என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 11 மார்ச், 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-3



மீண்டும் பள்ளிக்குப் போகலாம்
[தொடர்பதிவு]
பகுதி-3


ஆறாம் வகுப்பு முதல் பதினோறாம் வகுப்பு வரை [VI Std. to XI Std SSLC] வரை நான் படித்தது என் வீட்டருகே இருந்த “தேசியக்கல்லூரி உயர்நிலைப்பள்ளி” [National College High School] தற்சமயம் அந்தப் பள்ளி இருந்த வளாகம் முற்றிலுமே மாறி திருச்சியில் மிகப் புகழ்பெற்ற “ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி” ஆக மாற்றப்பட்டுள்ளது.



தற்போதய ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியின் 
கிழக்குப் பார்த்த நுழைவாயில், படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இதன் மேற்கு பார்த்த மற்றொரு 
நுழைவாயிலின் வழியே வெளியே சென்றால் 
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், உடனே தென்படும்.

இதன் மேற்கு பார்த்த நுழைவாயிலின் எதிர்புறம் 
மிகப்பிரபலமான St. Joseph College இன் 
பிரதான நுழைவாயிலும் தெரியும்.


1960 முதல்1966 வரை 
நான் இங்கு நுழைந்து படித்த காலத்திலும்
அதன் பிறகு பல்லாண்டுகள் வரையிலும் கூட
"NATIONAL COLLEGE HIGH SCHOOL"
என்றே எழுதப்பட்டிருந்தது.
ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளியாக இது இருந்து வந்தது.





அந்தக்காலத்தில் நான் படித்த இந்த தேசியக்கல்லூரி உயர்நிலைப் பள்ளியின் மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தில் தான், சேங்காலிபுரம் ப்ரும்மஸ்ரீ அனந்தராம தீக்ஷதர், தூப்புல் ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்மாச்சாரியார், திருமதி சிவானந்த விஜயலக்ஷ்மி, திரு. கிருபானந்த வாரியார், புலவர் திரு. கீரன் போன்ற மிகப் பிரபலமான உபன்யாசகர்களால் புராணக்கதைகள் அடிக்கடி சொல்லப்படும். 


பலநாட்கள் தொடர்ந்து இரவில் நடைபெறும் இந்தக் கதைகள் கேட்பதில் எனக்கு அந்த நாட்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. 


அதுபோலவே, இதே பள்ளியின் மைதானத்தில், கோடை விடுமுறை காலங்களில் தொடர்ச்சியாக சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீ காஞ்சி காமகோடி பரமாச்சார்யாள் ஸ்ரீ மஹாபெரியவா முகாமிட்டு தினசரி பூஜைகள் செய்வார்கள். 


திவ்ய தரிஸனம் செய்து அவர்கள் திருக்கரங்களால் பூஜை செய்த தீர்த்தம் வாங்கிக்கொண்டு மகிழ்ந்ததுண்டு. அவர்கள் முகாமுடன் நிறைய யானைகள், பசுமாடுகள், கன்றுகள், ஒட்டகங்கள் முதலிய பிராணிகளும் அங்கு வந்து தங்க வைக்கப்பட்டிருக்கும். தினமும் கோபூஜை, கஜபூஜை எல்லாம் நடைபெறும். சிறுவயதில் எனக்கு யானைகளையும், ஒட்டகங்களையும் நன்கு பக்கத்தில் நின்று பார்த்து மகிழ்வதில் மிகுந்த ஆவலாக இருக்கும்.

பள்ளிக்கூட வாசலில் குச்சி ஐஸ், எலந்தவடை, அரிநெல்லிக்காய், சீத்தாப்பழம், எலந்தைப்பழம், நவாப்பழம், கலாக்காய், கலாப்பழம், சுட்ட சோளக்கருதுகள், வேர்க்கடலை, பஞ்சு மிட்டாய் என என்னென்னவோ விற்பார்கள்.சற்று சுகாதரக்குறைவாக இருப்பினும் வசதியுள்ள பல  மாணவர்களும் அவற்றை விரும்பி வாங்கிச் சாப்பிடுவார்கள்.


ஜவ்வு மிட்டாய்க்காரர் ஒரு கெட்டியான வழவழப்பான உலக்கை போன்ற குச்சியின் தலையில் மஃப்ளர் கட்டியது போல, கலர் கலராக [தற்போதைய டூத் பேஸ்ட்டுகளில் சில வெள்ளையும் சிவப்புமாகச் சேர்ந்து வருமே அது போல] ஜவ்வு மிட்டாயை ஒட்டிவைத்து நின்று கொண்டிருப்பார். 


அவரிடம் காசு கொடுத்தால், அந்த ஜவ்வு மிட்டாயைக்கொஞ்சமாக கை விரல்களால் இழுத்து, கைக்கெடியாரம், பதக்கம், செயின், மோதிரம் என ஏதேதோ செய்து சிறு பையன்களின் கைகளின் / உடம்பின் மேல் ஒட்டி விடுவார். 


கொஞ்சம் நேரம் அழகு பார்த்து விட்டு, அந்தப் பையன்கள் தங்கள் வியர்வையுடன் கூடிய அந்த ஜவ்வு மிட்டாயை தின்று விடுவார்கள்.  அது இழுக்க இழுக்க ஜவ்வு போல வந்து கொண்டே இருக்கும். அதனால் தான் அதற்கு ஜவ்வு மிட்டாய் என்று பெயர்.    

மற்றொருவர் ஒரு நாலு சக்கர சைக்கிள் வண்டியை நிறுத்தி வைத்துக்கொண்டு, அதைச்சுற்றிலும், சர்பத் பாட்டில்களாக அடுக்கி வைத்திருப்பார். மரத்தூளுடன் இருக்கும் பெரிய பாறை போன்ற ஐஸ்கட்டிகளை, தண்ணீர் ஊற்றி அலம்பிவிட்டு, அதை அப்படியே கேரட் சீவுவது போல அழகாகச் சீவி, சீவிய தூள்களை ஒரு கெட்டித்துணியில் பிடித்து சேகரித்து, அந்த ஐஸ் தூள்களை ஒரு கெட்டிக்குச்சியில் ஒரே அழுத்தாக அழுத்தி, கலர் கலராக ஏதேதோ சர்பத்களை அதன் தலையில் தெளித்து, கும்மென்று பெரியதாக பஞ்சுமிட்டாய் போல ஆக்கித் தருவார். 


ஆரம்பத்தில் இனிப்பாக சுவையாக உறிஞ்சிக் குடிக்க ஜாலியாக ஜில்லென்று இருக்கும். பிறகு போகப்போக, சர்பத் எல்லாம் காலியாகி வெறும் ஐஸ் கட்டிகள் மட்டுமே இருந்து அவையும் வலுவிழந்து நாம் கையில் பிடித்திருக்கும் கெட்டிக்குச்சியிலிருந்து தொப்பென்று கீழே விழுந்து விடுவதுண்டு. 


அந்தக் கீழே விழுந்த பனிக்கட்டிகளின் மேல் செருப்பு அணியாத கால்களை வைத்து காலுக்குக் கொஞ்சம் ஜில்லாப்புப் பெறுவதும் உண்டு. 


அந்த நாட்களில் இந்த சர்பத் கலந்த ஐஸ் தூள்கள் எனக்கு மிகவும் பிடித்ததோர் தின்பண்டமாகும். அந்த வியாபாரி பெரிய பாறையான பனிக்கட்டிகளை வேக வேகமாகச் சீவும் போது நான் அருகிலேயே நிற்பேன். அந்தத் தூள்கள் என் முகத்தில் அவ்வப்போது தெளிக்கும். அதுவே குற்றால அருவியில் குளித்தது போன்ற குதூகலத்தை எனக்கு ஏற்படுத்தும்.


ஆறாம் வகுப்பு ஆசிரியர் பெயர்: N. சுந்தரம். 


அந்த ஆண்டு தான் புதிதாக ஆசிரியராகப் பொறுப்பேற்றவர். மிகவும் ஸ்டைலாக இருப்பார். ஏதேதோ தன்னைப்பற்றி சொந்த அனுபவங்களை அழகாக கதை கதையாகச் சொல்லுவார். அவர் தன் கையெழுத்தை சுருக்கமாகப் போடும்போது NS என்பதில் முதலில் S போட்டுவிட்டு, பிறகு கையை எடுக்காமலேயே முன்புறம் இழுத்து N போடுவார்.

ஏழாம் வகுப்பு ஆசிரியர் பெயர்: பட்டாபிராமன் 

எட்டாம் வகுப்பு ஆசிரியர் பெயர்: S M பசுபதி ஐயர் 


இவர் ஒரு வயதான கிழட்டு வாத்யார். இவரால் எனக்கு பிற்காலத்தில் மிகப்பெரிய தொல்லை ஒன்று ஏற்பட்டது. பின் பகுதியில் அதைப்பற்றிக் கூறுவேன்.


ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் பெயர்: V துரைராஜ் 


VD என்ற பால்வினை நோயின் பெயரால் அழைக்கப்பட்டவர். இவர் தான் எங்கள் வகுப்பு ஆசிரியர். முரட்டு மனிதர். நல்ல குண்டு. நல்ல சிவப்பு. சினிமா நடிகர் ஜெமினி கணேசன் போல இருப்பார். பள்ளியின் விளையாட்டு ஆசிரியரும் [P.T. MASTER] இவரே.

