என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 8 நவம்பர், 2011

ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் !



ஆப்பிள் கன்னங்களும் 




அபூர்வ எண்ணங்களும் !




[சிறுகதை]


By வை. கோபாலகிருஷ்ணன்

”ஏய் சீமாச்சூ! ஒரு சின்ன ஹெல்ப் பண்ணணும்டா. அந்தப் பிள்ளையார் கோயில் டெய்லரிடம் போய் இந்தப் புதுசா தைத்த ஜாக்கெட்டை கைப்பக்கம் கொஞ்சம் பிரிச்சு லூஸ் ஆக ஆக்கிக்கொண்டு வரணும்டா. விலை ஜாஸ்தியான ஒஸ்தித் துணிடா. ஜாக்பாட் நிகழ்ச்சியில் வந்த, குஷ்பு போல முதுகுப் பக்கம் பெரிய ஜன்னல் வைக்கச் சொன்னேன்டா. ஏதோ சுமாரான ஜன்னல் வைத்துவிட்டு கைகள் பக்கம் ரொம்பவும் டைட்டா தைத்துத் தொலைத்து விட்டாண்டா. அளவு ரவிக்கையைக் கொடுக்கும் போதே படித்துப் படித்து சொன்னேண்டா. பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிவிட்டு, வேணும்னே இப்படி டைட்டாகத் தைத்துத் தொலைத்திருக்கிறாண்டா. நானே போகலாம் தான் நினைச்சேண்டா. ஆனாக்க அவனையும் அவன் அசட்டுச் சிரிப்பையும், திருட்டு முழியையும் பார்க்கப் பிடிக்கலைடா”, என்றாள் என் பக்கத்து வீட்டு ஜிகினாஸ்ரீ. 

அவள் உண்மைப் பெயர் என்னவோ ஜெயஸ்ரீ தான். இருந்தாலும் நான் அவளுக்கு என் மனதுக்குள் வைத்துள்ள பெயர் ஜிகினாஸ்ரீ. 

நொடிக்கு நூறு தடவை என்னை “டா” போட்டு பேசி வருகிறாள். “ஸ்ரீனிவாசன்” என்கிற என் முழுப்பெயரைச் சுருக்கி “சீமாச்சூ” என்கிறாள். அதிலும் எனக்கென்னவோ ஒரு வித கிளுகிளுப்பு தான்.

சின்ன வயதிலிருந்தே எங்களுக்குள் மிகவும் பழக்கம். தாயக்கட்டம், பரமபத சோபான படம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி, பாண்டி, கோலிகுண்டு, சடுகுடு, பச்சைக்குதிரை தாண்டுதல் எனப் பல விளையாட்டுகள், நாங்கள் சேர்ந்தே விளையாடியதுண்டு.

என்னை விட இரண்டு வயது சிறியவள். விஞ்ஞான பாட நோட்டில் சயன்ஸ் டயக்கிராம் வரைய என் உதவியை நாடுவாள். அவளுக்கு சரியாக ஓவியம் வரைய வராது. இந்த வேலை, அந்த வேலை என்று பாகுபாடு இல்லாமல் என்னை நன்றாகப் பயன் படுத்திக் கொள்வாள்.

நானும் மகுடிக்கு மயங்கும் நாகம் போல அவள் எது சொன்னாலும், சின்ன வயதிலிருந்து என்னையுமறியாமல் தட்டாமல் செய்து கொடுத்துப் பழகி விட்டேன். 

என் தந்தையும் அவள் தந்தையும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வரும் நண்பர்கள். என் தாயும் அவள் தாயும் மிகவும் சிநேகிதிகள். அக்கம்பக்கத்திலேயே எங்கள் வீடுகள். நாங்கள் இவ்வாறு பழகுவதை யாருமே தவறாகவோ, வித்யாசமாகவோ நினைப்பதில்லை. 

நான் படிப்பில் சுமார் தான். இப்போது பீ.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். அவள் அப்படியில்லை. படிப்பில் படு சுட்டி. ப்ளஸ் டூ வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் வாங்கிப் புகழ் பெற்றவள்.

படிப்பு மட்டும் அல்ல, அவள் அழகோ அழகு. அன்று சிறு வயதில் என்னைவிட நோஞ்சானாகத் தான் இருந்தாள்.அவள் எட்டாவது படிக்கும் போது, அவர்கள் வீட்டில் திடீரென ஒரு விழா எடுத்தார்கள்.

காது, மூக்கு, கழுத்து, கைகள் என புதுப்புது நகைகள் அணிவித்திருந்தார்கள். இதுவரை கவுன், பாவாடை சட்டை, சுடிதார், நைட்டி என அணிந்திருந்தவளுக்கு பட்டுப்பாவாடை சட்டையுடன், நல்ல பளபளப்பான ஜிகினா ஜரிகைகளுடன் மின்னும் தாவணி அணிவித்திருந்தார்கள். தலை நிறைய பூச்சூடிக்கொண்டிருந்தாள். கழுத்தில் நெருக்கமாகத் தொடுத்த நறுமணம் கமழும் மல்லிகைப்பூ மாலை அணிவித்திருந்தனர். பூப்போட்ட தாவணியின் ஜரிகைகள் ஜிகினா போல மிகவும் பளபளப்பாக டால் அடித்துக் கண்ணைப் பறிப்பதாக இருந்தது. அதைப் பார்த்து திகைத்துப்போன நான், அவளை ஜிகினாஸ்ரீ என்று வாய் தவறி அழைத்தேன். விழா அமர்க்களத்தில் நான் சொன்னது அவள் காதில் சரியாக விழவில்லை போலும். 

அவள் வயதுக்கு வந்து விட்டதாகப் பேசிக்கொண்டார்கள். எங்கள் எல்லோருக்கும் இனிப்புப் புட்டு, எள்ளுப்பொடி என ஏதேதோ தின்பதற்கான பலகாரங்கள் கொடுத்தார்கள். பெண்களெல்லாம் என் ஜிகினாஸ்ரீயை ஒரு நாற்காலியில் பட்டுத்துணி போட்டு அமர வைத்து, கூடி நின்று பாட்டுப் பாடினார்கள்.

எனக்கு இந்த திடீர் விழாவைப் பற்றி ஒன்றும் புரியவில்லை. என் தாய் உள்பட எனக்குப் புரியும் படியாக யாரும் எதுவும் எடுத்துச் சொல்லவும் இல்லை.

பிறகு ஒரு நாள் இது பற்றி அவளிடமே கேட்டு விட்டேன். அதற்கு அவள் “மக்கு, மக்கு; பத்தாவது படிக்கிறாய்; உனக்கே உனக்காக ஒரு எழவும் புரியாது. என்னைக் கேட்டது போல வேறு யாரையும் கேட்டு வைக்காதே; உதை விழும். உனக்கு முரட்டு மீசை முளைக்கும் போது ஒரு பொண்டாட்டி வருவாள். அவளிடம் கேளு. அவ எல்லாம் விபரமா சொல்லுவா” என்றாள்.

இப்போது தான் அரும்பு மீசை முளைக்கலாமா என்று பார்த்துவரும் என் மேல் உதட்டுக்கும், நாசித் துவாரங்களுக்கும் இடைப்பட்ட பகுதியைத் தடவி பார்த்துக் கொண்டேன். 

அவளைவிட இரண்டு வயது பெரியவனாகிய எனக்கு, எங்கள் வீட்டில், வயது வந்து விட்டதாக விழா எதுவுமே எடுக்கவில்லை. இவளுக்கு மட்டும் என்ன திடீர் விழா ? என்பதே எனக்கான மிகப்பெரிய சந்தேகம். 

பள்ளியில் விசாரித்ததில் பருவம் அடைந்த வயதுப்பெண்களுக்கு நடைபெறும் விழாவென்றும், அதைப் பூப்பு நீராட்டு விழா என்று சொல்லுவார்கள் என்றும், ஏதேதோ தனக்குத் தெரிந்ததைச் சொன்னான் என் வயது நண்பன் ஒருவன்.

மொத்தத்தில் யாருக்கும் ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லையோ அல்லது எனக்குப் புரியும்படியாகத்தான் சொல்லத் தெரியவில்லையோ! சரியென்று நானும் அதைப் பற்றி சந்தேகம் கேட்பதையே ஒரு வழியாக விட்டு விட்டேன். 

அந்த விழா நடைபெற்ற பிறகு, அவளின் நடை உடை பாவனை தோற்றம், எல்லாவற்றிலும் ஒரு வித திடீர் மாற்றங்கள். திடீரென கொஞ்ச நாளிலேயே நல்ல சதை பிடிப்புடன் மொழு மொழுவென்று தேக அமைப்பு மாறி விட்டது. ஆப்பிள் போன்ற செழுமையான கன்னங்கள், ஆங்காங்கே அசத்தலான மேடு பள்ளங்கள் என ஆளே முற்றிலும் மாறி விட்டாள். 

என்னை “டா” போட்டு அழைப்பதும், அதிகாரமாக வேலை ஏவுவதும் மட்டும் இப்பொதும் குறையவே இல்லை. அவள் எங்கு போனாலும் என்னையும் துணைக்கு அழைத்துப் போவதும், கடையில் வாங்கிய துணிமணிகள் போன்ற பொருட்களை என்னை விட்டு தூக்கி வரச்செய்வதுமாக, மொத்தத்தில் என்னை, ஒரு வேலையாள் போலவே நடத்தி வந்தாள். 

ஆனால் ஒன்று, ஹோட்டலில் வயிறு முட்ட டிபனும், ஐஸ் க்ரீம் போன்றவையும், அவள் செலவிலேயே, அவ்வப்போது வாங்கித் தரவும் தவற மாட்டாள். நானும் அவளுடன் சிறு வயதிலிருந்தே பழகிய தோஷமோ என்னவோ தெரியவில்லை, வாலிப வயதாகிய எனக்கு அவள் மேல் நாளுக்கு நாள் ஒரு வித ஈர்ப்பும் இனக் கவர்ச்சியுமாக, என்னை ஆட்டிப் படைத்து வந்த ஏதோவொன்று, அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடி ஓடி உதவிகள் செய்து வரச் செய்தது என்னை. 

எனக்கு இப்போதெல்லாம் அவளைப் பார்க்காவிட்டாலோ, அவளுடன் பேசாவிட்டாலோ, ஏதோ பைத்தியம் பிடித்தாற்போல ஒரு உணர்வு ஏற்பட்டு வருகிறது.

நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு போகும் போது, அவள் பொறியியற் கல்லூரியில் நுழைந்து படிக்க முயற்சித்து வருகிறாள். சிறந்த படிப்பாளியும், வருங்கால இஞ்ஜினியருமான அவளை, சாதாரணமானதொரு பட்டதாரியாகப் போகும் நான் என் சுமாரான நிறத்துடனும், மிகச் சாதாரணமான பெர்சனாலிடியுடனும், என்னுடைய வாழ்க்கைத் துணைவியாக அடைய முடியுமா?அவளுக்கு என் மேல் ஒரு வித ஈர்ப்பும், ஈடுபாடும் ஏற்பட நான் என்ன செய்வது என்று யோசித்து, முடிவில் என்னுடைய ஓவியத் திறமைகளை முழுவதும் உபயோகித்து, என் மனதில் முழுவதுமாக நிறைந்துள்ள என் அன்புக்குரிய அவளை மிகப்பெரிய அளவில் ஓவியமாகத் தீட்டி வர்ணம் கொடுத்து வந்தேன்.

அவளின் அதே, ஆப்பிள் கன்னங்களுடன் படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. அதை ப்ரேம் போட்டு அவளுக்குப் பரிசாக அளிக்க நினைத்துக் கொண்டிருந்தேன். 

நேற்று மாலை நல்ல ராயல் ஆப்பிள் பழமொன்று பெரியதாக வாங்கி வந்திருந்தேன். நான் வரைந்த அவளின் படத்தையும், படத்தில் நான் வரைந்துள்ள அவளின் ஆப்பிள் கன்னங்களையும், நான் வாங்கி வந்த ஆப்பிளையும் மாறி மாறிப் பார்த்து ரசித்தேன்.

பிறகு ஆப்பிள் பழத்தைக் கத்தியால் அழகாக வெட்டினேன். படத்திலிருந்த அவளின் கன்னத்தின் மேல் ஒரே ஒரு துண்டு ஆப்பிளை வைத்து குனிந்து என் வாயினால் கவ்வி ருசித்தேன். அவள் கன்னத்தையே லேசாகக் கடித்து விட்டது போன்ற ஒரு வித இன்பம் எனக்கு ஏற்பட்டது. 

அந்த நேற்றைய நிகழ்ச்சியையே மீண்டும் மீண்டும் நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்த என் கையில், இப்போது அவளின் ஜாக்கெட் டெய்லரிடம் சென்று ஆல்டர் செய்து வரக் கொடுக்கப்பட்டுள்ளது. 

டைட்டான அவளின் ஜாக்கெட்டை லூஸாக்க, அவள் சொன்ன அந்த டெய்லரிடம் அமர்ந்திருந்தேன். ஜாக்கெட்டை மட்டுமில்லாமல் என்னையும் லூஸாக்கி விட்டது அந்த டெய்லர் சொன்ன சமாசாரம். 

“யாரு சாமி, அந்தப் புதுப் பையன்? அந்தப் பொண்ணு அடிக்கடி ஒரு வாட்டசாட்டமான, சிவத்த, வாலிபனுடன் பைக்கில் உட்கார்ந்து ரெளண்டு அடிக்குது !” என்ற ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அந்த டெய்லர். 

“யோவ் ! வாய்க்கு வந்தபடி ஏதாவது உளறாதே; அவள் அப்படிப் பட்ட பெண் இல்லை” என்றேன். 

“நான் இப்போ என்ன சொல்லிப்புட்டேன்னு நீங்க கோச்சுகிறீங்க? அந்தப் பையன் யாருன்னு உங்களுக்குத் தெரியுமோன்னு கேட்டேன். தெரிந்தா யாருன்னு சொல்லுங்க; இல்லாவிட்டால் தெரியாதுன்னு சொல்லிட்டுப் போங்க !

அந்தப் பையன் ஏதாவது முறைப் பையனாக் கூட இருக்கலாம். அல்லது நண்பனாக இருக்கலாம். கூடவே அந்தப் பெண்ணுடன் காலேஜில் படிப்பவனாகக் கூட இருக்கலாம். கம்ப்யூட்டர் சாட்டிங் அல்லது செல் போன் தொடர்புன்னு ஏதேதோ நியூஸ் பேப்பர்களில் போடுறாங்களே அது போல கூட இருகலாம். ஏதோ பாய் ஃப்ரண்டுன்னு சொல்றாங்களே அதுவாகவும் கூட இருக்கலாம்.

அவன் யாராக இருந்தாலும் சரி; நமக்கு எதற்கு வீண் வம்பு” என்று சொல்லி, கைப்பக்கம் சற்று லூஸாக்கிய அந்த ஜாக்கெட்டை ஒரு பேப்பர் பையில் போட்டு என்னிடம் கொடுத்தான் அந்த டெய்லர். 

இதையெல்லாம் கேட்ட எனக்கு ஒரே பதட்டமாகிப் போனது. ஜிகினாஸ்ரீ ஒரு வேளை எனக்குக் கிடைக்காமல் போய் விடுவாளோ? இனியும் தாமதிக்காமல் அவளிடம் என் காதலைத் தெரிவித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேனே தவிர , அவளிடம் எப்படி ஆரம்பிப்பது, எப்படிப் பேசுவது என்பது ஒன்றும் புரியாமல் ஒரே குழப்பமாக இருந்தது. 

தன் புது ஜாக்கெட்டை கையில் வாங்கிக் கொண்டவள், “தாங்க்யூடா சீமாச்சு” என்றாள். 

ஏதோ அவளிடம் கேட்க நினைத்த நான், சற்றே தயங்கினேன். 

“அந்த டெய்லர் உன்னிடம் ஏதாவது கேட்டானா” என்றாள் அவளாகவே. 

“நீ யாருடனோ பைக்கில் சுற்றுகிறாயாமே; அதை அவன் பார்த்து விட்டதில் உனக்கு ஒரு குற்ற உணர்ச்சியோ! அதனால் தான் நீ டெய்லர் கடைக்குச் செல்லாமல் என்னை அனுப்பினாயோ?” கேட்டு விடலாமா என்று நினைத்தும் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வர மறுத்தன.

“அந்த டெய்லர் என்னிடம் என்ன கேட்பான் என்று நீ நினைக்கிறாய்?” என்றேன், மிகவும் புத்திசாலித் தனமாக. 

”நீ சுத்த ட்யூப் லைட்டுடா, சீமாச்சூ; ஜாக்கெட்டை லூஸாக்கிக் கொடுத்தற்கு ஏதாவது காசு கேட்டானா?” என்றாள் சர்வ அலட்சியமாக. 

“அதெல்லாம் ஒண்ணும் கேட்கவில்லை. எல்லாமே அவன் செய்த கோளாறு தானே, எப்படி கேட்பான்” என்று மட்டும் சொல்லிவிட்டு என் வீடு நோக்கி சென்று விட்டேன்.நான் வரைய ஆரம்பித்த அவளின் படத்தை பைனல் டச் அப் செய்து, கீழே ஜிகினாஸ்ரீ என்கிற ஜெயஸ்ரீ என்று எழுதி, என் கையொப்பமிட்டு, ப்ரேம் செய்து கொண்டு வந்து விட்டேன்.

என் தாயாரிடம் மட்டும் காட்டினேன். “சபாஷ்டா ஸ்ரீனிவாஸா, சூப்பரா வரைந்திருக்கிறாய். வரும் பதினெட்டாம் தேதி அவளுக்கு பிறந்த நாள் வருகிறது. அப்போது கொண்டுபோய் அவளிடம் கொடு. ரொம்பவும் சந்தோஷப்படுவாள்” என்றாள். 

“தாங்க் யூம்மா” என்றேன். ஆனால் பதினெட்டாம் தேதிக்கு, முழுசா இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.ஒருவழியாக அந்தப் பதினெட்டாம் தேதியும் வந்தது. நானும் என் அம்மாவும் அவர்கள் வீட்டுக்குப் புறப்பட்டோம். ஞாபகமாக அழகிய பேப்பர் கலர் பேக்கிங்குடன் படத்தை ஒரு பையில் போட்டு கையில் எடுத்துச் சென்றேன்.

அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போதே, நிறைய ஜோடி காலணிகள் வீட்டு வாசலில் கிடந்ததைக் காண முடிந்தது. அங்கு யார் யாரோ புது முகங்களுடன், பழத்தட்டுகள் மற்றும் பரிசுப் பொருட்களுடன் சோபாவில் அமர்ந்திருந்தனர்.

எங்களை ஜிகினாஸ்ரீயின் பெற்றோர்கள் வரவேற்று அமரச் செய்தனர். அவர்களுக்கு எங்களையும், எங்களுக்கு அவர்களையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தனர். 

டெய்லர் சொன்ன அதே வாட்டசாட்டமான சிவத்த வாலிபன், என் கையைப் பிடித்து குலுக்கியவாறே “அயம்...சுரேஷ்...சாப்ட்வேர் எஞ்சினியர்....டி.ஸி.எஸ்; நெள அட் யுனைடெட் ஸ்டேட்ஸ்; ஜெயஸ்ரீயின் அத்தை பிள்ளை தான் நான்; கிளாட் டு மீட் யூ; ஜெயஸ்ரீ உங்களைப்பற்றி நிறைய என்னிடம் சொல்லியிருக்கிறாள்” என்றான். 

புத்தம் புதியதொரு பட்டுப்புடவையில், சர்வ அலங்காரங்களுடன், என் ஜிகினாஸ்ரீ, கையில் ஒரு ட்ரேயில் ஸ்வீட் காரம் முதலியன எடுத்து வந்து, மிகவும் நிதானமாக, முகத்தில் வெட்கத்துடன் கூடிய புன்னகையுடன், எல்லோருக்கும் விநியோகம் செய்தாள். 

என்னைப் பார்த்ததும் “வாடா சீமாச்சூ, நீ எப்போ வந்தாய்? என்னுடைய ’வுட் பீ’ சுரேஷைப் பார்த்தாயா, உனக்கு அவரைப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டாள்.“பார்த்தேன், உனக்கு எல்லா விதத்திலும் மிகவும் பொருத்தமானவரே” என்றேன்.

என் கையிலிருந்த, நான் வரைந்துள்ள அவளின் படத்தை, அவளிடம் கொடுக்கத் தோன்றவில்லை எனக்கு. ஆனால் அவளாகவே என் கையிலிருந்து வெடுக்கென அதைப் பிடுங்கிக் கொண்டு பிரித்துப் பார்த்து, அசந்து போனாள். 

“யூ ஆர் ரியல்லி வெரி கிரேட்....டா..... சீமாச்சூ” என்று கூறி என் கையைப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கி, விரல்களை முத்தமிட்டு, தன் கண்களில் ஒத்திக் கொண்டாள். 

பிறகு தன் வருங்காலக் கணவன் சுரேஷிடம் அந்தப் படத்தை நீட்டினாள். அவரும் அதை ரசித்துப் பார்த்து விட்டு, எழுந்து என்னிடம் ஓடி வந்து என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். என்னை மிகவும் புகழ்ந்து பாராட்டினார்.

“எப்படி ஸார், இவ்வளவு தத்ரூபமாக வரைய முடிகிறது உங்களால்?” என்றார் சுரேஷ். 

“எந்த உருவம் என் மனதில் ஆழமாகப் பதியுமோ, அதை என் கைகள் மிகச் சுலபமாக வரைந்து விடும்” என்று சொல்லத் துடித்தது, என் உதடுகள். ஆனால் நான் எதுவுமே சொல்லவில்லை. 

“எங்க சீமாச்சூ சின்ன வயதிலிருந்து நன்றாக படங்கள் வரையுவான். எனக்கு சயன்ஸ் டயக்ராம் எல்லாம் இவன் தான் வரைந்து தந்து உதவுவான். படம் வரைவதில் எங்கள் சீமாச்சூ...சீமாச்சூ தான்” என்று பெருமையாகக் கூறினாள், ஜிகினாஸ்ரீ. 

சுரேஷுக்கும் ஜெயஸ்ரீக்கும் வரும் தை பிறந்ததும் கல்யாணம் நடத்தலாம்னு இருக்கிறோம் என்று பொதுவாக அங்கு கூடியிருப்பவர்களுக்கும், எங்களுக்குமாக ஒரு தகவல் போல, ஜெயஸ்ரீயின் அப்பா மிகுந்த சந்தோஷத்துடன் தெரிவித்தார்.“டேய், சீமாச்சூ, இந்தக் கல்யாணம் முடியும் வரை நிறைய வேலைகள் இருக்கும். நீ தான் எனக்குக் கூடமாட இருந்து எல்லா உதவிகளும் செய்யணும். எனக்குக் கூடப் பிறந்த அண்ணன் தம்பிகள் யாரும் இல்லாத குறையை நீ தான் தீர்த்து வைக்கணும்” என்று உத்தரவு பிறப்பித்தாள், என் அன்புக்குரிய ஜிகினாஸ்ரீ.

நான் வரைந்த ஓவியம் அவர்கள் வீட்டுச் சுவரில் ஆணி அடித்து அப்போதே மாட்ட ஏற்பாடானது. சுத்தியலால் ஆணியை ஓங்கி அடிக்கும் போது ஒரு ஆணி பறந்து வந்து என் நெற்றிப் பொட்டில் வேகமாக மோதித் தெறித்து கீழே விழுந்தது. நல்ல வேளையாக, என் கண்ணில் படாமல் தப்பியது. 

அதை யாரும் கவனிக்காத போதும், என்னால் மட்டுமே அந்த வலியை நன்கு உணர முடிந்தது. சிற்றுண்டி சாப்பிட்டிருந்த நான் எழுந்து அருகிலிருந்த, வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டேன்.

-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-






6. திருவாதிரை நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்:
அருள்மிகு அபய வரதீஸ்வரர் 
திருக்கோயில் [சுந்தரநாயகி அம்மன்] 




இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ள பட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.



06/27

33 கருத்துகள்:

  1. ஆஹா, அருமையான கதை சார்
    மனதையும் மதியையும் ஒருங்கே தொட்டு சென்ற முடிவு, நெகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
  2. மிகவும் ரசிக்க வைத்த சிறுகதை.

    பதிலளிநீக்கு
  3. நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே.கதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கதை. மீண்டும் ஒரு முறை படிக்கத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. //பரமபத சோபான படம்//

    ஐயா, பரமபத சோபன படம் கேள்விப்பட்டிருக்கிறேன். சோபான படம் என்றால் என்னவோ? ஏதாவது பானம் சாப்பிட்டு விட்டு ஆடுவார்களோ? ஹிஹி!

    கதை நறுக்கென்று இருக்கிறது ஐயா! :-)

    பதிலளிநீக்கு
  6. என்னவாக இருக்கும் என்ன நடக்கும் என்பதை ஊகிக்க நேரமில்லாதபடி விறு விருப்பாய் சென்றது .அருமை .

    பதிலளிநீக்கு
  7. சில வேளைகளில் சில குணாதிசயங்கள்.... அழகிய கதை.

    பதிலளிநீக்கு
  8. அருமையான கதை ஐயா..
    இயல்பான குணங்களை வைத்து
    அருமையாய் வடித்த
    அழகுச் சிறுகதை ....

    பதிலளிநீக்கு
  9. பெண்களின் கண்களைப் பார்த்தே காதல் உண்டா இல்லையா என்று கண்டுவிடலாமே... ஆனால் சில நேரம் சறுக்கிவிடுவதும் உண்டு.

    practical கதை. கொஞ்சம் பாவமாகவும் இருந்தது. ஒரு ஜிகினாஸ்ரீ இல்லாட்டி ஜலஜலஸ்ரீ ன்னு போவது தான் வாழ்கை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த என் சிறுகதைக்கு அன்புடன் வருகை தந்து அழகாகப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, என்னை உற்சாகப்படுத்தியுள்ள, என் அன்புக்குரிய அனைத்துத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என்றும் அன்புடன் தங்கள்,
      vgk

      நீக்கு
  10. அவளுக்கு என் மேல் ஒரு வித ஈர்ப்பும், ஈடுபாடும் ஏற்பட நான் என்ன செய்வது என்று யோசித்து, முடிவில் என்னுடைய ஓவியத் திறமைகளை முழுவதும் உபயோகித்து, என் மனதில் முழுவதுமாக நிறைந்துள்ள என் அன்புக்குரிய அவளை மிகப்பெரிய அளவில் ஓவியமாகத் தீட்டி வர்ணம் கொடுத்து வந்தேன்.அவளின் அதே, ஆப்பிள் கன்னங்களுடன் படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. அதை ப்ரேம் போட்டு அவளுக்குப் பரிசாக அளிக்க நினைத்துக் கொண்டிருந்தேன்.

    முடவன் ஆசைப்பட்ட கொம்புத்தேன்! !

    பதிலளிநீக்கு
  11. 6. திருவாதிரை நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
    சென்று வழிபட வேண்டிய கோயில்:
    அருள்மிகு அபய வரதீஸ்வரர்
    திருக்கோயில் [சுந்தரநாயகி அம்மன்]

    பயனுள்ள பகிர்வு ஐயா..

    பதிலளிநீக்கு
  12. ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் !"

    அபூர்வமான அருமையான தலைப்பூ !

    பதிலளிநீக்கு
  13. இராஜராஜேஸ்வரி said...
    அவளுக்கு என் மேல் ஒரு வித ஈர்ப்பும், ஈடுபாடும் ஏற்பட நான் என்ன செய்வது என்று யோசித்து, முடிவில் என்னுடைய ஓவியத் திறமைகளை முழுவதும் உபயோகித்து, என் மனதில் முழுவதுமாக நிறைந்துள்ள என் அன்புக்குரிய அவளை மிகப்பெரிய அளவில் ஓவியமாகத் தீட்டி வர்ணம் கொடுத்து வந்தேன்.அவளின் அதே, ஆப்பிள் கன்னங்களுடன் படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. அதை ப்ரேம் போட்டு அவளுக்குப் பரிசாக அளிக்க நினைத்துக் கொண்டிருந்தேன்.

    முடவன் ஆசைப்பட்ட கொம்புத்தேன்!!//

    அந்த ஓவியக்கலைஞன் மனதில் ஆசைப்படவே கூடாதா?

    பார்த்’தேன்’
    படித்’தேன்’
    ரஸித்’தேன்’

    என்று கண்களால் மட்டுமே கற்பனையுடன் கொம்புத்தேனை நினைத்து நினைத்து வருந்தி வாழ வேண்டியது தானா?

    ரொம்ப பாவம்ங்க அவன்.

    பதிலளிநீக்கு
  14. இராஜராஜேஸ்வரி said...
    6. திருவாதிரை நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
    சென்று வழிபட வேண்டிய கோயில்:
    அருள்மிகு அபய வரதீஸ்வரர்
    திருக்கோயில் [சுந்தரநாயகி அம்மன்]

    பயனுள்ள பகிர்வு ஐயா..//

    மிகவும் பயனுள்ள கருத்துரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. இராஜராஜேஸ்வரி said...
    //ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் !"

    அபூர்வமான அருமையான தலைப்பூ!//

    நானே பல இரவுகள் தூங்காமல் யோசித்து வைத்த தலைப்”பூ”
    அல்லவா.

    அது தங்களுக்கும் அபூர்வமாக அருமையாக மணம் வீசியது கேட்க என் மனம் மகிழ்கிறது. ;)))))

    பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. இயல்பான கதை. இன்னொரு கல்யாணப் பரிசு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தி.தமிழ் இளங்கோJuly 24, 2012 9:44 PM
      இயல்பான கதை. இன்னொரு கல்யாணப் பரிசு!//

      ஐயா, வாருங்கள், வணக்கம். மிக்க நன்றி ஐயா.

      ஏனோ நான் இன்றுவரை அந்தக் “கல்யாணப்பரிசு” என்ற திரைப்படத்தை பார்க்கவே சந்தர்ப்பம் அமையவில்லை, ஐயா.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  17. வயசுக் கோளாற்றில் பல அசட்டுத் தனங்கள் செய்வது வழக்கம்தானே? அதுவும் பயல் கொஞ்சம் அசமஞ்சனாக இருப்பான் போலிருக்கிறது. பொண்ணு அவனை நல்லா வேலை வாங்குகிறாள்.

    பதிலளிநீக்கு
  18. வலி ஆனியால் அல்ல, அவளால் தான் என்பது யாருக்கும் தெரியாது. வலியை உணர்வதும் அவன் மட்டும்தான். நல்ல கதை. இதற்கு தான் அம்மாஞ்சியா இருக்க கூடாது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mageswari balachandran May 18, 2015 at 2:45 PM

      வாங்கோ, வணக்கம்.

      //வலி ஆ ணி யா ல் அல்ல, அவளால் தான் என்பது யாருக்கும் தெரியாது. வலியை உணர்வதும் அவன் மட்டும்தான். நல்ல கதை.//

      அன்பான வருகைக்கும், ‘நல்ல கதை’ என்று நறுக்கென்று சொல்லியுள்ள பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி. நன்றி.

      //இதற்கு தான் அம்மாஞ்சியா இருக்க கூடாது. நன்றி.//

      :))))) ஆண்களை கடைசியில் அம்மாஞ்சியாக்குவது யார்? பெண்கள் தானே ? :)))))

      நீக்கு
  19. ஸ்ரீனிவாசன் எல்லா எங்கேயும் எப்போதும் சீமாச்சு ஆக்கப்படுகிறார்களே. அதற்கு ஏற்றார் போல அவங்களும் அசடாகவே இருக்காங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 20, 2015 at 10:30 AM
      //ஸ்ரீனிவாசன் எல்லாம் எங்கேயும் எப்போதும் சீமாச்சு ஆக்கப்படுகிறார்களே. அதற்கு ஏற்றார் போல அவங்களும் அசடாகவே இருக்காங்களே//

      பெண்கள் எப்போதுமே சமத்தோ சமத்துதான். தங்கள் பதிலும் மிகவும் சமத்தாகவே கொடுக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி. :)

      நீக்கு

  20. குட்டிக்கதை ஆனாலும்
    சுட்டிக்கதை

    தன் ஒரு தலை காதல் நிறைவேறாத ஆணின் ஏக்கத்தை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. கொமரு புள்ளக பாவம்தா. வேர என்ன சொல்ல. பள்ளியோடத்துலேந்து சேந்து படிக்காக. அவங்க மனச புரிய வேணாமா.

    பதிலளிநீக்கு
  22. ஒன் ஸைட் லவ் ஸ்டோரியா. வர்ணனைகள் எல்லாமே நல்லா இருக்கு. கதையும் இப்படித்தான் இருக்கும் என்று ஊகிக்க முடிஞ்சது

    பதிலளிநீக்கு
  23. ஆப்பிள் கன்னக்காரியை கை-கழவிய அபூர்வ எண்ணக்காரன்...ஏற்கனவே ரசித்து...மீண்டும் ருசித்தேன்...

    பதிலளிநீக்கு