என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 29 அக்டோபர், 2014

நேயர் கடிதம் - [ 12 ] - காரஞ்சன் (சேஷ்) திரு. E.S. SESHADRI அவர்கள்


காரஞ்சன் (சேஷ்)


திரு. E.S. சேஷாத்ரி

அவர்களின் பார்வையில் ....

சிறுகதைகளை வார இதழ்களில் வாசித்துப் பழகிய நான் முதன் முதலில் இவருடைய வலைப்பக்கத்தில் வாசிக்க நேர்ந்தபோது ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பதை உணர்ந்தேன். நடையும் மிகவும் எளிமையாக அமைந்தது மேலும் சிறப்பு.

என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு படைப்பும் அதை படிப்பவருக்குள்ளோ/காண்பவர்களுக்குள்ளோ அதனூடே தானும் பயணிப்பது போன்ற உணர்வை அளித்து, மனதில் அதன் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.


காட்சிகளால் வெளிப்படும் நகைச்சுவையைவிட, கதைகள் வாயிலாக அதை வெளிப்படுத்துவது மிகவும் சிரமமான செயல். முதலில் அந்தக் காட்சியை நம் மனக்கண்முன் நிறுத்தி நம்மை உணரவைத்து, மகிழ்விக்க வேண்டும். அதில் திரு வைகோ சார் அவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர் என்பதில் ஐயமில்லை.

சிறுகதை விமர்சனப் போட்டி என்றவுடன் முதலில் மிகவும் தடுமாறிப்போனேன் என்பதுதான் உண்மை. கதையை மீண்டும் சொல்வதுபோல் விமர்சித்து எழுத ஆரம்பித்தேன். முதலில் சிலர் எழுதி பரிசுபெற்ற சில விமர்சனங்களைப் படித்துப் பின்னர் சற்று தெளிவடைந்தேன்.

இந்தப் போட்டியில் பங்கு பெற்றதால் ஒரு நல்ல சிறுகதை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. இதில் மூன்று பரிசுகளுக்கு 5 பேர் தெரிவாவதைப் பார்த்து ஐந்திலே ஒன்று பெற்றான் எனும் நிலையைத் தொடர்ந்து தக்க வைக்க ஆசைப்பட்டேன். சில கதைகளுக்கு பங்கு பெற்ற அனைவருக்குமே போனஸ் பரிசுகள் வழங்கியது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.


இந்த வயதிலும் அவருடைய உழைப்பு என்னை மலைக்க வைக்கிறது. தெளிவான சிந்தனை, காட்சிகளை வகைப்படுத்தும் திறன், விவரிக்கும் பாங்கு முதலியவை மிகச் சிறப்பு. உள்ளத்தனையது உயர்வு என்பது இவருக்கு முற்றிலும் பொருந்தும்.


ஐந்து வயதில் படித்த தமிழ்ச்செய்யுள் முதல் அன்றாடம்  படிக்கும் தினசரி வரை அசைபோட வைத்து ஒவ்வொரு வாரமும் கதை விமரிசனத்தை  எழுதவைத்த வை. கோ சார் அவர்களுக்கு நன்றி நடுவர் அவர்கள் அவ்வப்போது வழங்கிய குறிப்புகள் எனக்குப் பேருதவியாய் அமைந்தன. கிட்டத்தட்ட 24 கதைகளுக்குப் பின்னர்தான் என்னால் தொடர்ச்சியான வெற்றியைப் பெற முடிந்தது.


போட்டியில் பங்கேற்க கிடைக்கும் வாய்ப்பை நான் பெரிதாக எண்ணுகின்றேன். என்னுடைய விமர்சனம் எந்தப் பரிசுக்குத் தெரிவானாலும் எனக்கு மகிழ்வே.


நடுவரைப் பொறுத்தவரை “சமன் செய்து சீர்தூக்கும் கோல்” போன்ற செயல்பாடுடையவராகவே என்னால் உணர முடிந்தது. மூன்றாம் பரிசுக்கு என் விமர்சனம் தெரிவாகும்போது, மற்றவர்கள் எப்படியெல்லாம் மாற்றி யோசிக்கிறார்கள் என்பதை உணரமுடிந்தது.


மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் தமிழில் நீண்ட நாட்களுக்குப் பின் உரைநடையாய் எழுத/தட்டச்சு செய்யப் பழக முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியின் அடிப்படை நோக்கம் என்னவென்றால் தமிழ் மொழி வளர்கிறது. வாசிக்கும் பழக்கம் வளர்கிறது. பிழைகளைத் திருத்திக் கொள்ள முடிகிறது. சிந்தனை பல கோணங்களில் விரிவடைகிறது. சமுதாயத்தில் எந்தெந்த நிகழ்வுகள் நம்முள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதும் அதற்குத் தீர்வுகள் குறித்த சிந்தனையும் எழுகிறது.


பரிசுத்தொகை என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு ஊக்கம் அளிப்பதற்கான ஒரு காரணி எனக் கொள்வேன். அதையும் பத்து கதைகள் முடிந்தவுடன் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு அவரவர் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைத்த பாங்கு போற்றத்தக்கது. இதில் கதாசிரியரின் பொறுப்புணர்வு, ஈடுபாடு, வெளிப்படுகிறது.

  
பொதுவாக ஒருவருடைய படைப்பை விமர்சிப்பதைப்பெரும்பாலும் பலர் விரும்பமாட்டார்கள். ஆனால் நம் கதாசிரியரோ தன் படைப்புகளை விமர்சனம் செய்யத் தூண்டி, அதற்குப் பரிசும் அறிவித்து hats off. ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லோர்க்கும் அமைந்துவிடாது. அந்த விஷயத்திலும் நம் கதாசிரியர் ஒரு சாதனையாளர்தான்.


விமர்சனம் எழுதி முடித்ததும் வாசித்துப் பார்க்கையில் என் உள்ளுணர்வில் பரிசு கிடைக்கும் எனத் தோன்றினால் ஏதோ ஒரு பரிசுக்குத் தெரிவாகிவிடுகிறது. அந்த வகையில் ஒரு தன்னம்பிக்கையை என்னுள் தவழவிட்டிருக்கிறது.


பத்திரிகைகளுக்கு ஒரு கதையை அனுப்பும்போது அது நாம் அனுப்பிய வடிவிலேயே பிரசுரமாகும் என்று சொல்வதற்கில்லை. சற்று சுருக்கப்பட்டோ அல்லது சில பகுதிகள் நீக்கப்பட்டோ பிரசுரிக்கப்படலாம். சில கதைகள் நாம் எதிர்பார்த்த காலத்தில் வெளிவராமலும் போகலாம்.


வலையுலகைப் பொறுத்தவரை முழு சுதந்திரத்துடன் நினைத்த நேரத்தில் நினைத்த மாதிரி, நினைத்த வரிசையில் நம் படைப்புகளை வெளியிட முடிகிறது. அதில் ஆர்வமிக்கவர்களின் கருத்துகளையும் பின்னூட்டம் மூலம் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிகிறது.


மொத்தத்தில் இந்தப்போட்டி நம் அறிவுத்திறனை, சிந்தனைத்திறனை மேம்படுத்துவதாகவே அமைந்துள்ளது. அனுபவம் வாய்ந்த நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்கள் மேலும் நம் திறமையை வளர்த்துக்கொள்ள உதவியாக அமைகிறது. கரும்பு தின்னக் கூலிபோன்ற நிகழ்வு இது. திரு வைகோ அவர்களின் இந்த முயற்சி போற்றுதலுக்குரியது. அவர் பணி பல்லாண்டு தொடர என் உளமார்ந்த வேண்டுதலும், வாழ்த்துகளும்.

நன்றி
  
காரஞ்சன்(சேஷ்) 

 

 

 

My Dear Mr. Seshadri, Sir,

வணக்கம். 



தாங்கள் இங்கு மனம் திறந்து பேசியிருப்பவை யாவும் 


எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், 


தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. 


தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.






ஒருசில போட்டிகளில் 
தங்கள் மனைவி, 
தங்கள் மகள், 
தங்கள் மாமனார்  
என குடும்ப சஹிதமாகவே 
தாங்கள் கலந்துகொண்டது 
எனக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்தது.
தங்கள் குடும்பத்தார் 
அனைவருக்கும் என் நன்றிகள்.



பெரும்பாலான கதைகளுக்கான 
தங்களின் விமர்சனங்கள்
வியாழக்கிழமை இரவு 
7.39க்குப்பிறகு 7.59க்குள் மட்டுமே
எனக்குக் கிடைத்துள்ளன.

இருப்பினும் பலமுறை அவைகளே
பரிசுக்கும் தேர்வாகியுள்ளன
என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே ! 

தங்களின் விமர்சனம் கிடைத்ததும்
சரியாக 8 மணிக்கு கடையை மூடுவது
என் வழக்கமாக இருந்து வந்ததுள்ளது. :)

தாங்கள் அனுப்பும் விமர்சனத்தை 
நான் ஒருமுறை முழுவதுமாகப் படித்துவிட்டு 
என் STD. ACK. அனுப்புவதற்குள் 
எனக்குத் தாங்கள் CHAT செய்து, 
விமர்சனம் அனுப்பினேனே 
வந்ததா, சார்? எனக் கேள்வியும் கேட்பீர்கள். :)



வேறு பிற போட்டிகளில் கலந்துகொள்ளும்போது
இதுபோல LAST MINUTE RISK எடுக்க வேண்டாம் என
தங்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

சில சமயங்களில் இது போல LAST MINUTE RISK எடுப்பது நம் வெற்றி வாய்ப்பினை பாதிக்கக்கூடும் என்பதைத் தெரிவிக்க எனக்கு நேர்ந்த ஓர் சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டி ஒன்றில் நான் கலந்து கொண்டேன். பள்ளிச்சிறுவர்கள் இரண்டு மணி நேரம் நடிக்கும் வண்ணம் ஓர் நாடக ஆக்கம் எழுதித்தர வேண்டும் என அறிவித்திருந்தார்கள். 

விளம்பர அறிவிப்பினை, கடைசி நாளுக்கு 25 நாட்கள் முன்பாகவே படித்து மனதில் ஏற்றிக்கொண்ட நான், தினமும் மிகவும் கஷ்டப்பட்டு, நாடக ஆக்கத்தினை உருவாக்க ஆரம்பித்தேன். நான் எழுதிய அந்த புராண நாடகத்தை,  நானே திரும்பத்திரும்ப பலமுறை தினமும் படித்துப்பார்த்ததோடு, என் மனதுக்கு முழுத் திருப்தி கிடைக்கும்வரை, தினமும் விடியவிடிய அதை மெருகேற்றிக்கொண்டே வந்தேன்.  

அப்போதெல்லாம் [2007] இன்றுபோல மின்னஞ்சல் வசதிகளெல்லாம் அவ்வளவாகக் கிடையாது. கையால் தெளிவாக எழுத வேண்டும். தபாலிலோ கொரியரிலோ மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். அனுப்ப வேண்டிய விலாசம் ’சென்னை’ என்பதால் நானும் போட்டியின் இறுதி நாளுக்கு நான்கு நாட்கள் முன்னதாகவே [Well in Advance] அதனை கொரியரில் அனுப்பி வைத்து விட்டேன். மன நிறைவோடு போட்டியின் முடிவுக்காக மனதினில் ஓர் சின்ன ஆவலுடன் காத்திருக்கவும் ஆரம்பித்து விட்டேன். 

போட்டிக்கு ஆக்கங்கள் வந்து சேர வேண்டி அவர்கள் கொடுத்திருந்த இறுதித்தேதிக்கு மறுநாள் எனக்குக் கொரியரில் நான் அனுப்பியிருந்த கொரியர் தபால் அப்படியே பிரிக்கப்படாமல் திரும்பி வந்துவிட்டது. 

அந்தக் கவரின் மீது “இதில் எழுதப்பட்டுள்ள விலாசத்தில் யாரும் இல்லை .... விலாசத்தில் எழுதியுள்ள கதவு கடந்த மூன்று நான்கு நாட்களாகப் பூட்டப்பட்டுள்ளது”  என கொரியர்காரர்களால் எழுதப்பட்டிருந்தது கண்டேன். என் கடின உழைப்பு இப்படி வீணாகிப்போய்விட்டதே என சற்று நேரம் கலங்கினேன்.

பிறகு அந்த விளம்பரம் அறிவிக்கப்பட்டிருந்த மாத இதழ் அலுவலகத்திற்கு நான் ஃபோன் செய்து, விளம்பரம் செய்யப்பட்டிருந்த இதழின் தேதி + பக்க எண்ணுடன், எனக்கு இதில் நேர்ந்துள்ள சிரமங்களையும், ஏமாற்றத்தையும் விரிவாக எடுத்துரைத்து முறையிட்டேன். 

என் பக்க நியாயத்தினை உணர்ந்துகொண்ட அங்கிருந்த நல்லவர் ஒருவர், அந்த விளம்பரம் யாரால் கொடுக்கப்பட்டுள்ளதோ, அவரின் பெயர் + ஃபோன் நம்பர் போன்றவற்றை எனக்கு அளித்து உதவினார். 

விடாக்கண்டன் கொடாக்கண்டனாக நானும் அந்த விளம்பரதாரரை ஃபோனில் அழைத்து நடந்த கதைகளை விரிவாகச் சொல்லி முறையிட்டேன்.

அதற்கு அவர் “ அப்படியா .... Very Very Sorry, Sir.  நாங்கள் இப்போது அந்த முகவரியில் இல்லை. அந்த இடத்தை காலிசெய்துவிட்டு, வேறு இடத்திற்கு அலுவலகத்தை மாற்றிக்கொண்டு வந்து விட்டோம். அதனால் தாங்கள், தங்களுக்குத் திரும்ப வந்துள்ள அந்தக்கவரை அப்படியே பிரிக்காமல், வேறு ஒரு பெரிய கவரில் வைத்து மீண்டும் கொரியர் தபாலில் இதோ இந்தப் புதிய விலாசத்திற்கு உடனடியாக அனுப்பி வையுங்கள்.  போட்டிக்கான இறுதி நாள் முடிந்து விட்டாலும் கூட, தாங்கள் முன்கூட்டியே அனுப்பியுள்ளீர்கள் என்ற அத்தாட்சி அந்தப் பழைய கவரில் இருப்பதால், நான் எப்படியாவது, இதில் தங்களுக்கு உதவி செய்து, தங்களின் படைப்பினையும் நடுவர்களின் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று உத்தரவாதம் அளித்தார். 

அவரின் பெயரையும், ஃபோன் நம்பரையும் குறித்துக்கொண்டு உடனடியாக அவர் சொன்னபடியே நானும் அந்தப்பழைய கவரைப்பிரிக்காமல், வேறு ஒரு புதுக்கவரில் வைத்து, மீண்டும் புது விலாசத்திற்கு அனுப்பி வைத்தேன். பெரிய A4 Size Cover. நிறைய பக்கங்களானதால் கனமும் ஜாஸ்திதான். ஒவ்வொரு முறையும் அனுப்ப அன்றைக்கு எனக்கு சுமார் ரூ. 40 to 50 செலவானது. Unnecessary Tension also.

இருப்பினும், இதில் என் கடின உழைப்பும், விடாமுயற்சிகளும் வீண் போகவில்லை.  அகில இந்திய அளவில் சுமார் 500 பேர்கள் வரை கலந்துகொண்டிருந்த அந்தப்போட்டியில் எனக்கு மூன்றாம் பரிசாக ரூ 5000 [ரூபாய் ஐயாயிரம்] பணம் ரொக்கமாகக் கிடைத்தது என்பதில் ஓர் மகிழ்ச்சியே. 

அந்தப்பரிசுப்பணம் ரூ.5000த்தை நேரில் விழாவினில் கலந்துகொண்டு பெற்றுவர என் குடும்பத்தில் சிலருடன் திருச்சியிலிருந்து சென்னைக்குப் போகவர கார் ஏற்பாடு செய்து சென்று வந்ததில் எனக்கு 7000-8000 செலவு ஆனது என்பது தனிக்கதை. :) பணம் கிடக்கட்டும். இது என் எழுத்துக்களுக்குக் கிடைத்த ஓர் மிகச்சிறந்த அங்கீகாரம் அல்லவா!


போட்டியில் பரிசு பெற்ற மகிழ்ச்சியினை 
படங்களுடன் பகிர்ந்துகொண்ட இறுதிப் பகுதி

நாடகத்தின் ஆரம்ப முதல் பகுதி

பதிவுலக நாடக ரஸிகர்களுக்கு என் நன்றி அறிவித்தல்


இப்போதும் கூட என்னதான் மின்னஞ்சல் வசதிகளெல்லாம் நமக்கு இருந்தாலும் கூட, எதிர்பாராத விதமாக, மின் தடை, நெட் கிடைக்காமல் படுத்துதல் என எவ்வளவோ சோதனைகளும் ஏற்படலாம். எனவே போட்டிகளில் கலந்து கொள்ளும்போது, நாம் கடைசி நிமிட ரிஸ்க்கெல்லாம் எடுக்கவே கூடாது என்பதைத் தங்களுக்கு என் அறிவுரையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.  

 

பொதுவாக ஒவ்வொரு வாரமும் போட்டிக்கான முதல் விமர்சனம் பிள்ளையார் சுழிபோல திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களிடமிருந்தோ அல்லது திருவாளர். பழனி கந்தசாமி ஐயா அவர்களிடமிருந்தோ மட்டுமே எனக்கு வந்து சேரும். இருவருமே ’கோவை’க்காரர்கள். சீனியர் சிடிசன்களாக இருப்பினும் தேனீக்கள் போன்று சுறுசுறுப்பானவர்கள். :)


வியாழக்கிழமைதோறும் கட்டக்கடைசியாக தள்ளாடியபடி தங்களிடமிருந்தோ அல்லது நம் திரு. ரவிஜி எம்.ஜி.ஆர் அவர்களிடமிருந்தோ மட்டுமே எனக்கு விமர்சனங்கள் வந்து சேரும். [இந்தத் தங்களின் ‘நேயர் கடிதம்’ கூட எனக்குக் கட்டக்கடைசியாகத்தான் வந்துள்ளது.]


தாங்கள் இருவருமே ’பாண்டிச்சேரி’ என்பதால் இவ்வளவு தள்ளாட்டமோ என என் மனதில் அடிக்கடி நினைத்துக்கொள்வதும் உண்டு. :)))))


இப்படியாக இனிமையாக கடந்த 40 வாரங்களும் சுகமாகவே கழிந்துள்ளன. இனி இவையெல்லாம் எனக்கு ஓர் பசுமையான நினைவலைகளாக மட்டுமே நீண்ட நாட்களுக்கு இருக்கக்கூடும். 



’VGK-25 தேடி வந்த தேவதை’

அதிலிருந்து ஆரம்பித்து
தொடர்ச்சியாக VGK-39 வரை
15 போட்டிகளில், ஏதோவொரு
பரிசுக்குத் தங்கள் விமர்சனங்கள்
தேர்வாகிக்கொண்டே வருகின்றன.

’வெற்றி’

தங்களைத் 'தேடி வந்த தேவதை'யாகத் 
தன்னையே மாற்றிக்கொண்டுள்ளது
ஓர் தனிச்சிறப்பாக எனக்குத் தெரிகிறது. 

மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  

பிரியமுள்ள கோபு [VGK]

     




 சிறுகதை விமர்சன 


இறுதிப் போட்டிக்கான கதையின் தலைப்பு:





VGK-40


மனசுக்குள் மத்தாப்பூ !




    





இந்த இறுதிப் போட்டியில்


விமர்சனப் பரிசு 


வென்றவர்கள் யார் ? யார் ?


யாருக்குத் தெரியும் ?



நாளை முதல் வெளியிட


அனைத்து முயற்சிகளும்


மேற்கொள்ளப்பட்டு


வருகின்றன.



காணத்தவறாதீர்கள் !








என்றும் அன்புடன் தங்கள்


வை.கோபாலகிருஷ்ணன்

20 கருத்துகள்:

  1. தன்னம்பிக்கையை தவழவிட்டிருக்கும்
    அருமையான நேயர் கடிதம்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு நேயர் கடிதம்...
    அவருக்கும் ... தொடர்ந்து சிறுகதை விமர்சனப் போட்டியை சிறப்பாக நடத்தி வரும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா....

    பதிலளிநீக்கு
  3. தங்களின் அனுபவத்தைக் கூறி அறிவுரை வழங்கியமைக்கு மிக்க நன்றி! நிச்சயம் இதைக் கடைபிடிப்பேன். அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப மாலை ஆறரை மணிக்குமேல் ஆகிவிடும். சரியாகச் சொன்னால், கதையை மனதில் ஓட்டிக்கொண்டு தட்டச்சு வெய்ய ஆரம்பித்தால் முடிக்க மனி 7.30 ஆகி இருக்கும். சில நேரங்களில் 7.50 கூட ஆகிவிடும். என் பெண்ணும் என்னைக் கிண்டல் செய்வாள் வியாழக்கிழமை டென்ஷன் என்று! ஆனாலும் இனிவரும் காலங்களில் அதுவும் ஒரு இனிமையான நினைவலைகளாகி மகிழ்வளிக்கும். இந்தப்போட்டியின் மூலம் வாய்ப்பளித்த தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்! நல்ல குறிப்புகளை அவ்வப்போது வழங்கி சீரிய பணியாற்றிய நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  4. நயமான, நேர்த்தியான நேயர் கடிதம்.திரு காரஞ்சன் சேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. போட்டிகளில் கடைசி நிமிட ரிஸ்க் எடுக்கக் கூடாது என்ற ஆசிரியரின் அறிவுரை ஏற்புடையதே. ஏனெனில் நானும் அந்த ரகம்தான்!

    பல முறை கடைசியாக 7 1/2 மணிக்கு மேல் விமரிசனம் அனுப்பியதுண்டு! 2,3 கதைகளுக்கு கடைசி நேரம் அவசர வேலை வந்து, எழுதியது முற்றுப் பெறாமல் அனுப்பாமலே வருந்தியதும் உண்டு.

    இருந்தும் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டது ஒரு வித்யாசமான அனுபவம் என்பது மறுக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  6. தனது உள்ளக் கருத்துக்களை,
    நல்லபடியாகத் தந்துள்ள
    திரு. சேஷாத்ரி அவர்களின்
    கடிதம் அருமை!

    பதிலளிநீக்கு
  7. திரு. சேஷாத்ரி அவர்களின்
    கடிதத்திற்கு, தங்கள் அளித்துள்ள பதிலில்
    குறிப்பிட்டுள்ள தங்களின் அனுபவக் கதையும்,
    அதன் பரிசுத் தொகையும் அதைப் பெற்று வர
    செய்த செலவுத் தொகையும்
    -இப்படி அனைத்துமே விறுவிறுப்பாகயிருந்தன.

    பதிலளிநீக்கு
  8. // திரு. சேஷாத்ரி அவர்களின்
    கடிதத்திற்கு, தங்கள் அளித்துள்ள பதிலில்
    குறிப்பிட்டுள்ள தங்களின் அனுபவக் கதையும்,
    அதன் பரிசுத் தொகையும் அதைப் பெற்று வர
    செய்த செலவுத் தொகையும்
    -இப்படி அனைத்துமே விறுவிறுப்பாகயிருந்தன. //

    //தாங்கள் இருவருமே ’பாண்டிச்சேரி’ என்பதால் இவ்வளவு தள்ளாட்டமோ என என் மனதில் அடிக்கடி நினைத்துக்கொள்வதும் உண்டு. :))))) //

    - இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  9. எளிய நடையில் அமைந்த நல்ல நேயர் கடிதம்! பாராட்டுகள்! வாத்யாரே "லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்" என்றே பழகிவிட்டது! புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாய் சுறுசுறுப்பாய் ஒன்றிரண்டு விமர்சனங்கள் மட்டும் நேரத்தே அனுப்பினேன்! மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளும் சோம்பேறி வேதாளம் கதைதான்! இப்படி வாத்தியார் ரிப்பீட்டா சொல்லியாவது டைம் கீப் அப் பண்ற பழக்கம் வருதான்னு பாக்குறேன்!....ம் ம் ம்..! வாத்யாரே நீங்கள் புதுச்சேரி வந்திருக்கீங்களா? வாங்க ஒரு 'ரவுண்டு' அடிக்கலாம்!? ஹா...ஹா...ஹா!

    பதிலளிநீக்கு
  10. எளிய நடையில் அமைந்த நல்ல நேயர் கடிதம்! பாராட்டுகள்! வாத்யாரே "லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்" என்றே பழகிவிட்டது! புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாய் சுறுசுறுப்பாய் ஒன்றிரண்டு விமர்சனங்கள் மட்டும் நேரத்தே அனுப்பினேன்! மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளும் சோம்பேறி வேதாளம் கதைதான்! இப்படி வாத்தியார் ரிப்பீட்டா சொல்லியாவது டைம் கீப் அப் பண்ற பழக்கம் வருதான்னு பாக்குறேன்!....ம் ம் ம்..! வாத்யாரே நீங்கள் புதுச்சேரி வந்திருக்கீங்களா? வாங்க ஒரு 'ரவுண்டு' அடிக்கலாம்!? ஹா...ஹா...ஹா! நானும் முன்னாள் (மனதால் இன்னாள்) திருச்சிக் காரனுங்கோ!

    பதிலளிநீக்கு
  11. அருமையான கடிதம். பாராட்டுகள் சேஷாத்ரி.

    பதிலளிநீக்கு
  12. \\விமர்சனம் எழுதி முடித்ததும் வாசித்துப் பார்க்கையில் என் உள்ளுணர்வில் பரிசு கிடைக்கும் எனத் தோன்றினால் ஏதோ ஒரு பரிசுக்குத் தெரிவாகிவிடுகிறது. அந்த வகையில் ஒரு தன்னம்பிக்கையை என்னுள் தவழவிட்டிருக்கிறது.\\

    உண்மையான வரிகள். நமக்கு நம் எழுத்தின் மீதான நம்பிக்கையை தன்னம்பிக்கையை மிகைப்படுத்திய போட்டி என்றால் மிகையில்லை. மிக நேர்த்தியாகவும் மனந்திறந்தும் எழுதப்பட்ட நேயர் கடிதம். திரு. சேஷாத்ரி அவர்களுக்கு பாராட்டுகள். கடைசி நாள் வரைக்கும் நானும் கூட ஒத்திப்போட்டிருக்கிறேன். இதில் கோபு சார் குறிப்பிட்டுள்ள அனுபவம் அனைவருக்கும் ஒரு பாடம். இனி கடைசி நாள்வரை எதையும் ஒத்திப்போடக்கூடாது என்ற உறுதி பிறக்கிறது. நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
  13. எளிமையான முறையில் அனுப்பி இருக்கும் நேயர் கடிதத்தை எழுதிய திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள், இன்னும் முழுமையாக உள்வாங்கிப் படிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  14. //பொதுவாக ஒவ்வொரு வாரமும் போட்டிக்கான முதல் விமர்சனம் பிள்ளையார் சுழிபோல திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களிடமிருந்தோ அல்லது திருவாளர். பழனி கந்தசாமி ஐயா அவர்களிடமிருந்தோ மட்டுமே எனக்கு வந்து சேரும். இருவருமே ’கோவை’க்காரர்கள். சீனியர் சிடிசன்களாக இருப்பினும் தேனீக்கள் போன்று சுறுசுறுப்பானவர்கள். :)//

    ஆஹா, என் உச்சி குளிர்ந்து போய் ஜலதோஷம் கூட பிடித்துவிட்டது. மருந்து வாங்க காசில்லை. உங்கள் தயவைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. நேயர் கடிதம் எழுதிய திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. கடிதமும், அதற்குத் தங்கள் பதிலும் அருமை.

    // அந்தப்பரிசுப்பணம் ரூ.5000த்தை நேரில் விழாவினில் கலந்துகொண்டு பெற்றுவர என் குடும்பத்தில் சிலருடன் திருச்சியிலிருந்து சென்னைக்குப் போகவர கார் ஏற்பாடு செய்து சென்று வந்ததில் எனக்கு 7000-8000 செலவு ஆனது என்பது தனிக்கதை. :) பணம் கிடக்கட்டும். இது என் எழுத்துக்களுக்குக் கிடைத்த ஓர் மிகச்சிறந்த அங்கீகாரம் அல்லவா!//

    பின்ன.

    நம்ம வழி தனி வழியாச்சே.

    பதிலளிநீக்கு
  17. கடிதம் பதிலு அல்லா கமண்ட்ஸ் படிச்சுபோட்டேன்

    பதிலளிநீக்கு
  18. திரு சேஷாத்ரி அவர்களின் நேயர் கடிதம் ரிப்ளை பின்னூட்டங்கள் எல்லாமே நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  19. 'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html

    தலைப்பு: ’இன்று போல் என்றும்’

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு