என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 10 நவம்பர், 2011

பிரார்த்தனை






பிரார்த்தனை

[அனுபவம்]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

சிறுவயது முதலே நான் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவன். அப்போது ஆறாம் வகுப்பு படித்து வந்தேன். வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் செல்லும் அந்த ஒரு கிலோ மீட்டர் பாதையில் அரை கிலோமீட்டருக்கு மேல் ரோட்டின் இருபுறமும் மட்டன் ஸ்டால்கள் அதிகம் இருக்கும்.  அவற்றைப் பார்க்காமல் யாரும் ரோட்டைக்கடந்து செல்ல முடியாது. 


கழுத்தறுபட்ட ஆட்டின் தலைகள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். தோலிரிக்கப்பட்ட உடல் பகுதி முழுவதும் ஆங்காங்கே தொங்க விடப்பட்டிருக்கும். 


சுமார் நாலடி உயரமும் இரண்டடி விட்டமும் உள்ள மிகப்பெரிய மரத்தின் பகுதியொன்று ஒவ்வொரு கடையின் நடுவேயும், பலிபீடம் போல நட்டு வைக்கப்பட்டிருக்கும். 


சாணை பிடிக்கப்பட்ட நீண்ட அரிவாள், கத்திகள் என ஆங்காங்கே ரத்தக்கரைகளுடன் காணப்படும். சுருட்டை முடியும், முரட்டு மீசையும், சிவந்த கண்களுமாக, கொலை வெறிப்பார்வையுடன் அங்குள்ள ஆட்களைக் கண்டாலே எனக்கு மிகவும் பயமாக இருக்கும். 


பக்கவாட்டில் எங்கும் திரும்பாமல் சற்று வேகமாக நடந்து, மிகுந்த திகிலுடன் பள்ளிக்கோ அல்லது வீட்டுக்கோ ஓடிச்சென்று விடுவேன்.


ஒருசில சமயங்களில் கழுத்தறுபட்ட ஆட்டுத் தலைகளை நான் பார்க்க நேர்ந்து விட்டால், அவை தங்களின் கண்கள் மூலம் என்னிடம் ஏதோ  புலம்புவது போலத் தோன்றும். எனக்கு அவற்றின் நிலைமையைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருக்கும்.


நல்ல வேளையாக இந்த ஜன்மாவில் ஆடாகப் பிறக்காமல், மனிதனாகப் பிறந்தோமே என நினைப்பதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியாது. சிறு வயதில் ஏற்பட்ட இந்த பயம் இன்றும் என்னைத் தொடர்ந்தே வருகிறது.


பக்குவமான வயதில் எனக்குத் திருமணம் ஆனது. மனைவி வீடு எங்கள் ஊரின் அருகேயுள்ள ஒரு கிராமம். திருமணம் ஆன புதிதில் அவர்கள் ஊரில் உள்ள கிராம தேவதையான சக்திவாய்ந்த அம்மனுக்குத் திருவிழா என்று அழைத்திருந்தனர். நானும் என் மனைவியை மட்டும் அங்கு விட்டுவிட்டு வந்துவிடலாம் என்று தான் புறப்பட்டுப்போனேன்.


பல்வேறு இடையூறுகளால் கடைசியாகத் திருநாள் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், வருடாவருடம் மிகச்சிறப்பாக நடைபெற்று வந்த இந்தத் திருநாள், இந்த ஆண்டுதான் வழக்கப்படி மீண்டும் சிறப்பாக நடக்க இருப்பதாகவும் கூறினர். 


நான் போய்ச்சேர்ந்த அன்று அந்த ஊர்க்கோயிலில் காப்புக்கட்டாம். திருநாளுக்கு ஓரிரு நாட்களே இருப்பதால், அந்த ஊருக்குள் நுழைந்தவர்கள் யாரும், காப்புக்கட்டுக்குப் பிறகு ஊரை விட்டு வெளியேறக் கூடாதாம். 


ஏதேதோ ஐதீகம் சொல்லி என்னையும் அந்தக் குக்கிராமத்தில் இரண்டு நாட்கள் தங்க வைத்து விட்டனர். மிகவும் போர் அடிப்பதாக இருந்தும், புது மனைவி அருகில் இருந்ததால் ஏதோ ஒருவாறு சமாளித்து விட்டேன்.


திருநாளுக்கு முதல்நாள் இரவு கோயிலில் ஒரே கூட்டம். சுற்றுவட்டார கிராம ஜனங்கள் எல்லோரும் கூடிவிட்டனர். என்னையும் தூங்கவிடாமல் கோயிலுக்குக் கூட்டிச்சென்றனர். நாலு புறமும் வயல்களால் சூழ்ந்த வெட்ட வெளியின் நடுவே, அந்த அம்மன் கோயில் அழகாக அமைந்திருந்தது.


”நள்ளிரவில் ஏன் இப்படி எல்லோருமாகச் சேர்ந்து கோயிலுக்குப்போக வேண்டும்? அங்கு என்ன அப்படி விசேஷம்? என்றேன் நான். 


அம்மன் குட்டி குடிக்கப் போவதாகச் சொன்னார்கள். எனக்கு ஒன்றுமே புரியாமல் ஆட்டு மந்தைகளில் செல்லும் ஆடு போல நானும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன்.


தாரை தம்பட்டையுடன் மேள தாளங்கள், வாண வேடிக்கைகள், இரவா பகலா என்று தெரியாதபடி மின் விளக்குகள் என கோயில் ஜகத்ஜோதியாக காட்சியளித்தது. அமைதியே உருவான அழகான அந்த அம்மனைக் கண் குளிர தரிஸித்தேன்.


என் மனைவியிடன் “அம்பாளை நன்கு தரிஸனம் செய்து விட்டோம், இப்போ வீட்டுக்குப் புறப்பட்டுப் போகலாமா?” என்றேன்.


”என்ன அவசரம்! சரியாக பன்னிரெண்டு மணிக்கு மேல் ஒரு மணிக்குள் தான் மருளாளி [பூசாரி] உடம்பில் அம்மன் ஏறிடுவாள். பிறகு தான் குட்டிகுடித்தல் நடைபெறும். அதுதான் இங்கே மிகவும் முக்கியமான நிகழ்ச்சி” என்றாள் என்னவள்.


எனக்கு அப்போதும் கூட குட்டிகுடித்தல் என்றால் என்னவென்றே ஒன்றும் சரியாக விளங்கவில்லை.


நேரம் ஆக ஆக மேளதாளங்களுடன் ஒரு சில ஆடுகளும், ஆட்டுக்குட்டிகளும், சந்தனம் மஞ்சள் குங்குமம் பூசப்பட்டு, கழுத்தில் மாலையிடப்பட்ட நிலையில் அங்கிருந்த, கோயில் தூண்களில் கட்டப்பட்டன.


மருளாளி என்று சொல்லப்படும் ஒருவர் கரும் பட்டு வேட்டி கட்டி, மாலை அணிந்து, உடல் பூராவும் சந்தனம் பூசப்பட்டு, தலையில் ஜரிகைத் தலைப்பாகைக் கட்டி அதிக சரக்கு ஏற்றியது போல ஒரு வித ஆட்டம் ஆடிய வண்ணம் வந்து சேர்ந்தார். 


மிகப்பெரிய வெள்ளிக்கிண்ணமும்,  சாணை பிடிக்கப்பட்ட மிக நீண்ட அரிவாளும் அம்மன் சன்னதிக்கெதிரில் பய பக்தியுடன் வைக்கப்பட்டன.


மருளாளியின் ஆட்டமும் ஓட்டமும் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வர, மேள தாளங்கள் அதற்கு ஏற்றார்போல முழங்கிட, கூட்டத்தினரிடம் ஒரு வித பரபரப்பு ஏற்பட்டு வரலானது.


அம்மன் மருளாளியின் உடம்பில் ஏறியதும் ஒரே துள்ளாகத் துள்ளிக் குதிப்பார். பிறகு ஆடுகளின் கழுத்துக்கள் இங்குள்ள புது அரிவாள்களால் ஒரே வெட்டாக வெட்டப்படும். சூடான பச்சை ரத்தம் இந்த வெள்ளிக்கிண்ணத்தில் ஏந்தப்படும். அப்படியே அதை அந்த அம்மன் மருளாளி மூலம் குடித்து விடுவாள். அந்த அரியக் காட்சியைக் காண கண் கோடி வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள், அங்கிருந்த பெரியவர்கள்.


இதை என் காதால் கேட்டதும் என் உடல் நடுங்கியது. உள்ளம் பதறியது. பள்ளிப்பருவ நாட்கள் நினைவுக்கு வந்து வாட்டியது.


அம்மனிடம் மீண்டும் சென்றேன். வாயில்லாப் பிராணிகளான இந்த ஆடுகளை, அம்மன் பெயரைச் சொல்லி கொல்வது மிகவும் அபத்தம் என்று முறையிட்டேன். அம்மனிடம் அவைகளை காப்பாற்றிடுமாறு மனமுருக வேண்டினேன். என் பிரார்த்தனைகளைப் புரிந்து கொண்ட அம்மன் என்னைப் பார்த்து புன்னகை புரிவதை உணர்ந்து கொண்டேன்.


வாடிய புல்லைக்கண்டு மனம் வாடிய வள்ளலார் வாழ்ந்த இதே பூமியில் உயிர்க் கொலைகளை எதிர் நோக்கி ஆவலுடன் இங்கு ஒரு கூட்டம்.


நேரம் ஆக ஆக மருளாளியின் ஆட்டமும் பாட்டமும் துள்ளலும் குறையத் தொடங்கியது. அவரிடம் இப்போது ஒரு வேகமோ ஆவேசமோ எதுவும் இல்லை. மணி அதிகாலை 3 ஆக, பொழுதும் விடியத் தொடங்கி விட்டது. மருளாளி சோர்ந்து போய் அம்மன் எதிரில் வந்து அமர்ந்து விட்டார். 


இந்த வருடமும் திருநாள் நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தும், ’குட்டிகுடித்தல்’ நிகழ்ச்சி நடைபெறாமல் போனதில், ஏதோ குடிமுழுகிப்போனது போல அங்குள்ள ஜனங்கள் மிகவும் வருத்தத்துடன் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.


“அம்மனுக்கு ஏதோ கோபம். அபசாரம் ஏதோ நடந்துள்ளது. ஆத்தா மன்னித்தருள வேண்டும்” எனக்கூறி ஜனங்கள் விழுந்து கும்பிட்டு விட்டுக் கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.


அப்பாவிகளான அந்த ஆடுகளும், குட்டிகளும் அவிழ்த்து விடப்பட்டன. நள்ளிரவு, தங்களுக்கு நடக்கவிருந்த பேராபத்து பற்றி ஏதும் அறியாமல் துள்ளிச்சென்ற அவற்றின் பார்வையில், என்னால் மட்டும் அம்மனின் கருணையைக் காண முடிந்தது.


மொத்தத்தில் அந்த அம்மனிடம் நான் வைத்த பிரார்த்தனை, அந்த சக்தி வாய்ந்த அம்மன் அருளால் நிறைவேற்றப் பட்டதில் எனக்கு ஒரே மகிழ்ச்சி. அந்த அம்மனுக்கு மானஸீகமாக நன்றி கூறிவிட்டு நானும் நகர்ந்தேன்.


-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-







13. "ஹஸ்தம்" நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்:- 
அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் 
திருக்கோயில் 
[அன்ன பூரணி அம்மன்] 
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து 
மயிலாடுதுறை செல்லும் வழியில் 
உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் 
ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் 
கோமல் என்னும் ஊரில் உள்ளது
குத்தாலத்திலிருந்து பஸ், 
ஆட்டோ வசதி உள்ளது.


13/27

32 கருத்துகள்:

  1. பிரார்த்தனை, அந்த சக்தி வாய்ந்த அம்மன் அருளால் நிறைவேற்றப் பட்டதில் எனக்கு ஒரே மகிழ்ச்சி. அந்த அம்மனுக்கு மானஸீகமாக நன்றி கூறிவிட்டு நானும் நகர்ந்தேன்./

    அருமையான மனதின் ஈரப்பிரார்த்தனக்கு இரங்கிஅ அம்மனின் அருளை பகிர்ந்த கதைக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. நல்ல வேளையாக இந்த ஜன்மாவில் ஆடாகப் பிறக்காமல், மனிதனாகப் பிறந்தோமே என நினைப்பதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியாது/

    இளம் பிராய நினைவுகள்
    அசைபோட்டது அழகு!

    பதிலளிநீக்கு
  3. . "ஹஸ்தம்" நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
    சென்று வழிபட வேண்டிய கோயில்:-
    அருள்மிகு கிருபா கூபாரேச்வரர்
    திருக்கோயில்
    [அன்ன பூரணி அம்மன்] /

    பயம் மிகுந்த தகவல் பகிர்வு..

    பதிலளிநீக்கு
  4. "பிரார்த்தனை" சிறுகதையும், பிரார்த்தனைதலமும் அருமை..

    பதிலளிநீக்கு
  5. உயிர்ப்பலி கொடுத்து
    கடவுளின் திருவருளை
    பெறத் துடிக்கும்
    அப்பாவி மனிதர்களை...
    சிறுகதையில் அருமையாய்
    சொல்லிவிட்டீர்கள்...
    சிறுதெய்வங்கள், காவல்தெய்வங்கள் என
    பிற்கால தமிழ்ச் சமூகம் உருவாக்கி
    அவர்களின் வழிபாடு மற்றும் பூஜை முறைகளை
    தங்களின் வாழ்க்கை முறை போலவே வைத்து..
    வழிபட்டது மிகவும் வியப்பிற்குரிய செயலே...

    கதை மிகவும் அற்புதம் ஐயா...

    பதிலளிநீக்கு
  6. //ஆட்டு மந்தைகளில் செல்லும் ஆடு போல நானும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன்.//

    அழகான உவமை! அருமையான எழுத்து!

    பதிலளிநீக்கு
  7. உண்மையான நம்பிக்கைக்கு வலு அதிகம்.எவ்வுயிர்க்கும் இரங்கல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதை

    பதிலளிநீக்கு
  8. அந்த வருடம் உயிர்ப்பலியிலிருந்து காப்பாற்றிய புண்ணியத்தையும் கட்டிக் கொண்டீர்கள்!
    அனுபவப் பகிர்வு அருமை!

    பதிலளிநீக்கு
  9. ரொம்பவும் அருமையான பதிவு. அந்த அம்மன் உங்கள் பிரார்த்தனனக்கு செவி சாய்திருப்பாள் போல. சில நேரங்களில் ஏன் சில சம்பவங்கள் நடைபெறுகிறது என்பது எண்ண எண்ண விளங்கா அற்புதம். நாமும் இப்பதிவை படித்த உடன் மானசீகமாக அந்த அம்மனுக்கு நன்றி சொன்னோம்.

    பதிலளிநீக்கு
  10. உங்களுக்கு பிரார்த்தனை நிறைவேறிய மகிழ்ச்சி. அதுவே அந்த ஊர் மக்களுக்கு எங்கோ, ஏதோ தவறு நேர்ந்ததுபோல் தோன்றியிருக்கும். ஒரே நிகழ்வு. பல கண்ணோட்டங்கள். எது எப்படி ஆனாலும் உங்கள் பிரார்த்தனை நிறைவேறியதே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. //வாடிய புல்லைக்கண்டு மனம் வாடிய வள்ளலார் வாழ்ந்த இதே பூமியில் உயிர்க் கொலைகளை எதிர் நோக்கி ஆவலுடன் இங்கு ஒரு கூட்டம்.//

    வருந்தத்தக்க விஷயம்.

    வாயில்லா ஜீவன்களுக்கான உங்க பிரார்த்தனை நிறைவேறியது சந்தோஷமான விஷயம்.

    பதிலளிநீக்கு
  12. கதையை சொல்லிச்சென்ற விதம் அருமை. பகிர்விற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  13. கதையைச் சொல்லிச் சென்றவிதமும்
    முடிவும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 6

    பதிலளிநீக்கு
  14. நல்ல கதை. நல்ல வேளை உங்கள் பிரார்த்தனை பலித்தது.....

    பதிலளிநீக்கு
  15. துவக்கத்தில் பயத்துடன் படித்துக்கொண்டே வந்தேன் .முடிவு அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீழ்க்கண்ட இந்தப்பதிவினில் அனைவருக்கும் தனித்தனியே நன்றி கூறப்பட்டுள்ளது.

      http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html

      அன்புடன்
      VGK

      நீக்கு
  16. சிறு வயதில் பயமாக உள்ளது, வளர்ந்தபின் அது உயிரினங்கள் பாலுள்ள இரக்கமாக வெளிப்படுகிறது. ஒரு இளகிய மனத்தின் தவிப்பையும் வேண்டுதலையும், வேண்டுதல் நிறைவேற்றிய நிம்மதியையும் அழகாக எழுத்தினூடே எங்களையும் அனுபவிக்கவைத்துள்ளீர்கள். ஆயிரம் பேரின் நியாயமற்ற கோரிக்கையை விடவும் ஒருவனின் நியாயமான கோரிக்கைக்கே அம்மன் செவிசாய்ப்பாள் என்பதை அருமையாக உணர்த்தினீர்கள். கதையா உண்மைச் சம்பவமா என்று எண்ணத் தோன்றும் வகையில் மிகவும் ஒன்றுதலான எழுத்து. இக்கதையை எனக்கு சுட்டிகொடுத்து அறியச் செய்தமைக்கு மிகவும் நன்றி வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் திருமதி கீதமஞ்சரி மேடம். வணக்கம்.

      //சிறு வயதில் பயமாக உள்ளது, வளர்ந்தபின் அது உயிரினங்கள் பாலுள்ள இரக்கமாக வெளிப்படுகிறது. ஒரு இளகிய மனத்தின் தவிப்பையும் வேண்டுதலையும், வேண்டுதல் நிறைவேற்றிய நிம்மதியையும் அழகாக எழுத்தினூடே எங்களையும் அனுபவிக்கவைத்துள்ளீர்கள்.//

      தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்வித்தன. மிக்க நன்றி, மேடம்.

      //ஆயிரம் பேரின் நியாயமற்ற கோரிக்கையை விடவும் ஒருவனின் நியாயமான கோரிக்கைக்கே அம்மன் செவிசாய்ப்பாள் என்பதை அருமையாக உணர்த்தினீர்கள்.//

      வெகு அழகாகச் சொல்லிவிட்டீர்கள், மேடம். நன்றி.

      //கதையா உண்மைச் சம்பவமா என்று எண்ணத் தோன்றும் வகையில் மிகவும் ஒன்றுதலான எழுத்து.//

      இது என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவமே, மேடம்.

      //இக்கதையை எனக்கு சுட்டிகொடுத்து அறியச் செய்தமைக்கு மிகவும் நன்றி வை.கோ.சார்.//

      தங்களின் சமீபத்திய பதிவாகிய பனைமரம், பேய் பிசாசு போன்றவைகளைப் ப்டித்ததும் எனக்கு இது ஞாபகம் வந்தது. அதனால் தெரிவித்தேன். தங்களின் அந்தப்படைப்பும் அருமையோ அருமை தான். மிகவும் ரஸித்துப் படித்தேன்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  17. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  18. அம்மாடி. படித்து முடித்ததும் தோன்றியது நல்லவேளை நான் இது போன்ற காட்சிகளைப் பார்க்கவில்லையே என்று. மயிலாப்பூரில் குடி இருந்தோம். பள்ளிக்குச் செல்லும் வழியில் இதுபோல் கசாப்புக் கடைகள் இல்லை. என்றோ எங்கோ போகும்போதுதான் பார்ப்போம். நான் இறைவனுக்கு எப்பொழுதும் நன்றி சொல்வதுண்டு, என்னை சைவமாகப் படைத்ததற்கு.

    உங்கள் பிரார்த்தனையும் நிறைவேறியது.
    அம்மனுக்கு கோபம் என்று அவர்கள் நினைத்தாலும் உங்களுக்கு அந்த உயிர்கள் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சி கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANI December 30, 2012 11:45 PM

      வாங்கோ திருமதி ஜயந்தி ரமணி மேடம். வணக்கம்.

      //அம்மாடி. படித்து முடித்ததும் தோன்றியது நல்லவேளை நான் இது போன்ற காட்சிகளைப் பார்க்கவில்லையே என்று. மயிலாப்பூரில் குடி இருந்தோம். பள்ளிக்குச் செல்லும் வழியில் இதுபோல் கசாப்புக் கடைகள் இல்லை. என்றோ எங்கோ போகும்போதுதான் பார்ப்போம்.//

      என் சிறுவயதில் ஓராண்டுக்கும் மேலாக பள்ளிக்குச்சென்று, வீட்டுக்குத் திரும்பும் வரை இவைகளைக் கண்டு தினமும் மனம் வருந்தியுள்ளேன். பிறகு நல்லவேளையாக நாங்கள் குடிமாறி, ப்ள்ளிக்கு மிக அருகிலேயே குடி வந்து விட்டோம். அதன் பிறகு தான் எனக்கு மிகப்பெரிய நிம்மதியானது.

      //நான் இறைவனுக்கு எப்பொழுதும் நன்றி சொல்வதுண்டு, என்னை சைவமாகப் படைத்ததற்கு. //

      நானும் உங்களைப்போலவே தான் மேடம். வெளியே சாப்பிட நேர்ந்தாலும் PURE VEGETARIAN HOTEL தானா என பலமுறை, நன்கு தீவிரமாக விசாரித்துக்கொண்டு தான், உள்ளே நுழைவேன்.

      தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டபோது, ஒருசில இடங்களில் [வெளியூர்களில்/வெளிநாடுகளில்] நான் பழங்கள் சிலவற்றை மட்டுமே சாப்பிட்டுவிட்டு, சிலவேளைகள் பட்டினி கிடந்ததும் உண்டு.

      //உங்கள் பிரார்த்தனையும் நிறைவேறியது.
      அம்மனுக்கு கோபம் என்று அவர்கள் நினைத்தாலும் உங்களுக்கு அந்த உயிர்கள் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சி கிடைத்தது.//

      ஆமாம் மேடம். இது உண்மைக்கதையே. எனக்கு அன்று ஏற்பட்டது மகிழ்ச்சியோ மகிழ்ச்சியே. அம்பாளின் கருணை மட்டுமே.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நேற்று 30.12.2012 அன்று வலைச்சரத்தில் திருமதி உஷா அன்பரசு டீச்சர் அவர்களால் உங்களுக்கும் எனக்கும் மட்டும் ஒரு அவார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கவனித்தீர்களா?

      நம் இருவரையும் மட்டுமே தனித்துக்காட்டியிருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

      அதே போல ஆகார விஷயத்திலும் என் எண்ணங்களே உங்கள் எண்ணங்களாக உள்ளது இந்தத்தங்களின் பின்னூட்டத்தில் கண்டு மீண்டும் மகிழ்ச்சி கொண்டேன்.

      தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இதுபோல என் பழைய பதிவுகள் சிலவற்றைப் படித்துவிட்டு கருத்துக் கூறுங்கள்.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  19. மன்னிக்கவும் இன்று தான் இந்த பகிர்வினை படிக்க முடிந்தது. அற்புதமான ஆழமான கருத்துக்களை எளிமையாக சொன்ன விதம் சிறப்பு. எல்லா மக்களும் திருந்தினால் நன்றாக இருக்குமே.
    தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sasi Kala December 31, 2012 7:40 AM

      வாருங்கள், கவிதாயினி Ms. Sasi Kala Madam, வணக்கம்.

      //மன்னிக்கவும் இன்று தான் இந்த பகிர்வினை படிக்க முடிந்தது.//

      அதனால் என்ன? தங்களின் அன்பான வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.

      //அற்புதமான ஆழமான கருத்துக்களை எளிமையாக சொன்ன விதம் சிறப்பு. எல்லா மக்களும் திருந்தினால் நன்றாக இருக்குமே.//

      தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் கூட எளிமையான எனக்கு மிகச்சிறப்பாகவே உள்ளது.

      தாங்கள் உங்களின் கவிதை ஒன்றில், சொகுசுப் பேருந்தில் உங்களுடன் கூடவே கூட்டிவரப்பட்ட பலி ஆட்டுடன் பயணிக்கவே தங்களுக்குப் பிடிக்க வில்லை என்று சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

      சென்ற வார வலைச்சரத்தின் மூலம் நான், அந்த பஸ்ஸில் பயணம் செய்த ஆட்டினைக் காண வந்தேன். உடனே இந்தக் கோயிலுக்குக் கூட்டிவரப்பட்ட ஆடுகளைக்காண நானும் உங்களை அழைத்திருந்தேன்.

      அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      //தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

      என் அன்பான நல்வாழ்த்துகள், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  20. கிராம நிகழ்ச்சிகளை பழக்கமில்லாதவர்கள் பார்க்க நேர்ந்தால் புரிந்து கொள்வது கடினம்.

    பதிலளிநீக்கு
  21. இந்த பதிவு என் சின்ன வயசு நனைவுகளை நினைக்க வைத்துவிட்டது. நாகர் கோயில கன்யா கமரிக்கு நடுவில் வள்ளியூர்னு சின்ன ஊர். அங்கு எல்லா முதல் ஆடி வெம்மி
    வெள்ளிக்கிழமை களில் கொடை விழா நடகுகும் அங்கயும் ஆடு கோழி எல்லாம் பலி இடுவார்கள் அத பார்த்துட்டு பத்து நா தூங்கவே முடியல.மனசு பூரா பாரமாச்சுஏனு இப்படில்லாம் பண்ராங்க??????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 20, 2015 at 11:07 AM

      //இந்த பதிவு என் சின்ன வயசு நனைவுகளை நினைக்க வைத்துவிட்டது.//

      சின்னப்பொண்ணு சிவகாமியைக் கற்பனை செய்து பார்த்தேன். சூப்பரோ சூப்பராத்தான் இருக்கா. :)

      // நாகர் கோயில் கன்யாகுமரிக்கு நடுவில் வள்ளியூர்னு சின்ன ஊர். அங்கு எல்லா முதல் ஆடி வெள்ளி
      வெள்ளிக்கிழமை களில் கோடை விழா நடக்கும். அங்கேயும் ஆடு கோழி எல்லாம் பலி இடுவார்கள். அதைப் பார்த்துட்டு பத்து நாள் தூங்கவே முடியல. மனசு பூரா பாரமாச்சு //

      என் சின்ன வயசு அனுபவம் போலவே உள்ளது தங்களின் இந்த அனுபவமும்.

      //ஏன் இப்படில்லாம் பண்றாங்க??????//

      அதுதான் புரியவில்லை. கடவுள் பெயரைச்சொல்லி உயிர்பலி கொடுத்தல் மிகவும் கொடுமையாகத்தான் உள்ளது. நம்மைப்போன்றவர்களுக்கு அதைக் காணவே சகிக்கவில்லை. என்ன செய்ய ? :(

      நீக்கு
  22. இதெல்லா சரியில்லதா.படிச்சவங்க படியாதவங்க அல்லாருக்குமே செல மூட நம்பக்கக உண்டும் போல.

    பதிலளிநீக்கு
  23. இப்பக்கூட இதுபோல கிராம தேவதை கோவில்களில் உயிர் பலி கொடுப்பது நடந்து கொண்டுதான் இருக்கு.கேட்டா ஆயிரம் காரணம் சொல்றா. காஞ்சி பரமாச்சாரியா எவ்வளவு தூரம் எடுத்து சொல்லி இருக்கா.


    பதிலளிநீக்கு
  24. பிரார்த்தனை சில உயிர்களை காப்பாற்றியது மகிழ்ச்சியே...

    பதிலளிநீக்கு
  25. //மொத்தத்தில் அந்த அம்மனிடம் நான் வைத்த பிரார்த்தனை, அந்த சக்தி வாய்ந்த அம்மன் அருளால் நிறைவேற்றப் பட்டதில் எனக்கு ஒரே மகிழ்ச்சி. அந்த அம்மனுக்கு மானஸீகமாக நன்றி கூறிவிட்டு நானும் நகர்ந்தேன்.

    // மகிழ்ச்சி நமக்கும்தான்!

    பதிலளிநீக்கு