பத்தாம்  வகுப்பு ஆசிரியர் பெயர்: R ஸ்ரீநிவாஸன் [ R SRI என்பார்கள் ]

பதினோறாம் வகுப்புக்கும் மேற்படி R. ஸ்ரீநிவாஸன் என்பவரே எனக்கு வகுப்பு ஆசிரியர். ஆங்கிலமும், கணிதமும் மட்டுமே இவர் வகுப்பு எடுப்பார். மற்ற பாடங்களுக்கு வெவ்வேறு ஆசிரியர்கள் வருவார்கள்.


இந்த 10th + 11th வகுப்பு ஆசிரியர் ஆர்.ஸ்ரீ அவர்கள் நல்ல உயரம். மாநிறம். நெற்றியில் V Type நாமம் இட்டிருப்பார். அவருக்கு எப்போதுமே, கடுகடுப்பான மூலக்கடுப்பெடுத்த முகத்தோற்றம். கண்டிப்புக்கும் கறாருக்கும் பெயர் போனவர். இவரைப் பார்த்தாலே மாணவர்கள் எல்லோருக்கும் மிகவும் பயம் உண்டு.  

இந்த ஆர். ஸ்ரீ. என்பவர் யாரையும் பளாரென்று கன்னத்தில் அறைவதற்கு அஞ்சவே மாட்டார். அறை வாங்கிய கன்னத்தில் அவரின் விரல்கள் பதிந்து போகும். இவரே அந்தப் பள்ளியின் NCC [ARMY] MASTER வேறு. மாணவர்களில் பலர் இவரை ஏனோ ”பட்டறை” என்ற பட்டப்பெயருடன் அழைத்து வந்தார்கள்.  


{ NCC [ NAVAL ] MASTER வேறொருவர் கோவிந்தராஜன் என்ற பெயரில் இருந்தார். }

NCC யில் சேர்ந்து காலை PARADE க்கு வராதவர்களை, தேடிக்கண்டு பிடித்து காலை முதல் மாலை வரை பெஞ்ச் மேல் ஏறி நின்று கொண்டே இருக்க வேண்டும் என்று உத்தரவு இட்டு விட்டு, அது பற்றி அந்தந்த வகுப்பு ஆசிரியருக்கும், வகுப்பு மாணவத் தலைவனுக்கும் கூட உத்தரவு போட்டு விட்டு, அது நடைமுறை படுத்தப்படுகிறதா என்பதையும் அவ்வப்போது வந்து கண்காணிப்பார், இந்த ஆர். ஸ்ரீ. என்ற NCC வாத்யார். 

ஒரு முறை நாய் கடித்து விட்டதால் NCC PARADE க்கு வர முடியவில்லை என்று எவ்வளவோ கெஞ்சிக் கேட்டுக்கொண்டும், வேலாயுதம் என்ற என் வகுப்பில் படித்த ஒரு மாணவனை, ஒரு நாள் முழுவதும் பெஞ்ச் மேல் நிற்க வைத்து விட்டார், இந்த ஆர்.ஸ்ரீ. என்ற புண்ணியவான். 


அவனைப் பார்க்க எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. ஈவு இரக்கம் கொஞ்சமும் இல்லாதவரான இவர் கொடுத்த கடும் தண்டனைக்கு முன்னால், நாய்க்கடியே தேவலாம் என்று ஆகிவிட்டது அவனுக்கு.

மிகவும் கடுமையாக நடந்து கொள்வதால் இந்த ஆர். ஸ்ரீ. வாத்யாரை யாருக்குமே பிடிக்காமல் போய் விட்டது. இம்போஷிஸன் கொடுக்கவும் அஞ்சவே மாட்டார். ஏதாவது முதல் நாள் நடத்திய பாடத்தில் கேள்வி கேட்பார். 


பதில் சொல்ல முடியாதவர்களை 100 முறை அதையே எழுதிக்கொண்டு வா என்பார். எழுதி வராவிட்டால் மறுநாள் வட்டி சேர்த்து அதையே 200 முறைகள் எழுதி வரவேண்டும் என்று சொல்லி விடுவார். மேலும் இம்போஷிஸன் கொடுத்தவர்களை, வகுப்பை விட்டு வெளியே நிற்க வைத்து விடுவார். அவரிடம் மாட்டினால் தப்பவே முடியாது. 

நான் எப்போதுமே வகுப்பில் முதல் பெஞ்சில் முதல் மாணவனாக உட்காருவது வழக்கம். ஒவ்வொரு ஆசிரியர் நடத்தும் பாடங்களையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருப்பேன்.  அதிலேயே எனக்கு பலவிஷயங்கள் மனதில் பதிந்து விடுவதுண்டு. வீட்டுக்குப்போய் திரும்பத்திரும்ப படிப்பதெல்லாம் அதிகம் கிடையாது. 

நான் இந்த ஆர். ஸ்ரீ. வாத்யாரிடம் எதற்குமே நேரிடையாக மாட்டிக்கொண்டு அவஸ்தைப்பட்டது கிடையாது.  Class Teacher ஆன இவர் ஆங்கிலம் மற்றும் கணிதம் மட்டுமே எடுப்பார். அந்த இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த ஆர்வமுள்ள பாடங்கள் ஆக இருந்ததால், எனக்கும் இவருக்கும் மோதல் ஏதும் ஏற்பட்டது இல்லை. 

நான் 10th + 11th படிக்கும்போது,  என்னுடன் படித்தவர்களில் ஒரு சில முரட்டு மீசை வளர்ந்த மாமாக்கள் என் வகுப்பில் உண்டு. அவர்களுக்கும் இந்த ஆர்.ஸ்ரீ வாத்யார் இம்போஷிஸன் கொடுத்து விட்டு, அவர்கள் எழுதி வந்தார்களா என்பதை என்னை விட்டு சரி பார்த்து, அவருக்கு அறிக்கை கொடுக்கணும் என்று சொல்லி படுத்துவார் என்னை. 

என் பாடு மிகவும் தர்மசங்கடமாகிப் போனதுண்டு. அந்த முரட்டு மீசை ஆசாமிகளைக் கண்டு அவருக்கே சற்று பயம் என்றால் எனக்கு எவ்வளவு பயம் இருக்கும் என்பதை தயவுசெய்து கற்பனை செய்து பாருங்கள். 

இந்த முரட்டு மாமாக்களில் ஒருவர் பெயர் கணேசன் அவரே 'SCHOOL PUPIL LEADER'  வேறு.

மற்றொருவர் பெயர் ”இராமலிங்கம்” முரட்டு மீசையை பளபளவென்று எண்ணெய் தடவி முறுக்கிக்கொண்டே இருப்பார். உறையூர் மின்னப்பன் தெருவில் வசித்து வந்தார். சற்று குள்ளம். கருப்பு நிறம். நல்ல தமிழ் புலமை வாய்ந்த பேச்சாளர். அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் போல அருமையாகப் பேசுவார். தமிழைத் தவிர மற்ற பாடங்களில் அவர் அடிக்கடி மாட்டுவதுண்டு. இவர் தான் அன்று ASST. 'SCHOOL PUPIL LEADER' 

மூன்றாவது ஆசாமி பெயர் ஸ்டீபன். கிங்காங் தாராசிங் என்ற மல்யுத்த வீரர்கள் போல மஹா மஹா குண்டு. கடைசி பெஞ்சில் நட்ட நடுவே தனியாக அமர்ந்திருப்பார். 


பெஞ்சின் ஒரு ஓரத்தில் இவர் அமர்ந்தால் போச்சு. பெஞ்ச் அப்படியே மேல் நோக்கி அலாக்காகத் தூக்கப்பட்டு, மறு ஓரத்தில் அமர்ந்துள்ள மாணவர், ஆகாசத்தை நோக்கிச் சென்று கீழே விழுந்து அடிபட்டு விட நேரிடும். 


அவ்வளவு ஒரு பராக்ரமம் வாய்ந்த புஷ்டியான பீமசேனன் பொன்ற தேகவாகு, அதுவும் பள்ளியின் இறுதி வகுப்பு படிக்கும் போதே. 


இந்த ஸ்டீபன் என்பவர் அன்றைக்கு திருச்சியில் பிரபலமாக இருந்த ராஜா தியேட்டர் உரிமையாளரின் மகன் என்று கேள்விப்பட்டுள்ளேன்.   தினமும் பள்ளிக்கு அந்தகாலத்திலேயே (1965-66) காரில் தான் வந்து இறங்குவார். 


இந்த கணேசன், இராமலிங்கம், ஸ்டீபன் ஆகிய மூன்று முரட்டு மாமாக்களுக்கு மட்டும், பள்ளிக்கு வரும் போது, Full Pant அல்லது வேஷ்டி கட்டிக்கொண்டு வர சிறப்பான அனுமதி தரப்பட்டிருந்தது. மற்ற மாணவர்களாகிய நாங்களெல்லாம் அரை டிராயர் [Half Pant] தான் அணிந்து கொண்டு போவோம். 


ஓரிரு டிராயர்கள் [Half Pant] மட்டும் வைத்துக்கொண்டு அதையே திரும்பத் திரும்ப பல நாட்கள் அணியும் எங்களைப்போன்ற ஒரு சில ஏழை மாணவர்களுக்கு, அந்த டிராயர்களின் பின்புறம் [இருக்கையில் அமரும் இடம்] நைந்து போய், கரைந்து போய், கிழிய ஆரம்பிக்கும். 


இதைப்பார்க்கும் மற்ற மாணவர்கள், ”பின்னால் உனக்கு தபால்பெட்டி தெரிகிறது” என்று கேலி செய்து எச்சரிப்பது உண்டு. அது போன்று ஏற்பட்டு விட்ட துரதிஷ்ட நாட்களில் ஏழை மாணவர்களாகிய நாங்கள், அந்த லேசாக பின்பிறம் கிழிந்த டிராயர்களை, டெய்லரிடம் கொடுத்து ஒட்டுப்போட்டு [காயங்களுக்குப் போடும் பிளாஸ்தரி போல], பிறகு அதையே பல நாட்கள் அணிவதும் உண்டு.     


நாளையும் தொடரும்

69 கருத்துகள்:

  1. தேசியக்கல்லூரி உயர்நிலைப்பள்ளி” [National College High School] தற்சமயம் அந்தப் பள்ளி இருந்த வளாகம் முற்றிலுமே மாறி திருச்சியில் மிகப் புகழ்பெற்ற “ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி” ஆக மாற்றப்பட்டுள்ளது.

    பள்ளி கல்லூரியாக வளர்ந்தது மகிழ்ச்சியளிக்கிறது..

    பதிலளிநீக்கு
  2. மிகப் பிரபலமான உபன்யாசகர்களால் புராணக்கதைகள் அடிக்கடி சொல்லப்படும். /

    மிகச்சமீபத்தில் மனம் கவர்ந்த விசாகாஹரி அவர்களின் சங்கீத உபன்யாசதைப் பகிர்ந்திருந்தீர்கள்..

    படித்த பள்ளிக்கு இப்படி சென்று அமர்வது சந்தோஷமளிக்கும் சம்பவம்...

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீ காஞ்சி காமகோடி பரமாச்சார்யாள் ஸ்ரீ மஹாபெரியவா முகாமிட்டு தினசரி பூஜைகள் செய்வார்கள்.

    அற்புதமான தரிசன்ம்...

    பதிலளிநீக்கு
  4. ஈவு இரக்கம் கொஞ்சமும் இல்லாதவரான இவர் கொடுத்த கடும் தண்டனைக்கு முன்னால், நாய்க்கடியே தேவலாம் என்று ஆகிவிட்டது அவனுக்கு.

    மிகக் கொடுமையாக இருக்கிறதே..

    பதிலளிநீக்கு
  5. ஜவ்வு மிட்டாய், ஐஸ், எலந்த வடை --இப்போது சாப்பிட்டால் அந்தநாள் போல் சுவைபதில்லையே!!

    பதிலளிநீக்கு
  6. ஜவ்வு மிட்டாய், இலந்த வடை என உங்கள் பள்ளிக் காலங்கள் சுவையாக இனிக்கிறது....

    தொடரட்டும் பள்ளி நினைவுகள்....

    பதிலளிநீக்கு
  7. ////

    பள்ளிக்கூட வாசலில் குச்சி ஐஸ், எலந்தவடை, அரிநெல்லிக்காய், சீத்தாப்பழம், எலந்தைப்பழம், நவாப்பழம், கலாக்காய், கலாப்பழம், சுட்ட சோளக்கருதுகள், வேர்க்கடலை, பஞ்சு மிட்டாய் என என்னென்னவோ விற்பார்கள்.சற்று சுகாதரக்குறைவாக இருப்பினும் வசதியுள்ள பல மாணவர்களும் அவற்றை விரும்பி வாங்கிச் சாப்பிடுவார்கள்.


    ஜவ்வு மிட்டாய்க்காரர் ஒரு கெட்டியான வழவழப்பான உலக்கை போன்ற குச்சியின் தலையில் மஃப்ளர் கட்டியது போல, கலர் கலராக [தற்போதைய டூத் பேஸ்ட்டுகளில் சில வெள்ளையும் சிவப்புமாகச் சேர்ந்து வருமே அது போல] ஜவ்வு மிட்டாயை ஒட்டிவைத்து நின்று கொண்டிருப்பார்.


    அவரிடம் காசு கொடுத்தால், அந்த ஜவ்வு மிட்டாயைக்கொஞ்சமாக கை விரல்களால் இழுத்து, கைக்கெடியாரம், பதக்கம், செயின், மோதிரம் என ஏதேதோ செய்து சிறு பையன்களின் கைகளின் / உடம்பின் மேல் ஒட்டி விடுவார்.
    ////


    எனது பள்ளி நினைவுகளை கண் முன்னே கண்டது போல் அவ்வளவு இனிமையாக இருந்தது சார் தங்களது பதிவினில் பயணிக்கையில்!!!!அருமையான பதிவு சார்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. பதிவைப் படிக்கும்பொழுது, அதற்கு இணையாக என்னுடைய உயர்நிலைப் பள்ளி நாட்களையும், ஆசிரியர்களையும் நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
  9. ஜவ்வு மிட்டாய்க்காரர் ஜவ்வு மிட்டாய் சுற்றி இருக்கும் குச்சியில் உச்சியில் ஒரு தலையும் கைகளும் உள்ள பொம்மையை மாட்டி வைத்து கீழே தொங்கும் கயிற்றை பிடித்து இழுக்க பொம்மையின் இரண்டு கைகளும் சேர்ந்து அடித்து கைகலில் கட்டப்பட்ட சலங்கை ஜல் ஜல் என்று ஒலிக்குமே?

    அந்த ஜல் ஜல் ஒலியை வைத்துத்தான் வீதிக்கு ஜவ்வுமிட்டாய்க்காரர் வந்துவிட்டார் என்று என்று புரிந்து கொண்டு சிறார்கள் ஜவ்வு மிட்டாய் வாங்க வீதிக்கு ஓடுவார்கள்.

    ஜவ்வு மிட்டாயை இழுத்து கடிகாரம் மோதிரம் செயின் செய்யும் தருணத்தில் சிறுவர்கள் அந்தக்கயிற்றினை இழுத்து விட்டு ஜல் ஜல் ஒலி வரவழைத்து மகிழ்வார்கள்.இதையெல்லாம் நானும் அனுபவித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. பள்ளிகால நிகழ்வுகளை மிக சுவாரஸ்யமாக அள்ளித்தந்திருப்பது அருமை.

    உங்கள் அபார ஞாபகசக்தியை நினைத்தால் ஆச்சரியம் ஏற்படுகின்றது.
    ஆர் ஸ்ரீ வாத்தியாரை நினைத்தால் எனக்கே நடுக்கமாக இருக்கின்றது.

    இந்தக்கால ஆசிரியர்கள் இத்தனை கடுமையாக இருக்கமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  11. எவ்வளவு சுவாரஸ்யமான நிகழ்வுகள்,நினைவுகள்,பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. ஆஹா..அட BHEL SRIRANGAM OC 6 பூபதி உங்களோட க்ளாஸ்மேட்டா? SUPER!

    பதிலளிநீக்கு
  13. கொடுக்காப்புளியை விட்டு விட்டு விட்டீர்களே..
    பள்ளி நினைவுகள் தொகுத்த விதம் அருமை.
    ஆசிரியர்களைப் பற்றி எழுதிய குறிப்புகள் சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
  14. நான் வாசித்த "மீண்டும் பள்ளிக்குப் போகலாம்" தொடர்பதிவுகளில் உங்களது முதல் இடம். அனுபவங்களோடு படங்களையும் பாடங்களை நடத்திய ஆசிரியர்களையும் தவறாமல் குறீப்பிட்டுள்ளீர்கள்.அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  15. அன்பின் வை,கோ

    அழகான நினைவுகள் - மலரும் நினைவுகள் - அசை போட்டு ஆனந்தித்து - எழுதியது தங்களின் நல்ல நினைவாற்றலைக் காட்டுகிறது. எத்தனை எத்தனை செய்திகள் - நிக்ழ்வுகள் - பலே பலே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  16. அன்பின் வை.கோ

    http://cheenakay.blogspot.in/2008/05/6.html

    நேரமிருப்பின், எனது ஒன்பதாம் வகுப்பில் இருந்து பதினொன்றாம் வகுப்பு வரை படித்த கதையினைப் பார்க்கவும்.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  17. அந்தக் கீழே விழுந்த பனிக்கட்டிகளின் மேல் செருப்பு அணியாத கால்களை வைத்து காலுக்குக் கொஞ்சம் ஜில்லாப்புப் பெறுவதும் உண்டு.

    ஜில்லிப்பான பகிர்வுகள்..

    பதிலளிநீக்கு
  18. இப்போதுதான் தங்களின் மீண்டும் பள்ளிக்குப் போகலாம் தொடரின் மூன்று பகுதிகளையும் படித்து முடித்தேன். வெகுசுவாரசியமான நடை. முதல் வகுப்பில் சேர்ந்த நாளிலிருந்து, பள்ளி ஆசிரியர்கள் பற்றிய விளக்கமான குறிப்புகள், பள்ளி வளாகத்துக்கு வெளியே விற்றத் தின்பண்டங்களின் சிலாகிப்பு, கூடப்படித்த மாணவர்கள் பற்றிய வர்ணனை என மனக்கண் முன் ஒவ்வொன்றாய் வலம்வரச் செய்துவிட்டீர்கள். இந்த அளவுக்கு பள்ளி வாழ்க்கையை மிகவும் ரசனையுடன் நேசிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
  19. சார் நல்ல தொகுப்பு...

    அதிக விவரங்கள் பகிர்ந்து தொடர்பதிவை அசத்திடிங்க.

    பதிலளிநீக்கு
  20. பள்ளி நினைவுகள் அருமை அய்யா

    பதிலளிநீக்கு
  21. சந்தோஷ நினைவுளின் ஊர்வலம்...

    பதிலளிநீக்கு
  22. இத்தனை வருடங்களுக்கு பின்னும் ஒவ்வொரு ஆசிரியரின் பெயர், மாணவர்களின் பெயர்கள் என்று நினைவில் வைத்திருப்பது ஆச்சரியம் சார்.

    பதிலளிநீக்கு
  23. நறுமணம் வீசும் மலரும் நினைவுகள்.

    இந்த ஆர். ஸ்ரீ. வாத்தியார் நான் படித்த போது தலைமை ஆசிரியர் .

    பதிலளிநீக்கு
  24. Sir, You made me go on my olden days.
    The ice, elanthavadai, intersting.
    viji

    பதிலளிநீக்கு
  25. //அந்தத் தூள்கள் என் முகத்தில் அவ்வப்போது தெளிக்கும். அதுவே குற்றால அருவியில் குளித்தது போன்ற குதூகலத்தை எனக்கு ஏற்படுத்தும்.
    //

    :)ரொம்ப ரசிச்சு படிக்கிறேன்....ஒவ்வொரு கடைகளும் வர்ணனையும் அருமை....நாங்களெல்லாம் சிலவற்றை பார்த்தது கூட இல்லை.

    பதிலளிநீக்கு
  26. //இவரால் எனக்கு பிற்காலத்தில் மிகப்பெரிய தொல்லை ஒன்று ஏற்பட்டது. பின் பகுதியில் அதைப்பற்றிக் கூறுவேன்.
    //

    :)) உங்கள் விவரிப்பிலேயே தெரிகிறது....தொலை கொடுத்தவர் என....

    //நடிகர் ஜெமினி கணேசன் போல இருப்பார்.//

    ஹை......

    //NCC யில் சேர்ந்து காலை PARADE க்கு வராதவர்களை, தேடிக்கண்டு பிடித்து காலை
    முதல் மாலை வரை பெஞ்ச் மேல் ஏறி நின்று கொண்டே இருக்க வேண்டும் என்று உத்தரவு இட்டு விட்டு,//

    பள்ளிக்கூடங்கள் என்றாலே குழந்தைகளுக்கு எப்படி சந்தோஷம் வரும்...கசாப்பு கடை ஆட்டை போல் நடத்துவது கண்டிக்கத்தக்கது.


    //இரக்கம் கொஞ்சமும் இல்லாதவரான இவர் கொடுத்த கடும் தண்டனைக்கு முன்னால்,
    நாய்க்கடியே தேவலாம் என்று ஆகிவிட்டது அவனுக்கு.
    //

    கொவமாய் வருகிறது...

    //என் பாடு மிகவும் தர்மசங்கடமாகிப் போனதுண்டு. அந்த முரட்டு மீசை ஆசாமிகளைக் கண்டு
    அவருக்கே சற்று பயம் என்றால் எனக்கு எவ்வளவு பயம் இருக்கும் என்பதை தயவுசெய்து
    கற்பனை செய்து பாருங்கள்.
    //

    :)

    பதிலளிநீக்கு
  27. 'நாளையும் தொடரும்' என்கிற வரியைக் கட்டக் கடைசியில் பார்த்த பிறகு தான் எல்லாத்தையும் இன்னும் கொட்டித் தீர்க்கவில்லை, இன்னும் பாக்கி வைத்திருக்கிறீர்கள் என்று தெரிந்தது.

    இந்தப் பகுதியில் அவ்வளவு ரசனைகள். அத்தனையையும் அந்த வயசிலேயே ஏற்பட்டதா, இல்லை, அந்த வயசு நினைவுகளை இந்த வயசில் அசை போட்டதால் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. எப்போ ஏற்பட்டால் என்ன?.. தான் ரசித்ததை மற்றவர்களும் ரசிக்க வைக்க உங்களால் முடிகிறது. எழுத்தின் தாத்பரியமே அது தானே?..

    நன்றி, கோபு சார்!

    பதிலளிநீக்கு
  28. ஆரம்பத்தில் இனிப்பாக சுவையாக உறிஞ்சிக் குடிக்க ஜாலியாக ஜில்லென்று இருக்கும். பிறகு போகப்போக, சர்பத் எல்லாம் காலியாகி வெறும் ஐஸ் கட்டிகள் மட்டுமே இருந்து அவையும் வலுவிழந்து நாம் கையில் பிடித்திருக்கும் கெட்டிக்குச்சியிலிருந்து தொப்பென்று கீழே விழுந்து விடுவதுண்டு.//

    எனக்கும் இந்த அனுபவம் எல்லாம் உண்டு.
    ரிஷபன் அவர்கள் சொன்ன மாதிரி கொடிக்காப்புளியை மறந்து விடடீர்களே!
    விளாம்பழம் விற்க மாட்டார்களா?

    சவ்மிட்டாய் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன்.
    பள்ளி மலரும் நினைவுகள் அருமை சார்.

    பதிலளிநீக்கு
  29. உங்கள் பள்ளிக் காலம் எம்மையும் இனிய நினைவுகளுக்கு இட்டுச் செல்கின்றது.

    பதிலளிநீக்கு
  30. ஆறாம் வகுப்பிலிருந்துதான் கஷ்ட காலம் ஆரம்பிக்கும். பாடங்கள் மட்டுமல்ல உயர்னிலை பள்ளிக்கே உரிய கெடுபிடிகள். முதல் பெஞ்சு மாணவனின் வேறுவிதமான சிரமங்களும் புரிகின்றன. நன்றி.

    பதிலளிநீக்கு
  31. இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ள எல்லோருக்கும் தனித்தனியே நன்றி தெரிவித்து ஓர் தனிப்பதிவே தந்துள்ளேன்.

    இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html

    தலைப்பு:

    இயற்கை அழகில் ’இடுக்கி’
    இன்பச் சுற்றுலா

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  32. ரிஷபன் said...
    //கொடுக்காப்புளியை விட்டு விட்டு விட்டீர்களே..//

    ஆமாம் சார்; நானே சிலமுறை விரும்பிச் சாப்பிட்டுள்ள, அதைப்போய் எழுத மறந்து விட்டேனே. மிகவும் வெட்கப்படுகிறேன். வருந்துகிறேன்.
    நினைவூட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.

    //பள்ளி நினைவுகள் தொகுத்த விதம் அருமை.

    ஆசிரியர்களைப் பற்றி எழுதிய குறிப்புகள் சுவாரசியம்.//

    மிக்க நன்றி, சார்.

    பதிலளிநீக்கு
  33. மிக அருமையாக சுவாரசியமாக தொகுத்து எழுதியுள்ளீர்கள்.சார்.

    அந்த ஜவ்வு மிட்டாய் எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனால் பள்ளிக்கருகில் சாப்பிட மாட்டேன். எதையுமே என் அம்மா அப்பா வாங்கித்தந்தால்தான் நான் சாப்பிடுவேன். உங்க பதிவை படித்ததும் பள்ளிக்கருகில் சாப்பிடும் சுவாரசியத்தை தவறவிட்டுவிட்டேனோ என தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  34. //RAMVI said...
    மிக அருமையாக சுவாரசியமாக தொகுத்து எழுதியுள்ளீர்கள்.சார்.

    அந்த ஜவ்வு மிட்டாய் எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனால் பள்ளிக்கருகில் சாப்பிட மாட்டேன். எதையுமே என் அம்மா அப்பா வாங்கித்தந்தால்தான் நான் சாப்பிடுவேன். உங்க பதிவை படித்ததும் பள்ளிக்கருகில் சாப்பிடும் சுவாரசியத்தை தவறவிட்டுவிட்டேனோ என தோன்றுகிறது.//

    அன்பான தங்களின் வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம் vgk

    பதிலளிநீக்கு
  35. இலந்த அடை ,கிழங்கு ,எல்லாம் எங்க பள்ளிக்கருகிலும் விப்பாங்க வாங்கினா வாலிண்டியர்கிட்ட மாட்டுபட்டு அசெம்ப்ளி நடுவில் நிக்க நேரிடும் அதனாலேயே ஆசையிருந்தும் வாங்க மாட்டோம் .
    எங்க தமிழ் டீச்சர் வேறு சொல்வாங்க இலந்த பழம் உள்ளிருக்கும் புழுவோடுதான் சேர்த்து தட்டி அடை செய்கிராங்கன்னு .எப்படி சார் மனசு வரும் சாப்பிட ..பதிவு பழைய சினிமா பார்த்த மாதிரி இருக்கு அதுவும் சிவாஜி /ஜெமினி படங்கள் :))))))))

    பதிலளிநீக்கு
  36. angelin said...
    //இலந்த அடை ,கிழங்கு ,எல்லாம் எங்க பள்ளிக்கருகிலும் விப்பாங்க வாங்கினா வாலிண்டியர்கிட்ட மாட்டுபட்டு அசெம்ப்ளி நடுவில் நிக்க நேரிடும் அதனாலேயே ஆசையிருந்தும் வாங்க மாட்டோம் .
    எங்க தமிழ் டீச்சர் வேறு சொல்வாங்க இலந்த பழம் உள்ளிருக்கும் புழுவோடுதான் சேர்த்து தட்டி அடை செய்கிராங்கன்னு .எப்படி சார் மனசு வரும் சாப்பிட ..பதிவு பழைய சினிமா பார்த்த மாதிரி இருக்கு அதுவும் சிவாஜி /ஜெமினி படங்கள் :))))))))//


    அன்புள்ள நிர்மலா,

    ஒரே மூச்சில் ஒரே நாளில் இந்தத்தொடரின் அனைத்து ஏழு பகுதிகளையும் மிகவும் ரசித்துப்படித்து விட்டு, அன்புடன் வருகை புரிந்து, அழகாகக் கருத்துக்கள் கூறியுள்ளது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    என் மனமார்ந்த நன்றிகள்.

    பிரியமுள்ள,
    கோபு


    [நானே என் சிறுவயதில் சிவாஜியின் தீவிர ரஸிகனாக இருந்தவன் தான்.
    அதனால் நீங்கள் சொல்வதும் சரியே]

    பதிலளிநீக்கு
  37. ரொம்பரொம்ப அனுபவித்து எழுதியிருக்கிறார்கள். குச்சி ஐஸ்ஸை
    ஐஸ்-ப்ரூட்னு சொல்லுவார்கள் இல்லையா. எல்லாருக்கும் எல்லாம் ஞாபகம் வரும்.

    பதிலளிநீக்கு
  38. Kamatchi December 14, 2012 3:03 AM
    ரொம்பரொம்ப அனுபவித்து எழுதியிருக்கிறார்கள். குச்சி ஐஸ்ஸை
    ஐஸ்-ப்ரூட்னு சொல்லுவார்கள் இல்லையா. எல்லாருக்கும் எல்லாம் ஞாபகம் வரும்.//

    வாங்கோ மாமி. நமஸ்காரம்.

    ஆமாம். குச்சி ஐஸ் = ஐஸ் ஃப்ரூட்.

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள்
    கோபாலகிருஷ்ணன்

    பதிலளிநீக்கு
  39. ஜவ்வு மிட்டாய், குச்சி ஐஸ்... அந்த காலத்துக்கே பொய் விட்டேன்.
    எங்கள் பள்ளியில் தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் இரண்டுக்கு மட்டும் ஆண் வாத்தியார்கள்.
    நீங்கள் சொல்லியிருக்கும் ஆர்ஸ்ரீ போன்ற வாத்தியார்களை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan December 17, 2012 12:57 AM

      வாங்கோ, திருமதி ரஞ்ஜனி மேடம், வணக்கம்.

      //ஜவ்வு மிட்டாய், குச்சி ஐஸ்... அந்த காலத்துக்கே போய் விட்டேன்.//

      60 லிருந்து 6 வயதுக்கா? மகிழ்ச்சி ! ;)))))
      [ஆனாலும் ’பொய்’ சொல்றீங்கோ ;)
      நான் அதை ’போய்’ ஆக்கிவிட்டேன்]

      எங்கள் பள்ளியில் தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் இரண்டுக்கு மட்டும் ஆண் வாத்தியார்கள்.

      தங்களின் சமீபத்திய பதிவில் தங்கள் தமிழ் ஆசிரியரைப்பற்றி வர்ணித்து இருந்தீர்கள். படித்தேன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

      //நீங்கள் சொல்லியிருக்கும் ஆர்.ஸ்ரீ போன்ற வாத்தியார்களை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது!//

      ஆமாம். அன்பும் ஈவு இரக்கமும் இல்லாத மனிதர்.
      VERY STRICT MAN. ;(

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நனறி. அன்புடன் VGK

      நீக்கு
  40. நிறைய தவறுகள் தட்டச்சு எசெய்யும் போது! இப்போதுதான் பார்த்தேன். மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
  41. Ranjani Narayanan December 19, 2012 12:14 AM
    //நிறைய தவறுகள் தட்டச்சு செய்யும் போது! இப்போதுதான் பார்த்தேன். மன்னிக்கவும்!//

    அதெல்லாம் மன்னிக்கவே முடியாது. அதற்காக என்னை நீங்கள் மன்னிக்கணும்.

    ஏனென்றால் தவறுகள் .... அதாவது எழுத்துப்பிழைகள் .... அவசரத்தில் தட்டச்சு செய்யும் போது ஏற்படுவது மிகவும் சகஜமே.

    எனக்கும் இதுபோல அடிக்கடி ஆகிறது, மேடம். அதனால் கவலையே படாதீங்கோ. கருத்து புரியும்படியாக இருந்தால் அதுவே போதும். அது தான் முக்கியம்.

    -=-=-=-=-=-=-=-

    இரு மலையாளிகள் சந்தித்துக்கொண்டபோது ஒருவர் மற்றவரிடம் கேட்டாராம்:

    ”மரிச்சுப்போனதா எழுத்து வந்ததே, அது நீயோ உன் அண்ணனோ?”

    -=-=-=-=-=-=-=-=-=-

    யாரோ எப்போதோ என்னிடம் சொல்லிச்சிரித்த நகைச்சுவை இது. அதனால் அதனை உங்களிடம் இப்போது பகிர்ந்து கொண்டேன்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு

  42. அந்தக்காலத்தில் நான் படித்த இந்த தேசியக்கல்லூரி உயர்நிலைப் பள்ளியின் மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தில் தான், சேங்காலிபுரம் ப்ரும்மஸ்ரீ அனந்தராம தீக்ஷதர், தூப்புல் ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்மாச்சாரியார், திருமதி சிவானந்த விஜயலக்ஷ்மி, திரு. கிருபானந்த வாரியார், புலவர் திரு. கீரன் போன்ற மிகப் பிரபலமான உபன்யாசகர்களால் புராணக்கதைகள் அடிக்கடி சொல்லப்படும்.

    பள்ளியில் படிக்கும்போதே புராணக்கதைகள் கேட்கும் வாய்ப்பும் கிடைச்சிருக்கே. உங்க இளமைப்பருவம் ஸ்ட்ராங்கான ஃபௌண்டேஷ்னுடந்தான் இருந்திருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் April 2, 2013 at 8:03 AM

      வாங்கோ, பூந்தளிர். வணக்கம்.

      *****அந்தக்காலத்தில் நான் படித்த இந்த தேசியக்கல்லூரி உயர்நிலைப் பள்ளியின் மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தில் தான், சேங்காலிபுரம் ப்ரும்மஸ்ரீ அனந்தராம தீக்ஷதர், தூப்புல் ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்மாச்சாரியார், திருமதி சிவானந்த விஜயலக்ஷ்மி, திரு. கிருபானந்த வாரியார், புலவர் திரு. கீரன் போன்ற மிகப் பிரபலமான உபன்யாசகர்களால் புராணக்கதைகள் அடிக்கடி சொல்லப்படும்.*****

      //பள்ளியில் படிக்கும்போதே புராணக்கதைகள் கேட்கும் வாய்ப்பும் கிடைச்சிருக்கே. உங்க இளமைப்பருவம் ஸ்ட்ராங்கான ஃபௌண்டேஷ்னுடந்தான் இருந்திருக்கு.//

      அந்தக்காலக்கட்டத்தில் சினிமா, டிராமாவை விட்டால் புராணக்கதைகள் கேட்பது மட்டுமே மிகச்சிறந்த பொழுது போக்காக இருந்து வந்தது.

      சினிமா டிராமா பார்க்கப்போகக்கூட பணம் தேவைப்படும். புராணக்கதைகள் கேட்க அதுவும் தேவையில்லை. மிகவும் சிரத்தையாகவும் நான் கேட்பேன்.

      என் வீட்டில் மின் இணைப்பே கிடையாது. ரேடியோ கூட கிடையாது. இன்று போல டீ.வி., செல்போன், க்ணினி ஏதும் கிடையாது.

      எனக்கு சிறுவயதிலிருந்தே கதைகள் கேட்பதிலும், ஓஸியில் புத்தகம் வாங்கி கதைகள் வாசிப்பதிலும், பிறருக்கு கதைகள் சொல்வதிலும் மிகுந்த ஆர்வம் உண்டு.

      அதன் தாக்கமே இப்போது என்னால் சுலபமாக பல கதைகளை பிறர் ரஸிக்கும்படியாக சுவையாக எழுதவும் வைத்துள்ளது.

      சிறுவயதில் நான் சினிமாவுக்குப் போனாலும், அந்த சினிமாவில் நான் பார்த்த ரஸித்த அத்தனை விஷயங்களையும் ஒன்றுவிடாமல் வரிக்கு வரி பிறரிடம் சொல்லி மகிழ்வேன்.

      நீக்கு
  43. நான் எப்போதுமே வகுப்பில் முதல் பெஞ்சில் முதல் மாணவனாக உட்காருவது வழக்கம். ஒவ்வொரு ஆசிரியர் நடத்தும் பாடங்களையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருப்பேன். அதிலேயே எனக்கு பலவிஷயங்கள் மனதில் பதிந்து விடுவதுண்டு. வீட்டுக்குப்போய் திரும்பத்திரும்ப படிப்பதெல்லாம் அதிகம் கிடையாது.

    ஆஹா விளையும் பயிர்என்று முதலிலேயே தெரிந்து விட்டதே.அதான் இப்பவும் இந்த போடு போட்டுட்டு இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் April 2, 2013 at 8:07 AM

      *****நான் எப்போதுமே வகுப்பில் முதல் பெஞ்சில் முதல் மாணவனாக உட்காருவது வழக்கம். ஒவ்வொரு ஆசிரியர் நடத்தும் பாடங்களையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருப்பேன். அதிலேயே எனக்கு பலவிஷயங்கள் மனதில் பதிந்து விடுவதுண்டு. வீட்டுக்குப்போய் திரும்பத்திரும்ப படிப்பதெல்லாம் அதிகம் கிடையாது. *****

      //’ஆஹா விளையும் பயிர் முளையிலே’ என்று முதலிலேயே தெரிந்து விட்டதே. அதான் இப்பவும் இந்த போடு போட்டுட்டு இருக்கு.//

      ;))))) சந்தடிபாக்கில் ஏதேதோ சொல்லுங்கோ ;))))) மகிழ்ச்சியே!

      நீக்கு
  44. ஒரு வாத்யார் பேரைக்கூட விடல்லே போலிருக்கே. குட் ஜவ்வு மிட்டாய், குச்சி ஐஸ் பொன்ற தின்பண்டங்களையும் அந்தவயதுக்கே உள்ள ரசனையுடன் சொல்லி இருக்கீங்க. படிக்க படிக்க சுவாரசியம்

    பதிலளிநீக்கு
  45. பூந்தளிர் April 2, 2013 at 8:09 AM

    //ஒரு வாத்யார் பேரைக்கூட விடல்லே போலிருக்கே. குட் //

    சந்தோஷம்.

    //ஜவ்வு மிட்டாய், குச்சி ஐஸ் பொன்ற தின்பண்டங்களையும் அந்தவயதுக்கே உள்ள ரசனையுடன் சொல்லி இருக்கீங்க. படிக்க படிக்க சுவாரசியம்//

    படிக்கப் படிக்க மிகுந்த சுவாரஸ்யமாக உள்ள என் படைப்புகள் நிறையவே உள்ளன.

    இந்தத்தொடர் முடிந்ததும் நீங்க படித்துக் கருத்துச்சொல்ல வேண்டியது:

    http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html

    [நாலே நாலு பகுதி மட்டுமே] அவசியம் படியுங்கோ!

    நல்ல விறுவிறுப்பாக இருக்கும். ;)))))

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், பூந்தளிர்.

    பதிலளிநீக்கு
  46. //வீட்டுக்குப்போய் திரும்பத்திரும்ப படிப்பதெல்லாம் அதிகம் கிடையாது. //

    நானும் அப்படித் தான். வீட்டில் வந்து ஸ்கூல் புத்தகத்தை எடுத்ததே இல்லை. :))) ஆனால் பின்னால் பத்து, பதினோராம் வகுப்புப் படிக்கையில் வீட்டிலும் எடுத்துப் படிக்கும்படி ஆச்சு. :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam May 23, 2014 at 5:13 PM

      வாங்கோ, வணக்கம்.

      *****வீட்டுக்குப்போய் திரும்பத்திரும்ப படிப்பதெல்லாம் அதிகம் கிடையாது.*****

      //நானும் அப்படித் தான். வீட்டில் வந்து ஸ்கூல் புத்தகத்தை எடுத்ததே இல்லை. :))) ஆனால் பின்னால் பத்து, பதினோராம் வகுப்புப் படிக்கையில் வீட்டிலும் எடுத்துப் படிக்கும்படி ஆச்சு. :)))//

      எனக்கு வீட்டுக்கு வந்தால் புத்தகங்களைப்படி என்று சொல்லவே [படிப்பின் அருமை தெரிந்த] ஆசாமிகள் கிடையாது.

      படிக்க எனக்கு ஆவல் இருப்பினும், அதற்கான வசதி வாய்ப்புக்களே சுத்தமாக எனக்கு என் வீட்டில் கிடைக்காமல் போய்விட்டது.

      Street Light இல் மிகவும் மங்கிய வெளிச்சத்தில் அரை மணி நேரம் கூட படிக்க இயலாதே ! ;((((( கொசுக்கடிக்கும் + தூக்கம் வரும். ;(((((

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். - VGK

      நீக்கு
  47. ஜவ்வு மிட்டாயில் கழுத்துக்கு நெக்லஸ், கைக்கு வாட்ச், மோதிரம் எல்லாம் செய்து காட்டுவார். :))) நானும் அதை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தது இல்லை. எங்க ஸ்கூல் வாசல்லே சுக்கு மிட்டாய் விப்பாங்க. இஞ்சி முரப்பா தான் சுக்கு மிட்டாய்ங்கற பேரிலே விற்கப்படும். அப்போக் காலணாவுக்கு மூணு சுக்கு மிட்டாய்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam May 23, 2014 at 5:15 PM

      வாங்கோ ;)

      //ஜவ்வு மிட்டாயில் கழுத்துக்கு நெக்லஸ், கைக்கு வாட்ச், மோதிரம் எல்லாம் செய்து காட்டுவார். :))) நானும் அதை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தது இல்லை.//

      அப்படியா, அதுவே நல்லது. நம் உடம்பில் சுரக்கும் வியர்வை அல்லவா அதில் இருக்கக்கூடும்/

      //எங்க ஸ்கூல் வாசல்லே சுக்கு மிட்டாய் விப்பாங்க. இஞ்சி முரப்பா தான் சுக்கு மிட்டாய்ங்கற பேரிலே விற்கப்படும். அப்போக் காலணாவுக்கு மூணு சுக்கு மிட்டாய்!//

      இஞ்சி முரப்பா தெரியும். சுக்கு மிட்டாய் நான் கேள்விப்பட்டது இல்லை. இஞ்சி காய்ந்தால் சுக்கு என்பார்கள்.

      நானும் காலணாவுக்கு 3 வீதம் கமர்கட் வாங்கிச் சாப்பிட்டுள்ளேன்.

      3 தம்படிகள் சேர்ந்தது ஒரு காலணா ..... தெரியுமோ?

      ஒரு ரூபாய்க்கு 192 தம்படிகள்.
      ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள்
      1/2 ரூபாய் என்பது 8 அணாக்கள்
      1/4 ரூபாய் என்பது 4 அணாக்கள்.
      2 அணா, ஒரு அணா, அரை அணா, கால் அணா எல்லாம் அந்தக்காலத்தில் உண்டு. 1960 வரை [எனக்கு 10 வயது ஆகும் வரை] அவை எல்லாமே புழக்கத்தில் இருந்தன.

      1/4 அணாவுக்குக் கீழே இருந்த நாணயமே தம்படி. அந்த தம்படியில் ஒன்று இன்றும் என்னிடம் எங்கள் ஆத்தில் எங்கோ உள்ளது. ஆனால் தேடணும். ;)

      வருகைக்கு நன்றிகள். - VGK

      நீக்கு
  48. ஆஹா, நீங்களும் தபால் பெட்டி டிராயர் போட்டிருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
  49. :))) ஏற்கனவே பின்னூட்டம் எல்லாம் நான்தான் போட்டேனான்னு இப்ப தோணுது!!!!!

    பதிலளிநீக்கு
  50. அப்பப்பா, என்ன ஒரு ஞாபக சக்தி.

    பெரியவா கிட்ட எல்லாம் கதை கேட்டுக் கேட்டு உங்க எழுத்து பட்டை தீட்டப் பட்டிருக்கு.

    கதையும் கேட்டுண்டே, பராக்கு பாக்காம அந்த தின்பண்டங்கள ரசிச்சது நல்ல ஒரு சாப்பாட்டு ரசிகனா ஆக்கி இருக்கு.

    உங்கள் ஞாபக சக்திக்கு ஒரு ஷொட்டு.

    மீண்டும் திருச்சிக்கு வந்து உங்களுக்கு ஒரு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்யணும்.

    பதிலளிநீக்கு
  51. பமள்ளயோட வாசல்ல விக்கும் பண்டங்கள கூட நெனப்புல வச்சிருக்கீங்கபோல பள்ளியோட வாத்தியாரு பேர்லாகூட நெனப்புல வச்சிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்று என் சிறுவயதில் நிகழ்ந்த எதையும் என்னால் இன்றும்கூட அவ்வளவு எளிதாக மறக்க முடியாமலேயே உள்ளன. ஒவ்வொன்றிலும் எனக்கு அவ்வளவு ஒரு ஈடுபாடு இருந்து வந்தது. இன்னும் எவ்வளவோ சொல்ல முடியும் என்னால். சில முக்கிய சுவாரஸ்யமான மற்றும் என்னை பாதித்த நிகழ்வுகளை மட்டுமே மிகச்சுருக்கமாகப் பதிவு செய்து இந்தத்தொடரில் பகிர்ந்துள்ளேன்.

      நீக்கு
  52. ஜவ்வு மிட்டாய் பற்றி சொல்லும்போது உலக்கை குச்சியில் மஃப்ளர் கட்டிய மாதிரி என்று என்ன ரசனை. ஞாபக சக்தி ரொம்பவே அதிகம்தான் உங்களுக்கு. சத் விஷயங்களையும் சிறு வயதிலேயே கேட்கும் அனுபவமும் கிடைத்திருக்கே.

    பதிலளிநீக்கு
  53. பள்ளிக்கூட வாசலில் குச்சி ஐஸ், எலந்தவடை, அரிநெல்லிக்காய், சீத்தாப்பழம், எலந்தைப்பழம், நவாப்பழம், கலாக்காய், கலாப்பழம், சுட்ட சோளக்கருதுகள், வேர்க்கடலை, பஞ்சு மிட்டாய் என என்னென்னவோ விற்பார்கள்.சற்று சுகாதரக்குறைவாக இருப்பினும் வசதியுள்ள பல மாணவர்களும் அவற்றை விரும்பி வாங்கிச் சாப்பிடுவார்கள்.


    ஜவ்வு மிட்டாய்க்காரர் ஒரு கெட்டியான வழவழப்பான உலக்கை போன்ற குச்சியின் தலையில் மஃப்ளர் கட்டியது போல, கலர் கலராக [தற்போதைய டூத் பேஸ்ட்டுகளில் சில வெள்ளையும் சிவப்புமாகச் சேர்ந்து வருமே அது போல] ஜவ்வு மிட்டாயை ஒட்டிவைத்து நின்று கொண்டிருப்பார்.


    அவரிடம் காசு கொடுத்தால், அந்த ஜவ்வு மிட்டாயைக்கொஞ்சமாக கை விரல்களால் இழுத்து, கைக்கெடியாரம், பதக்கம், செயின், மோதிரம் என ஏதேதோ செய்து சிறு பையன்களின் கைகளின் / உடம்பின் மேல் ஒட்டி விடுவார்.


    கொஞ்சம் நேரம் அழகு பார்த்து விட்டு, அந்தப் பையன்கள் தங்கள் வியர்வையுடன் கூடிய அந்த ஜவ்வு மிட்டாயை தின்று விடுவார்கள். அது இழுக்க இழுக்க ஜவ்வு போல வந்து கொண்டே இருக்கும். அதனால் தான் அதற்கு ஜவ்வு மிட்டாய் என்று பெயர்.

    மற்றொருவர் ஒரு நாலு சக்கர சைக்கிள் வண்டியை நிறுத்தி வைத்துக்கொண்டு, அதைச்சுற்றிலும், சர்பத் பாட்டில்களாக அடுக்கி வைத்திருப்பார். மரத்தூளுடன் இருக்கும் பெரிய பாறை போன்ற ஐஸ்கட்டிகளை, தண்ணீர் ஊற்றி அலம்பிவிட்டு, அதை அப்படியே கேரட் சீவுவது போல அழகாகச் சீவி, சீவிய தூள்களை ஒரு கெட்டித்துணியில் பிடித்து சேகரித்து, அந்த ஐஸ் தூள்களை ஒரு கெட்டிக்குச்சியில் ஒரே அழுத்தாக அழுத்தி, கலர் கலராக ஏதேதோ சர்பத்களை அதன் தலையில் தெளித்து, கும்மென்று பெரியதாக பஞ்சுமிட்டாய் போல ஆக்கித் தருவார்.// வாத்யாரே..என்னோட பள்ளி நாட்கள்ள என் பின்னால ஒளிஞ்சுகிட்டு நைஸா எல்லாத்தயும் பாத்து எழுதுனமாதிரியே இருக்கே...இதெல்லாம் இல்லாம் ஸ்கூலா..நம்ப படிச்சது இஸ்கூல்..இப்ப எல்லாம் புஸ்கூல். இந்த காலத்து ஸ்டீடன்ட்ஸ் எல்லாத்தயும் மிஸ் பண்றாங்க..

    பதிலளிநீக்கு
  54. பள்ளி எதிரில் கடைகள்! அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் வந்ததே!

    பதிலளிநீக்கு
  55. பதிவ படிக்க வந்தா கமெண்ட்லயும் எல்லாரையும் சூப்பரா எழுத வைக்கிறீங்களே கோபால்ஸார்..ஞாபக சக்தி ரொம்பவே அதிகம்தான் உங்களுக்கு. வாத்தியார்கள் பெயரை மட்டுமல்லாமல் உருவம் உடை எல்லாத்தையும் நினைவில் வச்சிருக்கீங்களே. சக மாணவர்களையும் மறக்காமல் நினைவில் வச்சிருக்கீங்களே ..நீங்க படிச்சப்போ.11----எஸ் ஸெல்ஸியா........10+2--வா......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆல் இஸ் வெல்....... October 23, 2016 at 12:25 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பதிவ படிக்க வந்தா கமெண்ட்லயும் எல்லாரையும் சூப்பரா எழுத வைக்கிறீங்களே கோபால்ஸார்..//

      என் பதிவுகளுக்கு வரும் கமெண்ட்ஸ்கள் தான் எனக்கும் மேலும் மேலும் எழுத உற்சாகம் தந்த டானிக் ஆகும்.

      என் பதிவுகளுக்கு வரும் கமெண்ட்ஸ்களையும் அதற்கு நான் எழுதும் ரிப்ளை பதில்களையும் படிக்க மட்டுமே வரும் ஒரு மிகப்பெரிய ரஸிகர் கூட்டம் எனக்கு அன்று இருந்தது. இன்னும்கூட, இன்றும்கூட கொஞ்சம் இருக்கிறது என்று சொல்லலாம்.

      //ஞாபக சக்தி ரொம்பவே அதிகம்தான் உங்களுக்கு. வாத்தியார்கள் பெயரை மட்டுமல்லாமல் உருவம் உடை எல்லாத்தையும் நினைவில் வச்சிருக்கீங்களே. சக மாணவர்களையும் மறக்காமல் நினைவில் வச்சிருக்கீங்களே ..//

      என் மனதில் ஆழமாகப் பதிந்துபோனவர்களை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. இயற்கையாகவே எனக்கு ஞாபக சக்தி அதிகம் என்றே எல்லோரும் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.

      //நீங்க படிச்சப்போ.11 ஆண்டு - எஸ்.எஸ்.எல்.ஸி யா? அல்லது ........10+2--வா......?//

      11 ஆண்டுகள் படிப்பான SSLC மட்டுமே. நான் 11 ஆண்டுகள் முடித்தது 1966 ஏப்ரில் மாதம்.

      அதன் பிறகு ஓர் ஆண்டு PUC படிக்க கல்லூரிக்குப் போகணும். அதன்பின் மூன்றாண்டுகள் இளநிலைப் பட்டமாக B.Sc., B.A., B.Com., போன்றவை. முதுநிலைப் பட்டமான M.Sc., M.A., M.Com., பெற மேலும் இரண்டு ஆண்டுகள் படிக்கணும்.

      இளமையில் வறுமையால், PUC முதல் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அந்த பாக்யம் (வாய்ப்பு) அன்று எனக்குக் கிடைக்கவில்லை.

      தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.

      நீக்கு
  56. எத்தனை முறை சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வந்திருக்கேன். அது உங்கள் வீட்டருகே என்று தெரியாமல் போய்விட்டதே (3 முறை, கடந்த 4 வருடங்களில்).

    //வசதியுள்ள பல மாணவர்களும் அவற்றை விரும்பி வாங்கிச் சாப்பிடுவார்கள்// - ஆமாம் சார். நானும் ஓரிரு முறைதான் சாப்பிட்டிருக்கிறேன். நீங்கள் விவரித்துள்ள ஜவ்வு மிட்டாயும், நான் ஏக்கமாகப் பார்த்துத்தான் இருக்கிறேன். நான் படித்த காலத்திலும், எங்கள் வீடுகளில், சாப்பாட்டுக்குக் கொஞ்சம்கூட குறை இல்லை. அதுவும் பதின்ம வயது காலத்தில், வீட்டில் சாப்பிடுவதைத் தவிர, வெளியே சாப்பிடுவதற்கும் தடா, இந்த மாதிரி வெளி ஐட்டங்களைச் சாப்பிடுவதை நினைத்தும் பார்க்கமுடியாது. எங்க அம்மாவோட உறவினர்கள் வீட்டுக்கு நெல்லை ஜங்க்ஷன் சென்றால்தான் லாலா கடைகளில் சாப்பிடமுடியும். நீங்க வசதிக் குறைவைக் காரணமாச் சொல்லியிருக்கீங்க. எங்க வீடுகள்ல 'ஆசாரம்' என்பதுதான் முக்கியமா இருந்தது. (அந்தக் காலங்களை நினைத்தால் எனக்கு இப்போவும் வருத்தமா இருக்கும்)

    வாத்தியார்களுக்கு பட்டப்பெயர் வைப்பது உங்க காலத்துலவே ஆரம்பிச்சாச்சா?

    நான் ஏழாவது படிக்கும்போதெல்லாம், பொதுவா நம்ம சமூகத்துல (பிராமண), பெண்களை 'டி' போட்டுக் கூப்பிடும் வழக்கம் இருந்தது. நான் என்னுடன் படித்த பெண்ணை அப்படித்தான் கூப்பிடுவேன். நாங்க அவ்வளவு நண்பர்கள். ஆனால் ஒரு தடவை, வாத்தியார், அந்தப் பெண்ணை 'பதில் சொல்லுடி' என்று சொன்னதற்கு, அந்தப் பெண், 'இந்த டி போட்டுக் கூப்பிடற வேலையை வச்சுக்காதீங்க சார்'னு சொல்லிட்டா. 7,8வது வகுப்பு எனக்கு கோ எஜுகேஷன்.

    இந்த முரட்டு மாமாக்களைப் பற்றி எழுதியுள்ளது மிகவும் ரசமாக இருந்தது. எல்லோருக்கும் இத்தகைய அனுபவம் இருக்கும். 79ல, என் 10வது ஹாஸ்டல்ல, குறைந்த மதிப்பெண் வாங்கினதுக்காக, அத்தகைய 'மாமா'வை, ஹாஸ்டல் ஸ்டடி ஹாலில் வைத்து, துணை வார்டன் (கிறித்துவ பிரதர்), நூத்துக்கு 6 மார்க்தான் வாங்கியிருக்க. வெட்கமாயில்லை என்று எல்லோர் முன்னிலையிலும் கேட்டார். அதற்கு உடனே ரோஷமாக அந்தப் பையன் (மாமா), 'நீங்க என்ன படிச்சுக் கிழிச்சிட்டு இந்த வேலைக்கு வந்திருக்கீங்க. டிகிரிகூட படிக்கலைதானே' என்று எதிர்த்துக் கேட்டான். அந்தச் சம்பவத்தை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.

    ”பின்னால் உனக்கு தபால்பெட்டி தெரிகிறது” - இதை சாதாரண மிடில் கிளாஸ் மக்கள் கடந்துவராமல் எப்படி இருக்கமுடியும்? நான் 5வது படிக்கும்போது, எங்க அப்பா 6-10 வகுப்பு மேல் நிலைப்பள்ளியின் ஹெட் மாஸ்டராக இருந்தார். அந்த ஸ்கூல் டீச்சர் (பெயர் கூட ஞாபகம் இருக்கு), 'என்னடா உங்க அப்பா ஹெட்மாஸ்டர். நீ ஏன் பின்னால ஒட்டுப்போட்ட டிராயர் போட்டிருக்க' என்றார். 'டிரெஸ்ல என்ன இருக்கு டீச்சர். படிப்புலதானே' என்று அப்போ பதில் சொன்னது ஞாபகம் இருக்கு. (இப்போ நினைக்கறேன்..எப்படி அந்தமாதிரி பதில் சொல்லணும்னு தோணித்து என்று)

    தொடர்ந்து மற்றவற்றையும் படித்துக் (படித்துவிட்டேன்) கருத்திடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் January 25, 2018 at 1:42 PM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //எத்தனை முறை சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வந்திருக்கேன். அது உங்கள் வீட்டருகே என்று தெரியாமல் போய்விட்டதே (3 முறை, கடந்த 4 வருடங்களில்).//

      சத்திரம் பேருந்து நிலையம் என் வீட்டருகேதான் என உங்களைப் போன்ற இளைஞர்கள் சிலர் சொல்வது வழக்கம்தான். குறுக்கு வழி சந்துகளில் நுழைந்தால் 10 நிமிடங்களில் நடந்து வந்துவிடும் தூரம் மட்டுமே தான். இருப்பினும் நானும் அதே 10 நிமிடங்கள், நேர் வழி சாலைகள் வழியாக, ஆட்டோவில் பயணித்து மட்டுமே செல்வது வழக்கமாகும், கடந்த எட்டு ஆண்டுகளாக. :)

      //வசதியுள்ள பல மாணவர்களும் அவற்றை விரும்பி வாங்கிச் சாப்பிடுவார்கள்// - ஆமாம் சார். நானும் ஓரிரு முறைதான் சாப்பிட்டிருக்கிறேன். நீங்கள் விவரித்துள்ள ஜவ்வு மிட்டாயும், நான் ஏக்கமாகப் பார்த்துத்தான் இருக்கிறேன். நான் படித்த காலத்திலும், எங்கள் வீடுகளில், சாப்பாட்டுக்குக் கொஞ்சம்கூட குறை இல்லை. அதுவும் பதின்ம வயது காலத்தில், வீட்டில் சாப்பிடுவதைத் தவிர, வெளியே சாப்பிடுவதற்கும் தடா, இந்த மாதிரி வெளி ஐட்டங்களைச் சாப்பிடுவதை நினைத்தும் பார்க்கமுடியாது. எங்க அம்மாவோட உறவினர்கள் வீட்டுக்கு நெல்லை ஜங்க்ஷன் சென்றால்தான் லாலா கடைகளில் சாப்பிடமுடியும். நீங்க வசதிக் குறைவைக் காரணமாச் சொல்லியிருக்கீங்க. எங்க வீடுகள்ல 'ஆசாரம்' என்பதுதான் முக்கியமா இருந்தது. (அந்தக் காலங்களை நினைத்தால் எனக்கு இப்போவும் வருத்தமா இருக்கும்)//

      வசதிக் குறைவும் உண்டு. ஆச்சாரம் என்ற கட்டுப்பாடுகளும் என் வீட்டிலும் உண்டு. தீனிக்காகவெல்லாம் நம் கையில் காசைக் கொடுத்து விட மாட்டார்கள்.

      //வாத்தியார்களுக்கு பட்டப்பெயர் வைப்பது உங்க காலத்துலவே ஆரம்பிச்சாச்சா? //

      ஆமாம். சில மாணவர்கள் அதுபோலெல்லாம் சொல்லுவார்கள். எதற்காக இப்படிச் சொல்லுகிறார்கள் என்பதே, அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது

      //நான் ஏழாவது படிக்கும்போதெல்லாம், பொதுவா நம்ம சமூகத்துல (பிராமண), பெண்களை 'டி' போட்டுக் கூப்பிடும் வழக்கம் இருந்தது. நான் என்னுடன் படித்த பெண்ணை அப்படித்தான் கூப்பிடுவேன். நாங்க அவ்வளவு நண்பர்கள். ஆனால் ஒரு தடவை, வாத்தியார், அந்தப் பெண்ணை 'பதில் சொல்லுடி' என்று சொன்னதற்கு, அந்தப் பெண், 'இந்த டி போட்டுக் கூப்பிடற வேலையை வச்சுக்காதீங்க சார்'னு சொல்லிட்டா. 7,8 வது வகுப்பு எனக்கு கோ எஜுகேஷன்.//

      உங்கள் மீது அந்தப்பெண்ணுக்கு அதிக அன்பும் நட்பும் இருந்திருக்கலாம். வாத்யார் மீது அப்படி இல்லாமல் இருந்திருக்கலாம். எனக்கு என் 11th Std. வரை Co-Education ஏதும் இல்லை.

      //இந்த முரட்டு மாமாக்களைப் பற்றி எழுதியுள்ளது மிகவும் ரசமாக இருந்தது. எல்லோருக்கும் இத்தகைய அனுபவம் இருக்கும். 79ல, என் 10வது ஹாஸ்டல்ல, குறைந்த மதிப்பெண் வாங்கினதுக்காக, அத்தகைய 'மாமா'வை, ஹாஸ்டல் ஸ்டடி ஹாலில் வைத்து, துணை வார்டன் (கிறித்துவ பிரதர்), நூத்துக்கு 6 மார்க்தான் வாங்கியிருக்க. வெட்கமாயில்லை என்று எல்லோர் முன்னிலையிலும் கேட்டார். அதற்கு உடனே ரோஷமாக அந்தப் பையன் (மாமா), 'நீங்க என்ன படிச்சுக் கிழிச்சிட்டு இந்த வேலைக்கு வந்திருக்கீங்க. டிகிரிகூட படிக்கலைதானே' என்று எதிர்த்துக் கேட்டான். அந்தச் சம்பவத்தை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.//

      அது போன்ற மாமாக்களிடம், வாத்யார் உள்பட அனைவரும் மிகவும் கவனத்துடன் நடந்துகொள்ளணும். அவர்களுக்கும் அவர்கள் உருவத்திற்கும் ஓர் தனி மரியாதை கொடுக்கத்தான் வேண்டும்.

      //”பின்னால் உனக்கு தபால்பெட்டி தெரிகிறது” - இதை சாதாரண மிடில் கிளாஸ் மக்கள் கடந்துவராமல் எப்படி இருக்கமுடியும்? நான் 5வது படிக்கும்போது, எங்க அப்பா 6-10 வகுப்பு மேல் நிலைப்பள்ளியின் ஹெட் மாஸ்டராக இருந்தார். அந்த ஸ்கூல் டீச்சர் (பெயர் கூட ஞாபகம் இருக்கு), 'என்னடா உங்க அப்பா ஹெட்மாஸ்டர். நீ ஏன் பின்னால ஒட்டுப்போட்ட டிராயர் போட்டிருக்க' என்றார். 'டிரெஸ்ல என்ன இருக்கு டீச்சர். படிப்புலதானே' என்று அப்போ பதில் சொன்னது ஞாபகம் இருக்கு. (இப்போ நினைக்கறேன்..எப்படி அந்தமாதிரி பதில் சொல்லணும்னு தோணித்து என்று)//

      சமீபத்தில் என்னுடன் படித்த ஜெயகுமார் என்பவனை சந்தித்தேன். அவனும் என்னைப் போன்றே ஏழைப்பையன் மட்டுமே. அவனும் என்னுடன் BHEL இல் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளவன் மட்டுமே. நாங்கள் இருவரும் அன்று அணிந்திருந்த இந்த தபால் பெட்டி .... ஒட்டுத்துணியைப் பற்றி என்னிடம் பேசி மகிழ்ந்தான். நானும் வியந்து போய் அதனை ஆமோதித்தேன்.

      //தொடர்ந்து மற்றவற்றையும் படித்துக் (படித்துவிட்டேன்) கருத்திடுகிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  57. இன்னொன்று, உங்களுக்கு வரும் பின்னூட்டங்கள், அதற்கு நீங்கள் கொடுக்கும் மேலதிக தகவல்களும், மிகவும் interestingஆகவும், தலைப்பை ஒட்டியும் இருக்கு. அதையும் படித்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் January 25, 2018 at 2:07 PM

      //இன்னொன்று, உங்களுக்கு வரும் பின்னூட்டங்கள், அதற்கு நீங்கள் கொடுக்கும் மேலதிக தகவல்களும், மிகவும் interestingஆகவும், தலைப்பை ஒட்டியும் இருக்கு. அதையும் படித்து ரசித்தேன்.//

      அதுபோன்ற பின்னூட்டங்களில் சிலவற்றை எனக்கும் மிகவும் பிடிக்கும். அதற்கு மட்டும் நானும் விரிவாகவே மேலதிகத் தகவல்கள் கொடுத்து பதில் எழுதுவது உண்டு. இவற்றை உணர்ந்து படித்து ரஸித்துக் குறிப்பிட்டுள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு