என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 7 ஜனவரி, 2011

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா [பகுதி 2]

முடிவாக தன் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி, பல் டாக்டர் ஒருவரை சந்தித்து பற்களை முழுமையாக க்ளீன் செய்து வந்து விடுவது என்ற முடிவுடன் கிளம்பினார்.

ஆஸிட்டுக்கு பை-பை என்ற விளம்பரத்தில் வரும் டாய்லெட் போல தன் பற்களும் பளிச்சென்று படு சுத்தமாகி விடும் என்ற இன்பக் கனவில் மூழ்கியவாறு நீண்ட க்யூவில் டாக்டரைப் பார்க்க அமர்ந்திருந்தார்.

தன்னைப்போலவே பலருக்கும் பலவித பல் பிரச்சனைகள் உள்ளன என்பதை அங்கு பல்லைக் காட்டிக்கொண்டு நிற்கும் பலரைப் பார்த்ததும் அறிந்து கொண்ட பஞ்சாமிக்கு, பல்லில் பாலை வார்த்தது போல இருந்தது. யான் பெற்ற துன்பம் பெறுக இந்த வையகமும் என்ற நல்லெண்ணம்.

வெற்றியோ, தோல்வியோ, இன்பமோ, துன்பமோ, நாற்றமோ, துர்நாற்றமோ, மெஜாரிட்டி இருந்தாலே ஒரு வித நிம்மதி தானே!

டாக்டரின் அழைப்பின் பேரில் உள்ளே நுழைந்ததும் அழகான சுழலும் நாற்காலியில் அமர்த்தப்பட்டார் நம் பஞ்சாமி. யாருக்குமே நாற்காலியைப் பிடித்து விட்டால் போதும், இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் பறந்து விட்டதாக ஒரு நினைப்பு வந்து விடுவது இயற்கையே.

இடிக்கி, குரடு, நோஸ்ப்ளேயர் போன்ற ஒரு சில உபகரணங்களுடனும், கை நிறைய பஞ்சுடனும், டாக்டர் அவர்கள் பஞ்சாமியின் பல் இடுக்குகளில் புகுந்து விளையாட ஆரம்பித்தார். இதுவரை ஒட்டி உறவாடிய பற்களுக்கு இடையே பெரிய இடைவெளிகளை ஏற்படுத்தத் தொடங்கினார். நெடுநாளைய காரைகள் பாறைகள் போல பெயர்த்து எடுக்கப்பட்டன. ஒவ்வொரு முறை குத்திக்குத்தி சுரண்டும் போதும் ஈறுகளிலும், எகிறிலும் ரத்தம் பீரிட்டு வந்து வலி எடுத்து வாய் பூராவும் ரத்தத்தால் உப்புக்கரித்தது. பஞ்சினால் ரத்தம் ஒத்தி ஒத்தி எடுக்கப்பட்டு பிறகு, தூக்கி எறியப்பட்டு வந்தது. பஞ்சாமியின் வாய் வெற்றிலை பாக்குப் போடாமலேயே நல்ல சிவப்பாகிப் போனது, இனக்கலவரத்தில் சிக்கிய இலங்கை போல. விடுதலை விரும்பிகளாகவும், தீவிரவாதிகளாகவும் கருதப்பட்ட கறைகளும் காரைகளும் அடக்கி ஒடுக்கி அகற்றப்பட்டதால், தங்கள் ‘சொத்தை’ இழந்த அப்பாவி மக்கள் போல, பற்கள் யாவும் பலகீனமாகி ஒரு வித பாதுகாப்போ, ஒற்றுமையோ, பலமோ, அரவணைப்போ இல்லாமல் அகதிகள் போல ஒரு வித ஆட்டத்துடனும், நடுக்கத்துடனும் விளங்கின.

எவ்வளவு கஷ்டப்பட்டாலும், கடைசியில் முத்துப்பற்களைப் பெற்றே தீரப் போகிறோம் என்று நம்பி, பஞ்சாமியும் வலியைப் பொறுத்துக்கொண்டு, டாக்டருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். இடையிடையே அங்குள்ள வாஷ்பேசினில் வாய்க்கொப்பளித்தபடி, துர்நாற்றமில்லாத தன் வருங்கால இல் (பல்) வாழ்க்கையை எண்ணி மகிழ்ந்தார்.

