ப்பவர்களுக்கு, அது சற்றே அதிசயமாக இருப்பினும், அவளைக் கையெடுத்துக் கும்பிட்டுப் போகணும் என்ற நல்லெண்ணத்தையே ஏற்படுத்தியது.






    


-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-


இதைவிட சற்றே சுருக்கி நான் முதலில் எழுதி அனுப்பிய இதேக்கதை  
’வல்லமை’ மின் இதழில் 30.11.2011 அன்று வெளியிடப்பட்டுள்ளது.


[ ஜானகிக்கும் அவள் தாய்க்கும் நடைபெறும் சம்பாஷணைகள் 
மட்டும் அதில் இடம்பெறாமல் அனுப்பியிருந்தேன் ]