About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, August 1, 2014

VGK 29 - அட்டெண்டர் ஆறுமுகம்



இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 07.08.2014 

வியாழக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 29

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:

 



’அட்டெண்டர் ஆறுமுகம்’

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-



வயது ஐம்பத்தாறு. சற்றே கருத்த நிறம். ஒல்லியான தேகம். நெட்டையான உருவம்.   இடுங்கிய கன்னங்கள். முரட்டு மீசை. காக்கியில் யூனிஃபார்ம் பேண்ட் + சட்டை; கழுத்துக்காலரில் எப்போதும் ஒரு கர்சீஃப். அடுத்தவருக்கு இரக்கம் ஏற்படுவதுபோல ஒருவித புன்னகையுடன் கூடிய ஏக்கப்பார்வையும், கூழைக் கும்பிடுவும் தான் நம் ’அட்டெண்டர் ஆறுமுகம்’ அவர்களின் அங்க அடையாளங்கள்.

பள்ளிப்படிப்பு அதிகம் இல்லை என்றாலும், அட்டெண்டர் ஆறுமுகத்திற்கு அந்த அலுவலகத்தின் அத்தனை வேலைகளும் அத்துப்படி தான். ஆறுமுகம் கைநாட்டுப் பேர்வழியும் அல்ல. இயற்கையாகவே பொது அறிவு அதிகம் அமைந்துள்ள அவரைப் படிக்காத மேதை என்றே சொல்லலாம். ஓயாத உழைப்பாளி. நேர்மையானவர். எல்லோரிடமும் அன்பாகப் பழகுபவர்.  

அலுவலகத்தில் அனைவரும் தன்னை ‘அட்டெண்டர் ஆறுமுகம்’ என அடைமொழியுடன் அழைப்பதை ‘மேதகு ஆளுனர்’ அல்லது ‘மாண்புமிகு முதலமைச்சர்’ போலவே மனதுக்குள் எண்ணி மகிழ்ந்து வந்தவர்தான் இத்தனை நாட்களும்.



நூற்றுக்கணக்கான பேர்கள் பணியாற்றும் அந்த அலுவலக வேலை நேரம் முடிந்து அநேகமாக எல்லோரும் வெளியேறிய பின் மிகவும் தயங்கியவாறே, மேனேஜர் அறைக்குள் மிகவும் பெளவ்யமாக நுழைந்தார் ’அட்டெண்டர் ஆறுமுகம்’

”கும்புடறேன் எஜமான்” ஆறுமுகம் குழைந்தார்.

”என்ன ஆறுமுகம்? என்ன தயங்கித் தயங்கி நிற்கிறீங்க! என்ன வேணும் சொல்லுங்க!!” மேனேஜர் அவர்கள் கனிவுடன் வினவினார்.

”ஐயா, என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு இருக்கேன். புரோக்கர் நல்ல இடமா ஒன்னு பார்த்துச் சொல்லியிருக்காரு. மேற்கொண்டு பேசி முடிக்கணும். சரிப்பட்டு ஒத்து வந்தால் வரும் தை மாசமே முடிச்சுடலாம்னு நினைக்கிறேன்” என்றார்.

”ரொம்ப சந்தோஷம், ஆறுமுகம். ஏதாவது பி.எஃப். லோன் அவசரமா சாங்ஷன் செய்யணுமா? வேறு ஏதாவது உதவிகள் தேவையா? நீங்க தான் இந்த ஆபீஸிலேயே ரொம்ப நாள் சர்வீஸ் போட்ட பழைய ஆளு. சங்கோஜப்படாம எந்த உதவி வேண்டுமானாலும் தைர்யமாக கேளுங்க” என்றார் மேனேஜர். 

“உங்க புண்ணியத்திலேயும், கடவுள் புண்ணியத்திலேயும், வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி, பொண்ணு பிறந்த நாளிலிருந்து இன்னிக்கு வரை, அவள் கல்யாணத்துக்கு வேண்டிய, பணம், நகை நட்டு, பாத்திரம் பண்டம் எல்லாம் ஓரளவு சேர்த்து வைச்சுட்டேனுங்க, ஐயா” என்றார் ஆறுமுகம்.

”வெரிகுட், அப்புறம் என்ன ஆறுமுகம்; சீக்கிரமாப்போய் பேசி முடிச்சுட வேண்டியது தானே” என்றார் மேனேஜர்.

“பேசி முடிச்சுட்டா, பத்திரிகை அடிக்கணுமே, ஐயா” என்றார் ஆறுமுகம்.

”பத்திரிகை அடிப்பதிலே என்ன பெரிய பிரச்சனை? நானே வேண்டுமானால் என் செலவிலேயே அடித்துத் தரட்டுமா? டிசைன் செலெக்ட் செய்யணுமா? வாசகம் ஏதாவது அழகாக எழுதித்தரணுமா? ப்ரூஃப் கரெக்ட் செய்து தரணுமா? சொல்லுங்க ஆறுமுகம்! என்னிடம் நீங்க என்ன எதிர்பார்க்குறீங்க? 

”ஐயா, நானும் இந்த ஆபீஸிலே சேர்ந்து இன்னியோட முப்பத்து ஆறு வருஷமாச்சு. இருபது வயசுலே இங்கே வேலைக்குச்சேர்ந்தேன். இன்னும் இரண்டு வருஷத்திலே ரிடயர்ட் ஆகப்போகிறேன்; 

நானும் உங்களை மாதிரி என் சர்வீஸிலே ஒரு இருபது மேனேஜர்களைப் பார்த்து விட்டேன்.  டிரான்ஸ்ஃபரில் இங்கே வருவீங்க. ஒரு வருஷமோ இரண்டு வருஷங்களோ இங்கே இருப்பீங்க. பிறகு மூணாவது வருஷத்திற்குள் பிரமோஷனில், இங்கிருந்து வேறு ப்ராஞ்சுக்கு மாற்றலாகிப் போயிடுவீங்க;

ஆனால் என் நிலமையை சற்றே யோசனை செய்து பாருங்க.  1978 இல் நான் இந்த ஆபீஸிலே சேரும்போது அட்டெண்டர்.  1988 இல் எனக்கு ஒரு பொஞ்சாதி அமைந்தபோதும் நான் அட்டெண்டர். இப்போ 2014-15 இல் என் பொண்ணைக் கட்டிக்கொடுக்க நினைக்கும் போதும் அதே அட்டெண்டர். நாளைக்கே நான் ஒரு வேளை ரிடயர்ட் ஆனாலும், (முன்னாள்) அட்டெண்டர்; 

எனக்கே என்னை நினைக்க ஒரு வித வெட்கமாகவும், வேதனையாகவும், வெறுப்பாகவும் உள்ளது; இந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு எப்போதும் ஒருவித மன உளைச்சலைத் தந்து வாட்டி வருகுது, ஐயா ;

வருஷாவருஷம் இன்க்ரிமெண்ட் கிடைக்குது. சம்பளம் உயருது. பஞ்சப்படியும் உயருது, ஓவர்டைம் பணம் கிடைக்குது, போனஸும் கிடைக்குது;

இவையெல்லாமே கிடைத்து ஓரளவுக்கு கெளரவமாக வாழ்ந்தும்,  என் பொண்ணுக்கு சம்பந்தம் பேசும் இடத்தில் நான் இன்ன கம்பெனியில் வேலை பார்க்கிறேன் என்று பெருமையாகச் சொன்னவுடன், அங்கு என்ன வேலை பார்க்கிறீங்க என்று எதிர் கேள்வி கேட்குறாங்க;

நாளைக்கு மாப்பிள்ளையா வரப்போகிறவருக்கும், தன் மாமனார் ஒரு அட்டெண்டர் என்றால், அவரிடமிருந்து எனக்கு ஒரு மரியாதை கிடைக்குமா என்றும் நினைக்கவே சற்று சங்கடமாக உள்ளது,  ஐயா;

இதையெல்லாம் .... ஐயா கொஞ்சம் நினைத்துப்பார்த்து, மேலிடத்தில் சொல்லி ஏதாவது ஒரு மாற்று வழி பண்ண வேண்டும்” என்றார் ஆறுமுகம்.

அதிகம் படிக்காதவராக இருப்பினும், அனுபவ அறிவினாலும், ஆர்வத்தினாலும் பல விஷயங்களில் மிகவும் கெட்டிக்காரரான ஆறுமுகத்தின் கோரிக்கையிலுள்ள நியாயமானதொரு சமூகப் பிரச்சனையை முற்றிலும் உணர்ந்து கொண்டார், மனிதாபிமானம் மிக்க அந்த மேனேஜர். 




அடுத்து வந்த இயக்குனர்கள் கூட்டத்தில் இந்த விஷயத்திற்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்துப் பேசி, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து, ஒரு சுமுகமான தீர்வுக்கு வழி செய்தார், அந்த மேனேஜர்.

படிக்காதவர்களாக இருப்பினும், கடைநிலை ஊழியர்களில் 10 ஆண்டுகள் பணியாற்றி முடித்தவர்களுக்கு ஜிராக்ஸ் ஆப்பரேட்டர்கள் என்றும், 20 ஆண்டு பணி நிறைவு செய்தவர்களுக்கு ரிக்கார்டு கிளார்க்குகள் என்றும், 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு அலுவலக குமாஸ்தாக்கள் [OFFICE CLERK] என்றும் உடனடியாக பதவி மாற்றம் செய்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.


 

இருட்டு அறையில் விளக்கேற்றி சற்றே வெளிச்சம் கிடைத்தது போல, ஆர்டரை கையில் பெற்ற ஆறுமுகத்திற்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. துள்ளிக்குதிக்காத குறை மட்டுமே. 



மனிதாபிமானம் மிக்க அந்த மேனேஜரை தனிமையில் சந்தித்து ஆறுமுகம் கைகூப்பி நன்றி தெரிவித்தார்.


”பெண்ணுக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்து, மாப்பிள்ளை வரப்போகும் அதிர்ஷ்டவேளை தான், நம் அட்டெண்டர் ஆறுமுகத்திற்கு ’ஆபீஸ் கிளார்க்’ ஆகப் பிரமோஷன் வந்துள்ளது” என்று அந்த அலுவலகத்தில் உள்ள அனைவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.


இது நடந்து ஒரு மாதம் கழித்து ஆறுமுகத்துக்கு சம்பந்தியாக வரப்போகிறவர் [மாப்பிள்ளையின் அப்பா] எதற்கோ இவர் அலுவலகத்திற்கு ஃபோன் செய்து இவருடன் பேச விரும்புகிறார்.

ஃபோனை எடுத்தவரிடம் “ஆறுமுகம் ஐயா” இருக்கிறாருங்களா? என வினவுகிறார். 

“ஆறுமுகம் ஐயா என்று யாரும் இந்த ஆபீஸில் கிடையாதுங்க” என்கிறார் போனை எடுத்துப்பேசியவர்.

”நான் அழைத்த ஃபோன் நம்பர் இது தானுங்களே” என உறுதி செய்துகொள்கிறார் போனில் அழைத்தவர். 

“ஆமாம் ... அதே நம்பர் தான். உங்களுக்கு யாருங்க வேணும்?” எனத் திருப்பிக் கேட்கிறார் அந்த ஃபோனை எடுத்த சிப்பந்தி.

“ஆறுமுகம் ஐயாவோட பேசணும்” என்கிறார் மீண்டும் இவர்.

”யாருங்க.... அது ஆறுமுகம் ஐயா? அடடா .... நம்ம அட்டெண்டர் ஆறுமுகங்களா ? 'அட்டெண்டர் ஆறுமுகம்'ன்னு விபரமாச் சொல்ல வேண்டாங்களா?” என்கிறார் அந்த சிப்பந்தி. 

பிறகு, அந்த டெலிஃபோன் அழைப்பு, ஆறுமுகத்திடம் பேசுவதற்காகக் கொடுக்கப்படுகிறது.

ஆறுமுகம் போனில் பேசும்போது சம்பந்தியாக வரப்போகிறவர் இந்த சம்பவம் குறித்தும் ஆறுமுகத்திடம் லேஸாகத் தெரிவிக்கிறார். ஆறுமுகம் கொஞ்சம் வெட்கத்துடன் ”எனக்கு சமீபத்தில் தான் ஆபீஸ் கிளார்க்காகப் பிரமோஷன் கிடைத்துள்ளது ..... இருப்பினும் 'அட்டெண்டர் ஆறுமுகம்' என்று சொன்னால் தான் இங்குள்ளவர்களுக்கு உடனே புரிகிறது” என்றும் சற்றே வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

”அட, இதெற்கெல்லாம் வருத்தப்படாதீங்க சம்பந்தி. யாருமே திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது, பிச்சையெடுக்கக்கூடாது. மற்றபடி வயிற்றுப்பிழைப்புக்கு ஏதோ ஒரு கெளரவமான உத்யோகம், அதற்கு ஏதோவொரு கெளரவமான சம்பளம் ... அது தானே முக்கியம். அவனுங்க உங்களை எப்படிக்கூப்பிட்டால் தான் என்ன? அந்த காலத்தில், எங்க அப்பா காலத்தில், நம்மாளுங்க வெள்ளைக்காரனிடம் கைகட்டி வேலை பார்க்கும் போது  "PAY ME FORTY - CALL ME தோட்டி”  என்று சொல்லுவார்களாம் ... எங்க அப்பா சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். 1940ல் நாற்பது ரூபாய் சம்பளம் என்பது இன்றைய நாற்பதாயிரம் ரூபாய்க்கு சமமாகும் தெரியுமோ !” என்று உற்சாகமாகப் பேசினார் சம்பந்தி. சம்பந்தியின் இந்தப் பேச்சு நம் ஆறுமுகத்துக்கும் மிகவும் ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

ஆபீஸ் கிளார்க் [அட்டெண்டர்] ஆறுமுகத்தின் பெண் கல்யாணம் நல்லபடியாகவே அமர்க்களமாக நடந்தது முடிந்தது.








oooooOooooo

VGK-27 
 அவன் போட்ட கணக்கு ! 



  

  

 

 


VGK-27 
 அவன் போட்ட கணக்கு ! 

சிறுகதை விமர்சனப்போட்டி முடிவுகள்
வழக்கம்போல நாளை சனி / ஞாயிறு / திங்களுக்குள்
வெளியிடப்படும்.



காணத்தவறாதீர்கள்.





ஒவ்வொருவாரப் போட்டிகளிலும்

கலந்துகொள்ள மறவாதீர்கள்.



என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்

28 comments:

  1. படிக்காத மேதை அட்டெண்டர் ஆறுமுகம் மகள் திருமணத்தை நல்லவிதமாக நடத்த உதவிய பதவி உயர்வு சிறப்பு..

    ரோஜாவை வேறு பெயரிட்டு அழைத்தால்
    மணம் மாறிவிடுமா என்ன??

    ரோஜா ரோஜா தானே..

    சிறப்பான சிறுகதை ..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி August 1, 2014 at 12:36 AM

      வாங்கோ, வணக்கம்.

      //படிக்காத மேதை அட்டெண்டர் ஆறுமுகம் மகள் திருமணத்தை நல்லவிதமாக நடத்த உதவிய பதவி உயர்வு சிறப்பு..

      ரோஜாவை வேறு பெயரிட்டு அழைத்தால்
      மணம் மாறிவிடுமா என்ன??

      ரோஜா ரோஜா தானே..//

      முதல் வருகை தந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

      ரோஜாவை வேறு பெயரிட்டு அழைத்தால் மணம் மாறிவிடுமா என்ன?? ரோஜா ரோஜா தானே .. என அழகிய செந்தாமரை வந்து சொல்லியுள்ளது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //சிறப்பான சிறுகதை ..பாராட்டுக்கள்..//

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும் மணம் வீசிடும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

      Delete
  2. சிறப்பானதொரு சிறுகதை கண்டேன் நன்றி.

    ReplyDelete
  3. சிறப்பான சிறுகதை ஐயா
    படித்தேன்
    ரசித்தேன்
    நன்றி

    ReplyDelete
  4. கலந்து சிறப்பிக்கும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. பங்கு பெறும் அனைத்து விமரிசகர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. அட்டெண்டர் ஆறுமுகத்தின் நியாயமான கவலை! அதை நிவர்த்தி செய்த கனிவான மேனேஜர்! வேலையில் என்ன இருக்கு? என்று எந்த தொழிலானாலும் அதில் ஓர் சிறப்பு இருக்கு என்று சொன்ன அவரின் சம்பந்தி மூவரூமே என்னை கவர்ந்த கதை மாந்தர்கள் ஆனார்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அட்டெண்டர் ஆறுமுகத்திற்குக் கூட சம்பந்தி ப்ரமோஷனுக்கு முன்
    வேலை ப்ரமோஷன் அவசியமாகப்பட்டது. பெண்ணைப் பெற்றவர்
    மதிப்பு வேண்டுமே என்ற கோணத்தில் எவ்வளவு தேவைகள்.
    பாருங்கள் நல்ல சம்பந்தியே கிடைத்து விட்டார். நல்ல கதைப்போக்கு. மனம்தான் வேண்டும். அன்புடன்

    ReplyDelete
  8. அன்பின் வை.கோ - கதை அருமை - சிந்தனை நன்று - பதவி உயர்வே இல்லாத பதவிகளில் இருக்கும் பலரின் பிரசனைகள் இவைகள் தான். நல்ல நேரத்தில் கை கொடுக்கும் மேலாளர், ஆறுமுகத்தின் சம்பந்தி, அலுவலகத்தில் ஆவன செய்யும் உயர் பதவிகளில் இருக்கும் நல்லவர்கள் -அனைவரின் உதவிகள் ஆறுமுகத்திற்குக் கை கொடுத்ததன் விளைவு திருமணம் சிறப்பாக நடைபெற்றிருக்கும் - அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - கதை அருமை - இரசித்தேன் - இரண்டாவது மறுமொழி - முதல் மறுமொழியினை காக்காயோ குரங்கோ தூக்கிச் சென்று விட்டன. மற்படியும் ஒரு மறுமொழி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. எத்தனையோ நபர்களுக்கு உதவியாக அட்டெண்ட் செய்தவருக்குப் பெண் கல்யாணத்தில் சங்கடம். அதை முறையாகத் தீர்த்து வைக்கும் அருமையான மேலதிகாரி. நேரே காண்பது போலப் படங்கள். மிக அருமை கோபு சார். க்ளார்க் பதவி கிடைத்தும் சக ஊழியர்கள் அவரைச் சரியாக மதிப்பிடவில்லையே என்று வருத்தம். இதுவும் நடப்பதுதானே. ஆறுமுகம் அவர்களின் சம்பந்தி நடந்து கொள்ளும் மேன்மை நெகிழவைக்கிறது.. நல்ல என்றும் நிகழக் கூடிய கதை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. ஆரம்ப காலத்தில் முத்திரையிடப்படுவது கடைசி வரையில் அவ்வாறே நடந்துவிடுகிறது. சில மாற்றங்களை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை பல நிலைகளில் தோற்றே விடுகின்றன என்பதற்கு இக்கதை மிகச்சிறந்த உதாரணம். நல்ல நீதிக்கதை போல அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. பதவி உயர்வு கிடைத்தாலும் பழைய வேலையை வைத்தே அழைக்கபடுவது நடக்கும் விஷயம்தான்.

    ஆறுமுகம் அவர்களின் சம்பந்தி சொல்வது அருமை.
    நேர்மையாக எநத தொழிலும் செய்யலாம் அதில் உயர்த்தி தாழ்த்தி என்ன செய்யும் தொழிலே தெய்வம் தான் அதை சரியாக செய்தால் உயர்வு நிச்சயம்.
    அருமையான கதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அருமையான கதை! சம்பந்தியின் வார்த்தைகள் பொன்னான வார்த்தைகள்! "PAY ME FORTY - CALL ME தோட்டி” அப்போதே இருந்திருக்கின்றது....பல தொழிற் கூடங்களில் சேரும்போது என்ன பதவியோ அதே பதவியில் ரிட்டையர் ஆகும்வரை இருக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்! நல்ல மனித நேயம் மிக்க மானேஜர்!

    சொல்லப்பட்ட விதம் அழகு!

    ReplyDelete
  13. நாலு முறை பின்னூட்டம் கொடுத்தேன். போச்சா இல்லையானு தெரியலை. இங்கே குரங்கார் இல்லை. புறாக்கள் தான் நிறைய அவை தூக்கி வந்து கொடுக்கத் தான் செய்யும். :)

    ReplyDelete
  14. அட்டெண்டர் ஆறுமுகத்தின் வருத்தத்தை தீர்த்து வைத்த மேலதிகாரிக்கு நல்ல மனது. பாராட்டுகள் சார்.

    ReplyDelete
  15. இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனம் அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.

    இணைப்பு: http://enmanaoonjalil.blogspot.com/2014/11/vgk-29.html

    போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்தும்கூட, அதை தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திருமதி. ராதாபாலு அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    VGK

    ReplyDelete
  16. பதவியின் பெயர் ஒரு கௌரவமாகத்தான் கருதப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. கதை நல்லா இருக்கு. செய்யும் தொழிலே தெய்வம். இதில உயர்வென்ன தாழ்வென்ன?.

      Delete
  17. வழக்கம் போல் சூப்பர் கதை.

    //என்று உற்சாகமாகப் பேசினார் சம்பந்தி. சம்பந்தியின் இந்தப் பேச்சு நம் ஆறுமுகத்துக்கும் மிகவும் ஆறுதல் அளிப்பதாக இருந்தது.//

    உங்கள் எழுத்துக்களில் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்கள் இழையோடும்.

    ReplyDelete
  18. நிக்காஹ்னு வாரப்பதா இன்னாலா யோசிக்குறாய்ங்க. வாய்வுட்டு கேட்டுகிட்டதால பதவி ஒயர்வு கெடச்சிச்சி. வாயுள்ள புள்ளதா பொளச்சிகிடும் போல.

    ReplyDelete
  19. அட்டெண்டர் ஆறுமுகம் தன் மத ஆதங்கத்தை வாய்விட்டு சொன்னதால் மேலதிகாரியும நல்ல முடவு எடுத்தார. வாயுள்ள பிள்ளை. பிழைக்கத்தெரிந்த பிள்ளைதான். நல்ல கருத்தை சொன்ன கதை.

    ReplyDelete
  20. உண்மை உழைப்பு வீணாவதில்லை. யதார்த்தக் கதை.

    ReplyDelete
  21. ஒரு நல்ல நிர்வாகி தன்னிடம் பணியாற்றும் கடைநிலை ஊழியரின் கருத்துக்களைக் கூடக் கேட்டறிந்து, அதில் ஏற்புடையவற்றைப் பரிசீலித்து ஆவன செய்ய முயன்றால், அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடத்தில் நன்மதிப்பைப் பெறுவதோடு மட்டுமன்றி, அந்தக் கம்பெனியோ அல்லது அலுவலகமோ ஒரு நல்ல உயர்வைப் பெறும் என்பதில் ஐயமில்லை.



    பாத்திரத்தை மனதில் பதிய வைப்பதில் ஆசிரியரின் திறன். அட்டெண்டர் ஆறுமுகத்தின் தோற்றத்தை நான்கே வரிகளில் நயம்பட உரைப்பதன் மூலம் வெளிப்படுகிறது..

    இன்பம் என்பது துன்பத்தோடு கூடியது. வாழ்வில் இன்பத்திற்கு பணமும் அவசியம். தேவைக்கேற்ப பொருளீட்ட எந்தப் பணியில் இருந்தாலும் திறம்பட செயலாற்றி, நேரிய வழியில் செயல்பட்டு நம் கடமையில் தவறாது இருத்தல் ஒன்றே போதுமானது. பிறர் நம் பதவி குறித்தோ, செயல் குறித்தோ விமர்சிப்பதைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.



    உள்ளத்தனையது உயர்வு. எனவே தாழ்வு மனப்பான்மை அகற்றி, திறம்பட செயலாற்றி வரும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்தினால் உயர்வு நிச்சயம் என்பதை எளிமையான கதாபாத்திரங்களின் துணைகொண்டு, கோர்வையாகவும், ஆழமாகவும் உணர்த்திச் செல்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.

      //பாத்திரத்தை மனதில் பதிய வைப்பதில் ஆசிரியரின் திறன். அட்டெண்டர் ஆறுமுகத்தின் தோற்றத்தை நான்கே வரிகளில் நயம்பட உரைப்பதன் மூலம் வெளிப்படுகிறது..//

      மிக்க மகிழ்ச்சி

      தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  22. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 51

    அதற்கான இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2011/09/blog-post_20.html

    ReplyDelete
  23. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/08/vgk-29-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/08/vgk-29-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/08/vgk-29-03-03-third-prize-winner.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    ReplyDelete
  24. Dear gopalalrishnan, very good story x attender arumugam. After joining Shaw Wallace, I did not join
    Lic service based on policy * pay me forty call me thotty * though promotions were offered, neglected them, as I was contended with salary, bonus and job satisfaction.thanks

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ, வணக்கம்.

      என் தினசரி வாட்ஸ்-அப் வெளியீட்டு இணைப்பினைப் பார்த்து இங்கு வந்துள்ள தாங்கள் யார் என்று என்னால் யூகிக்க இயலவில்லை.

      எனினும் என் வலைத்தளப்பக்கம் தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான சொந்த அனுபவக் கருத்துக்களுக்கும், மனத்திருப்தி அடைந்த பிறகு .... நமக்கு இதுவே போதும்; இதுதான் நிம்மதி; இதுதான் நல்லது; பிரமோஷன் மட்டுமே வாழ்க்கையல்ல என அருமையானதொரு முடிவெடுத்து, செயல்பட்டது கேட்க எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      ’பிரமோஷன்’ என்ற தலைப்பிலேயே ஓர் மிகச்சிறிய
      நகைச்சுவை சிறுகதை வெளியிட்டுள்ளேன். அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.com/2011/10/blog-post_09.html முடிந்தால் படியுங்கோ.

      அன்புடன் VGK

      Delete