டாக்டரின் ஆலோசனையின் பேரில் முன் பக்கம் மேல் வரிசையில் தூக்கலாக இருந்த ஆறு பற்களையும் அகற்றி விட்டு, படிமானமான செயற்கைப் பற்கள், அளவெடுக்கபட்டு, இரண்டு நாட்கள் கழித்து கிளிப் மூலம் பொருத்துவது என்று பேசி முடிக்கப்பட்டது. கீழ்ப்புறமும் பக்கத்துக்கு தலா இரண்டு வீதம் நான்கு கடவாய்ப் பற்களும் சொத்தையாகி விட்டது என அகற்றப்பட்டிருந்தன. சிகிச்சைக்குப்பின் முகத்தில் பிரதிபலிக்க இருக்கும் அழகை உத்தேசித்து, பஞ்சாமி (இருக்கும்) பல்லைக் கடித்துக்கொண்டு டாக்டர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொண்டு, இரண்டு நாட்கள் கழித்து வருவதாகச் சொல்லி வீட்டுக்குப் புறப்படலானார்.
தொடரும்

22 கருத்துகள்:

  1. முதன் முதலாக வருகை தந்து பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றிகள் !

    தொடர்ந்து வருக! வருக!! வருக!!!

    பதிலளிநீக்கு
  2. தன்னைப்போலவே பலருக்கும் பலவித பல் பிரச்சனைகள் உள்ளன என்பதை அங்கு பல்லைக் காட்டிக்கொண்டு நிற்கும் பலரைப் பார்த்ததும் அறிந்து கொண்ட பஞ்சாமிக்கு, பல்லில் பாலை வார்த்தது போல இருந்தது. யான் பெற்ற துன்பம் பெறுக இந்த வையகமும் என்ற நல்லெண்ணம். //

    பலவகைப் பல்லைப் பார்த்து பல்வேறு சிந்தனையில் பல்லெண்ணம் --நல்லெண்ணம் கொண்ட பஞ்சாமிக்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. முன் பக்கம் மேல் வரிசையில் தூக்கலாக இருந்த ஆறு பற்களையும் அகற்றி விட்டு, படிமானமான செயற்கைப் பற்கள், அளவெடுக்கபட்டு, இரண்டு நாட்கள் கழித்து கிளிப் மூலம் பொருத்துவது என்று பேசி முடிக்கப்பட்டது. கீழ்ப்புறமும் பக்கத்துக்கு தலா இரண்டு வீதம் நான்கு கடவாய்ப் பற்களும் சொத்தையாகி விட்டது என அகற்றப்பட்டிருந்தன. சிகிச்சைக்குப்பின் முகத்தில் பிரதிபலிக்க இருக்கும் அழகை உத்தேசித்து, பஞ்சாமி (இருக்கும்) பல்லைக் கடித்துக்கொண்டு டாக்டர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொண்டு/

    பஞ்சாமிக்கு அவர் பற்களையே மாலையாக்கிப் போட்டு பல்வேறு வாத்தியங்கள் பல்லிளிக்க வரவேற்பு அளிக்கப்படுகிறது !!!!

    பதிலளிநீக்கு
  4. இராஜராஜேஸ்வரி said...
    தன்னைப்போலவே பலருக்கும் பலவித பல் பிரச்சனைகள் உள்ளன என்பதை அங்கு பல்லைக் காட்டிக்கொண்டு நிற்கும் பலரைப் பார்த்ததும் அறிந்து கொண்ட பஞ்சாமிக்கு, பல்லில் பாலை வார்த்தது போல இருந்தது. யான் பெற்ற துன்பம் பெறுக இந்த வையகமும் என்ற நல்லெண்ணம். //

    பலவகைப் பல்லைப் பார்த்து பல்வேறு சிந்தனையில் பல்லெண்ணம் --நல்லெண்ணம் கொண்ட பஞ்சாமிக்கு பாராட்டுக்கள்..//

    ஆஹா! சூப்பரான சொல்லாடல். மகிழ்ச்சி..................vgk

    பதிலளிநீக்கு
  5. இராஜராஜேஸ்வரி said...
    முன் பக்கம் மேல் வரிசையில் தூக்கலாக இருந்த ஆறு பற்களையும் அகற்றி விட்டு, படிமானமான செயற்கைப் பற்கள், அளவெடுக்கபட்டு, இரண்டு நாட்கள் கழித்து கிளிப் மூலம் பொருத்துவது என்று பேசி முடிக்கப்பட்டது. கீழ்ப்புறமும் பக்கத்துக்கு தலா இரண்டு வீதம் நான்கு கடவாய்ப் பற்களும் சொத்தையாகி விட்டது என அகற்றப்பட்டிருந்தன. சிகிச்சைக்குப்பின் முகத்தில் பிரதிபலிக்க இருக்கும் அழகை உத்தேசித்து, பஞ்சாமி (இருக்கும்) பல்லைக் கடித்துக்கொண்டு டாக்டர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொண்டு/

    பஞ்சாமிக்கு அவர் பற்களையே மாலையாக்கிப் போட்டு பல்வேறு வாத்தியங்கள் பல்லிளிக்க வரவேற்பு அளிக்கப்படுகிறது !!!!//

    ஓஹோ, பல்செட் தான் மாலையா?
    கரமுராவென்று கடிக்கும் ஒலி தான் வாத்தியங்களா?

    சுவையுடன் கூடிய தங்கள் கருத்துக்கள் சுகமகளிக்கிறது ;))))) .......vgk

    பதிலளிநீக்கு
  6. பந்திக்கு பந்திக்கு எத்தகையதொரு உவமானங்கள் பாராட்டவார்த்தைகளே இல்லை.சூப்பர் அண்ணா.

    பதிலளிநீக்கு
  7. அன்புச்சகோதரி,

    //பந்திக்கு பந்திக்கு எத்தகையதொரு உவமானங்கள் பாராட்டவார்த்தைகளே இல்லை. சூப்பர் அண்ணா.//

    தங்களின் அன்பான வருகைக்கும் மகிழ்ச்சி தரும் பாராட்டு வார்த்தைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    என்னுடைய அனைத்துப் படைப்புகளிலுமே நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது.

    தினமும் ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்துக் கருத்துக் கூறுங்கள்.

    என் e-mail ID : valambal@gmail.com

    பிரியமுள்ள
    VGK

    பதிலளிநீக்கு
  8. பஞ்சாமி தன் முத்துப் பல்லழகை நினைத்தே, இருக்கும் பற்களையெல்லாம் பலி கொடுத்துக்கொண்டு இருக்கிறார். கடைசியில் என்ன ஆகிறது என்று பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  9. சும்மாவே எனக்குக் கூட இந்த பல் டாக்டர்ன்னா கொஞ்சம் பயம் தான். பல்லே இல்லாத பொக்க வாயா கூட இருக்கலாம். ஆனா இந்த பல் புடுங்கறது. அம்மாடி, தொல்லையோ தொல்லை.

    பாவம் பஞ்சாமி, தன்னுடைய பல் அழகா ஆயிடும்ன்னு அவர் கண்ட கனவு பஞ்சு, பஞ்சு பறக்கப் போறதுன்னு நினைக்கறேன்.

    பதிலளிநீக்கு
  10. பல் பலகண்டேன் சொல் ஒன்றும் கண்டேன்....பலபல பளபள பல் கட்டி வெல் என்று வருவேன்.....பஞ்சாமி பாடுகின்றார்....

    பதிலளிநீக்கு
  11. கத்தி கொரடா நோஸ் ப்ளேயர் எல்லாத்தையும பார்த்ததும மனுஷன் பயந்து ஓடாம இருந்திருக்காரே. பரவால்ல தைரிய சாலி தான் போல

    பதிலளிநீக்கு
  12. அன்பின் வை.கோ

    பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா - அருமை அருமை. பொறுமையாகப் படித்து மகிழ வேண்டிய ஒரு பதிவு. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  13. இந்த இரண்டாம் பகுதியிலும் ரசனைக்குரிய வரிகள் அநேகம். வரிக்கு வரி நகைச்சுவை மிளிர்கிறது.

    பல் டாக்டரைப் பார்க்க வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து பஞ்சாமிக்கு மன ஆறுதல் ஏற்படுவதாகக் காட்டியிருப்பது சராசரி மனித மனத்தின் பிரதிபலிப்பாகவே உள்ளது.

    இடையில் நாற்காலி அரசியல் வேறு. ஆனால் இந்த பல்டாக்டரிடம் சிக்கிக்கொண்ட பஞ்சாமியும் அவருடைய பற்கள் படும் பாட்டையும் பார்த்தால் பரிதாபம்தான் மிஞ்சுகிறது.

    பஞ்சாமியின் இல் (பல்) வாழ்க்கை பல் இல் வாழ்க்கையாகப் போகிறது என்பது பாவம் அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    சுவாரசியம் குறையாமல் தொடர்கிறது. நானும் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. பல்லு செட் வச்சிகிட போறாங்களோ? டாக்குடருகிட்ட வைத்தியம் பாத்துகிடறத கூட என்ன ஜோரா சிரிப்பாணி வராப் போல சொல்லினிங்க.

    பதிலளிநீக்கு
  15. வெற்றியோ, தோல்வியோ, இன்பமோ, துன்பமோ, நாற்றமோ, துர்நாற்றமோ, மெஜாரிட்டி இருந்தாலே ஒரு வித நிம்மதி தானே!

    மிகச் சரியாக மெஜாரிட்டியான
    மக்களின் மனோபாவத்தைச் சொல்லிவிட்டீர்கள்
    சுவாரஸ்யம் தொடர்கிறது
    நானும் தொடர்கிறேன்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  16. எப்படில்லாம் உதாரணம் யோசிக்குறீங்க. இனக்கலவரத்தில் சிக்கிய இலங்கையைப் போலவா??))))))) பல் டாக்டர் ரீமிற்குள் நாமே நுழைந்து அந்த சுழல் நாற்காலியில் உட்கார்ந்து விட்ட உணர்வு.

    பதிலளிநீக்கு
  17. //பஞ்சாமியின் வாய் வெற்றிலை பாக்குப் போடாமலேயே நல்ல சிவப்பாகிப் போனது, இனக்கலவரத்தில் சிக்கிய இலங்கை போல.// சரிதான்...ரத்தக்காவோட ஆரம்பம்...என்னாவுதுன்னு பாக்கலாம்...

    பதிலளிநீக்கு
  18. //இனக்கலவரத்தில் சிக்கிய இலங்கை போல. விடுதலை விரும்பிகளாகவும், தீவிரவாதிகளாகவும் கருதப்பட்ட கறைகளும் காரைகளும் அடக்கி ஒடுக்கி அகற்றப்பட்டதால், தங்கள் ‘சொத்தை’ இழந்த அப்பாவி மக்கள் போல, பற்கள் யாவும் பலகீனமாகி ஒரு வித பாதுகாப்போ, ஒற்றுமையோ, பலமோ, அரவணைப்போ இல்லாமல் அகதிகள் போல ஒரு வித ஆட்டத்துடனும், நடுக்கத்துடனும் விளங்கின.
    /இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  19. கதையை எழுதிய ஆசிரியரே கதையின் நாயகராகி பல் அவஸ்தைகளை உணர்ந்துஃபீல் பண்ணி ஊவ்வொரு வார்த்தையும் எழுதி இருக்காங்க. பின்னூட்டமிட்ட பலரும் பலவார்த்தைகளை ரசிச்சதை சொல்லி இருக்காங்க. நான் புதுசா எதச்சொல்றதுன்னு யோசிச்சு பார்க்கிறேன். போன பதிவுல பஞ்சாமியோட பல்ல தேங்காதுருவி துணி துவைக்குற கல்லுனு கற்பனை பண்ணியாச்சி. இப்ப இனக்கலவரத்தில் மாட்டிக்கொண்ட அகதிகள்போல ( என்ன ஒரு கற்பனை)??நடுக்கமாக ஆட ஆரம்பித்தன. வெத்தல போடாமலேயே வாய் சிவந்த பஞ்சாமி இன்னும் என்ன மாதிரிலாம் அவஸ்தைபட போகிறாறோன்னு தோணுது. பல்லு வலியும் தலவலியும் தனக்கு வந்தாதானே தெரியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 11, 2016 at 2:30 PM

      வாங்கோ .... வணக்கம்.

      //கதையை எழுதிய ஆசிரியரே கதையின் நாயகராகி பல் அவஸ்தைகளை உணர்ந்து ஃபீல் பண்ணி
      ஒ வ் வொ ரு வார்த்தையும் எழுதி இருக்காங்க.//

      இந்த அளவுக்கு கதாசிரியர் பற்களுடன் ஒரேயடியாக அவஸ்தைப்பட்டது இல்லை என்றாலும், பல்லுடன் அவஸ்தைப் பட்ட உறவினர்களை அழைத்துக்கொண்டு (துணைக்காக) ஒருசில சமயங்களில் பல் டாக்டர்களிடம் போய் வந்த அனுபவம் உண்டு.

      //பின்னூட்டமிட்ட பலரும் பலவார்த்தைகளை ரசிச்சதை சொல்லி இருக்காங்க. நான் புதுசா எதச்சொல்றதுன்னு யோசிச்சு பார்க்கிறேன்.//

      ஆஹா, புதுமையாக ஏதாவது எடுத்துச்சொல்ல மிகவும் கடுமையாக உழைக்கிறீர்கள் எனத் தெரிகிறது. போட்டியில் பங்கேற்றவர்களில் சிலரும்கூட இது போலெல்லாம் அலட்டிக்கொள்ளவே இல்லை.

      //போன பதிவுல பஞ்சாமியோட பல்ல தேங்காதுருவி துணி துவைக்குற கல்லுனு கற்பனை பண்ணியாச்சி. இப்ப இனக்கலவரத்தில் மாட்டிக்கொண்ட அகதிகள்போல ( என்ன ஒரு கற்பனை)?? நடுக்கமாக ஆட ஆரம்பித்தன. வெத்தல போடாமலேயே வாய் சிவந்த பஞ்சாமி இன்னும் என்ன மாதிரிலாம் அவஸ்தைபட போகிறாறோன்னு தோணுது. பல்லு வலியும் தலவலியும் தனக்கு வந்தாதானே தெரியும்//

      ஆஹா, வெரிகுட். நன்றாகச் சொன்னீர்கள். அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு